என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday 2 May 2019

அழியாச்சுடர் - மெளனி

அழியாச்சுடர் - மெளனி


தமிழில் மிக முக்கியமான சிறுகதைகள் வரிசையில் அடுத்து மெளனியின் அழியாச்சுடர் சிறுகதை. புதுமைப்பித்தன் எல்லா சிறுகதை வகைமைகளையும் முயன்று பார்த்தான் என்றால், மெளனியின் சிறுகதைகளில் கதை மாந்தர்கள் தங்கள் 'உள்ளுக்குள்' பேசுபவர்களாய் இருப்பார்கள். இப்படியாக அவர் எழுதியிருக்கும் மொத்த சிறுகதைகள் 24 தானாம். ஆனால் இந்த 24ல் மெளனி தமிழ் சிறுகதையின் மிக முக்கிய கதாசிரியர் என்றாவது, அவரது சிறுகதைகளில் காணப்படும் 'மனதுக்குள்ளாக பேசிக்கொள்ளும்' தன்மையால் தான்.

இலக்கியத்தின் அழகியலை ஒட்டுமொத்தமாக உள்மன சம்பாஷனைகளை விவரிக்கவென பயன்படுத்தினால் விளைவது மெளனியில் சிறுகதைகள் என்பது என் வரையிலான புரிதல். உள்ளுக்குள்ளாக குழைந்து எழுதுவதால், தத்துவ விசாரங்களாக இருக்கக்கூடிய வாய்ப்புகளே அதிகம் என்பதால் மெளனியின் சிறுகதைகள், பெரும்பாலும் மற்ற சிறுகதைகள் போல், முதலாளித்துவம் , விளிம்பு நிலை மனிதர்கள், துக்கம், கண்ணீர் என்றெல்லாம் இருப்பதில்லை. இக்காரணத்தினாலேயே மெளனியின் சிறுகதைகளில், வட்டார வழக்கு, வட்டார அடையாளங்கள் என்பதெல்லாம் அதிகம் இராமல் இருப்பதை அவதானிக்க முடியும். அவைகளெல்லாம் அவரின் ஆக்கங்களில் முக்கியத்துவம் பெருவதில்லை.

உள்முகமாக சிறுகதைகள் இருப்பதாலேயே, மெளனியின் சிறுகதைகளில் வரும் கதை மார்ந்தர்கள் பெரும்பாலும் மெளனியின் சாயலிலேயே தான் இருக்க வேண்டும் என்றும் நான் கருதுகிறேன். பின்னாளில் பாலகுமாரன் இவ்வாறு எழுதியிருக்கிறார் எனினும், அவர் உள்முகமாக எழுதுவது பெரும்பாலும் ஒரு டூல் போன்றே அந்த ஆக்கத்திற்கு பயன்பட்டிருப்ப்பதை பார்க்க முடியும். ஆக என் வரையில், மெளனியின் சிறுகதைகள் வெறும் உள்முகமாக உள்மன சஞ்சரிப்புகளை மட்டுமே கற்பனை வளத்துடன் அழகான வார்த்தைக்கோர்வைகளால் வருணிக்கப்படும் சித்தரிப்பு என்றே புரிந்துகொள்கிறேன்.

இன்றைக்கு பலர் இந்த விதமான சிறுகதைகள் எழுதிப்பழகலாம். இவற்றுக்கெல்லாம் தமிழில் முன்னோடி என்கிற அடையாளமே மெளனியை மெளனி ஆக்குகிறது என்பது என் புரிதல்.