என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 11 April 2026

மெட் செயலி - குறுநாவல் - அத்தியாயம் - 4

 

அத்தியாயம் - 4

 

 

தியாகராய நகர் உஸ்மான் ரோட் சாலையில் ஜீன்ஸ் டிசர்ட் அணிந்த இரண்டு யுவதிகள் நடந்து வருகையில், கழுத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயலும் ஒரு புகைப்படக்கருவியும், கையில் ஒலிவாங்கியுடனும் ஒருவன் அந்தப் பெண்களின் பாதையில் வந்து நின்றான்.

 

அவனை அந்தக் கோலத்தில் பார்த்துவிட்டு, அந்தப் பெண்கள் லேசாக ஸ்தம்பித்தார்கள்.  புகைப்படக்கருவியை பார்த்தபிறகு ‘என்ன?’ என்பதாய்ப் பார்த்தார்கள். அவர்களின் உடல் மொழியில் லேசான சிலிர்ப்பு அவசரமாய் வந்து ஒட்டிக்கொண்டது. அந்த ஒரு சிலிர்ப்பை தரிசிக்க ஒரு ஆயிரம் முறையாவது பெண்களின் பாதையில் தோன்றலாம் போலிருந்தது.

 

புகைப்படக்கருவியின் நிமித்தம், சற்றேனும் ஒப்பனை செய்துகொள்ள அப்போதைக்கிருந்த அனைத்து வாய்ப்புக்களையும் பரிசீலிக்க எத்தனித்து, எதுவும் சாத்தியமல்ல என்றறிந்து லேசாக ஏமாற்றமானார்கள். அன்னிய ஆடவன் முன் முகத்தை லேசாகவும் செப்பனிட வாய்ப்பின்றி, அந்தச் சூழலுடன் சற்றே வேண்டாவெறுப்பாய் தங்களைப் பொருத்திக்கொள்ள இசைந்தார்கள்.

 

"சூரியன் தொலைக்காட்சியிலிருந்து வர்றேன். ஒரு சின்ன சோஷியல் எக்ஸ்பெரிமென்ட். நாங்க ஒரு கேள்வி கேப்போம். அதுக்கு பதில் சொல்ல முடியுமா?" என்றான்.

 

"..ஷூர்"

 

"முதல்ல உங்களை அறிமுகப்படுத்திக்கிறீங்களா?"

 

"என் பேரு சியாமளா" என்றாள் சியாமளா.

 

"என் பேரு பார்கவி" என்றாள் பார்கவி.

 

"ஓகே..  ஒரு டாக்டர் இன்னொரு டாக்டரைத்தான் கல்யாணம் பண்ணனும், ஒரு பணக்காரர் இன்னொரு பணக்காரரைத்தான் கல்யாணம் பண்ணனும், ஒரு ஏழை இன்னொரு ஏழையைத்தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லப்பட்டா அதை நீங்க எப்படி பாக்கறீங்க? உங்க கருத்தை சொல்ல முடியுமா?"

 

"கேள்வி கேக்கறீங்க.. உங்க பேரை சொல்லவே இல்லையே" என்றாள் சியாமளா.

 

"கேமரா இருக்கு, அழகான பெண்கள் ரெண்டு பேர் இருக்கீங்க.. என் பேர் யாருக்குத் தேவைப்படப்போகுது"

 

"அதுவும் சரிதான்" என்றாள் பார்கவி சியாமளாவைப் பார்த்து களுக்கென்று சிரித்தபடி.

 

"ஆனா நீங்க கேட்ட கேள்வி சரின்னு படலை.. லவ் யார் மேல வேணும்னாலும் வரும். அப்படி இருக்கிறப்போ இன்னாரைத்தான் கல்யாணம் பண்ணனும்ன்னு யாரும் யாரையும் நிர்பந்தப்படுத்த முடியாதுன்னு நினைக்கிறேன்" என்றாள் சியாமளா.

 

"சியாமளி சொன்னதை நான் ஆமோதிக்கிறேன்" என்றாள் பார்கவி.

 

"நீ ஆமோதிக்கலைன்னா உன்னை நான் தூக்கிப் போட்டு மிதிக்கிறேன்" என்றாள் சியாமளா.

 

இருவரும் களுக் களுக்கென்று சிரித்துக்கொண்டார்கள்.

 

காமிரா அணைந்தது.

 

"பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க" என்றான் அவன்.

 

"அப்ப பேர் சொல்ல மாட்டீங்களா?" என்றாள் சியாமளா.

 

"என் பேர் ஷியாம்" என்றான் ஷியாம் காமிராவை அணைத்தபடி.

 

"என்ன அதுக்குள்ள கேமராவை அணைச்சிட்டீங்க" என்றாள் பார்கவி.

 

"ஏன்?"

 

"பார்க்க ஸ்மார்டா இருக்கீங்க.. கொஞ்ச நேரம் இப்படியே பேசிட்டு இருக்கலாம்ன்னு பாத்தோம்.. என்னடீ?" என்றாள் பார்கவி.

 

"..அதுக்கென்ன.. பேசலாமே.. ஆமா, ஏன் அப்படி சொன்னீங்க?"

 

"பதில் சொன்னதை சொல்றீங்களா?"

 

"ஆமா..  ஒரு டாக்டரோட கஷ்டம், வேலைப் பளு, அந்த வேலையில இருக்கிற சங்கடம், தொந்திரவு, இதெல்லாம் இன்னொரு டாக்டருக்கு தானே தெரியும்."

 

"அது கரெக்டு தான். ஆனா, இப்படி யோசிச்சுப் பாருங்க.. ஒரே வேலையில இருக்கிறது கூட பிரச்சனைகளைத் தரலாம்.. ஈகோ பிரச்சனைகள்.. நான் பெரியவனா, நீ பெரியவனான்னு... ஒரே வேலையில இருந்துட்டாப் பிரச்சனையே வராதுன்னு சொல்லிட முடியாதே." என்றாள் சியாமளா.

 

நான் இதை என்னவென்று சொல்ல?

 

விதிவிலக்குகள் எல்லாக்காலத்திலும் உண்டு. ஒரே திறனுள்ள இருவர் ஒன்று சேரும் சேர்க்கையில் தானே அத்திறனுக்கான உச்சபட்ச சாத்தியமும் பிறக்கிறது.

 

இப்படித்தானே மனித குலம் இன்றிருக்கும் நிலை அடைந்திருக்கும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மனிதனைக் காட்டிலும் இப்போதிருக்கும் மனிதன் பல தளங்களில் முன்னேற்றம் கண்டவன்; அப்போதிருந்த மனிதனுக்கு வேட்டையாடுவது, களவியில் ஈடுபடுவது, உறங்குவது ஆகியனவே எளிதான வாழ்வாக இருந்திருக்கும்; இன்றிருக்கும் மனிதன் வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள், மருத்துவ காப்பீடு, கல்வி போன்றவைகளுக்கு பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் உழல்பவன்; அவனுடைய திறன்கள் ஆதிவாசியின் திறனைக்காட்டிலும் பண்பட்டவை. ஆக, தொடர் பண்படுதலின் விளைவாகத்தானே மனித குலம் இன்றிருக்கும் நிலையை எட்டியிருக்கும்?

 

தவிரவும், எனக்கு வேறு சில கேள்விகளும் உண்டு.

 

ஒரு ஆற்றின் ஒரு கரையில், நூறு பேர் நிற்கிறார்கள். அவர்களின் ஐம்பது பேர் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்; எந்தக் குறையும் இல்லை. எஞ்சிய ஐம்பது பேர் பிறவியிலேயே ஊனமுற்றவர்கள். இப்போது ஆற்றைக் கடக்க வேண்டும்?

 

நீங்கள் என்ன சொல்வீர்கள்?

 

ஆரோக்கியமாக இருக்கும் ஐம்பது பேர், தலைக்கு ஒன்றாக, ஊனமுற்ற ஒருவரை காபந்து செய்வதன் மூலம் நூறு பேரும் ஆற்றைக் கடந்துவிடலாம் எனலாம். இப்படிச் சொல்வதன் மூலமாக எல்லோரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துவிடலாம் தான். எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதா நோக்கம்? மனித குலத்தின் மேன்மை அல்லவா நோக்கம்? ஆனால், நாம் நினைப்பது போல் இயற்கை இயங்குவதில்லை.

 

இந்தப் புள்ளியில் நான் இரண்டு விதமாக என் வாதங்களை முன்வைக்க விரும்புகிறேன்.

 

முதலாவது:

 

ஊனமுற்றவர்களுக்கு, ஆரோக்கியமானவர்கள் தங்களுக்கு ஆற்றைக் கடக்க உதவுவார்களா தெரியாது? உதவி கோருவது கீழாகக் காட்டலாம். உதவி கோராமல், காரியம் சாதிக்க என்ன வழி என்று யோசிக்கத் துவங்குவார்கள்.

 

‘ஆற்றைக் கடக்க ஆற்றின் வேகம் என்ன? காற்றின் திசை என்ன? என்ன வேகத்தில் ஆற்றைக் கடக்க வேண்டும்? ஆரோக்கியமானவன் எந்த விதத்தில் ஊனமுற்றவனை ஏந்திக்கொள்வதன் மூலம், ஆற்றில் விழுந்து விடாமல் பாதுகாப்பாக ஆற்றைக் கடக்க முடியும் என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும். ஆகையால், ஊனமுற்ற நான் யோசிப்பதையும், ஆற்றின் வேகம் காற்றின் வேகம் போன்ற தகவல்களைச் சேகரிப்பதையும் பார்த்துக்கொள்கிறேன். நீ என்னை ஆற்றைக் கடக்கச் செய்யும் உடல் உழைப்பை மட்டும் நல்கு’ என்ற ஆலோசனை முன்வைக்கப்படும். ஆரோக்கியம் கொண்டவன் தொடர்ந்து அவ்வேலைகளையே செய்து உடல் கறுத்துப் போவான். இது, அடுத்த கட்டமாக, ஆரோக்கியம் கொண்டவன் அறிவிளி, முட்டாள், அசுத்தமானவன் எனவும் ஊனமுற்றவனே அறிவாளி என்ற நிலைக்கு இட்டுச் செல்லும். இப்படித்தானே ஜாதி, வர்க்கம், ஆண்ட ஜாதி போன்றவைகள் உருவாகியிருக்க வேண்டும்?

 

இரண்டாவது:

ஐம்பது ஆரோக்கியமானவர்களும் அக்கரை செல்கிறார்கள். அவர்கள் பெண்களைக் கூடி புதிய தலைமுறை உருவாக்குகிறார்கள். இந்த புதிய தலைமுறையில் ஊனம் இருக்காது என்று சொல்லவரவில்லை. அந்த ஊனம், விதிவிலக்காக மட்டுமே இருக்கும் என்கிறேன். இதில், சம நிலை அடைய பெரும் வாய்ப்பு எழுகிறதே?

 

இப்படி யோசித்துப் பாருங்கள். ஒருவருக்கொருவர் உதவி, நூறு பேரும் அக்கரை வந்து பெண்களுடன் கூட, அடுத்த தலைமுறையிலும் ஊனத்தின் எண்ணிக்கை அதிகமாகும். அல்லவா? ஆக சம நிலை என்ற ஒன்று எய்துவதே முடியாத காரியம் என்றல்லவா அர்த்தமாகிறது.

 

சியாமளாவின் கூற்று, அந்த உச்சபட்ச சாத்தியத்துக்கு இட்டுச்செல்லும் வகையினதாக இருக்கவில்லை. அவளின் வாதம், அவளது சார்ந்திருக்கும் நிலப்பரப்பில் கலாச்சாரத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்பது என் அனுமானமாக இருந்தது.

 

‘தமிழர் கலாச்சாரம் ‘வாழ்தல்’ தானே. எல்லோரும் வாழ வேண்டும்; சகல செளபாக்கியமும் பெற்று வாழவேண்டுமெனில், இயற்கையாகவே உச்சபட்ச சாத்தியங்களுக்கு இடம் மறுக்கப்படும் தானே.

 

ஆனால், பாருங்கள் இங்கும் எனக்குள்ளொரு குறுக்குச்சிந்தனை எழுகிறது. வாழ்தல் தான் மையம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். இவ்வுலகில், எல்லோரும் இன்புற்று வாழ இடமிருக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால்,  நான் பிரச்சனையாகப் பார்ப்பது என்னவென்றால், ஒரு ஆரோக்கியமானவனுக்கு என்னவெல்லாம் நிகழுமோ அதுவெல்லாம் தனக்கும் நிகழ்ந்திடவேண்டும் என்று ஒரு ஊனமுற்றவர் எதிர்பார்க்கத்துவங்குதல் தான்.

 

பிரபஞ்சத்தில் எல்லாவற்றுக்கும் ஓர் ஆழமான அர்த்தம் இருக்கிறது என்று நம்புகிறேன் நான். அதன் பிரகாரம், ஊனமுற்ற ஒருவருக்கும், ஆரோக்கியமான ஒருவருக்கும் எல்லா தளங்களிலும் ஒரே வாய்ப்புகள் சாத்தியப்பட பிரபஞ்ச அர்த்தங்களின் படியே வாய்ப்பில்லை என்று நம்புகிறேன் நான். அவரவரின் பிரபஞ்ச அர்த்தங்களின் படி அவரவர் நடந்துகொண்டால் தான் என்ன என்பதே என் கேள்வி.

 

அந்த உச்சபட்ச சாத்தியத்தைக் காணக்கூடிய பார்வை கொண்டவர்கள் இந்த முன் தீர்மானங்களை எவ்விதம் கையாள்வார்கள் என்பதைப் பார்க்க விழைவது எனக்குப் பிடித்தமானது.

 

எல்லா நாடகங்களிலும் பங்கேற்க எல்லோராலும் முடிவதில்லை. பங்கேற்ற நாடகங்களை வசீகரமாக்க முயன்றும், வசீகரமான நாடகங்களில் பங்கேற்க முயன்றும் தான் பூமி மனிதர்கள் தாங்கள் பங்கேற்கும் அசலான நாடகங்களின் வசீகரங்களைத் தொலைத்துவிடுகிறார்கள் என்பது என் அவதானம்.

 

சூர்யாவின் கணித மாதிரியை நான் ஆவலுடன் எதிர் நோக்கியதில் இதை ஒரு பிரதான காரணமாகச் சொல்லலாம்.