கூகுள் மற்றும் ஏ.ஐ
Thursday, 11 September 2025
Tuesday, 2 September 2025
Social media influencers குறித்த "வா தமிழா வா"
Social media influencers குறித்த "வா தமிழா வா" நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது.
தங்களிடம் ஏதோவொரு திறமை இருக்கிறது என்று நம்புபவர்களுக்கு, அதனை சோதித்துப் பார்க்க நிச்சயம் ஒரு தளம் தேவை. இன்றைக்கு சமூக ஊடகங்கள் வளர்ந்திருக்கிறது. நான் கல்லூரி படிக்கையிலெல்லாம் இந்த ஊடகங்களெல்லாம் இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் இருக்கிறது. நான் கல்லூரி முடித்த 2002ம் ஆண்டில் 1100 நோக்கியா தான் சந்தைக்கு வந்திருந்தது. இரண்டே ஆண்டுகளில் வீட்டுக் கடன், கார் கடன் என்கிற சுழற்சியில் சிக்கியிருந்தேன். எழுத்து மட்டுமே கிடைத்த சொற்ப பகுதி நேரத்தில் முயன்று பார்க்கக்கூடிய ஒன்றாக அமைந்தது. கல்லூரியில் வெட்டி நேரங்கள் நிறைய கிடைக்கும். இப்போதெல்லாம் அந்த நேரத்தைப் பயன்படுத்தி குறும்படங்கள் என்று இறங்கிவிடுகிறார்கள். மைக்செட் ஷ்ரிராம், ப்ரதீப் ரங்கநாதன் போன்றோர் கல்லூரி காலங்களிலேயே வாய்ப்பைப் பயன்படுத்தி அரை இயக்குனர் ஆகிவிடுகிறார்கள். அந்த வாய்ப்பெல்லாம் எனக்கு இருக்கவில்லை என்ற வருத்தம் தான்.
சமூக ஊடகங்கள் மக்களிடையே காட்சி ஊடகங்களைப் பழக்கப்படுத்திவிட்டன. மக்களும் அதற்கு எளிதாகப் பழகிவிட்டார்கள். ஆறு திரும்பும் திசையெல்லாம் சரியானதாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், ஆற்றின் திசையில் தான் மனித நாகரீகங்கள் தழைக்க ஏதுவாகிறது இல்லையா? நாகரீகங்கள் தழைத்தபிறகு, திசை தவறானது என்றறிந்து என்ன பிரயோஜனம்?
சமூக ஊடகங்களில் திறமை பழகுதலும், அத்திறமை கனிந்து மக்களின் பயன்பாட்டுக்கு ஏதுவாகுதலும் இணையும் புள்ளியில் நல்ல திறமைகள் சமூகத்திற்கு வாய்க்கின்றன. எந்தப் புள்ளியிலும் இணையாத போது, அது சுதி சேராத இசை போல் அப்படி அப்படியே கலைந்துவிடுகிறது. அடையாளச்சிக்கலுக்குள் சிக்கிவிடுகிறது. எதைத் தேடி வந்தார்களோ அதை விட்டுவிட்டு, ஆள் சேர்ப்பில் இறங்கிவிடுகிறார்கள்.
அமெரிக்காவின் ஒன்லி ஃபான்ஸுக்கு நிகராக, பெண்கள் இன்ஸ்டாகிராமில் நிர்வாணம் காட்டுகிறார்கள். ஒன்லி ஃபான்ஸிலாவது சம்பாதிக்க வழி இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. பெயரைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அது தலையெழுத்தையே தீர்மானித்துவிடுகிறது.
மற்றபடி சமூக ஊடகத்தை திறமையை வெளிப்படுத்த நாடுபவர்களில் சொற்பமானவர்களே, தங்கள் இலக்கைக்கண்டடைகிறார்கள். எஞ்சியவர்கள் கிடைத்ததை இலக்காக்கிக்கொள்கிறார்கள். கிடைத்ததை இலக்காக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
திறமை என்று தாங்கள் நினைக்கும் ஒன்று உண்மையிலேயே இருப்பின், இலக்கை கண்டடைவீர்கள். இலக்கை அடைய முடியவில்லை என்றால் இதற்கு அர்த்தம் நீங்கள் திறமை அற்றவர் என்பதல்ல. உங்களுக்கு வேறொரு திறமை இருக்கலாம் என்பதுதான் அர்த்தம். அது என்ன என்ற தேடலில் இறங்குவது ஒரு நல்ல அணுகுமுறை என்று எனக்குத் தோன்றும். இதன் மூலம் நாம் தேங்கி நிற்கவேண்டியதில்லை.
இணையத்தில் இப்படி 'தேங்கி' நிற்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். உண்மையில், 'தேங்கி'க்கிடந்தாலும் ஆபாசமே கூட பார்வையாளர்கள் இன்றித்தான் கிடக்கிறது. ( என்னுடைய இன்ஸ்டா பக்கத்துக்கு இருநூறு ஆயிரம் ஃபாலோயர்கள் என்று பீத்த வேண்டியதில்லை. ஏனெனில், அந்த இருநூறு ஆயிரம் ஃபாலோயர்கள் எல்லா ஆபாச இன்ஸ்டா பக்கத்திற்கும் இருப்பதைப் பார்த்தால், ஒரே இன்ஸ்டா பயனர் எல்லாவற்றிலும் ஃபாலோயராக இருப்பதன்று வேறு மார்க்கமில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.) ஆக, ஆபாசமாகவே இருந்தாலும் எத்தனையைத்தான் பார்ப்பது? ஆபாசத்துக்கான கவர்ச்சியையே வீழ்த்தியதில் இந்தத் 'தேக்க'த்திற்கு நிறைய பங்கிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
சமூக ஊடகத்தில் திறமையைக் காட்ட முனைவோர்க்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம்:
1. தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
2. சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
3. திறமையை வெளிக்காட்டுகையில், நம்மைச் சுற்றி ஒரு கூட்டம் கூடும் தான். ஆனால், கூட்டத்தை தக்கவைக்கவென இறங்காதீர்கள். கூடுபவனே தொடர்ந்து கூடினால், அவனும் வளரவில்லை. நாமும் வளரவில்லை என்று பொருள். தினம் தினம் புதுப் புதுக் கூட்டம் கூடினாலும் அது சரியல்ல. ஆக, கூட்டத்தைத் தக்க வைக்கவென பிரயனத்தபட இறங்காதீர்கள். திறமை கூட்டத்தை உருவாக்க வேண்டுமே ஒழிய கூட்டம் திறமையை அல்ல.
4. நம் இலக்குகளை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். கூட்டம் அல்ல. அதைப் புரிந்துகொள்ளுங்கள்.
5. கூட்டமே கூடாமல் இருப்பது ஒரு வகையில் நல்லது. புதிய புதிய முயற்சிகளில் நாம் இறங்க முடியும். அனானிமஸ் ஆக இருப்பது பல வழிகளில் நல்லது.
Sunday, 31 August 2025
சமீபத்திய சிறுகதைகளுக்கு வந்த பின்னூட்டங்கள்
சமீபத்திய சிறுகதைகளுக்கு வந்த பின்னூட்டங்கள்:
அறுதி விடியல்:
டோரோத்தி:
https://vasagasalai.com/116-story-ram-prasad/
பின்னூட்டமிட்ட அறிவியல் புனைவு வாசகர்களுக்கு எனது நன்றிகள் 🙏🙏🙏
Sunday, 24 August 2025
துரதிருஷ்டம் - சிறுகதை - சொல்வனம்
சொல்வனம் 349வது இதழில், எனது சிறுகதை 'துரதிருஷ்டம்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.
சிறுகதையை வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:
வாசகசாலை 116வது இதழ் சிறுகதைகள்
வாசகசாலை 116வது இதழ் சிறுகதைகள்
******************************************
ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெளியாகியிருக்கிறது வாசகசாலையின் 116வது இதழ்.
ஜெயபால் பழனியாண்டி எழுதியிருக்கும் பூச்செடி, ஒரு ஃபீல்-குட் கதை. பூச்சி ஒன்று இறந்து போகிறது. இரண்டு பெண் பிள்ளைகள் அதனை அடக்கம் செய்யும் காட்சிதான் கதை. சிறார்களுக்கே உரித்தான காட்சிகளோடு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது கதை.
//மரணத்திற்குப் பிறகும் குழந்தைகளால் கொண்டாடப்படுகிறோம் என்பதை அறியாமலேயே மரணித்துப் போகின்றன பூச்சிகள்// என்று முடிக்கிறார் ஆசிரியர்.
*****************************
மொட்டு மலர் அலர் சிறுகதையில் ஆசிரியர் கமலதேவி கிராம வாழ்வை அப்படியே நம்மை வாழ வைத்திருக்கிறார். வாசிக்க வாசிக்க, கிராமத்தில் நாமும் ஓர் அங்கமாகவே ஆகிவிட்ட ஒரு உணர்வு எஞ்சுகிறது. சிரமேற்கொண்டு நேரமெடுத்து காட்சிகளை வர்ணிக்க உழைத்திருப்பது கதையை வாசிக்கையிலேயே தெரிகிறது.
*****************************
பாலு எழுதியிருக்கும் 'மரணத்துளிகள் பல கேள்விகளை எழுப்பியது. உண்மையாகவே இப்படி ஒரு சுகவீனம் இருக்கிறதா? இப்படி சுகவீனப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களா? அப்படி ஒரு சுகவீனப்பட்ட பெண்ணின் குடும்பம் எப்படிப்பட்ட துன்பங்களுக்கு உள்ளாகும் என்கிற ரீதியில் அமைந்த விவரணைகள் கதையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றுவிடுகின்றன. இறுதியில் கதையின் திருப்பமும் அருமை.
*****************************
இராஜலட்சுமி எழுதியிருக்கும் தெய்வானை சிறுகதையும் கிராமப் பின்னணி கொண்ட சிறுகதைதான். கதாபாத்திரங்களின் இயல்பில், தெய்வானைக்கு இறுதியில் என்ன நடக்கிறதோ அது மட்டும் தான் நடக்க முடியும் என்ற ஸ்திதி இருப்பது சிறப்பாக இருக்கிறது. கிராமங்களில் இப்படித்தான். //இதுக்கு நல்லது கெட்டது பாத்துச் செய்ய யாருமில்லாமதான்...// இப்படி எல்லா தலைமுறைகளிலும் யாரேனும் சொல்லப்படுவார்கள் என்பது உலகமே அறிந்த ரகசியம் தான். இது நிச்சயமாக சமூக அமைப்பின் தோல்வி தான். இல்லையா?
*****************************
தாழப்பறா சிறுகதை வெள்ளிப்பட்டறையில் ஊத்து வேலைக்கு வரும் ஒருவர் பற்றிய கதை. பற்பல வேலைகள் செய்துவிட்டு எதிலும் லயிக்காமல் வேலை மாறிக்கொண்டே வருகிறார். வெள்ளிப்பட்டறை வேலைகள் குறித்த விவரணை எனக்குத்தான் புரியவில்லை.கதாசிரியர் கவனத்துடன் எழுதியிருப்பதாகத்தான் தெரிகிறது.
*****************************
இதிரிஸ் யாகூப் எழுதியிருக்கும் அமானிதங்கள் ஒரு இஸ்லாம் மதத்தைச் சார்ந்த குடும்பமொன்றில் சகோதரிகளின் திருமணத்தின் நிமித்தம் அல்லலுறுபவனின் இக்கட்டை காட்சிப்படுத்துகிறது. பேச்சுவழக்கிலான உரையாடல்கள் அருமை. கபால், கல்பை வாஜிபாயிருச்சி, அஸர் ஆகிய வார்த்தைகள் எனக்குப் புதிது.
இப்போதைக்கு இவ்வளவு தான் வாசிக்க நேரம் கிட்டியது. எஞ்சிய சிறுகதைகள் வாசித்ததும் எழுதுகிறேன்.
Friday, 22 August 2025
எரியும் பனிக்காடு - இரா முருகவேள்
Sunday, 17 August 2025
அரதப்பழசு
பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் என்று அறிவியல் உலகில் பரவலாக ஒரு கருத்து உண்டு. ஆம். கணக்குகளின் பிரகாரம் அது அவ்விதம் தான். இதன் அடிப்படையில் தான் Big Bang Model
முன்வைக்கப்படுகிறது.
ஆனால், இந்தக் கருதுகோளில் கல்லெறியும் வகையில், பிரபஞ்சத்தின் மிக மிகப் பழமையான நட்சத்திரம் HD 140283ன் வயது 14.5 பில்லியன் ஆண்டுகள் என்று கணித்திருக்கிறார்கள். தூக்கிவாரிப்போடுகிறது இல்லையா?
ஆம். லிப்ரா நட்சத்திரக்கூட்டத்தில் தான் இருக்கிறது இந்த அரதப் பழசான நட்சத்திரம். இதற்கு ஒரு செல்லப்பெயரும் உண்டு. "Methuselah".
வானிலை ஆராய்ச்சியில் இது ஒரு பாராடாக்ஸ் என்கிறார்கள். தூரக் கணக்கிடல், வேதியியல் காரணிகள், மற்றும் வானியல் மாதிரிகள் ஆகியவற்றை வைத்து நாம் வயதைக் கணக்கிடும் அளவீடுகளில் ஏற்படும் சன்னமான குறை, இந்த வித்தியாசத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினாலும், இப்போதுவரை எவ்விதமான வலுவான காரணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இத்தனைக்கும் இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் தான் உள்ளது. இவ்வளவு பக்கத்தில் இருக்கிறதே அப்படியானால், பூமியும் அத்தனை பழசானதா என்றால், அதுதான் இல்லை. பூமியின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள் என்று தான் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது இந்த அரதப்பழைய நட்சத்திரம் உருவாகி சுமார் பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தான் பூமி உருவாகியிருக்கிறது.
Sunday, 10 August 2025
அறுதி விடியல் - சிறுகதை
சொல்வனம் 348வது இதழில், எனது சிறுகதை 'அறுதி விடியல்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.
சிறுகதையை வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:
Tuesday, 29 July 2025
ஆணவக்கொலை
ஆணவக்கொலை
**********************
சில பேரெல்லாம் பாப்பதற்கு நவ நாகரீகமாக உடை அணிந்து, சிந்தனைச் செல்வர்கள் போல் தோற்றமளிப்பார்கள். நெருங்கிப் பார்த்தால் தான் தெரியும், அது ஒரு சாக்கடை என்பது.
பலரெல்லாம் ஒரு குடும்பமாகவே மிகவும் Toxicகாகத்தான் இருப்பார்கள். நாம் நெருங்கி விடக்கூடாது. சூதனமாக ஒதுங்கிச் சென்று விடவேண்டும்.
"சாதியாவது மண்ணாவது" என்று சாதிவெறியர்கள் கூட, பேசக் கற்றுக்கொண்டுவிடுவது, சமூகப் புழக்கத்திற்கு மட்டுமே. ஒரு நடிகன் வந்து "என்னை வாழ வைக்கும் தெய்வம்" என்று பொதுமேடையில் மைக் முன் பேசினால், அது ஜோடனை என்று நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும். வேற்று மொழிக்காரர்கள் உள்ளூர் வந்து "வந்தாரை வாழ வைக்கும் ஊர்" என்று சொன்னால், அவன் நம்மூரைப் புகழ்கிறான் என்று அர்த்தமல்ல. தன் புழக்கத்தற்கு, பிழைப்பிற்கு அந்த ஊரைத் தயார் செய்கிறான் என்று அர்த்தம். இதையெல்லாம் யாரும் சொல்லித்தர மாட்டார்கள். சூதனத்தை நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான காலம் தான் பதின்ம மற்றும் இருபதுகள் வயது. இந்த வயதில் காதல் எல்லாம் பெரும்பாலும் ஏமாற்றத்திற்குத்தான் இட்டுச்செல்லும்.
காதல் ஒரு நல்ல உணர்வு தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதை இக்காலகட்டத்தில் உண்மையாகச் செய்வது யார்? காதலன் கொல்லப்பட்ட பிறகு, அவனை யார் என்றே தெரியாது என்று சொல்வதெல்லாம் என்ன ரகமான காதல்? இப்படி இருக்கும் நபர்களுக்காக உயிர் விடுவதெல்லாம் என்ன மடத்தனமான காதல்?
சென்ற மாதங்களில் ஒரு ஐடி நிறுவனத்தில் காதலித்த பெண் வேறு நபருடன் ஹோட்டல் சென்றார் என்ற காரணத்திற்காய் ஒருவர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இதெல்லாம் என்ன மடத்தனமான காதல்? என்ன கண்மூடித்தனமான கேனத்தனமான காதல்? இக்காலத்தில் உண்மைக் காதலுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் மிகவும் குறைவு. நாம் தான் அந்தக் காதலர்கள் என்று நாமாக நினைத்துக்கொள்வதெல்லாம் delusionல் வேற லெவல்.
மாதம் இரண்டு லட்சம் ஊதியம் வாங்கும் இடத்திற்கு நகர்ந்த பிறகு, இரண்டு லட்சம் ஒரு மாதத்திற்குப் போதாதா என்ற எண்ணத்தில், வருமானத்திற்குள் வாழ்ந்தால் போதும் என்கிற 'போதுமென்கிற மனமே.....' என்ற எண்ணத்தில், பெண் தேடப்போனால், 'வேலைக்குப் போகாத பெண் வேண்டுமா? என்ன ஒரு ஆணாதிக்கம்?' என்பார்கள். ஒரு ஷோவில் "ஒரு ஸ்டீரியோடைப்பை உடைச்சிட்டு சமூகத்திற்கு பயப்படாம எவன் வரானோ அவன் கம்பீரமான பையன்" என்று ஒரு பெண் சொல்லிக்கொண்டிருந்தார். இன்னொரு ஷோவில், "கணவனைப் பிரிந்த அன்னையர்களை மறுமணம் செய்பவன் தான் உண்மையான ஆண்" என்று இன்னொரு பெண் சொன்னார். ஆக, நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிக்காத சமூகம் தான் இது. இதில் எவன் நல்லவன்? எவன் கெட்டவன்? அதைச் சொல்லப்போவது யார்? அவர்களின் யோக்கியதை என்ன?
நம்மை வேறு யாரோவாக இருக்கச் சொல்லும் சமூகத்திற்காக வளைந்து கொடுத்துக்கொண்டே இருப்பதற்கு,நாம் நாமாக இருந்துவிட்டு போயிடலாம்.
நம்மை நம்பி வயதான பெற்றவர்கள் இருக்கிறார்கள். பதின்ம மற்றும் இருபதுகள் வயதுகளை, சுய முன்னேற்றத்திற்கும், சமூக அங்கீகாரத்திற்கும், மரியாதைக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும், பெற்றவர்களைக் காப்பாற்றவும் பயன்படுத்துங்கள். இதுவும் ஒரு விதத்தில் காதல் தான். தன் சுயம் மீதான காதல். இந்த உலகம் 'காதலில் விழவில்லை' என்றால் ஏளனமாகத்தான் பார்க்கும். காதலில் விழுமளவிற்கு இங்கே யார் தகுதியாக இருக்கிறார்கள் என்ற கேள்வியை நாம் தான் எழுப்பிக்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட முறையில், என்னைக் கேட்டால், யாருமே தகுதியில்லை என்று எல்லோருமே நினைத்துக்கொண்டு அவரவர் வேலையில் இயங்குவது ஒரு நல்ல strategy என்பேன். இந்த நினைப்பு தவறென்றால் எவரேனும் 'வாழ்ந்து காட்டி' நிரூபித்துக்கொள்ளட்டும். அப்படி 'வாழ்ந்து காட்ட' எவருமே இல்லையென்றால், ரொம்ப நல்லதாகிவிட்டது. அதுதான் அவரவர் வேலையில் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கிறோமே. சுய முன்னேற்றமாவது மிஞ்சும்.
விழித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.
Saturday, 26 July 2025
Radiosynthesis
Radiosynthesis
Photosynthesis தெரியும். அதென்ன Radiosynthesis?
செர்னோபில் ரியாக்டர் சுவற்றில் பூஞ்சைக் காளான் வளர்வதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? கதிர்வீச்சு அதிகம் உள்ள இடங்களில் உயிர் வளர்ச்சி சாத்தியமில்லை. ஏனெனில், தொடர் கதிர்வீச்சில் உயிர்களில் பிறழ்வுகள் ஏற்பட்டு, வளர்ச்சி தடைபட்டுவிடுவது தான்.
ஆனால், இந்தப் பூஞ்சைக் காளான், நாளடைவில், கதிர்வீச்சுக்கான எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டிருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எப்படி? தாவரங்கள் சூரிய ஒளியிலிருந்து உணவைத் தயாரிப்பது போல, இந்தப் பூஞ்சைக் காளானும் கதிர்வீச்சிலிருந்து சக்தியைப் பெறக் கற்றுக்கொண்டுவிட்டது.
எப்படி? நம் உடலில் உள்ள மெலனின் தான். அதே மெலனின் இந்தப் பூஞ்சைக் காளானிடமும் இருக்கிறது. அதிக அளவிலான மெலனினைப் பயன்படுத்தி கதிர்வீச்சை தடுத்து, ஆக்கப்பூர்வமான சக்தியாக மாற்றுகிறது. வினோதம் தான் இல்லையா?
Tuesday, 15 July 2025
சொல்வனம் - ஷார்ட்ஸ்
மற்றுமொரு youtube shorts.
https://www.youtube.com/shorts/C-5Nlp-onlo
சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கும், சரஸ்வதி தியாகராஜன் Saraswathi Thiagarajan அவர்களுக்கும் எனது நன்றிகள் 🙏🙏🙏
Monday, 14 July 2025
ஜப்பான் தமிழ்ச் சங்கம்
ஜப்பான் தமிழ்ச் சங்கத்திலிருந்து யாரேனும் நட்பு வட்டத்தில் இருக்கிறீர்களா?
இந்தப் பரிமாற்றத்தைக் கடக்க நேர்ந்தால், மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளவும். ramprasath.ram@gmail.com
Friday, 11 July 2025
தென்றல் இதழில் வெளியான எனது நேர்காணல்
வடஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தென்றல்” இதழில் வெளியான எனது நேர்காணல்..
https://www.tamilonline.com/mobile/article.aspx?aid=15707
தென்றல் ஆசிரியர் குழுவுக்கும், மதுரபாரதி அவர்களுக்கும், சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்
Sunday, 6 July 2025
காலங்கடத்தி
காலங்கடத்தி
அப்போது பத்தாவது முடித்துவிட்டு பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிலேயே தண்டால் பஸ்கி எடுத்துக்கொண்டிருந்ததில் போதாமை ஏற்பட்டு ஜிம்முக்குச் செல்லலாம் என்று முடிவானது.
நூறு ரூபாய் தான் மாதம். அப்பா தரும் பாக்கேட் மணியில் ஜிம். அந்த ஜிம்முக்கு பெரும்பாலும் சைதாப்பேட்டை காய்கறி மார்கெட்டில் வேலை பார்ப்பவர்கள் வருவார்கள். ஜிம் ட்ரெயினர், தமிழ்நாடு ஆணழகன் போட்டியாளர் என்றார்கள். ஜிம் பாலபாடம் அவரிடம் தான். நானும் அண்ணனும் தவறாமல் செல்வோம். பண்ணிரண்டாம் வகுப்பு முடித்து பொறியியல் சேர்ந்திருந்தேன். ட்ரெயினர் என்னை 'எஞ்சினியர்' என்று அழைக்கத்துவங்கியிருந்தார்.
ஜிம்மில் முதலில் கண்டடைவது Discipline தான். அதற்காகவே ஒவ்வொருவரும் ஜிம் செல்ல வேண்டும் என்பது என் பரிந்துரை. சத்தான உணவு. நாள் ஒன்றுக்கு 15-17 முட்டை. காலையில் பழைய சோறு, கேழவரகு கஞ்சி. ப்ரோட்டீன் நிறைந்த உணவுகள். சோளம். காய்கறி. உலர் பழங்கள். கோழி இறைச்சி. உடலின் சக்தியை வெளியேற்றும் எந்தப் பழக்கமும் அறவே கூடாது. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே செல்லலாம்.
அந்த நினைவுகளையெல்லாம் கிளறிவிட்டுவிட்டது Alappuzha Gymkhana திரைப்படம். திரைப்படத்தின் இறுதியில் சற்று கமர்ஷியலாக்கிவிட்டார்கள் என்றபோதிலும், பெரும்பான்மைக்கு உள்ளூர் ஜிம்,அதற்குச் செல்லும் ஆண்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் என்று கலவையாகத் தந்திருக்கிறார்கள். Naslen Gafoorந் 'ப்ரேமலு'வை ஒரு நூறு முறையாவது பார்த்திருப்பேன்.
சரி, இந்தப்படத்தில் என்னதான் பண்ணி வைத்திருக்கிறான் என்று பார்த்தால், உண்மையாகவே படத்திற்காக உடலளவில் நன்றாகவே உழைத்திருப்பது தெரிகிறது.
வெறுமனே ஜிம் போனோமா, யார் பலசாலி என்று ஈகோ பார்த்து அடித்துக்கொண்டோமா, ஏரியாவில் கெத்து காட்டுவது என்றெல்லாம் இல்லாமல், இந்த விளையாட்டை வைத்து எப்படி அடுத்த கட்டம் நகர்வது என்று யோசிக்கும் நாயகர்களாகக் காட்டியிருப்பதில் சற்று ஒன்ற முடிந்தது. நான் ஜிம் செல்லத்துவங்கியபோது, பாடி பில்டிங் துறையில் செல்லலாமா என்றொரு யோசனை இருந்தது. அதற்கேற்றார்போல், உடலில் ஆங்காங்கே cuts வைத்து, arms, chest என்று மெருகேறத்துவங்கியபோது, நிஜமாகவே அந்தத் துறையில் scope இருப்பதாகப் பட்டு, நாள் ஒன்றுக்கு பதினைந்து மணி நேரம் செலவிடக் கூட தயாராக இருந்தேன். மாநில அளவில் செயலாற்றி Sports quotaல் சீட் என்று யோசிப்பதெல்லாம் கச்சிதமாக உண்மை தான். அப்போது, அந்த வயதில் அப்படித்தான் தோன்றும். ஆலோசனையும் அந்த ரீதியில் தான் கிடைக்கப்பெறும். பிறபாடு பொறியியல், இறுதி ஆண்டு, அப்படி இப்படி என்று அதிலிருந்து படிப்படியாக ஃபோகஸ் மாறி கணிணித்துறைக்குள் வந்து நின்றது.
விதி. வேறென்ன சொல்ல?
ஆக, படத்தில் பல இடங்களை பால்யத்தோடு பொறுத்திப்பார்க்க முடிந்தது. இத்தனை வருடங்களில், சில விடயங்கள் மாறவே இல்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
எதற்காக இல்லாவிட்டாலும், ஜிம், நமக்குள் ஏற்றும் அந்த Disciplineக்காகவே, பதின் பருவத்தில் உள்ளவர்கள் ஜிம் செல்ல வேண்டும் என்பது என் ஆலோசனை. எல்லோருக்கும் வாழ்க்கை எதிர்பாப்புக்கேற்றார்போல் அமையாது. பலருக்கு, பல சமயங்களில், வாழ்க்கையில் எந்தக் கன்ட்ரோலும் இருக்காது. அதுபாட்டுக்கு அவசர அவசரமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டே இருக்கும். அதன் போக்கில் போனால், வேறொரு இடத்துக்கு நம்மைக் கடத்திக்கொண்டு போய் விட்டுவிடும். அதைத் தவிர்க்க வேண்டுமானால், ஒரு 'காலங்கடத்தி' வேண்டும். அது, நமக்குள் ஆன்ம பலம் தருவதாகவும் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை உயர்த்துவதாகவும் இருக்கவேண்டும். எதிர்காலத்தை எதிர்கொள்ள வலு கூட்டுவதாகவும் இருக்க வேண்டும். இதற்கெல்லாம், ஜிம் ஒரு கச்சிதமாக 'காலங்கடத்தி' என்பேன்.
ஜிம் பழகுங்கள். இளமையிலேயே ஜிம் பழகுவது சாலச்சிறப்பு. எல்லோரும் பழகுவது வெகு உத்தமம். ஜிம் பழகுவதாலேயே எல்லாவற்றுக்கும் முஷ்டியை உயர்த்த வேண்டியதில்லை என்ற முதிர்ச்சியும் இருக்க வேண்டும் தான். எதற்கு முஷ்டியைப் பயன்படுத்த வேண்டும், எதற்கு மூளையைப் பயன்படுத்தினாலேயே போதும் என்கிற பாகுபாட்டை நாம் புரிந்துகொண்டாலே போதும். மற்றபடி, பதின் பருவத்தில், எதிர்காலத்திற்கென நம்மைத் தயார் செய்வதில், மிக முக்கிய இடம் ஜிம்மிற்கு உண்டு. ஜிம், ஒரு அதி முக்கியமான புள்ளி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
Saturday, 5 July 2025
சூர்யா சேதுபதி
சமீபமாக, சூர்யா சேதுபதி சந்திக்கும் ட்ரால் பெரிதாக ஆச்சர்யமூட்டவில்லை.
சொல்லப்போனால், நம்மை யார் தான் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள்? நெருங்கிய சொந்தங்கள் என்று நாம் நினைப்பவர்கள் கூட, அந்தப்பக்கம் போனால், நம்மைப் பற்றி வேறு விதமாகத்தான் பேசுவார்கள். இல்லை என்று யாராவது ஒருவர் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்கிறாரென்றால், விவரம் தெரியாமல் சொல்கிறார் என்று தானே பொருள்?
அதெல்லாம் நமக்குத் தெரியவராதவரைக்கும் தான் சொந்தங்களாக இருக்க முடியும். அடுத்தவர் மனக்குரல்கள் நமக்குக் கேட்டுவிட்டால், இங்கே நண்பன், உற்றார், உறவினர், சொந்தங்கள் என்று எந்த உறவும் எவருக்கும் இருக்காது.
மறதியும், டெலிபதி தெரியாமல் இருப்பதுவும் தான், நம்மை சக மனிதர்களுடன் நட்புறவாக வாழ வைக்கிறது என்றால் அது மிகையில்லை.
இப்படிச் சொல்வதால், விஜய் சேதுபதியின் மகனுக்காக வரிந்து கட்டுகிறேன் என்று எண்ண வேண்டாம். அது நோக்கமில்லை. உண்மையிலேயே, நம்மை முழுமையாக, துல்லியமாகப் புரிந்து வைத்திருப்பவர் நாம் மட்டும் தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. நாம் என்ன நினைத்து ஒன்றைச் செய்தோம், அதை மற்றவர்கள் எப்படியெல்லாம் புரிந்துகொண்டார்கள் என்பதெல்லாம் நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆண் துணை இல்லாமல் இருக்கும் பெண் என்றால் வெகுஜனப் பார்வை என்ன? கருப்பாக இருப்பவன் மீதான மற்றவர்களின் அணுகுமுறை என்ன? எளியவன் மீது அதிகாரம் மிக்கவனுக்கு இருக்கும் பார்வை என்ன? துல்லியமான புரிதலின் அடிப்படையிலா இதெல்லாம் நடக்கிறது? அஜித்குமார், ம்குமார் போன்றவர்கள் யார்?
மற்றவர்களிடம் இருப்பதெல்லாம் அவரவர் பார்வையில் நாம் பயன்படக்கூடிய ஒரு கோணம் மட்டுமே. அந்தக் கோணத்தின் வழி மட்டுமே நம்மைப் புரிந்து வைத்திருப்பார்கள். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மைக் முன்னால் நடிக்கும் பல நடிகர்கள் இருக்கிறார்கள். மைக்கில் சொல்வதற்கெண்று ஒத்திகை பார்க்கப்பட்ட வரிகளை மனனம் செய்து ஒப்புவிப்பவர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை, ஷாருக்கானிடம் 'ஜோக்கர்கள் யார்?' என்று கேட்டபோது 'Voters' என்றார். அது நகைச்சுவைக்குச் சொல்லப்பட்ட பதில் அல்ல. ஒரு தயாரிப்புடனே மைக்குகளை அண்டுவார்கள். காமிரா முன்னால் நிற்பார்கள். சூர்யா அப்படி தயார் செய்தது போல் தோன்றவில்லை. அப்படித் தயார் செய்திருந்திருந்தால் இப்படி வாயில் பபுள்கம்முடன் வந்து மீடியாக்களுக்குக் கன்டன்ட் கொடுத்திருக்க மாட்டார் என்கிற அளவில் மட்டுமே எனக்குப் புரிகிறது.
Thursday, 3 July 2025
Rebuild
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது.
நம்மளைச் சுத்தி தினம் தினம் குற்றங்கள் நடந்துட்டு தான் இருக்கு. எல்லாத்தையும் நாம கேள்விப்பட்டுட்டு தான் இருக்கோம். அந்தக் குற்றங்கள் நமக்கு நடக்காத மாதிரி நம்மளை நாம தகவமைச்சுக்கிட்டு தான் இருக்கோம். நம்ம சுற்றத்துல, நம்மாளு, வேத்தாளு,வேண்டியவன், வேண்டாதவன்னு தரம் பிரிச்சு நமக்கு வேண்டியவங்களுக்கு மத்தியில ஒரு வாழ்க்கையை நாம அமைச்சுக்கிறோம்.
ஆனா, அது எல்லாத்தையும் மீறி சில சமயங்கள்ல, நாம யாரை நல்லவன்ன்னு நினைச்சோமோ, யாரை வேண்டியவன்னு நினைச்சோமோ, யாரை நம்மாளுன்னு நினைச்சோமோ அவுங்களால தான் நமக்கு பொல்லாப்பும் நடந்துடும். நம்மோட கற்பிதங்களுக்குள்லெல்லாம் அடங்காதது தான் விதி, வாழ்க்கை எல்லாம்.
எவ்வளவு தான் திட்டமிட்டு வாழ்க்கையைக் கொண்டு போனாலும், நடக்கக்கூடாதது நடக்கும் போது, அதுல விழ வேண்டி வந்துடலாம். அது யாருக்கு வேணும்னாலும் நடக்கலாம். 'எனக்கெல்லாம் நடக்காது'ந்னு நம்மள்ல யாராச்சும் நினைச்சா, அவுங்க இன்னும் 'விழல'ந்னு தான் அர்த்தம். இதுவரை விழலன்னா, இனிமேல் விழ அதிக வாய்ப்பிருக்குன்னு அர்த்தம்.
எல்லார் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்துல விழ வேண்டி இருக்கும். சின்ன வயசுல விழறதுல இருக்கிற சாதகம் என்னன்னா, எழுந்தா, அதுக்குமேல விழ வேண்டிய தேவை இல்லாத ஒரு நீண்ட நெடுங்காலம் கிடைக்கும். வயசான காலத்துல வீழ்ச்சியை சந்திக்கிறதுல இருக்கிற பிரச்சனை என்னன்னா, எழறதுக்கான தெம்பே இருக்காது. So, சின்ன வயசுல விழறது ஒரு வகையில நல்லது. Its better to fall at an young age.
நமக்கு தெரிய வேண்டியது எல்லாம், விழுந்தா எப்படி எழுறதுங்குறது தான். Build பண்றது ஒரு பெரிய விஷயம் தான். ஆனா,அதை விட பெரிய விஷயம் Rebuild பண்றது. 'Rebuild' பண்ண கத்துக்கோங்க. இந்த உலகம் Build பண்ண ஆயிரத்தெட்டு வித்தை கத்துத் தரும். அதுல, நம்மாளு, வேண்டியவங்கிறதெல்லாம் வித்தைகள். ஆனா, Rebuild? அதை நிச்சயமா இவங்க யாரும் கத்துத்தர மாட்டாங்க? ஏன்னா, Rebuild பண்ண வேண்டிய இடத்துக்கு உங்களைத் தள்றவங்களே இவுங்களாத்தான் இருப்பாங்க...
Saturday, 21 June 2025
The Silent Planet - Movie
நம் போன்றே எவரேனும் எதையேனும் யோசித்திருந்தால் 'அட!' என்று பார்ப்போமல்லவா? அது போல, வெகு சமீபத்தில் பார்த்த அறிவியல் புனைவுத் திரைப்படம் 'The Silent Planet'.
2024ம் வருடம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் இந்தத் திரைப்படத்தை நேரம் கிடைத்தால் பாருங்கள். அப்படிப் பார்த்தவர்கள், சொல்வனம் இதழில் நவம்பர் 2024ல் வெளியான எனது 'நவீன சிறைச்சாலைத் தத்துவம்' சிறுகதையையும் வாசியுங்கள்.
சுட்டி இங்கே:
முடிந்தால், இவ்விரண்டில் எது நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் இடுங்கள். என் ஒபினியன் ஒரு பக்கம் இருக்கட்டும். திரைப்படத்தைப் பார்க்கவும் எனது சிறுகதையை வாசிக்கவும் செய்தவர்களின் ஒபினியன் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். முடிந்தால் செய்யவும். நன்றி.
Tuesday, 17 June 2025
Reels
"இரண்டாம் அடுக்குப் பிழைத்தல் விதிகள்" சிறுகதைக்கெனவான புனைவுவனம் நேர்காணலில் நான் பகிர்ந்தவற்றை வைத்து ஒரு சிறிய Reel/shorts உருவாக்கப்பட்டிருக்கிறது. Reel/shorts உருவாக்கிய சரஸ்வதி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். பின் வருவது அதன் சுட்டி.
https://www.youtube.com/shorts/CWZ8H2Yzb1I
2016ல், அன்றைக்கு வழக்கிலிருந்த Dating Trend ன் அடிப்படையில் ஒரு புனைவு எழுதலாம் என்று அமர்ந்தபோது, பலவாறாக யோசித்ததின் பலனாக, முடிவில், "இதை ஏன் சமூகக் கதையாக எழுதவேண்டும்? இதற்கு வேறொரு வடிவம் தேவை" என்று உணர்ந்த போது, அது தானாகவே கணித ரீதியில் அமைந்த ஒரு நான்-லீனியர் கதையாக உருவெடுத்தது.
அதில் வரும் 100:93 விகிதாச்சாரம், அதன் அடிப்படையில், அமைந்த எஞ்சிய கணக்குகள் எல்லாமும் தானாகவே ஒரு நூல் பிடித்தார்போல் ஒரு வடிவத்தில் அமைந்தன. அப்படி எழுதியதுதான் "உங்கள் எண் என்ன?" நூல்.
போலவே, 'பிரதியெடுக்காதே' சிறுகதையும். ஆண்-பெண் இடையிலான ஒருவருக்கொருவர் பொறுந்திப் போதல் நிமித்தம் மேற்கொள்ளப்படும் முயல்வுகள், அதன் பின் விளைவாக எழும் சமூகக் குற்றங்கள், போதாமைகள், இயலாமைகள் ஆகியன குறித்து ஒரு கதை எழுத அமர்ந்து, பிறகு, இதை ஏன் சமூகக் கதையாக எழுத வேண்டும் என்று தோன்றியதன் பலனாகவே, அது அறிவியல் புனைவாக விரிவடைந்தது. பார்க்கப்போனால், ஆண்-பெண் உறவுச் சிக்கல்களின் 99% விழுக்காடு பிரச்சனைகளை ஒரு கழுகுப்பார்வையில் பார்த்திட ஒருவர் இவ்விரண்டு ஆக்கங்களையும் வாசித்தால் மட்டுமே போதும். (இதன் பொருள், மற்ற/மற்றவர் ஆக்கங்களை வாசிக்க வேண்டியதில்லை என்பதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். நான் அந்த அர்த்தத்தில் இவ்விதம் சொல்லவுமில்லை. தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.)
பல சமயங்களில், பல சமூகப் பிரச்சனைகளைக் குறித்து யோசித்தால், இயல்பாகவே, அது ஒரு அறிவியல் புனைவுக்கே என்னை இறுதியில் இட்டுச்சென்றுவிடுகிறது. 2020 துவங்கி, இப்படித் தோன்றி எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்த தொகுப்பாகத்தான் 'மரபணுக்கள்' தொகுப்பு உருவாகியது எனலாம். 'மரபணுக்கள்' தொகுப்பை வாசியுங்கள் என்று நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவைகள் தொடும் சமூகப் பிரச்சனைகள் ஏராளம். 'பிரதியெடுக்காதே' சிறுகதை தான் 'மரபணுக்கள்' தொகுப்பின் முதல் கதை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
Friday, 13 June 2025
மனிதத் தவறுகள்.
மனிதத் தவறுகள்.
*********************குஜராத் விமான விபத்தில் மனிதத் தவறுகள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பத்தியும் ஒரு மனிதத் தவறு குறித்துத்தான்.
பிரேசிலில் "man of the hole" என்று ஒரு நபரை அழைத்திருந்தார்கள். அவர் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவரது இனத்தில் அவர் தான் கடைசி. நவீன மனித இனங்களுடன் இணைந்து வாழ விரும்பாமல்,னிமையில் வாழ்வதையே அவர் விரும்பினாராம். ஆதலால், அவரைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து அப்படியே விட்டுவிட்டார்கள். பிரேழில் காடுகளில் ஆறு அடிக்கும் ஆழமான குழிகள் வெட்டி அதனுள் வழிப்பாராம். அதனாலேயே 'man of the hole' என்று பெயர் வைத்திருந்திருக்கிறார்கள். கிடைத்ததை உண்பாராம். காட்டுக்குள்ளேயே திரிவாராம். இறுதியில், அவர் இறந்தபோது அவருக்கு அறுபது வயது ஆகியிருந்தது.
நவீன உலகின் கல்வி, மருத்துவம், ராணுவப் பாதுகாப்பு என்று எதுவும் இல்லாமலேயே அறுபது வயது வரை அவர் வாழ்ந்திருப்பது நமக்கெல்லாம் பாடம்.
அவரிடம் வேற்று கிரக மனிதர்கள் குறித்துக் கேட்டபோது தெரியாது என்று சொல்லிவிட்டாராம். பிறகு, வேற்று கிரக உயிர்கள் இப்படி இருக்கலாம் என்று நமக்கு இருக்கும் ஊகத்தைப் படமாக வரைந்து அவரிடம் காட்டியபோது, முகம் மலர்ந்து, "இவர் மன்குனாவாபு" என்றிருக்கிறார்கள்.
இதை வைத்து ஒரு கூட்டம் பூமியில் மனிதர்களுக்கு முன் வேற்று கிரக வாசிகள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. உண்மை அதுவாக இருக்க வேண்டியதில்லை தான். சரி, மனிதத் தவறு இதில் எங்கே என்று தானே கேட்கிறீர்கள்? 1700களில் பிரேசிலுக்குள் நுழைந்த போர்ச்சுகீஸியர்கள் போட்டுத்தள்ளியதில் தான் அப்போது பிரேசிலில் வாழ்ந்துகோண்டிருந்த பல பழங்குடிகள் அழிந்து போயின. பிற்பாடு, கிருத்துவத்தைப் பரப்பும் நோக்கில், அந்தப் பழங்குயினங்களின் மத நம்பிக்கைகளை, அது தொடர்பான ஆவனங்களை, கைவினைப்பொருட்களை எல்லாம் அழித்ததில், உண்மையைத் தெரிந்துகொள்ளும் எல்லா வாய்ப்புக்களையும் துப்புரவாக நவீன மனிதர்களே அழித்துவிட்டார்கள் என்பதுதான் அந்த மனிதத் தவறு.
இப்போது தாங்கள் தெரிந்தே அழிந்துவிட்டவைகளை மீண்டும் தெரிந்துகொள்ள மாங்கு மாங்கு என்று வானத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். மனித இனத்தின் நவீனத்துவங்களில் பல, மனிதத் தவறுகளை மறைக்கும், மனிதத்தவறுகளால் நேர்ந்த இழப்புகளைச் சரிசெய்யும் முயல்வுகள் தாம்.
சரி. அந்த மன்குனாவாபு தான் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? பூமிக்கடியில் குழிகளுக்குள் வாழும் ராட்சத எறும்புகளைத்தான் அந்த பழங்குடி மனிதர் குறிப்பிடுகிறார் என்பதில் வந்து நிற்கிறது. This is the most conservative conclusion என்பது குறிப்பிடத்தக்கது. ஏன்? ஏனென்றால், விபரம் தெரிந்திருக்கக்கூடிய மற்ற பழங்குடிகளைத்தான் அழித்தாயிற்றே. அவர்களோடு சேர்ந்து அழிந்து போன உண்மைகளைத் தெரிந்துகொள்ள, இனி வரும் காலம் மனித இனம் பல்லாயிரம் கோடி டாலர்களை ஆராய்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
இத்தனைக்கும் பல இடங்களில் இனவழிப்பு திட்டமிட்டு நடப்பது கூட இல்லை. காட்டை அழித்து வீடு கட்டினால் இயல்பாகவே வீட்டைச் சுற்றி பூச்சிகள், ஊர்வன, பறப்பன போன்றவைகள் விலகிச்செல்வது போல, நவீன மனிதர்களில் பெருக்கத்தால் இயல்பாகவே வாழ்வாதாரம் குன்றி எளிமையான மனிதர்களின் அழிவு நடந்து விடுகிறது. சுருக்கமாகச் சொன்னால், எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. இப்போதிருக்கும் உலகம் - அதிலுள்ள கஷ்டங்கள், சங்கடங்கள், துயரங்கள் எல்லாமும் நம் பெருக்கத்திற்கு நாம் தரும் விலை என்றால் அது மிகையில்லை.
பெருகுவானேன்? விலை தருவானேன்? But, I know, the world isn't there yet, not ready for the conversation yet.😞😞
Saturday, 31 May 2025
புனைவுவனம் - ஆசிரியரை சந்திப்போம்
சொல்வனம் இதழின் "புனைவுவனம் - ஆசிரியரை சந்திப்போம்" நிகழ்ச்சியில், சொல்வனம் இதழில் வெளியான எனது "இரண்டாம் அடுக்குப் பிழைத்தல் விதிகள்" சிறுகதை குறித்து நேர்காணல் நடந்தது. திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் கேள்விகளுக்கு பதில்கள் வழி சிறுகதை உருவாக்கம், சிறுகதைக்கான காரணிகள் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்திருக்கிறேன்.
இந்த நிகழ்வுக்கென சொல்வனம் இதழாசிரியர்களுக்கும், திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும், ஒருங்கிணைத்த பாஸ்டன் பாலா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
https://www.youtube.com/watch?v=8hE_Q3bNcyA
Tuesday, 27 May 2025
Friday, 18 April 2025
வேற்று கிரகத்தில் உயிர்கள்
வேற்று கிரகத்தில் உயிர்கள்
K2-18b கிரகம் இருப்பது 124 ஒளி ஆண்டுகள் தொலைவில், அதுவும் leo நட்சத்திரக் கூட்டத்தில்.
இந்தக் கிரகம் இப்போது இணைய வெளியில் பேசுபொருளாகியிருக்கிறது. ஏன் தெரியுமா? ஒரு இந்திய ஆராய்ச்சியாளரால், K2-18b கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரமான DMS அதாவது dimethyl sulphide கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக உலவும் செய்திகள் இன்றைய முகநூல் வெளியை ஆக்ரமித்திருக்கின்றன.
கண்டு சொன்னவர் ஒரு இந்தியர் என்பதுவும், இந்தச் செய்தி வைரல் ஆனதற்கு ஒரு காரணம்.
உடனே இணையமெங்கும் fermi paradoxக்கு பதில் கிடைத்துவிட்டது, K2-18b கிரகத்திற்கு probe அனுப்ப முடிவு செய்திருக்கிறது நாசா என்றெல்லாம் சூடாக செய்திகள் பரவத் துவங்கிவிட்டது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம், 124 ஆண்டுகளுக்கு முன்னான ஒளியை வைத்துக்கொண்டு, இப்போதே நல்ல நிலையில் இருக்கும் பூமியை சரிசெய்வதை விட்டுவிட்டு, புதிய கிரகம் எப்போது தாவலாம் என்று ஆளாய்ப் பறக்கிறார்கள் என்று கேலியும் கிண்டலும் கூட இணையத்தில் அதிகம் காண முடிகிறது.
முதலில் ஒன்றைத் தெளிவாகப்பார்த்துவிடலாம்.
DMS எனப்படும் dimethyl sulphide மட்டுமே உயிர்கள் இருப்பதற்கான ஆதாரமாகக் கொண்டு விட முடியாது. அது, உயிர்கள் இருப்பதால் மட்டுமே வெளியிடப்படும் வேதிப்பொருள் இல்லை. இந்த வேதிப்பொருள் இயற்கையான முறையிலும் வெளியாகலாம். இதே வேதிப்பொருள் 67P/Churyumov-Gerasimenko காமட்டில் கூட கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அங்கே உயிர்கள் என்று எதுவும் இல்லை. ஒரு நட்சத்திரத்தின் ஃபோடான்கள், கிரகத்தின் வான்வெளியில் உள்ள வேதிப்பொருட்களுடன் மோதுகையில் கூட DMS வெளிப்படுகிறது என்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். ஆக, DMS இருப்பதே உயிர்கள் இருப்பதற்கான சமிஞை என்று எடுத்துக்கொள்ள முடியாது என்பதே அறுதி உண்மை.
நமக்குத் தொடர்ந்து தகவல்கள் தேவை. அது தற்போது நம்மிடம் இல்லை. அதற்கு இன்னும் மென்மேலும் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு இன்னும் அதிகம் செலவாகும். இன்றோ நாளையோ சாத்தியப்பட்டுவிடும் காரியம் அல்ல. ஒளி ஒரு நொடியில் சென்றடையும் தூரமான சனிக்கிரகத்திற்கு, நம்மிடம் இருக்கும் அதி வேகமான விண்கலன் செல்ல சுமார் ஏழு வருடங்கள் ஆகும். உதாரணம்: Cassini. இதுதான் நம்மிடம் இருக்கும் உச்ச தொழில் நுட்பத்தின் வேகம்.
அப்படியிருக்கையில், 124 ஒளி ஆண்டுகள் தூரத்தை நாம் சென்றடையத் தேவையான தொழில் நுட்பம் இன்னும் சில தலைமுறைகளுக்குக் கூட சாத்தியமில்லை. ஒருக்கால் இன்னும் இருபது ஆண்டுகளில் அதை மனித இனம் செய்துவிடமுடியும் என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டாலும், அதுவரை நம் பூமி, குறைந்தபட்சம் இப்போது இருப்பதைப் போல, தொடர வேண்டும். அதுவே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதுதான் நிதர்சனம். ஆகையால், நாம் எல்லோரும் தரையில் நடப்போமாக.
Monday, 14 April 2025
மரபணுக்கள்- அறிவியல் கதைகள் - Boje Bojan
மரபணுக்கள்- அறிவியல் கதைகள் - Boje Bojan
மரபணுக்கள் - ராம் பிரசாத் - அறிவியல் சிறுகதை தொகுப்பு - பதிப்பகம் , படைப்பு - பக்கங்கள் 131- முதல் பதிப்பு 2024
மரபணுக்கள்- அறிவியல் கதைகள்
ஆசிரியர் பற்றி :
எழுத்தாளர் ராம் பிரசாத் தற்கால இளம் அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர் பல அறிவியல் கதைகள் சிறுகதைகள் புனைவுகள் ஆகிவற்றை எழுதிஉள்ளார் . ஏற்கனவே இவர் எழுதி இருக்கும் வாவ் சிக்னல் மற்றும் புரதான ஏலியன் நூல்கள் புகழ் பெற்றவை அதிலும் வாவ் சிக்னல் பாராட்டு மற்றும் விருது பெற்ற நூல். தமிழ் மட்டும் இல்லாமல் ஆங்கிலத்திலம் இவரது புத்தகங்கள் இருக்கின்றது.
புத்தகம் பற்றி :
மொத்தம் 10 தலைப்புகளில் 130 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் ஆசிரியர் எழுதிய மற்ற புத்தகங்களில் இருந்து வேறு பட்டு நிற்கிறது. அதற்கு காரணம் பொதுவாக அறிவியல் கதை எழுதும் எழுத்தாளர்கள் பலவேறு தலைப்புகளில் இருந்து பல சிறுகதைகளை தொகுத்து ஒரு நூலாக எடுத்து வருவார்கள் . ஆனால் இந்த புத்தகத்தை பொறுத்த வரை எல்லாமே மரபணு அதாவது gene என்ற ஒற்றை கருவை வைத்து கொண்டு 10 விதமான கதைகளை சொல்லி இருக்கிறார். இதற்க்கே ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டு சொல்ல வேண்டும்.
"Genes are not our fate, but they are our starting point. The choices we make shape our destiny."
என்ற ரிச்சர்ட் டார்க்கின் வரிகளுக்கு ஏற்ப மரபணுக்கள் பற்றி பேசி இருப்பதே இது நூலின் முக்கியமான பலமாகும். ஒவ்வொரு கதையிலும் மரபணு தொடர்பான விஞ்ஞான தத்துவங்கள் மட்டுமின்றி, அதனால் மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் உணர்வுப்பூர்வமான கோணத்தில் பேசப்படுகின்றன.
இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் சிலவற்றை பார்ப்போம்
ஷேசம்:
பொதுவாக ஒரு ஆணும் பெண்ணும் சேரும் போது குழந்தைகளுக்கு அவர்கள் ரெண்டு பேரின் மரபணு தான் வரும் ஆனால் எதிர் வரும் காலங்களில் modified genetic என்ஜினீயர் மூலம் வேறு ஒருவர் மரபணுவோ அல்லது விலங்குகளின் மரபணுக்கள் மனித குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் விருப்பம் உடன் செலுத்த முடியும். அப்படி பட்ட கதை தான் இது கதை படி நாயகன் steward க்கு ஷேசத்தின் அதாவது பாம்பின் மரபணு செலுத்த பட்டு இருக்கும். அதனால் அவன் கண்கள் மனிதன் கண்கள் போல் இல்லாம பாம்பின் கண்கள் போல் இருக்கிறது இதனால் ஏற்படும் விளைவு என்ன. இதை தீர்க அவனது காதலி எடுக்கும் முயற்சி என்ன. கடைசியில் என்ன நடந்து என்பதை படிக்க படிக்க விறுவிறுபாக இருக்கிறது.
சரோஜாதேவி:
பொதுவாக சரோஜா தேவி என்ற பெயர் சற்று சர்ச்சையான பெயராக இருந்துஉள்ளது. அது ஏன் அதற்கு இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை புத்தகம் படித்த பிறகு புரிந்து கொள்ள முடியும். ஒரு விதத்தில் எழுத்தாளர் ராம் அவர்களை பாராட்டி ஆக வேண்டும். சற்று மாரி இருந்தாலும் கதை கருவே மாரி இருக்கும். அப்படி இல்லாமல் சரியாக கதை சொல்லி இருக்கிறார்.
கதையின் கரு ஒரு அனாதை விடுதியில் மன்சூர் என்ற பையனை சோதிக்க ஒரு மனநல மருத்துவர் ஒருவரை அழைத்து வருகிறார்கள். யார் அந்த பையன்? ஏன் அவனுக்கு சிகிச்சை அதன் பின் நடந்தது என்ன என்பதை அறிவியல் ரீதியாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
பச்சிலை & மாற்று தீர்வு
இந்த இரண்டு கதைகளும் தனித்துவம் கொண்டவை. அறிவியல் சார்ந்த ஆழமான கருத்துக்கள், விறுவிறுப்பான கதைக்களம் ஆகியவை வாசகர்களை ஈர்க்கும்.
கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.
Friday, 11 April 2025
மரபணுக்கள் - ஸ்ரீநிவாஸ் பிரபு - நூல் விமர்சனப் போட்டி 2025
மரபணுக்கள் - ஸ்ரீநிவாஸ் பிரபு
நூல் விமர்சனப் போட்டி 2025
மரபை முன் மொழியும் மரபணுக்கள்
வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் மனிதர்களுக்கு ஒரே கணத்தில் நிகழ்ந்து முடிந்து விடுகின்றன என்றாலும், நிகழ்வுகள் குறித்தான நினைவுகள் மட்டும் காலம் முழுமைக்கும் மனதில் பொங்கிப் பிரவாகமாக அலையடித்துக் கொண்டே இருக்கும். அப்படியான அலையாக ராம் பிரசாத்தின் மரபணுக்கள் (வாவ் சிக்னல் – II விஞ்ஞான சிறுகதைகள்) சிறுகதைத் தொகுப்பு நூலும் எதிர்ப்படுகிறது.
மரபணுக்கள் தொகுப்பில் பொதிந்த எழுத்தும் உரை நடையும் விஞ்ஞானத்தின் துணையோடு கதைகளாக எதிர்ப்படுவதோடு தொன்மம், வரலாறு, பண்பாடு, கலை, அரசியல் யாவும் இணைந்தே வருகிறது. அதுவே உரைநடையை சுவாரஸ்யமாகவும் முக்கியமானதாகவும் மாற்றுகின்றன.
மரபணுக்கள் தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள். அனைத்து கதைகளும் மரபணுக்கள் குறித்தும், அவை நிகழ்த்தும் கூறுகள் குறித்தும் அவற்றின் பரிமாணங்கள் குறித்தும் பேசுகின்றன. இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் மனிதன் மனிதனாக இருக்க மரபணுக்கள் தான் காரணம் என்பதையே மையப்படுத்தி நிற்கிறது.
அஃறிணைப் பொருட்களை மட்டும் பிரதி எடுத்து பயன்படுத்தப்படுவதை அறிந்திருக்கும் நமக்கு நகமும் சதையுமாக இன்னொரு பிரதியாக உயிருள்ள மனிதன் பிரதியாக எதிர்ப்பட்டால் என்ன நிகழும் எப்படி இருக்கும் என்ற சாத்தியக்கூறை ஆராய்ந்து (நடை முறை படுத்தி) அதன் பல்வேறு பரிமாணங்கள் ஆச்சர்யத்துடன் காட்டுகிறது பிரதியெடுக்காதே கதை. மரபணுக்களுக்கு வெளியே உள்ளவைகளை மாற்ற நமக்கு பிரதிகள் தேவையில்லை என்ற கருத்தை ஓங்கிச் சொல்லுமிடமும், பிரதிகள் மாற்றுப் பிரபஞ்ச அளவில் உறவை மென்மேலும் மலினப்படுத்தும் என்ற கருத்தும் யோசிக்க வைத்து ஒத்துக் கொள்ள வைப்பது அபாரமாக இருக்கிறது.
சிறுகதைகளுக்கு மொழி மிகவும் முக்கியமானது. அந்த வகையில் தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் மொழி இலகுவாக, எளிமையின் உன்னதத்தோடு வாசிப்பாளனுக்கு அருகில் நின்று பேசும் தன்மையுடன் இருக்கிறது.
விஞ்ஞான கருத்துக்களும் அதன் வீச்சு சார்ந்த விஸ்தாரமும் மெல்லிய கோட்டில் வழுவாமல் நடப்பதற்கு இணையாக இருக்கிறது. அந்த வகையில் எந்த இடத்திலும் தடம் பிசகாமல் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் முன்வைத்து நகர்கிறது.
காலத்தின் போக்கில் ஏற்றுக் கொள்ளப்படாதவைகள் கூட ஏற்றுக் கொள்ளப்படுவதுண்டு. நடுவு நிலை என்ற ஒன்று இருப்பினும் அதைத் தீர்மானிப்பது யார், எது துவக்கத்தில் நாடகீயமான பொழுது போக்கிற்கு பயன்படும் என்று கணிக்கப்பட்டதோ அது ஒரு கட்டத்தில் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை புரட்டிப் போட்டது போன்ற கருத்துக்களையும், கேள்விகளைகளும் தரவுகளோடு ஆராய்கிறது சேஷம் சிறுகதை. வேற்று விலங்கினங்களின் மரபணுக்களைத் தாங்கும் மனிதர்கள் கலப்பினம் என்ற கூற்றும், அவன் முன்பு சர்ப்பமாகி சிறையிலிருந்து தப்பி இருக்கக் கூடிய சாத்தியக் கூறும் உலகின் விசித்திரங்களையும் ஆச்சரியங்களையும், அதிர்ச்சியையும் பாசாங்கின்றி அசலான அமைப்பை தரிசிக்க உதவுகிறது. இறுதியாக கால் நீட்டி படுத்துக் கொள்கையில் அவன் தன் உடல் என்னும் மடியை படுக்கையாக்கி அதில் கிடத்தி தன் ஐந்து தலைகளால் உடலைத் தாங்கி நிற்பதும், பிரபஞ்சமே கைகூப்பித் தொழுவதுமாக நிறைவுறுவது பரவசப் பொருளாய் இருக்கிறது. ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட பெருமாள் கால் நீட்டி சயனித்திருக்கும் காட்சி கண்களில் நிறைந்து நிற்கிறது.
நாம் அனைவரும் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு மைல் கல்லிலும் எதையோ இழந்து எதையோ பெற்றவர்களாக இருக்கிறோம் என்ற கருத்தை முன்வைத்து ஊர்கிறது ஊரும் மனிதன் கதை. இயற்கை எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கிறது, அந்த அவதானிப்பு பார்வையால் அல்லாது இயக்கத்தால் நடைபெறுகிறது என்ற கருத்து உள்ளார்த்தமாகப் பாய்ச்சுகிறது. அதே நேரம் வேறுபாடுகள் யாவும் பிறழ்வுகள் என்பதும் இயற்கையின் இயக்கத்தின் பண்புகள் என்பதும் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. விட்டு விலகி வந்ததற்கு மீள்வது குறித்தே கவலை கொள்ளும் மனிதர்கள் அருகாமையில் இருப்பது குறித்து கவலை கொள்வதே இல்லை என்ற கேள்வியும் அதற்கு மௌனம் சாதிக்கும் பதிலும் உண்மையின் வெளிப்பாடுகளாக இருக்கிறது.
மரபணுக்களால் நிகழ்ந்த மாற்றங்களையும் பரிசோதனை முயற்சிகளையும் விளக்கும் மற்றொரு அற்புதக் கதை சரோஜாதேவி புத்தகம். எல்லோரும் கடந்து வந்திருக்கும், விடலைப் பருவத்திற்கே சொந்தமான ஒன்றான பதின் வயதில் காமுறும் தருணத்தை ஆராய்ந்து சொல்வதுதான் கதையின் மையம். சிக்மன் ஃபிராய்டின் புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டப்படுவதும். மரபணுக்களின் ஆய்வுகளால் முடிவு கண்டறிப்படுவதையும் சரோஜாதேவி புத்தகங்கள் செய்த சேவையுடன் தொடர்புபடுத்தி விளக்குமிடம் யதார்த்த நிஜத்தை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
எனக்கும் உங்களுக்கும் ஒரே மரபணுதான் எனில் நான் தான் நீங்கள், நீங்கள்தான் நான் எனும் கேள்வி எதிர்ப்படும் இடம் சுவாரஸ்ய முடிச்சு. சொல்லப்போனால் தொகுப்பில் உள்ள கதைகளான பச்சிலை, தழுவு கருவி, கண்ணாடிச் சுவர், மாற்றுத் தீர்வு போன்றவை விலாவரியாக விமர்சிக்கவும் விவாதிக்கவும் சாத்தியக் கூறுகளை கொண்டு இருக்கவே செய்கிறது. அதே நேரம் கதைகளை முன் மொழியும் எழுத்து நடை கதைகளைப் படிக்கும் சுவாரஸ்யத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருப்பது தனி கவனத்தை ஈர்க்கிறது. கதைகள் அனைத்திலும் சுவாரஸ்யத் தகவல்களும் வரலாற்றுப் பதிவுகளும் நிறைந்திருக்கிறது.
மரபைத் புரிந்து கொள்ளாதவரை புதுமையை படைக்க முடியாது என்பார்கள். அது மரபணுக்களுக்கும் சாலப் பொருந்தும். மரபையும் மரபணுக்களையும் முழுமையாக உள்வாங்கி புதுமையைப் படைக்கத் தெரிந்த படைப்பாளியாகவும் தான் அறிந்ததை அடுத்தவருக்கும் புரிய வைக்கும் வல்லமை படைத்தவராகவும் எதிர்ப்படுகிறார் ராம்பிரசாத்.
அதற்கு மரபணுக்கள் தான் காரணம் என்றும் சொல்லாம்!!
X X X
ஸ்ரீநிவாஸ் பிரபு,
சென்னை
Thursday, 10 April 2025
Tartigrade என்னும் ஏலியன்
Tartigrade என்னும் ஏலியன்
டார்டிகிரெட்ஸ் பற்றிப் புதிதாக நான் அறிமுகம் செய்யத்தேவையில்லை என்று நினைக்கிறேன். மிகவும் சக்தி வாய்ந்த, அழிவே இல்லாத உயிரிணங்கள் இவைகள். பூமியில் காலத்தை வென்ற உயிரிணங்கள் வெகு சில மட்டுமே. உதாரணமாக, முதலைகள். முதலைகளுக்கு வயது, வயோதிகம் என்பதே கிடையாது. அவைகள் நோய்வாய்ப்பட்டாலோ, அல்லது உண்ண உணவு கிடைக்காமல் போனாலோ தான் இறக்குமே ஒழிய இயற்கையாக மரணிப்பதே இல்லை.
அதே போல, விண்வெளியின் வெற்றிடத்திலும், மைனஸ் இருநூற்றைம்பது டிகிரி குளிரிலும், சூரியனின் கதிர்வீச்சிலும் கூட அழிந்து போகாமல் நீடிக்கும் தன்மை கொண்ட மற்றொரு உயிர், டார்டிகிரெட்ஸ். இவற்றின் வினோதத் தன்மைகளுக்காய், இவைகளையே வேற்று கிரக வாசிகள், ஏலியன்கள் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இவைகள் எப்படி இயற்கையின் மிக மிக மோசமான சூழலிலும் அழியாமல், உயிர் பிழைக்கின்றன என்பது இதுகாறும் பெரும் புதிராய் இருந்தது. நமக்கெல்லாம் விண்வெளிக்குச் சென்றால், நம் உடலைக் காக்க, Spacesuit தேவை. பிராணவாயு தேவை. ஆனால், டார்டிகிரேட்களுக்கு அப்படி அல்ல. அவைகள் எந்த ஒரு மோசமான சூழலிலும் உயிர் பிழைத்திருக்கும். இது ஒரு பெரும் புதிராக இருந்தது. அந்தப் புதிருக்கு விஞ்ஞானிகள் விடை தேடிக் கண்டடைந்திருக்கிறார்கள்
இந்த டார்டிகிரேட்கள் சில புரதங்களை உற்பத்தி செய்கின்றனவாம். அந்தப் புரதங்கள் தான் இவைகளின் உயிர் பிழைத்தலுக்கு அச்சாணி என்கிறார்கள். உதாரணமாகக் கதிர்வீச்சை எதிர்கொள்ள வேண்டி வந்தால், இந்த புரதங்கள் இவற்றின் மரபணுவைச் சுற்றி அரண் போல தகவமைந்து கொள்ளுமாம். இதனால், மரபணுக்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.
பூமியில், இப்போதைக்கு, மனித இனம் , ராப்பகலாகத் தேடும் சாகாவரத்தை, இந்தச் சின்னஞ்சிறிய உயிர்கள் இயல்பிலேயே பெற்றிருப்பது அதிசயம் தானே.
Friday, 4 April 2025
பேரரசன்' சிறுகதை
அன்பு நண்பர்களுக்கு,
வாசகசாலையில் 111வது இதழில் எனது 'பேரரசன்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. இதழில் சிறுகதையை வாசிக்கப் பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும்.
https://vasagasalai.com/111-story-perarasan/
எனது சிறுகதையை வெளியிடத் தேர்வு செய்த வாசகசாலை இதழில் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
சிறுகதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
Tuesday, 1 April 2025
Friday, 28 March 2025
இணைய நண்பர்களுக்கு,
இணைய நண்பர்களுக்கு,



Thursday, 27 March 2025
தீசஸின் கப்பல் - விமர்சனம் - ஜெயா நவி
தீசஸின் கப்பல் - விமர்சனம் - ஜெயா நவி
நூல் விமர்சனப் போட்டி - 2025
_____________________________________
நூல் : தீசஸின் கப்பல் (சிறார் இலக்கிய
நூல்)
ஆசிரியர் : ராம் பிரசாத்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பக்கங்கள் : 138
விலை : ரூ 190
. ஆசிரியர் ராம் பிரசாத் மயிலாடுதுறையில்
பிறந்து அமெரிக்காவில் வசிக்கிறார். இந்நூல் ஆசிரியரின் 15 வது நூல். இவர் தமிழ்
ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளிலும்,
இந்தியா மற்றும் அமெரிக்காவில் உலகளாவிய அறிவியல் புனைவிலக்கிய வெளியில்
சிறந்து இயங்குகிறார். கணினியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில்
முதுநிலைப்பட்டமும் பெற்றவர். 2009 ல் இருந்து தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.
. 2020 ல் வெளியான இவரது 'வாவ்
சிக்னல்' விஞ்ஞான புனைவுச் சிறுகதைத் தொகுதி நூலுக்குத் தமிழக அரசு தமிழ்
வளர்ச்சித் துறையின் சிறந்த சிறுகதை நூல் என விருதளித்து கௌரவித்திருக்கிறது.
. தீசஸின் கப்பல் நூல் சிறார்
இலக்கியமாக மலர்ந்திருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியோடு கூடிய முன்னேற்றத்தை
சிறுவர்கள் எவ்வாறு கையாள வேண்டுமென அழகான புனைவுக்கதைகளாக கொடுத்திருக்கிறார்.
ஒரு வீட்டின், ஒரு ஊரின், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வளரும் இளம் தலைமுறையினரின்
பங்கு மிக மிக முக்கியமானது.
. ஓரிரு தலைமுறைக்கு முன்பு தகப்பன்
தொழிலைத்தான் பிள்ளைகளும் தொடர வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தது. இது
அத்தலைமுறையையே அடிமைப்படுத்தி வைத்திருந்தது. அதன்பிறகு விழித்துக் கொண்ட
பெற்றோர்கள் நம் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் நான் பட்ட கஷ்டங்களை
அவர்கள் படவேண்டாம் என்று உணர்ந்து தன் சக்திக்கு மீறி படிக்க வைக்க
தலைப்பட்டனர். அதில் வெற்றியும் கண்டனர்.
கல்வி ஒரு மனிதன் எட்ட முடியாத உயரத்திற்கு அவனை இட்டுச் செல்லும் அவன் தலைமுறையை
அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கும்.
அதேபோல தான் ஒரு நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி என்பது இளைய தலைமுறையின்
முற்போக்கு சிந்தனைகளிலும், அதை துணிந்து செயல்படுத்தும் விதத்திலும்
இருக்கிறது. நூலில் இருக்கும் 10
சிறுகதைகளும் கற்பனைக்கு எட்டாதவைகளாக தற்போது தெரியும். ஆனால் வருங்காலத்தில் இவையும்
சாத்தியமே.
. அறிவியல் சார்ந்த புனைவு கதைகள்
வாசிக்கும் போது ஒரு புறம் பிரமிப்பு ஏற்படுகிறது. இங்கனம் நிகழ்ந்தால் உலகம்
எப்படி இருக்கும் என்ற திகைப்பும், ஆச்சரியமும் நம்முள் ஏற்படுகிறது. ஆனால் சற்று
பின்னோக்கி சென்றால் நாம் இருந்த வாழ்வியல் முறையும் தற்போது நம் வாழ்வியல்
முறைகளையும் ஒப்பிட்டு நோக்கினால் நாம் வளர்ந்த பாதை புலப்படும். அதுபோல திசஸின்
கப்பல் நூல் சொல்கிற விஞ்ஞான வளர்ச்சிகளும் எதிர்காலத்தில் சாத்தியமாகும்.
. மூடநம்பிக்கைகளால் தெய்வங்களின்
மீது பழியைப் போட்டு ஏற்படும் நிகழ்வுகளை நாம் கடந்து சென்றுவிட தன் பழக்கப்பட்டு
இருக்கிறோம். அதையும் மீறி பேசினால் நாத்திகவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு
விடுவோம் என்ற பயம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. பிள்ளையார் பால்குடித்தார்
என்று செய்தி பரவிய போது குடம் குடமாக பாலை கொண்டு போய் பிள்ளையாரிடம் கொடுக்கத்
தெரிந்த நமக்கு அதற்கான அறிவியல் காரணத்தை கண்டுபிடித்து தைரியமாக கூறமுடியவில்லை.
இல்லை இல்லை கண்டுபிடிக்க விடவில்லை
சமயங்களின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்கள்.
. நம் ஒவ்வொருவரின் பிறப்பிற்கும்
அவரவரின் செயல்பாட்டிற்கும் பின்னும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கவே செய்யும்
அதுதான் நம் படைப்பின் ரகசியம். தேவையான நேரத்தில் தேவைப்படும் இடத்தில் கொண்டு
சென்று நம்மை நிறுத்தி விடும் காலம். அப்போது காலம் இட்ட வேலையை பூரணமாக செய்து
முடிப்பதில் தான் நாம் பூமியில் வாழ்வதற்கான அர்த்தம்.
அழகு என்பது உடல் சார்ந்தது அல்ல.
மனம் சார்ந்தது நம் வாழும் வாழ்வியல் சார்ந்தது.
செய்யும் செயல்களும் எண்ணங்களும் அழகானால் நாமும் அழகாகத்தான் தெரிவோம். வளரும் பதிம வயதினர்கள் புறத்தோற்றத்திற்கு
எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அழகாக தெளிவுபடுத்தும் சிறுகதை
தீசசின் கப்பல். உன்னை நீ யாராக
பார்க்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்று தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நகரும் கதை.
வாழ்வின் சவால்களை அனைத்தையும் எதிர்கொண்டு அதை வெல்பவர்களே வாழ்வில் நிலையான
வெற்றியை பெற்று சாதிக்கிறார்கள்.
மரபணுக்களைக் கொண்டு புதிது புதிதாக பிரதிகளை எடுத்துக் கொண்டால் பிரபஞ்சம்
என்னவாகும். இக்கதைகளில் உள்ளவைகள் மாதிரி நடந்தால் எப்படி இருக்கும் என
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை ஆனால் அவை எல்லாம் நடைபெறும் காலம் மிக
அருகாமையில் தான் இருக்கிறது போலும்.
.
இருட்டில் வாழ்ந்த மக்கள் மின்சார விளக்கைக் கண்டுபிடித்த போது பயந்தது
போலவே இப்போதும் நமக்கு பயம் ஏற்படுகிறது.
விஞ்ஞான வளர்ச்சி காலப்போக்கில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அசுர
வளர்ச்சியாக தான் இருக்கும். மெல்ல மெல்ல
மக்களும் அதை ஏற்றுக்கொண்டு அவற்றோடு வாழ்ந்து அவர்களின் வாழ்வில் பிரிக்க
முடியாதாதாக மாறிவிடும்.
. மன்னர்கள் காலத்தில் இருந்த
சுரங்கப்பாதைகள் பற்றி நாம் அறிந்திருப்போம்.
ஆபத்துக் காலத்தில் மன்னர்கள் தப்பியோட ஒளிய அது உதவுவதாக
படித்திருக்கிறோம். அதுவே விஞ்ஞான
வளர்ச்சியான பிறகு ரகசிய அறைகளாக மாறி ஒரு கதவை திறந்தால் எடின்பருக்கும், மற்றொன்றைத் திறந்தால் ஹாங்காங்கும், மற்றும்
ஒன்றை திறந்தால் தஞ்சை பெரிய கோவிலும்,
இன்னும் ஒன்றைத் திறந்தால் திருத்தணி முருகன் கோவிலுமாக விஞ்ஞான
வளர்ச்சியில் விரிவடைந்து இருக்கிறது.
இயற்கையை நாம் படுத்தும் பாட்டை
பார்த்தால் நாளடைவில் உண்மையிலேயே பூமி நம் வாழ்வதற்கு இயலாத ஒரு தட்பவெட்ப நிலையை
அடைந்து விடும் போலும். பூனையற்ற புன்னகை சிறுகதையில் கூறியிருந்த விதம்
இப்படியும் நடந்து விடுமோ என்ற பயத்தை
ஏற்படுத்தி விட்டது.
நம் முன்னோர்கள் வாழ்வதற்காக கடினமான உடல்
உழைப்பை தந்தார்கள். அடுத்தடுத்து வந்த
தலைமுறையினர் உடல் உழைப்பை விட புத்திசாலித்தனத்துடன் கூடிய உழைப்பு போதும் என்று
நினைக்கத் துவங்கினர். நமக்கு அடுத்து
வரும் தலைமுறையினர் உடல் உழைப்பும் வேண்டாம்,
புத்திசாலித்தனமும் வேண்டாம் ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து அதன் மூலம் நாம்
முன்னேறி விட வேண்டும் என்று என்பதிலேயே முளைப்பாக இருக்கின்றார்கள் என்பதை அட்சய
பாத்திரம் சிறுகதையில் அச்சரம் பிசகாமல் அழகாக கூறியிருக்கிறார் ஆசிரியர்.
அனைத்து சிறுகதைகளுமே வளர் இளம் பருவத்தினர் படித்து அறிந்து நல்லவற்றை
பகுப்பாய்ந்து வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியை நல்ல விதத்தில் பயன்படுத்தினால்
நன்மையே விளையும்
. ஜெயா நவி
.
மரபணுக்கள் - விமர்சனம் - கோகிலவாணி
மரபணுக்கள் - விமர்சனம் - கோகிலவாணி
“மரபணுக்கள்” - ராம்பிரசாத் அவர்களின் பத்து
விஞ்ஞான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. “ஏழாம் அறிவு” போன்ற திரைப்படங்களின் வாயிலாக
மட்டுமே மரபணுக்களின் முக்கியத்துவம் பற்றி அறிந்த என் போன்ற அறிவியல் ஞானம் இல்லாதவர்களுக்கும்
மரபணு மாற்றங்களின் சாத்தியக் கூறுகளைக் கொண்டு எதிர்வரக் கூடும் சமூக மாற்றங்களைப்பற்றியும்
மேலும் மரபணுக்கள் பற்றியும், விண்வெளி, கிரகங்கள், ஆராய்ச்சிகள் பற்றியும் அறிந்து
கொள்ள ஆர்வமூட்டும் வகையில் கதைகளின் களமும் கருத்துக்களும் அமைந்துள்ளன.
“பிரதி எடுக்காதே”
நாட்பட்ட உறவுகளில் ஏற்படும் ஏமாற்றத்தை
மிலி மூலம் தெளிவாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார். விஞ்ஞானத்தின் உதவி கொண்டு மனிதனை
பிரதியெடுக்கும் இயந்திரம் மூலம் தீர்வு கிடைக்குமென யோசனை சொல்கிறான் மிலியன் காதலன்
கரீம்.
இயந்திரத்தின் மூலம் சூழ்நிலையை எப்படி கையாள்கிறார்கள்
என்று கதை விவாதிக்கிறது. எதிர்பாராத திருப்பங்களை உள்ளடக்கியுள்ளது.
“நீ என்னுடையவனா, அல்லது என் கவலைகள் மட்டுமே
என்னுடையதா” என்று கேட்கும் மிலியைக் கொண்டு அவர் பெரும்பாலான பெண்கள் வாழ்வில் சந்திக்கும்
ஏமாற்றத்தை கண்முன்னே கொண்டு வருகிறார்.
“சேஷம்”
கலப்பினங்கள் - பொருட்டு இதுகாறும் நமக்கிருக்கும்
புரிதலையும், வகைமைகளையும் தாண்டி வேறொன்றை நிருவுகிறார் ஆசிரியர்.
இக்கதையில் வேற்று விலங்கினங்களின் மரபணுக்களைத்
தாங்கும் மனிதர்கள் கலப்பினம் என அழைக்கப்படுகிறார்கள்.
வேறுபட்ட குணாதியங்கள் கொண்ட விலங்கினங்களின்
மரபணுக்களை மனிதக்கருவில் செலுத்துவதன் வாயிலாக அத்தகு குணாதிசியங்களை கொண்டு பிறக்கும்
மனிதர்கள் முறையான உடற்பயிற்சிகளைக் கொள்வதின்
மூலம், உறங்கிக் கொண்டிருக்கும் மரபணுக்களை உசிப்பி விடவும், மீண்டும் உறக்கத்திற்கு
கொண்டு செல்லவும் கூடும் என மரபணு பொறியியலின் சாத்தியக்கூறுகளை விவரிக்கிறார் ஆசிரியர்.
இதனை, “ஸ்டுவர்டை” நேசிக்கும் பெண் வாயிலாகவும்,
அவன் சிறைபட்டபின் அவளுக்குள் ஏற்படும் உளப்போராட்டங்கள்
வாயிலாகவும், அவளுக்கும் நீதிபதிக்கும் இடையேயான விவாதங்கள் மூலம் அறியலாம்.
எழுத்தாளர் அம்பை அவர்களின் ஒரு கதைகளுக்குள்ளேயான
கதையில் லக்ஷ்மிக்கு மட்டும் படுக்கையில்லாதது ஏன்? விஷ்ணுவில் காலடியிலேயே அமர்ந்திருக்கிறார்
என கேட்டிருப்பார். இக்கதையில் முடிவு எனக்கு
அதை நினைவூட்டியது. வெகு நுட்பமாய் எழுதியிருக்கிறார்.
“ஊரும் மனிதன்”
உடல்வளர்ச்சியாலும், குணாதிசியங்களாலும்
வேறுபட்ட மகனை கொண்ட தந்தை அவனை எல்லோரையும் போல இயல்பு நிலைக்கு கொண்டு வர மருத்துவங்கள்
பல மேற்கொண்டு தோற்றுப் போகிறார். இந்நிலை
அவனை குணப்படுத்த அமானுஷ்யம் நிறைந்த ஒரு நபரை சந்திக்க முயல்கிறார், அவரை சந்திக்க
முடிந்ததா, எவ்வாறான தீர்வு வழங்கப் பெற்றார் என்று கதை விவரிக்கிறது.
“சில பிரத்தியேக குணங்களுக்கு சில இழப்புகள்
தேவைப்படுகின்றன”.
“ஒரு பறவையாக சிட்டுக்கருவிகள் முழுமையடையவில்லை
என்று
ஏற்றுக்கொள்ள முடியுமா” என்பன போன்று பல வரிகளில்
இதுகாறும் நாம் கொண்டுள்ள எண்ணங்களின் கோணங்களை விரிவாக்குகிறார் எழுத்தாளர்.
“சரோஜாதேவி
புத்தகம்”
எங்கோ ஒரு காப்பகத்தில் வளரும் பையனுக்கு
முன்பின் அறியாத அவனது தாயை ஒத்த வயதில் உள்ள ஒரு பெண் மீது ஈர்ப்பு ஏற்படக் கூடுமா? என்றெண்ணி காப்பாளர், மனநல மருத்துவரை அணுகிறார்.
ஃப்ராய்டின் தத்துவங்கள், மரபணுக்களின் ஒற்றுமை, வேற்றுமை வாயிலாக என்ன நடந்திருக்கக்கூடும்
என கதை சொல்கிறது.
“பச்சிலை”
காடுகளின் மீது ஆர்வம் கொண்ட “ஜோஸ்” அமெரிக்காவில்
உள்ள அமேசான் காடுகளை பார்க்க எண்ணி, அதற்கு இணையாக உள்ள காடுகளில் ஒன்றை “வானதி”யின்
தேர்வுப்படி காண இருவரும் காட்டிற்கு செல்கிறார்கள்.
வழியில் “ஞானன்” தன் குடிலில் அவர்களுக்கு
உற்சாக பானம் அளித்து உபசரிக்கிறார். பின்னர் அவர்கள் காடுகளில் பயணிக்க நதி ஒன்றினை
கடக்க இயலாது வேறு வழியில் செல்ல வானதி ஜோஸை தேடி காண இயலாது ஞானனின் உதவியுடன் இருவருமாய்
ஜோஸைத் தேடுகிறார்கள்.
“ஜோஸ்” தன்னைத்தானே எடுத்துக்கொண்ட புகைப்படம்
ஒன்று கிடைக்கிறது. அதில் தெரியும் மரத்தினைக் கொண்டு மேலும் இருவரும் தேடுகிறார்.
அவர்கள் “ஜோஸை கண்டடைகிறார்களா? எப்படி கண்டடைகிறார்கள்
” என்பதை கதை வழி படிக்கையில் அமானுஷ்ய உணர்வை தவிர்க்க முடியவில்லை.
எப்போதும்
பெண்:
“பெண் ஏன் அடிமை ஆனாள்? பெரியார் சொன்னது
போலல்லாத வேறொரு கோணத்தில் துவங்கி, மரபணுப் பொறியியலில் உள்ளபடி இயல்பிலேயே பெண்களும்
ஆண்களும் தனித்தனியே சந்திக்கும் பிரச்சினைகளை மரபணுச் சேர்க்கைகளில் மாற்றம் மூலம்
தீர்வினை அறிய அஞ்சலியுடன் தாயான அபியும் (மனநல மருத்துவர்கள்) மரியமும் முயல்கிறார்கள்.
சோதனைகளின் போக்கினை கதைகளில் காணலாம்.
தழுவு கருவி
ராமயண காலங்களில், விமானங்கள் இருந்தனவா
அல்லது அத்தகு கற்பனைகள் தாம் விமானங்களை கட்டமைக்க உதவியதா என்ற ஐயம் எனக்கு அவ்வப்போது
ஏற்படும். இன்றைய கற்பனைகள் நாளைய கண்டுபிடிப்புகள்.
விண்வெளிக் கப்பல் மூலம் ஒருவன், கிரகங்களுக்கிடையே
நடத்தும் பயணமும், அக்கிரகங்களுக்கு தகுந்தாற்போல அவன் எவ்வாறு தகவமைத்துக் கொள்ள கூடும்
என பல ஆச்சர்ய கற்பனைகள் கொண்டுள்ளது கதை.
தன் பாட்டிக்கும் தனக்குமிடையேயான ஒற்றுமையும்,
அவள் பால்தான் கொண்டுள்ள ஈர்ப்பும், எவ்வாறு சிறை செல்கிறான் எப்படி மீள்கிறான் என
கதை இயம்புகிறது.
“உன் ஆழ்மனம் எப்போது விழிக்கிறதோ அப்போது
அது தன் இலக்கு நோக்கி செல்லத் துவங்குகறிது” “இசையில் தொலைவதும் இசைக்கு நிகரான சோடியாக்கில்
தொலைவதும் உனது பாட்டிக்கு ஒன்று தான்” என அவன் தாய் கூறுகிறாள்.
திரும்ப திரும்ப கேட்டு அவன் ரசிக்கும் பாட்டியின்
வக்கிரதூண்ட மகாகாய பாடல், சிறை செல்வது, தப்பிப்பது, கிரகங்கள் பயணம் எல்லாமே தற்செயலா?
கதையை வாசிப்பதன் மூலமே முழு அனுபவத்தை பெறலாம்.
கண்ணாடிச்சுவர்
க்ளாராவும் நான்சியும் உலகளவில் முதலில்
தோன்றிய உயிரணு பெண்ணாக இருக்கவேண்டும், பரிணாம வளர்ச்சி அதன்பிறகு எவ்விதம் தொடர்ந்தது
என்ன ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்கள். அவர்கள் பரிசோதனையில் கண்ணாடிச் சுவர்களினூடே
காண்பது என்ன?
ஏற்படும் பிறழ்வுகளின் பக்கவிளைவுகள் என்ன
என கதை இயம்புகிறது.
உயிரணுக்களில் துவங்கி பால்சார இனப்பெருக்கம்,
இயல்புநிலை மீறும் பொழுது சமூகம் அவர்களை பார்க்கும் கோணம் போன்றவற்றை பேசுகிறது கதை.
மாற்றுத்தீர்வு
எழிலும், உத்ராவும் ஆராய்ச்சி நிறுவனத்தில்
பணிபுரிகிறார்கள். மூலக்கூறு உயிரியல் படித்து பணியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள்,
சாகாவரத்திற்கான மருந்தை கண்டிப்பது நிறுவனத்தின் நோக்கம்.
இதற்காய் அவர்கள் செல்லும் வழியில் திருமய்யம்
கோயிலில் அவர்கள் உணரும் இனம்புரியா சலனம், தூணில் பொறிக்கப்பட்டுள்ள உருவம், அதைத்
தொடர்ந்து அவர்கள் செய்யும் பயணம், காட்டில் அவர்கள் சந்திக்கும் பெண் அவள் கூறும்
செய்திகள் சாகாவரத்திற்கான தீர்வை நோக்கி இட்டு
சென்றதா இல்லையா எனக் கதையில் காணலாம்.
சோஃபீ
நிறுவனம் தந்த கட்டாய பணி ஓய்வுக்கு பிறகு
பசுபிக் பெருங்கடலில் புதியதாய் உதயமாயிருக்கும் ஒரு தீவில் ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்
க்ளாரா.
போட்டிகள் நிறைந்த ஆராய்ச்சித்துறையில் ஒரு
புத்தம்புதிய ஆராய்ச்சியை யாரும் அறியாமல் குறிப்பாக யாரும் அதன் தகவல்களைப் பயன்படுத்தி
காப்புரிமையை அவர்கள் பெயரில் பதிந்து கொள்வார்களோ என தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு
இத்தகு தீவினைத் தேர்ந்தெடுத்து தனது ஆராய்ச்சியை மேற்கொள்கிறார். அவர் எவ்வாறு எத்தகைய
படிநிலைகளை கடந்து சோஃபியைக் கண்டடைகிறார்.
சோஃபியின் சக்தி என்ன என்பதை கதை நம் முன்னே
படம் பிடித்து காட்டுகிறது.
இயல்பாகவே மனிதர்கள் (சேப்பியன்ஸ்) கொண்ட
மரபணுக்கள் சூழலுக்குத் தகுந்தாற்போல் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்வதை பரிணாம வளர்ச்சி
என்று அறிகிறோம்.
மரபணு மாற்றங்களால் உருவாக்கப்பட்ட தாவரங்களின்
நன்மை, தீமைகளைப் பற்றி அறிவோம். மனிதர்களின் மரபணுக்களில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களைக்
கொண்டு சில சிக்கல்களுக்கு தீர்வுகாண இயலும் என்ற நேர்மறையான கருத்துக்களை இக்கதைகள்
தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
இத்தகு அறிவியல் பேசும் கதைகளை தமிழில் படித்ததில்லை.
வெகு குறைவே ஆயினும், படித்த கேட்ட, தமிழ் நூல்கள், உணர்வுகள், சமூக அலுவலங்கள், பொருளாதார
மேம்பாடு, மருத்துவம்,வரலாறு, தனிமனித மேம்பாடு ஆகியவற்றைப் பற்றி பேசியது.
விஞ்ஞான கதைகளில் மரபணுக்களை கருப்பொருளாகக்
கொண்டு, என்னை அதீத உணர்வுக்களுக்குள்ளாக்காது (நான் படித்த கதைகளினால் உணர்ச்சி வசப்படக்கூடிய
நபர்) நேர்மறை சிந்தனைகளைத் தூண்டி,மேலும் கற்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் கதைகளை
அமைத்தது சிறப்பு.
விஞ்ஞான கதைகளினுடே உள்ள மெய்ஞான தத்துவ
விசாரிப்புகள் இலக்கியம்.
இவ்வாறாக வெவ்வேறான கதைகளில், மரபணுக்களை
சாராம்சமாக கொண்டு, பிரதியெடுப்பது மரபணுக்களின் கட்டமைப்புகளால், ஏற்படக்கூடிய அல்லது
ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களுக்கான சாத்தியக் கூறுகளையும் கிரகங்களைப்பற்றியும், மரங்கள்,
காடுகள் பற்றியும் சாகாவரம் பற்றியும், நுட்பங்கள் வாயிலாக சுவாரசியமான கதைகள் தந்து
அனுபவங்களை பகிர வாய்ப்பளித்த ஆசிரியருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியுடன்
நவில்கிறேன்.