என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 19 August 2016

ரியோ ஒலிம்பிக்ஸ்

ரியோ ஒலிம்பிக்ஸ்


"ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்திருக்கிறது. மல்யுத்தத்தில் சாக்ஷி.. பேட்மின்டனில் சிந்து. "

இதை எப்படி எடுத்துக்கொள்வது?

"பெண்கள் சாதித்துக்காட்டியிருக்கிறார்கள்.." என்று சொல்லி பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுக்கொள்ளலாமா? மேல் ஷாவனிசம் என்கிற சொல்லில் இருந்து தப்பிவிடலாம்.

"இந்திய விளையாட்டு சம்மேளனம் சரியான ஆட்களை நேரத்துக்கு சென்று சேர்க்கவில்லை.. நரசிங் யாதவ் ஒரு உதாரணம்" என்று சேற்றை வாரி இரைக்கலாமா?

"இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு விளையாட்டு. அது கிரிக்கெட் தான்" என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்ளலாமா?

"மற்ற விளையாட்டுக்களுக்கு பெரிதாக ஸ்பான்சர், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இல்லை" என்று வாதம் செய்யலாமா?




இதுதான் உண்மையான காரணமா?

சென்ற ஆண்டு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தா சாய்னா நேவால் இந்த ஒலிம்பிக்ஸில் என்ன ஆனார்? அவருக்கு ஏகோபித்த ஆதரவும், பொருளாதாரமும், ஸ்பான்சரும் இருந்ததே. அபினவ் பிந்த்ரா பணக்காரர் தானே. தொழிலதிபர் வேறு. யோகேஸ்வர், ககன் நரங போன்றவர்களுக்கு என்ன? இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஸ்பான்சர் இல்லை, சப்போர்ட் இல்லை என்றெல்லாம் ஜல்லியடிக்க முடியாது. ஸ்பான்சர் , சப்போர்ட் இத்தியாதிகளுடன் தான் சாந்திக்களும், குற்றாலீஸ்வரன்களும் சாதித்தார்களா? ஸ்பான்சர், சப்போர்ட் இரண்டுமே இருந்த நர்சிங் யாதவின் கதி என்ன? அவரால் விளையாடவாவது முடிந்ததா? ஸ்பான்சர் சப்போர்ட் எதுவுமே இல்லாமல் 1983ல் இந்தியா உலகக்கோப்பை வாங்கிய பிறகு உலகின் பணக்கார கிரிக்கேட் வாரியமாக வளர்ந்த இந்திய கிரிக்கேட் வாரியத்தின் சப்போர்ட்டுடன் இந்தியா அடுத்த உலகக்கோப்பை வெல்ல 28 வருடங்கள் எடுத்துக்கொண்டதை எப்படி நாம் கணக்கில் எடுக்காமல் விட முடியும்? டென்னிஸுக்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு லியாண்டர் பேஸையே நம்பி இருப்பது?

இரு நூறு கோடி மக்கள் இருக்கிறார்கள். எத்தனை பதக்கங்கள் உருப்படியாக வெல்கிறோம் நாம்? இந்த ஒலிம்பிக்கோடு ஏற்கனவே அமேரிக்கா தனது 1000 ஒலிம்பிக் பதக்கங்களை பூர்த்தி செய்து உலக சாதனை செய்திருக்கிறது. மைக்கேல் பெல்ப்ஸ் மட்டுமே 23 தங்கங்கள்.  தங்கம் என்றால் இந்த மனுஷன் ஃப்ரீயாய் கிடைத்தால் மட்டுமே வாங்குவார் போல. ஜமைக்காவின் உசைன் போல்ட் ஹாட்ரிக் தங்கம் வாங்கி அசத்தியிருக்கிறார். நமக்கு எப்போதுமே பொருளாதாரத்தில் போட்டியாக இருக்கும் சீனா அமேரிக்காவுடனே போட்டி போடுகிறது பதக்கப்பட்டியலில். சீனா 65 பதக்கங்களுடம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

200 கோடி மக்கள். என்னதான்யா பிரச்சனை?

விளையாட்டு சம்மேளனம், வாரியம் என்பதெல்லாம் இந்தியாவில் பணியிடம் ம‌ட்டுமே. இல்லையெனில் சாந்தி, குற்றாலீஸ்வரனெல்லாம் எங்கே? இந்த இருவர் வெறும் பெயர்கள் தான். இதுபோல் எண்ணற்ற பெயர்களை சொல்ல முடியும். இதையெல்லாம் வைத்து நல்ல திறமையும் தகுதியும் ஆர்வமும் கொண்டவர்களை உண்மையில் இந்தியா மழுங்கடிக்கிறது என்று சர்வ நிச்சயமாக சொல்லலாம்.

ஜாதி என்கிற பெயரால். கலாச்சாரம் என்கிற பெயரால்.

மனசாட்சியுடன் பேசலாம். குடும்பம் என்கிற பெயரால். மக்கள் தொகையில் பாதிக்கு பாதி இருக்கும் பெண்கள் திறமைசாலிகளாக இருந்தால் முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது நடக்கிறதா இல்லையா?. பொறியியல் மருத்துவம் என்று படித்துவிட்டு எத்தனை பெண்கள் சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, அமேரிக்கா போன்ற நாடுகளில், அட அவ்வளவு ஏன், இந்தியாவிலேயே குடும்பப்பெண்களாக குழந்தைகளை பேணும்படி அறிவுருத்தப்பட்டு, குடும்பம் என்கிற அமைப்பின் அருமை பெறுமைகள் குறித்து ஓதப்பட்டு திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு கிடக்கிறார்கள்? நம்மூரில் ஒரு பெண்ணால், ஒரு நாவல் புத்தகத்தை எடுத்து பெற்றோர் முன்னிலையில் நான்கு வரி வாசிக்க முடிவது எத்தனை வீடுகளில் நடக்கிறது? எத்தனை வீடுகளில் பெண்கள் எல்லோரும் உறங்கிய பிறகோ அல்லது தோழிகள் வீட்டுக்கு சென்றோ மறைத்து மறைத்து தனது இலக்கிய தாகத்தை தணித்துக்கொள்ளும் அவலம் நடக்கிறது? கலையில் ஆர்வம் இருப்பவனை நாம் எப்படி அணுகுகிறோம்? "இதெல்லாம் குடும்பத்துக்கு ஒத்துவராது" என்று தானே. சீரியலை விடாமல் பார்க்கும் தமிழ் சமூகம் தான் சீரியல் நடிகர்கள் யாருக்கும் வீடு தரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

பேமின்டன், செஸ், கவிதை எழுதுதல் போன்றவற்றில் திறமைகள் இருக்கும் பெண்கள் ஊக்குவிக்கப்படுகிறார்களா? "இன்னுமா கல்யாணம் ஆகலை? இன்னுமா குழந்தை இல்லை? வீட்டை பாரு முதல்ல.. பொண்ணுக்கு அதான் முக்கியம்" என்று அறிவுருத்தப்படுகிறார்களா இல்லையா? ஆண்களிடம் "பன்னிரண்டாவது பாஸ் பண்ணி டிகிரி படிச்சிட்டு வேலைல உக்கார பாரு.. அதான் குடும்பத்துக்கு ஆகும்" என்று சொலல்ப்படுகிறதா இல்லையா? விளையாட்டிலோ, கலையிலோ உற்சாகமாக இயங்கும் ஆணை "இந்த வரன் வேண்டாம்ப்பா.. எதுக்கு வம்பு" என்று புறக்கணிப்பது நடக்கிறதா இல்லையா? "அவன் ஏதோ சினிமாவுல இருக்கானாமே.. அவிங்களை எப்படிப்பா...வேணாம்" என்று சொல்கிறார்களா இல்லையா?

அதற்காக குடும்பமாவது மண்ணாவது? அந்த இழவை விட்டு வெளியே வா... விளையாடு பதக்கம் வாங்கு.. பிள்ளைகள் , குடும்பமெல்லாம் தானாக வரும் என்று சொல்லவில்லை.  அது என் நோக்கமும் இல்லை. எனது நோக்கம் குடும்பம் என்கிற் வாழ் நாள் பத்திரத்தை இழக்காமல் ஒருவருக்குள் இருக்கும் திறமைகளை எப்படி மீட்டெடுத்து வெளிக்கொணர்வது எனபது மட்டும் தான். ஏனேன்னில் பதக்கப்பட்டியலில் இருக்கும் பெயர்கள் எல்லாமும் அப்படி வந்தவையே என்று சொன்னால் மிகையாகாது தோழர்களே.

ஸ்டெஃபி க்ராஃப், ஆந்த்ரே அகாஸி தம்பதிகள் ஒரு உதாரணம். இருவருமே டென்னிஸ். இருவருமே விளையாட்டுக்கென உழைத்தவர்கள். ஒரே விதமான ஆர்வங்கள். ஒன்றாக இயங்க முடியும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக்கொள்ள முடியும். லைலா அலி - கர்டிஸ் கான்வே தம்பதி போல் ஏராளம் சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் இங்கே அமேரிக்காவில் நான் வழமையாக செல்லும் ஜிம்முக்கு காதலர்களாகத்தான் வருகிறார்கள். தம்பதிகளுமாகத்தான். ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றாக வாழ்வில் இணைய நேர்வதே அமேரிககவின் பதக்கப்பட்டியலுக்கு காரணம் என்றே நான் நினைக்கிறேன்.

நம்மூர் இதற்கு நேரெதிராக இயங்கும் தன்மையது. முக்கிய காரணம்  ஜாதி. ஜாதகம்.

கிரிக்கெட்டில் பார்ப்பனர் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. அன்றைய ஸ்ரீகாந்த் முதல் இன்றைய அஸ்வின் வரை பட்டியலிடலாம். ஒரு வீஜே திருமணமான பத்தே நாளில் விவாகரத்து செய்தார் என்கிறார்கள். இத்தனைக்கும் ஜாதி என்பதில் உள்ள சிக்கல்கள் ஏராளம்.

1. ஜாதி என்பதெல்லாம் முதல் மணத்திற்குத்தான் செல்லுபடியாகிறது. விவாகரத்தாகி மறுமணமென்றால் ஜாதிக்குள்ளேயே ஒதுக்கிவிடுகிறார்கள். ஒரு திருமண தகவல் மையத்துக்கு போய் பாருங்கள். மறுமணத்திற்கு வரும் பெண்களோ, பையன்களோ ஜாதி பார்ப்பதே இல்லை. ஏனெனில் ஜாதிக்குள் மறுமணம் என்பதே கிடையாது. கஷ்டமோ நஷ்டமோ சகித்து வாழ் இல்லையென்றால் செத்துப்போ. இதுதான் எழுதப்படாத விதி. கொஞ்சம் அழுத்திக்கேட்டால் "தலையெழுத்து" என்ற ஒற்றை வார்த்தையோடு நின்றுவிடுவார்கள்.

2. நீதிமன்றங்களுக்கு சென்றால் பெரும்பான்மை விவாகரத்துகள் ஒரே ஜாதிக்குள் நடந்த திருமணங்களாகத்தான் இருக்கின்றன. தனது ஜாதி குறித்து  சுய தம்பட்டம் அடிப்பவர்கள் ஒரு முறை நீதிமன்றங்களுக்கு விசிட் அடிப்பது நல்லது. ஜாதிக்குள்ளேயே பார்க்கிறேன் பேர்வழி என்று பெண்ணின் 31 வயது வரை வைத்திருந்துவிட்டு 31 தாண்டியபிறகு  எந்த ஜாதியானாலும் பரவாயில்லை என்கிற அளவிற்கு கீழிறங்கினால் உருப்படியான மணமகன்கள் அப்படியும் கிடைக்காமல் திண்டாடுவதில் தான் போய் முடிகிறது.

ஒத்த கருத்துடையவர்கள், ஒரே விதமான ஆர்வங்கள் உடையவர்கள் என்னும்போதும் மனப்பொருத்தமே தம்பதிகளுக்குள்ளான இணக்கத்தை அதிகப்படுத்துவதுடன், வாழ்க்கையில் ஒரு முழுமை கிடைக்க வழி செய்கிறது. ஒரே விதமான ஆர்வங்கள் இல்லாமல் போகையில் பொருளாதாரம், சுகாதாரம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றில் காம்ப்ரமைஸ் செய்துகொள்ள வேண்டி வருகிறது. இது பெரும்பாலும் வாழ்க்கையின் முழுமையை அடைய அனுமதிப்பதே இல்லை. இதை நம்மூரில் சொன்னால் " நீ என்னவா வேணா இருக்கலாம். ஒரு பொண்ணுக்கு உன்னை புடிக்கணும்" என்று பெண்களே பேசுகிறார்கள் தாம். இப்படி இருந்தால் எங்கே ஐயா பதக்கம் வெல்வது?

சச்சின் இது போன்ற நிர்பந்தங்களுக்கு பணிந்து ஒதுங்கிவிட சச்சினின் ஒட்டுமொத்த பலத்தில் பத்தில் ஒரு பங்கே உள்ள ஒருவர் சச்சினானால் எப்படி இருக்கும்? கற்பதை செய்து பாருங்கள். என் பார்வையில் சிந்து, சாக்ஷி, அபினவ் போன்ற எல்லோரையுமே ஒரிஜினலில் பலத்தில் பத்தில் ஒரு மடங்கு கொண்டவர்களென்றே நான் பார்க்கிறேன். சச்சினையே நான் அப்படித்தான் பார்க்கிறேன்.சத்தியமாக இதுதான் என் பார்வை. இந்த என் பார்வையை நான் எப்போதும் எக்காரணம் கொண்டும் மாற்றிக்கொள்ள போவதில்லை.. ஏனெனில் அத்தனை ஆழமாக இந்த பார்வை மீது எனது நம்பிக்கைகளை கட்டமைத்திருக்கிறேன். வேண்டுமானால் இந்த கட்டுரையை வாசிக்கும் நீங்கள் இந்த எனது பார்வையை தவறு என்பதாக நிரூபிக்க போதுமான சான்றுகளும் விளக்கங்களும் தரலாம்.

இங்கே அமேரிககவில் அது போல் எண்ணற்ற தம்பதிகளை பார்க்கலாம். ஒருங்கே பயணம் செல்பவர்கள், ஒருங்கே ஆராய்ச்சி செய்பவர்கள், ஒருங்கே விளையாட்டில் ஈடுபடுபவர்கள், ஒருங்கே திரைத்துறையில் இருப்பவர்கள் என்று ஏகத்துக்கும் காட்டலாம். புரிதலை சார்ந்தே துணைகளை தேடிக்கொள்கிறார்கள் என்பதையே வெவ்வேறு வார்த்தைகளில் நான் புரியவைக்க விரும்புகிறேன் என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.அமேரிக்கா அமேரிக்காவாய் இருப்பதற்கும், சீனா சீனாவாய் , இந்தியா இந்தியாவாய் இருப்பதற்கும் வலுவான காரணங்கள் இருக்கின்றன. புரிதலை சார்ந்து உருவாகாத ஒரு சமூக அமைப்பில் கூச்சலும் குழப்பங்களும், அதன் விளைவாக நிம்மதியின்மையும் விரயங்களும் மிகுக்கத்தான் செய்யும்.

இந்த கட்டுரையின் 2, 3, 4, 5வது பாராக்களை நான் அவ்விதமான கூச்சலாகவும், குழப்பமாகவுமே பார்க்கிறேன். இந்த கருத்தையும் நான் எக்காலத்திலும் மாற்றிக்கொள்ள போவதில்லை என்றே நம்புகிறேன்.