என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 17 October 2009

ப‌டுக்கைய‌றைக் கொலை - 3

ப‌டுக்கைய‌றைக் கொலை - 3


ஊருக்கு தெரிய வேண்டாத துன்பத்தை சுமந்தபடி சன்னமாய் அழுதது அந்த வீடு. நடு வீட்டுல் கயிற்றுக்கட்டிலில் எலும்பும் தோலுமாய் வற்றிப்போய் சுயநினைவின்றி கிடந்தார் அப்பா. மாரடைப்பு. இன்னும் நினைவு திரும்பவில்லை. கட்டிலருகே அழுதபடி துவண்டு கிடந்தாள் அம்மா. சற்று தள்ளி, தன் இருகால்களினிடையே முகம் புதைத்து விம்மிக்கொண்டிருந்தாள் புவனா.

இதற்கெல்லாம் காரணம் வைரவன். ஊரில் முக்கிய புள்ளி. தோட்டம் வயல்வெளி என்று பரம்பரை சொத்து ஏராளம். 38 வயதுக்குமேலும் திருமணம் செய்யாமல் ஊரெல்லாம் வப்பாட்டி வைத்து, புடுபுடுவென புல்லட் சத்தம் காதைக்கிழிக்க பவனி வரும் ஒரு உதவாக்கரை. ஏழ்மை காரணமாக புவனா அதே ஊரில் ஒரு கருவாடு, இரால் பண்ணையில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாள். என்ன‌தான் இரால் ப‌ண்ணையில் வேலை என்றாலும் புவ‌னாவிற்கு ம‌ன‌சு ரொம்ப‌ பெருசு. த‌ன்னால் முடிந்த‌வரை, யாரென்றும் பாராமல் தைரியமாய் எல்லோர்க்கும் உத‌வுவாள். அதே ஊரில் பைத்திய‌மாய்த் திரிந்து கொண்டிருந்த மஞ்சு என்ற ஒரு பெண்ணை ஒரு ம‌ழை நாளில் சில‌ பொறுக்கிக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்பார்க்க‌, அதைத் த‌ந்திர‌மாய்த் த‌டுத்து அவ‌ளை அன்று முத‌ல் பாதுகாப்பாய் த‌ன் வீட்டிலேயே த‌ங்க‌ வைத்த‌வ‌ள். என்ன‌தான் ம‌ஞ்சுவிற்கு பைத்திய‌ம் தெளிந்தாலும், ஊர் ந‌ம்ப‌ ம‌றுக்க‌ த‌ன் ச‌கோத‌ரியாய் அவ‌ளைத் த‌ன் ஒத்தாசைக்கு என்று கார‌ண‌ம் சொல்லித் த‌ன்னுட‌னேயே வேலைக்கு வைத்துக்கொண்டாள். வீடுவீடாய் ட்ரை சைக்கிளில் சென்று இரால், க‌ருவாடு விற்ப‌துதான் வேலை. ம‌ஞ்சுவும் புவ‌னாவும் மாறி மாறி செய்வார்க‌ள்.


உதவி கேட்க ஆயிரம் பேர் இருந்தும் ஓரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் வேறு வழியின்றி இவனிடம் பண உதவி கேட்டு, திருப்பிதர முடியாமல் போகவே, அந்த பணத்திற்கு ஈடாக நன்றாய் வளர்ந்து ஆளாகியிருந்த, அழகு மயில் புவனாவை 'வைத்துக்கொள்வதாக' வைரவன் கட்டாயப்படுத்த, அதனால் வந்த மாரடைப்பில் விழுந்தவர்தான், இதோ வீடே துக்கவீடாய் மாறியிருந்தது.
அந்த மோசமான சூழ் நிலையிலும், கொஞ்ச‌ம் கூட‌ ம‌ன‌சாட்சியின்றி புவ‌னாவை த‌ன் வீட்டுக்கு வ‌ர‌ச்சொல்லி ஆள் அனுப்பியிருந்தான். கேட்டதெல்லாம் தருவதாகச் சொல்லி அருணா என்கிற பெண்ணை தூது அனுப்பி, அதிலும் தன் அனுபவத்தை காட்டியிருந்தான். புவனாவிற்கு சகலமும் புரிந்துபோனது. அவன் நிறுத்தப்போவதில்லை. அவன் ஒரு மிருகம். மிருகத்திடம் மனசாட்சி எதிர்பார்க்க முடியாது.

தூதாய் வந்த பெண்ணிற்கு இதில் நல்ல அனுபவம் போல. பக்குவமாய் புரிய வைத்தாள். புவனா ஒரு முடிவிற்கு வந்தாள். அங்கீகரிப்பாய் புன்னகை செய்தாள். அதில் பல அர்த்தங்கள் உள்ளடக்கினாள். கடைக்குச்சென்று மீடியம் சைஸ் சட்டை ஒன்றை வாங்கி தூது வந்தவளிடம் தந்தனுப்பினாள். யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளும்படி வைரவனிடம் சொல்லச்சொல்லி அனுப்பினாள்.


அருணா புன்சிரிப்பாய் அந்த ச‌ட்டையை வைர‌வ‌னிட‌ம் த‌ர‌, அவ‌னுக்கு புரிந்துவிட்ட‌து. த‌ன் ஆஜானுபாகு உட‌ல் இளைக்க‌வேண்டும், இள‌ந்தோற்ற‌ம் வேண்டுமென்று அவ‌ள் குறிப்பால் உண‌ர்த்திய‌து புரிந்துகொண்டு உட‌ல் இளைத்தான். ப‌டித்த‌ பெண் அல்ல‌வா? விருப்ப‌த்திலும், அதை வெளிக்காட்டுவ‌திலும் தெரிந்த‌ முதிர்ச்சி க‌ண்டு அதிச‌யித்தாள் அருணா. அவ‌ளும் ஒரு கால‌த்தில் விப‌சாரியாய் இருந்த‌வ‌ள் தான். இருந்தாலும் இத்துணை நெளிவு சுளிவு தெரிந்த‌வ‌ளாய் அவ‌ள் இருக்க‌வில்லை. இந்த கால‌த்துப்பெண்க‌ள் மிக‌வும் தெளிவுதான்.

என்ன‌ இருந்தாலும் ஒரு பாத‌க‌னுக்கு ப‌டுக்கைய‌றைப்பாவையாக‌ இருக்க‌ப்போவ‌தை நினைத்து அவள் வெதும்பியிருக்க‌வேண்டும். புவ‌னா இளைத்துக்கொண்டே போனாள். உட‌ல் மெலுந்து கொண்டே போன‌து. ஆனால், புவ‌னா அதைப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌ட்ட‌தாக‌த் தெரிய‌வில்லை.

வைர‌வ‌னைத் த‌ன் வீட்டுக்கு வ‌ர‌ வேண்டாமென்றாள். தானே ஒரு நாள் அவ‌ன் வீட்டுக்கு வ‌ருவ‌தாக‌ச் சொன்னாள். ஒரே வீட்டில் இருந்த‌தினால், ம‌ஞ்சுவுக்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌து புரியாம‌ல் இல்லை. புவ‌னா, அவ‌ளுக்கு தெய்வ‌ம். புவ‌னாதான் என்ன‌ செய்வாள் ஒற்றை ஆளாய், அதுவும் பெண்ணாய். அவ‌ளைச்சொல்லிக் குற்ற‌மில்லை. எல்லாம் வைர‌வ‌னால்தான். இதுபோல் எத்த‌னை பெண்க‌ளை சீர‌ழித்திருப்பான். த‌ன்னைக் காப்பாற்றிய‌ புவ‌னாவை காப்பாற்ற‌ வேண்டும். அவ‌ளை ம‌ட்டும‌ல்ல‌, எல்லா பெண்க‌ளையும். அத‌ற்கு வைர‌வ‌ன் கொல்ல‌ப்ப‌ட‌ வேண்டும். யாருக்கும் தெரியாமல் தான் கொன்றுவிட்டால், போலீஸ் க‌ண் த‌ன் மீது விழாது. ஏனெனில் தான் ஒரு பைத்திய‌ம் என்ப‌தாக‌த்தான் ஊரில் எல்லோருக்கும் நினைப்பு. அப்ப‌டியே தெரிந்தாலும் பைத்திய‌த்திற்க்குதான் ம‌ருத்துவ‌ சிகிச்சை த‌ருவார்க‌ள். இந்த ப‌ண‌ப்பைத்திய‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் பைத்திய‌க்கார‌ ஆஸ்ப‌த்திரி எவ்வ‌ள‌வோ மேல். ம‌ஞ்சு வ‌ஞ்ச‌ம் கொண்டாள். அவ‌னைக் கொல்ல‌ ச‌ம‌ய‌ம் பார்த்தாள். நாள் குறித்தாள்.

இர‌ண்டு நாள், க‌ழித்து ஒரு மாலை வேளையில், ம‌ஞ்சு த‌ன் இடுப்பில் கூர்மையான‌ க‌த்தியை ம‌றைத்து வைத்து வைர‌வ‌ன் வீட்டுக்கு ட்ரை சைக்கிளில் இரால், க‌ருவாடு இற‌க்க‌ சென்றாள். செல்லும் வ‌ழியெங்கும் ச‌ன‌ம் த‌ள்ளிப்போன‌து நாற்ற‌த்துக்கு ப‌ய‌ந்து. வாலிப‌ர்க‌ள் பைத்திய‌த்திற்கு ப‌ய‌ந்து ஒதுங்கினார்க‌ள். ச‌த்த‌மாய் பாட்டுப்பாடி, த‌லையை இப்ப‌டியும் அப்ப‌டியுமாய் அசைத்து, சிரித்த‌வாறே ம‌ஞ்சு வைர‌வ‌ன் வீட்டை நெருங்கினாள். கொல்லைப்புற‌த்தில் வ‌ண்டியை நிறுத்திவிட்டு, இடுப்பில் ம‌றைத்த‌ க‌த்தியுட‌ன் வைர‌வ‌னை தேடினாள். ஹால், வ‌ராண்டா, ரூம், சாமிய‌றை, ச‌மைய‌ற்க‌ட்டு, தோட்ட‌ம் என் எங்கு தேடியும் வைர‌வ‌ன் கிடைக்க‌வில்லை.

எங்கு போயிருப்பான்? ச்சே, இவ‌னுக்கெல்லாம் நேர‌ம் ச‌ரியாய் அமைகிற‌தே? த‌ப்பிவிட்டானே.. மாட்டாம‌லா போவான். நாளையோ நாளை ம‌று நாளோ நிச்சயம் மாட்டுவான். புவ‌னாவை க‌ள‌ங்க‌ப்ப‌ட‌ விட‌க்கூடாது. அத‌ற்குள் அவ‌னை கொன்றுவிட‌லாம். நாளையே கொன்றுவிட‌லாம் என்று முடிவு செய்து வ‌ண்டியை திருப்பினாள், க‌டைக்கு. க‌டைதாண்டி ஒரு குப்பைமேட்டை ஒட்டிய‌ வாய்க்காலில் விற்ற‌து போக‌ மீதியைக் கொட்டிவிடுவ‌து வ‌ழ‌க்க‌ம்.

வாய்க்காலை ஒட்டி வ‌ண்டி நின்ற‌தும் இராலும், கருவாடு மூட்டையும் மெல்ல அசைந்தது கண்டு மஞ்சு துணுக்குற்றாள். நொடிகள் செல்ல செல்ல பலமாக அசைந்தது. சற்று நேரத்தில் இராலை, க‌ருவாடைக் க‌லைத்துக்கொண்டு புவ‌னா இற‌ங்குவ‌தைக்க‌ண்டு ம‌ஞ்சு அதிர்ச்சிய‌டைந்தாள். வ‌ண்டியில் வைர‌வ‌னின் உயிர‌ற்ற‌ உட‌ல் க‌ருவாடுக‌ளுக்கு ம‌த்தியில் தெரிந்த‌து. ‌புவ‌னா, வைர‌வ‌னின் பிரேத‌த்தோடு ஒரு பெரிய‌ க‌ல்லைக் க‌ட்டி சாக்க‌டையில் த‌ள்ளினாள். கையோடு வைத்திருந்த கொடிய விஷம் நிறைந்த குப்பியை சாக்கடையில் வீசினாள்.‌ பின், கடைக்கு வந்து தண்ணீர் தெளித்து தன் காது மடல்களை மிகக்கவனமாக சோப்பு போட்டு கழுவினாள்.

ம‌ஞ்சுவுக்கு புரிந்துவிட்ட‌து. தான் வைர‌வ‌னைக் கொல்ல‌, அவன் வீடு நோக்கி ட்ரைசைக்கிளில் சென்ற‌போதே புவ‌னா ட்ரைசைக்கிளில் தான் இருந்திருக்கிறாள். அவ‌ள் உட‌ல் மெலிந்து போயிருந்த‌தால் வித்தியாச‌ம் தெரிய‌வில்லை. மஞ்சு வீட்டினுள் வைரவனைத் தேடிக்கொண்டிருந்தபோது, புவ‌னா வைர‌வ‌னை அவன் படுக்கையறையில் ச‌ந்தித்திருக்க‌ வேண்டும். புவனாவை நெருங்கிய வைரவன் அவள் கன்னத்தில் முத்தம் பதித்துக்கொண்டே அவள் காது மடல்களை பொங்கி வந்த காமத்தில் கடித்திருக்கவேண்டும். விஷம் தடவப்பட்ட காதுமடல்களிலிருந்த‌ கொடிய விஷம் அவனைக் கொன்றிருக்க வேண்டும். வைரவனின் உயிரற்ற உடலை புவனா ட்ரைசைக்கிளில் கருவாட்டு மூட்டைகளுக்கு மத்தியில் மறைத்து தானும் ஒளிந்திருக்கவேண்டும். வைரவன் ஏற்கனவே மெலிந்திருந்ததால், வித்தியாசமாய் தெரிந்திருக்கவில்லை.


இப்போது புரிந்தது மஞ்சுவிற்கு, புவனா வைரவனை ஏன் இளைக்கச் சொன்னாள் என்று.

- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ramprasathtcs@gmail.com)