என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 5 April 2026

அறிவியல் புனைவுகள் குறித்த கட்டுரைகள்

"அறிவியல் புனைவுகள்" என்று கூகிளில் தட்டினாலே தமிழில் அறிவியல் புனைவுகள் குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் பட்டியலாக வந்துவிடுகின்றன.

பலர் எழுதியிருக்கிறார்கள்.

எல்லா கட்டுரைகளிலும் சில பொதுவான அம்சங்களைப் பார்க்க முடிகிறது.

1. கிட்டத்தட்ட எல்லா கட்டுரைகளும், ஏதோவொரு அமெரிக்க அறிவியல் புனைவு எழுத்தாளரிடமிருந்து தான் துவங்குகிறது. அது ஹெச்.ஜி.வெல்ஸ் ஆக இருக்கலாம். அல்லது ஜூல்ஸ் வெர்ன் ஆக இருக்கலாம். அல்லது  ஐசக் அசிமோவ் ஆக இருக்கலாம்.

2. பிறகு தமிழில் முதல் முயற்சிகள் என்று அது நீள்கிறது. இந்தப் பகுதியில் பிற்பகுதி எழுத்தாளர் சுஜாதா, ராஜேஷ்குமார் என்று முடிகிறது.

3. அதன் பிறகு, தற்காலத்தில் அதை யார் யார் செய்கிறார்கள், அரூ, அறிவியல் சிறப்பிதழ்கள் என நீள்கிறது. (இது பெரும்பாலும், கட்டுரை எழுதியவருக்கு 'வேண்டியவர்கள்' என்கிற ரீதியில் தான் இருப்பதாகத் தெரிகிறது).

4. அமெரிக்க எழுத்தில் துவங்கும் கட்டுரை, அதற்கு மேல், "தமிழில் அறிவியல் புனைவு முயற்சிகள்" என்று ஒரு தனி ட்ராக் ஆக சென்று விடுகிறது. முதல் பத்திக்கு பிறகு அது மீண்டும் உலகளாவிய அறிபுனை எழுத்தில் வந்து நிற்பதில்லை. SFWA, HWA என்று எதைப்பற்றிய குறிப்பும் இல்லை. ஒரு கட்டுரையில், டெட் சியாங் பற்றியெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், கணிதப் புனைவுகள் பற்றி மறந்தும் கூட அவர் தன் கட்டுரையில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இந்த இல்லாமைகளை ஒரு பொது அம்சமாக, எல்லா "தமிழில் அறிவியல் புனைவுகள்" கட்டுரைகளிலும் தென்படுவது தற்செயல் என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை. 

அறிவியல் புனைவில் ஏன் பாரபட்சம்? இந்திய ஞான மரபு என்று ஒன்று இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே போல ஒவ்வொரு நாட்டில் உள்ள பெருங்கூட்டங்களுக்கும் இருக்கும் இல்லையா? அவரவர் அவரவர் ஞான மரபுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்தால், அறிவு ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி விடாதா? அப்படியானால், உலகம் எப்போது அறிவு ரீதியில் ஒன்று படுவது? அறிவுக்கு என்ன வேலி? ஞானத்திற்கு ஏன் வேலி?

பிற தொழில்கள் கலாச்சாரம், நாடு மொழி இன உணர்வுகளால் பிளவுபட்டு இருக்கலாம். அறிவு சார் சமூகம் அப்படி இருக்கத்தான் வேண்டுமா? உலகம் பிளவுபட்டிருந்த காலத்தில் கூட பல்வேறு இன, மற்றும் கலாச்சாரங்கள் தங்களுக்குள் அறிவைப் பகிர்ந்துகொண்டதற்கான ஆதாரங்கள் இன்று கூட கிடைக்கின்றன. இதன் பொருள் என்ன? அறிவு என்பது உலகில் உள்ள இனங்கள், மொழிகள், மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். அல்லவா?

கட்டுரைகளை எழுதும் எழுத்தாளர்கள், தங்களுக்கு எதில் பரிச்சயம் இருக்கிறதோ, தங்களுக்கு எந்தளவிற்கு புரிதல் இருக்கிறதோ அந்த மதிப்பில் தான் தங்கள் கட்டுரைகளை எழுதுவார்கள். அவர்கள் பயணிக்காத பாதைகளைப் பற்றி அவர்கள் எழுத மாட்டார்கள் தாம்.

 அதைப் புரிந்துகொள்கிறேன். 

ஆனால், அது வாசகர்களை ஒரு வட்டத்திற்குள் சுருக்கி விடக்கூடாது என்றும் விரும்புகிறேன். வாசகர்களாகப் பார்த்தேனும் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து அறிவியல் புனைவுகளை வாசிக்குமாறு வாசக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

We can all do better than this!