என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 16 August 2023

வாசகசாலையின் 78வது இதழில் எனது சில கவிதைகள்

வாசகசாலையின் 78வது இதழில் எனது சில கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. வாசித்துவிட்டுக் கருத்துக்கள் பகிருமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

எனது கவிதைகளைத் தேர்வு செய்த வாசகசாலை ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.


http://www.vasagasalai.com/ram-prasath-kavithaigal-vasagasalai-78/


குற்ற உணர்வின் ஆலோசனை - கவிதை



மூன்று சென்ட் இடத்தில்

இரண்டு சென்டில் வீடு கட்டினேன்...

எஞ்சிய ஒரு சென்டில்

மரங்கள் நடுமாறு

ஆலோசனை தந்துவிட்டுப் போனது

தன் இரண்டு சென்ட் நிலத்தில்

இம்மியளவும் இடம் மிச்சமில்லாமல்

வீடு கட்டியிருக்கும்

பக்கத்து வீட்டுக் குற்ற உணர்வு..


 - ராம்பிரசாத்


**********************************


குளிர் விரட்டி - கவிதை


குளிர் விரட்டியபடி

தன் ஆயுளை

எண்ணிக்கொண்டிருக்கும்

விறகுக்கட்டை

இறுதித்தருணங்களில்

தனக்குப் பின்

குளிர் விரட்டுவது யாரென

அலைபாய்கிறது

ஒரு தீ கங்கென...


 - ராம்பிரசாத்


*****************************

முனைப்பின் தீவிரம் - கவிதை



இந்த உலகம் இப்படித்தானென

முன்பே தெரிந்திருப்பின்

இந்த உலகுக்கே வராமலொன்றும்

இருந்திருக்கப்போவதில்லை....


கொஞ்சம் தயாராக

வந்திருக்கலாம்..

அவ்வளவுதான்...


 - ராம்பிரசாத்


*****************************


ஹல்க்கின் சாபங்கள் - கவிதை


சூப்பர் மேன் என்றும்,

ஸ்பைடர் மேன் என்றும்,

தாங்கள் நினைத்தது

மலையைப் புரட்டும்,

கண்டங்கள் பாயும்,

ஹல்க்கைத்தான்

என்று தெரிந்துகொள்ள,

சூப்பர் மேன் என நினைத்தவர்களுக்கு

பத்து வருடங்களும்,

ஸ்பைடர் மேன் என நினைத்தவர்களுக்கு

இருபது வருடங்களும்

பிடிக்கலாம்...


இந்தப் பத்து இருபது வருடங்களுக்கு

ஹல்க் என்று கைகாட்டப்படும்

யார் யாரையோ

வறட்சி மிகுந்த புன்னகையுடன்

எட்ட நின்று

ஹல்க் வேடிக்கை பார்க்கையில்

வேறு யாருக்கும்

எவ்விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை...


இன்னும் சொல்லப்போனால்,

'ஹல்க்கை இப்போதாவது

மேடையேற்றினோமே'

என்று ஹல்க்குடனே அமர்ந்து

உருகி மாய்கிறார்கள்....


 - ராம்பிரசாத்


Monday, 14 August 2023

சில கவிதைகள்

 மனைவியின் பாய் பெஸ்டி - கவிதை

தன் மனைவியின்
பாய் பெஸ்டியை
ஒரு கணவன்
தேடத்துவங்கினான்...
அவளின் வாட்ஸாப் ஹேக் ஆனது..
முகநூலில் இன்னுமொரு போலிக்கணக்கு
நட்பு வட்டத்தில் இணைந்தது...
நள்ளிரவில் குரட்டைச்சத்தங்கள் செயற்கையாயின...
மனைவியின் பள்ளிக்கால புகைப்படங்கள்
பரணிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன....
மனைவியின் நெருங்கின தோழிகளின் புகைப்படங்களுக்கு
விருப்பங்கள் தெரிவித்தவர்கள் எண்ணப்பட்டார்கள்....
திடுமென முன்னறிவிப்பின்றி
வீட்டுக்குள் நுழைந்துவிட்டு
என்ன காரணம் சொல்வதென தடுமாறினான் அவன்...
பயன்படுத்திக்கொண்டிருந்த கணிணியின்
பிரௌசர் ஹிஸ்டரி பீராயப்பட்டது....
எங்கெங்கெல்லாமோ தேடியும்
இறுதியில்,
திருமண ஆல்பத்தில் தான் சிக்கினான்
அவன் மனைவியின் பாய் பெஸ்டி....
அதில்
பட்டு வேட்டி,
பட்டு சட்டையில்,
அவளருகே
அந்த பாய் பெஸ்டி அமர்ந்திருக்க,
அவனது சடலம்
வரதட்சணை சீர்வரிசைகளில்
கிடந்தது...
- ராம்பிரசாத்
*********************************
பழி பாவங்களின் நிழல் - கவிதை

'ஷாப்பிங்' முடித்தவர்களை
விழுங்கியபடி அந்த உயர் ரக கார்
சாலையில் நழுவ எத்தனிக்கையில்
கைக்குழந்தையுடன் ஓடிவந்து
ஜன்னலோரம் கையேந்துகிறாள் பெண்ணொருத்தி...
காசு தராமல் செல்பவர்களை
கடுஞ்சொற்களால் ஏசுகிறாள்...
காதலிப்பதாய் வாக்களித்து வயிற்றை நிரப்பிவிட்டு
நழுவிச்சென்றவனை ஏசியபோது கூட
அத்தனை மோசமாக வார்த்தைகளை
அவள் பயன்படுத்தியிருக்கவில்லை...
இப்படித்தான்,
அவளுக்குள்ளிருந்த காதலியை
அவளுக்கு அறிமுகம் செய்த
ஒற்றைக் காரணத்திற்காய்
பழி பாவங்களின் நிழல் கூட விழாமல்
தப்பித்துவிடுகிறார்கள்
அனேகம் கயவாளிக் காதலன்கள்...
- ராம்பிரசாத்
*********************************

முதல் முத்தம் - கவிதை
ஆயிரம் கவிதைகள் எழுதிவிட்ட பிறகு
முதல் கவிதை எதுவென்று கேட்டார் ஒருவர்.
தனக்கு வந்து முதல் முத்தத்தை
நினைவில் வைத்திருக்கும் குழந்தையும்
உண்டா என்ன?
- ராம்பிரசாத்
All reacti

Tuesday, 1 August 2023

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண்கள்....

 சமீபத்திய நீயா நானாவில் 'திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண்கள்' நிகழ்ச்சி அருமையாக இருந்தது.. அது குறித்து அப்போதே எழுத நினைத்தேன்.. வாய்ப்பமையவில்லை..

Marriage is no longer worth trying என்ற இடத்திற்கு வந்துவிட்டோம். ஆண் - பெண் இருபாலரில் இது பெண்களுக்கு மிக நன்றாகவே புரிந்திருக்கிறது.. ஆண்களுக்கு இன்னும் புரியவில்லை.  பலர், ஆண் உலகம் பெண்களுக்கென உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்புகளுக்கு எவ்வித பிசகும் இல்லாமல் பெண்கள் இருக்கிறார்கள் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 

இன்றைக்கு அங்குமிங்கும் நடக்கும் திருமணங்களும் பெரும்பாலும் பெண்களின் terms படி நடப்பவைகளே. அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதுவும் கூட ஒரு வித அறியாமை அல்லது சமூக வழமையின் பிரகாரம் தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக்கொண்டதன் பக்கவிளைவு என்றே கொள்ள வேண்டி இருக்கிறது. அவர்களிடமே கூட நெருங்கி அமர்ந்து பேசினால், 'ஏதோ தெரியாம பண்ணிட்டேன்' என்கிற ரீதியில் தான் பதிலளிக்கிறார்கள்.

இது யாருடைய தவறும் அல்ல என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு சமூக இயக்கமாகவே திருமணங்கள் தேவையற்ற ஒரு இடத்திற்கு நாம் நகர்ந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். There are other ways we could have handled it, ஆனால், அது நடக்கவில்லை  என்பதில் தான் ஒரு சமூகமாக நாம் தோல்வியடைந்திருக்கிறோம். என்பதை நாம் எல்லோருமே ஒரு மனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போதிருக்கும் சூழளில் நமக்கெல்லாம் தேவை prenuptial agreements/ வாடகைத்தாய் முறைகளை சட்டப்பூர்வமாக்குவது/  திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றலை சட்டப்பூர்வமாக்குவது / விவாகரத்துக்களை normalise செய்வது  போன்றவைகளே.


நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்:


1. நன்றாக ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள்; அந்த உணவு உங்கள் சொந்த உழைப்பின் ஊதியத்தில் பெற்றதாய் இருக்க வேண்டும். 

2. Be fit. Fitness ல் ஆர்வம் செலுத்துங்கள். அதற்கென நேரம் செலவிடுங்கள்.

3. அறிவுசார் தளங்களில் இயங்கத்துவங்குங்கள்; மன ஆரோக்கியத்திற்கு இது அத்தியாவசியம்.

4. Earn the opportunity for sex; அதாவது, உடலுறவுக்கான வாய்ப்பை எதிர்பாலினம் உங்களுக்கு தர விரும்பும் இடத்தில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள்.


இவ்வளவு தான். திருமணங்கள் இனி அருகித்தான் போகும்; ஏனெனில், சமூக நலனுக்கு ஒவ்வாதவைகள் அழிவது தான் நியாயம்.


Monday, 3 July 2023

திருமதி சுமித்ரா அம்மையார் நினைவு சிறுகதைப் போட்டி-2023

 கதிர்'ஸ் பல்சுவை மின்னிதழ் - இளவல் ஹரிஹரன் இணைந்து நடத்திய அன்னை திருமதி சுமித்ரா அம்மையார் நினைவு சிறுகதைப் போட்டி-2023 ல் எனது சிறுகதையான 'வாடகைத்தாய்' தேர்வாகியிருக்கிறது என்பதை இப்பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி.

எனது சிறுகதையைத் தேர்வு செய்த தேர்வுக்குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.







Friday, 30 June 2023

Lust Stories - 2

Lust Stories -2 ல் இருந்த நான்கில் எனக்கு உருப்படியாய்த் தோன்றுவது மிருனால் தாக்கூர் நடித்த முதலாவது தான். 




அதில் வரும் அந்தப் பாட்டி சொல்வது அத்தனையும் happy path மட்டுமே என்பது என் வாதம். பெரும்பான்மையோர்க்கு happy path நிகழ்வதில்லை என்பதே இந்தப் பகுதியை எல்லோருக்குமானதாக்குவதில்லை.

இக்காலத்தில் திருமணங்களே முப்பதுகளின் மத்தியில் தான் நடக்கின்றன. இந்த வயதில், ஆரோக்கியமான உடல், வசீகரமாகவும் வைத்திருக்க மிகப்பல  மெனக்கெடல்கள் தேவைப்படுகின்றன. அதற்கெல்லாம் வணங்கக்கூடிய உடல் இங்கே பலருக்கும் வாய்ப்பதில்லை என்பதே நிஜம். திருமணம், தாய்மை ஆகிய மைல்கற்கள்களுக்குப் பிறகு உடல் அழகைத் தக்க வைப்பது பலருக்குக் கடினமாகத்தான் இருக்கிறது. இந்த இடத்தில், உடல் அழகு, வனப்பு மட்டுமே காமத்திற்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதில்லை என்று யாரேனும் வாதம் செய்யலாம். உண்மை தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவ்விதமான விருப்பம் கொள்ள, குறிப்பிட்ட துணையிடம் ஏதேனும் ஒன்றாவது பிடித்திருக்க வேண்டும்; அது அந்தத் துணையை ரசிக்க வைக்க வேண்டும்; அது அவ்வுறவைப் படுக்கை வரை நீட்டிப்பதில் ஆட்சேபிக்காதவாறு அமையவேண்டும். அதற்கு அது இயல்பிலேயே மரியாதை, மற்றும் மதிப்பை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். அறிவுப்பூர்வமான பேச்சில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். நகைச்சுவைப் பேச்சில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். நடனத்தில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். கட்டான உடலில் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். பயண அனுபவங்கள் சேகரிப்பவர்களிடம் மயங்குபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதிலெல்லாம் ஒன்றே ஒன்று பொதுவாக இருந்திருக்கிறது.

ஒரு ஆண் தன்னிடம் flirt செய்யும் போது, அந்த courtshipஐ விரும்பும் பெண்கள் அவனைத் துணையாகத் தேர்வு செய்வதில்லை. தன்னிடம் மட்டும் தான் flirt செய்கிறானா என்று பார்க்க முயல்கிறார்கள். ஏன்? ஏனெனில், அவன் எல்லா பெண்களிடமும் flirt செய்கிறான் என்னும்போது, அது தனக்கானது இல்லை என்றெண்ணுகிறார்கள். அது அவன் மீதான மரியாதையை, மதிப்பைக் குறைத்துவிடுகிறது. இதுதான் காரணம். 

வசீகர உடல் தோற்றம் இல்லாதவர்க்கும் உறவுகள் வாய்ப்பது வேறெப்படி சாத்தியமாகிறது? 

புத்திசாலித்தனமாகப் பேசுபவராக இருந்து intellectual companionship வழங்குவதன் மூலமாக எதிர்பாலினத்திடம் மரியாதை, மதிப்புடன் கூடிய ஈர்ப்பைச் சம்பாதிப்பவராக இருந்தால் சாத்தியமாகிறது. பெண்ணோ, பையனோ, புத்திசாலித்தனமான பேச்சில் மயங்கும் ஆளாக இருப்பின் இவ்வழி பொருந்தும். அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பது கடினம். ஆக, சிரிக்க வைப்பவராக இருப்பதன் மூலமாக எதிர்பாலினத்திடம் மரியாதை, மதிப்புடன் கூடிய ஈர்ப்பைச் சம்பாதிப்பவராக இருந்தால் சாத்தியமாகிறது. எதிர்பாலினத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதன் மூலமாக, அவரிடமிருந்து மரியாதை, மதிப்பைப் பெற்று அதன் மூலம் ஈர்ப்பைப் பெறுபவராக இருந்தால் சாத்தியமாகிறது; பணம் படைத்தவர்கள் இந்த வழியைக் கைகொண்டு நான் பார்த்திருக்கிறேன்.

ஆக, வெறும் உறவுகள் தான் எனினும், அதற்கு அடித்தளமாவது மரியாதை, மதிப்பு போன்றவைகள் தாம்.

ஆனால், நிஜம் இப்படி எளிமையாக அமைவதில்லை. 

நல்ல வருமானம் ஈட்டக்கூடிய துணை, சமூக அந்தஸ்து, வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற இடங்களில், இவைகளே பிரச்சனையாகிவிடுகின்றனவோ என்று யோசிக்க வைக்கிறது இன்றிருக்கும் சமூகச் சூழல். இரு பாலரிலும் இது நடக்கிறது. அடுத்த நூல்களிலிருந்து ஐடியாக்களைத் திருடி, சொந்தப் பெயரில் நூல் வெளியிட்டுக்கொண்டார் என்ற காரணத்திற்காய், கணவர் மீது மரியாதை இழந்து விவாகரத்து பெற்ற பெண்களை நான் பார்த்திருக்கிறேன். உண்மையில், அந்தப் பெண்கள் மீது இருந்த மரியாதையை விவாகரத்துக்கான இந்தக் காரணம் பன்மடங்காக்க மட்டுமே செய்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஆனால், பொதுச்சமூகம் அந்தப் பெண்களை 'இதுக்கெல்லாமா விவாகரத்து பண்ணுவாங்க' என்று குறை சொல்லும் தான். படுக்கையறைக்குள் சமூகத்துக்கு என்ன வேலை? 

போலவே, பெண்களிலும் பலர் புகுந்த வீட்டின் செழுமையில் மூழ்கி, முழுச்சோம்பேறிகளாகி விடுவது, அவர்தம் கணவர்களான ஆண்கள் அவர்கள் மீது மரியாதை மதிப்பிழந்து போகச் செய்துவிடுகிறது.. சென்னையில் ஒரு மருத்துவரைத் தெரியும். இவர் பார்க்க அரவிந்தசாமி போல இருப்பார். கெட்டப்பழக்கங்கள் ஏதும் இல்லை. ஐந்தடி தான் உயரம். பெற்றவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் அதற்கேற்றார்போல் பெண் பார்த்துத் திருமணம் செய்தார்கள்.அந்தப் பெண் இவர் அளவுக்கு இல்லை. ஒரு குழந்தை பிறந்த பிறகு இன்னும் குண்டாகிவிட்டார். ஒரு கட்டத்தில் வீட்டு டிரைவருடன் ஓடிவிட்டார். 'டாக்டர் சம்சாரம் டிரைவரோட ஓடிடிச்சு' என்று பேசினார்கள். இந்த மருத்துவர் அலட்டிக்கொள்ளவே இல்லை. மேலோட்டமாகப் பார்க்க, டாக்டர் தான் சரியில்லை என்ற தோற்றம் தரலாம். மருத்துவரின் மனைவியுடன் மருத்துவர் நெருக்கமாக இல்லாமல் இருந்ததற்கு அந்த மனைவியே கூட காரணமாக இருக்கலாம் என்றெல்லாம் யாருக்கும் யோசனை போகாது. வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வந்துவிட்டால், எதையுமே புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று ஏதேனும் இருக்கிறதா என்ன? ஆனால், பலர் இப்படித்தான் இயங்குகிறார்கள். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள நேரமிருந்தும், ஒரு விதமான சோம்பல் இவர்களை ஆட்கொண்டு விடுகிறது. குருட்டுச் சமூகத்தின் வழமையை, இவர்கள் தங்கள் தவறுகளை மறைக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், இது எவ்வகையிலும் இவர்களை எவ்வித மரியாதைக்கோ, மதிப்புக்கோ தகுதியானவர்களாக்குவதில்லை. 

திருமணம், குடும்பம் என்ற பெயரில் யாரும் யாரையும் எதற்குமே நிர்பந்தித்து விட முடியாது. காமம் அற்புதமானதுதான். ஆனால், மரியாதையும், மதிப்பும் இல்லாத இடத்தில், இக்குறும்படத்தில் சொல்வது போலெல்லாம் யாராலும் முழு மனதுடன் நடந்து கொள்ள முடியாது..

Sunday, 28 May 2023

தழுவு கருவி - 2023ன் அரூ கருவுருப்புனைவி மின்னிதழ் சிறுகதைப்போட்டி

தமிழில் வெளியாகும் அறிபுனை இதழான அரூ கருவுருப்புனைவிதழ் நடத்திய 2023ன் விஞ்ஞானச் சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதையான 'தழுவு கருவி' தேர்வாகியிருக்கிறது..

தேர்வுக்குழுவுக்கு எனது நன்றிகள்.. அரூவில் சிறுகதையை வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்...

Monday, 22 May 2023

Aphelion - Daisy - Ramprasath Rengasamy

The April 2023 issue of The Aphelion Science Fiction and Fantasy Zine edited by Dan Hollifield has my short story, "Daisy"! Delighted to have it placed among such great authors!!

http://www.aphelion-webzine.com/shorts/2023/04/Daisy.html






Monday, 15 May 2023

யாத்திசை - திரைப்படம்

 பணிச்சூழலுக்கு மத்தியில் 'யாத்திசை' பார்க்க நேற்று தான் நேரம் கிட்டியது. 


யாத்திசையில் சப்டைட்டில் இல்லாமல் படம் பார்க்க முடியவில்லை என்ற விமர்சனமெல்லாம் இருக்கிறதுதான்.  நாங்கைந்துமுறை திரும்பத்திரும்பப் பார்க்க வேண்டியிருந்தது.


Apocalypto மெல் கிப்சன் இயக்கிய படம்; மாயன் இனத்தவரின் மொழி, கலாச்சாரம் குறித்து பிற்காலத்தில் யாரேனும்  தெரிந்துகொள்ள விரும்பினால் Apocalyptoவை ஒரு reference ஆகப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். பார்க்கப்போனால், இயக்குனராக ஒரு படத்தை இயக்குகையில் கிடைத்த தகவல்களை எல்லோருக்கும் பயன்படும் விதமாக ஆவணப்படுத்த திரைப்படத்தையே ஒரு களஞ்சியமாகப் பாவித்திருப்பார் மெல் கிப்சன். யாத்திசையையும் அதில் தாராளமாகச் சேர்க்கலாம். 


சம காலத்தில் வெளியான சரித்திரப்படங்கள் சமகால ரசிகர்களை மகிழ்வித்துவிடலாம். எதிர்கால தகவல் தேடர்களுக்கு அவைகள் பயனளிக்கப்போவதில்லை. Apocalypto, யாத்திசை போன்ற படங்கள் மட்டுமே ஒரு தகவல் களஞ்சியமாக எதிர்கால பார்வையாளர்களுக்கு எஞ்சி நிற்கும் என்று நினைக்கிறேன். திரைப்படத்தின் எத்தனை சதவிகிதத் தகவல்கள் அவர்களுக்குப் பயன்படும் என்று வேண்டுமானால் நாம் விவாதிக்க முடியும். எப்படியாகினும் களஞ்சியம் களஞ்சியம் தானே.


Apocalypto வை ஒரு தகவல் களஞ்சியமாக நான் வைத்திருக்கிறேன். எண்ணற்ற முறை பார்த்திருக்கிறேன். repeat audience எனபார்கள். யாத்திசையில் வரும் மொழி, repeat audience, மற்றும் reference நோக்கங்களுக்காக வைக்கப்பட்டதென்று எடுத்துக்கொள்வதில் பயன் அதிகம் என்பதே என் வாதம்.. 


தமிழ்த்திரை உலகில் பரீட்சார்த்த முயற்சிகள் அவ்வப்போது நிகழும். 'ழகரம்' என்றொரு படம் எடுத்திருந்தார்கள். 10 லட்சம் தான் மொத்த பட்ஜெட். எனக்குப் பிடித்திருந்தது. அதுபோல யாத்திசையையும் ஒரு பரீட்சார்த்த முயல்வாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.  என்னளவில் அது என் தகவல் களஞ்சியத்தில் இடம்பெற எல்லா தகுதியும் கொண்ட ஒன்று; Apocalypto போலவே.




Wednesday, 26 April 2023

மே மாதம் பிறந்த நாள் காணும் 'தல'

"மே மாதம் பிறந்த நாள் காண்பவர்" என்றாலே அவர் நினைவுக்கு வந்துவிடுவார்... அவர் தான் 'தல'... 

சுஜாதா!! 

(எழுத்துலகில் தல சுஜாதா தானே... ஹிஹிஹிஹி ) 

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாள் மே3.. எனது ஆக்கங்களில் சுஜாதாவை தரிசித்ததாக வாசகர்கள் சுட்டிக்காட்டிய சிறுகதைகளைப் பகிர்வதன் மூலம் இந்த முறை அவரை நினைவு கூறலாம் என்று தோன்றியது.. 

சுஜாதா!!

தன் எழுத்தின் வாயிலாக நம் எல்லோர் மனதிலும் இன்னமும் வாழ்பவர்..


அவன் – ராம்பிரசாத் 

http://www.vasagasalai.com/avan-short-story-by-vasagasalai/

குளம் - ராம்பிரசாத்

http://www.vasagasalai.com/kulam-short-story-ramprasath/

புதிய உலகம் - ராம்பிரசாத்

http://www.vasagasalai.com/pudhiya-ulagam-tamil-short-story/