அத்தியாயம் - 10
வட
பழனி கோயிலுக்கருகில் இருந்த சரவண பவன் உணவகத்தில்
அஞ்சலியும், பவித்ராவும் சந்தித்துக்கொண்டபோது மாலை தாண்டி இரவு
ஒரு போர்வை போல கவியத்துவங்கியிருந்தது.
பரஸ்பர
விசாரிப்புகளுக்குப் பிறகு,
"பவி,
உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்."
"என்ன?"
"ஒருத்தனைப்
பாத்தேன்" என்றுவிட்டு அஞ்சலி அர்விந்துடனான தன் சந்திப்பையும், அதில்
பரிமாறிக்கொண்டவைகளையும்
விலாவாரியாக விளக்கினாள்.
"சபாஷ்!!..
செம்ம. பெயர் என்ன?”
பெயர் சொல்ல
வேண்டுமா என்று ஒரு கணம் யோசித்தாள் அஞ்சலி. பவித்ராவின் போக்கும் வரத்தும் அறிந்திருந்தபடியால்,
அது அவசியமற்றது என்று முடிவு செய்தவளாய்,
“திவாகர்”
என்றாள்.
“சரி, ஆளு எப்படி இருந்தான்?"
"எனக்கு
தோற்றம் முக்கியமில்லை பவி."
"அதுக்கில்லைடீ... " என்ற
பவித்ரா எதையோ சொல்ல வந்துவிட்டு, "சரி விடு" என்று
அமைந்தாள்.
"உனக்கும்
எனக்கும் ஒரே வயசு தானே.
உனக்குள்ள ஒரு வெற்றிடம் இருக்கிறா
மாதிரி தோணுதா?" என்றாள் அஞ்சலி.
பவித்ரா
கொஞ்சமாய் யோசித்துவிட்டு,
"நிராசைகள்
இருக்கு. பங்களா வேணும்னு ஆசைப்பட்டேன். வெளி நாட்டுக்கு டூர்
போகணும்னு ஆசை. ப்ச்.. அதெல்லாம்
நடக்கலை"
"அதைச்
சொல்லலைடீ. அதாவது, இப்போ இந்த நிமிஷம் வாழ்க்கையை
முடிச்சிக்கிறதா இருந்தா, அந்த ஒரு விஷயம்
நடக்கலையேன்னு நமக்கு தோணும்ல..அது மாதிரி"
"ஆக்ச்சுவலா
வெள்ளைக்காரன் மாதிரி ஒருத்தனோட உறவு வச்சிக்கணும்ன்னு தோணிச்சு"
"டீ. உறவைத்தவிர
வேற எதுவுமே தெரியாதாடீ உனக்கு"
"நானும்
காலேஜ் படிக்கிறப்போ உன்ன மாதிரி யோசிச்சிருக்கேன்.. நாம
பெண்களா இருக்கிறதுலயே பிரச்சனை ஆரம்பிக்குது அஞ்சு.. பிறந்ததிலிருந்தே இதைப் பண்ணாத, அதைப் பண்ணாதன்னு சொல்லிச் சொல்லி வளர்க்கப்படுறதுனால, நாம நாமளாவே வாழறதில்லை
அஞ்சு. நாம ஒவ்வொருத்தரும்
ஒரு குறிப்பிட்ட பர்சனாலிட்டியா வளர்றோம். அந்த பர்சனாலிட்டி, ஒரு
பொண்ணு எப்படி இருக்கணும்னு முன்வைக்கிற விஷயங்களோட ஒட்டுமொத்த தொகுப்பாத்தான் இருக்கு. நான்
மூர்த்தி கூட முதல் முதல்ல
படுத்தப்போ கூட எனக்கு பெரிசா
தெரியலை. கல்யாணத்துக்கு அப்புறம் மூர்த்தி என்னைத் தொட்டப்போ நான் புதுசா உணர்ந்தேன். நான்
நானா இருந்தது அந்த தருணங்கள் தான்னு
தோணுச்சி.'
"இப்ப
உனக்கு எதையோ மிஸ் பண்றோம்ன்னு தோணுதா?
பிறந்த பலனை அடைஞ்சிட்டதா தோணுதா?"
"ஆமா.. நான்
ஆசைப்பட்ட விஷயங்கள் சிலது நடக்கலைதான். ஆனா அந்த நடக்காததையெல்லாம்
எனக்கு கிடைச்ச உறவுகள் மூலமா பாலன்ஸ் பண்ணிக்கிட்டேன். என் கூட இருக்கிற
பல பெண்களுடைய பெருமைக்குரிய ஆண்களை நான் என் படுக்கையில
அடிமை மாதிரி நடத்தியிருக்கேன்; என் முன்னே மணியிட்டு
பிச்சை எடுக்க வச்சிருக்கேன்; என்னை
மாதிரி நிறைய பெண்கள் இருக்கிறதாத்தான் நான் நினைக்கிறேன். இப்போ
எனக்கு எதையோ இன்னும் அடையவே இல்லைங்குற எண்ணமே இல்லை. தேவைக்கு மேல அடைஞ்சாச்சு; எனக்குக்
கிடைக்காத எதையும் யாருக்கும் முழுசா விட்டுக்கொடுக்கலைங்குறதுல ஒரு சந்தோஷம்."
அஞ்சலி
ஏதும் பேசாமல், பவித்ரா சொன்னதை அசை போட்டுக்கொண்டிருந்தாள்.
"நீயும்
அந்த திவாகரை ட்ரை பண்ணிப்பாரு. ஒரே
ஒரு முறையாச்சும் ட்ரை பண்ணு. தனிமையில
சந்திக்க இடம் இல்லைன்னு வருத்தப்படாத.
எனக்கு ஒரு ஃப்ரண்ட் இருக்கா. தனியா
வீடு எடுத்து தங்கி வேலை பாக்குறா. அவ வேலைக்கு போயிட்டா வீட்டுல யாரும் இருக்க மாட்டாங்க.
அவ வீட்டை வேணும்னா பயன்படுத்திக்கோ." என்றாள் பவித்ரா தொடர்ந்து.
அப்பழுக்கில்லாத
அஞ்சலி, ரவியின் தகுதிக்கு மிகவும் அதிகம் என்று தோன்றுவதை வேறெப்படியும் அவளால் சமன் செய்திருக்க முடிந்திருக்கவில்லை.
தன் சிற்றறிவுக்கு எட்டிய சமன்பாட்டை, தான் பயன்படுத்திப் பார்த்து
பரிசோதித்த சமன்பாட்டை அவள் அஞ்சலிக்கும் கடத்தினாள்.
தன்னுள்
எதுவோ ஒரு வெற்றிடமாய் இருக்கிறதென்பதை
அஞ்சலி உணர்ந்திருந்தாலும், அந்த வெற்றிடத்தை எதைக்கொண்டு
நிரப்புவது என்பது ஊர்ஜிதமில்லாமல் இருந்தது. அவளும் எதை எதையோ முயன்று
பார்த்திருந்தாள். கோயில்களுக்கு செல்லுதல், யோகா, பூங்காவில் மற்ற பெண்களுடன் அரட்டை,
மகிழுந்தில் ஒரு நீண்ட பயணம்,
அனாதை இல்லங்களுக்குச் சென்று உதவிகள் செய்தல், ரத்த தானம் செய்தல்
என்று எதை எதையோ செய்து
பார்த்தும் அந்த வெற்றிடம் நிரம்பியிருக்கவில்லை.
ஆனால்,
பவித்ராவின் பார்வையில், வேற்று ஆணுடன் திருமண பந்தத்தை மீறிக் கொள்ளும் உறவினால் அந்த வெற்றிடம் நிறைந்திருக்கிறது
எனில் அதை ஏன் ஒரு
முறை முயற்சித்துப் பார்க்கக்கூடாது என்று தோன்றியது அஞ்சலிக்கு.
அர்விந்தின்
நினைவு வந்தது.
அர்விந்துடனான
அஞ்சலியின் சந்திப்பு ஒரு நாளின் பிற்பகலில்
பவித்ராவின் தோழி வீட்டில் நடந்தேறியது.
பவித்ரா
தன் தோழியின் வீட்டுச்சாவியை அஞ்சலிக்கென கேட்டுப் பெற்றுத் தந்திருந்தாள்.
அப்பட்டமாகச் சொல்வதானால், அந்த
சந்திப்புக்கு அஞ்சலி மனதளவில் இன்னும் தயாராகியிருக்கவில்லை. ஆனால் இப்போது அது கேள்வியாக
இருக்கவில்லை. கேள்வி என்னவெனில், ஒரு அன்னிய ஆடவனுடனான உறவு தான் அந்த வெற்றிடத்தை
நிரப்பும் வஸ்துவா என்பதுதான். அந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் அதற்கு மேல் ஒரு க்ஷணமும்
கடத்துவதாய் அஞ்சலிக்கு உத்தேசமில்லை.
கடைத்தெருவுக்குச்
செல்வதாய் காரணம் சொல்லிவிட்டு ஊபர் பிடித்து அஞ்சலி
பவித்ராவின் தோழி வீடு வந்தடைந்திருந்தாள். உலகம் அவர்கள்
இருவரைப் பொருத்தும் அன்று மாலை வரை ஸ்தம்பிக்க
ஒப்புக்கொண்டிருந்தது.
அர்விந்த்
ஒரு பூனை போல வந்தான்.
தெருமுனையிலேயே தன் மகிழுந்தை நிறுத்திவிட்டு
பவித்ராவின் தோழி வீடு வரை நடந்து
வந்தான். அஞ்சலி கதவு திறந்ததும். உள்ளே
நுழைந்தான். கதவை உள்பக்கமாகத் தாழிட்டான்.
பின் அஞ்சலியை இரண்டு கைகளிலும் அள்ளினான். ஒரு குழந்தையைப் படுக்கையில்
கிடத்துவதைப்போலக் கிடத்தினான். புதியதாகத் திறக்கப்பட்ட கடை ஒன்றில் மடித்து
வைக்கப்பட்ட சட்டைத்துணி ஒன்றை போதறவாக மடிப்புக் கலையாமல் பிரிப்பது போல் அவளின் ஆடைகளை
ஒவ்வொன்றாய் விலக்கினான்.
அவள்
உடலை இறுகப் பற்றிக்கிடந்த அவயங்களை மென்மையாக நெகிழ்த்தியும், மிகவும் இலகுவாக அவள் உடலுடன் உரசிக்கிடந்தவைகளை
விட்டு அவளின் அவயங்களை பிதுக்கியும் அவளை நிர்வாணமாக்கினான். ஆடைகளுக்குள் மறைந்து
கிடந்த அவளது தளிர் மேனி மீது, சதைத்
திரள்கள் மீது வெளிச்சம் படரச்செய்தான்.
கணவனல்லாத
வேறொரு ஆணின் ஸ்பரிசம் பட, முதலில் நாணிக்கோணிய அஞ்சலி, போகப் போக அணிந்திருந்த ஆடைகளுடன்,
வெட்கம், நாணம் போன்றவைகளையும் களைந்தாள். அவனின் அதுகாறுமான அவள் குறித்தான உயர்வு
நவிர்ச்சி நிமித்தம் பகிரப்பட்ட வார்த்தைகளுக்கு தக்க மதிப்பளிக்கும் விதமாக,
தன் அவயங்களால் அவனை பரவசமூட்டச்செய்தாள். திக்குமுக்காடச்செய்தாள். அந்த ஒவ்வொரு செய்கையிலும்,
அவள் தன்னை உணர்ந்தாள். சமூகக் கட்டுப்பாடுகள் என்னும் பொதி சுமையை சற்றே
இறக்கி வைத்த அந்த நொடிகளில் மிகவும்
விருப்பமுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
அர்விந்த்
அவளின் ஸ்தனங்களை தீண்டினான், உரசினான், அமிழ்த்தினான், நெகிழ்த்தினான். அவளை அந்நேரம் தன்
தாயெனக் கருதும் ஒரு பசித்த குழந்தையாகியும்
போனான். அவன் குழந்தையானதை அங்கீகரித்து
அவளும் அவனுக்குத் தற்காலிகத் தாயானாள். தன் வனப்பாலூட்டினாள். அவனின் ஆண்
நரம்புகளில், ஒரு குதிரையின் மீதமர்ந்து
விரட்டும் வீரனைப்போல் விரைந்தாள். அவனை மானாக்கி அவள்
சிறுத்தையானாள். அவனைப் பசுமாடாக்கி அவள் முதலையானாள். அவனை
அடிமைத்தேனீயாக்கி அவள் ராணித்தேனீ ஆனாள்.
முதலில்
சீண்டல்களாய் துவங்கியது விளையாட்டானது. விளையாட்டாய்த் தொடர்ந்தது பின் வெறி ஆனது.
வெறியானது பின் புத்தியைப் பேதலிக்கச்செய்தது.
பைத்தியமாக்கியது. இரண்டு பைத்தியக்கார உடல்கள் இரண்டு நாகமாகிப்போயின. அவைகள் ஒன்றையொன்று பிண்ணிப் பிணைந்தன.
முழுமையாக
அரை மணி நேரம் நீடித்த
முயக்கத்தின் முடிவில் அஞ்சலி கலைந்து கிடந்தாள். அவளுக்கு மிக அருகில் அர்விந்த
சோர்ந்து சரிந்தான்.
"இன்னிக்கே
சாகணும்னா கூட செத்திடுவேன்" என்றான் அர்விந்த்.
"இப்ப
நடந்ததுக்கு அதுவே பெட்டர்ன்னு சொல்றியா?" என்றாள் அஞ்சலி பகடியாக.
"ச்சே...
இந்த நிமிஷம் வாழ்க்கையை முடிச்சிக்கிறதா இருந்தா, அந்த
ஒரு விஷயம் நடக்கலையேன்னு நாம நினைப்போம்ல...
அந்த நினைப்பு இனிமே வராது..அதைச்சொன்னேன்" என்றான் அர்விந்த்.
"அப்படின்னா
உன் மனைவி?" என்றாள் அஞ்சலி புருவச்சுருக்கங்களுடன்.
"உன்னை
மாதிரி பொண்ணுங்க இருக்கிற திசையே இப்பத்தான் தெரியிது. கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்குறப்போ
நீயெல்லாம் எங்க இருந்த?" என்றான்
அர்விந்த் இயலாமையுடன்.
பண்பட்ட
ஆண்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் தனக்கான
பெண்ணைச் சந்திக்கையில், ' நீயெல்லாம் எங்க இருந்த இத்தனை
நாளா' என்று சொல்ல நேர்ந்துவிடுகிறது. எல்லா பெண்களுமே வாழ் நாளில் குறைந்தபட்சம்
ஒருமுறையாவது "எல்லா பெண்களுக்கும் தன்கிட்ட தப்பா பழகுற ஆணைக் கண்டுபிடிக்கிற சக்தி இருக்கு" என்ற வாக்கியத்தைச் சொல்ல
நேர்ந்துவிடுவதைப் போல.
எல்லா
பெண்களுமே, எல்லாக் காலத்திலும்
எதிர்பாலினம் குறித்த அதிருப்தி கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிற நிஜம், முதலாவது வாக்கியத்தின் பக்கமே நிற்கிறது என்பதைப்
பெண்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பது என் கேள்வியாக இருந்தது.
அஞ்சலிக்கு
கணவனல்லாத ஒருத்தனுடன் படுக்கையைப் பகிர்ந்துவிட்ட பிறகும் தனக்கு ஏன் அப்படி ஒரு
எண்ணம் வரவில்லை என்று தோன்றியது.
அஞ்சலி
தன் வீடு வந்து சேர்ந்துவிட்ட
பிறகும் அந்த எண்ணம் தனக்கு
ஏன் வரவில்லை என்ற சிந்தனை அவள்
மனதிலிருந்து அகலவில்லை.
'.....பிறந்ததிலிருந்தே
இதைப் பண்ணாத, அதைப் பண்ணாதன்னு சொல்லிச் சொல்லி வளர்க்கப்படுறதுனால, நாம நாமளாவே வாழறதில்லை அஞ்சு.....' என்ற பவித்ராவின் வார்த்தைகளில்
பொதிந்திருந்த உண்மை உறுத்தியது. பவித்ராவைத் தன்னைப்போல் ஒருத்தியாய், தான் கடந்து போக
நேர்ந்த அதே பாதையை ஒரு
காலத்தில் கடந்து போன ஒருத்தியாய்க் காலம்
பார்க்க வைத்ததில், அவளின் பிற ஆண்களுடனான கலவியை
ஒரு நோய்க்கான மருந்தெனவே அஞ்சலியைப் பார்க்க வைத்தது.
ஆயினும்,
அந்த மருந்து ஏன் தன்னிடம் வேலை
செய்யவில்லை என்ற கேள்வியும் அவளுக்குள்
எழுந்தது.
அர்விந்துடனான
அந்த உறவு, ரவியைத் தாண்டி, ரவியுடன் அவள் உருவாக்கியிருந்த குடும்பம்
என்கிற அமைப்பைத்தாண்டி, அவளின் இருப்பை அவளுக்கு உணர்த்தியது தான். ஆனாலும், அது அவளுக்குள்ளிருந்த வெற்றிடத்தை நிரப்பிடவில்லை
என்பதே அவளின் அவதானமாக இருந்தது.
காலம்
கடந்து கொண்டே இருக்கிறது. அழகு ஒரு அடையாளத்தைத்
தருகிறதுதான். அது செல்லும் இடமெங்கும்
தனக்கு ஒரு பிரபல்யத்தை உருவாக்குகிறதுதான்
என்பதை அஞ்சலி அறிந்தே இருந்தாள். ஆண்களிடத்தில் இன்னமும் தனக்கு செல்வாக்கு இருக்கிறதுதான் என்பதை அர்விந்த் நிரூபித்துவிட்டிருந்தான். ஆனால், அந்த ஒட்டு மொத்த
எதிர்பாலின கவன ஈர்ப்பில் எத்தனை
சதவீதம் தன்னுடைய சொந்த முயற்சி என்றொரு கேள்வியும் உள்ளுறை உவமமாக இருப்பதை அவளால் புறக்கணிக்க முடிந்திருக்கவில்லை.
இந்த அழகு,
இந்த உடல் நாளை சிதிலமடையின், தோய்ந்துபோயின், தன் ஒட்டு மொத்த செல்வாக்கு என்ன என்று
யோசித்தால், அடிவயிற்றைப் பிசைந்தது. நாளொரு மேனியும் பொழுதுதொடு வண்ணமுமாக சிதிலமடைந்துகொண்டே
இருக்கும் வெளிப்புற அழகு முழுவதுமானப் போய்விடுமுன் தன் கேள்விகள் அனைத்திற்கும் பதில்
தேடிவிடவேண்டுமென்கிற அவசரம், பரபரப்பு அவளைத் தொற்றிக்கொண்டது.
அந்த அவசரத்திற்கு,
அவள் கடக்க நேர்ந்த ஆண்களிடம் காலத்தை வீணாக்க
அறிவுருத்தவில்லை. மாறாக, முன்பைவிடவும் மிக அதிகமாக எதிர்பாலினத்தை வேவு பார்க்க,
நோக்கமறிய, உளவு பார்க்க உந்தியது. அந்த உந்துதலில் தான் தன் கேள்விக்கான விடைகளும்
கிடைக்குமென்பது அவளது சமீபத்திய புரிதலாக இருந்தது.
அந்த ஒட்டு
மொத்த எதிர்பாலின கவன ஈர்ப்பு, எத்தனை சதவிகிதம், அவளுக்கான உச்சபட்ச பொருத்தமான ஆணை
அவளிடம் கொண்டு வந்து சேர்க்க உதவியது என்கிற கேள்வியில் தான் அவள் இறுதியாகத் தன்னை
தொலைக்க வேண்டி இருந்தது.
"இன்னிக்கும்
ஷாப்பிங்கா?" என்றான் ரவி.
"ஏன்?
உனக்கு அதுல என்ன பிரச்சனை?"
என்றாள் அஞ்சலி.
"ஓண்ணும்
இல்லை. வயசுல பண்ண வேண்டியதெல்லாம் இப்ப
வயசாகி எல்லாம் சரிஞ்சி தொங்கிப் போனப்புறம் செஞ்சிட்டு இருக்க." என்றான் ரவி.
ரவி
எதைச் சொல்கிறான் என்று புரியாமல் இல்லை அஞ்சலிக்கு. அவள் ஏதும் பேசாமல்
மெளனமாகத் தான் அணிந்திருந்த ஆடைகளைக்
களைந்து பயன்படுத்திய துணிகளை தொகுக்கும் பையில் இட்டாள். பின் துவைத்த சுடிதார்
ஒன்றை எடுத்து அணிந்துகொண்டாள்.
"இப்ப
உனக்கு என்ன வேணும்?" என்றாள்
அஞ்சலி.
"வீட்டுல
அடுப்பு எரியிறதே இல்லை. சமையல்ன்னு ஒண்ணு இருக்கு. நியாபகத்துல இருக்குல்ல?"
"அது
நியாபகம் இருக்கு. அதைப் பொம்பளை தான் செய்யணும்னு விதி
இல்லைங்குறது தான் உனக்கு நியாபகம்
இல்லை. நான் என்ன இங்க
வேலைக்காரியா? வீட்லயே இருக்கிறது எனக்கும் போரடிக்குது. நான் வேலைக்கு போகலாம்ன்னு
இருக்கேன். ஒருவேளை நான் நாளைக்கே வேலைக்கு
போயிட்டா,, சாப்பாடு நீ தானே சமைச்சிக்கணும்?
அப்படி நினைச்சுக்கோ" என்றாள் அஞ்சலி கண்ணாடி முன் நின்று கூந்தலை
கைகளால் நீவி விட்டபடி.
"எல்லோருக்குமே
அவங்க எதிர்பார்க்கிறது கிடைச்சிடறது இல்லை. வாழ்க்கையே அட்ஜஸ்ட் பண்றதுல தான் இருக்கு.
நான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு தான் இருக்கேன்." என்றுவிட்டு காலணிகள்
அணிந்துகொண்டு ஸ்விஃப்ட் மகிழுந்தில் ஏறி சாலையில் பறந்தான்
ரவி.
புரட்சி
பேசும் பெண்ணின் மீது கோபத்தைக் கக்கிவிட்டு
அவளின் உடமையை அவளின் விருப்பத்திற்குப் புறம்பாக கவர்ந்து செல்லும் அறமற்ற கணவனை இயலாமையுடன் பார்த்து நின்றாள் அஞ்சலி.
அலட்சியமும்,
அறமற்ற செயல்பாடுகளும், ஆண்களுக்கு மரபணுவிலேயே இருக்கும் கோளாறோ என்று தோன்றியது. எல்லாப் பெண்களும் புரட்சி பேசினால் இந்த ஆண்கள் என்ன
செய்வார்கள் என்றொரு கேள்வி எழுந்தது. என்ன ஆனாலும் சமைக்கப்போவதில்லை,
என்னதான் நடக்கிறதென்று பார்த்துவிடுவோம் என்று கருவிக்கொள்ளும் தைரியத்தைத் தந்தது அவனின் பொறுப்பற்ற தன்மைதான் என்பது அவளின் அவதானமாக இருந்தது.
துவக்கத்தில்
பவித்ராவின் கள்ளக்காதல்கள் தெரிந்த பிறகு தனக்குள் இருந்த வெற்றிடத்தை நிரப்பும் வஸ்து அந்தக் கலாபக்காதல் தானோ என்று எண்ணிய
அஞ்சலி இப்போது அதை விடவும் ஒரு
பெரிய குழப்பத்தில் சிக்குண்டிருந்தாள்.
அஞ்சலி
போல் எண்ணற்ற பெண்களை நான் கடந்திருக்கிறேன். எனக்கு அவள்
போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பமொன்றும் புரியாத புதிர் அல்ல.
எல்லாப்
பெண்களுக்கும், அவர்களின் வாழ் நாளுக்குள், அவர்களின் ஆகச்சிறந்த ஆண் துணை வாய்த்துவிடுவதில்லை;
சிலருக்கு, அவர்களின் ஆகச்சிறந்த ஆண், அவர்களின் காலத்திற்குப் பிந்தியோ, முந்தியோ
பிறக்க நேர்ந்துவிடுவதன் பக்கவிளைவு தான் இது; துரதிருஷ்டவசமாக, இது அப்பெண்களுக்குக்
காலத்தே புரிவதில்லை; காலத்தே புரிந்துகொண்டவர்கள் கடந்து போய்விடுகிறார்கள்; சத்தமில்லாமல்
கிடைத்ததைக் கொண்டு வாழ்வைத் தகவமைத்துக்கொள்கிறார்கள்; வாழ்வனுபவத்தை மிகைப்படுத்துவதன்
மூலம் தனக்குக் கிடைக்காததைப் பன்மடங்காக்கிப் பெற்றுக்கொள்கிறார்கள். அந்த சூதனமே
அவர்களிடம் என்னைக் கவர்கிறது. விதியின் கடிவாளம் என்னிடமிருந்தால், அப்பெண்களுக்காக
சற்று வளைந்து போகக் கட்டளையிடுவேன்.
பிரபஞ்சம்
தன்னில் இருக்கும் ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.
பவித்ராவும்
அந்த வெற்றிட மன நிலைப்பாட்டை கடந்த
காலத்தின் ஏதேனும் ஓர் புள்ளியில் எதிர்கொள்ள
நேர்ந்து ஸ்தம்பித்திருக்க வேண்டும். எத்திசை போவதென குழம்பி, மிரண்டு, பேதலித்து இறுதியில் ஆண்களுடன் படுக்கையைப் பகிரும் ஒரு ஏற்பாட்டில் தன்
சுயத்தைக் கண்டடைந்திருக்க வேண்டும்.
முதல்
முறை ஒரு கட்டாயத்தின் பேரிலும்,
அடுத்தடுத்த முறைகளில் அவளின் அந்தரங்க ஒப்புதல்களுடனும் அவள் அவற்றை மேற்கொண்டிருக்க
வேண்டும்.
ஆனால், அவளுக்குத்
தன் சுயத்தைக் கண்டடைய அந்த கலாபக் காமம்
உதவியது போல் அஞ்சலிக்கு ஏன்
உதவவில்லை? அஞ்சலிக்கு பவித்ராவின் ஆலோசனை உதவவில்லை. அஞ்சலியும் திருமண பந்தத்தைத் தாண்டி ஒரு ஆணுடன் உறவு
வைத்துப் பார்த்தாள். ஆனாலும், அவள் மனதில் இருந்த
வெற்றிடம் நிரம்பவில்லை. பிரபஞ்சம் அவளுடைய வாழ்வின் நோக்கத்தை என்னவாக வைத்திருக்கும் என்று எனக்குள்ளும் கேள்வி எழுந்தது.
