என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 30 June 2023

Lust Stories - 2

Lust Stories -2 ல் இருந்த நான்கில் எனக்கு உருப்படியாய்த் தோன்றுவது மிருனால் தாக்கூர் நடித்த முதலாவது தான். 




அதில் வரும் அந்தப் பாட்டி சொல்வது அத்தனையும் happy path மட்டுமே என்பது என் வாதம். பெரும்பான்மையோர்க்கு happy path நிகழ்வதில்லை என்பதே இந்தப் பகுதியை எல்லோருக்குமானதாக்குவதில்லை.

இக்காலத்தில் திருமணங்களே முப்பதுகளின் மத்தியில் தான் நடக்கின்றன. இந்த வயதில், ஆரோக்கியமான உடல், வசீகரமாகவும் வைத்திருக்க மிகப்பல  மெனக்கெடல்கள் தேவைப்படுகின்றன. அதற்கெல்லாம் வணங்கக்கூடிய உடல் இங்கே பலருக்கும் வாய்ப்பதில்லை என்பதே நிஜம். திருமணம், தாய்மை ஆகிய மைல்கற்கள்களுக்குப் பிறகு உடல் அழகைத் தக்க வைப்பது பலருக்குக் கடினமாகத்தான் இருக்கிறது. இந்த இடத்தில், உடல் அழகு, வனப்பு மட்டுமே காமத்திற்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதில்லை என்று யாரேனும் வாதம் செய்யலாம். உண்மை தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவ்விதமான விருப்பம் கொள்ள, குறிப்பிட்ட துணையிடம் ஏதேனும் ஒன்றாவது பிடித்திருக்க வேண்டும்; அது அந்தத் துணையை ரசிக்க வைக்க வேண்டும்; அது அவ்வுறவைப் படுக்கை வரை நீட்டிப்பதில் ஆட்சேபிக்காதவாறு அமையவேண்டும். அதற்கு அது இயல்பிலேயே மரியாதை, மற்றும் மதிப்பை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். அறிவுப்பூர்வமான பேச்சில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். நகைச்சுவைப் பேச்சில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். நடனத்தில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். கட்டான உடலில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். பயண அனுபவங்கள் சேகரிப்பவர்களிடம் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதிலெல்லாம் ஒன்றே ஒன்று பொதுவாக இருந்திருக்கிறது.

ஒரு ஆண் தன்னிடம் flirt செய்யும் போது, அந்த courtshipஐ விரும்பும் பெண்கள் அவனைத் துணையாகத் தேர்வு செய்வதில்லை. தன்னிடம் மட்டும் தான் flirt செய்கிறானா என்று பார்க்க முயல்கிறார்கள். ஏன்? ஏனெனில், அவன் எல்லா பெண்களிடமும் flirt செய்கிறான் என்னும்போது, அது தனக்கானது இல்லை என்றெண்ணுகிறார்கள். அது அவன் மீதான மரியாதையை, மதிப்பைக் குறைத்துவிடுகிறது. இதுதான் காரணம். 

வசீகர உடல் தோற்றம் இல்லாதவர்க்கும் உறவுகள் வாய்ப்பது வேறெப்படி சாத்தியமாகிறது? 

புத்திசாலித்தனமாகப் பேசுபவராக இருந்து intellectual companionship வழங்குவதன் மூலமாக எதிர்பாலினத்திடம் மரியாதை, மதிப்புடன் கூடிய ஈர்ப்பைச் சம்பாதிப்பவராக இருந்தால் சாத்தியமாகிறது. பெண்ணோ, பையனோ, புத்திசாலித்தனமான பேச்சில் மயங்கும் ஆளாக இருப்பின் இவ்வழி பொருந்தும். அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பது கடினம். ஆக, சிரிக்க வைப்பவராக இருப்பதன் மூலமாக எதிர்பாலினத்திடம் மரியாதை, மதிப்புடன் கூடிய ஈர்ப்பைச் சம்பாதிப்பவராக இருந்தால் சாத்தியமாகிறது. எதிர்பாலினத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதன் மூலமாக, அவரிடமிருந்து மரியாதை, மதிப்பைப் பெற்று அதன் மூலம் ஈர்ப்பைப் பெறுபவராக இருந்தால் சாத்தியமாகிறது; பணம் படைத்தவர்கள் இந்த வழியைக் கைகொண்டு நான் பார்த்திருக்கிறேன்.

ஆக, வெறும் உறவுகள் தான் எனினும், அதற்கு அடித்தளமாவது மரியாதை, மதிப்பு போன்றவைகள் தாம்.

ஆனால், நிஜம் இப்படி எளிமையாக அமைவதில்லை. 

நல்ல வருமானம் ஈட்டக்கூடிய துணை, சமூக அந்தஸ்து, வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற இடங்களில், இவைகளே பிரச்சனையாகிவிடுகின்றனவோ என்று யோசிக்க வைக்கிறது இன்றிருக்கும் சமூகச் சூழல். இரு பாலரிலும் இது நடக்கிறது. அடுத்த நூல்களிலிருந்து ஐடியாக்களைத் திருடி, சொந்தப் பெயரில் நூல் வெளியிட்டுக்கொண்டார் என்ற காரணத்திற்காய், கணவர் மீது மரியாதை இழந்து விவாகரத்து பெற்ற பெண்களை நான் பார்த்திருக்கிறேன். உண்மையில், அந்தப் பெண்கள் மீது இருந்த மரியாதையை விவாகரத்துக்கான இந்தக் காரணம் பன்மடங்காக்க மட்டுமே செய்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஆனால், பொதுச்சமூகம் அந்தப் பெண்களை 'இதுக்கெல்லாமா விவாகரத்து பண்ணுவாங்க' என்று குறை சொல்லும் தான். படுக்கையறைக்குள் சமூகத்துக்கு என்ன வேலை? 

போலவே, பெண்களிலும் பலர் புகுந்த வீட்டின் செழுமையில் மூழ்கி, முழுச்சோம்பேறிகளாகி விடுவது, அவர்தம் கணவர்களான ஆண்கள் அவர்கள் மீது மரியாதை மதிப்பிழந்து போகச் செய்துவிடுகிறது.. சென்னையில் ஒரு மருத்துவரைத் தெரியும். இவர் பார்க்க அரவிந்தசாமி போல இருப்பார். கெட்டப்பழக்கங்கள் ஏதும் இல்லை. ஐந்தடி தான் உயரம். பெற்றவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் அதற்கேற்றார்போல் பெண் பார்த்துத் திருமணம் செய்தார்கள்.அந்தப் பெண் இவர் அளவுக்கு இல்லை. ஒரு குழந்தை பிறந்த பிறகு இன்னும் குண்டாகிவிட்டார். ஒரு கட்டத்தில் வீட்டு டிரைவருடன் ஓடிவிட்டார். 'டாக்டர் சம்சாரம் டிரைவரோட ஓடிடிச்சு' என்று பேசினார்கள். இந்த மருத்துவர் அலட்டிக்கொள்ளவே இல்லை. மேலோட்டமாகப் பார்க்க, டாக்டர் தான் சரியில்லை என்ற தோற்றம் தரலாம். மருத்துவரின் மனைவியுடன் மருத்துவர் நெருக்கமாக இல்லாமல் இருந்ததற்கு அந்த மனைவியே கூட காரணமாக இருக்கலாம் என்றெல்லாம் யாருக்கும் யோசனை போகாது. வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வந்துவிட்டால், எதையுமே புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று ஏதேனும் இருக்கிறதா என்ன? ஆனால், பலர் இப்படித்தான் இயங்குகிறார்கள். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள நேரமிருந்தும், ஒரு விதமான சோம்பல் இவர்களை ஆட்கொண்டு விடுகிறது. குருட்டுச் சமூகத்தின் வழமையை, இவர்கள் தங்கள் தவறுகளை மறைக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், இது எவ்வகையிலும் இவர்களை எவ்வித மரியாதைக்கோ, மதிப்புக்கோ தகுதியானவர்களாக்குவதில்லை. 

திருமணம், குடும்பம் என்ற பெயரில் யாரும் யாரையும் எதற்குமே நிர்பந்தித்து விட முடியாது. காமம் அற்புதமானதுதான். ஆனால், மரியாதையும், மதிப்பும் இல்லாத இடத்தில், இக்குறும்படத்தில் சொல்வது போலெல்லாம் யாராலும் முழு மனதுடன் நடந்து கொள்ள முடியாது..