என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 31 August 2025

சமீபத்திய சிறுகதைகளுக்கு வந்த பின்னூட்டங்கள்

சமீபத்திய சிறுகதைகளுக்கு வந்த பின்னூட்டங்கள்:

அறுதி விடியல்:

https://solvanam.com/2025/08/10/%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/


டோரோத்தி:

https://vasagasalai.com/116-story-ram-prasad/

பின்னூட்டமிட்ட அறிவியல் புனைவு வாசகர்களுக்கு எனது நன்றிகள் 🙏🙏🙏 






Sunday, 24 August 2025

துரதிருஷ்டம் - சிறுகதை - சொல்வனம்

சொல்வனம் 349வது இதழில், எனது சிறுகதை 'துரதிருஷ்டம்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.

சிறுகதையை வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:

https://solvanam.com/2025/08/24/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/




வாசகசாலை 116வது இதழ் சிறுகதைகள்

 வாசகசாலை 116வது இதழ் சிறுகதைகள்

******************************************


ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெளியாகியிருக்கிறது வாசகசாலையின் 116வது இதழ்.

ஜெயபால் பழனியாண்டி எழுதியிருக்கும் பூச்செடி, ஒரு ஃபீல்-குட் கதை. பூச்சி ஒன்று இறந்து போகிறது. இரண்டு பெண் பிள்ளைகள் அதனை அடக்கம் செய்யும் காட்சிதான் கதை. சிறார்களுக்கே உரித்தான காட்சிகளோடு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது கதை. 

//மரணத்திற்குப் பிறகும் குழந்தைகளால் கொண்டாடப்படுகிறோம் என்பதை அறியாமலேயே மரணித்துப் போகின்றன பூச்சிகள்// என்று முடிக்கிறார் ஆசிரியர். 


*****************************

மொட்டு மலர் அலர் சிறுகதையில் ஆசிரியர் கமலதேவி கிராம வாழ்வை அப்படியே நம்மை வாழ வைத்திருக்கிறார். வாசிக்க வாசிக்க, கிராமத்தில் நாமும் ஓர் அங்கமாகவே ஆகிவிட்ட ஒரு உணர்வு எஞ்சுகிறது. சிரமேற்கொண்டு நேரமெடுத்து காட்சிகளை வர்ணிக்க உழைத்திருப்பது கதையை வாசிக்கையிலேயே தெரிகிறது. 



*****************************

பாலு எழுதியிருக்கும் 'மரணத்துளிகள் பல கேள்விகளை எழுப்பியது. உண்மையாகவே இப்படி ஒரு  சுகவீனம் இருக்கிறதா? இப்படி சுகவீனப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களா? அப்படி ஒரு சுகவீனப்பட்ட பெண்ணின் குடும்பம் எப்படிப்பட்ட துன்பங்களுக்கு உள்ளாகும் என்கிற ரீதியில் அமைந்த விவரணைகள் கதையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றுவிடுகின்றன.  இறுதியில் கதையின் திருப்பமும் அருமை.


*****************************

இராஜலட்சுமி எழுதியிருக்கும் தெய்வானை சிறுகதையும் கிராமப் பின்னணி கொண்ட சிறுகதைதான். கதாபாத்திரங்களின் இயல்பில்,   தெய்வானைக்கு இறுதியில் என்ன நடக்கிறதோ  அது மட்டும் தான் நடக்க முடியும் என்ற ஸ்திதி இருப்பது சிறப்பாக இருக்கிறது. கிராமங்களில் இப்படித்தான். //இதுக்கு நல்லது கெட்டது பாத்துச் செய்ய யாருமில்லாமதான்...// இப்படி எல்லா தலைமுறைகளிலும் யாரேனும் சொல்லப்படுவார்கள் என்பது உலகமே அறிந்த ரகசியம் தான்.  இது நிச்சயமாக சமூக அமைப்பின் தோல்வி தான். இல்லையா?


*****************************

தாழப்பறா சிறுகதை வெள்ளிப்பட்டறையில் ஊத்து வேலைக்கு வரும் ஒருவர் பற்றிய கதை. பற்பல வேலைகள் செய்துவிட்டு எதிலும் லயிக்காமல் வேலை மாறிக்கொண்டே வருகிறார். வெள்ளிப்பட்டறை வேலைகள் குறித்த விவரணை எனக்குத்தான் புரியவில்லை.கதாசிரியர் கவனத்துடன் எழுதியிருப்பதாகத்தான் தெரிகிறது. 

*****************************


இதிரிஸ் யாகூப் எழுதியிருக்கும் அமானிதங்கள் ஒரு இஸ்லாம் மதத்தைச் சார்ந்த குடும்பமொன்றில் சகோதரிகளின் திருமணத்தின் நிமித்தம் அல்லலுறுபவனின் இக்கட்டை காட்சிப்படுத்துகிறது. பேச்சுவழக்கிலான உரையாடல்கள் அருமை. கபால், கல்பை வாஜிபாயிருச்சி, அஸர் ஆகிய வார்த்தைகள் எனக்குப் புதிது.

இப்போதைக்கு இவ்வளவு தான் வாசிக்க  நேரம் கிட்டியது. எஞ்சிய சிறுகதைகள் வாசித்ததும் எழுதுகிறேன். 

Friday, 22 August 2025

எரியும் பனிக்காடு - இரா முருகவேள்

எரியும் பனிக்காடு - இரா முருகவேள்


இப்படித்தான் அந்த நூல் எனக்குப் பரிச்சயம் ஆனது. இரா.முருகவேள் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.  இந்த நூலை முழுமையாக வாசிக்க எனக்கு நேரம் அமையவில்லை. ஆனால், பகுதியாக வாசித்திருக்கிறேன். அந்த வாசிப்பனுபவம் எனக்குத் தந்தவைகள் எழுத்து குறித்த எனது புரிதலை மேம்படுத்திக்கொள்ள உதவின என்றால் அது மிகையில்லை. 

'எரியும் பனிக்காடு' நாவல் , PH Daniel அவர்கள் எழுதிய 'Red Tea' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு என்பது முதல் தகவல். 1941 முதல் 1965 வரை, அவர் தேயிலை தோட்டங்களில் மருத்துவராய் வேலை செய்த போது,   தான் கண்டுணர்ந்த தேயிலை தோட்டத்துப் பணியாளர்களின் வாழ்வை இந்த நூலில் பதிவு செய்கிறார்.

இதில் எனக்கு எழுந்த கேள்வி, ஒருக்கால், இந்த டேனியல் என்பவர் எழுத்தில் ஆர்வம் இல்லாத, அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த பல மருத்துவர்கள் போல் இருந்திருப்பாரேயானால், நமக்கு ரெட் டீ  நூல் கிடைத்திருக்காது. இல்லையா? 

1941 முதல் 1965 வரை வாழ்ந்த எத்தனை மருத்துவர்களுக்கு, தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய வாய்ப்பமைந்தது? அவர்களில் எத்தனை பேருக்கு எழுத்து வசப்பட்டிருந்தது? அவர்கள் எல்லோருக்கும் ரெட் ரீ நாவல் எழுதத் தோன்றியதா? அப்படித் தோன்றியிருந்தால் இத்தனை நேரம் நமக்கு பல வெர்ஷன்களில் தேயிலைத் தோட்டத்துப் பணியாளர்கள் குறித்து கதைகள் கிடைத்திருக்க வேண்டுமே? அப்படி இல்லையே. ஆக, ரெட் டீ நூலை உருவாக்க, இந்த இயற்கை வலிந்து, எழுத்தில் ஆர்வம் உடைய ஒரு மருத்துவரை இக்காலகட்டத்தில் கச்சிதமாக அஸ்ஸாமுக்கு அனுப்பியிருக்கிறது என்று தான் அர்த்தமாகிறது. அல்லவா? இதன் பின்னால் ஒரு துல்லியம், ஒரு நைச்சியமான திட்டமிடல், மற்றூம் அபாரமான ஒருங்கிணைப்பு இயற்கையால் உருவாக்கப்பட்டிருப்பதை நாம் கவனிக்கலாம்.  

அப்படியானால், இது கடவுளின் செயல் அன்றி வேறென்ன? வேறு எப்படி இதனை அடையாளப்படுத்த முடியும்? வேறு எப்படி அடையாளப்படுத்தினால் இது பொறுத்தமாக இருக்கும்?

இந்தக் கேள்வி, எழுத்து என்கிற இலக்கிய செயல்பாடு குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள வைத்தது எனலாம். இந்தப் பின்னணியில், நான், எழுத்துத் துறையில், முதன்மையானவர், இரண்டாமவர், மூன்றாமவர் என்கிற வரிசைகளையெல்லாம் முழுமையாக துவக்கம் முதலே மறுக்கிறேன். 

இயற்கையின் தேர்வு, அதற்கான நோக்கம் , அதன் தொலை நோக்கிய பயன்பாடு ஆகியனவே ஒரு எழுத்தின் இருப்பின் பின்னணிக் காரணிகளாகின்றன என்பது என் அவதானம். இதைத் தாண்டி எழும் வேறு எந்த விதமான புரிதலும், குறை புரிதலே அல்லது முதிர்ச்சியற்ற புரிதலே என்பது என் வாதம். எழுத்து வசப்பட்ட எல்லோரும் எதையோ ஒன்றை ஆவணம் செய்யவே உருவாகிறார்கள். அவர்களை வைத்து, இயற்கை, தான் செய்ய நினைப்பதைச் செய்து முடிக்கிறது. எல்லா எழுத்தின் பின்னாலும் இருப்பது இயற்கையின் ஆற்றல் மட்டுமே, இறை சக்தியின் ஆற்றல் மட்டுமே.

மெளனி 24 கதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். வொல்ஃப் டொடெம் எழுதிய ஜியாங் ராங்க் அந்த ஒரு நூல் மட்டும் தான் எழுதினார். ஆக, எழுத்தாளர்களை இயற்கை எந்தக் காரணத்திற்காக அனுப்புகிறதோ அந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். அதற்கான உத்வேகம், ஆற்றல், முனைப்பு, பைத்தியக்காரத்தனம், பித்து நிலை,  ஆகியனவற்றை இயற்கை, ஒரு சிற்பி மிகக் கவனமாகத் தன் சிற்பத்தை மிக மிகத் துள்ளியமாகச் செதுக்குவது போல், காரணிகளை உருவாக்கி, சூழல்களைச் செதுக்கி, எழுத்தாளர்களை அதனூடே பயணிக்க வைத்து செதுக்குகிறது. எழுத்தாளன், ஒரு கருவியாய் அவைகளினூடே பயணித்து மீண்டு தனக்கு இயற்கையும், இறை சக்தியும் விதித்த கட்டளைகளை நிறைவேற்றுகிறான். அவ்வளவுதான். 

எப்படியாகினும், மூலம், இறைவனுடையது. எழுத்தாளன் என்பவன் வெறும் கருவி என்பது என் வாதமாகவும், பார்வையாகவும் ஆகிறது. சில விடயங்கள் மாறப்போவதில்லை என்பதை நம் உள்ளுணர்வு சொல்லிவிடும். இந்தப் புரிதல், இனி என்னுள் மாறப்போவதில்லை என்பதை அந்த நூலைக் கடக்கையில் உள்ளுணர்வு சொல்லிவிட்டிருந்தது.





 

Sunday, 17 August 2025

அரதப்பழசு

 பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் என்று அறிவியல் உலகில் பரவலாக ஒரு கருத்து உண்டு. ஆம். கணக்குகளின் பிரகாரம் அது அவ்விதம் தான். இதன் அடிப்படையில் தான் Big Bang Model

முன்வைக்கப்படுகிறது.

ஆனால், இந்தக் கருதுகோளில் கல்லெறியும் வகையில், பிரபஞ்சத்தின் மிக மிகப் பழமையான நட்சத்திரம் HD 140283ன் வயது 14.5 பில்லியன் ஆண்டுகள் என்று கணித்திருக்கிறார்கள். தூக்கிவாரிப்போடுகிறது இல்லையா?

ஆம். லிப்ரா நட்சத்திரக்கூட்டத்தில் தான் இருக்கிறது இந்த அரதப் பழசான நட்சத்திரம். இதற்கு ஒரு செல்லப்பெயரும் உண்டு. "Methuselah".

வானிலை ஆராய்ச்சியில் இது ஒரு பாராடாக்ஸ் என்கிறார்கள். தூரக் கணக்கிடல், வேதியியல் காரணிகள், மற்றும் வானியல் மாதிரிகள் ஆகியவற்றை வைத்து நாம் வயதைக் கணக்கிடும் அளவீடுகளில் ஏற்படும் சன்னமான குறை, இந்த வித்தியாசத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினாலும், இப்போதுவரை எவ்விதமான வலுவான காரணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இத்தனைக்கும் இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் தான் உள்ளது. இவ்வளவு பக்கத்தில் இருக்கிறதே அப்படியானால், பூமியும் அத்தனை பழசானதா என்றால், அதுதான் இல்லை. பூமியின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள் என்று தான் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது இந்த அரதப்பழைய நட்சத்திரம் உருவாகி சுமார் பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தான் பூமி உருவாகியிருக்கிறது.



 

Sunday, 10 August 2025

அறுதி விடியல் - சிறுகதை

 சொல்வனம் 348வது இதழில், எனது சிறுகதை 'அறுதி விடியல்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.


சிறுகதையை வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:

https://solvanam.com/2025/08/10/%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/