என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 3 May 2019

சுஜாதாவின் ' நகரம்'



'நகரம்' சுஜாதா எழுதியது. தமிழில் சிறந்து நூறு சிறுகதைகள் வரிசையில் இடம்பெற்றிருக்கிறது.

வள்ளியம்மாள், பாப்பாத்தி என்கிற தன் உடல் சுகமில்லா பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க அழைத்து வருவதில் துவங்குகிறது கதை. பிறகு, ஒரு எளிமையான கிராமத்து தாயிடம் அந்த மருத்துவமனை நிர்வாகம் நடந்து கொள்ளும் விதத்தில், அவள் அச்சமுற்று, குழம்பி, ரசீதுக்கும் இன்ன பிற மருத்துவமனை சார்ந்த ஸ்திதிகளுக்குமாய் அலைகழிந்து தன் மகளை கண் முன்னே போதரவாய் பார்த்து நடத்திக்கொள்ளும் மருத்துவமுறை எதுவோ அதற்கே திரும்பிவிடலாம் என்று எண்ணி மீண்டும் கிராமத்துக்கு பாப்பாத்தியுடன் பேருந்து ஏறுவதில் முடிகிறது கதை.

1940களில் புதுமைப்பித்தன் செய்ததை 1970களில் சுஜாதா செய்தார் என்றால் மிகையில்லை. சிறுகதைகளின் அத்தனை வடிவங்களிலும் முயன்று பார்த்தார் சுஜாதா. சுஜாதா மறைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது என்றாலும்  இன்றைக்கு நடக்கும் புத்தக கண்காட்சிகளிலும் அவர் தான் பெஸ்ட் செல்லர். சுஜாதாவின் சிறப்பே அவரது உரை நடை தான். ஒரு விதமான ஹாஸ்யம்ம் ததும்பும் எழுத்து நடை அது. சுஜாதாவை ஊன்றிப்படித்தவர்களுக்கு அவருடைய நடை ஒரு வியாதி போல ஒட்டிக்கொண்டுவிடும்.

சொல்ல வந்ததை விதம் விதமாக சொல்லி சோதித்துப்பார்த்தார் எனலாம். ஒரு சிலவற்றில் காட்சியாக. ஒரு சிலவற்றில் வார்த்தைகளாக. ஒரு சிலவற்றில் வெறும் வெற்றிடமாக. இப்படி வார்த்தைகளைக்கொண்டு இஷ்டத்துக்கும் விளையாடியிருக்கிறார் சுஜாதா.   ஒரு நாவலில் வில்லன் தலை கீழாக விழுவான். அதை 'விழுந்தான்' என்பதை மட்டும் தலைகீழாக அச்சடித்திருப்பார்கள். உண்மையில் அது அவராக உருவாக்கியது அன்று.

சுஜாதாவுடன் ஆரம்ப கட்டத்தில் பழகியவர்களால் சுஜாதாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அதை சுஜாதா தன் கதைகளில் பயன்படுத்திக்கொண்டார் என்பது நம்பத்தகுந்த தகவல். ஆயினும், இம்மாதிரி வார்த்தை விளையாட்டுக்களைப்பற்றி நினைத்தால் சுஜாதா நினைவு தான் வருகிறது. அது தான் சுஜாதா என்று நினைக்கிறேன். ஒரிஜினலையே மறக்கடிக்க வைக்கும் தன்மை இவருக்கு இருக்கிறது.

உண்மையில் இலக்கியம் என்பதை யாரொருவரும் எடுத்த எடுப்பிலேயே பழகிவிட முடியாது. அதற்கு முதலில் ஒரு பரிச்சயம் வேண்டும். அது வெகு ஜன எழுத்தில் தான் சாத்தியம். சுஜாதா என்னதான் வெகுஜன எழுத்தில் புழங்கினாலும், அவர் எழுதிய பல ஆக்கங்கள், பல சிறுகதை வகைமைகளுக்கு இப்போதிருக்கும் கிராமர் என்றால் அது மிகையில்லை.