என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 25 June 2012

அந்த ஓர் பயணம்

அந்த ஓர் பயணம்

நாம் பாதைகளில்
எட்டி நடந்து,
எம்பிக் குதித்து,
இடறிவிட்டதாய் நடித்து,
தாவிக் குதித்து,
நெளிந்து,
வளைந்து,
எப்படி பயணித்தாலும்
இறுதியில்
யாரையேனும்
முந்திச் செல்லவே
விரும்புகிறோம்...


முந்திச் செல்வதன்
சாத்தியங்களையும்,
வாய்ப்புக்களையும்
தொடர்ந்து விஸ்தரிக்கிறோம்...


நாம்
அடைய விரும்பும்
எல்லைவரை விரிந்துகிடக்கும்
பாதைகள்
தன்னை அடைவதான‌
யாரோ ஒருவனின்
பயணத்தை எதிர்நோக்கி
சலிக்காமல்
காத்திருப்பைத் தொடர்கின்றன...


அந்த ஓர் பயணத்தை தான்
நாம் பயணிக்கிறோமென‌
நம்பியபடியே தான்
நாம்
நம் பயணங்களை
எப்போதும் மேற்கொள்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5718)

Monday 18 June 2012

பிரதானப்படுத்துதல்

பிரதானப்படுத்துதல்


நாம் எல்லோரும்
நமது செய்கைகள்
அனைத்திற்கும்
ஏதேனும் ஓர் அர்த்தத்தைக்
கற்பித்துக் கொள்கிறோம்...

அந்த அர்த்தங்கள் அனைத்தும்
மகத்துவம் வாய்ந்தவை என்றும்,
முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும்,
நமக்கு இன்றியமையாதவை என்றும்,
நாம் தொடர்ந்து
வலியுறுத்துகிறோம்... 


சமயம் கிடைக்கும்போதெல்லாம்
அதை
நிரூபிக்கவும் முயல்கிறோம்...


இப்படித்தான்
நாம் எல்லோரும்
இயக்கங்களையும்,
அதன் ஆதார உண்மைகளையும்
புறந்தள்ளிவிட்டு
நம்மையே
பிரதானப்படுத்திக் கொள்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5696)

Monday 11 June 2012

பொருந்துத‌ல், பொறுத்துத‌ல்

பொருந்துத‌ல், பொறுத்துத‌ல்


நாம் எல்லோரும்
நமக்கு விருப்பமான‌
ஒன்றுடன்
பொறுத்திக்கொள்ள‌
தொடர்ந்து முயற்சிக்கையில்,


நம் எல்லோரையும்
ஏதாவதொன்று
தனக்குப் பொறுத்தமாக்கிக்
கொள்கிறது...


அதை நாம்
விரும்பினாலும்,
விரும்பாவிட்டாலும்... 


ந‌ம்மை,
எதனோடோ
பொருந்திக் கொள்வதற்கும்,
எதுவோ
பொறுத்திக் கொள்வதற்கும்,
இடையேயான
மெல்லிய‌இடைவெளியில்
நாம் எல்லோரும் , எப்போதும்
உழ‌ல்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5681)

Monday 4 June 2012

உயிர் பிழைத்தலின் நிய‌திக‌ள்

உயிர் பிழைத்தலின் நிய‌திக‌ள்

தானே துளிர்த்து,
தானே வேர் விட்டு,
தானே நீர் உறிஞ்சி,
தானே ம‌ண் இறுக்கி,
தானே கிளை ப‌ர‌ப்பி
தானே மொக்கு விட்டு,
தானே நிற‌மூட்டி,
தானே பூ ம‌ல‌ர்ந்து,
தானே க‌னி விட்டு,


இப்ப‌டி
எல்லாவ‌ற்றிற்கும் தானே
பொறுப்பேற்கிற‌து சுய‌ம்பு...


இருந்தும்
உயிர் பிழைத்தலின் நிய‌திக‌ள்
ஏனைய‌தாவ‌ர‌ங்க‌ளைப் போல‌த்தான்
சுய‌ம்புக‌ளுக்கும்...


#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5664)