இணைய நண்பர்களுக்கு,



பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - எழுத்தாளர் ராம்பிரசாத்
இணைய நண்பர்களுக்கு,
தீசஸின் கப்பல் - விமர்சனம் - ஜெயா நவி
நூல் விமர்சனப் போட்டி - 2025
_____________________________________
நூல் : தீசஸின் கப்பல் (சிறார் இலக்கிய
நூல்)
ஆசிரியர் : ராம் பிரசாத்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பக்கங்கள் : 138
விலை : ரூ 190
. ஆசிரியர் ராம் பிரசாத் மயிலாடுதுறையில்
பிறந்து அமெரிக்காவில் வசிக்கிறார். இந்நூல் ஆசிரியரின் 15 வது நூல். இவர் தமிழ்
ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளிலும்,
இந்தியா மற்றும் அமெரிக்காவில் உலகளாவிய அறிவியல் புனைவிலக்கிய வெளியில்
சிறந்து இயங்குகிறார். கணினியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில்
முதுநிலைப்பட்டமும் பெற்றவர். 2009 ல் இருந்து தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.
. 2020 ல் வெளியான இவரது 'வாவ்
சிக்னல்' விஞ்ஞான புனைவுச் சிறுகதைத் தொகுதி நூலுக்குத் தமிழக அரசு தமிழ்
வளர்ச்சித் துறையின் சிறந்த சிறுகதை நூல் என விருதளித்து கௌரவித்திருக்கிறது.
. தீசஸின் கப்பல் நூல் சிறார்
இலக்கியமாக மலர்ந்திருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியோடு கூடிய முன்னேற்றத்தை
சிறுவர்கள் எவ்வாறு கையாள வேண்டுமென அழகான புனைவுக்கதைகளாக கொடுத்திருக்கிறார்.
ஒரு வீட்டின், ஒரு ஊரின், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வளரும் இளம் தலைமுறையினரின்
பங்கு மிக மிக முக்கியமானது.
. ஓரிரு தலைமுறைக்கு முன்பு தகப்பன்
தொழிலைத்தான் பிள்ளைகளும் தொடர வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தது. இது
அத்தலைமுறையையே அடிமைப்படுத்தி வைத்திருந்தது. அதன்பிறகு விழித்துக் கொண்ட
பெற்றோர்கள் நம் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் நான் பட்ட கஷ்டங்களை
அவர்கள் படவேண்டாம் என்று உணர்ந்து தன் சக்திக்கு மீறி படிக்க வைக்க
தலைப்பட்டனர். அதில் வெற்றியும் கண்டனர்.
கல்வி ஒரு மனிதன் எட்ட முடியாத உயரத்திற்கு அவனை இட்டுச் செல்லும் அவன் தலைமுறையை
அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கும்.
அதேபோல தான் ஒரு நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி என்பது இளைய தலைமுறையின்
முற்போக்கு சிந்தனைகளிலும், அதை துணிந்து செயல்படுத்தும் விதத்திலும்
இருக்கிறது. நூலில் இருக்கும் 10
சிறுகதைகளும் கற்பனைக்கு எட்டாதவைகளாக தற்போது தெரியும். ஆனால் வருங்காலத்தில் இவையும்
சாத்தியமே.
. அறிவியல் சார்ந்த புனைவு கதைகள்
வாசிக்கும் போது ஒரு புறம் பிரமிப்பு ஏற்படுகிறது. இங்கனம் நிகழ்ந்தால் உலகம்
எப்படி இருக்கும் என்ற திகைப்பும், ஆச்சரியமும் நம்முள் ஏற்படுகிறது. ஆனால் சற்று
பின்னோக்கி சென்றால் நாம் இருந்த வாழ்வியல் முறையும் தற்போது நம் வாழ்வியல்
முறைகளையும் ஒப்பிட்டு நோக்கினால் நாம் வளர்ந்த பாதை புலப்படும். அதுபோல திசஸின்
கப்பல் நூல் சொல்கிற விஞ்ஞான வளர்ச்சிகளும் எதிர்காலத்தில் சாத்தியமாகும்.
. மூடநம்பிக்கைகளால் தெய்வங்களின்
மீது பழியைப் போட்டு ஏற்படும் நிகழ்வுகளை நாம் கடந்து சென்றுவிட தன் பழக்கப்பட்டு
இருக்கிறோம். அதையும் மீறி பேசினால் நாத்திகவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு
விடுவோம் என்ற பயம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. பிள்ளையார் பால்குடித்தார்
என்று செய்தி பரவிய போது குடம் குடமாக பாலை கொண்டு போய் பிள்ளையாரிடம் கொடுக்கத்
தெரிந்த நமக்கு அதற்கான அறிவியல் காரணத்தை கண்டுபிடித்து தைரியமாக கூறமுடியவில்லை.
இல்லை இல்லை கண்டுபிடிக்க விடவில்லை
சமயங்களின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்கள்.
. நம் ஒவ்வொருவரின் பிறப்பிற்கும்
அவரவரின் செயல்பாட்டிற்கும் பின்னும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கவே செய்யும்
அதுதான் நம் படைப்பின் ரகசியம். தேவையான நேரத்தில் தேவைப்படும் இடத்தில் கொண்டு
சென்று நம்மை நிறுத்தி விடும் காலம். அப்போது காலம் இட்ட வேலையை பூரணமாக செய்து
முடிப்பதில் தான் நாம் பூமியில் வாழ்வதற்கான அர்த்தம்.
அழகு என்பது உடல் சார்ந்தது அல்ல.
மனம் சார்ந்தது நம் வாழும் வாழ்வியல் சார்ந்தது.
செய்யும் செயல்களும் எண்ணங்களும் அழகானால் நாமும் அழகாகத்தான் தெரிவோம். வளரும் பதிம வயதினர்கள் புறத்தோற்றத்திற்கு
எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அழகாக தெளிவுபடுத்தும் சிறுகதை
தீசசின் கப்பல். உன்னை நீ யாராக
பார்க்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்று தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நகரும் கதை.
வாழ்வின் சவால்களை அனைத்தையும் எதிர்கொண்டு அதை வெல்பவர்களே வாழ்வில் நிலையான
வெற்றியை பெற்று சாதிக்கிறார்கள்.
மரபணுக்களைக் கொண்டு புதிது புதிதாக பிரதிகளை எடுத்துக் கொண்டால் பிரபஞ்சம்
என்னவாகும். இக்கதைகளில் உள்ளவைகள் மாதிரி நடந்தால் எப்படி இருக்கும் என
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை ஆனால் அவை எல்லாம் நடைபெறும் காலம் மிக
அருகாமையில் தான் இருக்கிறது போலும்.
.
இருட்டில் வாழ்ந்த மக்கள் மின்சார விளக்கைக் கண்டுபிடித்த போது பயந்தது
போலவே இப்போதும் நமக்கு பயம் ஏற்படுகிறது.
விஞ்ஞான வளர்ச்சி காலப்போக்கில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அசுர
வளர்ச்சியாக தான் இருக்கும். மெல்ல மெல்ல
மக்களும் அதை ஏற்றுக்கொண்டு அவற்றோடு வாழ்ந்து அவர்களின் வாழ்வில் பிரிக்க
முடியாதாதாக மாறிவிடும்.
. மன்னர்கள் காலத்தில் இருந்த
சுரங்கப்பாதைகள் பற்றி நாம் அறிந்திருப்போம்.
ஆபத்துக் காலத்தில் மன்னர்கள் தப்பியோட ஒளிய அது உதவுவதாக
படித்திருக்கிறோம். அதுவே விஞ்ஞான
வளர்ச்சியான பிறகு ரகசிய அறைகளாக மாறி ஒரு கதவை திறந்தால் எடின்பருக்கும், மற்றொன்றைத் திறந்தால் ஹாங்காங்கும், மற்றும்
ஒன்றை திறந்தால் தஞ்சை பெரிய கோவிலும்,
இன்னும் ஒன்றைத் திறந்தால் திருத்தணி முருகன் கோவிலுமாக விஞ்ஞான
வளர்ச்சியில் விரிவடைந்து இருக்கிறது.
இயற்கையை நாம் படுத்தும் பாட்டை
பார்த்தால் நாளடைவில் உண்மையிலேயே பூமி நம் வாழ்வதற்கு இயலாத ஒரு தட்பவெட்ப நிலையை
அடைந்து விடும் போலும். பூனையற்ற புன்னகை சிறுகதையில் கூறியிருந்த விதம்
இப்படியும் நடந்து விடுமோ என்ற பயத்தை
ஏற்படுத்தி விட்டது.
நம் முன்னோர்கள் வாழ்வதற்காக கடினமான உடல்
உழைப்பை தந்தார்கள். அடுத்தடுத்து வந்த
தலைமுறையினர் உடல் உழைப்பை விட புத்திசாலித்தனத்துடன் கூடிய உழைப்பு போதும் என்று
நினைக்கத் துவங்கினர். நமக்கு அடுத்து
வரும் தலைமுறையினர் உடல் உழைப்பும் வேண்டாம்,
புத்திசாலித்தனமும் வேண்டாம் ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து அதன் மூலம் நாம்
முன்னேறி விட வேண்டும் என்று என்பதிலேயே முளைப்பாக இருக்கின்றார்கள் என்பதை அட்சய
பாத்திரம் சிறுகதையில் அச்சரம் பிசகாமல் அழகாக கூறியிருக்கிறார் ஆசிரியர்.
அனைத்து சிறுகதைகளுமே வளர் இளம் பருவத்தினர் படித்து அறிந்து நல்லவற்றை
பகுப்பாய்ந்து வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியை நல்ல விதத்தில் பயன்படுத்தினால்
நன்மையே விளையும்
. ஜெயா நவி
.
மரபணுக்கள் - விமர்சனம் - கோகிலவாணி
“மரபணுக்கள்” - ராம்பிரசாத் அவர்களின் பத்து
விஞ்ஞான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. “ஏழாம் அறிவு” போன்ற திரைப்படங்களின் வாயிலாக
மட்டுமே மரபணுக்களின் முக்கியத்துவம் பற்றி அறிந்த என் போன்ற அறிவியல் ஞானம் இல்லாதவர்களுக்கும்
மரபணு மாற்றங்களின் சாத்தியக் கூறுகளைக் கொண்டு எதிர்வரக் கூடும் சமூக மாற்றங்களைப்பற்றியும்
மேலும் மரபணுக்கள் பற்றியும், விண்வெளி, கிரகங்கள், ஆராய்ச்சிகள் பற்றியும் அறிந்து
கொள்ள ஆர்வமூட்டும் வகையில் கதைகளின் களமும் கருத்துக்களும் அமைந்துள்ளன.
“பிரதி எடுக்காதே”
நாட்பட்ட உறவுகளில் ஏற்படும் ஏமாற்றத்தை
மிலி மூலம் தெளிவாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார். விஞ்ஞானத்தின் உதவி கொண்டு மனிதனை
பிரதியெடுக்கும் இயந்திரம் மூலம் தீர்வு கிடைக்குமென யோசனை சொல்கிறான் மிலியன் காதலன்
கரீம்.
இயந்திரத்தின் மூலம் சூழ்நிலையை எப்படி கையாள்கிறார்கள்
என்று கதை விவாதிக்கிறது. எதிர்பாராத திருப்பங்களை உள்ளடக்கியுள்ளது.
“நீ என்னுடையவனா, அல்லது என் கவலைகள் மட்டுமே
என்னுடையதா” என்று கேட்கும் மிலியைக் கொண்டு அவர் பெரும்பாலான பெண்கள் வாழ்வில் சந்திக்கும்
ஏமாற்றத்தை கண்முன்னே கொண்டு வருகிறார்.
“சேஷம்”
கலப்பினங்கள் - பொருட்டு இதுகாறும் நமக்கிருக்கும்
புரிதலையும், வகைமைகளையும் தாண்டி வேறொன்றை நிருவுகிறார் ஆசிரியர்.
இக்கதையில் வேற்று விலங்கினங்களின் மரபணுக்களைத்
தாங்கும் மனிதர்கள் கலப்பினம் என அழைக்கப்படுகிறார்கள்.
வேறுபட்ட குணாதியங்கள் கொண்ட விலங்கினங்களின்
மரபணுக்களை மனிதக்கருவில் செலுத்துவதன் வாயிலாக அத்தகு குணாதிசியங்களை கொண்டு பிறக்கும்
மனிதர்கள் முறையான உடற்பயிற்சிகளைக் கொள்வதின்
மூலம், உறங்கிக் கொண்டிருக்கும் மரபணுக்களை உசிப்பி விடவும், மீண்டும் உறக்கத்திற்கு
கொண்டு செல்லவும் கூடும் என மரபணு பொறியியலின் சாத்தியக்கூறுகளை விவரிக்கிறார் ஆசிரியர்.
இதனை, “ஸ்டுவர்டை” நேசிக்கும் பெண் வாயிலாகவும்,
அவன் சிறைபட்டபின் அவளுக்குள் ஏற்படும் உளப்போராட்டங்கள்
வாயிலாகவும், அவளுக்கும் நீதிபதிக்கும் இடையேயான விவாதங்கள் மூலம் அறியலாம்.
எழுத்தாளர் அம்பை அவர்களின் ஒரு கதைகளுக்குள்ளேயான
கதையில் லக்ஷ்மிக்கு மட்டும் படுக்கையில்லாதது ஏன்? விஷ்ணுவில் காலடியிலேயே அமர்ந்திருக்கிறார்
என கேட்டிருப்பார். இக்கதையில் முடிவு எனக்கு
அதை நினைவூட்டியது. வெகு நுட்பமாய் எழுதியிருக்கிறார்.
“ஊரும் மனிதன்”
உடல்வளர்ச்சியாலும், குணாதிசியங்களாலும்
வேறுபட்ட மகனை கொண்ட தந்தை அவனை எல்லோரையும் போல இயல்பு நிலைக்கு கொண்டு வர மருத்துவங்கள்
பல மேற்கொண்டு தோற்றுப் போகிறார். இந்நிலை
அவனை குணப்படுத்த அமானுஷ்யம் நிறைந்த ஒரு நபரை சந்திக்க முயல்கிறார், அவரை சந்திக்க
முடிந்ததா, எவ்வாறான தீர்வு வழங்கப் பெற்றார் என்று கதை விவரிக்கிறது.
“சில பிரத்தியேக குணங்களுக்கு சில இழப்புகள்
தேவைப்படுகின்றன”.
“ஒரு பறவையாக சிட்டுக்கருவிகள் முழுமையடையவில்லை
என்று
ஏற்றுக்கொள்ள முடியுமா” என்பன போன்று பல வரிகளில்
இதுகாறும் நாம் கொண்டுள்ள எண்ணங்களின் கோணங்களை விரிவாக்குகிறார் எழுத்தாளர்.
“சரோஜாதேவி
புத்தகம்”
எங்கோ ஒரு காப்பகத்தில் வளரும் பையனுக்கு
முன்பின் அறியாத அவனது தாயை ஒத்த வயதில் உள்ள ஒரு பெண் மீது ஈர்ப்பு ஏற்படக் கூடுமா? என்றெண்ணி காப்பாளர், மனநல மருத்துவரை அணுகிறார்.
ஃப்ராய்டின் தத்துவங்கள், மரபணுக்களின் ஒற்றுமை, வேற்றுமை வாயிலாக என்ன நடந்திருக்கக்கூடும்
என கதை சொல்கிறது.
“பச்சிலை”
காடுகளின் மீது ஆர்வம் கொண்ட “ஜோஸ்” அமெரிக்காவில்
உள்ள அமேசான் காடுகளை பார்க்க எண்ணி, அதற்கு இணையாக உள்ள காடுகளில் ஒன்றை “வானதி”யின்
தேர்வுப்படி காண இருவரும் காட்டிற்கு செல்கிறார்கள்.
வழியில் “ஞானன்” தன் குடிலில் அவர்களுக்கு
உற்சாக பானம் அளித்து உபசரிக்கிறார். பின்னர் அவர்கள் காடுகளில் பயணிக்க நதி ஒன்றினை
கடக்க இயலாது வேறு வழியில் செல்ல வானதி ஜோஸை தேடி காண இயலாது ஞானனின் உதவியுடன் இருவருமாய்
ஜோஸைத் தேடுகிறார்கள்.
“ஜோஸ்” தன்னைத்தானே எடுத்துக்கொண்ட புகைப்படம்
ஒன்று கிடைக்கிறது. அதில் தெரியும் மரத்தினைக் கொண்டு மேலும் இருவரும் தேடுகிறார்.
அவர்கள் “ஜோஸை கண்டடைகிறார்களா? எப்படி கண்டடைகிறார்கள்
” என்பதை கதை வழி படிக்கையில் அமானுஷ்ய உணர்வை தவிர்க்க முடியவில்லை.
எப்போதும்
பெண்:
“பெண் ஏன் அடிமை ஆனாள்? பெரியார் சொன்னது
போலல்லாத வேறொரு கோணத்தில் துவங்கி, மரபணுப் பொறியியலில் உள்ளபடி இயல்பிலேயே பெண்களும்
ஆண்களும் தனித்தனியே சந்திக்கும் பிரச்சினைகளை மரபணுச் சேர்க்கைகளில் மாற்றம் மூலம்
தீர்வினை அறிய அஞ்சலியுடன் தாயான அபியும் (மனநல மருத்துவர்கள்) மரியமும் முயல்கிறார்கள்.
சோதனைகளின் போக்கினை கதைகளில் காணலாம்.
தழுவு கருவி
ராமயண காலங்களில், விமானங்கள் இருந்தனவா
அல்லது அத்தகு கற்பனைகள் தாம் விமானங்களை கட்டமைக்க உதவியதா என்ற ஐயம் எனக்கு அவ்வப்போது
ஏற்படும். இன்றைய கற்பனைகள் நாளைய கண்டுபிடிப்புகள்.
விண்வெளிக் கப்பல் மூலம் ஒருவன், கிரகங்களுக்கிடையே
நடத்தும் பயணமும், அக்கிரகங்களுக்கு தகுந்தாற்போல அவன் எவ்வாறு தகவமைத்துக் கொள்ள கூடும்
என பல ஆச்சர்ய கற்பனைகள் கொண்டுள்ளது கதை.
தன் பாட்டிக்கும் தனக்குமிடையேயான ஒற்றுமையும்,
அவள் பால்தான் கொண்டுள்ள ஈர்ப்பும், எவ்வாறு சிறை செல்கிறான் எப்படி மீள்கிறான் என
கதை இயம்புகிறது.
“உன் ஆழ்மனம் எப்போது விழிக்கிறதோ அப்போது
அது தன் இலக்கு நோக்கி செல்லத் துவங்குகறிது” “இசையில் தொலைவதும் இசைக்கு நிகரான சோடியாக்கில்
தொலைவதும் உனது பாட்டிக்கு ஒன்று தான்” என அவன் தாய் கூறுகிறாள்.
திரும்ப திரும்ப கேட்டு அவன் ரசிக்கும் பாட்டியின்
வக்கிரதூண்ட மகாகாய பாடல், சிறை செல்வது, தப்பிப்பது, கிரகங்கள் பயணம் எல்லாமே தற்செயலா?
கதையை வாசிப்பதன் மூலமே முழு அனுபவத்தை பெறலாம்.
கண்ணாடிச்சுவர்
க்ளாராவும் நான்சியும் உலகளவில் முதலில்
தோன்றிய உயிரணு பெண்ணாக இருக்கவேண்டும், பரிணாம வளர்ச்சி அதன்பிறகு எவ்விதம் தொடர்ந்தது
என்ன ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்கள். அவர்கள் பரிசோதனையில் கண்ணாடிச் சுவர்களினூடே
காண்பது என்ன?
ஏற்படும் பிறழ்வுகளின் பக்கவிளைவுகள் என்ன
என கதை இயம்புகிறது.
உயிரணுக்களில் துவங்கி பால்சார இனப்பெருக்கம்,
இயல்புநிலை மீறும் பொழுது சமூகம் அவர்களை பார்க்கும் கோணம் போன்றவற்றை பேசுகிறது கதை.
மாற்றுத்தீர்வு
எழிலும், உத்ராவும் ஆராய்ச்சி நிறுவனத்தில்
பணிபுரிகிறார்கள். மூலக்கூறு உயிரியல் படித்து பணியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள்,
சாகாவரத்திற்கான மருந்தை கண்டிப்பது நிறுவனத்தின் நோக்கம்.
இதற்காய் அவர்கள் செல்லும் வழியில் திருமய்யம்
கோயிலில் அவர்கள் உணரும் இனம்புரியா சலனம், தூணில் பொறிக்கப்பட்டுள்ள உருவம், அதைத்
தொடர்ந்து அவர்கள் செய்யும் பயணம், காட்டில் அவர்கள் சந்திக்கும் பெண் அவள் கூறும்
செய்திகள் சாகாவரத்திற்கான தீர்வை நோக்கி இட்டு
சென்றதா இல்லையா எனக் கதையில் காணலாம்.
சோஃபீ
நிறுவனம் தந்த கட்டாய பணி ஓய்வுக்கு பிறகு
பசுபிக் பெருங்கடலில் புதியதாய் உதயமாயிருக்கும் ஒரு தீவில் ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்
க்ளாரா.
போட்டிகள் நிறைந்த ஆராய்ச்சித்துறையில் ஒரு
புத்தம்புதிய ஆராய்ச்சியை யாரும் அறியாமல் குறிப்பாக யாரும் அதன் தகவல்களைப் பயன்படுத்தி
காப்புரிமையை அவர்கள் பெயரில் பதிந்து கொள்வார்களோ என தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு
இத்தகு தீவினைத் தேர்ந்தெடுத்து தனது ஆராய்ச்சியை மேற்கொள்கிறார். அவர் எவ்வாறு எத்தகைய
படிநிலைகளை கடந்து சோஃபியைக் கண்டடைகிறார்.
சோஃபியின் சக்தி என்ன என்பதை கதை நம் முன்னே
படம் பிடித்து காட்டுகிறது.
இயல்பாகவே மனிதர்கள் (சேப்பியன்ஸ்) கொண்ட
மரபணுக்கள் சூழலுக்குத் தகுந்தாற்போல் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்வதை பரிணாம வளர்ச்சி
என்று அறிகிறோம்.
மரபணு மாற்றங்களால் உருவாக்கப்பட்ட தாவரங்களின்
நன்மை, தீமைகளைப் பற்றி அறிவோம். மனிதர்களின் மரபணுக்களில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களைக்
கொண்டு சில சிக்கல்களுக்கு தீர்வுகாண இயலும் என்ற நேர்மறையான கருத்துக்களை இக்கதைகள்
தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
இத்தகு அறிவியல் பேசும் கதைகளை தமிழில் படித்ததில்லை.
வெகு குறைவே ஆயினும், படித்த கேட்ட, தமிழ் நூல்கள், உணர்வுகள், சமூக அலுவலங்கள், பொருளாதார
மேம்பாடு, மருத்துவம்,வரலாறு, தனிமனித மேம்பாடு ஆகியவற்றைப் பற்றி பேசியது.
விஞ்ஞான கதைகளில் மரபணுக்களை கருப்பொருளாகக்
கொண்டு, என்னை அதீத உணர்வுக்களுக்குள்ளாக்காது (நான் படித்த கதைகளினால் உணர்ச்சி வசப்படக்கூடிய
நபர்) நேர்மறை சிந்தனைகளைத் தூண்டி,மேலும் கற்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் கதைகளை
அமைத்தது சிறப்பு.
விஞ்ஞான கதைகளினுடே உள்ள மெய்ஞான தத்துவ
விசாரிப்புகள் இலக்கியம்.
இவ்வாறாக வெவ்வேறான கதைகளில், மரபணுக்களை
சாராம்சமாக கொண்டு, பிரதியெடுப்பது மரபணுக்களின் கட்டமைப்புகளால், ஏற்படக்கூடிய அல்லது
ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களுக்கான சாத்தியக் கூறுகளையும் கிரகங்களைப்பற்றியும், மரங்கள்,
காடுகள் பற்றியும் சாகாவரம் பற்றியும், நுட்பங்கள் வாயிலாக சுவாரசியமான கதைகள் தந்து
அனுபவங்களை பகிர வாய்ப்பளித்த ஆசிரியருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியுடன்
நவில்கிறேன்.
எங்கள் வீட்டு புல்வெளியில் குருவி ஒன்று முட்டையிட்டிருக்கிறது. நான்கு முட்டைகள். அடைகாக்கிறது. நாங்கள் பின் கதவு திறந்து Lawnல் அடியெடுத்து வைத்தாலே கத்தத்துவங்கிவிடுகிறது.
நண்பர்களுக்கு வணக்கம்.
எழுத்தாளர் ராம் பிரசாத்துக்கு வணக்கம் ......
உங்களது
படைப்புகள் அனைத்தும் நான் வாசித்திருக்க வாய்ப்பில்லை
என்றாலும் உங்களின் எழுத்துக்களின் ஆழம் உங்கள் படைப்புகளில்
இருப்பதை என்னால் உணர புரிகிறது.
நான்
முழுமையாக மரபணுக்கள் என்ற நூலை படிக்க
நேர்ந்தது .அறிவியல் சார்ந்த எழுத்துக்களை ஒரு சிலரே மையமாக
வைத்து சாதிக்க முடிகிறது .அதில் அந்த வெற்றிப் பயணத்தில்
உங்கள் எழுத்துக்கள் மேலும் பல பரிமாணங்கள் பெறும்
என்பது புரிகிறது.
எதிர்காலம்
குறித்த உங்கள் கனவு பார்வை மேலும்
பல பரிமாணங்களை இந்த விஞ்ஞான உலகில்
ஏற்படுத்த கூடும் .எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்பது மரபணுக்கள் வழியாக தெரிகிறது விஞ்ஞானத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் மனித குலத்திற்கு
மாபெரும் சவாலாக வும்.... பிரமிப்பாகவும் உற்று நோக்கும் விதமாக வியக்க வைக்கும் அளவில் உங்கள் எடுத்தாற்றல் உள்ளது .படைப்பு;, படிப்பு ,பசி உள்ளவர்களுக்கு தீணியாக
அமைகிறது உங்களது ஒவ்வொரு படைப்பிலும் பெற்றோர்கள் நினைவு கூறும் விதம் ,கடந்த கால நினைவுகளை பகிரும்
வி தம், பிரம்மிக்க வைக்கிறது.
பிரதியெடுக்காதே:-
உங்களது எழுத்தில் "நானே எப்போதும் மன்னிப்பு
கேட் கிறேன்" ......எனும்போது உங்களது உயர்ந்த நோக்கம் புரிகிற து. "இது மிகவும் பழைய
தீர்வு உன் தீர்வுகள் கூட
என்னை ஈர்க்க முடியாமல் திணறுகிறது ". .....
"ஒரே ஒரு நீ மற்றும்
நான் நம்மிடையே இந்த திருப்தி அளிக்காத
உறவுகள்" இந்த வார்த்தை ஜாலம்
நடைமுறை வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டி உண்மையை உணர்த்துகிறது.
ஆண்-பெண் ஈர்ப்புக்குப் பின்னால்,
மரபணுக்கள்! அறிவியல் புனைவு தளத்தில் வேறெங்கும் கேள்விப்படாத கருத்தாக்கம்.
சேஷம்:-
மூன்று
அறைகள் கொண்ட இதயம், மனிதர்களுக்கா! படித்ததுமே ஆச்சர்யம்! பொதுவாக மனிதன், குரங்கினங்களின் வழித்தோன்றல் என்றே படித்துவிட்டு, முதன் முறையாக, சர்ப்பங்களில் வழித்தோன்றல் என்று படிப்பது அதிர்ச்சியளித்தது. அதை அறிவியல் பூர்வமாக
நிரூபிக்கும் இடத்தை ரசித்தேன்.
ஊரும்
மனிதன்:-
பருந்து,
எலி, சிட்டுக்குருவி, புழு, பூரான், முதலை ஆகியன குறித்து பொதுவில் எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஆனால், இவற்றை வைத்து எழுதப்பட்டிருக்கும் ஒரு முழுப் பாரா?!
படித்ததும் அட!என்று தோன்றியது.
எல்லோருக்கும் தெரிந்த ஒன்றிலிருந்து இதுகாறும் எவரும் சொல்லாததைச் சொல்வது தொடர்ந்து உங்கள் எழுத்துக்களில் வெளிப்படுகின்றது.
சரோஜா
தேவி புத்தகம்:-
கொஞ்சம்
பிசகினாலும் சொதப்பிவிடக்கூடிய கதை. ஆனால், கதையின்
அறிவியல், கதையை வேறொரு தளத்திற்கு நகர்த்திவிடுகிறது. இது போல் இதற்கு
முன் கேட்டதே இல்லை.
பச்சிலை:-
கீரை,
காய்கறிகளை உணவாக உண்கிறோம். ரசம், துவையல், சட்னி என்று. பச்சிலைகளுக்கு மனிதன் மருந்தானால்? கற்பனை வளம் அருமை. கதை
படிக்க படிக்க படிப்பவருக்கேற்ப வேறு எதை எதையோ
உணர்த்துகிறது. மிகவும் ஆழமான அர்த்தங்கள்.
எப்போதும்
பெண்:-
'பெண்
ஏன் அடிமையானால்?' என்று துவங்கி, மரபணுக்களில் மாற்றங்கள் செய்வது போன்ற கதை. இந்தக் கதையிலும்
முடிவை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தக் கதையும் யோசிக்கத் தூண்டுவதாக இருந்தது.
தழுவு
கருவி:-
ஒரு
மனுஷி தன் பேரனின் உடலில்
மறுஜென்மம் எடுக்கிறாள். மரபணுக்கள் வழியாக... இது தமிழுக்கு புதுசு.சினிமாவில் பேய், ஆன்மா என்றெல்லாம் வரும். அது, அமானுஷ்யம். ஆனால்,
இது மரபணுக்கள். நிச்சயமாக மிக வினோதமான பார்வைதான். ஹாலிவுட்
சினிமா கதை போலிருந்தது.
கண்ணாடிச்சுவர்:-
முதலில்
தோன்றிய உயிர், பெண். ஆனால், இப்போது ஆண் இல்லாமல் குழந்தைப்பேறு
இல்லை என்னும் நிலை. நாமெல்லாம் அறிந்ததுதான். அறியாதது, சிறுகதையில் வருகிறது. ஓரினச்சேர்க்கை திருமணங்கள் குறித்து எப்படியெல்லாமோ கேட்டிருக்கிறேன். கண்ணாடிச்சுவர் மிகவும் வித்தியாசமான கோணம்.
மாற்றுத்தீர்வு:-
விலங்கினங்களில்
பாலுணர்வு, பகடி செய்யப்படும் ஒன்றாகத்தான்
இருந்திருக்கிறது. அதற்கு இப்படியோரு அர்த்தம் தர முடியும் என்பதே
ஆச்சர்யம் தான். 'ஒருவேளை இருக்குமோ' என்று தோன்றச் செய்கிறது அறிவியல் விளக்கம். மரபணுக்கள் ரீதியில் சாகாவரம், அருமை.
சோஃபி:-
ஒரு
பரிசோதனையின் விளைவாக உருவாகிறது ஒரு உயிர். அது
என்னவெல்லாம் செய்கிறது? போரிலிருந்து திரும்பும் வீரர்களால் நேரும் பக்கவிளைவுகள் வைத்து கதையை நகர்த்திய விதம் அருமை.
இப்படியெல்லாம்
எப்படி ஒருவருக்கு யோசிக்கத் தோன்றியது? இப்படி யோசிக்க என்ன மனோநிலை இருக்க
வேணும்? வியப்பாக இருக்கிறது. அறிவியல் கதைப் புத்தகங்களில் வினோதமான புத்தகங்களிலேயே மிகவும் வினோதமான தொகுப்பு "மரபணுக்கள்". பல கதைகள் சுஜாதாவை நினைவூட்டின. உங்கள்
பல கதைகளில், வாதங்கள், தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியது. தேவையும் கூட. பல இடங்களில்
புருவம் உயர்த்திவிட்டேன்.
மேலும்
பல அறிவியல் சார்ந்த எழுத்துக்களை உங்கள் மூலமாக இந்த விஞ்ஞான உலகில்
சமூகம் எதிர் நோக்கி காத்திருக்கிறது.மேலும் மேலும் உங்கள் எழுத்துக்கள் பல பரிமாணங்களை பெற
வாழ்த்துக்கள்..
நூல் விமர்சனம் : "மரபணுக்கள் "
நூலின் பெயர் : "மரபணுக்கள்"
ஆசிரியர் : ராம் பிரசாத்
பதிப்பகம் : படைப்பு
பக்கங்கள் :135
விலை :190 ரூபாய்
இந்த நூலின் ஆசிரியர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் விருது
பெற்ற எழுத்தாளர் ராம்பிரசாத். ஒரு கணினியாளர், கதையாளரானால் என்னவாகும்?, இப்படித்தான்
அறிவின் குழந்தைகளும், அறிவியல் குழந்தைகளும், கதை வழியே,கற்பனை வழியே ஓடித் திரிவார்கள்.
எதிர்காலத்தின் உலகின் போக்கும், உணர்வின் போக்கும் எப்படியிருக்கும் என்பதை..அச்சுறுத்தலாக
இல்லாமல்,நம்மை அதற்கு ஏற்ப மனதளவில் தயார் செய்யும் நோக்கில் படைத்திருக்கும் படைப்பை...
நம் படைப்பு குழுமம் வெளியிட்டிருப்பது இன்னும் சிறப்பு...
விஞ்ஞானம், அறிவியல், மரபணு, இப்படி இலக்கியத்தோடு, அறிவியல் கலந்த
கதைகளும், கட்டுரைகளும்,புனைவுகளும் தமிழில் மிக, மிகக் குறைவு. அதற்கு தமிழின் மரபணு
குறைபாடாகக் கூட இருக்கலாம்..."மரபணுக்கள் ".. 10 விஞ்ஞான சிறுகதைகள் கொண்ட
தொகுப்பு.
"பிரதி எடுக்காதே"
முதல் சிறுகதை.
ஆறு ஆண்டுகளாக காதலிக்கும் மிலி,மற்றும் கரீம் எனும் இரண்டு கதாபாத்திரங்களிடயே
இடையே நிகழும் உணர்வு போராட்டமே இந்த கதை..
இன்றே வாழ்ந்து விட வேண்டும் என்பவன் கரீம்..
"நாளையும் வாழ்வு இருக்கிறது " என்பவள் "மிலி"..
"மிலி" யின் எண்ணத்தை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை, புரிந்து
கொள்ளாத முடியாத கரீம், மிலியை திருப்திபடுத்த தன்னைப்போலவே பல பிரதிகள் எடுக்கும்
எந்திரத்தை கொண்டு, தன்னையே பல பிரதிகள் எடுக்கத் தொடங்க, உடனே மறுக்கும் மிலி, தான்
இதனை முன்னரே முயற்சித்து பார்த்து விட்டதாகவும், அது இன்னும் ஆபத்தானது என்றும், தானே
அப்படியான பிரதிகளில் ஒருத்தி தான் எனும் இடம், கதையில் திருப்பம்...
"ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றிற்கு , உடல்
மொழியில் உருவம் தந்தான்..
"பிரதிகள்" மரபணுக்களை மாற்றுவதில்லை.."
இப்படி கதையின் சில இடங்களில் கவித்துவமும் கலந்தோடி இருப்பதை ரசிக்கலாம்..நிறைவாக
"மனமுவந்து முயன்றால் மட்டுமே,ஒருவருக்கு மற்றவரின் உணர்வுகள் புரியும்..மாற்று
பிரபஞ்சத்தால், மாற்றுப் பிரதியால் அல்ல, என்று முடிகிறது முதல் கதை...
"சேஷம்"
அடுத்ததாக ஒரு வித்தியாச கதை இது,மனிதர்கள் தற்காலிகமாக பச்சை குத்துவதற்கு
பதிலாக, ஒரு கரு வயிற்றில் உருவாகும் போதே, அந்த கருவுக்குள் ஒரு பச்சோந்தியின் நிறம்
மாறுதலுக்கான மரபணுவையோ, அல்லது ஒரு மயில் தோகையின் மரபணுவையோ கருவுக்குள் செலுத்திக்
கொள்வது. செலுத்திய மரபணுக்கள் உடலில் உறக்க நிலையிலேயே இருக்கும், குறிப்பிட்ட உடற்பயிற்சிகள்
மூலம் அவற்றை உசுப்பவோ, மீண்டும் உறங்க வைக்கவோ முடியும் எனும் அதீத வித்தியாச களத்தில்
இந்த கதை நீள்கிறது..
தன் காதலன், "ஸ்டுவர்ட்" க்கு சார்ப்பத்தின் மரபணு இருப்பதால்,
அரசாங்கம் அவரை தனிமைப்படுத்த,அவருக்காக அவரின் காதலி, நீதிமன்றத்தில், வாதடுவதாக விரிகிறது
கதை..ஆனாலும் ஏற்காத, நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க, காதலன் "ஸ்டுவர்ட்
" பாம்பின் மரபணு இருப்பதால், முழு சர்ப்பமாக உருவம் கொண்டு,இவளை கானகத்திற்கு
கடத்தி வர,என விரியும் கதையில் "அடாவிசம்", பாம்புக்கு இதயத்தில் இதயத்தின்
மூன்று அறைகள் இருக்கும் - இப்படியான அரிய தகவல்களுடன் நீளும் இந்த கதையின் கடைசியில்,
ஸ்டுவர்ட் என்னவாக மாறுகிறான் எனும் அதீத ஆச்சர்யத்தோடு முடிகிறது கதை..
"ஊரும் மனிதன்"
முதலை போல உருவம் கொண்ட மகன்,அவனை சரி செய்ய முயலும் தந்தை, கடவுள்
போல, ஞானி போல, மருத்துவன் போல வித்தியாசமான உடல் அமைப்பில் காட்டில் வாழும் ஒரு அமானுஷ்யன்,
இப்படி மூவருக்குள் நடக்கும் உரையாடலோடு தொடரும் இந்த கதையில், நிறைய இடங்களில்
"ஜென்" தத்துவங்களையும், பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு மைல்கல்லிலும்
எதனையோ இழந்து தான், எதையோ பெற்றிருப்போம் " என "டார்வினிசமும்" கலந்து
கதை சொல்கிறார் எழுத்தாளர்.பருந்து, எலி, சிட்டுக்குருவி,
புழு, பூரான், முதலை இவைகளை வைத்து ஒரு முழு பத்தி எழுதியிருக்கும் இடம், ஓரிரு முறை
படித்தால் மட்டுமே புரியும் வகையில் சொல்லப்பட்டிருக்கும் ஆழமான தகவல்.
"உங்கள் வாழ்வை இனிமேலாவது வாழுங்கள் " என முடியும் வரிகள்..எனக்கானதாக,
நமக்கானதாகப்பட்டது...
"சரோஜா தேவி புத்தகம் "
ஒரு விடுதி, அதன் உரிமையாளர் விஸ்வநாதன்,பதின்ம வயதிலிருக்கும் அவரின்
பேரனுக்கு, 'மல்லிகா' எனும் வயதில் மூத்த ஒரு
பெண்ணை முதன் முறை பார்த்ததும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டதை பார்த்து,ஒரு மனநல
மருத்துவரை அழைத்து வருகிறார் தாத்தா.சம்பந்த பட்டவர்களின் மரபணுக்களை ஆராயத் தொடங்கும்
மருத்துவர், முடிவு குறித்தும், பேரனின் மரபணு குறித்தும், அந்த வயதில் மூத்த பெண்
குறித்தும் அதிர்ச்சி தரும் விஷயங்களை, விஸ்வநாதனோடு பகிர்வதாக நீளும் இந்த கதையில்,
"மான்" ஒரு குறியீடாக கதையெங்கும் துள்ளி ஓடுகிறது.மேலும் "GENE
METHYLATION", "UNI PARENTAL DISOMY" எனும் அதீத மருத்துவ வார்த்தைகள் குறித்த புரிதலும்,
புதிரும் வாசிப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும்.கடைசியில், தலைமுறைகளுக்கிடையே,ஒருவரின்
குணங்கள், செயல்பாடுகள் மரபணுக்கூறுகள் வழியே அடுத்த சில தலைமுறையிலும், "எட்டிபார்த்தல்",
"உயிர்த்தெழுதல்" நிகழும் என்கிறது இந்த கதை.
"பச்சிலை "
காட்டில் ட்ரெக்கிங் செல்லும் போது, காணாமல் போன தன் கணவன் ஜோஸை ,தன் நண்பர் ஞானனுடன்
(இந்த பெயரே சூப்பர் )சேர்ந்து மீண்டும் காட்டுக்குள் தேடுகிறாள் வானதி.ஒரு வித்தியாசமான
மரத்தில், ஜோசின் சட்டை தெரிய, "மரங்களும், இலைகளும் எப்படி மனிதர்களுக்கு மூலிகையாக, மருந்தாக
இருக்கிறார்களோ, இங்கிருக்கும் சில குறிப்பிட்ட மரங்களுக்கு, மனிதர்கள், மருந்தாக மாறுகிறார்கள்"
எனும் வித்தியாசமான கோணத்தில் பயணிக்கிறது இந்த கதை.
இலையின் பிரபஞ்ச வெளி, வயிற்றிற்குள் வளரும் செடி,தாவரங்களும்,மரங்களும்
தான் கல், தோன்றி, மண் தோன்றும் முன் பூமியில் தோன்றியது எனில், மனிதனும், விலங்குகளும்,
அவைகளின் முன், சிறுபான்மையினம்... இப்படி நிறைய நிறைய சொல்லிப்போகிறது "பச்சிலை"..
"எப்போதும் பெண் "
சூரியனின் "வெஞ்சினம்"(நான் ரசித்த வார்த்தை) காரணமாக
பூமியில் மொத்தமே 3000 உயிர்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதிலும் பெரும்பான்மை பெண்கள்
மட்டுமே.அதில் அஞ்சலி, அவளின் அம்மா மருத்துவர் அபி,அவரின் தோழி மரியம், இவர்களின்
மூவரை கொண்ட இந்த கதை, பெண்ணியம் பேசுகிறது.. இல்லையல்லை, பெண்ணின் மென்மை குணத்திற்கான
மரபணுவை மரணிக்க வைக்க முயல்கிறது. ஆண்களுக்கு "பலாத்காரம் செய்தல்", ஆசிட்
வீசுவது, கொலை செய்தல், இவைகளை செய்யத் தூண்டும் மரபணுக்களை நீக்க முயல்கிறது..
"காதல்" என்பது ஆணைப் பொறுத்த வரையில் கலவிக்கான ஏற்பாடு
" என்ற வரியைப் படித்ததும்,ஒரு ஆணாக "சுருக்"கென சுட்டது. ஆனால் யோசித்துப்
பார்த்தால் அது உண்மையும் கூட. மேலும் இதை எழுதியதும் ஒரு ஆண் என்றதும், உண்மையை உடனே
மனம் ஏற்றுக்கொண்டது..
"பாவனை நிரல்"
(Simulation) மூலம் இவர்கள் சோதனை செய்து நிறை, குறைகளை கலைந்து, 1500 ஆண்,
1500 பெண் என உருவாக்கும் இணைகளோடு, இவர்களின் உரையாடலும் நிறைய, நிறைய பேசிப்போகும்
விஷயங்களை விஞ்ஞான பார்வையோடு ரசிக்கலாம்..
"தழுவு கருவி"
விண்மீன் மண்டலத்தின் பாதுகாவல் சிறைச்சாலை,
அங்கிருந்து தப்பித்த ஒரு கைதி,
"கால்பாட்" எனும் விண்மீன் ரோந்துக் குழு, இப்படி
"ஸ்டார் வார்ஸ்" படத்திற்கு சற்றும் குறைவில்லாத கதை இது..
நாயகன் சிறை சென்ற காரணம்,வாசிப்பவர்களுக்கு,நிகழ்கால அரசியலில்,
எதை, எதையோ நியாபகம் படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.கதை நாயகனின் சாயல், பழக்க வழக்கங்கள்
எல்லாமே, அவரின் பாட்டியை உணர்த்தும்படியிருக்க,அவர் பாட்டி குறித்த தகவல்களை திரட்ட,பாட்டி
சேகரித்து வைத்த இரண்டு அறிவியல் புனைவிதழில் உள்ள அறிவியல் கட்டுரைகள், அது தரும்
அதிர்ச்சி தகவல்கள்,அதைத் தொடரும் நிகழ்வுகளும், நினைவுகளும் ஒரு அருமையான திரில்லர் வெப்சீரியஸ் போன்ற உணர்வைத்
தரும் கதை..
"கண்ணாடிச் சுவர்"
பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்தால், ஏன் இந்த உலகம் ஏற்றுக்கொள்வதில்லை
எனும் கேள்வியோடு தொடங்கும் கதை, க்ளாரா, நான்சி எனும் இரு பெண்கள், அவர்களுக்குள்
திருமணம்,பரிணாம வளர்ச்சி குறித்த அவர்களின் அறிவியல் சோதனை, கண்ணாடி கூண்டு, அதற்குள்
உருவான தன்னைத் தானே பிரசவிக்கும் சோதனை உயிர்,பின்
அதற்குள் ஆண், பெண் உயிர்களின் நடுவே உண்டாக்கப்பட்ட கண்ணாடிச்சுவர் என நம் எண்ணக்கூட்டுக்குள்
அடங்காத கற்பனையில் விரியும் இந்த சிறுகதை...
பெண் ஏன் அடிமையானால்? எனும் கேள்விக்கு விடைதேடி.. முடிகிறது....
"மாற்றுத்தீர்வு "
சாகா வரத்திற்கான மருந்து தேடும் முயற்சியில் இருக்கும்,உதிரா, எழில்.
இவ்விரு பெண்களிடையேயான உணர்வுகள், ஊராய்வுகள், எனத் தொடங்கும் கதை,பைரவர் கோவில்,
கோவிலிலுள்ள சிற்பங்களில் இருக்கும், குழந்தை பிறப்பு சிற்பங்கள், முன்னோர்களின்
"மரபணு திருத்தங்கள் " குறித்த அறிவு என வித்தியாசமாக பயணிக்க வைக்கிறது...
இருவரும் சேர்ந்து 173 ஆண்டுகளாக உயிர் வாழும் காட்டுவாசிப்பெண்ணை
தேடி காட்டுக்குள் போக, அவளோ..இவர்கள் கோவிலுக்கு போனதும், காட்டுக்குள் வந்ததும் தற்செயல்
இல்லை எனக்கூறி, தொடர்ச்சியாக கூறும் செய்திகள், உதிரா, எழிலுக்கு மட்டுமல்ல வாசிப்பவர்களுக்கும்
ஆச்சர்யமும்,அதிர்ச்சியாய் இருக்கலாம்.
"சோஃபி"
மத்திம வயதுடைய ஒரு ஆராய்ச்சியாளர்,ஒரு தனித்தீவு, அதில் அவரின்
இந்திரியம் கொண்டு, சுரைக்காய் கூட்டிலும்,குதிரையின் கருப்பையிலும் வைத்து வளர்க்கும்
ஒரு உயிர். அதன் பெயர் "ஹோமோ அகந்துரஸ் " எனும் அறிவியல் பெயரும்,"சோஃபி"
என்ற அழைக்கும் பெயரும் கொண்டு,கனவிலோ, கற்பனையிலோ சாதாரண மனிதனுக்கு வராத, கற்பனையோடு
பயணிக்கிறது கதை..
இப்படி உருவான "சோஃபி".உணவாக சூரியனின் ஒளியை உட்கொள்வதும்,
இரவில் நட்சத்திரங்களை பிரதிபலிப்பதுமாக,இருக்கிறாள்."சோஃபி" குறித்த தகவல்கள்,அவளுக்கான
ஆபத்துகள்,வருத்தங்கள், எதிர்கால வாய்ப்புகள் என் பலவற்றை எழுதி, ஒரு பாட்டிலுக்குள்
அடைத்து,கடலுக்குள் எறிவதாய் கதை முடிகிறது..
"மரபணுக்கள்" வழக்கமான பாதையில் பயணிக்காத ஒரு மாற்று
முயற்சி. ஆங்கிலத்தில் இப்படியான எழுத்துகளும் , திரைப்படங்களும் நிறைய உண்டு.தமிழில்
இதுவே எனக்கு தெரிந்து முதன் முறை. வித்தியாசமான முயற்சி என்று ஒற்றை வார்த்தையில்
கடந்து விட முடியாத சிறுகதை தொகுப்பு
கற்பனை எல்லோருக்கும் வரும்,ஆனால் தோழர் - ராம் பிரசாத் அவர்களின் கற்பனை அதீதத்தின்
அதீதம்.இந்த அதீதத்தை வைத்து ஒரு ஐந்து ஹாலிவுட் படங்கலும், அதன் சீக்குவெல்களும் எடுக்கலாம்.
சில இடங்களின் ஆச்சர்யமும், சில இடங்களில் அதிர்ச்சியும், இப்படி
மாறிப்போனால் எப்படி இருக்கும் என பல இடங்களில் பயமும், பதட்டமும்,கூட உண்டானது. பாம்பாக
மாறும் சேஷம் கதை,என் தூக்கத்தை திருடிப்போனது...
இப்படி "மரபணுக்கள்" நூலை வாசித்து வெளியில் வந்தும்,
வராமலும், என் மனமும், மரபணுவும் நிறைய கேள்விகளை சுமந்து,நிறையவே மாற்றம் கொண்டிருப்பதை
உணர்கிறேன்.....
மாச்சீனி(Glucose ), பாவனை
நிரல் (simulation ), பகிரி (watsapp ), இப்படி நூல் நெடுக, நல்ல பல தமிழ்ச்சொற்களை
பயன்படுத்தியிருப்பதற்காக, படைப்பாளருக்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள்...
நிறைவாக, எழுத்தாளரின் மரபணுக்களில் இன்னும் இது போல நிறைய மாற்று
சிந்தனைகள் ஏற்படட்டும்..அவைகளை எங்களுக்கு வரிகளாக்கி தரட்டும்.
எழுத்தாளர் "ராம் பிரசாத்" - அவர்களை
"wow"- சொல்லி வாழ்த்துகிறேன்...
வாசிப்பின்
மகிழ்வில்
- வினோத்
பரமானந்தன்
கூடலூர்
(தேனி )
"திறனாய்வாளரின் விபரம்"
பெயர் : செ.வினோத் பரமானந்தன்
ஊர் : கூடலூர் (தேனி மாவட்டம்)
பணி : இந்திய ராணுவத்தில் JCO. (Junior Commissioned Officer )
முகநூலில் "யாழ் துருவன்" எனும் பெயரில் கவிதைகள், கட்டுரைகள்
எழுதி வருகிறேன்...
தொடர்புக்கு : 7092664871( Whatsapp)
9042268278
Semi-Pro & Pro Sales