என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 11 April 2026

மெட் செயலி - குறு நாவல் - அத்தியாயம்1,2

 அத்தியாயம் - 1

 

 

முதலில் என்னைப்பற்றி.

 

நான் யார்? என் பெயர்........ அது சற்று கடினம். எனக்கு பல பெயர்கள் உண்டு.

 

பிரபஞ்சத்தில் பூமி தவிர வேறெங்கும் நான் இல்லை. பூமியில் கூட மனிதர்கள் தோன்றிய காலத்திற்கு பின்னிருந்தே தான் என் இருப்பு இருக்க முடியும்.  ஏனெனில், கடவுள் என்னைப் படைக்கவில்லை. ஆக, மனிதர்கள் தான் என்னை கண்டுபிடித்திருக்க வேண்டும் என்பது என் அவதானம்.

 

நான் வேறு. முற்றிலும் வேறு.

 

நான் எல்லோர் கண்களுக்கும் புலப்படுவதில்லை. பூமியில் வெகு சிலரே என்னைப் பார்க்கிறார்கள். அவர்கள் பார்வையிலிருந்து நான் தப்புவதில்லை. பல சமயங்களில் நான் இல்லாத இடத்திலும் கூட என்னை உருவாக்கி உலவ விடுபவர்கள் அவர்களே. அவர்கள் இல்லையென்றால் நானே இல்லை. இதில் விசேஷம் என்னவென்றால், என்னை உருவாக்குபவர்கள், கண்டுகொள்பவர்கள் எல்லோரும் பிறந்தொம், மறித்தோம் என்றிருக்க, நான் தொடர்ந்து இருக்கிறேன். எனக்கு அழிவு என்பதே இல்லை. விடுகதை போலிருக்கிறதா நான் சொல்வது?

 

கவிஞர்கள் என்னைக் குறிக்க நேர்கோடு என்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை என் பெயராக்க முடியுமா தெரியவில்லை. அந்த வார்த்தை ஒரு குறியீட்டளவில் என்னை குறிக்கும் தான். நீங்கள் ஒரு கவிஞர் இல்லையென்றால் இந்த விளக்கம் போதாமையாக இருக்கலாம். சரி. இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும். நீங்கள் வாதிடலாம். பிரபஞ்சமே வளைந்திருக்கிறதென்று. ஆக நேர் கோடுகள் என்று எதுவும் இல்லை என்று. அப்படி இல்லை. நான் இரண்டு புள்ளிகள் வைத்து இடையே இழுக்கப்படும் கோடு அல்ல.

 

சூழலுக்கேற்ப, அவற்றினூடே உருவாகும் அர்த்தங்களுக்கேற்ப, அவ்வர்த்தங்களைக் கையாளும் உங்கள் தர்க்கத்திற்கேற்ப என் நிலைப்பாடு மாறுமே ஒழிய நான் மாறுவதில்லை. எல்லா நேர் கோடுகளும் நானே. ஒரு பாரிய வளைவை உருவாக்கும் எல்லா சிறு சிறு நேர் கோடுகளும் கூட நானே.

 

என்னைக்கொண்டு தான் நீங்கள் காலத்தின் போக்கில் நிகழ்வுகளில் பல வரிசை மாற்றங்களையும் (permutations), சேர்க்கைகளையும் (combinations) உருவாக்க பற்பல இழைகள் உருவாகி விடுகிறது. நான் இல்லையென்றால் காலம் பிரபஞ்ச அர்த்தங்களின் நிமித்தம் இழைகளை உருவாக்கியிருக்கலாம்.

 

இழை என்றால் காலத்தின் ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு என்று பொருள். எல்லா இழைகளிலும் நான் இருக்கிறேன் என்பதால் காலத்தின் இழைகளினூடே என்னால் ஊடுறுவிப் பார்க்க இயலும். சரி. இப்படி என் பொருட்டு விரியும் இழைகளில் பெரும்பாலும் பிரபஞ்சத்தன்மைகள் இருப்பதில்லை. ஆனால் அது என் கவலை அல்ல. பிரபஞ்சத்தன்மைகள் குறித்து நான் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், நான் எப்படி வளர்வது?

 

எண்களைக் கொண்ட கணிதம் தான் நான் என்று நீங்கள் நினைத்தால், அது ஒன்றும் அப்படி ஒரு குற்றமாகிவிடாது.

 

சரி. என்னைப்பற்றித் தேவைக்கும் அதிகமாகவே பார்த்தாகிவிட்டது.  

சுருங்கச்சொன்னால், நான் தான் கணிதம். இப்போது கதைக்கு மீள்வோம்.

 

 

 


 

அத்தியாயம் - 2

 

 

பவித்ராவின் அலைபேசி சிணுங்கியது. பத்திய உணவில் இருக்கும் நவ நாகரீகப்பெண் போல மிகவும் மெலிந்த அந்த அலைபேசியைக் கையிலேந்தி அழைப்பை ஏற்றாள் பவித்ரா.  அது கொஞ்சம் அசந்தால் நழுவிவிடும் விலாங்கு மீன் போல அவள் கையில் தேங்கியது.

 

"Hello"

 

"......"

 

"Who is this?"

 

"......"

 

"Hello....."

 

"......"

 

"Perverts......" சலிப்புடன் அழைப்பு துண்டிக்கப்பட இருந்த தருணத்தில்,

 

"நான்தான்டீ அஞ்சலி.."

 

"எந்த அஞ்சலி?"

 

".வி.பி ரிசார்ட்ஸ் டீ."

 

இங்கே பவித்ரா பற்றிச் சில குறிப்புகள். பவித்ராவும், அஞ்சலியும் ஒன்றாக ஒரே கல்லூரியில் படித்தவர்கள். படிப்பை முடித்த புதிதில், ஒரு தனியார் உணவகத்தில் வரவேற்பாளினிகளாகப் பணியாற்றியிருக்கிறார்கள். சுமார் ஓராண்டுக்கு அந்த உணவகத்தின் எல்லாமுமாக இருந்திருக்கிறார்கள்.  அதன் பிறகு அஞ்சலி திருமணமாகி வேலையை விட வேண்டியதாகிவிட்டது. அதன் பிறகு தொடர்பில் இல்லை. அந்த நட்பின் காரணமாய் அஞ்சலியிடம் பவித்ராவின் அலைபேசி எண் இன்னமும் மிச்சமிருந்தது.

 

"..அஞ்சலி.. எப்படி இருக்க? எவ்ளோ நாளாச்சுடீ"

 

" ஆம் குட். நீ?"

 

"எனக்கென்ன? சூப்பர்ப். அது இருக்கட்டும். என்ன திடீர்னு என்னோட நியாபகம்?"

 

"....ஓண்ணும் இல்லை... சும்மாத்தான்.."

 

"யாரு நீயா? ஹ்ம்ம்ம்... நீ எதுக்கு எனக்கு கால் பண்ணினன்னு நான் சொல்லட்டா?"

 

"எதுக்கு?"

 

"நம்ம கிட்ட வழிஞ்சிட்டு இருப்பானே.. அந்த மூர்த்தி.. அவன் நம்பர் கேக்க தானே?"

 

ஒன்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எனக்குப் பெண்களை மிகவும் பிடிக்கிறது. ஏனெனில், பெண்களுக்கு என்ன பிடிக்கிறது என்பது எவருக்கும் தெரிவதில்லை. காலங்கள் கடந்திருக்கின்றன. ஆனால், பெண்களின் தேர்வுகளுக்குத் தரப்படும் விளக்கங்கள் மாறாமல் இருந்ததே இல்லை.

 

காலமாற்றத்துக்கேற்பப் பெண்களின் தேர்வுகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றனவே ஒழிய அந்த நாளும் ஊகிக்கக்கூடியதாக இருந்ததில்லை.  ஒவ்வொரு பெண் எடுக்கும் முடிவிலும் நான் புதிதாக உருவாக்கப்படுகிறேன். நாற்பது ஐம்பது வருடங்களுக்கு நீடிக்கப்படும் ஒரு நீளமான நான். சாகசமாக இருப்பதாகத் தோன்றுகிறதல்லவா? ஆனால் சூர்யா இதற்கெல்லாம் மகுடம். அது பற்றிப் பிற்பாடு சொல்கிறேன்.

 

"அவன் கூட இன்னுமா டச்ல இருக்க?"

 

"நான் எங்க இருக்கேன்..அவன் தான் என்னை விட மாட்டேங்குறான்.. எப்படியோ என் புருஷனோட வேற தோஸ்த் ஆயிட்டான்.. ரெண்டு பேரும் சேர்ந்து ஊத்தி ஊத்திக் குடிக்கிறாங்க.. "

 

"அப்புறம்?"

 

"அப்புறம் என்ன? என் ஹஸ்பண்ட் தான் சீக்கிரம் மட்டையாயிடறாரு.. விடிய விடிய என் வீட்டுலயே இவன் எனக்கு பூஜை பண்றான்."

 

"அடிப்பாவி.. அவனோடயா? எனக்கு அவனை அப்பவே புடிக்காது."

 

"நான் மட்டுமென்ன புடிச்சா இருக்கேன். நாம எதிர்பார்க்கிறதுதான் கிடைக்கணும்னா நாம காத்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான். வாழ்க்கையை வாழ முடியாது. வாழக் கிடைச்ச வாழ்க்கையிலயும் கொஞ்சமாச்சும் சுவாரஸ்யம் இருக்கணும்ல.. சரி...  நீ வேற எதுக்கு பண்ணியாம்?"

 

"ஒண்ணும் இல்லை.. போரடிக்குது..."

 

"ஏன்? ஹஸ்பண்ட் இருக்காருல்ல"

 

"அவரு இருக்காரு தான்...  இருக்க வேண்டியதுதான் இல்லை"

 

"... காட்... இல்லவே இல்லையா?"

 

"அடச்சீ.... லவ் இல்லைன்னு சொன்னேன்"

 

"அதானே பார்த்தேன்.. லவ் இல்லையா? அது இப்பல்லாம் எந்த கல்யாணத்துலயும் இல்லை. கள்ள உறவுல மட்டுமே கிடைக்கிற நல்ல சரக்கா ஆயிடுச்சு. "

 

"வாழ்க்கையே ஒரே போரா  இருக்கு..   நீ தான் இதுக்கெல்லாம் ரெடிமேடா ஏதாச்சும் வச்சிருப்பியே... "

 

"அது என்னமோடி.. சின்ன வயசுல ரொம்ப கட்டுப்பாடா இருக்கிற பொம்பளைங்க எல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல இந்த இடத்துக்கு வந்துடறீங்க... "

 

".. வேற யாரு வந்தா?"

 

"அது உனக்கு தேவை இல்லாத சமாச்சாரம்"

 

"ம்ம்ம்ம்ம்"

 

"நான் ஒண்ணு தரேன்.. ட்ரை பண்ணிப் பாரு... ஆன்ட்ராய்டு மொபைல் எடு. ப்ளே ஸ்டோர் போ. மெட்ன்னு (MeT) ஒரு ஆப் இருக்கு. டவுன்லோட் பண்ணு... "

 

"ஆப்பா? ஆதான் ஏகப்பட்டது இருக்கே.. டிண்டர், தில்மில் அது இதுன்னு"

 

"அதெல்லாம் வேற. இது இப்போ ஹாட்...  கிட்டத்தட்ட சொல்லி வச்சா மாதிரி நடக்குதாம்.. கள்ள உறவு கண்டிப்பா கியாரண்டி"

 

"ஓகே.. ட்ரை பண்றேன்.. சரி.. அப்புறம் பேசறேன்டீ"

 

"கேட்டது கிடைச்சதும் கழட்டி விடறியேடீ"

 

"அதில்லைடீ.. அவன் வந்துடுவான்"

 

"அவன்னா?"

 

"வேற யாரு.. ஹஸ்பண்டு தான்"

 

"..அந்த 'அவனா?'... ஓகே..ஓகே அப்புறம் ஃப்ரீயா இருக்கிறப்போ கால் பண்ணு..பை"

 

"பைடீ"

 

அஞ்சலி அலைபேசி அழைப்பைத் துண்டித்தாள். பின் மெட் செயலியைத் தேடி தரவிறக்கம் செய்தாள். பின் அதில் ஒரு கணக்கு துவங்கினாள். அது, அவள் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொள்ள அவளிடமிருந்து அனுமதி பெற்றுக்கொண்டு அவளுடைய அலைபேசியில் அமர்ந்துகொண்டது.

 

பின் தகுதியுள்ள ஆண்களின் பட்டியலைக் காட்டுமாறு செயலியைப் பணித்தாள். அது சற்று நேரம் சுற்றிச்சுற்றி யோசித்துவிட்டு யாரும் இல்லை என்றது. 

 

அதை அவள் எதிர்பார்க்கவில்லை. மற்ற செயலிக்கள் எடுத்ததுமே நூறு நூற்றைம்பது கணக்குகள் காட்டும் போது ஒன்றைக்கூடக் காட்டாமல் அந்த செயலி மெளனித்ததை ஜீரணிக்க முடிந்திருக்கவில்லை. இந்த செயலிக்கா பவித்ரா அத்தனை வக்காலத்து வாங்கினாள் என்று தோன்றியது. அலைபேசியில் அந்த செயலி சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டாள். எல்லாம் சரியாகத்தான் இருந்தது. இணையத்துடனான இணைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள். அது இரண்டு புள்ளிகள் காட்டியது. அலைபேசியில் இணைய வசதிக்கான அளவு குறைவாக இருந்திருக்கலாமென்று தோன்ற, பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி அலைபேசியை படுக்கையின் மீது வீசினாள் பவித்ரா.

 

அவளின் படுக்கை, அவளது அலைபேசியை குழந்தையென பாவித்து இரண்டு முறை தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டது.

 

நான் அவளது இழையில் சென்று பார்த்தேன். உண்மையில் அவள் அலைபேசியில் இணைய வசதி இல்லாமல் எல்லாம் இல்லை. சராசரி இணைய வசதி இருக்கவே செய்தது. ஆனால், அது நேரம் எடுத்துக்கொண்டது.

 

'ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ குலோத்துங்க.....' என்றெல்லாம் அறைகூவல் விடுப்பது பழங்கால அரசர்களுக்கு வேண்டுமானால் நடந்திருக்கலாம்.

 

எனக்கான அறைகூவல்கள் இந்தக் கால இடைவெளிதான். என் வாலைத்தொட சில நேரங்களில் சற்று காத்திருக்க வேண்டும். சில நேரங்களில் உங்கள் கைக்கு அகப்பட்டது எனது வாலாக இருக்காது. என் தலையாகவே கூட இருக்கக்கூடும். எல்லாமும், என்னை அண்டுகையில், காலத்தின் எந்த புள்ளியில் நீங்கள் நிற்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.