என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday 2 May 2019

புதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்'

புதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்'


செல்லம்மாள் பிரமநாயகம் பிள்ளையின் மனைவி.

பிரம நாயகம் பிள்ளை வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி அவருக்கு சம்பளத்தை அளந்து தான் தருகிறார். இந்த நிலையில் செல்லம்மாளுக்கு உடல் சுகமில்லாது போகிறது. இந்த சொற்ப சம்பளத்தில் பிரம நாயகம் பிள்ளையால் முழுமையாக பசியாறிக்கொள்ளவோ, முழுமையாக செல்லம்மாளின் வியாதியை குணப்படுத்தவோ முடியவில்லை.

வியாதி முற்றிக்கொண்டே போகிறது. இதனிடையே செல்லம்மாளின் வியாதியை குணப்படுத்தவும், அவளுக்கு போதுமான உணவை தந்திடவும், முதலாளியும் போதிய ஊதியம் கேட்க, தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு , இறுதியில் ஒரு நாள் போதுமான பணம் கிடைக்கையில் செல்லம்மாள் நோய் முற்றி இறந்துவிடுகிறார். பிரம நாயகம் பிள்ளை முதலாளியிடமிருந்து கிடைத்த பணத்தில் செல்லம்மாளின் மரணம் குறித்து தந்தி அடிப்பதில் முடிகிறது சிறுகதை.

தமிழில் மிக முக்கியமான சிறுகதை என்று அடையாளப்படுத்தப்படும் சிறுகதைகளில் ஒன்று புதுமைப்பித்தனின் செல்லம்மாள்.

இன்றைக்கும் இதுதான் நிலை என்பதில் இந்த சிறுகதையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம். ஒயிட் காலர் பணிகளை விட்டுவிடலாம். அதெல்லாம் சொற்பமே. முதலாளி - தொழிலாளி உறவில் வெள்ளைக்காகிதத்தில் முத்திரை இட்டுத்தரப்படாத ஊதியம் தரப்படுகிற பணியிடங்களில் இன்றைக்கும் இதுதான் நிலைமை. கற்பனைக்கும் எட்டாத பணிகள். அங்காடித்தெரு போன்ற படங்களில் காண்பதெல்லாம் மிக மிக சொற்பம்.

முழுமையாக முதலாளிகளை குறை சொல்வதற்கில்லை என்பது என் வாதம். தொழிலாளி என்றொருவன் இல்லாவிட்டால் முதலாளி என்றொருவன் எப்படி உருவாக முடியும்? பார்ப்பது பத்தாயிரம் சம்பளத்தில் அரசாங்க உத்தியோகம் , ஆனால் நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தலைவர்களை பார்த்திருக்கிறேன். எந்த தைரியத்தில்? இதெல்லாம் விழிப்புணர்வு மிகுந்த இந்த கால கட்டத்திலும் நடக்கிறதுதான்.

ஐடியிலும் இதே நிலை. வாங்குகிற சம்பளம் என்பதாயிரம். அதில் நாற்பதாயிரத்துக்கு அபார்ட்மென்ட். மேற்கொண்டு எட்டாயிரம் இண்ஸ்டால்மென்டில் ஒரு சின்ன கார். மீதமுள்ள முப்பது சொச்ச ஆயிரங்களில் குடும்பம். இதில் ஸ்திரத்தன்மையற்ற இயல்புடையது தனியார்  நிறுவன வேலை. இவர்களுக்கெல்லாம் குருட்டுத்தனமாக பெண் கொடுத்து எடுத்து திருமணங்களும் செய்துகொள்கிறார்கள். திருமணம் செய்தால் அடுத்தது பிள்ளைகள் தானே. அப்படியானால் செலவுகள் மிகுக்கத்தானே செய்யும். செலவுகளை எதிர்கொள்ள இரண்டு பேருக்கும் வேலை. இப்படியாக செல்லம்மாள் சிறுகதை முக்கியத்துவம் பெறுகிறது என்றால் மிகை இல்லை.

இந்த லட்சணத்தில் பத்து வருட அனுபவம் பெற்றுவிட்டால் ஐடியில் தலைக்கு மேல் கத்தி தான். அதனால் உயிரைக்கொடுத்து வேலை பார்க்கிறார்கள். சில  சமயங்களில் நிஜமாகவே உயிரை கொடுத்துவிடுவதுதான் துரதிருஷ்டவசமானது. ஒரு பக்கம் ஜனத்தொகையை கட்டுக்கடங்காமல் பெறுக்குகிறோம். மறுபக்கம் திட்டமிடுவதே இல்லை. இப்படி இருந்தால் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் முக்கியத்துவம் பெறாமல் என்ன செய்யும்?

இந்த பின்னணியில் ஒரு சிறுகதை அது எழுதப்பட்ட காலகட்டத்தையும் தாண்டி  நிற்பதன், வாசிக்கப்படுவதன் உள்ளர்த்தங்களை புரிந்துகொள்ள முடியும் என்றே கருதுகிறேன். செல்லம்மாள் ஒரு நல்ல உதாரணம்.