என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 3 May 2019

பாதசாரி விஸ்வநாதன் எழுதிய 'காசி'

பாதசாரி விஸ்வநாதன் எழுதிய 'காசி' சிறுகதையும் தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்வாகியிருக்கிறது.

காசி திறமைசாலி. புத்திசாலி. சாமான்ய மனிதர்கள் வாழும் தினசரி வாழ்க்கையில் விருப்பமில்லாதவன். அப்படியானால் அவன் வெற்றியாளனாகியிருக்க வேண்டுமே? இல்லை. அங்கு துரதிருஷ்டம் விளையாடிவிடுகிறது. ஆம். இதை குறித்துக்கொள்ளுங்கள். துரதிருஷ்டம். எந்த வேலையிலும் அவனால் ஒன்ற முடியவில்லை. இதற்கு அர்த்தம், அவனது திறமைக்கு ஏற்ற வேலை இல்லை அது என்பதுதான். ஓரிரு இடங்களில் ஒன்றிவிட்டு பின் தொடர்ச்சியாக இயங்க முடியாமல் வந்துவிடுகிறான்.

சாமான்ய மனிதர்கள் அளவுக்கு அறம் இன்றி, உண்மைகளை தேவைக்கேற்ப வளைத்து, அடுத்தவனை இறக்கி, ஏமாற்றி வாழ காசிக்கு வரவில்லை என்பதை விட அவ்விதமாக பிழைக்க விருப்பமில்லை. விளைவு, மன நலம் பாதிக்கப்பட்டவன் என்று முத்திரை  குத்தப்படுகிறான். அவனுக்கு பிறகு என்னாகிறது என்பது மீதிக்கதை.

காசி சிறுகதையை காசி போன்ற அத்தனை அதீத திறமைசாலியாக இருந்தும், துரதிருஷ்டத்தின் காரணத்தால் சாமான்ய மனிதர்களுடன் பிழைக்க நேர்ந்து எண்ணிக்கையில் அதிகமுள்ள சாமான்யர்களின் கூட்டுச்சதியால் வீழும் அத்தனை மனிதர்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். பாராமுகம் , கள்ள மெளனம் போன்றவர்களால் வஞ்சகம் செய்யப்படுவதை எதிர்த்து நிமிர்ந்து நிற்கு ஓரளவுக்காவது அதிர்ஷ்டம் வேண்டும் என்பது சத்தியமான வார்த்தை.

கொள்ளை அழகாக இருந்து, சுமாரான தோற்றம் கொண்டவர்கள் வீட்டுக்கு மறுமகளாகிப்போய் ஒரே வருடத்தில் கிழிந்த நார் போல் ஆன பெண்களை கண்கூடாகப் பார்ததிருக்கிறேன். காசி கதையை இந்த சூழலுக்கு பொருத்திப்பார்க்கலாம்.

அதீத திறமைகள் கொண்டிருந்தும், சில்லறையாக நடந்து கொள்ளும் நான்கு பேருக்கு மத்தியில் அரசாங்க உத்தியோகத்தில் அமர நேர்ந்து, முப்பது வருட அனுபவத்தில், ஒன்றுமில்லாமல் வீணாய்ப்போனவர்களை பார்த்திருக்கிறேன். காசி கதை, இப்படிப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.

அதீத திறமைகள் இருப்பதாலேயே, 'இவனை வீட்டுக்குள் விட்டால் நம் இடம் போய்விடும்' என்கிற பயத்தில் பெண் வீட்டாரால் பெண் தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டு, பெண் கிடைக்காமல் போகும் ஆண்களை பார்த்திருக்கிறேன். காசி கதை, இப்படிபட்டவர்களுக்கும் பொருந்தும்.

நான் பள்ளியில் படிக்கிறபோது எனக்கு ஒரு ஆங்கில வாத்தியார் பாடம் சொல்லித்தருவார். அவரிடம் என் வகுப்பில் சில மாணவர்கள் டியூஷன் சென்றார்கள். அவர்கள் அவரை 'ஓரினச்சேர்க்கையாளன்' என்று சொல்லி நான் கேட்டிருக்கிறேன். அதனால் அவர் வகுப்பென்றால் கொஞ்சம் பயம். அவரை விட்டு ஒதுங்கிச்சென்றிருக்கிறேன். பன்னிரண்டாவது முடித்து நல்ல மதிப்பெண் எடுத்து கல்லூரி சேர கவுன்சிலிங் சென்றபோது எனக்கும் அந்த வாத்தியாருக்கும் தெரிந்த பொதுவான நபர்களால் அவர் அப்படி எல்லாம் இல்லை என்றும் ஆங்கிலத்தில் வெகு புலமை இருப்பதால், உடன் வேலை பார்த்த சிலர் இவர் பெயரை கெடுத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது. இதுவெல்லாம் ஒரு சாம்பிள் தான். காசி கதை, இப்படியும் புரிந்துகொள்ள பயன்படும்.

இப்படி காசி கதையை பல சூழல்களுக்கு பொருத்திப்பார்க்கலாம். அந்த காரணத்துக்காகவே சிறந்த கதைகளில் ஒன்றாய் தேர்வு செய்யப்ப்பட்டிருக்கும் என்பது என் அனுமானம்.

நல்ல விஷயங்கள் நம்மை சுற்றி எங்கெங்கும் விரவிக்கிடக்கின்றன. நாம் தான் அதை கெட்டதிலிருந்து பிரித்துப்பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கெட்டது போல் தோற்றம் தரும் ஒன்று மிக மிக நல்லதாக இருக்கும். கெட்டது என்று புறக்கணித்தால் நஷ்டம் நமக்குத்தான்.
அதேபோல் நல்லதைப்போல் தோற்றம் தரும் ஒன்று உண்மையில் உள்ளுக்குள் மிக மிக மொன்னையாக இருக்கும். 'கெட்டதாக ஏதும் கேள்விப்படவில்லை' என்பதாலேயே அது நல்லதென்று கொள்வதிலும் நஷ்டம் நமக்குத்தான்.


காசி இந்த முரண் குறித்துத்தான் பேசுகிறது என்றே புரிந்துகொள்கிறேன்.