என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 9 December 2013

முடிச்சு - சமூக நாவல்

முடிச்சு - சமூக நாவல்

நாவல் எனப்படுவது ஒரு கதையை பக்கம் பக்கமாக நீட்டி, பக்கத்துக்கு பக்கம் எதிர்பாராத நிகழ்வுகள் தந்து எழுதுவது அல்ல. அது வாரா வாரம் தொடரும் தொடர்கதையும் அல்ல. வேறெங்கோ வாசித்த வாக்கியத்தை குறியீடுகள், உவமானங்கள், உவமேயங்கள் என இஷ்டம் போல் மாற்றி எழுதுவதுமல்ல. 6 ப‌க்க‌ங்க‌ள் வ‌ரை சிறுக‌தை என‌வும், 50 ப‌க்க‌ங்க‌ள் வ‌ரை குறுநாவ‌ல் என‌வும் 90 அல்ல‌து அத‌ற்கு மேற்ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ள் கொண்ட‌து நாவ‌ல் என்கிற‌ ஆகிருதியும் அல்ல‌.

நாவல் எனப்படுவது யாதெனில், இதற்கு முன் முன்மொழிந்திரப்படாத அல்லது ஓர் மாற்றுக்கருத்தை முன்வைப்பதான ஒரு கருத்தாக்கத்தை விளக்க, அதன் சூழலுக்கு பொருந்துவதான கதை மாந்தர்களை உருவாக்கி, பொருத்தமான கதைக் களம் ஒன்றில் சாதகமான வாதங்களை முன்வைத்து எழுதுவதே நாவல் எனப்படுவது.

அதிலும் சமூக நாவல் எனப்படுவது, சமூக அடையாளங்களை, மதிப்பீடுகளை, வழமைகளை கேள்விக்கு உட்படுத்துவது. அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்வது. காலாவதியாகிவிட்ட அடையாளங்களை, மதிப்பீடுகளை, வ‌ழ‌மைக‌ளை க‌ண்டுகொண்டு மாற்று சிந்த‌னைக‌ளை முன்மொழிவ‌து.

ச‌மூக‌ நாவ‌ல்க‌ள் எழுதுவதில் உள்ள‌ சிக்க‌ல், இந்திய‌ ச‌மூக‌ அமைப்பு என்ப‌து புரிந்துகொள்ள மிக‌ மிக‌ சிக்க‌லான‌து. த‌மிழ்ச்ச‌மூக‌ம் அதைவிட‌ சிக்க‌லான‌து. இதில் ச‌மூக‌ அடையாள‌ங்க‌ளை, ம‌திப்பீடுக‌ளை, வ‌ழ‌மைக‌ளை இன‌ம் காண்ப‌தே முத‌ல் ச‌வால். ச‌மூக‌ நாவ‌ல் எழுத‌ முத‌லில் ச‌மூகத்தின் இயங்குமுறை துல்லிய‌மாக‌ புரிந்திருக்க‌ வேண்டும். ஒரு சிக்க‌லான‌ ச‌மூக‌ அமைப்பை புரிந்துகொள்வ‌து அத்த‌னை சுல‌ப‌ம‌ல்ல‌.

அந்த வகையில் எனது நாவல்களான 'ஒப்பனைகள் கலைவதற்கே' மற்றும் 'முடிச்சு' இரண்டுமே இதுவரையில் முன்மொழிந்திரப்படாத கருத்தாக்கங்களை முன்வைக்கும், ஒரு நாவ‌லாசிரிய‌னாக‌ என‌க்கு திருப்திய‌ளித்த‌ நாவ‌ல்க‌ள்.

Friday 18 October 2013

ராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை


ராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை

16.10.2013 தேதியிட்ட இந்த வார ராணி முத்து இதழில் எனது ஒரு கவிதை 'விரயம்' பக்கம் 24 ல் வெளியாகியிருக்கிறது. குறிப்பிட்ட அந்த இதழில் கவிதை வெளியான பக்கத்தின் பிரதி இங்கே.

Monday 26 August 2013

குங்குமம் (2.9.2013) இதழில் என் குறுங்கதை


குங்குமம் (2.9.2013) இதழில் என் குறுங்கதை

2.9.2013 தேதியிட்ட குங்குமம் இந்த வார இதழில் பக்கம் 81ல் நான் எழுதிய 'ஜாகிங்' என்ற தலைப்பிலான ஒரு பக்க கதை வெளியாகியிருக்கிறது. கதை வெளியான குங்குமம் இதழின் பிரதி இங்கே.

Thursday 22 August 2013

குமுதம் (27.02.2013) இதழில் எனது சிறுகதை


குமுதம் (27.02.2013) இதழில் எனது சிறுகதை

கடந்த‌ 27 பிப்ருவரி 2013ம் தேதியிட்ட‌ குமுதம் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியிருந்தது குறித்து பணி நிமித்தம் ஹாங்காங்கில் இருந்தபோது தான் தகவல் கிடைத்தது. வெளி நாட்டில் இருந்தமையால் குறிப்பிட்ட அந்த இதழை சேகரிக்க வாய்ப்பின்றி தேடிக்கொண்டே இருந்தேன்.

ஈகரை இணைய தளம் மூலம் நண்பராக அறிமுகமான முத்து முகமது இணைய தளம் மூலமாகவே குமுதம் இதழின் மின் பிரதியிலிருந்து குறிப்பிட்ட அந்த சிறுகதையின் பிரதியை தந்து உதவியிருக்கிறார்.

'கண்ணாடி நெஞ்சம்' என்ற தலைப்பிலான எனது அந்தச் சிறுகதையின் பிரதி இங்கே.. பக்கம் 58ல் துவங்கி, பக்கம் 64 வரை வெளியாகியிருக்கிறது...



நண்பர் முத்து முகமதுவிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எனது சிறுகதையினை தேர்ந்தெடுத்து வெளியிட்ட குமுதம் இதழின் ஆசிரியர் குழுவுக்கும், தேர்வுக்குழுவுக்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Wednesday 7 August 2013

கணையாழி ஆகஸ்ட் 2013 இதழில் என் சிறுகதை


கணையாழி ஆகஸ்ட் 2013 இதழில் என் சிறுகதை

கணையாழி கலை இலக்கிய திங்களிதழின் இந்த மாத (ஆகஸ்ட் 2013) இதழில் நான் எழுதிய 'முடிச்சு' என்ற தலைப்பிலான சிறுகதை பக்கம் 18ல் துவங்கி 23ல் முடிய வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுகதை வெளியான கணையாழி கலை இலக்கிய இதழின் பக்கங்களின் பிரதிகள் இங்கே.


இனி அந்தக் கதை:

முடிச்சு - சிறுகதை

மது, கண்ணாடி முன் நின்று தன்னையே ஒரு முறை பார்த்துக்கொண்டாள். எலுமிச்சை நிறத்தவளுக்கு சிவப்பில் சுடிதார், இழைத்தது போலிருந்தது. துப்பட்டா எடுப்பான மார்புகளை மறைக்கும் வகைக்கு இருப்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டாள். தோள்களை விட்டகலாமல் இருக்க பின் செய்து கொண்டாள். மெல்லிய பிங்க் நிற உதட்டுச் சாயம் பாந்தமாய் கண்ணை அடிக்காமல் இருந்தது. இரண்டு நிமிட பார்வையின் முடிவில் அலட்சியமாய் காற்றை மேல் நோக்கி ஊதியதில் முன் நெற்றில் துவண்டிருந்த கற்றை முடி காற்றில் எம்பி அழகாய் சரிவதை ரசித்துவிட்டு கண்ணாடியை விட்டகன்றாள் மது.

தன்னைத் தானே ரசிக்கும் மனிதன், நிச்சயம் கண்ணாடியை விரும்புவான். அம்மனிதன் வீட்டில் கண்ணாடி கூட ரசனையோடிருக்கும். குறைந்தபட்சம், திருத்தமாகவாவது இருக்கும். பெண்மை, பிரிதெதையும் விட முதலில் தன்னையே ரசிக்கும். எந்தப் பெண்ணுக்கும் தன்னம்பிக்கையின் முதல் வித்து, அவள் அறைக் கண்ணாடிதான். ஒரு பெண்ணின் அறைக் கண்ணாடி பல விஷயங்கள் சொல்லும். முகம் பார்க்கும் கண்ணாடி, இந்தப் பெண் மேலுக்கு மட்டும் அழகி எனச் சொல்லும். ஆளுயரக் கண்ணாடி, இந்தப் பெண், முகம் மட்டுமல்ல, முழுமையிலும் அழகு வேண்டும் என்று நினைப்பவளெனச் சொல்லும். சுத்தமான கண்ணாடி, அவள் தெளிவென்று சொல்லும். அழுக்கேறிய கண்ணாடி, அவள் அவ்வளவுதானென்று சொல்லும்.

செருப்பை அணிந்து வாசலைக் கடக்கையில் தொற்றிக்கொண்ட அவசரம், கல்லூரியை அடையும் வரை உடனிருந்தது. கல்லூரி வளாகத்தினுள் 9 மணிக்குள் நுழைந்த பின்னர்தான் மூச்சே வந்தது. வகுப்பறை நோக்கி நடந்துசெல்கையில், இருபுறமிருந்தும், வாலிபர்களின் 'அட!' பார்வைகளை, கவனியாதது போல் மேலுக்கு அவள் அலட்சியம் செய்தாலும் உள்ளுக்குள் அது பிடித்திருந்தது. பெருமிதமாய் உணர வைத்தது. உண‌ர்ந்த‌தைத் த‌க்க‌வைத்துக்கொள்ள‌ தோன்றிய‌து. உடுத்தியிருந்த‌ உடை எந்த‌க் க‌டையில் வாங்கிய‌து என்று நினைத்துப்பார்க்க‌ வைத்த‌து. ஓரமாய் நின்றிருந்த இரண்டு பையன்கள் குசுகுசுவென தங்களுக்கு ஏதோ பேசிக்கொண்டார்கள். சட்டென ஒருத்தன் இன்னொருத்தனை அவளை நோக்கி தள்ளிவிட்டான். அவன் ஏதோ சொல்லும் நோக்கில் அவளருகில் வந்து ஏதும் சொல்லாமல் கடந்து போனான். முதுகிற்கு பின்னால் சிரிப்பு சத்தம் கேட்டது. மது இது எல்லாவற்றையும் மெளனமாய் ரசித்தபடி தன் போக்கில் வகுப்பறை வந்து தன்னிருக்கையில் தோழி இளவஞ்சி அருகில் அமர்ந்துகொண்டாள்.

மதுவின் வகுப்பில் பயிலும் ஏனைய மாணவர்களும் இதை ஓரக்கண்ணால் கவனித்தார்கள். கவனியாதது போல் பாசாங்கு செய்தார்கள். தங்களுக்குள் உதட்டை இறுக்கி, புருவங்களை உயர்த்தினார்கள். அவர்களுள் ரகு சலனமின்றி இருந்தான். வகுப்பினுள் நுழைந்த மது இளவஞ்சியிடம் பேசத்துவங்கியிருந்ததை மெளனமாய் எவரும் அறியாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.

"இளா"

"என்ன‌டி?"

"அந்த‌ சிவா இன்னிக்கு என்னை ரொம்ப‌ ப‌ய‌முறுத்திட்டாண்டி"

"என்ன‌டி ஆச்சு"

"நான் இப்ப‌ க்ளாஸ்க்கு வ‌ந்துக்கிட்டு இருக்கும்போது என்கிட்ட‌ வ‌ந்துட்டாண்டி".

"ஓ.. எதாச்சும் சொன்னானா?"

"இல்லைடீ.. கிட்ட‌ வ‌ந்து அப்ப‌டியே போயிட்டாண்டீ"

"க‌லாய்க்கிறானாமா... அவ‌னுக்கு இதே வேலைடீ.. பாலிம‌ர் மாலினி இருக்கால‌?"

"ஆமா"

"அவ‌கிட்ட‌யும் இதே மாதிரி தான் ப‌ண்ணியிருக்கான்... பொறுக்கி"

இளா வேண்டுமென்றே குட்டையை குழப்பினாள். சிவா அப்படியில்லை என்பது அவளுக்கு தெரியும். ஆனாலும் அவள் அப்படிச் சொன்னாள்.

சில பெண்கள் விசித்திரமானவர்கள். அவர்களின் பெண்மை விசித்திரமானது. அந்த‌ பெண்மை தான் விரும்பிய அனைத்தும் தனக்கு கிடைக்கவேண்டும் என்றெண்ணும். தான் மதிக்கும் அத்தனையும் தன்னையும் மதிக்கவேண்டும் என்றெண்ணும். நட‌க்கவில்லையெனில் இருமாப்பு கொள்ளும். குறுக்கு வழியிலாவது நடத்த‌ முயற்சிக்கும். அப்படியும் நட‌க்கவில்லையெனில் அதனை விட்டு தொலைதூரம் விலகி இருக்கும். அல்லது அதனை கண் காணாது போக வைக்கும். தன் நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் அனுமதிக்காது. தன் நெருங்கிய நட்புகளுக்கும் கூட நட்பாக விடாமல் தடுக்கும். சேற்றை வாரி இரைக்கும். அதற்கு எப்பேற்பட்ட காரியத்தையும் நிகழ்த்தும். இங்கே இளவஞ்சிக்கு சிவா அப்படித்தான். உன்னுடன் நட்பு கொள்ள விழைகிறேன் என்பதான இளவஞ்சியின் உள்ளர்த்த பார்வைகளை மதுவின் மீதான கவனத்தில் சிவா துரதிருஷ்டவசமாக கவனியாது போனதில் வந்த கோபம் அவளுக்கு.

சில பெண்கள், நட்பு நாடும் உள்ளர்த்த பார்வைகளை தூண்டிலிடுகிறார்கள். பல பெண்கள், அவ்வாறு தூண்டிலை வீசி, வெறுமனே விளையாடுகிறார்கள். மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டு, நெருங்கினால் ' உன்னை யார் பார்த்தார்கள்?' என்று கேலி செய்வார்கள். இவ்வாறான விளையாட்டுப் பார்வைகளால், சிவா, இளவஞ்சியின் பார்வையை தவறவிட்டது குழப்பத்தை விளைவித்தது. அதற்குப் பின் அவன் நட்பு நாடி வந்தபோது, பதிலுக்கு செய்வதாய் எண்ணி, பொது இடத்தில் பேச வந்தவனை , வெடுக்கென்று முகம் திருப்பி அவமானப்படுத்தினாள். நட்பு துளிர் விட ஓர் நல்லபிப்ராயம் தேவை. அதை முதலிலேயே பாழாக்கிவிட்டால் நட்பு துளிர்க்காது. முதலிலேயே நம்பகத்தன்மையை உடைத்துவிட்டால் நட்பு சாத்தியப்படாது. அதைத்தான் தந்திரமாய் காய் நகர்த்தி சாதித்தாள் இளவஞ்சி.

தகுதியான ஓர் ஆண், இவ்விதம் நடத்தப்படக் கூடாது. அது பெண்மையின் மீதான் நம்பிக்கையை தகர்த்துவிடும். பெண்மை நியாயமானதாக இருக்க வேண்டியதில்லை என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். தேவியென போற்றப்படும் பெண்மையிலும் குதர்க்கங்கள் உண்டு என்று எண்ண வைக்கும். உண்மை கண்டறிந்திருக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கப்படக்கூடாது. அதில் நிதானம் காட்டியிருக்கவேண்டும். முதற்கண் பரிச்சயத்தில் ஆயிரம் குளறுபடிகள் இருக்கலாம் என்பதாக இன்னொரு வாய்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அதற்கு பதிலாக வேறொன்று நடந்தது.

இப்படித்தான் சில பொருத்தமான மனிதர்களுக்கிடையேயான நட்பு துளிர்க்காமலேயே போய்விடுகிறது. உண்மையில், சிவா உறுப்பினராக இருக்கும் நுங்கம்பாக்கம் அமேரிக்கன் நூலகத்தில் மதுவும் உறுப்பினர். ஆனால் இருவருக்கும் அது தெரியாது. சிவாவுக்கு பிடித்தமான எழுத்தாளர்கள் மதுவுக்கும் பிடித்தம். தனிமையில் மது கேட்கும் இளையராஜாவின் இசை, சிவாவிற்கு மனப்பாடம். சிவாவுக்கு பிடித்தமான திரைப்படங்களின் இசைத்தட்டு மதுவின் சேகரிப்புகளில். ஆனால், இந்த அத்தனை ஒற்றுமைகளும், பரிச்சயம் என்ற ஒன்று இருந்தால்தானே ஆணும் பெண்ணும் தெரிந்துகொள்ள முடியும். அது முளையிலேயே கிள்ளப்பட்டுவிட்டால்? அதைத்தான் நடத்தினாள் இளவஞ்சி.

"அப்படியா, ச்சே அவனை நல்லவன்னு நம்பினேன்டீ"

"எல்லா பசங்களும் பார்க்க அப்படித்தான்டீ இருப்பானுங்க.. விடு.. கண்டவனைப் பத்தி நமக்கென்ன பேச்சு"

அடுத்தமுறை, மது எதிரில் வருகையில் ஸ்னேகமாய் புன்னகைத்தான் சிவா. மது கவனியாதவளாய் முகத்தை எதிர் திசையில் செலுத்தி தன் வழியே நடந்தாள்.சிவா குழம்பினான். இரண்டு மூன்று முறை கடந்து செல்கையில் கவனித்து, மது வேண்டுமென்றே விலகிச் செல்வதை கவனித்துக் கொண்டான். அவனுள் ஏதோ உடைந்தது. மதுவின் மேல் கோபம் வந்தது. பெண்மை மேல் கோபம் வந்தது. இயலாமையை உணர வைத்தது.

தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தான். யாருக்கு என்ன செய்தோம், ஏன் இந்த தண்டனை என்று உள்ளுக்குள் புழுங்கினான். மது போன்றொரு பெண்ணுடன் பேசக்கூட தகுதியில்லையா தனக்கு என்றெண்ணி வருந்தினான். 12ம் வகுப்பு வரை, வகுப்பில் முதல்வனாக வந்து, உயர் கல்வித் தகுதியில் பொறியியல் கல்லூரியில் ஃப்ரீ சீட் பெற்று, குடி சிகரெட் ஒதுக்கி கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு இத்தனையும் மது போன்றொரு பெண்ணுடன் பேசக்கூட தகுதியில்லையா என்ற எண்ணம் மேலோங்கியது. இத்தனையையும் கவனியாத பெண்மை என்ன பெண்மை? என்று பெண்மை மேல் நம்பிக்கை இழக்க வைத்தது. பெண்மையின் அவதானிப்புகள் தவறாகவும் இருக்கலாம் என்று எண்ணச் செய்தது.

தகுதியான ஆண், ஓரளவிற்கு மேல் இறங்கி வரமாட்டான். அதலபாதாளத்திற்கும் இறங்கி வருபவனிடம் திறமை தங்காது. தகுதி, மான ரோஷம் பார்க்கும். அதைப் பார்க்காவிடில், தகுதி என்ற ஒன்றே வந்திருக்காது. மோசம் போயிருப்பான் அல்லது திசை மாறிப் போயிருப்பான். தகுதியான ஆணுக்கு திமிர் அழகு கூட்டும். திறமை குடியிருக்கும். திறமை குடியிருப்பதாலேயே தகுதி வந்துவிடும். திறமையான ஆண், தலைசிறந்த வித்து. திமிர், ஓர் அணிகலன். திறமை இருக்கிறதா? இல்லையா? என்று பார்க்கக்கூட அடிப்படையில் ஒரு பரிச்சயமோ சினேகமோ தேவைப்படும். அது தகுதியானவனுக்கு வழங்கப்பட வேண்டும். தகுதியானவன் இரைஞ்ச விசனப்படுவான். இரைஞ்சுதல் பிடிக்காது அவனுக்கு. அதுவும் அணிகலன். மரியாதை.

தன்னை விட தகுதியில் குறைந்தவர்களுடன் பெண் நட்பு பாராட்டுகையில், பெண்மை தவறாகவும் சிந்திக்கலாமென்ற‌ தோற்றம் தருகிறது. பெண்மை மீதான அவ நம்பிக்கை இங்கே ஆழமாய் வேர் விடுகிறது. தங்கையோ, அக்காவோ, மனைவியோ 'இவன் என் நண்பன்' என்று ஒரு ஆண்மகனை அறிமுகப்படுத்துகையில், அந்த நட்பின் மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கிறது. அது பொய்யோ என்று நினைக்க வைக்கிறது. எங்கோ நிச்சயம் பிசகியிருக்கலாமென்று நினைக்க வைக்கிறது. அது அந்த நட்பை பிரிப்பதிலோ, அல்லது அதற்கு ஒத்துழைக்காமல் விடுவதிலோ போய் முடிகிறது.

"ஹாய் இளவஞ்சி"

"ஹாய் ரகு"

"ரொம்ப நாளா உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சேன். உங்களுக்கு யாரு இளவஞ்சின்னு பேர் வச்சது?"

"ஆங்..எங்கம்மா"

"ஓ.. நல்ல தமிழ் பெயர்.. எனக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்"

"ஓ.. உங்களுக்கு தமிழ்ன்னா பிடிக்குமா?"

"ஆமா, ரொம்ப.. சுஜாதாவோட எப்போதும் பெண் நாவல் படிச்சிருக்கீங்களா?"

"ஆங்..படிச்சிருக்கேன்.. ரத்தம் ஒரே நிறம் கூட படிக்கணும்.. ஃப்ரண்ட்ஸ் யார்கிட்டயும் அந்த புக் இல்லை"

"அட.. கவலையை விடுங்க.. என்கிட்ட இருக்கு.. நாளைக்கு தரேன்"

"ஓ.. தாங்க்ஸ்"

ரகு தந்திரமாய் காய் நகர்த்தினான். அவனுக்கு தெரியும். இளவஞ்சி மட்டுமே தான் போகும் வழிக்கு திசைகாட்டி என்று. பள்ளிப்பருவத்திலேயே இரண்டு பெண்களை காதலித்த அனுபவம் தந்த அறிவு. மரியாதையை வார்த்தையில் காண்பித்தான். சாதுர்யத்தை அணுகுமுறையில் காண்பித்தான். உண்மையில் இலக்கியம் அவனுக்கு வெகு தூரம். இளவஞ்சிபற்றி கொஞ்சம் தகவல் சேகரித்தான். தமிழ் பிடிக்குமென்று தெரிந்ததும், சிவாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். பிரபலமான எழுத்தாளர்கள் யாரென்று தெரிந்துகொண்டான். அவர்களின் ஆக்கங்கள் தெரிந்துகொண்டான். ஆக்கங்களின் வகைகள் தெரிந்துகொண்டான். இளவஞ்சியை அணுகினான்.

"மது.. இன்னைக்கு ரகு வந்து என்கிட்ட பேசினான்டீ"

"எந்த ரகு?"

"அதாண்டீ.. கொஞ்சம் கருப்பா உயரமா இருப்பானே"

"ஓ..அவனா"

"நல்லா பேசுறாண்டீ.. எனக்கு நாவல் தரேன்னு சொல்லியிருக்கான்... தமிழ்லாம் படிப்பான் போல...இந்த காலத்துல இப்படி பையனை பாக்குறது கஷ்டம் தெரியுமா? நல்ல பையன்"

தன்னையும் ஒருவன் மதித்துப் பேசிவிட்டானென்பதில், இளவஞ்சி சற்று அதிகமாகவே பேசினாள். தன்னிடம் வந்து பேசியவனின் மதிப்பை இயன்றவரை உயர்த்திப் பிடித்தாள்.

"ம்.. என்ன நாவல்டீ?"

"ரத்தம் ஒரே நிறம்"

"ஏய்..அதுவா?!.. படிச்சிட்டு குடுடீ.. நானும் படிக்கணும்"

"என்னோடதில்லை..ரகுவோடது.. எதுக்கும் நீயும் ஒரு வார்த்தை கேட்டுடேன்?"

"அப்படியா..சரி முதல்ல நீ முடி..அப்புறம் பாக்கலாம்.."

முதலில் மறுதலித்துவிட்டாலும், மதுவின் மன‌த்திற்குள் ரகுவைக் குறித்தான ஒர் நல்லெண்ணம் வேர் விட்டது. ஓர் எதிர்பார்ப்பு கூடியது. மது, தமிழ் விரும்பி. தன்னையொத்த தமிழ் விரும்பி மட்டுமே தனக்கு இணையாக முடியும் என்று நம்புகிறவள். ரகுவின் அறிமுகம் இளவஞ்சியின் மூலமாக மதுவிற்கு கிடைத்த‌தில், இள‌வ‌ஞ்சியின் ந‌ட்பை ப‌ற்றி மதுவுக்கு உய‌ர் எண்ண‌ம் கொள்ள‌ வைத்த‌து. அது ஒரு ந‌ம்பிக்கைக்கு வித்திட்ட‌து. தகுதியான‌ சிவா காணாம‌லே போனான்.

மனிதனுக்கு மனசாட்சியே ஒப்பற்ற நீதிமன்றம். பெண்மையை ஏமாற்றி அணுகுபவனின் மனம், ஏமாறும் பெண்மையை முன்னுதாரணமாக்கிப் பார்க்கும். எல்லா பெண்களையும் ஏமாற்ற முடியும் என்பதாக கணக்கு போட வைக்கும். ஏமாற்றினால் பெண்மையை நெருங்கிவிடலாம் என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். பெண்மையை இளப்பமாக நினைக்க வைக்கும். பெண்மையை நெருங்க திறமை தேவையில்லை, பொய்களே போதும் என்று எண்ண வைக்கும். சகோதரியோ, மனைவியோ, சித்தியோ, அத்தையோ இன்னுமொரு ஆண்மகனை 'இவன் என் தோழன்' என்று அறிமுகம் செய்கையில், அது கூட ஏமாற்றுதலோ என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். அதில் எங்கோ பிசகியிருக்கிறது என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். இந்த எண்ணம் இருக்கும் வரை, அந்த நட்பு, உளமார ஒப்புக்கொள்ளப்பட்டிருக்காது. கண்காணிக்கப்படும். முதுகில் குறை கூறப்படும். பெண்மையை நெருங்க திறமை தேவையில்லை, பொய்களே போதுமென்கிற எண்ணம் ஆண்மைக்கு தோன்றுவது பெண்மைக்கு இழுக்கு. அவமானம். தன் சவக்குழியை தானே வெட்டிக்கொள்வது போல. இங்கே தவறிவிட்டால், பிறகெங்கும் பெண்மை சுதாரிக்க இயலாது. கூட்டம் கூடி, கோஷமிட்டு பலனில்லை.

தகுதியான ஆண்மகன் புறக்கணிக்கப்படக் கூடாது. அப்படிப் புறக்கணிக்கப்பட்டால், அது பெண்மைக்கு நஷ்டம். நம்பிக்கை நஷ்டம். தவறான ஆண்மகனை பெண்மை இனம் காண முடியாமல் ஏமாறக் கூடாது. அதுவும் பெண்மைக்கு நஷ்டம். நம்பிக்கை நஷ்டம். உறவுமுறைகளின் மூலம், நம்பிக்கை. அன்பின் உட்கரு நம்பிக்கை. அது நஷ்டமானால் பிறகெல்லாம் சூன்யமே.

இய‌க்க‌ங்க‌ளால் ஆன‌ முடிச்சுக்க‌ள் குழ‌ப்ப‌மான‌வை. ம‌னித‌ன் காணும் எதுவும், ஏதோ ஓர் இய‌க்க‌த்தின், ஏதோவொரு மூலை ம‌ட்டுமே. இப்படியான பார்வை ம‌னித‌ன் விரும்பி ஏற்பதல்ல. இவ்வகையான பார்வைதான் பெற‌ப்ப‌டுகிற‌து. அளிக்கப்படுகிறது. பெருவாரியான இயக்கங்களுக்கு பெண்மை இலக்காகிறாள். பலவகையான நாடகங்கள் பெண்மையை மைய‌ப்ப‌டுத்தி நடத்தப்படுகின்றன. பல சமயங்களில் அவளையும் அறியாமல், அவள் வழி நடத்தப்படுகிறாள். இவ்வகையான வழி நடத்துதலும் அவள் விரும்பி ஏற்பதல்ல. ஆனால், இந்தச் சமூகம் அவ்வகையான வழி நடத்துதலுக்குத்தான் பழக்கப்பட்டிருக்கிறது. யாரோ, எதன் பொருட்டோ, எதையோ இயக்கி, ஒரு மூலையில் தள்ளிவிட, அங்குதான் அதன் மீதான பரிச்சயம் அவளுக்கு துவங்குகிறது.

இந்த ஒட்டுமொத்த நாடகத்தையும், அதன் கட்டமைப்பையும், அது எப்படி அரங்கேறுகிறது என்பது பற்றியும் தெளிவாகத் தெரியாமல்தான், பெண்மை குழம்புகிறது. அரைகுறைப் புரிதலுடன், தான் நினைத்ததை சரியெனக் கொள்கிறது. இது, முக்காலே மூணு வீசம் ஒரு தவற்றுக்கு இட்டுச் சென்றுவிடுகிற‌து. த‌வ‌றிழைக்க‌ப்ப‌ட்ட‌தும், தான் இய‌க்க‌ப்ப‌ட்டிருப்ப‌து புரிகிற‌து.

இது த‌விர்க்க‌ப்ப‌ட‌ வேண்டுமானால், இது அனைத்தும் புரிய‌ வேண்டும். இய‌க்க‌ங்க‌ள் புரிய‌வேண்டும். அதற்கு முதலில் எதிர்பாலின‌ம் புரிய‌ வேண்டும். ஈத‌னைத்திற்கும் முதிர்ச்சி வேண்டும். கால‌ம் க‌னிய‌ வேண்டும். அதுவ‌ரை காத்திருக்க‌ வேண்டும். வெறும‌னே ந‌ட்பு தொட‌ர‌ வேண்டும். ஆரோக்கிய‌மான‌, அறிவு சார் ந‌ட்பு தொட‌ர‌ வேண்டும். அவ‌ச‌ர‌ப்ப‌ட்டால், கேடு விளையும். ச்சீ என்றாகும். பாராமுக‌ம் கொள்ள‌ வேண்டியிருக்கும். ஒதுங்கிப் போக‌ வேண்டியிருக்கும். நம்பிக்கை இழக்க வேண்டியிருக்கும்.

"உங்க ரெண்டுபேருக்கும் என்ன வேணும்?"

"ரகு, எனக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ்" என்றாள் இளவஞ்சி.

"ரகு, எனக்கு பஃப்" என்றாள் மது.

"ஓகே..கொஞ்சம் இருங்க..வாங்கிட்டு வந்திடறேன்" என்றுவிட்டு எழுந்து கவுண்டர் நோக்கி ரகு நகர்ந்த போது, எதிர்பட்ட சிவா, ரகுவைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, சலனமின்றி கேன்டீனை விட்டகன்றான்.

"ரகு, இனிமே எங்களைத் தனியா விட்டுட்டு போகாதப்பா.. கண்டவனும் எங்களை மொறைச்சிட்டு போறான்" என்றாள் இளவஞ்சி, அப்பிள் ஜூஸ், பஃப்ஃபுடன் வந்த ரகுவிடம்.

"மொறைச்சிட்டா? யாரு... யாரது" இரைஞ்சினான் ரகு.

"அவன் பேரு சிவா. எனக்கு தெரியும். சரியான பொறுக்கி அவன்" என்றாள் இளவஞ்சி.

ரகு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

முற்றும்.

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

@நன்றி
கணையாழி கலை இலக்கிய திங்களிதழ்(ஆகஸ்ட் 2013)

Wednesday 31 July 2013

குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை


குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை

அன்பின் நண்பர்களுக்கு,

27.2.2013 தேதியிட்ட குமுதம் வார இதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது.

பணி நிமித்தம் ஹாங்காங் வந்திருப்பதால், வார இறுதிகளில் அலைபேசியில் பேசுகையில் ரூ. 1000 த்திற்கான காசோலை குமுதம் பப்ளிகேஷன்ஸிடமிருந்து வந்திருப்பதாக வீட்டில் சொன்ன பிறகே இந்த விஷயம் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது.

நண்பர்கள் எவரிடமேனும் குறிப்பிட்ட இந்த இதழ் இருக்குமானால் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்

Friday 21 June 2013

ராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை

ராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை

ஒரு எழுத்தாளன் என்பவன் எல்லாவகையான எழுத்துக்களையும் எழுத வேண்டும் என்பார்கள். காதலில் பரிச்சயமே இல்லாவிட்டாலும் கூட, காதல் கவிதைகளை எவரும் எழுதி விட முடியும் என்பதே காதல் கவிதைகளுக்கென இருக்கும் தனிச்சிறப்பு. காதல் செய்ய இதுகாறும் கொடுத்துவைக்கவில்லை என்றாலும், கற்பனையான எனது இன்னுமொரு காதல் கவிதை இந்த வார ராணி வார இதழில் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

'இமைக்குடை' என்ற தலைப்பிலான இக்கவிதை வெளியான இதழின் 16ம் பக்கத்தின் பிரதி இங்கே.


Monday 27 May 2013

ராணி வார இதழில் என் க‌விதை

ராணி வார இதழில் என் க‌விதை

ராணி குடும்ப வாரந்திரியில் நான் எழுதிய 'இரவும் பகலும்' என்ற‌ க‌விதை வெளியாகியிருக்கிறது. க‌விதை வெளியான ராணி வார இதழின் பிர‌தி இங்கே

Thursday 11 April 2013

கணையாழி (ஏப்ரல் 2013) திங்களிதழில் என‌து சிறுக‌தை


கணையாழி (ஏப்ரல் 2013) திங்களிதழில் என‌து சிறுக‌தை

இந்த மாதம் கணையாழி (ஏப்ரல் 2013) கலை இலக்கிய திங்களிதழில் பக்கம் 51ல் துவங்கி 56ல் முடிய நான் எழுதிய 'காலம் வரையும் கோலம்' என்ற தலைப்பிலான சிறுகதை வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுகதை வெளியான பக்கங்களின் பிரதிகள் இங்கே.


ந‌ன்றி.

ந‌ட்புட‌ன்,
ராம்ப்ர‌சாத்

Wednesday 27 March 2013

ஒப்பனைகள் கலைவதற்கே - சமூக‌ குறுநாவல்


ஒப்பனைகள் கலைவதற்கே ‍- சமூக குறுநாவல்

இன்று...

தேவியின் கண்மணியின் 03.04.2013 தேதியிட்ட இந்த வார இதழில் 'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற தலைப்பிலான எனது முதல் சமூக குறுநாவல் வெளியாகிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த மார்ச் 8ம் திகதி, அண்ணா சாலையில் உள்ள தேவியின் கண்மணி அலுவலகத்தில் குறுநாவலை பகிர்ந்துகொண்டது துவங்கி வெளியான இன்றுவரை சுவையான நிகழ்வுகள் பல. அவற்றையெல்லாம் மிகப்பொறுத்தமான தருணமொன்றில் பகிர்ந்துகொள்ள‌வென‌ சேமிக்கிறேன்.

எனது குறுநாவலை தேர்ந்தெடுத்து வெளியிட்டமைக்கு தேவியின் கண்மணி ஆசிரியர் குழுவுக்கும், மற்றும் நிர்வாக குழுவுக்கும் முதற்கண் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

குறுநாவல் மிக அழகாக வந்திருக்கிறது.

பிரபல ஓவியர் மாருதி மிக மிக அழகாக மூன்று சித்திரங்கள் வரைந்திருக்கிறார். குங்குமம் இதழில் வெளியான எனது ஒரு சிறுகதைக்கும் அவரே தான் வரைந்திருந்தார். எனது முதல் குறுநாவலுக்கும் அவரே வரைந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறுநாவ‌லின் அட்டைப் பக்கம் ம‌ற்றும் பின்ப‌க்க‌ங்க‌ளின் பிர‌திக‌ள் இங்கே.



குறுநாவல் வாசிக்க கிடைத்த நண்பர்கள், உங்கள் கருத்துக்களை என்னுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்

Saturday 23 March 2013

தேவியின் கண்மணியில் எனது சமூக நாவல் வெளியீடு


அறிவிப்பு!!!

அன்பின் நண்பர்களுக்கு,

'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற தலைப்பில் நான் எழுதிய சமூக நாவல், வரும் 27 மார்ச் 2013 அன்று வெளியாக இருக்கும் தேவியின் கண்மணி இதழில், வெளியாக இருக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடனும், பேருவகையுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது என்னுடைய முதல் நாவல்.



நண்பர்கள், எனது இந்த நாவலை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்

Monday 11 March 2013

இடைவெளி - சிறுகதை


இடைவெளி - சிறுகதை


அண்ணா நகரின் 17வது அவென்யூவில் உள்ள ஓர் அழகான அபார்ட்மென்டின் முதல் தளத்திலிருக்கும் என் வீட்டின் உள் அறையின் ஜன்னல் மட்டும் கம்பிகள், கதவுகள், தாழ்ப்பாள் உட்பட‌ எப்போதும் துடைத்து பளிச்சென்று இருக்கும். வீட்டின் பிற பகுதிகளில் லேசாக தூசு இருந்தாலும், என்னால் சகிய இயலும். ஆனால், இந்த ஜன்னல் மட்டும் என் பார்வைக்கு துப்புரவாக இருக்கவேண்டும்.

ஜன்னல் வழியே, அமைதியான தெரு, ஒரு நடமாடும் இஸ்தரிக் கடை, காலையிலும், மாலையிலும் நாய்களை வாக்கிங் அழைத்துச் சென்றபடி மனிதர்கள், சில சமயம் பெண்கள், பெரும்பாலும் மத்திம வயதுப் பெண்கள், யார் வீட்டிலேனும் பார்ட்டி, மாலை மங்கிய நேரத்தில் தெரு முக்கில் நிழலடைந்த இடத்தில் அருகருகே நின்று பேசிக்கொள்ளும் காதலர்கள், தவறாக நுழைந்துவிட்டு அமைதியான தெருவில் யாரிடம் விலாசம் விசாரிக்கலாமென அலைபாயும் இளைஞர்கள், அருகருகே அமர்ந்தபடி சும்மா தெருக்களை ஸ்கூட்டியில் சுற்றிக்கொண்டே இருக்கும் இளம்பெண்கள், சாலையோரமாய் உள்ளிருக்கும் எதுவும் வெளியே தெரியாவண்ணம் எல்லா கண்ணாடிகளும் ஏற்றப்பட்டு லேசாய் அதிர்ந்தபடி உருமிக்கொண்டிருக்கும் ஸ்விஃப்ட் யாரேனும் அண்ட சட்டெனக் கிளம்பிவிடுவது, தூரத்து அப்பார்ட்மென்டில் தங்கி இருக்கும் கல்லூரி பெண்கள் ஜன்னல் கம்பிகளினூடே கைகளை தொங்கவிட்டு சிகரெட் பிடிப்பது, இப்படி எத்தனையோ பார்க்கக் கிடைப்பதில் என் போன்ற அறுபது வயதுக்காரனுக்கு வயோதிகம் சுவாரஸ்யப்படுவது இந்த ஒரு ஜன்னலால்தான் என்பதால் வரும் அதிகபட்ச கரிசனம் காரணமாக அந்த ஜன்னலை மட்டும் மேலதிக கவனத்துடன் நான் பராமரிப்பது வழக்கம்.

இவையெல்லாம் கூட குமுதம், குங்குமம் இதழ்களில் வரும் ஒரு பக்க கதைகள் போல தினப்படி பொழுதுபோக்கிற்கு பயன்பட்டாலும், நான் இந்த ஜன்னல் மூலமாக‌ அவதானிக்கும் சில தொடர்கதைகளும் உண்டு. அதில் ஒன்று, சாலை தாண்டி எதிர் அப்பார்ட்மென்டின், முதல் தளத்திலிருக்கும் குடும்பம். அப்பா, அம்மா, பெண், பிள்ளை என்று நால்வர் கொண்ட சிறிய குடும்பம். குடும்பத்தலைவர், ஏதோ மோட்டார் நிறுவனத்தில் மானேஜராக இருக்கிறார். அவரின் மனைவி, குடும்பத்தலைவி. அந்த வீட்டில் ஒர் இளம்பெண். வயது 18 இருக்கலாம். கல்லூரி செல்கிறாள். அந்தப் பிள்ளை காலேஜ் நுழையவிருக்கிறான். மத்திய தரத்திற்கும் மேலான குடும்பம் அது. இவர்களுக்கு சொந்தமாக இரண்டு பைக்குகளும், ஒரு காரும் கூட உள்ளது.

இவர்களை சிரமேற்கொண்டு நான் தேர்ந்தெடுக்கவில்லை. தொடரவில்லை. என் ஜன்னலைத் திறந்தாலே இவர்கள் வீட்டின் பால்கனி, மற்றும் ஜன்னல் தான் தெரியும். ஆதலால், கண்டுகொள்ளாமல் போக வாய்ப்பில்லை. அதன் காரணத்தினாலேயே, இக்குடும்பத்தை, வேறு வக்கின்றி, கவனிக்கத் துவங்கியதில், ஏனைய மூவரையும் விட, அந்த இளம்பெண், தான் அதிக‌ம் வ‌சீக‌ரித்தாள்.

என் வீட்டின் கீழ் வீட்டில் ஒரு பைய‌ன் இருக்கிறான். பெயர் ரவி. அவ‌ள் வ‌ய‌துதான். அவ‌னும் க‌ல்லூரியில் ப‌யில்கிறான். நான் மிக நன்றாக அறிவேன் அவனை. ஒரு முறை என்னுடன், இரத்த தானம் செய்ய வந்திருக்கிறான். வயோதிகத்தில் சுகர் காரணமாக என்னை புறந்தள்ளிவிட்டு அவனிடம் இரத்தம் எடுத்துக்கொண்டது மருத்துவமனை. பி பாஸிட்டிவ் வகை இரத்தம். ஆல்கஹால் சுத்தமாக இல்லை. அன்று தான் கண்டுகொண்டேன், தனக்கு குடிப்பழக்கம் இல்லை என்று அவன் முன்பெப்போதோ சொன்னது உண்மையென்று. ஆனால், அவ‌னுட‌ன் அவ‌ள் பேசி நான் க‌வ‌னித்த‌தே இல்லை. இத்த‌னைக்கும், அவன் ஒரு ஓவிய‌ன். ந‌ன்றாக‌ ஓவிய‌ம் வ‌ரைவான். இர‌ண்டொரு நிக‌ழ்ச்சிக‌ள் கூட‌ செய்திருக்கிறான். த‌ன்னையொத்த‌ க‌ல்விய‌றிவுட‌ன் பொறியிய‌ல் ப‌டிக்கிற‌, க‌லைக‌ளில் ஆர்வ‌ம் கொள்கிற‌, க்ரியேட்டிவிட்டு இருக்கிற‌ ஒரு ஆணுட‌ன் அவ‌ள் ஏன் ப‌ழ‌க‌வில்லை என்ப‌து என‌க்கு புரியாத‌ புதிர். இத்த‌னைக்கும், அவ‌ளை, ஆங்காங்கே தெருக்க‌ளிலும், ஸ்டேஷ‌ன‌ரி ஷாப்க‌ளிலும், பேக்க‌ரிக‌ளிலும், பெட்ரோல் ப‌ங்க‌ளிலும் வேலை செய்யும் பைய‌ன்க‌ளுட‌ன் க‌தைய‌டிப்ப‌தை நானே பார்த்திருக்கிறேன். இவ‌ர்க‌ளை விட‌, தன்னைப் போலவே பொறியிய‌ல் வ‌ரை நீந்தி வ‌ந்த‌ ஒருவ‌ன் எந்த‌வ‌கையில் த‌குதி குறைவு என்ப‌து புரிய‌வில்லை. பொறியியல் படிக்கிறானென்பதற்காகவோ, நிகழ்ச்சிகள் செய்கிறானென்பதற்காகவோ ஒருவ‌னை உத்த‌ம‌ன் என்று சொல்ல‌ முடியாதுதான். ஆனால், பொறியிய‌ல் ப‌டித்த‌ப‌டியே க‌லையையும் வெற்றிக‌ர‌மாக‌ செய்ப‌வ‌னுக்கு எந்த‌ வ‌கையில் ஒரு பெண்ணுட‌ன் அடிப்படை நட்பு கொண்டு பேச‌ த‌குதியில்லை என்ப‌து புரிய‌வில்லை. இவனைவிட, ஸ்டேஷனரி ஷாப் பையன்கள், பெட்ரோல் ஊற்றும் பையன்களிடம் ஒரு பொறியியல் படிக்கும் பெண்ணுக்கு நட்பில் பகிர்ந்துகொள்ள என்ன இருக்குமென்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவளது சகோதரன் பொறியியல் படிக்க இருக்கிறான். அந்தப் பொறியியல் படிப்பிற்குள் நுழைவதற்கு தேவையான உழைப்பை நிச்சயம் தன் சகோதரி கண் பார்க்கத்தான் அவன் மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படிக் கூடவா அந்த இளம் பெண்ணுக்கு, அந்த உழைப்பை புரிந்து கொள்ள இயலாமல் போகும்? அவளானால், கீழ் வீட்டு ரவியிடம் ஏதும் பேசுவதில்லை. ஆனால், கடைக்காரப் பையன்களுடனும், பெட்ரோல் பங்க் பையன்களுடனும் பேசுகிறாள். அப்படியானால், பொறியியல் படிப்பு என்பது உண்மையில் என்ன விதமான படிப்பு என்ற கேள்வி எழுகிறது எனக்குள். அந்தப் படிப்பில் உண்மையில் ஒன்றுமே இல்லையா?

இதில் எனக்கு எந்த துணிபாற்றலும் துணிதலும் தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும், அந்த துணிபாற்றல்களில் எந்த தர்க்கமும் தெரியவில்லை. ஆனால், இதற்கு இவளை மட்டும் குறை சொல்ல முடியுமா என்பதும் தெரியவில்லை.

அன்றொரு நாள் , நான் பார்க்க, ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்த தாயும் மகளும், ஆட்டோவில் அமர்ந்தபடியே சில்லரைக்கு காத்திருக்கையில், ஆட்டோ டிரைவரை பொருட்படுத்தாது, அவள் தாய், சற்று முறுவலித்து கவட்டையில் கைவிட்டு சொறிய, டிரைவர் அதை ஒரு குறுகுறுப்புடன் ஓரக்கண்ணால் பார்ப்பதை, அந்தப் பெண் பார்த்துக்கொண்டிருந்தது. என் 60 வயது அனுபவத்தில் இவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்று நான் மிகவும் குழம்பிப்போன மனிதர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும்.

பிறிதொரு நாள், அந்த வீட்டின் இள‌ம் பெண், தன் அறைக்கண்ணாடியின் எதிரே நின்றவாறு, அணிந்திருந்த சுடிதாரைக் கழற்றினாள். அறை ஜன்னல் திறந்திருக்கிறதைப் பற்றியோ, அதன் மூலம் தன்னை எவரேனும் பார்க்க நேரலாம் என்பது பற்றியோ அவள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. திறந்திருக்கும் ஜன்னல் வழியே எவரெனும் தன்னை பார்க்கக்கூடும் என்ற பிரஞை கூடவா ஒர் இளம்பெண்ணுக்கு இல்லாமல் இருக்கும்!. மெதுவாக, மிக மெதுவாக, ஆடைகளை களைதல் என்கிற அந்த நிர்வாணப்படுத்திக் கொள்ளுதலை, அத்தனை மெதுவாக, அனுபவித்துச் செய்ய, ஒரு பெண் தன்னைத் தானே எத்தனைக்கு ரசித்திருக்க வேண்டும் என்று எண்ணி எண்ணி நான் அயர்ந்தே போனேன். உள்ளாடைகள் வரை கழற்றிவிட்டு, பாத்ரூமிற்குள் போய்விட்டாள்.

எனக்கு ஒன்று புரிந்தது. இன்றைய இளம் தலைமுறையினர், தான் என்கிற பிரஞைக்குள்ளேயே வாழப் பழகிவிட்டனர் போலும். தன்னைச் சுற்றிய உலகத்தைப் பற்றி எந்த விதமான அக்கறைகளும் இல்லாமல், தானே தனக்குள்ளாகவே வாழப் பழகிவிட்டனர் போலும். தன்னைத் தாங்கும் இந்த நிலம் பற்றியோ, அதனுள் இயங்கும் ஏனைய ஜீவராசிகள் பற்றியோ , சூழ்ந்திருக்கும் சமூகம் பற்றியோ, தான் பங்குபெற நேரும் பல்வேறு இயக்கங்கள் பற்றியோ யாதொரு பிரஞையும் இல்லாது இருக்கிறார்கள் போலும். இடம் அல்லது சூழல் என்பதை தேவைப்படும்போது தேர்ந்தெடுத்து உடுத்திக்கொள்ளும் ஒரு உடை போல அவர்கள் நடத்த முயல்வது போல் தோன்றுகிறது. அவ்வாறு நடத்தத் தேவையான அளவுக்கு அவர்கள் தங்களைத் தாங்களே ஜென்மப் பிரயத்தனப்பட்டு சுருக்கிக் கொள்வது போல் தோன்றுகிறது.

அவள் தான் இப்படியென்றால், அவளின் சகோதரன் வேறு தினுசு. அவனும், அவளும் பேசி நான் பார்த்ததே இல்லை. இத்தனைக்கும் இந்தக் குடும்பம் என் வீட்டெதிரில் சுமாராக இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது. அவனை நான் பார்க்கையிலெல்லாம், ஏதோ ஒரு புசுபுசு நாய்க்குட்டியை பாசமுடன் தடவித் தருபவன் போல, அவன் பைக்கை துடைத்துக் கொண்டிருப்பான். எனக்கென்னவோ, அவனுக்கு வீடென்ற ஒன்று தேவையே இல்லையென்று தோன்றும். டீ, காபி குடிப்பது, நண்பர்களுடன் ஃபோனில் கதைப்பது, சும்மா வெறுமனே அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, மொபைலில் விளையாடுவது, நொருக்குத் தீனி தின்பது இப்படி ஒரு நாளின் பெரும்பகுதி நேரம் அந்த பைக்கின் மீதே கழிக்கும் அவனுக்கு வீடு என்ற ஒன்று எதற்கு?.

வாலிபப் பருவத்தின் துவக்கத்தில், பைக், அவனது அடையாளமாகிப் போவதை இந்தக் காலத்துப் பையன்கள் ஒரு வித போதையுடன் விரும்பி ஏற்கிறார்கள். பெருமிதத்துடன் ஒப்புக்கொள்கிறார்கள். பைக் ஒன்று போதும் இளமைக்கு என்று முடிவு செய்கிறார்கள். ராஷ் டிரைவிங்கில் மாட்டிக்கொள்வதை பதக்கமெனப் பேணுகிறார்கள். பைக் வைத்திருப்பதே இளமையின் நோக்கமென்கிற தோற்றம் தருகிறார்கள். மறைமுகமாக, எதிர்பாலினத்திடம் இவ்வளவுதானே நீ எதிர்பார்த்தாய் என்கிறார்கள். மறுக்கவேண்டிய கடமையை மறந்துவிட்டு மறு தரப்பு, அங்கீகரித்துவிடுகிறது. பிற்பாடு, இதைவிட அதிகம் தேவையெனும்போது, அப்படியொன்றும் இல்லாது போகையில், அதே எதிர்பாலினம் ஏமாறுகிறது. ஆண் வர்க்கத்தை இளக்காரமாய் நினைத்துவிடுகிறது. மரியாதை தர மறுக்கிறது. ' நீ என்ன பெரிய இவனா?' என்கிறது. தானும் அதற்கொரு காரணம் என்பதை உணர மறுக்கிறது. இது, இக்காலத்தில் பலருக்கு புரிவதுகூட இல்லை. எவருக்கும் இந்தக் கோணத்தில் ஒரு சிறு பிரஞை கூட இல்லை. இதை என்னவென்று சொல்வது?

அந்த பைக்கை அவன் பார்த்துக்கொள்ளும் விதமும், அதைக் கையாளும் விதத்தையும் பார்த்தால், அந்த பைக் ஏதோ அவனின் சமீபக் காதலி போல் தோன்றும். பஜாஜின் பல்சர் வகை பைக் என்று தெரிகிறது. என்பத்தி ஐந்தாயிரம் விலை உள்ள பைக், லிட்டருக்கு முப்பத்தி ஐந்து கிலோமீட்டருக்கு மேல் கொடுக்காதென்று சொல்கிறார்கள். கல்லூரிக்கு செல்ல இருக்கும் இவனுக்கு இப்படி ஒரு பைக். அதை ஓட்ட பெட்ரோலுக்கு காசு யார் தருகிறார்கள்? வசதி இருக்கிறதென்றால், சொந்தக் காசில் வாங்க வேண்டிய கடமை இல்லாது போகுமா என்ன? வசதி இருக்கிறதென்றால், அப்பன் காசில் பவிசு காட்ட வேண்டுமா என்ன? பதின்ம வயதில் பைக், அப்பனின் சம்பாத்தியத்தையும், பிள்ளைப் பாசத்தையும் வேண்டுமானால் சொல்லலாம். இக்காலத்தில் அனேகம் பிள்ளைகளின் பொறியியலும் கூட அப்பன் காசுதான் என்பதை ஒவ்வொரு பாங்க் மானேஜரும் அறிவார். இதில், பையனின் முயற்சி என்று என்ன இருக்கிறதென்று புரியவில்லை. இவன் காதலி, எதை நம்பி, இவன் காதலை ஏற்றுக் கொள்கிறாள் என்று புரியவில்லை. இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட காதல்கள் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல வருகின்றன?

ஒன்று மட்டும் புரிகிறது. இவன் காதலி, எதை நம்பி, இவன் காதலை ஏற்றுக்கொள்கிறாளோ, அதற்குத்தான் இந்த சமூகத்தை அவள் பழக்கப்படுத்துகிறாள். இப்ப‌டி ப‌ழ‌க்க‌ப்ப‌டும் ச‌மூக‌த்திட‌ன் என்ன‌ வித‌மான‌ த‌ர‌த்தை எதிர்பார்க்க‌ இய‌லும்? இன்றைய இளைஞர்களில் அனேகம் பேர், இலக்கற்று இருக்கிறார்கள். க‌ல்லூரியென்றால் பையன்கள் பைக்கிற்கு அடித்துக்கொள்கிறார்கள். கல்லூரி முடித்தால் ஐ.டி வேலைக்கு அடித்துக்கொள்கிறார்கள். காசு சேர்ந்தவுடன் காலாட்டுகிறார்கள். அதற்கு பிறகு என்ன என்று தெரியவில்லை? இலக்கற்று போய்விடுகிறார்கள். எட்ட நிற்கும் வரை பவிசு காட்டி பெண்ணை அண்டுகிறார்கள். நாலு சுவற்றுக்குள், உண்மைகளை மறைக்க முடியாமல் அசடு வழிகிறார்கள். அல்லது, உடல் வலு காட்டி வாயை அடைக்க முயன்று தோற்கிறார்கள். பணத்தால் அடிக்கிறார்கள். ஏனெனில் அது ஒன்று தான் கையிருப்பு.

இந்தக் கால இளைஞர்கள் நிஜ வாழ்க்கையில், கலை, இலக்கியம், ஓவியம், நடனம் என்று கொடி நாட்டியவர்கள் யாவரும், தங்கள் கல்லூரி நாட்களில் மேடை ஏறாதவர்களே என்று நினைக்கும் படி செய்து விடுகிறார்க‌ள். கல்லூரி மேடைகள் ஒரு ஆரம்பம் தான். ஒரு ஊக்குவிப்பு மட்டும் தான். போலிகளின் வித்து அதில் கிடைக்கும் லேசான போதையிலேயே தீர்ந்து விடுகிறது. உண்மையான திறமை உள்ளவனுக்கு, உண்மையான கலைத் தாகம் உள்ளவனுக்கு, உண்மையான நடனக்காரனுக்கு, உண்மையான திறமைசாலிக்கு கல்லூரி மேடைகளுக்குப் அப்பால் தான் நிஜ மேடைகள் துவங்குகின்றன. உண்மையான போட்டி, அவ்வகையான மேடைகளில் தான் துவங்குகிறது. அம்மேடைகளே உண்மையான மேடைகள். ஆனால், அது இங்கே எவருக்கும் புரிந்தது போல் தோன்றவில்லை. புரிந்தவர்களும் பணத்தால் அடித்தே தனக்கான மேடையை உருவாக்கிக்கொள்கிறார்கள். புளித்த முதலாளித்துவங்களில் மேடைகளும் வெகு எளிதாக சாத்தியப்பட்டு விடுகின்றன.

ஒரு குடும்பத்தின் போக்கை அதன் தலைமையைக் கொண்டு தீர்மானித்துவிடலாம்.

இவர்களைக் கொண்ட குடும்பத்தின் தலைவர்களை நான், நடு இரவில், வழி தவறி, பசித்தழும் ஓர் நாய்க்குட்டியின் கேவலோடுதான் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. தாயோ, உணவோ வேறெங்கோ இருக்க, யாருமற்ற சாலையில், தனக்கே இன்னதென்று தெரியாத தேவைகளுடன் செய்வதறியாது அங்குமிங்கும் இயந்திரத்தனமாய் அலையும் அந்த நாய்க்குட்டி, இவர்களைக் காட்டிலும் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கேனும் ஐந்தறிவு, வாயில்லா ஜீவன் என்கிற சலுகையெல்லாம் இருக்கிறது. மனிதர்கள், அதுவும் வயதில் பெரியவர்கள் அப்படியில்லையே. அவனின் அப்பா வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் ஏதேனும் ஒரு ஃபைலில் மூழுகியிருப்பார். ஃபைலில் தான் நாள் முழுக்க கழிக்க வேண்டுமெனில் இவர் ஏன் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூட எனக்கு அவ்வப்போது தோன்றும். பதின்ம வயதின் பையனை புரிந்துகொள்ள இயலவில்லை. அவனின் மனப்போக்கு புரியவில்லை. அவ்வயதை கடந்தவனுக்கு அவ்வயதின் பிள்ளை புரியவில்லை. அதே வீட்டில் ஜன்னலைத் திறந்துவைத்தபடி, உடை மாற்றும் பெண்ணைத் தெரியவில்லை. வாடகையும், கார் இன்ஷூரன்சும் போக எத்தனை சேமிப்பு என்பது மட்டுமே ஓர் குடும்பத் தலைவனின் கண்களுக்கு தெரிந்தால் போதுமா?

நானும் தான் அலுவலகம் சென்று வேலை செய்திருக்கிறேன். ஆனால் இப்படியல்ல. எச்.வி.எஃப்ஃபில், கூடுதலாக வேலை செய்தால் ஓ.டி எடுத்துக்கொள்ளலாம் என்ற போதும் வீட்டிற்கு ஓடி வந்தவன் நான். கூடுதலாக பணம் சேர்த்து வங்கியில் வைத்துக்கொண்டு நிம்மதி பெருமூச்சு விடலாம். ஆனால் இழந்த வாழ்க்கை திரும்பக் கிடைக்குமா என்ன? இவரானால், வாழ்க்கை என்பதே சம்பாதிக்க என்று திரிவதாய்த் தோன்றுகிறது. இவர் எத்தனை சம்பாதிக்க ஓடுகிறாரோ, அத்தனைக்கத்தனை அவரின் மகனும் மகளும் திசை மாறிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்பதை இவர் எப்போதுதான் உணர்ந்துகொள்வார் என்று எண்ணி வியந்திருக்கிறேன். வாழ்க்கை வாழ்வதற்கு என்று ஒரு நாளேனும் அவர் அருகே சென்று உரக்க கத்த வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

இவர்கள் யாருக்கும் சமூக அமைப்பு தெரிந்திருப்பது போல் தோன்றவில்லை. த‌ன் பாத்திரம் நிரம்பினால் போதும் என்று நினைப்பதாகத் தோன்றுகிறது. தங்கள் சுயத்திற்குள்ளாகவே மூழ்கிப் போய்விடுவதாகத் தோன்றுகிறது. தான், தன் குடும்பம் என்கிற பிரஞைக்குள்ளேயே வாழ்ந்து பழக விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது.

சில சமயங்களில், 'படித்தவர்' என்கிற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன என்று நான் மிகவும் குழம்பியிருக்கிறேன். இவர்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்களே. தாய், தந்தை, மகள் மூவரும் பொறியியல் படித்த/படிக்கிறவர்கள். பிள்ளை படிக்க இருக்கிறான். பொறியியல் படித்த ஒரு முழுக் குடும்பமே இப்படியென்றால், கல்வியை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் இந்தியா போன்ற, இரண்டாவது மிகப்பெரிய ஜனத்தொகை கொண்ட நாட்டின் தரம் என்ன என்று நினைத்தால் என் காலினடியில் தரை நழுவுவது போல் உணர்கிறேன்.

எல்லோருக்கும் எல்லாமும் தானே வந்துவிடுமா? வராவிட்டால் என்ன செய்வது? இவர்கள் ஏன் இப்படி இருக்கவேண்டும்? யாரைக் குறை சொல்வது? எங்கு பிழையாகி போனது? நினைக்க நினைக்க, முடிவில்லாத பிரபஞ்சம் போல கேள்விகள் விஸ்தரித்துக்கொண்டே போகிறது. நம் பாதைக்கு எட்டாது நிற்ப்பவர்களை அண்டுவதான முயற்சிகள் நமது பயணங்களைத் தாமதமாக்க கூடுவதாக, ரத்து செய்யவும் கூடுவதாக இருக்கையில் வ‌லுக்கும் மெல்லிய‌ இடைவெளியை எதைக் கொண்டு நிர‌ப்புவ‌து? இந்த‌ச் சிறுக‌தை, நிர‌ப்பிடுமா?

முற்றும்.

- ராம்ப்ர‌சாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6197).

Friday 25 January 2013

த‌ன்னாலே துவ‌ங்கிடும் நாட‌க‌ங்க‌ள் - க‌விதை


த‌ன்னாலே துவ‌ங்கிடும் நாட‌க‌ங்க‌ள் - க‌விதை


சில நாடகங்கள்
தனக்கான நேரம் குறித்து
மிகவும் கவனத்துடன் இருக்கின்றன...


அவைக‌ள்
எவ்வித‌மான‌ பாகுபாடுக‌ளும்
பார்ப்ப‌தில்லை...


த‌ன‌க்கான‌ நேர‌த்தில்
காத்திருக்கும் த‌குதியான‌வ‌ர்க‌ளுட‌ன்
அது
த‌ன்னாலே துவ‌ங்கிவிடுகிற‌து...


- ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

Tuesday 1 January 2013

குங்குமம் (7.1.2013) இதழில் என் ஒரு பக்க கதை


குங்குமம் (7.1.2013) இதழில் என் ஒரு பக்க கதை





7.1.2013 தேதியிட்ட‌ இந்த வார குங்குமம் இதழில் நான் எழுதிய 'ஜுரம்' என்ற தலைப்பிலான ஒரு பக்க கதை, பக்கம் 71 ல் வெளியாகியிருக்கிறது.

பிரசுரமான கதையின் பிரதியை இங்கே இணைத்திருக்கிறேன்.




நட்புடன்,

ராம்ப்ரசாத்