என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 30 October 2020

அரசுப்பள்ளி மாணவ வாசகத் திட்டம்

அரசுப்பள்ளி மாணவ வாசகத் திட்டம்


5 அரசுப்பள்ளி மாணவர்களில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களை ஊக்கப்படுத்துவிதமாகவும், அவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் உரையாற்ற ஒரு சிறப்பு விருந்தினரை அழைத்து ஒருங்கிணைக்கும் நிகழ்வு தான் 'அரசுப்பள்ளி மாணவ வாசகத் திட்டம்" என்பது.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள திரு ரவி சொக்கலிங்கம் அவர்கள் அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது. 'எப்படிக் கண்டுபிடிக்கிறாங்க? மண்டை மேல கொண்டையை மறந்திட்டமோ" என்று தான்.

நான் அரசு உதவி பெறும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில், அரசின் மெரிட் உதவித்தொகையுடன் பள்ளிப்படிப்பை முடித்தவன். பொறியியலும் மெரிட் சீட் தான். பெயருக்குத் தான் அரசு உதவி பெறும் பள்ளி. தரத்தில் அரசுப்பள்ளி அளவில் தான் இருக்கும். 

ஐந்து அரசுப்பள்ளி மாணவர்கள் முன் நான் போய் நின்றால் அந்த மாணவர்களுக்கு என்ன தோன்றும்?

"இவனாலேயே அமெரிக்கா போகமுடியுதுன்னா, அப்போ நம்மாளயும் கண்டிப்பா முடியும்" என்று தானே.

(உடனே "ஏம்பா அமெரிக்கா போறதுதான் சாதனையா"ன்னு கேக்கக்கூடாது. அந்த சின்ன முதிர்ச்சி அற்ற வயதில், இது போன்ற சில வார்த்தைகள் தான் நம் மனதில் இருப்பதை அவர்களுக்கு கடத்தும் என்கிற அடிப்படையிலேயே இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கையாள்கிறேன்.. ) 

எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இதை வைத்துப்பார்க்கையில், நான் இந்த உயர்ந்த நோக்கத்துக்கு மிக மிகக் கச்சிதமான ஆள் தான் என்று தோன்றியது. ஆதலால், திரு ரவி சொக்கலிங்கம் அவர்கள் முகநூலில் அணுகி அழைத்தவுடன் ஒப்புக்கொண்டுவிட்டேன்.

நிகழ்வு நவம்பர் மாதம் ஆறாம் திகதி இந்திய நேரப்படி மாலை நான்கு மணிக்கு வலைதமிழில் நடக்க இருக்கிறது. 

இந்த நிகழ்வில் பங்கு பெற இருக்கும் பள்ளிகள்:

1. அரசு உயர் நிலைப்பள்ளி, ஊனையூர், திருச்சி மாவட்டம்

2. அரசு உயர் நிலைப்பள்ளி, காருகுடி

3. ஊ.ஒ.தொடக்கப்பள்ளி, இடைமலைப்பட்டிபுதூர், திருச்சி

4. ஞானாம்பிகா அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி, கருப்பம்புலம், வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம்.

5. ஊ.ஒ. நடு நிலைப்பள்ளி, பரப்பாளையம், திருப்பூர்.

தயாரிப்பெல்லாம் ஒன்றும் தேவை இருக்காது என்றே எண்ணுகிறேன். அவர்கள் முன் நான் போய் நின்றாலே போதுமானது.  மற்றதெல்லாம் தெள்ளத்தெளிவாக அவர்களுக்கே புரிந்துவிடும்.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைக்கத் தேர்வு செயததற்கு திரு ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கும், நிகில் கம்யூனிகேஷன்ஸுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.





Monday 26 October 2020

உங்கள் எண் என்ன? - விமர்சனம் - Priya Baskaran

எழுத்தாளர் ராம்பிரசாத்தின் “ உங்கள் எண் என்ன “ என்ற நாவலை Amazon Kindle ல் வாசித்தேன். இவர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் ஆவார்.

ஆரம்ப அத்தியாயத்தை வாசித்தவுடன், இதில் எங்கிருந்து எண்களைப் பற்றிச் சொல்லப் போகிறார், என நினைக்க வைத்தது. பிறகு கதைக்களம் ஒரு சில அத்தையாங்களைக் கடந்த பின் மாறுபட்ட தளத்தில் பயணிக்க ஆரம்பித்து என்னையும் உடன் இழுத்துச் சென்றது. அந்த கதைக்களத்துக்கு ஏற்ற முன் அத்தியாயங்களையும் அமைத்ததின் பின்னணியும் புரிந்தது.
திருமண உறவுகள் நிலைத்து இருக்க, துணை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை எண்களை வைத்து ஆழமான, வித்தியாசமான கதைக் களத்தை உருவாக்கி உள்ளார்.
முதலில் நம்முடைய தகுதிகள் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு,
திருமண உறவுகள் நிலைத்து நிற்கத் துணையைத் தேர்ந்தெடுக்க
“Ram’s Organized Dependent Essence Chart - RODE” என்ற ஒரு chart ஐ அறிமுகப்படுத்தி, உலகம் எப்படி எண்களால் இயங்குகிறது என்பதையும், ஆண், பெண் உறவில் அப்படிப்பட்ட கணித எண்கள் எப்படி உறவைச் சமன் செய்கிறது என்பதையும் அற்புதமாக விளக்கியுள்ளார்.
உறவு நிலைத்து இருக்க அரத்தங்கள் முக்கியமானவையேத் தவிரத் தேர்வுகள், விருப்பங்கள் அல்ல என்பதைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். அதாவது அர்த்தங்கள்
என்பதை “ ஒரு conservative கடைசி வரை conservative ஆகத்தான் இருப்பார். ஒரு extrovert கடைசி வரை extrovert ஆகத்தான் இருப்பார். இதெல்லாம் மனநிலையோ, காலமோ மாறினாலும் மாறாதது” என்பதை விளக்கி இருக்கிறார்.
சிலர் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள்,
சிலர் எதனையும் பார்ப்பதில்லை. ஆனால்
இந்தக் கணிதப் பொருத்தம் எப்படி ஒரு பந்தத்தை நிரந்தரமாகத் தொய்வில்லாமல் தொடர உதவும் என்பதைக் காட்சிகளுடன், சூழ்நிலைகளுடன், அன்றாட நிகழ்வில் ஏற்படும் நிதர்சனத்துடன் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு வெகு சிறப்பு.
ஒரு வேலைக்குப் போனாலே, முதல் சுற்று, இரண்டாம் சுற்று, இறுதிச் சுற்று என நேர்காணல் வைத்துத் தேர்ந்தெடுக்கப் படுகிறோம். எதனால்..? அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நாம் எவ்வாறு பங்களிக்க இயலும் என்று அறிவதற்காய். இந்த வேலை இல்லை என்றால் வேறு வேலை தேடிக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் இருக்கும் ஒரு பணிக்கே எவ்வளவு நாம் தயார்ப்படுத்திக் கொள்ளும் போது, இருப்பதே இந்த ஒரு பிறவி.
அதில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நமது கலாச்சாரத் திருமண உறவில் ஏமாற்றம், சலிப்பு, மன உலைச்சல் இவற்றைத் தவிர்ந்து, இன்பமுடன், நிலையான, மெய்யான, உறவாய் நிலைத்திருக்க இந்த கணித எண் பொருத்தத்தைப் பெற்றோரால் ஏற்பாடு செய்த திருமணமானாலும், காதல் திருமணமானாலும் பின்பற்றிப் பார்ப்பதில்லை தவறில்லை
எனத் தோன்றுகிறது.
இந்த நாவல் வாழ்வியல் எதார்த்தங்களைப் படம் பிடித்துக் காண்பிக்கிறது. மிகவும் விறுவிறுப்பான அத்தியாயங்கள் அமைந்த அருமையான நாவல். அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நாவல். முக்கியமாகப் பெண்கள் குடும்பச் சுமை, பணிச்சுமை இரண்டிலும் சவாரி செய்ய வேண்டிய காலகட்டத்தில் சரியான துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்.
மேலும் இந்த நாவல் University of Charleston ஐச்சேர்ந்த அமெரிக்க
கணிதவியாலர் Alex Kasman இந்த நூலைக் கணித நாவல் என்று அங்கீகரித்து கணித நூல்களுக்கான பட்டியலில் இணைத்திருக்கிறார்.
வித்தியாசமான கதை மற்றும் அருமையான ஒரு கணித chart ஐ கொடுத்த எழுத்தாளர் ராம்பிரசாத்திற்கு நன்றிகள் . மேன்மேலும் பல நாவல்களைப் படைக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.



Monday 12 October 2020

அனாதை - அறிபுனை - சொல்வனம்

 சொல்வனம் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தேர்வு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதையின் சுட்டி இங்கே.

Sunday 11 October 2020

உ.பி. விவகாரத்தில் ஆண்களுக்கு...

 

உ.பி. விவகாரத்தில் ஆண்களுக்கு ஏதும் ஆலோசனைகள் இல்லையா என்ற கேள்விகள் எழுந்தன. அதுவும் நியாயம் தானே. எழுதக்கூடாது என்றெல்லாம் இல்லை. 


ஆதலால் இந்தப் பத்தி ஆண்களுக்கு. எந்த ஆண்களுக்கு? பொறுப்பற்ற, அறவுணர்வற்ற, சமூகக் கடமைகள் என்ற ஒன்று இருப்பதையே உணர்ந்திருக்காத, அதீத self-centric ஆக இயங்கும் விதி விலக்கான ஆண்களுக்கு.. 


Ok Guys. உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?   நீங்கள் ஒரு பெண்ணை அண்டியும், அவள் உங்களை சீந்தாமல் போனால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? "குறைந்தபட்சம்" அதை அவர்களின் அறியாமை என்று கருதி நீங்கள் கடந்து போகலாமே? ஏன் நீங்கள் கடந்து போவதில்லை? அதற்கு உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். அது உங்களுக்கு இல்லை என்பதாலா? ஆனால், அது உங்கள் பிரச்சனை அல்லவா? அதை நீங்கள் தானே சரி செய்து கொள்ள வேண்டும்? 


1. ஒரு பெண்ணின் நிராகரிப்பை, கோபத்தால் எதிர்கொள்ளாதீர்கள். அதற்கு, வேறு மார்க்கங்கள் இருக்கின்றன. அதே பெண்ணை 'இவனை என்னன்னே தெரியாம மிஸ் பண்ணிட்டோம்' என்று தங்கள் செயலுக்கு வருந்த வைப்பதும் பிரச்சனையை எதிர்கொள்ளும் ஒரு மார்க்கம் தான். அதில் தான் உங்கள் அசலான 'ஆண்மை'யும் இருக்கிறது என்பது என் வாதம்.  ஆண்மை என்றால் 'ஆணாக பிறந்திருப்பது' என்பது உங்கள் புரிதல் எனில், I am sorry. You need to be educated. ஆண் எப்படி பிறப்பாலேயே ஆணாகிவிடுவதில்லையோ, அதே போல, பெண் பிறப்பாலேயே அழகாகிவிடுவதில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


2. பெண்களுக்கு, அவர்களின் புற அழகின் காரணமாய் எழும் பாதுகாப்பின்மைக்கு - தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், தான் அடைய வேண்டிய இலக்கை நோக்கிச் செல்லவும் அவர்கள் புறக்கணிக்கப் பழகியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் judgement எல்லா நேரங்களிலும் சரியாக இருப்பதில்லை.( நம்மில் யாருக்குத்தான் நம் judgements எல்லா நேரமும் சரியாக அமைந்திருக்கிறது?) புறக்கணிக்க வேண்டியவர்களுடன் நட்பு பாராட்டுவதும், நட்பு பாராட்டவேண்டியவர்களை புறக்கணிப்பதும் பெண்களால் சில  நேரங்களில் தவறுதலாய் நடந்துவிடுவதுமுண்டு. அவர்கள் ஒன்றும் கடவுள்கள் இல்லையே? தவறே செய்யாமல் இருக்க? ஆகையால் அவர்களின் புறக்கணிப்பை 'அந்த நேர நிலைப்பாட்டாய்' எடுத்துக்கொண்டு கடந்து போவதில் தான் நீங்கள் உண்மையிலேயே 'ஆண்களாவீர்கள்' என்பது என் வாதம். 


3. பெண்கள் எல்லோரும் கடைந்தெடுத்த நல்லவர்கள் என்று நான் சொல்லவில்லை. விதிவிலக்குகள் இருபாலரிலும் இருக்கிறார்கள். ஆனால், நல்ல விதமாய் வளர்க்கப்பட்ட பெண்களுள் சிலர் ஒரு ஆண் தன்னை வந்து அண்டுகையில், அவளது அந்த நேர சூழலைப் பொறுத்து 'இவனுக்கு நான் பொறுத்தமா? இல்லையா?" என்கிற குறைந்தபட்ச கேள்வியையாவது தனக்குள்ளே எழுப்புகிறாள். அதன் பதில், பாதகமாக அமைவதற்கு உண்மையிலேயே நீங்கள் எவ்விதத்திலும் காரணமில்லாமலும் இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக, உடல் அளவில் மண வாழ்வுக்கு தகுதி யில்லாத பெண், ஒரு ஆண் தன்னை அண்டி வருகையில், புறக்கணிப்பாள். எல்லோரிடமும் தன் உடல் தகுதி குறித்து ஒருவர் விளக்கமளித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை அல்லவா? அதில் அவரது பொதுவாழ்வும் இருக்கிறது. ஆனால் உங்கள் பார்வைக்கு அவள் உங்களை நிராகரிப்பதாய்த் தெரியலாம். அது காட்சிப்பிழை தான். ஒரு பெண் உங்களை நிராகரிக்கிறாள் எனில், அதில் உங்கள் நல்வாழ்வும் இருக்கலாம் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். அவளின் நிராகரிப்பு உங்களுக்குள் கோபத்தை விதைக்காது. மாறாக அன்பையே விதைக்கும். ஏனெனில், ஒரு ஆண் இப்படியாக தன்னை நாடி வரும் பெண்ணுக்கு, இத்தனை நேர்மையாக பதிலளிப்பான் என்று தோன்றவில்லை. நிஜத்தில் நடப்பதுமில்லை என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.


4.பெண்ணின் வனப்பு உங்களை ஈர்க்கலாம். அழகு யாரைத்தான் ஈர்ப்பதில்லை? பெண்களின் புற உடற்கூட்டின் டிசைன் அப்படி. இந்த நிதர்சனங்களைச் சிலர் புரிந்திருக்கிறார்கள். அதற்கேற்ப தங்களின் இயக்கங்களைத் தகவமைத்துக்கொள்கிறார்கள். இவ்விதமானவர்கள் வாழ்வனுபவங்கள், வாழ்வின் வளமான சாத்தியங்கள், மானுட வாழ்வியல் பரிமாணங்களில் அடுத்தடுத்த கட்டங்கள் குறித்தெல்லாம் நல்ல புரிதலைக் கொண்டிருக்கிறார்கள்.


அந்தப் புரிதல் அற்றவர்களால் தான், எவ்வித தயாரிப்புமில்லாமல், பெண் உடலை ஆதிக்கம் செலுத்தக் கிடைத்த வஸ்துவாகப் பார்க்க இயலும். எல்லா பெண்களும் வாழ்வில் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம், நல்ல வாழ்வனுபவமாவது இருக்க வேண்டுமென்று எண்ணுபவர்களாக இருக்கிறார்கள். அதற்குத் தேவைப்படும் ஒத்தாசைகளை ஒருவருக்கொருவர் செய்துகொள்ள பெரு விருப்பமும் கொண்டிருக்கிறார்கள். அவர்களை போகப்பொருளாகப் பார்ப்பது 'பெண் என்றால் என்ன?' என்பது உங்களுக்கு சுத்தமாகப் புரியவில்லை என்பதையே காட்டுவதாக அமையும். உங்களைப் போன்றவர்களுக்கு தாயாக, மகளாக, சித்தியாக, அத்தையாக அமையப்பெறும் அத்தனைப் பெண்களுமே துரதிருஷ்டசாலிகள் தான். உங்களுடன் வாழ்கையில், அதையும் அவர்கள் உணர்ந்தே தான் இருப்பார்கள். அதையும் தாண்டி அவர்கள் உங்களைப் புழங்க அனுமதிப்பது, என்றாவது நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று தான். 


5. மரபணுவிலேயே ஆணின் மீது 'தேர்வை' நிகழ்த்தும் பண்பு பெண்களுக்கு இருக்கிறது. (பெண் இனம் தான் உலகில் முதலில் தோன்றியது என்பதையும், ஆண் இனம் என்பது ஒரு பிறழ்வாக பிற்பாடு உதித்த ஒன்று என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.) ஆகையால் ஒரு பெண்ணைக் கவர உங்களுக்கு இருக்கும் ஒரே மார்க்கம், அவளின் பார்வையில் தேர்வாவது தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்தத் தேர்வில் பெண்களின் judgements எல்லா நேரமும் சரியாக இருக்க வேண்டியதில்லை. (ஏனெனில் அவர்கள் கடவுள்கள் இல்லை. தவறு செய்யக்கூடிய மனிதர்கள் தான்) அவள் தவறு செய்கையில், புன்னகையுடன் கடந்து போய்விடுவது தான் உங்கள் 'ஆண்மைக்கு' அழகு சேர்க்கும். வம்பு செய்வதல்ல. அப்படி இங்கே நம்மைச் சுற்றி தினம் தினம் நடந்து கொண்டு தானே இருக்கிறது. There are women who have lost finest men. வெளிப்பார்வைக்கு தெரியாமல் போனாலும் இதுதான் உண்மை.


6. There is something called 'Dignity'. சுயமரியாதை, மதிப்பு போன்றவைகள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களை நீங்கள் விரும்புங்கள். மதியுங்கள். உங்களை உங்களாலேயே விரும்ப முடியாவிட்டால், ஒரு பெண்ணால் எப்படி முடியும்? 

6.1. உங்களை உங்களால் விரும்ப முடியும் போது தான் ஒரு பெண் உங்களைப் புறக்கணிக்கையில் 'அவளுக்கு புரியவில்லை' என்று கடந்து போக முடியும். 

6.2. உங்களில் எத்தனை பேர் ' I deserve more' என்கிற மூன்று வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறீர்கள்?

6.3. உங்களில் எத்தனை பேர்,  ஆண்களைப் பற்றி ஒரு பெண் இளப்பமாகப் பேசும்போது மட்டுறுத்தியிருக்கிறீர்கள்?

6.4. உங்களில் எத்தனை பேர், பொதுத்தளத்தில் ஆண்கள் குறித்து மட்டமாகப் பேச்சு எழும்போது, 'எல்லோரும் அப்படி அல்ல' என்று கோபப்பட்டிருக்கிறீர்கள்?


7. பிறப்பாலேயே ஒரு ஆண் உயர்ந்தவராகிவிடமாட்டார். வெறும் புற அழகாலேயே ஒரு பெண் அழகாகிவிடவும்மாட்டார். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். யாரையும் தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள். பெண்களை அவர்களின் வாழ்வியல் நோக்கங்களுடன் அணுகுங்கள். எல்லா பெண்களிடம் dignity இருக்கிறது.  அதீதமான நேர்மையுணர்வும், அறவுணர்வும் இருக்கிறது. அவர்களாக யாரையும் எதற்காகவும் மனசாட்சிக்கு விரோதமாக ஏமாற்ற மாட்டார்கள். அதற்கு மதிப்பளியுங்கள். 


உதாரணமாக, 

நீங்கள் ஒரு பெண்ணை அணுகி அதற்கு அவர் எறிந்து விழுகிறார் என்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.

அ. அவரை அதற்கு முன் சிலர், அவரின் புற அழகுக்காய் மட்டுமே அணுகியிருக்கலாம். அதனால் வெறுப்புற்றவர் உங்களையும் அவ்விதமே பார்க்க வாய்ப்பிருக்கிறது. 

ஆ. அவருக்கு மண வாழ்வே பிடிக்கவில்லை என்றும் இருக்கலாம். 

இ. உங்கள் அணுகுமுறை அவரை cheap ஆக்குவதாக இருக்கலாம். அது எப்படி cheap என்பது அவர் பார்வையில் தான் விளங்கும். உங்கள் பார்வையில் அல்ல. ஏனெனில், நீங்கள் அவரை அணுகும் பலரில் ஒரே ஒருவர்.

ஆக, எறிந்து விழுவதற்கெல்லாம் கோபப்பட வேண்டியதில்லை. எல்லா பெண்களிடமும் ஒரு நியாய உணர்வு இருக்கிறது. தான் செய்தது தவறென்று தெரிந்தால் அவரே வந்து மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய விருப்பத்திற்கு மதிப்பளித்து ஒதுங்கி நிற்பது மட்டும் தான். 


8. இறுதியாக, விதிவிலக்குகள் தவிர்த்து பெரும்பான்மை பெண்களுக்கு செக்ஸை விட, ரொமான்ஸில் தான் ஆர்வம் அதிகம். கைபிடித்து நடப்பதும், ஒன்றாகக் கோயிலுக்கோ அல்லது சினிமாவுக்கோ செல்வதும், பிடித்த டாபிக் குறித்து அளவளாவுவதும், நண்பர்கள் வீட்டு விருந்துக்கு சென்று அரட்டை அடிப்பதும் மிகப்பிடித்தமான விஷயங்களாக எப்போதும் இருந்திருக்கின்றன. செக்ஸ் இவர்களுக்கு இரண்டாம், அல்லது மூன்றாம் பட்சமாகத்தான் இருந்திருக்கிறது. இது அவர்களின் வெளிப்புற அழகிற்கு முற்றிலும் முரணானது தான். ஆனால், அதுதான் அவர்களது டிசைனும் கூட. 

இங்கே அவர்களது அறவுணர்வைப் பற்றி மேலும் பகிர்வது பொருத்தமாக இருக்கும். எந்த உறவிலும் உண்மையாக இருக்க முயல்வார்கள். உண்மையையே பேசுவார்கள். அறவுணர்வை தொடர்ந்து மேற்கொள்ளும் பொருட்டு, எந்த ஒரு உண்மையையும் எதிர்கொள்ளும் மன நிலையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இதையெல்லாம் ஆண்களிடம் எதிர்பார்க்கவே இயலாது. ஆணுலகம் இதற்கு முற்றிலும் எதிரானது. 

ஆண்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இதைத்தான். பெண்களை புரிந்துகொள்ள முயலுங்கள். அதுதான் எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக இருக்குமென்பது என் தாழ்மையான கருத்து. 

Monday 5 October 2020

some valuable comments

Some valuable comments from valuable and insightful readers for the recent short stories.  இந்தப் பின்னூட்டங்களுக்கு நிகர் வேறெதுவும் இல்லை... யோசித்துப் பார்த்தால், இந்தப் பின்னூட்டங்கள் விருதுகளை விடவும் அர்த்தமுள்ளவை, முக்கியத்துவம் வாய்ந்தவை.... 


கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் எனது நன்றிகள்...


கடவுளைத் தேடி

https://solvanam.com/2020/09/27/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf/

பூமி

https://www.vasagasalai.com/boomi-short-story-ramprasath/

Orphan

https://www.readomania.com/story/orphan-2










Thursday 1 October 2020

உ.பி. பாலியல் கொலை விவகாரம்

 உ.பி. பாலியல் கொலை விவகாரம்


உ.பி.யில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். நிர்பயா வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அடைந்த சித்திரவதைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் இந்தப் பெண்ணிடமும் அரங்கேற்றியிருக்கிறார்கள். 

கொஞ்ச நாள் முன்பு ஆந்திராவில் ஒரு பெண் மருத்துவரை, இப்படிக் கடத்திப்போய் பலாத்காரம் செய்துவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள். எதிர்காலம் குறித்த எத்தனையெத்தனை கனவுகளுடன் இருந்திருப்பாள் அவள்? 

பெண்களிடம் தான் பேச வேண்டி இருக்கிறது.

பொது வெளியில் தனக்கான சுய தனித்துவ அடையாளத்துக்காகவும், குடும்பத்தின் பொருளாதாரத்திற்காகவும், இன்னபிற கடமைகளுக்காகவும் கொஞ்ச நஞ்சம் தைரியத்தை திரட்டிக்கொண்டு உழைக்க வெளிவரும் பெண்களை, இந்த விதமான குற்றங்கள் மென்மேலும் பயமுறுத்தக்கூடும். வீட்டிற்குள்ளேயே அடைத்துவைக்கக் கூடும். அதற்கு வழி விட்டாற்போல் இருந்துவிடக்கூடாது.

இதன் பிறகு தான் முன்பிருந்ததைவிடவும் வேகமாய் இயங்கவும் வேண்டும். ஆதலால், இதற்கெல்லாம் பயப்படாதீர்கள் என்று அவர்களிடம் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. 

நோ என்றால் நோ தான் என்று திரைப்படம் எடுத்தாகிவிட்டது. தண்டனைகளை கடுமையாக்கிவிட்டாயிற்று. பெப்பர் ஸ்பிரே, அவசர கால எண்கள், என்று எத்தனையோ தீர்வுகள் செயல்படுத்தியாகிவிட்டது. பெண்களுக்கெதிரான குற்றங்கள் நிற்பதாகத் தெரியவில்லை.  

பெண்களுக்கான பாதுகாவல் மிக்க சமூகங்களை வேறெப்படித்தான் கட்டமைப்பது என்று புரியவில்லை. 

மரியாதையும், மதிப்பும் மிக்கவர்களாக அவர்களை சமூக பொது தளங்களில் நிறுத்தாததால் வரும் பிரச்சனைகளோ என்று யோசிக்க வைக்கிறது. ஊடகம் ஒன்று தான் பெரும்பான்மை மக்களின் கல்விக்கான ஆதாரமாக இருப்பின் இந்த தேசத்தில் வேறென்ன நடக்க முடியும்? 

பாதிக்கப்படும் பெண்களை பெருந்தன்மையுடன் ஆண்கள் ஏற்றுக்கொள்வதை இந்தச் சமூகம் ஊக்குவிக்கவும், அங்கீகரிக்கவும் வேண்டும். நம் சமூகம் இன்று அந்த இடத்தை நோக்கி ஓரளவு நகர்ந்திருக்கிறது எனலாம். இப்போதெல்லாம் பள்ளிகளிலேயே காதல்கள் துவங்கிவிடுகின்றன. கல்லூரி முடித்து வேலைக்கு வருகையில் பெரும்பான்மை ஒன்றிரண்டு உறவு முறிவுகளை சந்தித்திருக்கிறார்கள். ஆகையால், இது ஒரு பொருட்டாக இனி வரும் காலங்களில் இராது என்பது என் பார்வை.

ஆண்-பெண் இருபாலரையும் அவர்தம் தனித்துவ பண்புகளை வைத்தே அடையாளப்படுத்த வேண்டும் என்று நான் சொல்வதன் பின்னணியில் உள்ள பல காரணங்களுள் இதுவும் ஒன்று.

 நீட் போன்ற தேர்வுகளை வலிந்து திணிப்பதில் பேரார்வம் கொண்டிருக்கும் அரசுகள், பாலியல் கல்விக்கென ஒரு பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. 

பெண்களை, அவர்தம் அசலான விருப்பங்களுடனும், சிந்தனாமுறையுடனும், இயங்கு இயல்புடனும் புரிந்துகொள்ளவும், சமூகத்துக்குப் பயன்படும் நோக்கில் அவர்களுடனான சம்பாஷனைகளை உருவாக்கிக்கொள்ளவும் ஏது செய்வதான பாடங்களுடன் பாலியல் கல்விகள் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

எவ்விதம் ஆண்களுக்கு பெண்களின் அசலான சிந்தனாமுறை, இயல்புகள், அவர்களுக்கென்ரு ஒரு மனம், அதிலொரு புரிதல் என்று இருப்பது குறித்து தெரிவதில்லையோ, அதே போல் பெண்களுக்கும் ஆண்களின் இயங்குமுறை, இயல்புகள் புரிந்திருப்பது போல் தெரியவில்லை. இது போன்ற பாலியல் குற்றங்களில் 'ஆண்கள் பெண்கள் குறித்து பயிற்றுவிக்கப்பட வேண்டும்' என்று சொல்லப்படுவதிலேயே, மேற்கொண்டு வினவினால், 'பெண்கள் ஆண்களை பலாத்காரம் செய்கிறார்களா?' என்று கேட்க்கப்படுவதிலேயே இது புலனாகிறது. ஆக, இதுபோன்ற எதிர்பாலினம் குறித்து வெளிச்சம் பாய்ச்சும் பாலியல் கல்வி பாடங்கள் பாடத்திட்டங்களிலே சேர்க்கப்படவேண்டும் என்பது என் பரிந்துரை.