என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 19 September 2011

பிழைகளின் முகம்


பிழைகளின் முகம்

தூரத்துக் காட்டுக்குயிலின்
மெல்லிசையில்
மயங்கிக்கிடந்தது அந்த‌
அடர்ந்த கானகமும்,
கவிந்த இருளும்...

இயற்கையின் மெல்லிசையில்
பிழை சேர்க்கும்
முயற்சிகளின்றிப்போதலில்
எத்தனை யதார்த்தம்...

கரிய பிசாசென ஆங்கொருவன்
உள் நுழைந்து தன் போக்கில்
மூங்கில் துளையிட்டூதி
முறையாகச்சேர்ந்த பிழைகளை
இசையென கூவிச்சென்றான்...

கானகம் முழுமைக்கும்
அதிர்ந்து ஒடுங்கியது
இயற்கை...

இந்த இயற்கை எத்தனை
மென்மையானது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4799)

Wednesday 14 September 2011

செத்துமடியும் ஒளி

செத்துமடியும் ஒளி


அன்னியப்பட்டிருக்கும் வராந்தையின்
அத்துவானப்பக்கமிருந்து குரூரக்கோபத்துடன்
எட்டிப்பார்க்கிறது விளக்கொளி...

இருளுக்கும் விளக்கொளிக்குமான
மெளனப்போரின் உச்சத்தில்
செத்துமடியும் விளக்கொளிப்பிண்டங்களை
கொத்தித்தின்ன வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன
கழுகாய் சில விட்டில்பூச்சிகள்...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Tuesday 13 September 2011

உதிரும் மின்மினிகள்


உதிரும் மின்மினிகள்


ஆலமரத்தினடியில்
மழைக்குச் சில
ரயில் நிலையங்களும்
ஒதுங்கிவிடுகின்றன...

இரவு வானத்தைத் துளைத்துப்
புகும் பால்வெளிகளை
மின்மினியென‌ நினைத்து
கவர்ந்துவிடுகின்றன
ஆலம் இலைகள்...

இலைகளினின்றும் சொட்டுசொட்டாய்
உதிரும் மின்மினிகளை
கவனமாய்ச்சேகரிக்கிறது
தெளிந்த குட்டையொன்று...





- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

யாருமற்ற தண்டவாளம்


யாருமற்ற தண்டவாளம்


கவனிப்பார் யாருமின்றி
தனித்திருந்தது தண்டவாளம்...


இர‌வு வான‌த்தை துளையிட்டு
பால் வெள்ளை வ‌ண்ண‌த்தில்
திருட்டுத்த‌ன‌மாய் நுழைந்த‌ ஒளி
த‌ண்ட‌வாள‌த்தின் குறுக்கே விழுந்துகிட‌ந்தது
தற்கொலை செய்ய‌ இருக்கலாம்...

அதன் காரணங்களைப் பற்றி
யாதொரு அசூயையுமின்றி
மெளனித்திருந்தது இரவு...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

கவனிப்பாரின்றி



கவனிப்பாரின்றி


சுற்றிலும் இருளாய்
மத்தியில் வட்டவொளியென‌
இரவைப் போலவே
அரிதாரம் பூசியிருந்தது
அந்த ரயில் நிலையம்...


அனாதையாய் ரயில் நிலையத்திற்கு
காவலாய் நிற்கின்றன சில‌
மின் கம்பங்கள் அருகருகே...


மின் கம்பங்களின் தலையில்
வட்ட ஒளியைச்சுற்றிச்சுற்றி
விட்டில் பூச்சிகள் ரீங்கரிக்க‌
கீழே குட்டைத்தண்ணீரில்
குவிந்துகிடக்கிறது பாலொளி
கவனிப்பாரின்றி...


- ‍ ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)