என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 26 February 2025

தீசஸின் கப்பல் - விமர்சனம் - யாழ் துருவன்

 # வாரமொரு வாசிப்பு 

நூலின் பெயர் : "தீசஸின் கப்பல்" 

ஆசிரியர் : ராம் பிரசாத் 

பதிப்பகம் : படைப்பு 

வகைமை : சிறார் இலக்கியம் 

பக்கம் :134

விலை :190 ரூபாய் 


பார்த்ததுமே எடுக்கத் தோன்றும் ஒரு அழகிய வடிவமைப்புடன் கூடிய சிறார் இலக்கிய வகையிலான 10 கதைகளை கொண்டது நூல் : "தீஸஸின் கப்பல்".

கதையாசிரியர் -"ராம் பிரசாத்".


சிறு பிள்ளைகளுக்கான கதையில்... சரியளவு அறிவியலும் கலந்து வந்திருக்கும் சிறுகதைகள் கொண்ட நூலில்.. முதல் கதையாக 


"குளம்"


தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள "தள்ளாகுளம்"கிராமத்தின் குளம் ஒன்று திடீரென கருப்பாக மாறி, கரும்பள்ளம் ஒன்று உருவானதாக வந்த செய்தியைக் கேட்டு, ராஜீவ், தியாகு என்ற இரண்டு இளைஞர்கள், அந்த கிராமம் நோக்கி செல்கிறார்கள்.


இந்த செய்தி, பெரும் பரபரப்பாக, அந்த ஊரை நோக்கி படையெடுக்கிறது ஊடகங்கள்.ஊரில் தெய்வக்குத்தம் நடந்ததாக சாமியாடிகள் ஆரூடம் சொல்ல, ராஜீவ், தியாகு இருவரும் கிராமம் முழுக்க அலைந்து,குளம் கருப்பான காரணத்தை, அறிவியல்பூர்வமாக அணுகி,

கண்டுபிடித்து.. சரி செய்கிறார்கள்.


நாம் வாழ்வது நிஜ உலகிலா,பாவனை நிரல்(simulation) உலகிலா எனும் பெரும் வாதம் இருவருக்குள்ளும் நடக்க,

எதிர்கால மனிதர்கள்.

பாவனை நிரல்(Simulation ),

விண்மீன்களுக்கிடையில் பயணித்தல்,

ஒளியின் வேகம்,என்று அதீத அறிவியல் பேசி, கடைசியில் பொதுமக்கள் அந்த குளத்தில், நீர் எடுப்பதாக, சிறுவர்கள் குதித்து, குளிப்பதாக முடிகிறது கதை..


இரண்டாவது கதை 

"தீஸஸின் கப்பல்"..

"எப்பி", "நியாலத்தே"... எனும் இரண்டு பெண்களுக்கு இடையே நகரம் கதை..

விளையாடும் வேளையில் "நியாலத்தே"க்கு முகத்தில் காயம் பட, மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறாள். முகத்தில் தழும்பு நிரந்தரமாய் போகாது என மருத்துவர் சொல்ல, அழகிப் பட்டம் பெற்ற "நியாலத்தே" வருத்தப்பட, "நாதன்" எனும் விஞ்ஞானி சோதனை முயற்சியில் வைத்திருக்கும் "தீஸஸின் கப்பல்" எனும் எந்திரத்தின் மூலம், இவளின் திசு மாதிரியைக் கொண்டு இவளின் பிரதியை உருவாக்க முயல,அப்படி உருவாக்கிய பிரதி தான் உண்மையான "நியாலத்தே", இப்போதிருப்பவள் தான் பிரதி என்ற திருப்பத்துடன், அதன் பின் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள் தான் இந்த கதை..



அடுத்ததாக "உச்சம்" எனும் சிறுகதை.

தியாகு, சுனில் எனும் இரு மாணவர்கள்.

அவர்களின்  வசதியான நண்பன், நசீரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதில் தொடங்குகிறது கதை.

நண்பன் சுனில், மது அருந்த கூப்பிட, தியாகு மறுத்து, தனியே போக, ஏகப்பட்ட குழப்பத்தில் இருக்கும் தியாகுவுக்கு முன்னால், எதிர்காலத்திலிருந்து வயதேறிய தியாகு வர,அவன் மூலம் தன்னைத் தானே தெரிந்து கொள்ளவதாக தொடரும் இந்த கதை.. அதீத சுவாரஷ்யம் நிறைந்த கதை...


"திறன்களின் சிகரம் "

சர்வதேச கணிதப்போட்டி,அதில் கலந்து கொள்ள போகும் பள்ளியின் அணிக்கு தலைமை தாங்க இருப்பவரை தேர்வு செய்ய, காகிதத்தில் எழுதும் மையின் ஈரத்தை வைத்து நேரத்தை கணக்கிட்டு

அதன் மூலம் வெற்றியாளரை தேர்வு செய்வது என வித்தியாசமாக தொடங்குகிறது கதை..

"திறன்களின் சிகரம் " எனும் போட்டியில் 

"டாரட்  நாட்டு குழு தொடர்ந்து வெற்றி பெற, இந்த ஆண்டு தன் பள்ளி வெற்றி பெற வேண்டும் என தலைமை ஆசிரியர் " வேணுகோபால் " விரும்ப, அதற்கான முனைப்போடு, இந்த குழு என்ன செய்தது என்பதை விவரிக்கிறது இந்த கதை....



"மனக்கணக்கு "

இந்தக் கதை நடப்பது 23-ம் நூற்றாண்டு.

"குவாண்டம் பிணைப்பு வகுப்பு ",

அயல் கிரக மாணவர்களுடன் சேர்ந்து பயிலும் ஹரி, அதை விரும்பாத அவனது அண்ணன் கார்த்திக்... இப்படி கதையின் களமே வித்தியாசம்..

இந்த கதையில், மனித இனம், சனியின் டைட்டன் கிரகம் வரை பரவியிருக்கிறது.

இப்போது நாம் போட்டு பார்க்கும் "FLAMES", 23 ம் நூற்றாண்டில் 

"மரபணு சாளர அட்டவணை யாகி மாறி இருப்பதாக சொல்லுமிடமும்,அவனது தோழிகள், செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக சொல்வதும் அதீத சுவாரஷ்யம்.



" இந்த பிரபஞ்சத்தில் "

"சந்தீப்" எனும் இளைஞன்.. அடுத்து என்ன படிக்க எனும் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும், ஒவ்வொன்றை தேர்ந்தெடுக்க, அதன் பின் அவன் என்னவானான் என விவரிக்கிறது இந்த கதை...

ஒரு பிரபஞ்சத்தில்,அடுத்து என்ன படிக்க என்று எட்டு வாய்ப்புகள் தரும் தந்தை.. வாய்ப்புகளில் "தமிழ் படிக்க வேண்டும் " என்பதை தேர்வு செய்த சந்தீப். அப்படி தமிழ் படித்ததால், வேலைவாய்ப்பு ஏதும் இல்லாமல், பல்வேறு கஷ்டங்களை கடப்பதும், கடன்படுவதுமாக செல்லும் இந்த கதை, "கற்றது தமிழ் " திரைப்படத்தை நினைவு படுத்தியது.

அடுத்து, விளம்பர மாதிரியாக,

அதற்கடுத்து, கணக்காளனாக.. என பல பிரபஞ்சங்கள் கடந்து விரிகிறது இந்த கதை...



"அடையாளத் தேர்வு "

மணிவேந்தன், வெழிலன்.. எனும் அழகிய தமிழ் பெயரோடு உலவும் 

கதை மந்தர்கள்.

க்ளோனிங்,

புற ஊதா இமேஜர், பிளாஸ்மா, இப்படி அதீத அறிவியல் பேசும் கதை.

நினைவுகள் சேகரிப்பு, அதன் பிரதி,

வெழிலன்-2,அவனின் செயல்பாடு என.. ஆங்கில படத்திற்கு இணையான கற்பனையோடும், தகவல்களோடும் 

பயணிக்கும் ஒரு வித்தியாச கதை இது..



"ரகசியம்"

நியூயார்க் நகரில் வசிக்கும், ஒரு 16 வயதுடைய, பெண் பற்றியும், அவளது மன ஓட்டங்களுடனும் தொடங்குகிறது கதை..

ஸ்டெஃபானி எனும் பெண்ணுக்கு, பெண்களுடன் மட்டும் பழகி வெறுத்துப் போய் விட, ஆண்களுடன் பழகி அவர்களின் உலகம் குறித்து அறிந்து கொள்ள முயன்று, அதனால் ஏற்படும் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக சென்று முடிகிறது, கதை..



"பூனையற்ற புன்னகை "

பூமி, மனிதர்கள் வாழ முடியாத மலட்டு கிரகமாக மாறிப்போக, இந்த பூமியை விட்டு கடைசி மனிதக் கூட்டம், வேறு கிரகம் நோக்கி பயணிக்கிறது..

இதன் நடுவே, சர்ப்பம், வவ்வால் என பல்வேறு விலங்குகள் குறியீடுகளாக வந்து போவதோடு தொடர்கிறது இந்த கதை...


இப்படியாக, 10 கதைகள், பல்வேறு பாதையில், பல்வேறு பார்வையில், பயணிக்கிறது.அளவில்லா கற்பனைகளோடு நம்மை கலந்தும், கரைந்தும் போகச் செய்கிறது இந்த கப்பல்...


இப்படி ஒரு கப்பலினை, கற்பனையில் உருவாக்கிய, எழுத்தாளர் ராம் பிரசாத் அவர்களுக்கு எனதன்பும், என் வாழ்த்துகளும்...


          வாசிப்பின் மகிழ்வில் 

          - வினோத் பரமானந்தன்..— with Ram Prasath.