என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday 27 March 2013

ஒப்பனைகள் கலைவதற்கே - சமூக‌ குறுநாவல்


ஒப்பனைகள் கலைவதற்கே ‍- சமூக குறுநாவல்

இன்று...

தேவியின் கண்மணியின் 03.04.2013 தேதியிட்ட இந்த வார இதழில் 'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற தலைப்பிலான எனது முதல் சமூக குறுநாவல் வெளியாகிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த மார்ச் 8ம் திகதி, அண்ணா சாலையில் உள்ள தேவியின் கண்மணி அலுவலகத்தில் குறுநாவலை பகிர்ந்துகொண்டது துவங்கி வெளியான இன்றுவரை சுவையான நிகழ்வுகள் பல. அவற்றையெல்லாம் மிகப்பொறுத்தமான தருணமொன்றில் பகிர்ந்துகொள்ள‌வென‌ சேமிக்கிறேன்.

எனது குறுநாவலை தேர்ந்தெடுத்து வெளியிட்டமைக்கு தேவியின் கண்மணி ஆசிரியர் குழுவுக்கும், மற்றும் நிர்வாக குழுவுக்கும் முதற்கண் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

குறுநாவல் மிக அழகாக வந்திருக்கிறது.

பிரபல ஓவியர் மாருதி மிக மிக அழகாக மூன்று சித்திரங்கள் வரைந்திருக்கிறார். குங்குமம் இதழில் வெளியான எனது ஒரு சிறுகதைக்கும் அவரே தான் வரைந்திருந்தார். எனது முதல் குறுநாவலுக்கும் அவரே வரைந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறுநாவ‌லின் அட்டைப் பக்கம் ம‌ற்றும் பின்ப‌க்க‌ங்க‌ளின் பிர‌திக‌ள் இங்கே.



குறுநாவல் வாசிக்க கிடைத்த நண்பர்கள், உங்கள் கருத்துக்களை என்னுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்

Saturday 23 March 2013

தேவியின் கண்மணியில் எனது சமூக நாவல் வெளியீடு


அறிவிப்பு!!!

அன்பின் நண்பர்களுக்கு,

'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற தலைப்பில் நான் எழுதிய சமூக நாவல், வரும் 27 மார்ச் 2013 அன்று வெளியாக இருக்கும் தேவியின் கண்மணி இதழில், வெளியாக இருக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடனும், பேருவகையுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது என்னுடைய முதல் நாவல்.



நண்பர்கள், எனது இந்த நாவலை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்

Monday 11 March 2013

இடைவெளி - சிறுகதை


இடைவெளி - சிறுகதை


அண்ணா நகரின் 17வது அவென்யூவில் உள்ள ஓர் அழகான அபார்ட்மென்டின் முதல் தளத்திலிருக்கும் என் வீட்டின் உள் அறையின் ஜன்னல் மட்டும் கம்பிகள், கதவுகள், தாழ்ப்பாள் உட்பட‌ எப்போதும் துடைத்து பளிச்சென்று இருக்கும். வீட்டின் பிற பகுதிகளில் லேசாக தூசு இருந்தாலும், என்னால் சகிய இயலும். ஆனால், இந்த ஜன்னல் மட்டும் என் பார்வைக்கு துப்புரவாக இருக்கவேண்டும்.

ஜன்னல் வழியே, அமைதியான தெரு, ஒரு நடமாடும் இஸ்தரிக் கடை, காலையிலும், மாலையிலும் நாய்களை வாக்கிங் அழைத்துச் சென்றபடி மனிதர்கள், சில சமயம் பெண்கள், பெரும்பாலும் மத்திம வயதுப் பெண்கள், யார் வீட்டிலேனும் பார்ட்டி, மாலை மங்கிய நேரத்தில் தெரு முக்கில் நிழலடைந்த இடத்தில் அருகருகே நின்று பேசிக்கொள்ளும் காதலர்கள், தவறாக நுழைந்துவிட்டு அமைதியான தெருவில் யாரிடம் விலாசம் விசாரிக்கலாமென அலைபாயும் இளைஞர்கள், அருகருகே அமர்ந்தபடி சும்மா தெருக்களை ஸ்கூட்டியில் சுற்றிக்கொண்டே இருக்கும் இளம்பெண்கள், சாலையோரமாய் உள்ளிருக்கும் எதுவும் வெளியே தெரியாவண்ணம் எல்லா கண்ணாடிகளும் ஏற்றப்பட்டு லேசாய் அதிர்ந்தபடி உருமிக்கொண்டிருக்கும் ஸ்விஃப்ட் யாரேனும் அண்ட சட்டெனக் கிளம்பிவிடுவது, தூரத்து அப்பார்ட்மென்டில் தங்கி இருக்கும் கல்லூரி பெண்கள் ஜன்னல் கம்பிகளினூடே கைகளை தொங்கவிட்டு சிகரெட் பிடிப்பது, இப்படி எத்தனையோ பார்க்கக் கிடைப்பதில் என் போன்ற அறுபது வயதுக்காரனுக்கு வயோதிகம் சுவாரஸ்யப்படுவது இந்த ஒரு ஜன்னலால்தான் என்பதால் வரும் அதிகபட்ச கரிசனம் காரணமாக அந்த ஜன்னலை மட்டும் மேலதிக கவனத்துடன் நான் பராமரிப்பது வழக்கம்.

இவையெல்லாம் கூட குமுதம், குங்குமம் இதழ்களில் வரும் ஒரு பக்க கதைகள் போல தினப்படி பொழுதுபோக்கிற்கு பயன்பட்டாலும், நான் இந்த ஜன்னல் மூலமாக‌ அவதானிக்கும் சில தொடர்கதைகளும் உண்டு. அதில் ஒன்று, சாலை தாண்டி எதிர் அப்பார்ட்மென்டின், முதல் தளத்திலிருக்கும் குடும்பம். அப்பா, அம்மா, பெண், பிள்ளை என்று நால்வர் கொண்ட சிறிய குடும்பம். குடும்பத்தலைவர், ஏதோ மோட்டார் நிறுவனத்தில் மானேஜராக இருக்கிறார். அவரின் மனைவி, குடும்பத்தலைவி. அந்த வீட்டில் ஒர் இளம்பெண். வயது 18 இருக்கலாம். கல்லூரி செல்கிறாள். அந்தப் பிள்ளை காலேஜ் நுழையவிருக்கிறான். மத்திய தரத்திற்கும் மேலான குடும்பம் அது. இவர்களுக்கு சொந்தமாக இரண்டு பைக்குகளும், ஒரு காரும் கூட உள்ளது.

இவர்களை சிரமேற்கொண்டு நான் தேர்ந்தெடுக்கவில்லை. தொடரவில்லை. என் ஜன்னலைத் திறந்தாலே இவர்கள் வீட்டின் பால்கனி, மற்றும் ஜன்னல் தான் தெரியும். ஆதலால், கண்டுகொள்ளாமல் போக வாய்ப்பில்லை. அதன் காரணத்தினாலேயே, இக்குடும்பத்தை, வேறு வக்கின்றி, கவனிக்கத் துவங்கியதில், ஏனைய மூவரையும் விட, அந்த இளம்பெண், தான் அதிக‌ம் வ‌சீக‌ரித்தாள்.

என் வீட்டின் கீழ் வீட்டில் ஒரு பைய‌ன் இருக்கிறான். பெயர் ரவி. அவ‌ள் வ‌ய‌துதான். அவ‌னும் க‌ல்லூரியில் ப‌யில்கிறான். நான் மிக நன்றாக அறிவேன் அவனை. ஒரு முறை என்னுடன், இரத்த தானம் செய்ய வந்திருக்கிறான். வயோதிகத்தில் சுகர் காரணமாக என்னை புறந்தள்ளிவிட்டு அவனிடம் இரத்தம் எடுத்துக்கொண்டது மருத்துவமனை. பி பாஸிட்டிவ் வகை இரத்தம். ஆல்கஹால் சுத்தமாக இல்லை. அன்று தான் கண்டுகொண்டேன், தனக்கு குடிப்பழக்கம் இல்லை என்று அவன் முன்பெப்போதோ சொன்னது உண்மையென்று. ஆனால், அவ‌னுட‌ன் அவ‌ள் பேசி நான் க‌வ‌னித்த‌தே இல்லை. இத்த‌னைக்கும், அவன் ஒரு ஓவிய‌ன். ந‌ன்றாக‌ ஓவிய‌ம் வ‌ரைவான். இர‌ண்டொரு நிக‌ழ்ச்சிக‌ள் கூட‌ செய்திருக்கிறான். த‌ன்னையொத்த‌ க‌ல்விய‌றிவுட‌ன் பொறியிய‌ல் ப‌டிக்கிற‌, க‌லைக‌ளில் ஆர்வ‌ம் கொள்கிற‌, க்ரியேட்டிவிட்டு இருக்கிற‌ ஒரு ஆணுட‌ன் அவ‌ள் ஏன் ப‌ழ‌க‌வில்லை என்ப‌து என‌க்கு புரியாத‌ புதிர். இத்த‌னைக்கும், அவ‌ளை, ஆங்காங்கே தெருக்க‌ளிலும், ஸ்டேஷ‌ன‌ரி ஷாப்க‌ளிலும், பேக்க‌ரிக‌ளிலும், பெட்ரோல் ப‌ங்க‌ளிலும் வேலை செய்யும் பைய‌ன்க‌ளுட‌ன் க‌தைய‌டிப்ப‌தை நானே பார்த்திருக்கிறேன். இவ‌ர்க‌ளை விட‌, தன்னைப் போலவே பொறியிய‌ல் வ‌ரை நீந்தி வ‌ந்த‌ ஒருவ‌ன் எந்த‌வ‌கையில் த‌குதி குறைவு என்ப‌து புரிய‌வில்லை. பொறியியல் படிக்கிறானென்பதற்காகவோ, நிகழ்ச்சிகள் செய்கிறானென்பதற்காகவோ ஒருவ‌னை உத்த‌ம‌ன் என்று சொல்ல‌ முடியாதுதான். ஆனால், பொறியிய‌ல் ப‌டித்த‌ப‌டியே க‌லையையும் வெற்றிக‌ர‌மாக‌ செய்ப‌வ‌னுக்கு எந்த‌ வ‌கையில் ஒரு பெண்ணுட‌ன் அடிப்படை நட்பு கொண்டு பேச‌ த‌குதியில்லை என்ப‌து புரிய‌வில்லை. இவனைவிட, ஸ்டேஷனரி ஷாப் பையன்கள், பெட்ரோல் ஊற்றும் பையன்களிடம் ஒரு பொறியியல் படிக்கும் பெண்ணுக்கு நட்பில் பகிர்ந்துகொள்ள என்ன இருக்குமென்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவளது சகோதரன் பொறியியல் படிக்க இருக்கிறான். அந்தப் பொறியியல் படிப்பிற்குள் நுழைவதற்கு தேவையான உழைப்பை நிச்சயம் தன் சகோதரி கண் பார்க்கத்தான் அவன் மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படிக் கூடவா அந்த இளம் பெண்ணுக்கு, அந்த உழைப்பை புரிந்து கொள்ள இயலாமல் போகும்? அவளானால், கீழ் வீட்டு ரவியிடம் ஏதும் பேசுவதில்லை. ஆனால், கடைக்காரப் பையன்களுடனும், பெட்ரோல் பங்க் பையன்களுடனும் பேசுகிறாள். அப்படியானால், பொறியியல் படிப்பு என்பது உண்மையில் என்ன விதமான படிப்பு என்ற கேள்வி எழுகிறது எனக்குள். அந்தப் படிப்பில் உண்மையில் ஒன்றுமே இல்லையா?

இதில் எனக்கு எந்த துணிபாற்றலும் துணிதலும் தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும், அந்த துணிபாற்றல்களில் எந்த தர்க்கமும் தெரியவில்லை. ஆனால், இதற்கு இவளை மட்டும் குறை சொல்ல முடியுமா என்பதும் தெரியவில்லை.

அன்றொரு நாள் , நான் பார்க்க, ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்த தாயும் மகளும், ஆட்டோவில் அமர்ந்தபடியே சில்லரைக்கு காத்திருக்கையில், ஆட்டோ டிரைவரை பொருட்படுத்தாது, அவள் தாய், சற்று முறுவலித்து கவட்டையில் கைவிட்டு சொறிய, டிரைவர் அதை ஒரு குறுகுறுப்புடன் ஓரக்கண்ணால் பார்ப்பதை, அந்தப் பெண் பார்த்துக்கொண்டிருந்தது. என் 60 வயது அனுபவத்தில் இவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்று நான் மிகவும் குழம்பிப்போன மனிதர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும்.

பிறிதொரு நாள், அந்த வீட்டின் இள‌ம் பெண், தன் அறைக்கண்ணாடியின் எதிரே நின்றவாறு, அணிந்திருந்த சுடிதாரைக் கழற்றினாள். அறை ஜன்னல் திறந்திருக்கிறதைப் பற்றியோ, அதன் மூலம் தன்னை எவரேனும் பார்க்க நேரலாம் என்பது பற்றியோ அவள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. திறந்திருக்கும் ஜன்னல் வழியே எவரெனும் தன்னை பார்க்கக்கூடும் என்ற பிரஞை கூடவா ஒர் இளம்பெண்ணுக்கு இல்லாமல் இருக்கும்!. மெதுவாக, மிக மெதுவாக, ஆடைகளை களைதல் என்கிற அந்த நிர்வாணப்படுத்திக் கொள்ளுதலை, அத்தனை மெதுவாக, அனுபவித்துச் செய்ய, ஒரு பெண் தன்னைத் தானே எத்தனைக்கு ரசித்திருக்க வேண்டும் என்று எண்ணி எண்ணி நான் அயர்ந்தே போனேன். உள்ளாடைகள் வரை கழற்றிவிட்டு, பாத்ரூமிற்குள் போய்விட்டாள்.

எனக்கு ஒன்று புரிந்தது. இன்றைய இளம் தலைமுறையினர், தான் என்கிற பிரஞைக்குள்ளேயே வாழப் பழகிவிட்டனர் போலும். தன்னைச் சுற்றிய உலகத்தைப் பற்றி எந்த விதமான அக்கறைகளும் இல்லாமல், தானே தனக்குள்ளாகவே வாழப் பழகிவிட்டனர் போலும். தன்னைத் தாங்கும் இந்த நிலம் பற்றியோ, அதனுள் இயங்கும் ஏனைய ஜீவராசிகள் பற்றியோ , சூழ்ந்திருக்கும் சமூகம் பற்றியோ, தான் பங்குபெற நேரும் பல்வேறு இயக்கங்கள் பற்றியோ யாதொரு பிரஞையும் இல்லாது இருக்கிறார்கள் போலும். இடம் அல்லது சூழல் என்பதை தேவைப்படும்போது தேர்ந்தெடுத்து உடுத்திக்கொள்ளும் ஒரு உடை போல அவர்கள் நடத்த முயல்வது போல் தோன்றுகிறது. அவ்வாறு நடத்தத் தேவையான அளவுக்கு அவர்கள் தங்களைத் தாங்களே ஜென்மப் பிரயத்தனப்பட்டு சுருக்கிக் கொள்வது போல் தோன்றுகிறது.

அவள் தான் இப்படியென்றால், அவளின் சகோதரன் வேறு தினுசு. அவனும், அவளும் பேசி நான் பார்த்ததே இல்லை. இத்தனைக்கும் இந்தக் குடும்பம் என் வீட்டெதிரில் சுமாராக இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது. அவனை நான் பார்க்கையிலெல்லாம், ஏதோ ஒரு புசுபுசு நாய்க்குட்டியை பாசமுடன் தடவித் தருபவன் போல, அவன் பைக்கை துடைத்துக் கொண்டிருப்பான். எனக்கென்னவோ, அவனுக்கு வீடென்ற ஒன்று தேவையே இல்லையென்று தோன்றும். டீ, காபி குடிப்பது, நண்பர்களுடன் ஃபோனில் கதைப்பது, சும்மா வெறுமனே அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, மொபைலில் விளையாடுவது, நொருக்குத் தீனி தின்பது இப்படி ஒரு நாளின் பெரும்பகுதி நேரம் அந்த பைக்கின் மீதே கழிக்கும் அவனுக்கு வீடு என்ற ஒன்று எதற்கு?.

வாலிபப் பருவத்தின் துவக்கத்தில், பைக், அவனது அடையாளமாகிப் போவதை இந்தக் காலத்துப் பையன்கள் ஒரு வித போதையுடன் விரும்பி ஏற்கிறார்கள். பெருமிதத்துடன் ஒப்புக்கொள்கிறார்கள். பைக் ஒன்று போதும் இளமைக்கு என்று முடிவு செய்கிறார்கள். ராஷ் டிரைவிங்கில் மாட்டிக்கொள்வதை பதக்கமெனப் பேணுகிறார்கள். பைக் வைத்திருப்பதே இளமையின் நோக்கமென்கிற தோற்றம் தருகிறார்கள். மறைமுகமாக, எதிர்பாலினத்திடம் இவ்வளவுதானே நீ எதிர்பார்த்தாய் என்கிறார்கள். மறுக்கவேண்டிய கடமையை மறந்துவிட்டு மறு தரப்பு, அங்கீகரித்துவிடுகிறது. பிற்பாடு, இதைவிட அதிகம் தேவையெனும்போது, அப்படியொன்றும் இல்லாது போகையில், அதே எதிர்பாலினம் ஏமாறுகிறது. ஆண் வர்க்கத்தை இளக்காரமாய் நினைத்துவிடுகிறது. மரியாதை தர மறுக்கிறது. ' நீ என்ன பெரிய இவனா?' என்கிறது. தானும் அதற்கொரு காரணம் என்பதை உணர மறுக்கிறது. இது, இக்காலத்தில் பலருக்கு புரிவதுகூட இல்லை. எவருக்கும் இந்தக் கோணத்தில் ஒரு சிறு பிரஞை கூட இல்லை. இதை என்னவென்று சொல்வது?

அந்த பைக்கை அவன் பார்த்துக்கொள்ளும் விதமும், அதைக் கையாளும் விதத்தையும் பார்த்தால், அந்த பைக் ஏதோ அவனின் சமீபக் காதலி போல் தோன்றும். பஜாஜின் பல்சர் வகை பைக் என்று தெரிகிறது. என்பத்தி ஐந்தாயிரம் விலை உள்ள பைக், லிட்டருக்கு முப்பத்தி ஐந்து கிலோமீட்டருக்கு மேல் கொடுக்காதென்று சொல்கிறார்கள். கல்லூரிக்கு செல்ல இருக்கும் இவனுக்கு இப்படி ஒரு பைக். அதை ஓட்ட பெட்ரோலுக்கு காசு யார் தருகிறார்கள்? வசதி இருக்கிறதென்றால், சொந்தக் காசில் வாங்க வேண்டிய கடமை இல்லாது போகுமா என்ன? வசதி இருக்கிறதென்றால், அப்பன் காசில் பவிசு காட்ட வேண்டுமா என்ன? பதின்ம வயதில் பைக், அப்பனின் சம்பாத்தியத்தையும், பிள்ளைப் பாசத்தையும் வேண்டுமானால் சொல்லலாம். இக்காலத்தில் அனேகம் பிள்ளைகளின் பொறியியலும் கூட அப்பன் காசுதான் என்பதை ஒவ்வொரு பாங்க் மானேஜரும் அறிவார். இதில், பையனின் முயற்சி என்று என்ன இருக்கிறதென்று புரியவில்லை. இவன் காதலி, எதை நம்பி, இவன் காதலை ஏற்றுக் கொள்கிறாள் என்று புரியவில்லை. இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட காதல்கள் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல வருகின்றன?

ஒன்று மட்டும் புரிகிறது. இவன் காதலி, எதை நம்பி, இவன் காதலை ஏற்றுக்கொள்கிறாளோ, அதற்குத்தான் இந்த சமூகத்தை அவள் பழக்கப்படுத்துகிறாள். இப்ப‌டி ப‌ழ‌க்க‌ப்ப‌டும் ச‌மூக‌த்திட‌ன் என்ன‌ வித‌மான‌ த‌ர‌த்தை எதிர்பார்க்க‌ இய‌லும்? இன்றைய இளைஞர்களில் அனேகம் பேர், இலக்கற்று இருக்கிறார்கள். க‌ல்லூரியென்றால் பையன்கள் பைக்கிற்கு அடித்துக்கொள்கிறார்கள். கல்லூரி முடித்தால் ஐ.டி வேலைக்கு அடித்துக்கொள்கிறார்கள். காசு சேர்ந்தவுடன் காலாட்டுகிறார்கள். அதற்கு பிறகு என்ன என்று தெரியவில்லை? இலக்கற்று போய்விடுகிறார்கள். எட்ட நிற்கும் வரை பவிசு காட்டி பெண்ணை அண்டுகிறார்கள். நாலு சுவற்றுக்குள், உண்மைகளை மறைக்க முடியாமல் அசடு வழிகிறார்கள். அல்லது, உடல் வலு காட்டி வாயை அடைக்க முயன்று தோற்கிறார்கள். பணத்தால் அடிக்கிறார்கள். ஏனெனில் அது ஒன்று தான் கையிருப்பு.

இந்தக் கால இளைஞர்கள் நிஜ வாழ்க்கையில், கலை, இலக்கியம், ஓவியம், நடனம் என்று கொடி நாட்டியவர்கள் யாவரும், தங்கள் கல்லூரி நாட்களில் மேடை ஏறாதவர்களே என்று நினைக்கும் படி செய்து விடுகிறார்க‌ள். கல்லூரி மேடைகள் ஒரு ஆரம்பம் தான். ஒரு ஊக்குவிப்பு மட்டும் தான். போலிகளின் வித்து அதில் கிடைக்கும் லேசான போதையிலேயே தீர்ந்து விடுகிறது. உண்மையான திறமை உள்ளவனுக்கு, உண்மையான கலைத் தாகம் உள்ளவனுக்கு, உண்மையான நடனக்காரனுக்கு, உண்மையான திறமைசாலிக்கு கல்லூரி மேடைகளுக்குப் அப்பால் தான் நிஜ மேடைகள் துவங்குகின்றன. உண்மையான போட்டி, அவ்வகையான மேடைகளில் தான் துவங்குகிறது. அம்மேடைகளே உண்மையான மேடைகள். ஆனால், அது இங்கே எவருக்கும் புரிந்தது போல் தோன்றவில்லை. புரிந்தவர்களும் பணத்தால் அடித்தே தனக்கான மேடையை உருவாக்கிக்கொள்கிறார்கள். புளித்த முதலாளித்துவங்களில் மேடைகளும் வெகு எளிதாக சாத்தியப்பட்டு விடுகின்றன.

ஒரு குடும்பத்தின் போக்கை அதன் தலைமையைக் கொண்டு தீர்மானித்துவிடலாம்.

இவர்களைக் கொண்ட குடும்பத்தின் தலைவர்களை நான், நடு இரவில், வழி தவறி, பசித்தழும் ஓர் நாய்க்குட்டியின் கேவலோடுதான் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. தாயோ, உணவோ வேறெங்கோ இருக்க, யாருமற்ற சாலையில், தனக்கே இன்னதென்று தெரியாத தேவைகளுடன் செய்வதறியாது அங்குமிங்கும் இயந்திரத்தனமாய் அலையும் அந்த நாய்க்குட்டி, இவர்களைக் காட்டிலும் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கேனும் ஐந்தறிவு, வாயில்லா ஜீவன் என்கிற சலுகையெல்லாம் இருக்கிறது. மனிதர்கள், அதுவும் வயதில் பெரியவர்கள் அப்படியில்லையே. அவனின் அப்பா வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் ஏதேனும் ஒரு ஃபைலில் மூழுகியிருப்பார். ஃபைலில் தான் நாள் முழுக்க கழிக்க வேண்டுமெனில் இவர் ஏன் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூட எனக்கு அவ்வப்போது தோன்றும். பதின்ம வயதின் பையனை புரிந்துகொள்ள இயலவில்லை. அவனின் மனப்போக்கு புரியவில்லை. அவ்வயதை கடந்தவனுக்கு அவ்வயதின் பிள்ளை புரியவில்லை. அதே வீட்டில் ஜன்னலைத் திறந்துவைத்தபடி, உடை மாற்றும் பெண்ணைத் தெரியவில்லை. வாடகையும், கார் இன்ஷூரன்சும் போக எத்தனை சேமிப்பு என்பது மட்டுமே ஓர் குடும்பத் தலைவனின் கண்களுக்கு தெரிந்தால் போதுமா?

நானும் தான் அலுவலகம் சென்று வேலை செய்திருக்கிறேன். ஆனால் இப்படியல்ல. எச்.வி.எஃப்ஃபில், கூடுதலாக வேலை செய்தால் ஓ.டி எடுத்துக்கொள்ளலாம் என்ற போதும் வீட்டிற்கு ஓடி வந்தவன் நான். கூடுதலாக பணம் சேர்த்து வங்கியில் வைத்துக்கொண்டு நிம்மதி பெருமூச்சு விடலாம். ஆனால் இழந்த வாழ்க்கை திரும்பக் கிடைக்குமா என்ன? இவரானால், வாழ்க்கை என்பதே சம்பாதிக்க என்று திரிவதாய்த் தோன்றுகிறது. இவர் எத்தனை சம்பாதிக்க ஓடுகிறாரோ, அத்தனைக்கத்தனை அவரின் மகனும் மகளும் திசை மாறிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்பதை இவர் எப்போதுதான் உணர்ந்துகொள்வார் என்று எண்ணி வியந்திருக்கிறேன். வாழ்க்கை வாழ்வதற்கு என்று ஒரு நாளேனும் அவர் அருகே சென்று உரக்க கத்த வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

இவர்கள் யாருக்கும் சமூக அமைப்பு தெரிந்திருப்பது போல் தோன்றவில்லை. த‌ன் பாத்திரம் நிரம்பினால் போதும் என்று நினைப்பதாகத் தோன்றுகிறது. தங்கள் சுயத்திற்குள்ளாகவே மூழ்கிப் போய்விடுவதாகத் தோன்றுகிறது. தான், தன் குடும்பம் என்கிற பிரஞைக்குள்ளேயே வாழ்ந்து பழக விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது.

சில சமயங்களில், 'படித்தவர்' என்கிற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன என்று நான் மிகவும் குழம்பியிருக்கிறேன். இவர்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்களே. தாய், தந்தை, மகள் மூவரும் பொறியியல் படித்த/படிக்கிறவர்கள். பிள்ளை படிக்க இருக்கிறான். பொறியியல் படித்த ஒரு முழுக் குடும்பமே இப்படியென்றால், கல்வியை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் இந்தியா போன்ற, இரண்டாவது மிகப்பெரிய ஜனத்தொகை கொண்ட நாட்டின் தரம் என்ன என்று நினைத்தால் என் காலினடியில் தரை நழுவுவது போல் உணர்கிறேன்.

எல்லோருக்கும் எல்லாமும் தானே வந்துவிடுமா? வராவிட்டால் என்ன செய்வது? இவர்கள் ஏன் இப்படி இருக்கவேண்டும்? யாரைக் குறை சொல்வது? எங்கு பிழையாகி போனது? நினைக்க நினைக்க, முடிவில்லாத பிரபஞ்சம் போல கேள்விகள் விஸ்தரித்துக்கொண்டே போகிறது. நம் பாதைக்கு எட்டாது நிற்ப்பவர்களை அண்டுவதான முயற்சிகள் நமது பயணங்களைத் தாமதமாக்க கூடுவதாக, ரத்து செய்யவும் கூடுவதாக இருக்கையில் வ‌லுக்கும் மெல்லிய‌ இடைவெளியை எதைக் கொண்டு நிர‌ப்புவ‌து? இந்த‌ச் சிறுக‌தை, நிர‌ப்பிடுமா?

முற்றும்.

- ராம்ப்ர‌சாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6197).