என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 3 May 2019

ஞானப்பால் - ந.பிச்சமூர்த்தி

ஞானப்பால் - ந.பிச்சமூர்த்தி

தவசிப்பிள்ளையின் சத்திரத்துக்கு லிங்கங்கட்டி வந்து சேர்ந்து ஒரு வருடம் ஆவதிலிருந்து சிருகதை துவங்குகிறது. லிங்கங்கட்டியிடன் சேறும் பணத்தின் மீது பொறாமை கொள்ளும் தவசிப்பிள்ளை அதை தங்கமாக்கி அணிந்துகொள்ள அறிவுறுத்துகிறார். தங்கமாக்கி அணிந்துவிட்ட பிறகு அதை ஒரு நாள் லிங்கங்கட்டி தொலைத்துவிடுகிறான். அதோடு அவன் சத்திரத்தை விட்டு வெளியேறுவது ஞானப்பால் அடைவதற்கு ஒப்பானது என்கிற ரீதியில் கதை முடிகிறது.

இரண்டு மனிதர்களுக்கிடையே உள்ள சம்பாஷனையின் மூலம் பிற எதையும் காண்பது என்பது அந்த இரண்டு மனிதர்களின் பார்வையிலான அக மற்றும் புற உலகின் அர்த்தங்களின் மூலம் பிற எதையும் அணுகுவதாகும். இந்த அர்த்தங்களுமே அந்த இருவரது பார்வைகளின் ஊடாக விரிபவைகள் மட்டுமே.

பிச்சமூர்த்தியின் கதைகள் இந்த பார்வைகளினூடே இயங்குபவை, பொருள் தருபவை என்பது என் புரிதல். இந்த வகையில் அமைந்த சிறுகதைகளின் முன்னோடி பிச்சமூர்த்தி எனலாம். இதனால் பிச்சமூர்த்தியின் கதைகளில் கதை மாந்தர்களும், அவர்களின் சமூக இடங்களும் குறித்த விவரணைகள் முக்கியப்படுகின்றன.

புதுமைப்பித்தன் சிறுகதை வகைமைகள் எல்லாவற்றையும் முயன்று பார்த்தார். ஒரு வித எக்ஸ்பெரிமென்டல் மனோ நிலை அது. மெளனி அக மன உணர்வுகளை பிரதிபலித்தார்.கு.ப.ராஜகோபாலன் மரபார்ந்த எழுத்தை விட்டு விலகி,  நவீனத்துவப்பாதையில் பெண் அபிலாஷைகளை பதிவு செய்தார். பிச்சமூர்த்தி மனிதர்கள் மூலமாக, மனிதச்செயல்பாடுகளில் வழி கடத்தப்பட்ட அர்த்தங்கள் வழி அர்த்தங்களை பதிவு செய்தார் எனலாம்.