"இரண்டாம் அடுக்குப் பிழைத்தல் விதிகள்" சிறுகதைக்கெனவான புனைவுவனம் நேர்காணலில் நான் பகிர்ந்தவற்றை வைத்து ஒரு சிறிய Reel/shorts உருவாக்கப்பட்டிருக்கிறது. Reel/shorts உருவாக்கிய சரஸ்வதி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். பின் வருவது அதன் சுட்டி.
https://www.youtube.com/shorts/CWZ8H2Yzb1I
2016ல், அன்றைக்கு வழக்கிலிருந்த Dating Trend ன் அடிப்படையில் ஒரு புனைவு எழுதலாம் என்று அமர்ந்தபோது, பலவாறாக யோசித்ததின் பலனாக, முடிவில், "இதை ஏன் சமூகக் கதையாக எழுதவேண்டும்? இதற்கு வேறொரு வடிவம் தேவை" என்று உணர்ந்த போது, அது தானாகவே கணித ரீதியில் அமைந்த ஒரு நான்-லீனியர் கதையாக உருவெடுத்தது.
அதில் வரும் 100:93 விகிதாச்சாரம், அதன் அடிப்படையில், அமைந்த எஞ்சிய கணக்குகள் எல்லாமும் தானாகவே ஒரு நூல் பிடித்தார்போல் ஒரு வடிவத்தில் அமைந்தன. அப்படி எழுதியதுதான் "உங்கள் எண் என்ன?" நூல்.
போலவே, 'பிரதியெடுக்காதே' சிறுகதையும். ஆண்-பெண் இடையிலான ஒருவருக்கொருவர் பொறுந்திப் போதல் நிமித்தம் மேற்கொள்ளப்படும் முயல்வுகள், அதன் பின் விளைவாக எழும் சமூகக் குற்றங்கள், போதாமைகள், இயலாமைகள் ஆகியன குறித்து ஒரு கதை எழுத அமர்ந்து, பிறகு, இதை ஏன் சமூகக் கதையாக எழுத வேண்டும் என்று தோன்றியதன் பலனாகவே, அது அறிவியல் புனைவாக விரிவடைந்தது. பார்க்கப்போனால், ஆண்-பெண் உறவுச் சிக்கல்களின் 99% விழுக்காடு பிரச்சனைகளை ஒரு கழுகுப்பார்வையில் பார்த்திட ஒருவர் இவ்விரண்டு ஆக்கங்களையும் வாசித்தால் மட்டுமே போதும். (இதன் பொருள், மற்ற/மற்றவர் ஆக்கங்களை வாசிக்க வேண்டியதில்லை என்பதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். நான் அந்த அர்த்தத்தில் இவ்விதம் சொல்லவுமில்லை. தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.)
பல சமயங்களில், பல சமூகப் பிரச்சனைகளைக் குறித்து யோசித்தால், இயல்பாகவே, அது ஒரு அறிவியல் புனைவுக்கே என்னை இறுதியில் இட்டுச்சென்றுவிடுகிறது. 2020 துவங்கி, இப்படித் தோன்றி எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்த தொகுப்பாகத்தான் 'மரபணுக்கள்' தொகுப்பு உருவாகியது எனலாம். 'மரபணுக்கள்' தொகுப்பை வாசியுங்கள் என்று நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவைகள் தொடும் சமூகப் பிரச்சனைகள் ஏராளம். 'பிரதியெடுக்காதே' சிறுகதை தான் 'மரபணுக்கள்' தொகுப்பின் முதல் கதை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.