அமெரிக்காவில் எழுத்தும், இலக்கிய இதழ்களும்.
*****************************************************
எழுதி எழுதி ஓரளவு தன்னிறைவு வந்த பிறகு, எழுத்து பழகுபவர்களுக்காக இதழ் துவங்குவார்கள். நல்ல எண்ணம் தான். இல்லையா?
ஆனால், இதிலும் பிரச்சனைகள் இருக்கின்றன என்பது உள்ளே நுழைந்த பிறகு தான் தெரிகிறது.
1. எந்த படி நிலையை, அளவீடுகளை, மதிப்பீடுகளைப் பின்பற்றி எழுதி பயிற்சி செய்து இந்த இடம் வந்தோமோ அதே படி நிலையை, அளவீடுகளை, மதிப்பீடுகளை புதியவர்களும் ஏற்றால் மட்டுமே நம் ஆலோசனைகள் செல்லுபடி ஆகும். பல இடங்களில் அது நடவாது. பல தருணங்களில், புதிதாக எழுத்து பழகுபவர்கள் அவர்களுக்கென ஒரு படி நிலையை, அளவீடுகளை , மதிப்பீடுகளை வைத்திருக்கவும் செய்யலாம்.
அதில் ஒன்றும் தவறில்லையே. மதிப்பிடக்கூடிய , அளவிடக்கூடிய எதுவுமே பயிற்சிக்கு மிக உதவியாக இருக்கும் தான். அளவீடுகளோ, மதிப்பீடுகளோ தேவையில்லை என்று இருப்பதும் ஒரு அளவீடுதான், மதிப்பீடுதான் என்று எண்ணும் ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களும் எழுதுவார்கள். ஆனால், வளர்ந்த எழுத்தாளர்களின் மதிப்பீடுகள், அளவீடுகளை இவர்கள் பயன்படுத்துவதில்லை.
இதில் மேலாண்மை சிக்கல் எழுந்துவிடுகிறது. உதாரணமான ஒரு மலருக்கு சுமார் 70 ஆக்கங்கள் வருகிறதென்று வைத்துக்கொள்வோம். எல்லாமும் சுயாதீனமாக, எவ்வித அளவீடும், மதிப்பீடும் இன்றி எவ்வித தனிக்கையும் இன்றி எழுதப்பட்டவை. இன்னும் சொல்லப்போனால், மலரின் ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் தான் முதல் படி தனிக்கையாளர்கள்.
இதில் என்ன சிக்கல்? மலரின் ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் 70 ஆக்கத்தையும் வாசிக்க வேண்டும். விசாவில் செயற்கை நுண்ணறிவுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்ற சூழலில் 7 ஆக்கங்கள் வாசிக்கக் கூட நேரமிருக்காது. வாசிப்பு என்பது கண்களைத் திரையில் ஓடவிடுவது அல்ல. ஆக்கத்தை ஆழ்ந்து வாசித்து, குறை நிறைகள் பட்டியலிட வேண்டும். அதற்கு நேரமெடுக்கும். 70 ஆக்கங்களில் பத்து பன்னிரண்டைத் தான் தேர்வு செய்ய வேண்டும். மற்றதை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேட்டால் பதில் சொல்ல வேண்டும். உடனே எதிர்தரப்பிலிருந்து வாதம் செய்யத் துவங்குவார்கள். உடனே ஒரு அரை மணி நேர விவாதத்திற்குள் செல்ல வேண்டும். அரை மணி நேர விவாதம் ஒரு மணி நேரம் நீடிக்கலாம். இறுதில், ஒருமைத்தன்மை ஏற்பட்டு விடும் என்றில்லை. நாம் ஏதோ திட்டமிட்டு ஒரு ஆக்கத்தைக் காரணமே இல்லாமல் தள்ளி வைத்துவிட்டோம் என்று சண்டைக்கு வருவார்கள். இத்தனை நேரம், விசாவில் இருப்பவனுக்கு சாத்தியமில்லை.
இதற்காகவே, ஆசிரியர் குழுவை விட்டு வெளியேறிவிடுவது சரியான யோசனையாகத் தெரியத் துவங்கும். இங்கே பிரச்சனை, பயிற்சியற்ற எழுத்து தான்.அதனை சம்பந்தப்பட்டவர்கள் திருத்திக்கொள்ளும் பட்சத்தில், நம்மாளும் எளிதாக நமக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச நேரத்தில் மலருக்கு உழைக்க முடியும். அது அவர்களுக்குமே பயனுள்ளதாக அமையும். ஆனால், அதில் துவக்க நிலை எழுத்தாளர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. பெரும்பாலும் எவரும் அந்த வழியைத் தெரிவு செய்வதில்லை. அதை வைத்து, எழுத்து அவர்களது நோக்கம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். எழுத்து நோக்கமில்லை என்றால் "எண்ணிக்கை கணக்கு" அமெரிக்காவில் எதற்கு பயன்படும் என்பதை வைத்து நோக்கமென்ன்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்த இடத்தில், "எண்ணிக்கை கணக்கு" நோக்கத்திற்கு இதழ்கள் நோக்கி வருபவர்களை விட்டுவிடலாம். எழுத்தை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு,
இலக்கிய இதழ்களைப் பயிற்சிக்குப் பயன்படுத்திக்கொள்வதில் இருக்கும் சாதகங்கள் பற்றி கொஞ்சம் சொல்வது பொறுத்தமாக இருக்குமென்று நம்புகிறேன்.
1. இலக்கிய இதழ்கள் தனிக்கை செய்யும். இது நம் எழுத்தின் குறை நிறைகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய உதவும். மிக விரைவிலேயே நம் எழுத்து கண் முன்னால் மெருகேறிவிடும். நாம் ஒரு ஆக்கத்தை ஒரு இதழுக்கு, அங்கிருந்து பதில் வரவில்லை என்றால், நம் எழுத்தில் என்ன குறை என்று பார்க்க வைக்கும். இந்த வழியில், முதல் ஆக்கம் வெளியாகத்தான் நேரமெடுக்கும். அடுத்தடுத்த ஆக்கங்கள், முதல் ஆக்கத்தில் கிடைத்த படிப்பினைகளால் மிக எளிதாகிவிடும்.
2. இலக்கிய இதழ்கள் நம் எழுத்தை பலருக்கும் எடுத்துச்செல்லும் வேலையை செய்துவிடுகின்றன. ஒரு எழுத்தாளர் தனக்கென ஒரு வாசகர் கூட்டத்தை உருவாக்கிவிட முடியும்.
3. இப்போது பன்மொழி எழுத்தாளராக இருப்பது குறித்து எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறேன். அமெரிக்க எழுத்துலகில் சன்மானம் கிடைக்க இருக்கும் வாய்ப்புகள் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதற்கு நம் எழுத்து மென்மேலும் மெருகேற வேண்டும். அதற்கு இலக்கிய இதழ்களில் மேற்கொள்ளும் படிப்படியான பயிற்சி நன்றாக உதவும்.
மேற்சொன்ன சாதகங்களை ஏற்காமல் இயங்கும் துவக்க நிலை எழுத்தாளர்கள் ஏழெட்டு நூல்கள் வெளியிட்ட பிறகும் தொடர்ந்து 'பயிற்சியற்ற எழுத்தை'யே தொடர்ந்து வெளித்தள்ளும் துவக்க நிலை எழுத்தாளர்களாக இருப்பதை கவனிக்க நேரிடுகிறது. துவங்கிய இடத்திலேயே நின்றுகொண்டிருப்பார்கள். இப்படி பல 'எழுத்தாளர்களை' நான் பார்த்திருக்கிறேன், கடந்திருக்கிறேன்.
இது நேர விரயம் தான். இதில் காட்டிய உழைப்பை, நேரத்தை ஒரு துப்பாக்கி சுடுதலிலோ, snow bowling, archery, அல்லது ஏதேனும் விளையாட்டிலோ காட்டியிருந்தால், அந்தந்த துறைகளில் ஒரு ஐந்து ஆண்டுகளில் ஏதேனும் ஒரு திட்டவட்டமான இடத்திற்கு நகரலாம். அதை ஏன் இவர்கள் தங்களுக்குத் தாங்களே தடுத்துக்கொள்கிறார்கள் என்பது மட்டுமே எனக்கு அடிக்கடி எழும் கேள்வியாக இருக்கிறது. இது தேவையற்றது. இலக்கற்றது.
துவக்க நிலை எழுத்தாளர்கள் இதனை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் நேரம். அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம் தான். ஆனால், உங்கள் அசல் திறமை எது என்பதை நீங்கள் தான் தேடிக் கண்டடைய வேண்டும். ஒரு துப்பாக்கி சுடும் வீரர் தன்னைத் தமிழ் எழுத்தாளராகக் கற்பனை செய்து கொள்வதினாலோ, " நீயும் எழுத்தாளன் தான்" என்று ஏற்றிவிட அவரைச் சுற்றி சிலர் இருப்பதினாலோ, இம்மாதிரியானவர்களை மேடையேற்றுவதில் இருக்கும் வர்த்தகத்தை எதிர்பார்த்து சில இயங்குவதினாலோ, தொடர்ந்து 'தமிழ் எழுத்துலகில்' 'போராடி' 'நீந்துவதாக' நினைத்துக்கொள்வது, ஒரு கனவுலகில் வாழ்வது போலத்தான். அந்த துப்பாக்கி சுடும் வீரர் தன்னையே ஏமாற்றிக்கொள்வது போலத்தான். தன் அசல் திறமையை தமிழுக்குள் தொலைத்துவிட்டு, தேடுவதைப் போல.
இதை நீங்கள் செய்யாதீர்கள். இது நேர விரயம் மட்டுமே. இது உங்கள் மீதான அக்கறை.
CHOOSE YOUR BATTLES!
CHOOSE YOUR BATTLES!
CHOOSE YOUR BATTLES!
CHOOSE YOUR BATTLES!
CHOOSE YOUR BATTLES!
CHOOSE YOUR BATTLES!
