என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 21 June 2025

The Silent Planet - Movie

 நம் போன்றே எவரேனும் எதையேனும் யோசித்திருந்தால் 'அட!' என்று பார்ப்போமல்லவா? அது போல, வெகு சமீபத்தில் பார்த்த அறிவியல் புனைவுத் திரைப்படம் 'The Silent Planet'. 

2024ம் வருடம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.  நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் இந்தத் திரைப்படத்தை நேரம் கிடைத்தால் பாருங்கள். அப்படிப் பார்த்தவர்கள்,  சொல்வனம் இதழில் நவம்பர் 2024ல் வெளியான எனது 'நவீன சிறைச்சாலைத் தத்துவம்' சிறுகதையையும் வாசியுங்கள். 

சுட்டி இங்கே:

https://solvanam.com/2024/11/10/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/


முடிந்தால், இவ்விரண்டில் எது நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் இடுங்கள். என் ஒபினியன் ஒரு பக்கம் இருக்கட்டும். திரைப்படத்தைப் பார்க்கவும் எனது சிறுகதையை வாசிக்கவும் செய்தவர்களின் ஒபினியன் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். முடிந்தால் செய்யவும். நன்றி.




Tuesday, 17 June 2025

Reels

"இரண்டாம் அடுக்குப் பிழைத்தல் விதிகள்" சிறுகதைக்கெனவான புனைவுவனம் நேர்காணலில் நான் பகிர்ந்தவற்றை வைத்து ஒரு சிறிய Reel/shorts உருவாக்கப்பட்டிருக்கிறது. Reel/shorts உருவாக்கிய சரஸ்வதி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.  பின் வருவது அதன் சுட்டி.


https://www.youtube.com/shorts/CWZ8H2Yzb1I


2016ல், அன்றைக்கு வழக்கிலிருந்த Dating Trend ன் அடிப்படையில் ஒரு புனைவு எழுதலாம் என்று அமர்ந்தபோது, பலவாறாக யோசித்ததின் பலனாக, முடிவில், "இதை ஏன் சமூகக் கதையாக எழுதவேண்டும்? இதற்கு வேறொரு வடிவம் தேவை" என்று உணர்ந்த போது, அது தானாகவே கணித ரீதியில் அமைந்த ஒரு நான்-லீனியர் கதையாக உருவெடுத்தது. 


அதில் வரும் 100:93 விகிதாச்சாரம், அதன் அடிப்படையில், அமைந்த எஞ்சிய கணக்குகள் எல்லாமும் தானாகவே ஒரு நூல் பிடித்தார்போல் ஒரு வடிவத்தில் அமைந்தன. அப்படி எழுதியதுதான் "உங்கள் எண் என்ன?" நூல்.


போலவே, 'பிரதியெடுக்காதே' சிறுகதையும்.  ஆண்-பெண் இடையிலான ஒருவருக்கொருவர் பொறுந்திப் போதல் நிமித்தம் மேற்கொள்ளப்படும் முயல்வுகள், அதன் பின் விளைவாக எழும் சமூகக் குற்றங்கள், போதாமைகள், இயலாமைகள் ஆகியன குறித்து ஒரு கதை எழுத அமர்ந்து, பிறகு, இதை ஏன் சமூகக் கதையாக எழுத வேண்டும் என்று தோன்றியதன் பலனாகவே, அது அறிவியல் புனைவாக விரிவடைந்தது. பார்க்கப்போனால், ஆண்-பெண் உறவுச் சிக்கல்களின் 99% விழுக்காடு பிரச்சனைகளை ஒரு கழுகுப்பார்வையில் பார்த்திட ஒருவர் இவ்விரண்டு ஆக்கங்களையும் வாசித்தால் மட்டுமே போதும். (இதன் பொருள், மற்ற/மற்றவர் ஆக்கங்களை வாசிக்க வேண்டியதில்லை என்பதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். நான் அந்த அர்த்தத்தில் இவ்விதம் சொல்லவுமில்லை. தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.)


பல சமயங்களில், பல சமூகப் பிரச்சனைகளைக் குறித்து யோசித்தால், இயல்பாகவே, அது ஒரு அறிவியல் புனைவுக்கே என்னை இறுதியில் இட்டுச்சென்றுவிடுகிறது. 2020 துவங்கி, இப்படித் தோன்றி எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்த தொகுப்பாகத்தான் 'மரபணுக்கள்' தொகுப்பு உருவாகியது எனலாம். 'மரபணுக்கள்' தொகுப்பை வாசியுங்கள் என்று நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவைகள் தொடும் சமூகப் பிரச்சனைகள் ஏராளம். 'பிரதியெடுக்காதே' சிறுகதை தான் 'மரபணுக்கள்' தொகுப்பின் முதல் கதை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.


Friday, 13 June 2025

மனிதத் தவறுகள்.

 மனிதத் தவறுகள்.

*********************


குஜராத் விமான விபத்தில் மனிதத் தவறுகள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பத்தியும் ஒரு மனிதத் தவறு குறித்துத்தான்.

பிரேசிலில் "man of the hole" என்று ஒரு நபரை அழைத்திருந்தார்கள். அவர் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவரது இனத்தில் அவர் தான் கடைசி. நவீன மனித இனங்களுடன் இணைந்து வாழ விரும்பாமல்,னிமையில் வாழ்வதையே அவர் விரும்பினாராம். ஆதலால், அவரைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து அப்படியே விட்டுவிட்டார்கள். பிரேழில் காடுகளில் ஆறு அடிக்கும் ஆழமான குழிகள் வெட்டி அதனுள் வழிப்பாராம். அதனாலேயே 'man of the hole' என்று பெயர் வைத்திருந்திருக்கிறார்கள். கிடைத்ததை உண்பாராம். காட்டுக்குள்ளேயே திரிவாராம். இறுதியில், அவர் இறந்தபோது அவருக்கு அறுபது வயது ஆகியிருந்தது.

நவீன உலகின் கல்வி, மருத்துவம், ராணுவப் பாதுகாப்பு என்று எதுவும் இல்லாமலேயே அறுபது வயது வரை அவர் வாழ்ந்திருப்பது நமக்கெல்லாம் பாடம்.

அவரிடம் வேற்று கிரக மனிதர்கள் குறித்துக் கேட்டபோது தெரியாது என்று சொல்லிவிட்டாராம். பிறகு, வேற்று கிரக உயிர்கள் இப்படி இருக்கலாம் என்று நமக்கு இருக்கும் ஊகத்தைப் படமாக வரைந்து அவரிடம் காட்டியபோது, முகம் மலர்ந்து, "இவர் மன்குனாவாபு" என்றிருக்கிறார்கள்.

இதை வைத்து ஒரு கூட்டம் பூமியில் மனிதர்களுக்கு முன் வேற்று கிரக வாசிகள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. உண்மை அதுவாக இருக்க வேண்டியதில்லை தான். சரி, மனிதத் தவறு இதில் எங்கே என்று தானே கேட்கிறீர்கள்? 1700களில் பிரேசிலுக்குள் நுழைந்த போர்ச்சுகீஸியர்கள் போட்டுத்தள்ளியதில் தான் அப்போது பிரேசிலில் வாழ்ந்துகோண்டிருந்த பல பழங்குடிகள் அழிந்து போயின. பிற்பாடு, கிருத்துவத்தைப் பரப்பும் நோக்கில், அந்தப் பழங்குயினங்களின் மத நம்பிக்கைகளை, அது தொடர்பான ஆவனங்களை, கைவினைப்பொருட்களை எல்லாம் அழித்ததில், உண்மையைத் தெரிந்துகொள்ளும் எல்லா வாய்ப்புக்களையும் துப்புரவாக நவீன மனிதர்களே அழித்துவிட்டார்கள் என்பதுதான் அந்த மனிதத் தவறு.

இப்போது தாங்கள் தெரிந்தே அழிந்துவிட்டவைகளை மீண்டும் தெரிந்துகொள்ள மாங்கு மாங்கு என்று வானத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். மனித இனத்தின் நவீனத்துவங்களில் பல, மனிதத் தவறுகளை மறைக்கும், மனிதத்தவறுகளால் நேர்ந்த இழப்புகளைச் சரிசெய்யும் முயல்வுகள் தாம்.

சரி. அந்த மன்குனாவாபு தான் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? பூமிக்கடியில் குழிகளுக்குள் வாழும் ராட்சத எறும்புகளைத்தான் அந்த பழங்குடி மனிதர் குறிப்பிடுகிறார் என்பதில் வந்து நிற்கிறது. This is the most conservative conclusion என்பது குறிப்பிடத்தக்கது. ஏன்? ஏனென்றால், விபரம் தெரிந்திருக்கக்கூடிய மற்ற பழங்குடிகளைத்தான் அழித்தாயிற்றே. அவர்களோடு சேர்ந்து அழிந்து போன உண்மைகளைத் தெரிந்துகொள்ள, இனி வரும் காலம் மனித இனம் பல்லாயிரம் கோடி டாலர்களை ஆராய்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

இத்தனைக்கும் பல இடங்களில் இனவழிப்பு திட்டமிட்டு நடப்பது கூட இல்லை. காட்டை அழித்து வீடு கட்டினால் இயல்பாகவே வீட்டைச் சுற்றி பூச்சிகள், ஊர்வன, பறப்பன போன்றவைகள் விலகிச்செல்வது போல, நவீன மனிதர்களில் பெருக்கத்தால் இயல்பாகவே வாழ்வாதாரம் குன்றி எளிமையான மனிதர்களின் அழிவு நடந்து விடுகிறது. சுருக்கமாகச் சொன்னால், எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. இப்போதிருக்கும் உலகம் - அதிலுள்ள கஷ்டங்கள், சங்கடங்கள், துயரங்கள் எல்லாமும் நம் பெருக்கத்திற்கு நாம் தரும் விலை என்றால் அது மிகையில்லை.

பெருகுவானேன்? விலை தருவானேன்? But, I know, the world isn't there yet, not ready for the conversation yet.😞😞