என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 29 May 2026

Feeling overwhelmed receiving an invite from "Sergio Gaut vel Hartman"

Feeling overwhelmed receiving an invite from an Argentine writer, "Sergio Gaut Vel Hartman", former editor of Sinergia and Parsec, and one of the founding fathers of Spanish-language science fiction (as per https://sueburke.site/2026/04/08/translated-into-spanish-derrotar-al-agua/ )


"The Bucket Man" will appear in 

https://microfictionsandstories.blogspot.com/


Followers know, this is the same story that appeared in AntipodeanSF and was awarded 'Honorable Mention' in the L. Ron Hubbard Writers of the Future Contest.

https://www.antisf.com/the-stories/the-bucket-man


I have always wanted to visit South America, but it looks like my fiction will reach there before me. See less



Monday, 18 May 2026

அமெரிக்காவில் தமிழ் இலக்கியம் ஏன் வளர்க்க முடிவதில்லை?

அமெரிக்காவில் தமிழ் இலக்கியம் ஏன் வளர்க்க முடிவதில்லை?

******************************************************************


பொதுவாக, எந்த ஒரு திறமைக்கான தளமும் பின்வருமாறு இயங்கும்.


'நாம் நன்றாகத்தான் எழுதுகிறோம்' என்று நினைப்பவர்கள் எழுத முன்வருவார்கள். சும்மா பேச்சுக்கு ஒரு 100 எண்ணிக்கையிலான இது போன்றவர்களை எடுத்துக்கொள்ளலாம். இவர்களில் நூறு பேரும், எண்ணத்திற்கேற்ப நன்றாக எழுதுபவர்களாக இருக்கமாட்டார்கள். ஒரு ஐந்து பேரிடம் தான் நிஜமான படைப்பூக்கம், ஆற்றல், விடாத முயற்சி, கடுமையான உழைப்பு ஆகியன இருக்கும். 


எஞ்சியவர்களிடம் அதெல்லாம் இருக்காது. எஞ்சிய 95 பேரில், இதுவெல்லாம் இல்லாதவர்களில் கொஞ்சம் பேர் (கொஞ்சம் பேர் தான்) காலப்போக்கில் அதைப் புரிந்துகொண்டு தாமாக ஒதுங்கிவிடுவார்கள். இவர்களெல்லாம் பிரச்சனையில்லை. பிரச்சனை யாரென்றால், இவர்களில் கணிசமானவர்களிடம் வெறும் நெட்வொர்க் மட்டும் தான் இருக்கும். ஆனால், இவர்களைச் சுற்றியுள்ள உலகம் இவர்களுக்கு பாதகமான சில விஷயங்களைச் சொல்லிக்கொடுத்திருக்கும்.


அதாவது, "நெட்வொர்க் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம்" என்பதுதான் அது. இவர்களின் தவறாக  நான் பார்ப்பது, இயற்கை கற்றுத் தந்ததை இவர்கள் தவறான இடத்தில் பயன்படுத்துவதுதான்.


"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்பன போன்ற பழமொழிகளை மிகவும் தவறாகப் பயன்படுத்தக் கற்றிருப்பார்கள். 


இலக்கியம் வளர்க்க, ஒரு இதழ் துவங்கினால், இவர்களில் கணிசமானவர்கள் அந்த இதழைச் சூழ்ந்தால், முடிவே செய்துவிடலாம், இதழ் அதோகதிதான் என்பதை. அந்த நிலையிலும் இதழ், இதழில் வெளியாகும் இலக்கிய ஆக்கங்களின் தரம் ஆகியன காப்பாற்றப்படவேண்டுமென்றால், நுகர்வோரான இலக்கியம் அறிந்த பொதுமக்கள், அங்கே கூட வேண்டும். 


ஏன்? தரமாக எழுதுபவர்கள் போதாதா? போதாதுதான். தரமாக எழுதுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.


எண்ணிக்கையில் பெருமளவில் இருக்கும் இந்த போலிகளிடம் திறமை இருக்காது. ஆனால், எதைக் கிறுக்கினாலும், அதை 'சூப்பர்' என்று சொல்லிவிடக்கூடிய ஒரு பத்து பேரை உடன் வைத்திருப்பார்கள். இதற்கெனவே எங்கு போனாலும் உடன் அவர்கள் ஆட்களில் ஒரு பத்து பேர் கூடவே வருவார்கள்.  பார்க்கப்போனால் இவர்களை அடையாளம் காண்பது எளிது. இவர்களால் தனித்து எங்கும் இயங்கிவிட முடியாது. கூட்டம் இருந்தால் தான், ரத்தமே ஓடும்.


நல்ல இலக்கிய இதழ்களை எடுத்துப் பாருங்கள். இலக்கியம் அறிந்து பொதுமக்கள் அங்கே இருப்பார்கள். இது போன்றவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகையில், இவர்களின் ஆதரவாளர்கள்  ஒரு பத்து பேர் செயற்கையாக 'வாவ்.. சிறப்பு' என்று செயற்கையாக பாராட்டுவார்கள். இந்த எண்ணிக்கையைத்தாண்டி குறை சொல்பவர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். அது 'செயற்கை பாராட்டுதான்' என்பதை வெட்டவெளிச்சமாக்கும் மக்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும். அப்படி இருந்தால், போலிகளுக்கு குரல் எழுப்ப தைரியம் வராது. போலிகள் கூட்டம் தாமாகக் களைந்துவிடும். 


ஆனால், நிதர்சனம் அது அல்ல? இலக்கியம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை தான் சொற்பமாயிற்றே. ஆகையால், இலக்கியம் அறிந்த மக்கள் எண்ணிக்கை இல்லாத இதழ்கள் இவர்கள் போன்ற போலிகளிடம் விழுந்துவிடுகிறது. 


அமெரிக்காவில் இலக்கியம் வளர்ப்பதில் உள்ள பிரச்சனை இதுதான். பொதுமக்களுக்கு இலக்கியம் தெரியாது. வாசிப்பு என்பது அறவே இல்லை. இலக்கியம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை சொற்பமே. இதனால், எந்த புது இலக்கிய இதழ் துவங்கினாலும், அது எளிதாக போலிகளின் ஆதிக்கத்தில் சென்றுவிடுகிறது. இலக்கியம் தெரிந்தவர்கள் மெளனமான வெளியேறிவிடவேண்டும் இல்லையானால்,  தினம் தினம் இவர்களுடன் மல்லுகட்ட வேண்டும். இலக்கியத்தின் சிறப்பே, அது தன்னைப் பழகுபவர்களுக்கு அறிவில் முதிர்ச்சி அளிக்கும், அதில் பக்குவப்பட வைக்கும், அதில் நிதானம், அமைதி பழகிவிடும். அவர்களுக்கு மல்லுகட்டுவதிலெல்லாம் ஆர்வம் இருக்காது. அது இவர்கள் போன்ற போலிகளுக்கு ரொம்ப வசதியாகப் போய்விடுகிறது. 


அமெரிக்காவில் தமிழ் இலக்கியத்திற்கென எத்தனை இதழ்கள் ஆரம்பித்தாலும் இதுதான் கதி. நான் அவ்வப்போது யோசிப்பதுண்டு. இப்படி மல்லுகட்டுவதால் இவர்கள் எதைத்தான் கண்டடைகிறார்கள் என்று. உண்மையில் இவர்கள் 'எதையோ சாதிப்பதாக' எண்ணிக்கொண்டு இவர்கள் செய்யும் எதிலும் இவர்கள் எதையுமே சாதிப்பதில்லை. தங்கள் சுயநல  நோக்கங்களுக்கு ஒத்துப் போகும் நபர்களுடன் நெட்வொர்க் செய்வதாக இவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். 


"நீங்கள் செய்வதெல்லாம் நியாயமா?" என்று தங்கள் மீது எழுப்பப்படும் கேள்விகளுக்கு, "எங்களுக்கு  திறமை இருப்பதாக நம்புகிறோம்.  தளத்தைப் பயன்படுத்த எங்களுக்கும் உரிமை இருக்கிறது. நாங்கள் ஏன் போக வேண்டும்? எங்களை திறமையை நாங்கள் காட்டுகிறோம். உங்களுக்கென்ன?" என்பதாக இவர்களின் பதில் அமையும். 


"அது சரிதானே?" என்று யாரேனும் நினைக்கலாம்.

திறமை என்ற ஒன்று இருப்பது உண்மையானால், அது படிப்படியாக அடுத்தடுத்த கட்டங்கள் முன்னேற வேண்டுமல்லவா? ஆக்கம் வெளியாகும் இதழ்களின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து பத்தாக வேண்டும் அல்லவா? அப்படி எதுவும் நடக்காது. ஒரு ஐந்து வருடத்தில், இவர்களே காணாமல் போய்விடுவார்கள். ஒழிந்தது என்று  நினைத்தால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இதையெல்லாம் மீண்டும் செய்ய புதிதாக ஒரு குரூப் உருவாகியிருக்கும். மீண்டும் இதையே புதிதாகச் செய்யக் கிளம்புவார்கள்.


இவர்கள் என்னதான் ஆள் வைத்து தங்களைத்தாங்களே பாராட்டிக்கொண்டாலும் ஒரு கட்டத்துக்கு மேல் எல்லோருக்குமே உண்மை தெரிந்துவிடுகிறது. தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் இலக்கியக் கூட்டங்களுக்கு மக்கள் பங்கேற்காததின் பின்னணி, மக்களுக்கு இலக்கியம் தெரிகிறதோ இல்லையோ, இந்த நிகழ்ச்சிகளில் இருப்பவர்கள் போலிகள் என்பது தெரிந்திருக்கிறது என்று நான் நினைத்துக்கொள்வதுண்டு. அந்த அளவில் மக்கள் புத்திசாலிகளே என்பதை ஒப்புக்கொள்கிறேன். 


அமெரிக்காவில் இலக்கிய இதழ்கள் துவக்கி தமிழ் இலக்கியம் வளர்ப்பதெல்லாம் நிஜமாகவே நடவாத காரியம் தான்.




Sunday, 10 May 2026

"The Bucket Man" in AntipodeanSF

“The Bucket Man” appears in Australia‘s longest running Science Fiction magazine- AntipodeanSF. 

I thank the editorial board for choosing to feature my work. For context, “The Bucket Man” received Honorable Mentiion in L. RON HUBBARD Writers of the Future Contest 2024.

Story link in comments. 

https://www.antisf.com/the-stories/the-bucket-man

 


Friday, 8 May 2026

2026ல் மூன்றாவது பறவை

 


புகைப்படத்தை வைத்து இது Mourning dove என்கிறது AI 94 சதவிகித துல்லியத்துடன்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திசை மாற்றி அமர்ந்து அடைகாக்கிறது புறா. இந்தக் கோணத்தில் அழகாக இருப்பதாகப் பட்டது. க்ளிக்கிவிட்டேன். கூட்டை விலாவாரியாக படமெடுக்கக் காத்திருந்தது தான் மிச்சம். அது நகரவே இல்லை. எனக்கும் பொறுமை போய்விட்டது. புகைப்படக்காரனாக ஆவதற்கெல்லாம் அசாத்திய பொறுமை வேண்டும் போல. நாம் எழுத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

நடப்பாண்டில், என் வீட்டுக் கொல்லையில் முட்டையிட்டு அடைகாக்கும் மூன்றாவது பறவை இது.


Thursday, 30 April 2026

அறிவியல் , கணிதப் புனைவுகளில் தமிழ் முன்னோடி

அறிவியல் , கணிதப் புனைவுகளில் தமிழ் முன்னோடி


"உங்கள் எண் என்ன?" மற்றும் "Those Faulty Journeys" வெளியானபோதே, இவற்றின் மதிப்பு இப்போது தெரியாது, காலம் போகப் போகத் தெரியும் என்று சொல்லியிருந்தது, என் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்கள் அறிவார்கள்.

நாள் ஆக, ஆக மனித உறவுகளைக் கணித ரீதியில் துல்லியமாக கணிப்பதற்கான முயல்வுகள் உலகின் பல்வேறு மூலைகளிலும் தொடர்ந்து பலர் மேற்கொள்கிறார்கள். இதுதான் இப்போது ட்ரண்ட்.

ஆனால், தமிழில் இந்த ட்ரண்டையெல்லாம் எப்போதோ செய்துவிட்டோம்.

இந்த சுட்டியில், வெவ்வேறு வகையான காதல் உறவுகள் ஏன் தோல்வியில் முடிகின்றன, சில ஏன் வெற்றி அடைகின்றன என்பதை கணித அடிப்படையில், Game Theory மற்றும் AI  பயன்படுத்தி காட்டியிருக்கிறார் Tuan Doan.

https://ai.gopubby.com/love-strategically-the-game-theory-of-modern-dating-fc320aed32eb

ஆனால், இதையெல்லாம் AI எல்லாம் வருவதற்கு முன்பே 2017ல் "உங்கள் எண் என்ன?" நூலில் எழுதிவிட்டேன்.

போதாததற்கு, இதே Game Theoryஐ, 2019ல் வெளியான, "உங்கள் எண் என்ன?" நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Those Faulty Journeys நூலில் எழுதியிருக்கிறேன். நூலிலிருந்து கணித பக்கங்களை இங்கே இணைத்திருக்கிறேன்.

அறிவியல் புனைவுகள், கணிதப் புனைவுகளில் தமிழ் முன்னோடியாக உள்ளது என்பதற்கு இதைக்காட்டிலும் உதாரணம் வேண்டுமா என்ன? 

சில ஆரூடங்கள் பலிக்கையில், நம் vision பலிக்கையில் சந்தோஷமாக இருக்கிறது. 

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!







Sunday, 26 April 2026

சொல்வனம் 365வது இதழில் 'மகளிர் மட்டும்' சிறுகதை

 சொல்வனம் 365வது இதழில் எனது 'மகளிர் மட்டும்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்து வெளியிட்ட சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.


சிறுகதையை வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்:

https://solvanam.com/2026/04/26/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ 





Saturday, 25 April 2026

அறிவுசார் சமூகமும், அதன் மீதான வெறுப்பும்

அறிவுசார் சமூகமும், அதன் மீதான வெறுப்பும்

*************************************************


"எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா?" என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு. உண்மை வேறு. 


தமிழர்கள் நாம்  நம்மை அறிவார்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்கிறோம். நியாயமாகப் பார்த்தால், சிந்தனையாளர்கள் போற்றப்பட்டிருக்க வேண்டும். எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். 


ஆனால், நிஜத்தில், படித்தவர்கள் மீது வெறுப்பைக் கக்கும் சமூகம் தான் நம்முடையது. 


உதாரணம் சொல்லலாம். நீங்கள் எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதி நூல்கள் வெளியிடுகிறீர்கள். ஒரு எழுத்தாளராக அடையாளப்படுகிறீர்கள். ஏதோவொரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே எழுத்தாளராக செயல்படுகிறீர்கள். 



நியாயமாகப் பார்த்தால், என்ன  நடந்திருக்க வேண்டும்? 'இவர் நம் தாய் மொழிக்கென, அதன் மேன்மைக்கென தன்னாலானதைச் செய்கிறார். இவரை ஊக்குவிப்போம். அவர் தன் வேலையைச் செவ்வனே செய்ய உதவி செய்வோம், அவருக்கு எளிமையாக்கித் தருவோம்' என்று மற்றவர்கள் எண்ணினால் அதை 'அறிவார்ந்த சமூகத்தை ஊக்குவிக்கும் சமூகம்' என்று சொல்லலாம்.


நிஜம் அப்படி இருக்காது. பக்கத்து வீட்டிலிருந்து பந்து வந்து விழும். உங்கள் அலுவல் மற்றும் எழுத்துக்கிடையில் அல்லாடும் நீங்கள், பந்தை எடுத்துப் போடுவீர்கள். அது மறுபடி வரும். எடுத்துப் போடுவீர்கள். மறுபடி வரும். எடுத்துப் போட போட மறுபடி மறுபடி வந்துகொண்டே இருக்கும். கேட்டால் "என்ன பாஸ் பண்றது, விளையாடுகிறான்கள்.. பிள்ளைகள் அல்லவா?" என்று பதில் வரும். அதே பந்து உங்கள் வீட்டு கொள்ளைக்கு வராத வண்ணம், net அடிப்பதோ, அல்லது பிள்ளைகளை விளையாட்டுத்திடலில் சென்று முறையாக விளையாடச் சொல்வது அங்கு நடக்காது. அதன் பின்னால் ஒரு திட்டமிடல் இருக்கும். அந்த net போட்டுவிட்டால், பிரச்சனை தீர்ந்துவிடுமே. பிறகு எப்படி உங்களைக் குறை சொல்வது? அதற்காகவேனும் அதைச் செய்ய மாட்டார்கள்.


சதா பந்து எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தால் உங்கள் வேலை எப்படி ஒழுங்காக  நடக்கும். உங்கள் வேலை பலு காரணமாக நீங்கள் வேலையில் ஆழ்ந்திருக்கையில், கொள்ளைப் பக்கம் போகவே நாளாகும். பந்து எடுத்துப் போட முடியாமல் போனால், "எழுத்தாளருங்குறாரு.. இப்படில்லாம் பண்றாரு.. " என்று ஒரு ஒபினியனை உலவ விட்டு விடுவார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால் "இப்படி பெயர் கெட்டுப்போகும். எதற்கு வம்பு?" என்று நினைத்து நீங்கள் பந்து எடுத்துப் போட்டுவிடவேண்டும். 


இது, அண்டை அயலாருடன் சமாதானமாய்ப் போதல் என்பதல்ல. "அறிவுசார் சமூகத்தின் மீதான வெறுப்பு" காரணமாக, உங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது. நெருக்கடிக்கு உள்ளாக்குவது எப்படி ஊக்குவிப்பு ஆகும்?. அதிலிருக்கும் name tampering கிற்கான வாய்ப்பு, அதை நோக்கி நகர்தல், இதுவெல்லாம் ஊக்குவிப்பு அல்ல. இது ஒரு திட்டமிட்ட செயல்பாடு தான். சுருங்கச் சொன்னால், உலகில் தான் மட்டும் தான் புத்திசாலி என்ற எண்ணம்.


இது ஒரு உதாரணம் தான்.  


ஏரியாவில் எழுத்தாளர் என்று யாராவது இருந்தால், ரகசியமாக கவனித்துக்கொண்டே இருப்பார்கள். மாவட்டத்தில் ஏதேனும் சமூக, கலாச்சார விழா என்றால் புறக்கணிக்கப்படும் எழுத்தாளர் குறித்தெல்லாம் கேள்வியே எழுப்ப மாட்டார்கள். அப்போதெல்லாம், இருக்கும் இடம் தெரியாமல் இருப்பார்கள். எழுத்தாளருக்கு ஏதேனும் தேவை ஏற்படும்போதெல்லாம் கூட பிக்சரிலேயே வரமாட்டார்கள். தெருக்குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் அப்போதுதான் எழுத்தாளர் இருப்பது நினைவில் வந்துவிடும். உடனே உணர்ச்சி வசப்படும் அளவுக்கு நெருங்கிப் பேசி, கார்போரேஷனில் பிராது கொடுக்கும் அளவிற்கு தூண்டிவிடுவார்கள். எழுத்தாளர் ஒத்துழைக்கவில்லை என்றால் "என்ன எழுத்தாளரோ?" என்று பொதுவில் பேசுவார்கள். இது ஒரு விதமான சுரண்டல் மூளைதான். Parasitic scavenging attitude. 


இப்படி நிறைய சூழல்களைச் சொல்லலாம்.


எப்போது இவர்கள் இந்த இடத்திற்கு வந்துவிட்டார்களோ, எப்போது தாய்மொழி மீதான உங்கள் உழைப்பு அவர்களுக்கு புரியவில்லை, அவர்களுக்கு வேறெதுவுமே புரியப்போவதில்லை. "அண்டை அயலாருடன் சமாதானமாய்ப் போதல்" என்பதெல்லாம் அவர்கள் வசதிக்கு உங்களைப் பயன்படுத்திக்கொள்வது தான்.  இதுவெல்லாம்  micro shitty politics. 


யோசித்துப் பார்த்தால், சில்லரையாக இருக்கும். ஆனால், இது போன்ற சில்லரைத்தனங்கள் சிலருக்கு நன்றாக வரும்.  ஆனால், பொறியியலோ மருத்துவமோ படித்திருப்பார்கள். கார்கள் வைத்திருப்பார்கள். அந்த விலையுயர்ந்த பங்களாவுக்குப் பின்னால், அந்த பகட்டின் பின்னால்,  சில்லரையை எண்ணிக்கொண்டிருக்கும் மூளையின் சமிஞைகள் இவை.


"I saw it coming from miles away" என்று சொல்வார்கள் இல்லையா? அது போல, இது போன்ற நிகழ்வுகளை வைத்து ஆளின் தரத்தை எட்ட இருந்தே கண்டுகொண்டு விடலாம். இது போன்ற  நபர்களுக்குத் தனியாக வாழவே தெரியாது. உடன் சேர்பவர்களையும் கெடுத்து, தானும் கெடும் விதி அவர்களுக்கு இருக்கும். இது போன்ற உறவுகள் எல்லாம் மேலோட்டமாக நன்றாக இருப்பது போல் பாவலா தான் செய்யும். உள்ளுக்குள்ளே மிகவும் விஷத்தன்மை வாய்ந்ததாகத்தான் இருக்கும். இப்படியெல்லாம் நான்கு பேரை நண்பர்கள் என்று வைத்துக்கொள்வதை விட தனியாகவே இருந்துவிடலாம். 


துன்பத்தில் உழல்பவர்கள், "எனக்கு மட்டும் ஏன் விடியவே மாட்டேன் என்கிறது?" என்று புலம்புபவர்கள், இது போன்ற ஆட்களைத் தவிர்க்க முடியாமல் சுற்றத்தில் இருக்கக் கொண்டவர்கள் தான். எப்படி? சொந்த வீடு வாங்கியிருப்பார்கள். பக்கத்து வீட்டில் இப்படி ஒரு விஷம் இருந்து தொலைக்கும். இதற்காக வீட்டையா விற்க முடியும்? என்று அங்கேயே இருக்க வேண்டி வரும்.  என் பரிந்துரை தொலை நோக்கு நன்மைகளைக் கருதி, வீட்டை விற்றுவிடுவது தான். வாடகை வீடுகளில் இந்தப் பிரச்சனை எழுந்தால், வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றுவிடலாம். 


"எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா?" என்று எண்ணி எண்ணி தான் தொடர்ந்து விஷத்தன்மை கொண்ட மனிதர்களுடன் புழங்கிக்கொண்டிருப்பார்கள், அந்த நட்பு தான் நம்மை பாதாளத்திலேயே வைக்கிறது என்பதை அறியாமலேயே. சில நேரங்களில், சில எலிகளுக்கென வீட்டைக் கொளுத்துவது தான் நன்மையில் முடியும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதும் புத்திசாலித்தனம் தான். 


Friday, 24 April 2026

அமெரிக்காவில் தமிழ் சங்கங்களும், ஃபெட்னாவும்

 அமெரிக்காவில் தமிழ் சங்கங்களும், ஃபெட்னாவும்

*****************************************************


அமெரிக்கா வந்து பதினோரு ஆண்டுகள் கடந்துவிட்டது. இதுகாறும் தமிழ் சங்கங்கள் குறித்தும், ஃபெட்னா செயல்பாடுகள் குறித்தும் ஏதும் எழுதியதில்லை. காரணம் ஒன்று தான். ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு எழுதலாம் என்பதுதான் காரணம். 


இப்போது ஓரளவுக்கு புரிதல் வந்துவிட்ட காரணத்தால் இதை எழுதுகிறேன். இக்கட்டுரையில் வருவது முழுக்க முழுக்க எனது புரிதல்கள் தாம்.


அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் செயல்பாடுகளில் பாராட்ட  மிக முக்கியமான காரணம்: குழந்தைகளுக்குத் தமிழை அறிமுகம் செய்வது.  இதைச் செய்வது தமிழ்ப் பள்ளிகள் தாம். அவற்றை நடத்துவது தமிழ் சங்க முன்னாள்/இன்னாள் உறுப்பினர்கள் தாம். இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் போய்ச் சேர்வது இவர்கள் மூலமாகத்தான். மட்டுமல்லாது, பிள்ளைகளிடம் தமிழ் வளர்க்க பேச்சுப்போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், திருக்குறள் போட்டி, இசை, நடனம், நாடகம் என்று பல போட்டிகளை நடத்தி பரிசும் தந்து ஊக்குவிக்கிறார்கள். 


அமெரிக்காவில் இந்தியாவின் அனைத்து மாநிலத்தவரும் வசிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளிடம் தாய் மொழியைச் சென்று சேர்க்கும் உன்னதப் பணியை தமிழ் சங்கங்களும், பள்ளிகளுமே செய்கின்றன. பிற மொழிகளில் இது போன்ற  நிகழ்வுகள் நடப்பதாக நான் அவதானிக்கவில்லை. இன்றைய தலைமுறைப் பிள்ளைகளுக்கு தாய்மொழியை கொண்டு சேர்க்கும் விதத்தில் இவ்வமைப்புகளை எத்தனை பாராட்டினாலும் தகும் தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.


கலாச்சார நிகழ்வுகளும் இவர்கள் நடத்துகிறார்கள். உதாரணமாக பொங்கல், சித்திரை திரு நாள் விழாக்கள் போன்ற தமிழர் திரு நாள்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. எல்லாமும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் நிகழ்வுகளே. ஊர் கூடித் தேர் இழுப்பதுதான். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்ய தன்னார்வலர்கள் முன்வருவதுதான் இந்த நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக, தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தோய்வில்லாமல் நடத்த முடிகிறது.  


ஒவ்வொரு  மாகாணத்திலும் இவ்வாறாக நடக்கும் போட்டிகளில் தேர்வாகுபவர்களுக்கு இறுதிப்போட்டிகளை ஃபெட்னா நிகழ்வில் நடத்துகிறார்கள். இதுகாறும் ஓகே.


அவ்வப்போது, இங்குள்ள தமிழ் அமைப்புகளில், தமிழ் இலக்கிய பணிகள் குறித்து சீரியஸாக குற்றச்சாட்டுக்கள் எழும். அதில் எனக்கு மாற்றுக்கருத்துகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக என் பார்வை பின்வருமாறு விளக்கலாம்.


இது அமெரிக்கா. இங்கே பள்ளிகளும், கலாச்சார நிகழ்வுகளும் நடத்த கட்டிடங்கள் தேவை அல்லவா?  தமிழ் சொல்லிக்கொடுக்க வகுப்புகள் தேவை அல்லவா? மாணவர்கள் வந்து போக பார்க்கிங் தேவை. கலாச்சார நிகழ்வுகள் நடத்த மேடைகள் தேவை. மேடைக்கு அருகே தயாரிப்பு அரங்கு தேவை. இருக்கைகள் தேவை. பின் மாலைகளிலும் நிகழ்வு நடக்க, வெளிச்சம் தேவை. பங்குபெறுவோர், பார்வையாளர்கள், பங்குபெறுபவர்கள் உண்ண உணவு தேவை. இப்படி infrastructure தேவைப்படுகிறது. அதற்கு எங்கே போக? இங்குள்ள அமெரிக்க பள்ளிகளில் வார  இறுதிகளை வாடகைக்கு எடுக்க முடியும் தான். வாடகை? வருடம் முழுக்க 52 வாரங்கள் வரும். இவ்வொரு வார இறுதிக்கான இடத்தை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். இதற்கெல்லாம் பணம்? அதை யார் தருவார்? கைக்காசு போட்டா செய்ய முடியும்? 


மக்கள் தருவார்கள் தாம். பிரச்சனை அது அல்ல.  வெறும் ஒற்றை இலக்க பங்குபெறுவோர்களை வைத்து என்ன நிகழ்ச்சி நடத்த முடியும்? ஒரு பள்ளி என்றால் சுமார் நூறிலிருந்து முன்னூறு மாணவர்கள் இருந்தால் தான், சராசரி கட்டணத்தில் பாடம் சொல்லித்தர முடியும். ஒரு நிகழ்ச்சி என்பது வெறும் நிகழ்ச்சி அல்ல. வர்த்தகத்திற்கான வாய்ப்பு. ஒரு நிகழ்ச்சி என்றால், ஐந்நூறிலிருந்து ஆயிரம் பேர் வந்தால் தான், வர்த்தம் நடக்கும். அப்படியானால், கூட்டம் வேண்டும். கூட்டத்தை உருவாக்குவது எப்படி? 


"தமிழில் இலக்கியம் வளர்க்கலாம் வாருங்கள்" என்று கூப்பிட்டால் கூட்டம் வருவது இல்லை. கூட்டம் என்பது யார்? மக்கள் தான். மக்கள் வருகை அறவே இருப்பதில்லை.

பட்டிமன்ற ராஜா, பாரதி பாஸ்கர் வருகிறார்கள், 'கொஞ்சம் நடிங்க பாஸ்' ஆதவன் வருகிறார் என்றால் கூட்டம் அள்ளுகிறது. ஆயிரம் பேர் குவிந்து விடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஆயிரம் பேர் என்பது ஆயிரம் ப்ளேட் உணவு.  மாகாணத்தின் முன்னணி உணவகங்கள் உணவு ஆர்டர் எடுக்க முன்வரும். முன்வரும் என்றால், donation. அதைத் தமிழ் சங்க பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். 


ஆக, வர்த்தமும், வர்த்தகத்திற்கான வாய்ப்பையும் தமிழ் சங்கங்களும் ஃபெட்னாவும் உறுதி செய்ய ஆவண செய்வது, புலம் பெயர்ந்து தொழில் தொடங்கியிருக்கும் தமிழர்களுக்கான வாய்ப்பு. அதற்காக வர்த்தகம் மட்டும் தான் நோக்கம் என்பதுவும் இல்லை. வர்த்தம், எல்லோரும் இணைந்து ஆரோக்கியமான பாதையில், சாதகமான பக்க விளைவுகளுடன் முன்னகர, பங்குபெறும் எல்லோருக்கும் ஒரு சகாயம் உருவாக்க ஒரு கருவி. அவ்வளவு தான். தமிழ் மக்களை ஒருங்கிணைப்பது, ஓரிடத்தில் கூட்டுவது, அதன் பலனாக தமிழ் வளர்ப்பது, அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு சேர்ப்பது இவைகளே பிரதான நோக்கம் எனலாம்.


அப்படியானால், தமிழ் இலக்கிய பணிகள் குறித்து தமிழ் சங்கங்கள் மீதும் ஃபெட்னா மீதும் எழும் குற்றச்சாட்டுக்கள்?


முன்பே சொன்னது போல, "தமிழில் இலக்கியம் வளர்க்கலாம் வாருங்கள்" என்று கூப்பிட்டால் கூட்டம் வருவது இல்லை.


பிரச்சனை, தமிழ் இலக்கியத்திற்கு கூடாத கூட்டம் தான். இல்லாத கூட்டத்தை வைத்து என்ன வர்த்தகத்தை நடத்திவிட முடியும்? என்ன ஒருங்கிணைப்பு செய்துவிட முடியும்?  இங்குள்ள மக்களிடையே தமிழ் இலக்கியத்திற்கு இவ்வளவு தான் மரியாதை. கூட்டம் கூடினால், தமிழ் சங்கங்கள் ஏற்றுச் செய்யக் காத்திருக்கின்றன என்பதுதான் நான் கண்டவரையில் உண்மை. ஏனெனில் மக்கள் கூடும் எல்லாவற்றிலும் வர்த்தகம் இருக்கிறது. வர்த்தகத்தை வைத்து, தமிழை இன்னும் சிறப்பாக வளர்க்க முடியும். தமிழை வைத்து இன்னும் சிறப்பாகக் கூட்டம் கூட்ட முடியும். இது ஒரு சக்கரம் போலத்தான். ஆக, பிரச்சனை, கூட்டம் தான். மக்கள் தாம். சினிமாவுக்குக் கூடும் கூட்டம், தமிழ் இலக்கியத்திற்குக் கூடுவதில்லை என்பதுதான் நிஜம்.


அதுதான் பிரச்சனையும் கூட.


Wednesday, 22 April 2026

ஒரு மேட்டர் சொல்றேன்.. எல்லாரும் கேட்டுக்கோங்க...

 

ஒரு மேட்டர் சொல்றேன்.. எல்லாரும் கேட்டுக்கோங்க... 


பேசினா மட்டும் என்ன நடந்துடப்போகுது? எதுக்கு பேச முயற்சி பண்ற? என்னை ஏத்துக்க உங்க ஈகோ தடுக்குது. "இவன் என்ன பெரிய்ய்ய இவனா?" ந்னு நினைக்கிறீங்க.. சரி இருக்கட்டும்.. உங்க மோட்டிவ் என்ன? பொதுத்தளங்கள்ல சந்திக்கிற சூழல் வந்தா, அங்க வாய் சண்டைக்கு இழுக்குறது. ஏன்? உங்ககிட்டயும் சரக்கு இருக்குன்னு காமிக்கணும்... 


ஒகே.. ஒங்ககிட்ட சரக்கு இக்குன்னு நீங்க நினைச்சா, அதை என்கிட்ட நிரூபிக்க முயற்சி செய்வானேன்? ஒங்ககிட்ட சரக்கு இருந்தா, அதை, அதுக்கான தளத்துல காமிங்க.. நேர்மையா போட்டியை சந்திங்க.. உங்க திறமையை நிரூபியுங்க.. உங்ககிட்ட உண்மையாவே திறமை இருந்தா உலகம் கொண்டாடப்போகுது.. இதுல நான் எங்க வந்தேன்? 


என்கிட்ட பொதுத்தளத்துல மூஞ்சிய மொகறையை காட்டுறதுல என்னய்யா கிடைக்கப்போகுது? உங்களையெல்லாம் யாருன்னே எனக்கு தெரியாது.. எதிர்படறவங்க கிட்ட அன்பா, நட்பா நடந்துக்கிறது என் சுபாவம்.. அதுல ஏன்யா உங்க வெட்டி ஈகோவை கொண்டு வந்து திணிக்கிறீங்க? 


1. அதுல உங்க வெட்டி ஈகோவை காட்டி, உங்களுக்கு அறிவில்லைங்குறதை நீங்களே நிரூபிச்சிக்கிறீங்க.

2. நமக்குள்ள நட்பு ஏற்படக்கூடிய வாய்ப்பை நீங்களே சொதப்பிக்கிறதுனால, நீங்க எனக்கு ஒரு நன்மையை செய்யறீங்க. அது, ஒரு வெட்டி சகவாசத்த்துல வீணா போயிடக்கூடிய நேரத்தை எனக்கு சேமிப்பா தறீங்க.. அது எனக்கு ஒரு வாய்ப்பு.. அதை நான் எப்படி பயன்படுத்துறதுன்னு எனக்கு நல்லா தெரியும்.


அதுனால, நீங்க செய்யிறது, ஒரு வகையில, எனக்கு நன்மை தான்..


அப்புறம் இன்னொரு விஷயம்... 


வெட்டியா எங்கிட்ட மூஞ்சிய மொகறைய காட்டுறதுலயே, உங்ககிட்ட சரக்கு இல்லங்குறது நிரூபனம் ஆயிடுச்சு.. பொறாமையில பொங்குறவன் தான், மூஞ்சிய மொகறைய காமிப்பான்.. உங்ககிட்ட இருக்குறது சரக்கா, பொறாமையாங்குறதை வேற யாரும் காட்ட வேணாம்.. மடத்தனமா, நீங்களே தான் காட்டிக்கிறீங்க...


எங்கிட்ட பேசி மட்டும் என்னாகப்போகுது?  நான் ஏதாச்சும் சொல்வேன்.. உனக்கு பொறுக்காது..உடனே நீ ஒண்ணு பேசுவ.. சண்டை வரும்.. கடைசியா, 'நீ பெரிய்யா இவன்னா இத செஞ்சி காமிடா'ந்னு வந்து நிக்கும்.. எப்படியும் அங்க தான் வந்து நிக்கப்போகுதுன்னா, அதையே பண்ணிடுவோமேன்னு தான் நான் என்ன பண்றேனோ அதை பண்ணிக்கிட்டு இருக்கேன்.. புரியிதா? அனாவசியமான சண்டை, வாக்குவாதம், சவாலெல்லாம் நான் அவாய்டு பண்ணிக்கிறேன்.. கிடைக்கிறது peace.. அமைதி.. இது நல்லா இருக்கு.. see the results.. its awesome... atleast for me... பெட்டர், நீயும் சண்டையெல்லாம் அவாய்ட் பண்ணிக்க.. 'இத செஞ்சி காமி'ந்னு சொல்றதுக்கு ஒண்ணு வச்சிருப்பல்ல.. அதை பேசாம செஞ்சி காமிக்கிறதுல இறங்கிடு.. எல்லாருக்கும் நிம்மதி... ஒகே வா.. SHUT THE FCUK UP & show results...


இந்த உலகத்துல கடவுள் ஒருத்தர் தான் சர்வ வல்லமை படைத்தவர்ன்னு நம்புறேன்.. மத்தவங்க எல்லாருமே வெறும் தூசு தான்... அதுனால, என்னால முடிஞ்சதை, எனக்கு கிடைச்ச நேரத்துல செய்யிறேன்.. முடிஞ்சா நீயும் செய்யு.. முடியலைன்னா, சைலன்டா ஒதுங்கி போயிரு.. மூஞ்சிய மொகறையை காமிச்சு, 'அந்த கருப்பு ஆடு நாந்தான்'ன்னு சுய விளக்கமெல்லாம் கொடுக்காத... மட சாம்பிராணி...




Sunday, 12 April 2026

'கேள்வி-பதில்' சிறுகதை

சொல்வனம் 364வது இதழில் எனது 'கேள்வி-பதில்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்து வெளியிட்ட சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.


https://solvanam.com/2026/04/12/%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/