என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 29 February 2020

ஐடியா திருட்டும் சினிமாவும் - 2

ஐடியா திருட்டும் சினிமாவும் - 2


கட்டுரையின் முதல் பகுதி:
https://ramprasathkavithaigal.blogspot.com/2020/02/blog-post_28.html


விஜய் சேதுபதி, மாதவன் நடித்த 2017ல் வெளியான 'விக்ரம் வேதா'வின் ஒரு காட்சி.

வேதா ஒரு சரக்கை போலீஸ் செக்போஸ்டைத் தாண்டி கொண்டு செல்ல வேண்டும். அதை வேதா ஒரு சவாலாக எடுத்துக்கொள்கிறான். அதற்கென அவன் ஒரு காரியம் செய்கிறான். 'விக்ரம் வேதா' திரைப்படம் நீங்கள் பார்த்திருந்தால், இந்தக் காட்சி உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போது நீங்கள் இந்த ஆகஸ்டு 2010ல் வெளியான சிறுகதையை வாசித்துப் பாருங்கள்...

http://old.thinnai.com/?p=11008013

சிறுகதை வெளியான திகதியை கவனியுங்கள். ஆகஸ்ட் 2010.

இந்தச் சிறுகதை அப்போதிருந்த திண்ணை இணைய இதழில் வெளியானது.

வேதா பாத்திரம், இந்தச் சிறுகதையில் சொன்னது போலவே ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கும்.

ஒற்றுமைகள்: ஒரு போலீஸ் செக்போஸ்ட், ஒரு பழுதடைந்த கார், அதில் சரக்கு... அதை tow செய்வது போல் நடித்து வேதா கதாபாத்திரம் அந்த சரக்கை கடத்தும் விதம்.

"விக்ரம் வேதா"  திரைப்படத்தில் இந்தக் காட்சிகளைப் பார்த்த கணங்கள் தன்னம்பிக்கை தருபவைகளாக இருந்தன, சினிமாவின் தரத்துக்கு என்னாலும் யோசிக்க, காட்சிகளை அமைக்க, ட்விஸ்ட் அமைக்க முடிகிறது என்று தன்னம்பிக்கை அடைந்த கணங்களாக இருந்தன இவைகள். வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதற்குக் காலம் கனியவில்லையோ என்னவோ? கடவுளுக்கே வெளிச்சம். இறைவனின் படைப்பில் எல்லாவற்றுக்கும் ஓர் அர்த்தம் இருக்கிறது என்பார்கள். காரணம் இல்லாமல் யாருக்கும் எதையும் இறைவன் தருவதில்லை என்பார்கள். நடக்கும் போது நடக்கட்டும் என்றிருப்பதையன்றி வேறெதுவும் பன்னிரண்டாயிரம் மைல்கள் அப்பால் இருந்து கொண்டு செய்வதற்கில்லை.

ஒன்று மட்டும் திண்ணம். என் ஆக்கங்களை யார் யாரோ வாசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலிருந்து பெறப்படும் ஐடியாக்கள் எங்கோ யாருக்கோ பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த என் படைப்புக்களை தங்கள் திரைப்படங்களில் பயன்படுத்திக்கொள்ளவென என்னை யாரேனும் அணுகியிருந்தாலும் தாராளமாக என் படைப்புக்களை பயன்படுத்திக்கொள்ளுமாறும் பதிலுக்கு திரைப்படத்தின் ஓர் ஓரத்திலேனும் என் பெயரைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கேட்டிருப்பேன். பணம் எனக்கு ஒரு பொருட்டல்ல.

பொறியியல் துறை எனக்குத் தேவையான சம்பளத்தை வழங்குகிறது.

ஆனால், குருநாதனின் நிலை அப்படி அல்ல. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேனும் அவருடைய நியாயமான உழைப்புக்கு ஊதியம் தந்திருக்கலாம் என்பது என் கருத்து. சினிமாவில் சாதிக்கிறேன் என்று வீட்டை விட்டு ஓடி வந்தவர் என்று எங்கோ படித்தேன். இருமாப்பு அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்திருக்கலாம்.

சாதிக்காமல் வீடு திரும்புவதைக் காட்டிலும் தெருவில் வாழ்ந்துவிடலாம் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ?

"எது பிடிக்கிறதோ அதைச் செய்" என்று சொல்வது தவறோ என்று சில நேரம் யோசிக்க வைத்துவிடுகிறார்கள்.  "முதலில் குடும்பமும், சோறும். பிறகு தான் மற்றதெல்லாம்" என்பதையும் கருத்தில்  கொள்ள வேண்டும் என்று அழுத்தமாய்ச் சொல்ல வைத்துவிடுகிறார்கள். குரு நாதனின் நிலை மாற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.