என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 26 December 2011

நாஸ்ட்ர‌டாம‌ஸ்

நாஸ்ட்ர‌டாம‌ஸ்



மார்கழிமாத‌ ஊத‌ற்காற்று,
வேக‌ங்கூடிய‌ நான்கு ச‌க்க‌ர‌
எந்திர‌க்குதிரையின்
பின்னிருக்கையில் என்னை
எழுப்பிவிட்ட‌ தாம‌த‌க்க‌ண‌ங்க‌ளில்
ஒரு துரித உணவகம்,
ஒரு துணிக்கடை,
ஒரு அடகுக்கடை,
ஒரு நகைக்கடை,
ஒரு பெட்டிக்கடை,
ஒரு மளிகைக்கடை
இவற்றினூடே அவசரமாய்க்
கடந்துபோய்விட்டிருந்தது அந்த‌ மருந்தகம்...

அடுத்த‌ நாளின் விடுமுறையில்
மூடிய‌ ம‌ருந்த‌க‌த்தின் க‌த‌வுக‌ளில்
வ‌லுத்துவிடக்கூடிய‌ ஜ‌ல‌தோஷ‌த்தின்
சாத்திய‌ங்க‌ளை நான் முனுமுனுக்கையில்
கேட்கிற‌து அந்த‌க் குர‌ல்
'ஆமா, இவ‌ரு பெரிய‌
நாஸ்ட்ர‌டாம‌ஸூ'....


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிர்மை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5138)

Wednesday 14 December 2011

காலி தேனீர் கோப்பை

காலி தேனீர் கோப்பை



மேஜையிலிருக்கும் காலி
தேனீர்க் கோப்பை
புதிதாக ஒரு பானத்தை
நிரப்ப மட்டும் நினைவூட்டவில்லை...

காலத்தே பருகப்படாத,
எஞ்சிய தேனீரை
சுத்தம் செய்யவும்
நினைவூட்டுகிறது...

சில மனிதர்களைப் போல‌...

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#ந‌ன்றி
உயிர்மை க‌லை இல‌க்கிய‌ இத‌ழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5099)

Monday 12 December 2011

எங்கென்றே தெரியாமல்

எங்கென்றே தெரியாமல்



முக்கோண உலோகச்சுவர்களுக்குள்
சிறையிருக்கின்றன மணித்துளிகள்...

அவைகளின் இதயத்துடிப்பு
காற்றில் கரையும் எல்லைக்கப்பால்,
என் செவிகள் ,
ஒலிகளுக்காய் காத்திருக்கின்றன...

கைக்கெட்டும் எனக்கான கனவோ,
தேட விரும்பும் எனக்கான காதலோ,
விரும்பித்துவங்கும் எனக்கான நட்போ,
கடந்துபோகும் எனக்கான பிரயாணமோ,

இப்படி எத்தனையோ கூட
கைக்கடிகாரத்தை நீட்டியெடுத்து
காதோடு பொறுத்திக்கொள்ளும்
ஒற்றை இயக்கத்திற்காய் காத்திருக்கும்
கடிகார இதயத்துடிப்பொலிகளின்
இருப்பைப்போல
இன்னமும் எங்கென்றே தெரியாமல்...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#ந‌ன்றி
உயிர்மை க‌லை இல‌க்கிய‌ இத‌ழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5099)

Friday 9 December 2011

பிழைகளின் முகம் - கவிதை

'பிழைகளின் முகம்' என்ற தலைப்பிலான என் கவிதை, கணையாழி கலை இலக்கியத் திங்களிதழ் டிசம்பர் 2011 இதழில் 66ம் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.



பிழைகளின் முகம் - கவிதை

தூரத்துக் காட்டுக்குயிலின்
மெல்லிசையில்
மயங்கிக்கிடந்தது அந்த‌
அடர்ந்த கானகமும்,
கவிந்த இருளும்...


இயற்கையின் மெல்லிசையில்
பிழை சேர்க்கும்
முயற்சிகளின்றிப்போதலில்
எத்தனை யதார்த்தம்...


கரிய பிசாசென ஆங்கொருவன்
உள் நுழைந்து தன் போக்கில்
மூங்கில் துளையிட்டூதி
முறையாகச்சேர்ந்த பிழைகளை
இசையென கூவிச்சென்றான்...


கானகம் முழுமைக்கும்
அதிர்ந்து ஒடுங்கியது
இயற்கை...


இந்த இயற்கை எத்தனை
மென்மையானது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
கணையாழி கலை இலக்கியத் திங்களிதழ் (டிசம்பர் 2011)