என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 18 April 2025

வேற்று கிரகத்தில் உயிர்கள்

வேற்று கிரகத்தில் உயிர்கள்


K2-18b கிரகம் இருப்பது 124 ஒளி ஆண்டுகள் தொலைவில், அதுவும் leo நட்சத்திரக் கூட்டத்தில்.

இந்தக் கிரகம் இப்போது இணைய வெளியில் பேசுபொருளாகியிருக்கிறது. ஏன் தெரியுமா? ஒரு இந்திய ஆராய்ச்சியாளரால், K2-18b கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரமான DMS அதாவது dimethyl sulphide கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக உலவும் செய்திகள் இன்றைய முகநூல் வெளியை ஆக்ரமித்திருக்கின்றன. 

கண்டு சொன்னவர் ஒரு இந்தியர் என்பதுவும், இந்தச் செய்தி வைரல் ஆனதற்கு ஒரு காரணம்.

உடனே இணையமெங்கும் fermi paradoxக்கு பதில் கிடைத்துவிட்டது, K2-18b கிரகத்திற்கு probe அனுப்ப முடிவு செய்திருக்கிறது நாசா என்றெல்லாம் சூடாக செய்திகள் பரவத் துவங்கிவிட்டது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம், 124 ஆண்டுகளுக்கு முன்னான ஒளியை வைத்துக்கொண்டு, இப்போதே நல்ல நிலையில் இருக்கும் பூமியை சரிசெய்வதை விட்டுவிட்டு, புதிய கிரகம் எப்போது தாவலாம் என்று ஆளாய்ப் பறக்கிறார்கள் என்று கேலியும் கிண்டலும் கூட இணையத்தில் அதிகம் காண முடிகிறது.


முதலில் ஒன்றைத் தெளிவாகப்பார்த்துவிடலாம்.

DMS எனப்படும் dimethyl sulphide மட்டுமே உயிர்கள் இருப்பதற்கான ஆதாரமாகக் கொண்டு விட முடியாது. அது, உயிர்கள் இருப்பதால் மட்டுமே வெளியிடப்படும் வேதிப்பொருள் இல்லை. இந்த வேதிப்பொருள் இயற்கையான முறையிலும் வெளியாகலாம். இதே வேதிப்பொருள் 67P/Churyumov-Gerasimenko காமட்டில் கூட கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அங்கே உயிர்கள் என்று எதுவும் இல்லை. ஒரு நட்சத்திரத்தின் ஃபோடான்கள், கிரகத்தின் வான்வெளியில் உள்ள வேதிப்பொருட்களுடன் மோதுகையில் கூட DMS வெளிப்படுகிறது என்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். ஆக, DMS இருப்பதே உயிர்கள் இருப்பதற்கான சமிஞை என்று எடுத்துக்கொள்ள முடியாது என்பதே அறுதி உண்மை. 

நமக்குத் தொடர்ந்து தகவல்கள் தேவை. அது தற்போது நம்மிடம் இல்லை. அதற்கு இன்னும் மென்மேலும் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு இன்னும் அதிகம் செலவாகும். இன்றோ நாளையோ சாத்தியப்பட்டுவிடும் காரியம் அல்ல. ஒளி ஒரு நொடியில் சென்றடையும் தூரமான சனிக்கிரகத்திற்கு,  நம்மிடம் இருக்கும் அதி வேகமான விண்கலன் செல்ல சுமார் ஏழு வருடங்கள் ஆகும். உதாரணம்: Cassini. இதுதான் நம்மிடம் இருக்கும் உச்ச  தொழில் நுட்பத்தின் வேகம்.

அப்படியிருக்கையில், 124 ஒளி ஆண்டுகள் தூரத்தை நாம் சென்றடையத் தேவையான தொழில் நுட்பம் இன்னும் சில தலைமுறைகளுக்குக் கூட சாத்தியமில்லை. ஒருக்கால் இன்னும் இருபது ஆண்டுகளில் அதை மனித இனம் செய்துவிடமுடியும் என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டாலும், அதுவரை  நம் பூமி, குறைந்தபட்சம் இப்போது இருப்பதைப் போல, தொடர வேண்டும். அதுவே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதுதான் நிதர்சனம். ஆகையால், நாம் எல்லோரும் தரையில் நடப்போமாக.


Monday, 14 April 2025

மரபணுக்கள்- அறிவியல் கதைகள் - Boje Bojan

மரபணுக்கள்- அறிவியல் கதைகள் - Boje Bojan


மரபணுக்கள் - ராம் பிரசாத் - அறிவியல் சிறுகதை தொகுப்பு - பதிப்பகம் , படைப்பு - பக்கங்கள் 131- முதல் பதிப்பு 2024

மரபணுக்கள்- அறிவியல் கதைகள் 




ஆசிரியர் பற்றி :

எழுத்தாளர் ராம் பிரசாத் தற்கால இளம் அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர் பல அறிவியல் கதைகள் சிறுகதைகள் புனைவுகள் ஆகிவற்றை எழுதிஉள்ளார் . ஏற்கனவே இவர் எழுதி இருக்கும் வாவ் சிக்னல்  மற்றும் புரதான ஏலியன் நூல்கள் புகழ் பெற்றவை அதிலும் வாவ் சிக்னல் பாராட்டு மற்றும் விருது பெற்ற நூல். தமிழ் மட்டும் இல்லாமல் ஆங்கிலத்திலம் இவரது புத்தகங்கள் இருக்கின்றது.

புத்தகம் பற்றி :

மொத்தம் 10 தலைப்புகளில் 130 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் ஆசிரியர் எழுதிய மற்ற புத்தகங்களில் இருந்து வேறு பட்டு நிற்கிறது. அதற்கு காரணம் பொதுவாக அறிவியல் கதை எழுதும் எழுத்தாளர்கள் பலவேறு தலைப்புகளில் இருந்து பல சிறுகதைகளை தொகுத்து ஒரு நூலாக எடுத்து வருவார்கள் . ஆனால் இந்த புத்தகத்தை பொறுத்த வரை எல்லாமே மரபணு அதாவது gene என்ற ஒற்றை கருவை வைத்து கொண்டு 10 விதமான கதைகளை சொல்லி இருக்கிறார். இதற்க்கே ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டு சொல்ல வேண்டும். 

"Genes are not our fate, but they are our starting point. The choices we make shape our destiny."

என்ற ரிச்சர்ட் டார்க்கின் வரிகளுக்கு ஏற்ப மரபணுக்கள் பற்றி பேசி இருப்பதே இது நூலின் முக்கியமான பலமாகும். ஒவ்வொரு கதையிலும் மரபணு தொடர்பான விஞ்ஞான தத்துவங்கள் மட்டுமின்றி, அதனால் மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் உணர்வுப்பூர்வமான கோணத்தில் பேசப்படுகின்றன.

இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் சிலவற்றை பார்ப்போம் 

ஷேசம்:


பொதுவாக ஒரு ஆணும் பெண்ணும் சேரும் போது குழந்தைகளுக்கு அவர்கள் ரெண்டு பேரின் மரபணு தான் வரும் ஆனால் எதிர் வரும் காலங்களில் modified genetic என்ஜினீயர் மூலம் வேறு ஒருவர் மரபணுவோ அல்லது விலங்குகளின் மரபணுக்கள் மனித குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் விருப்பம் உடன் செலுத்த முடியும். அப்படி பட்ட கதை தான் இது கதை படி நாயகன் steward க்கு ஷேசத்தின் அதாவது பாம்பின் மரபணு செலுத்த பட்டு இருக்கும். அதனால் அவன் கண்கள் மனிதன் கண்கள் போல் இல்லாம பாம்பின் கண்கள் போல் இருக்கிறது இதனால் ஏற்படும் விளைவு என்ன. இதை தீர்க அவனது காதலி எடுக்கும் முயற்சி என்ன. கடைசியில் என்ன நடந்து என்பதை படிக்க படிக்க விறுவிறுபாக இருக்கிறது.


சரோஜாதேவி:


பொதுவாக சரோஜா தேவி என்ற பெயர் சற்று சர்ச்சையான பெயராக இருந்துஉள்ளது. அது ஏன் அதற்கு இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை புத்தகம் படித்த பிறகு புரிந்து கொள்ள முடியும். ஒரு விதத்தில் எழுத்தாளர் ராம் அவர்களை பாராட்டி ஆக வேண்டும். சற்று மாரி இருந்தாலும் கதை கருவே மாரி இருக்கும். அப்படி இல்லாமல் சரியாக கதை சொல்லி இருக்கிறார்.

கதையின் கரு ஒரு அனாதை விடுதியில் மன்சூர் என்ற பையனை சோதிக்க ஒரு மனநல மருத்துவர் ஒருவரை அழைத்து வருகிறார்கள். யார் அந்த பையன்? ஏன் அவனுக்கு சிகிச்சை அதன் பின் நடந்தது என்ன என்பதை அறிவியல் ரீதியாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

பச்சிலை & மாற்று தீர்வு

இந்த இரண்டு கதைகளும் தனித்துவம் கொண்டவை. அறிவியல் சார்ந்த ஆழமான கருத்துக்கள், விறுவிறுப்பான கதைக்களம் ஆகியவை வாசகர்களை ஈர்க்கும்.


கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.


Friday, 11 April 2025

மரபணுக்கள் - ஸ்ரீநிவாஸ் பிரபு - நூல் விமர்சனப் போட்டி 2025

மரபணுக்கள் - ஸ்ரீநிவாஸ் பிரபு


நூல் விமர்சனப் போட்டி 2025

மரபை முன் மொழியும் மரபணுக்கள்
வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் மனிதர்களுக்கு ஒரே கணத்தில் நிகழ்ந்து முடிந்து விடுகின்றன என்றாலும், நிகழ்வுகள் குறித்தான நினைவுகள் மட்டும் காலம் முழுமைக்கும் மனதில் பொங்கிப் பிரவாகமாக அலையடித்துக் கொண்டே இருக்கும். அப்படியான அலையாக ராம் பிரசாத்தின் மரபணுக்கள் (வாவ் சிக்னல் – II விஞ்ஞான சிறுகதைகள்) சிறுகதைத் தொகுப்பு நூலும் எதிர்ப்படுகிறது.
மரபணுக்கள் தொகுப்பில் பொதிந்த எழுத்தும் உரை நடையும் விஞ்ஞானத்தின் துணையோடு கதைகளாக எதிர்ப்படுவதோடு தொன்மம், வரலாறு, பண்பாடு, கலை, அரசியல் யாவும் இணைந்தே வருகிறது. அதுவே உரைநடையை சுவாரஸ்யமாகவும் முக்கியமானதாகவும் மாற்றுகின்றன.

மரபணுக்கள் தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள். அனைத்து கதைகளும் மரபணுக்கள் குறித்தும், அவை நிகழ்த்தும் கூறுகள் குறித்தும் அவற்றின் பரிமாணங்கள் குறித்தும் பேசுகின்றன. இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் மனிதன் மனிதனாக இருக்க மரபணுக்கள் தான் காரணம் என்பதையே மையப்படுத்தி நிற்கிறது.
அஃறிணைப் பொருட்களை மட்டும் பிரதி எடுத்து பயன்படுத்தப்படுவதை அறிந்திருக்கும் நமக்கு நகமும் சதையுமாக இன்னொரு பிரதியாக உயிருள்ள மனிதன் பிரதியாக எதிர்ப்பட்டால் என்ன நிகழும் எப்படி இருக்கும் என்ற சாத்தியக்கூறை ஆராய்ந்து (நடை முறை படுத்தி) அதன் பல்வேறு பரிமாணங்கள் ஆச்சர்யத்துடன் காட்டுகிறது பிரதியெடுக்காதே கதை. மரபணுக்களுக்கு வெளியே உள்ளவைகளை மாற்ற நமக்கு பிரதிகள் தேவையில்லை என்ற கருத்தை ஓங்கிச் சொல்லுமிடமும், பிரதிகள் மாற்றுப் பிரபஞ்ச அளவில் உறவை மென்மேலும் மலினப்படுத்தும் என்ற கருத்தும் யோசிக்க வைத்து ஒத்துக் கொள்ள வைப்பது அபாரமாக இருக்கிறது.


சிறுகதைகளுக்கு மொழி மிகவும் முக்கியமானது. அந்த வகையில் தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் மொழி இலகுவாக, எளிமையின் உன்னதத்தோடு வாசிப்பாளனுக்கு அருகில் நின்று பேசும் தன்மையுடன் இருக்கிறது.


விஞ்ஞான கருத்துக்களும் அதன் வீச்சு சார்ந்த விஸ்தாரமும் மெல்லிய கோட்டில் வழுவாமல் நடப்பதற்கு இணையாக இருக்கிறது. அந்த வகையில் எந்த இடத்திலும் தடம் பிசகாமல் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் முன்வைத்து நகர்கிறது.


காலத்தின் போக்கில் ஏற்றுக் கொள்ளப்படாதவைகள் கூட ஏற்றுக் கொள்ளப்படுவதுண்டு. நடுவு நிலை என்ற ஒன்று இருப்பினும் அதைத் தீர்மானிப்பது யார், எது துவக்கத்தில் நாடகீயமான பொழுது போக்கிற்கு பயன்படும் என்று கணிக்கப்பட்டதோ அது ஒரு கட்டத்தில் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை புரட்டிப் போட்டது போன்ற கருத்துக்களையும், கேள்விகளைகளும் தரவுகளோடு ஆராய்கிறது சேஷம் சிறுகதை. வேற்று விலங்கினங்களின் மரபணுக்களைத் தாங்கும் மனிதர்கள் கலப்பினம் என்ற கூற்றும், அவன் முன்பு சர்ப்பமாகி சிறையிலிருந்து தப்பி இருக்கக் கூடிய சாத்தியக் கூறும் உலகின் விசித்திரங்களையும் ஆச்சரியங்களையும், அதிர்ச்சியையும் பாசாங்கின்றி அசலான அமைப்பை தரிசிக்க உதவுகிறது. இறுதியாக கால் நீட்டி படுத்துக் கொள்கையில் அவன் தன் உடல் என்னும் மடியை படுக்கையாக்கி அதில் கிடத்தி தன் ஐந்து தலைகளால் உடலைத் தாங்கி நிற்பதும், பிரபஞ்சமே கைகூப்பித் தொழுவதுமாக நிறைவுறுவது பரவசப் பொருளாய் இருக்கிறது. ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட பெருமாள் கால் நீட்டி சயனித்திருக்கும் காட்சி கண்களில் நிறைந்து நிற்கிறது.


நாம் அனைவரும் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு மைல் கல்லிலும் எதையோ இழந்து எதையோ பெற்றவர்களாக இருக்கிறோம் என்ற கருத்தை முன்வைத்து ஊர்கிறது ஊரும் மனிதன் கதை. இயற்கை எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கிறது, அந்த அவதானிப்பு பார்வையால் அல்லாது இயக்கத்தால் நடைபெறுகிறது என்ற கருத்து உள்ளார்த்தமாகப் பாய்ச்சுகிறது. அதே நேரம் வேறுபாடுகள் யாவும் பிறழ்வுகள் என்பதும் இயற்கையின் இயக்கத்தின் பண்புகள் என்பதும் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. விட்டு விலகி வந்ததற்கு மீள்வது குறித்தே கவலை கொள்ளும் மனிதர்கள் அருகாமையில் இருப்பது குறித்து கவலை கொள்வதே இல்லை என்ற கேள்வியும் அதற்கு மௌனம் சாதிக்கும் பதிலும் உண்மையின் வெளிப்பாடுகளாக இருக்கிறது.


மரபணுக்களால் நிகழ்ந்த மாற்றங்களையும் பரிசோதனை முயற்சிகளையும் விளக்கும் மற்றொரு அற்புதக் கதை சரோஜாதேவி புத்தகம். எல்லோரும் கடந்து வந்திருக்கும், விடலைப் பருவத்திற்கே சொந்தமான ஒன்றான பதின் வயதில் காமுறும் தருணத்தை ஆராய்ந்து சொல்வதுதான் கதையின் மையம். சிக்மன் ஃபிராய்டின் புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டப்படுவதும். மரபணுக்களின் ஆய்வுகளால் முடிவு கண்டறிப்படுவதையும் சரோஜாதேவி புத்தகங்கள் செய்த சேவையுடன் தொடர்புபடுத்தி விளக்குமிடம் யதார்த்த நிஜத்தை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.


எனக்கும் உங்களுக்கும் ஒரே மரபணுதான் எனில் நான் தான் நீங்கள், நீங்கள்தான் நான் எனும் கேள்வி எதிர்ப்படும் இடம் சுவாரஸ்ய முடிச்சு. சொல்லப்போனால் தொகுப்பில் உள்ள கதைகளான பச்சிலை, தழுவு கருவி, கண்ணாடிச் சுவர், மாற்றுத் தீர்வு போன்றவை விலாவரியாக விமர்சிக்கவும் விவாதிக்கவும் சாத்தியக் கூறுகளை கொண்டு இருக்கவே செய்கிறது. அதே நேரம் கதைகளை முன் மொழியும் எழுத்து நடை கதைகளைப் படிக்கும் சுவாரஸ்யத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருப்பது தனி கவனத்தை ஈர்க்கிறது. கதைகள் அனைத்திலும் சுவாரஸ்யத் தகவல்களும் வரலாற்றுப் பதிவுகளும் நிறைந்திருக்கிறது.


மரபைத் புரிந்து கொள்ளாதவரை புதுமையை படைக்க முடியாது என்பார்கள். அது மரபணுக்களுக்கும் சாலப் பொருந்தும். மரபையும் மரபணுக்களையும் முழுமையாக உள்வாங்கி புதுமையைப் படைக்கத் தெரிந்த படைப்பாளியாகவும் தான் அறிந்ததை அடுத்தவருக்கும் புரிய வைக்கும் வல்லமை படைத்தவராகவும் எதிர்ப்படுகிறார் ராம்பிரசாத்.
அதற்கு மரபணுக்கள் தான் காரணம் என்றும் சொல்லாம்!!
X X X


ஸ்ரீநிவாஸ் பிரபு,
சென்னை



Thursday, 10 April 2025

Tartigrade என்னும் ஏலியன்

 Tartigrade என்னும் ஏலியன்



டார்டிகிரெட்ஸ் பற்றிப் புதிதாக நான் அறிமுகம் செய்யத்தேவையில்லை என்று நினைக்கிறேன். மிகவும் சக்தி வாய்ந்த, அழிவே இல்லாத உயிரிணங்கள் இவைகள். பூமியில் காலத்தை வென்ற உயிரிணங்கள் வெகு சில மட்டுமே. உதாரணமாக, முதலைகள். முதலைகளுக்கு வயது, வயோதிகம் என்பதே கிடையாது. அவைகள் நோய்வாய்ப்பட்டாலோ, அல்லது உண்ண உணவு கிடைக்காமல் போனாலோ தான் இறக்குமே ஒழிய இயற்கையாக மரணிப்பதே இல்லை.

அதே போல, விண்வெளியின் வெற்றிடத்திலும், மைனஸ் இருநூற்றைம்பது டிகிரி குளிரிலும், சூரியனின் கதிர்வீச்சிலும் கூட அழிந்து போகாமல் நீடிக்கும் தன்மை கொண்ட மற்றொரு உயிர், டார்டிகிரெட்ஸ். இவற்றின் வினோதத் தன்மைகளுக்காய், இவைகளையே வேற்று கிரக வாசிகள், ஏலியன்கள் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இவைகள் எப்படி இயற்கையின் மிக மிக மோசமான சூழலிலும் அழியாமல், உயிர் பிழைக்கின்றன என்பது இதுகாறும் பெரும் புதிராய் இருந்தது.  நமக்கெல்லாம் விண்வெளிக்குச் சென்றால், நம் உடலைக் காக்க, Spacesuit தேவை. பிராணவாயு தேவை. ஆனால், டார்டிகிரேட்களுக்கு அப்படி அல்ல. அவைகள் எந்த ஒரு மோசமான சூழலிலும் உயிர் பிழைத்திருக்கும். இது ஒரு பெரும் புதிராக இருந்தது. அந்தப் புதிருக்கு விஞ்ஞானிகள் விடை தேடிக் கண்டடைந்திருக்கிறார்கள்

இந்த டார்டிகிரேட்கள் சில புரதங்களை உற்பத்தி செய்கின்றனவாம். அந்தப் புரதங்கள் தான் இவைகளின் உயிர் பிழைத்தலுக்கு அச்சாணி என்கிறார்கள். உதாரணமாகக் கதிர்வீச்சை எதிர்கொள்ள வேண்டி வந்தால், இந்த புரதங்கள் இவற்றின் மரபணுவைச் சுற்றி அரண் போல தகவமைந்து கொள்ளுமாம். இதனால், மரபணுக்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது. 

 பூமியில், இப்போதைக்கு, மனித இனம் , ராப்பகலாகத் தேடும் சாகாவரத்தை, இந்தச் சின்னஞ்சிறிய உயிர்கள் இயல்பிலேயே பெற்றிருப்பது அதிசயம் தானே. 




Friday, 4 April 2025

பேரரசன்' சிறுகதை

 அன்பு நண்பர்களுக்கு,

வாசகசாலையில் 111வது இதழில் எனது 'பேரரசன்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. இதழில் சிறுகதையை வாசிக்கப் பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும்.

https://vasagasalai.com/111-story-perarasan/

எனது சிறுகதையை வெளியிடத் தேர்வு செய்த வாசகசாலை இதழில் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சிறுகதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.




Tuesday, 1 April 2025

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்திற்கு எனது நன்றிகள்...🙏🙏🙏

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்திற்கு எனது நன்றிகள்...🙏🙏🙏