என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 15 July 2025

சொல்வனம் - ஷார்ட்ஸ்

மற்றுமொரு youtube shorts.

https://www.youtube.com/shorts/C-5Nlp-onlo

சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கும், சரஸ்வதி தியாகராஜன் Saraswathi Thiagarajan அவர்களுக்கும் எனது நன்றிகள் 🙏🙏🙏




 

Monday, 14 July 2025

ஜப்பான் தமிழ்ச் சங்கம்

ஜப்பான் தமிழ்ச் சங்கத்திலிருந்து யாரேனும் நட்பு வட்டத்தில் இருக்கிறீர்களா?

இந்தப் பரிமாற்றத்தைக் கடக்க நேர்ந்தால், மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளவும். ramprasath.ram@gmail.com

Friday, 11 July 2025

தென்றல் இதழில் வெளியான எனது நேர்காணல்

வடஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தென்றல்” இதழில் வெளியான எனது நேர்காணல்..

https://www.tamilonline.com/mobile/article.aspx?aid=15707

தென்றல் ஆசிரியர் குழுவுக்கும்,   மதுரபாரதி அவர்களுக்கும், சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன் 









Sunday, 6 July 2025

காலங்கடத்தி

காலங்கடத்தி


அப்போது பத்தாவது  முடித்துவிட்டு பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிலேயே தண்டால் பஸ்கி எடுத்துக்கொண்டிருந்ததில் போதாமை ஏற்பட்டு ஜிம்முக்குச் செல்லலாம் என்று முடிவானது. 

நூறு ரூபாய் தான் மாதம். அப்பா தரும் பாக்கேட் மணியில் ஜிம். அந்த ஜிம்முக்கு பெரும்பாலும் சைதாப்பேட்டை காய்கறி மார்கெட்டில் வேலை பார்ப்பவர்கள் வருவார்கள். ஜிம் ட்ரெயினர், தமிழ்நாடு ஆணழகன் போட்டியாளர் என்றார்கள். ஜிம் பாலபாடம் அவரிடம் தான். நானும் அண்ணனும் தவறாமல் செல்வோம். பண்ணிரண்டாம் வகுப்பு முடித்து பொறியியல் சேர்ந்திருந்தேன். ட்ரெயினர் என்னை 'எஞ்சினியர்' என்று அழைக்கத்துவங்கியிருந்தார்.

ஜிம்மில் முதலில் கண்டடைவது Discipline தான். அதற்காகவே ஒவ்வொருவரும் ஜிம் செல்ல வேண்டும் என்பது என் பரிந்துரை.   சத்தான உணவு.   நாள் ஒன்றுக்கு 15-17 முட்டை. காலையில் பழைய சோறு, கேழவரகு கஞ்சி. ப்ரோட்டீன் நிறைந்த உணவுகள். சோளம். காய்கறி. உலர் பழங்கள். கோழி இறைச்சி. உடலின் சக்தியை வெளியேற்றும் எந்தப் பழக்கமும் அறவே கூடாது. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே செல்லலாம்.

அந்த நினைவுகளையெல்லாம் கிளறிவிட்டுவிட்டது Alappuzha Gymkhana  திரைப்படம். திரைப்படத்தின் இறுதியில் சற்று கமர்ஷியலாக்கிவிட்டார்கள் என்றபோதிலும், பெரும்பான்மைக்கு உள்ளூர் ஜிம்,அதற்குச் செல்லும் ஆண்களின் வாழ்வில் நடக்கும்  நிகழ்வுகள் என்று கலவையாகத் தந்திருக்கிறார்கள்.  Naslen Gafoorந் 'ப்ரேமலு'வை ஒரு நூறு முறையாவது பார்த்திருப்பேன். 

சரி, இந்தப்படத்தில் என்னதான் பண்ணி வைத்திருக்கிறான் என்று பார்த்தால், உண்மையாகவே படத்திற்காக உடலளவில் நன்றாகவே உழைத்திருப்பது தெரிகிறது. 

வெறுமனே ஜிம் போனோமா, யார் பலசாலி என்று ஈகோ பார்த்து அடித்துக்கொண்டோமா, ஏரியாவில் கெத்து காட்டுவது என்றெல்லாம் இல்லாமல், இந்த விளையாட்டை வைத்து எப்படி அடுத்த கட்டம் நகர்வது என்று யோசிக்கும் நாயகர்களாகக் காட்டியிருப்பதில் சற்று ஒன்ற முடிந்தது.  நான் ஜிம் செல்லத்துவங்கியபோது, பாடி பில்டிங் துறையில் செல்லலாமா என்றொரு யோசனை இருந்தது. அதற்கேற்றார்போல், உடலில் ஆங்காங்கே cuts வைத்து, arms, chest என்று மெருகேறத்துவங்கியபோது, நிஜமாகவே அந்தத் துறையில் scope இருப்பதாகப் பட்டு, நாள் ஒன்றுக்கு பதினைந்து மணி நேரம் செலவிடக் கூட தயாராக இருந்தேன். மாநில அளவில் செயலாற்றி Sports quotaல் சீட் என்று யோசிப்பதெல்லாம் கச்சிதமாக உண்மை தான். அப்போது, அந்த வயதில் அப்படித்தான் தோன்றும். ஆலோசனையும் அந்த ரீதியில் தான் கிடைக்கப்பெறும். பிறபாடு பொறியியல், இறுதி ஆண்டு, அப்படி இப்படி என்று அதிலிருந்து படிப்படியாக ஃபோகஸ் மாறி கணிணித்துறைக்குள் வந்து நின்றது. 

விதி. வேறென்ன சொல்ல? 

ஆக, படத்தில் பல இடங்களை பால்யத்தோடு பொறுத்திப்பார்க்க முடிந்தது. இத்தனை வருடங்களில், சில விடயங்கள் மாறவே இல்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. 

எதற்காக இல்லாவிட்டாலும், ஜிம், நமக்குள் ஏற்றும் அந்த Disciplineக்காகவே, பதின் பருவத்தில் உள்ளவர்கள் ஜிம் செல்ல வேண்டும் என்பது என் ஆலோசனை. எல்லோருக்கும் வாழ்க்கை எதிர்பாப்புக்கேற்றார்போல் அமையாது. பலருக்கு, பல சமயங்களில், வாழ்க்கையில் எந்தக் கன்ட்ரோலும் இருக்காது. அதுபாட்டுக்கு அவசர அவசரமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டே இருக்கும். அதன் போக்கில் போனால், வேறொரு இடத்துக்கு நம்மைக் கடத்திக்கொண்டு போய் விட்டுவிடும். அதைத் தவிர்க்க வேண்டுமானால், ஒரு 'காலங்கடத்தி' வேண்டும். அது, நமக்குள் ஆன்ம பலம் தருவதாகவும் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை உயர்த்துவதாகவும் இருக்கவேண்டும். எதிர்காலத்தை எதிர்கொள்ள வலு கூட்டுவதாகவும் இருக்க வேண்டும்.  இதற்கெல்லாம், ஜிம் ஒரு கச்சிதமாக 'காலங்கடத்தி' என்பேன். 

ஜிம் பழகுங்கள். இளமையிலேயே ஜிம் பழகுவது சாலச்சிறப்பு. எல்லோரும் பழகுவது வெகு உத்தமம். ஜிம் பழகுவதாலேயே எல்லாவற்றுக்கும் முஷ்டியை உயர்த்த வேண்டியதில்லை என்ற முதிர்ச்சியும் இருக்க வேண்டும் தான். எதற்கு முஷ்டியைப் பயன்படுத்த வேண்டும், எதற்கு மூளையைப் பயன்படுத்தினாலேயே போதும் என்கிற பாகுபாட்டை நாம் புரிந்துகொண்டாலே போதும். மற்றபடி, பதின் பருவத்தில், எதிர்காலத்திற்கென நம்மைத் தயார் செய்வதில், மிக முக்கிய இடம் ஜிம்மிற்கு உண்டு. ஜிம், ஒரு அதி முக்கியமான புள்ளி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.



Saturday, 5 July 2025

சூர்யா சேதுபதி

சமீபமாக, சூர்யா சேதுபதி சந்திக்கும் ட்ரால் பெரிதாக ஆச்சர்யமூட்டவில்லை.

சொல்லப்போனால், நம்மை யார் தான் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள்? நெருங்கிய சொந்தங்கள் என்று நாம் நினைப்பவர்கள் கூட, அந்தப்பக்கம் போனால், நம்மைப் பற்றி வேறு விதமாகத்தான் பேசுவார்கள். இல்லை என்று யாராவது ஒருவர் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்கிறாரென்றால், விவரம் தெரியாமல் சொல்கிறார் என்று தானே பொருள்? 

அதெல்லாம் நமக்குத் தெரியவராதவரைக்கும் தான் சொந்தங்களாக இருக்க முடியும். அடுத்தவர் மனக்குரல்கள் நமக்குக் கேட்டுவிட்டால், இங்கே நண்பன், உற்றார், உறவினர், சொந்தங்கள் என்று எந்த உறவும் எவருக்கும் இருக்காது.

மறதியும்,  டெலிபதி தெரியாமல் இருப்பதுவும் தான், நம்மை சக மனிதர்களுடன் நட்புறவாக வாழ வைக்கிறது என்றால் அது மிகையில்லை. 

இப்படிச் சொல்வதால், விஜய் சேதுபதியின் மகனுக்காக வரிந்து கட்டுகிறேன் என்று எண்ண வேண்டாம். அது நோக்கமில்லை. உண்மையிலேயே, நம்மை முழுமையாக, துல்லியமாகப் புரிந்து வைத்திருப்பவர் நாம் மட்டும் தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. நாம் என்ன நினைத்து ஒன்றைச் செய்தோம், அதை மற்றவர்கள் எப்படியெல்லாம் புரிந்துகொண்டார்கள் என்பதெல்லாம் நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.  ஆண் துணை இல்லாமல் இருக்கும் பெண் என்றால் வெகுஜனப் பார்வை என்ன? கருப்பாக இருப்பவன் மீதான மற்றவர்களின் அணுகுமுறை என்ன? எளியவன் மீது அதிகாரம் மிக்கவனுக்கு இருக்கும் பார்வை என்ன? துல்லியமான புரிதலின் அடிப்படையிலா இதெல்லாம் நடக்கிறது? அஜித்குமார், ம்குமார் போன்றவர்கள் யார்?

மற்றவர்களிடம் இருப்பதெல்லாம் அவரவர் பார்வையில் நாம் பயன்படக்கூடிய ஒரு கோணம் மட்டுமே. அந்தக் கோணத்தின் வழி மட்டுமே நம்மைப் புரிந்து வைத்திருப்பார்கள். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மைக் முன்னால் நடிக்கும் பல நடிகர்கள் இருக்கிறார்கள். மைக்கில் சொல்வதற்கெண்று ஒத்திகை பார்க்கப்பட்ட வரிகளை மனனம் செய்து ஒப்புவிப்பவர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை, ஷாருக்கானிடம் 'ஜோக்கர்கள் யார்?' என்று கேட்டபோது 'Voters' என்றார். அது நகைச்சுவைக்குச் சொல்லப்பட்ட பதில் அல்ல. ஒரு தயாரிப்புடனே மைக்குகளை அண்டுவார்கள். காமிரா முன்னால் நிற்பார்கள். சூர்யா அப்படி தயார் செய்தது போல் தோன்றவில்லை. அப்படித் தயார் செய்திருந்திருந்தால் இப்படி வாயில் பபுள்கம்முடன் வந்து மீடியாக்களுக்குக் கன்டன்ட் கொடுத்திருக்க மாட்டார் என்கிற அளவில் மட்டுமே எனக்குப் புரிகிறது. 

  

 



Thursday, 3 July 2025

Rebuild

 




வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

நம்மளைச் சுத்தி தினம் தினம் குற்றங்கள் நடந்துட்டு தான் இருக்கு. எல்லாத்தையும் நாம கேள்விப்பட்டுட்டு தான் இருக்கோம். அந்தக் குற்றங்கள் நமக்கு நடக்காத மாதிரி நம்மளை நாம தகவமைச்சுக்கிட்டு தான் இருக்கோம். நம்ம சுற்றத்துல, நம்மாளு, வேத்தாளு,வேண்டியவன், வேண்டாதவன்னு தரம் பிரிச்சு நமக்கு வேண்டியவங்களுக்கு மத்தியில ஒரு வாழ்க்கையை நாம அமைச்சுக்கிறோம்.

ஆனா, அது எல்லாத்தையும் மீறி சில சமயங்கள்ல, நாம யாரை நல்லவன்ன்னு நினைச்சோமோ, யாரை வேண்டியவன்னு நினைச்சோமோ, யாரை நம்மாளுன்னு நினைச்சோமோ அவுங்களால தான் நமக்கு பொல்லாப்பும் நடந்துடும். நம்மோட கற்பிதங்களுக்குள்லெல்லாம் அடங்காதது தான் விதி, வாழ்க்கை எல்லாம்.

எவ்வளவு தான் திட்டமிட்டு வாழ்க்கையைக் கொண்டு போனாலும், நடக்கக்கூடாதது நடக்கும் போது, அதுல விழ வேண்டி வந்துடலாம். அது யாருக்கு வேணும்னாலும் நடக்கலாம். 'எனக்கெல்லாம் நடக்காது'ந்னு நம்மள்ல யாராச்சும் நினைச்சா, அவுங்க இன்னும் 'விழல'ந்னு தான் அர்த்தம். இதுவரை விழலன்னா, இனிமேல் விழ அதிக வாய்ப்பிருக்குன்னு அர்த்தம்.

எல்லார் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்துல விழ வேண்டி இருக்கும். சின்ன வயசுல விழறதுல இருக்கிற சாதகம் என்னன்னா, எழுந்தா, அதுக்குமேல விழ வேண்டிய தேவை இல்லாத ஒரு நீண்ட நெடுங்காலம் கிடைக்கும். வயசான காலத்துல வீழ்ச்சியை சந்திக்கிறதுல இருக்கிற பிரச்சனை என்னன்னா, எழறதுக்கான தெம்பே இருக்காது. So, சின்ன வயசுல விழறது ஒரு வகையில நல்லது. Its better to fall at an young age.

நமக்கு தெரிய வேண்டியது எல்லாம், விழுந்தா எப்படி எழுறதுங்குறது தான். Build பண்றது ஒரு பெரிய விஷயம் தான். ஆனா,அதை விட பெரிய விஷயம் Rebuild பண்றது. 'Rebuild' பண்ண கத்துக்கோங்க. இந்த உலகம் Build பண்ண ஆயிரத்தெட்டு வித்தை கத்துத் தரும். அதுல, நம்மாளு, வேண்டியவங்கிறதெல்லாம் வித்தைகள். ஆனா, Rebuild? அதை நிச்சயமா இவங்க யாரும் கத்துத்தர மாட்டாங்க? ஏன்னா, Rebuild பண்ண வேண்டிய இடத்துக்கு உங்களைத் தள்றவங்களே இவுங்களாத்தான் இருப்பாங்க...



Saturday, 21 June 2025

The Silent Planet - Movie

 நம் போன்றே எவரேனும் எதையேனும் யோசித்திருந்தால் 'அட!' என்று பார்ப்போமல்லவா? அது போல, வெகு சமீபத்தில் பார்த்த அறிவியல் புனைவுத் திரைப்படம் 'The Silent Planet'. 

2024ம் வருடம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.  நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் இந்தத் திரைப்படத்தை நேரம் கிடைத்தால் பாருங்கள். அப்படிப் பார்த்தவர்கள்,  சொல்வனம் இதழில் நவம்பர் 2024ல் வெளியான எனது 'நவீன சிறைச்சாலைத் தத்துவம்' சிறுகதையையும் வாசியுங்கள். 

சுட்டி இங்கே:

https://solvanam.com/2024/11/10/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/


முடிந்தால், இவ்விரண்டில் எது நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் இடுங்கள். என் ஒபினியன் ஒரு பக்கம் இருக்கட்டும். திரைப்படத்தைப் பார்க்கவும் எனது சிறுகதையை வாசிக்கவும் செய்தவர்களின் ஒபினியன் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். முடிந்தால் செய்யவும். நன்றி.




Tuesday, 17 June 2025

Reels

"இரண்டாம் அடுக்குப் பிழைத்தல் விதிகள்" சிறுகதைக்கெனவான புனைவுவனம் நேர்காணலில் நான் பகிர்ந்தவற்றை வைத்து ஒரு சிறிய Reel/shorts உருவாக்கப்பட்டிருக்கிறது. Reel/shorts உருவாக்கிய சரஸ்வதி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.  பின் வருவது அதன் சுட்டி.


https://www.youtube.com/shorts/CWZ8H2Yzb1I


2016ல், அன்றைக்கு வழக்கிலிருந்த Dating Trend ன் அடிப்படையில் ஒரு புனைவு எழுதலாம் என்று அமர்ந்தபோது, பலவாறாக யோசித்ததின் பலனாக, முடிவில், "இதை ஏன் சமூகக் கதையாக எழுதவேண்டும்? இதற்கு வேறொரு வடிவம் தேவை" என்று உணர்ந்த போது, அது தானாகவே கணித ரீதியில் அமைந்த ஒரு நான்-லீனியர் கதையாக உருவெடுத்தது. 


அதில் வரும் 100:93 விகிதாச்சாரம், அதன் அடிப்படையில், அமைந்த எஞ்சிய கணக்குகள் எல்லாமும் தானாகவே ஒரு நூல் பிடித்தார்போல் ஒரு வடிவத்தில் அமைந்தன. அப்படி எழுதியதுதான் "உங்கள் எண் என்ன?" நூல்.


போலவே, 'பிரதியெடுக்காதே' சிறுகதையும்.  ஆண்-பெண் இடையிலான ஒருவருக்கொருவர் பொறுந்திப் போதல் நிமித்தம் மேற்கொள்ளப்படும் முயல்வுகள், அதன் பின் விளைவாக எழும் சமூகக் குற்றங்கள், போதாமைகள், இயலாமைகள் ஆகியன குறித்து ஒரு கதை எழுத அமர்ந்து, பிறகு, இதை ஏன் சமூகக் கதையாக எழுத வேண்டும் என்று தோன்றியதன் பலனாகவே, அது அறிவியல் புனைவாக விரிவடைந்தது. பார்க்கப்போனால், ஆண்-பெண் உறவுச் சிக்கல்களின் 99% விழுக்காடு பிரச்சனைகளை ஒரு கழுகுப்பார்வையில் பார்த்திட ஒருவர் இவ்விரண்டு ஆக்கங்களையும் வாசித்தால் மட்டுமே போதும். (இதன் பொருள், மற்ற/மற்றவர் ஆக்கங்களை வாசிக்க வேண்டியதில்லை என்பதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். நான் அந்த அர்த்தத்தில் இவ்விதம் சொல்லவுமில்லை. தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.)


பல சமயங்களில், பல சமூகப் பிரச்சனைகளைக் குறித்து யோசித்தால், இயல்பாகவே, அது ஒரு அறிவியல் புனைவுக்கே என்னை இறுதியில் இட்டுச்சென்றுவிடுகிறது. 2020 துவங்கி, இப்படித் தோன்றி எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்த தொகுப்பாகத்தான் 'மரபணுக்கள்' தொகுப்பு உருவாகியது எனலாம். 'மரபணுக்கள்' தொகுப்பை வாசியுங்கள் என்று நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவைகள் தொடும் சமூகப் பிரச்சனைகள் ஏராளம். 'பிரதியெடுக்காதே' சிறுகதை தான் 'மரபணுக்கள்' தொகுப்பின் முதல் கதை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.


Friday, 13 June 2025

மனிதத் தவறுகள்.

 மனிதத் தவறுகள்.

*********************


குஜராத் விமான விபத்தில் மனிதத் தவறுகள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பத்தியும் ஒரு மனிதத் தவறு குறித்துத்தான்.

பிரேசிலில் "man of the hole" என்று ஒரு நபரை அழைத்திருந்தார்கள். அவர் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவரது இனத்தில் அவர் தான் கடைசி. நவீன மனித இனங்களுடன் இணைந்து வாழ விரும்பாமல்,னிமையில் வாழ்வதையே அவர் விரும்பினாராம். ஆதலால், அவரைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து அப்படியே விட்டுவிட்டார்கள். பிரேழில் காடுகளில் ஆறு அடிக்கும் ஆழமான குழிகள் வெட்டி அதனுள் வழிப்பாராம். அதனாலேயே 'man of the hole' என்று பெயர் வைத்திருந்திருக்கிறார்கள். கிடைத்ததை உண்பாராம். காட்டுக்குள்ளேயே திரிவாராம். இறுதியில், அவர் இறந்தபோது அவருக்கு அறுபது வயது ஆகியிருந்தது.

நவீன உலகின் கல்வி, மருத்துவம், ராணுவப் பாதுகாப்பு என்று எதுவும் இல்லாமலேயே அறுபது வயது வரை அவர் வாழ்ந்திருப்பது நமக்கெல்லாம் பாடம்.

அவரிடம் வேற்று கிரக மனிதர்கள் குறித்துக் கேட்டபோது தெரியாது என்று சொல்லிவிட்டாராம். பிறகு, வேற்று கிரக உயிர்கள் இப்படி இருக்கலாம் என்று நமக்கு இருக்கும் ஊகத்தைப் படமாக வரைந்து அவரிடம் காட்டியபோது, முகம் மலர்ந்து, "இவர் மன்குனாவாபு" என்றிருக்கிறார்கள்.

இதை வைத்து ஒரு கூட்டம் பூமியில் மனிதர்களுக்கு முன் வேற்று கிரக வாசிகள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. உண்மை அதுவாக இருக்க வேண்டியதில்லை தான். சரி, மனிதத் தவறு இதில் எங்கே என்று தானே கேட்கிறீர்கள்? 1700களில் பிரேசிலுக்குள் நுழைந்த போர்ச்சுகீஸியர்கள் போட்டுத்தள்ளியதில் தான் அப்போது பிரேசிலில் வாழ்ந்துகோண்டிருந்த பல பழங்குடிகள் அழிந்து போயின. பிற்பாடு, கிருத்துவத்தைப் பரப்பும் நோக்கில், அந்தப் பழங்குயினங்களின் மத நம்பிக்கைகளை, அது தொடர்பான ஆவனங்களை, கைவினைப்பொருட்களை எல்லாம் அழித்ததில், உண்மையைத் தெரிந்துகொள்ளும் எல்லா வாய்ப்புக்களையும் துப்புரவாக நவீன மனிதர்களே அழித்துவிட்டார்கள் என்பதுதான் அந்த மனிதத் தவறு.

இப்போது தாங்கள் தெரிந்தே அழிந்துவிட்டவைகளை மீண்டும் தெரிந்துகொள்ள மாங்கு மாங்கு என்று வானத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். மனித இனத்தின் நவீனத்துவங்களில் பல, மனிதத் தவறுகளை மறைக்கும், மனிதத்தவறுகளால் நேர்ந்த இழப்புகளைச் சரிசெய்யும் முயல்வுகள் தாம்.

சரி. அந்த மன்குனாவாபு தான் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? பூமிக்கடியில் குழிகளுக்குள் வாழும் ராட்சத எறும்புகளைத்தான் அந்த பழங்குடி மனிதர் குறிப்பிடுகிறார் என்பதில் வந்து நிற்கிறது. This is the most conservative conclusion என்பது குறிப்பிடத்தக்கது. ஏன்? ஏனென்றால், விபரம் தெரிந்திருக்கக்கூடிய மற்ற பழங்குடிகளைத்தான் அழித்தாயிற்றே. அவர்களோடு சேர்ந்து அழிந்து போன உண்மைகளைத் தெரிந்துகொள்ள, இனி வரும் காலம் மனித இனம் பல்லாயிரம் கோடி டாலர்களை ஆராய்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

இத்தனைக்கும் பல இடங்களில் இனவழிப்பு திட்டமிட்டு நடப்பது கூட இல்லை. காட்டை அழித்து வீடு கட்டினால் இயல்பாகவே வீட்டைச் சுற்றி பூச்சிகள், ஊர்வன, பறப்பன போன்றவைகள் விலகிச்செல்வது போல, நவீன மனிதர்களில் பெருக்கத்தால் இயல்பாகவே வாழ்வாதாரம் குன்றி எளிமையான மனிதர்களின் அழிவு நடந்து விடுகிறது. சுருக்கமாகச் சொன்னால், எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. இப்போதிருக்கும் உலகம் - அதிலுள்ள கஷ்டங்கள், சங்கடங்கள், துயரங்கள் எல்லாமும் நம் பெருக்கத்திற்கு நாம் தரும் விலை என்றால் அது மிகையில்லை.

பெருகுவானேன்? விலை தருவானேன்? But, I know, the world isn't there yet, not ready for the conversation yet.😞😞



Saturday, 31 May 2025

புனைவுவனம் - ஆசிரியரை சந்திப்போம்

 சொல்வனம் இதழின் "புனைவுவனம் - ஆசிரியரை சந்திப்போம்" நிகழ்ச்சியில், சொல்வனம் இதழில் வெளியான எனது "இரண்டாம் அடுக்குப் பிழைத்தல் விதிகள்" சிறுகதை குறித்து நேர்காணல் நடந்தது. திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் கேள்விகளுக்கு பதில்கள் வழி சிறுகதை உருவாக்கம், சிறுகதைக்கான காரணிகள் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்திருக்கிறேன். 

இந்த நிகழ்வுக்கென சொல்வனம் இதழாசிரியர்களுக்கும், திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும், ஒருங்கிணைத்த பாஸ்டன் பாலா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.


https://www.youtube.com/watch?v=8hE_Q3bNcyA