என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 12 April 2020

கண்காட்சி சிறுகதை - சொல்வனம் ஏப்ரல் 220 இதழ்








‘அந்த ஆண் விந்தணு சுரைக்காய்க்குள் வைக்கப்பட்டு நாற்பது ண்-நாள்கள் ஒரு குதிரையின் கர்பப்பைக்குள்ளோ அல்லது அதற்கு சமமான வேறொன்றிலோ அசைவு தெரியும் வரை வைக்கப்பட வேண்டும். இப்படிச் செய்யின் அது உருவத்தில் ஓரளவிற்கு ஒரு மனித ஆணையொத்த ஆனால் உடல் முழுவதும் ஒளி ஊடுறுவும் வகையினதாக மாறிவிடும். இதற்குப் பிறகு மனித ரத்தம் அதற்குள் புகுத்தப்பட வேண்டும். இப்படி நாற்பது வாரங்கள் அந்த கரு உயிர்ச் சத்தூட்டப்பட வேண்டும். பிறகு அது மீண்டும் ஒரு குதிரையின் கர்ப்பப்பையில் வளர அனுமதிக்கப்பட வேண்டும். இப்படிச் செய்தால் ஒரு பெண்ணின் கருவில் உருவாகும் மனிதக் குழந்தைப் போல் ஒரு மனித இனம் உருவாகும். ஆனால் அது உருவத்தில் மிக மிகச் சிறியதாக இருக்கும்.’
சித்திரக் குள்ள மனிதர்களை உருவாக்க ஒரு ஜெர்மானிய ரசவாத வல்லுனரால் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறை விளக்கத்தின் ஒரு பகுதிதான் இது. ஆனால் நான் இப்படி உருவாகவில்லை.
ஆயினும், நான் எப்படி உருவானேன் என்பது குறித்து எனக்கே இன்றைக்கு வரை ஒரு சரியான தெளிவான வடிவம் இல்லை. நான் அவதானித்தவரை என்னை ஓர் பரிசோதனைக்கூடத்தின் உயிரியல் வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் உணவளித்து வளர்த்தார்கள். சமயத்தில் அவர்களின் அன்பு குறித்து நான் வியந்திருக்கிறேன். இத்தனை அன்பு கொள்ள நான் என்ன புண்ணியம் செய்திருக்கவேண்டும்? அன்பில்லாவிட்டால் என்மீது அவர்களுக்கேன் அத்தனை அக்கறை?
என்மீது அவர்களுக்கு எத்துனை அன்பென்றால் என் உடல் நலத்தை பல்வேறு கருவிகள் கொண்டு மிக மிகக் கவனமாக அவதானித்தார்கள். நான் என்ன சாப்பிடுகிறேன், அதை எத்தனை அவுன்ஸ் சாப்பிடுகிறேன், எப்போது சாப்பிடுகிறேன் என்பதையெல்லாம் வாரக் கணக்கில் மாதக் கணக்கில் தங்கள் கணினிகளில் குறித்துக் கொண்டார்கள். அதை வைத்து ஒவ்வொரு நாளும் எனக்கான பிரத்தியேக உணவு தயாரித்தார்கள். எனக்கு கொடுக்கப்பட்ட தண்ணீர் சுத்தமாக இருக்க ஒரு தனிக் குழுவையே வைத்திருந்தார்கள். அவ்வப்போது என்னை ஓர் அறைக்குக் கொண்டு சென்று ஆளுயர கண்ணாடி முன் நிறுத்தி புகைப்படங்கள் எடுப்பார்கள்.
அவ்வாறு முதல் முறையாகப் புகைப்படம் எடுத்தபோது என்னை நானே கண்ணாடியில் பார்த்து சற்று அதிர்ந்துதான் போனேன். அப்போது எனக்கு பதினைந்து வயது. ஆனால், நானோ பதினைந்தே சென்டி மீட்டர் உயரம்தான் இருந்தேன். அவர்களின் அத்தனை கவனிப்புக்கு அப்பாலும் நான் 15 சென்டி மீட்டர்தான் இருந்தேன் என்பதே என்னிடம்தான் ஏதோ பிரச்சனை என்று நான் ஊகிக்கப் போதுமானதாக இருந்தது. அந்த பிரச்சனையைத்தான் அவர்கள் அத்துனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து சரி செய்ய முனைந்தார்கள் என்று தெரிந்தபோது அவர்கள் எப்படி என்னைப் பூப்போல பார்த்துக் கொண்டார்கள் என்றெண்ணி நான் கரைந்தே போனேன்.
துவக்கத்தில் எனக்குப் பதினைந்து வயது என்பதால் நான் பதினைந்து சென்டிமீட்டர் உயரம் இருந்தேனோ என்று எண்ணினேன். ஆனால், அந்த மருத்துவக்கூடத்தில் ஒருவருக்குப் பிறந்த நாள் கொண்டாடியபோது, அவர் முப்பத்து நான்கு வயதில் நூற்றியெண்பது அடி இருப்பதை அவதானித்து என் எண்ணம் தவறு என்றுணர்ந்தேன். அப்போது எனக்குக் குழப்பமாக இருந்தது. என்னால் யாரையும் கேட்க முடியவில்லை. ஏனெனில் நான் அளவில் மிக மக்ச் சிறியதாய் மட்டுமல்லாமல், ஊமையாகவும் இருந்தேன். என்ன காரணத்தினாலோ என்னால் ஏதும் பேச முடிந்திருக்கவில்லை. நானாக ஏதேனும் வாயசைத்தாலும் என் சத்தம் எனக்கே கேட்கவில்லை. ஆனால், என்னால் மற்றவர்களின் சத்தங்களை கேட்க முடிந்தது.
அப்படியும் இப்படியுமாக தர்க்க ரீதியாக நானாகவே யோசித்து அவர்கள் எனக்களித்த உணவில்தான் ஏதோ பிரச்சனை என்று நான் ஓரளவு ஊகித்துக்கொண்டேன். ஆனால், நான் என்ன உணவைத்தான் உண்ண வேண்டும் என்பது குறித்து எனக்கு எந்த அவதானிப்பும் இருக்கவில்லை. ஆதலால், அத்தனை அன்புடன் அவர்கள் அந்த உணவை எனக்கு தருகிறார்கள் எனில், அந்தளவிற்கு என் உடலில் ஏதோ பிரச்சனை என்றுதான் என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது.
தோற்றத்தில் ஒரு மானுட ஆண் போல் நான் இருந்தாலும் உடல் அளவில் என்னிடம் சில மாறுதல்கள் இருந்தன. என் தலையில் முடி கொட்டிவிட்டிருந்தது. தசைகளில் இறுக்கம் இல்லை. ஆதலால் சற்றே பலவீனமாகத்தான் இருந்தன. சருமமானது நீர்ச்சத்து குன்றிப்போய் வெளிரித்தான் இருந்தது. கைகளும், கால்களும் அவ்வப்போது குளிர்ந்துவிடும். நாளின் பெரும்பாலான நேரம் உறக்கத்திலேயேதான் இருப்பேன். அது உறக்கமா, மயக்கமா என்று பிரித்தரிய எனக்குப் போதுமான அறிவிருக்கவில்லை. நானாக அதை உறக்கம் என்றுதான் ஊகித்திருந்தேன். வெகு சுலபமாக ஏதாவதொரு நோய் பீடித்தது. ஆதலால் எப்போதும் ஏதாவதொரு மருந்து உட்கொண்டவாறுதான் இருந்தேன்.
துவக்கத்தில் என் உடலில் ஒரு சில பாகங்களில் ஒரு சில மணி நேரங்களுக்கு சுரணையற்று போயின. பிற்பாடு அந்த சில மணி நேரங்கள் நாள்கணக்கில் நீடிக்கவும் நான் அதிர்ச்சியடைந்தேன். அப்படி நடக்கையிலெல்லாம் பரிசோதனைக்கூடத்திலிருந்து யாரேனும் ஒருவர் ஏதாவது மருந்து தருவார். அந்த சுரணை இழந்த பகுதியில் உணர்ச்சி மீளும். ஆனால் பிறிதொரு இடத்தில் சுரணை போய்விடும். அதற்கும் அவர் ஒரு மருந்து தருவார். அதை உட்கொண்டவுடன் அந்தப் பகுதி சரியாகும். ஆனால் பிறிதொரு இடத்தில் சுரணை போய்விடும். இது ஒரு சுழற்சி முறையில் நிகழத்துவங்கியது. தலைவலி, வயிற்றுவலி, முதுகு வலி போன்றவைக்கெல்லாம் பரிசோதனைக்கூடத்தில் இருந்தவர்கள் வெவ்வேறு மருந்துகளை உட்கொள்வதை பார்த்திருந்தமையால் எனக்கு இது ஒரு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. ஆனாலும் அவர்கள் என் போல் அடிக்கடி மருந்து உட்கொள்ளவில்லைதான் என்பது மட்டும் லேசாக உறுத்தத்தான் செய்தது.
உடல் அளவில் நான் மிகச் சிறியதாகத்தான் இருந்தேன். இது அந்த பரிசோதனைக்கூடத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஊகிக்க உதவியது. அவர்கள் ஒரு மனிதக் குள்ளனை உருவாக்க முனைந்தார்கள். நான் அவர்களுடைய பெருமைக்குரிய படைப்பு. நான் கொஞ்சம் கொஞ்சமாக என் உடல் கட்டுப்பாட்டை இழந்துகொண்டிருந்த வேளையில் என்னை உருவாக்கிய பெருமை அவர்களுள் யாரைச் சேரும் என்று அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் நான் உணரவே செய்தாலும் உள்ளுக்குள் எதுவோ இதையெல்லாம் நம்ப மறுத்தது. அவர்கள் என் மீது எல்லையில்லா அன்பைக் கொண்டிருக்கிறார்கள் என்றே நான் எனக்குள் ஒரு நூறு முறை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேன். அந்த ஒரு நினைப்பால் மட்டுமே என்னால் அந்த பரிசோதனைக்கூடத்தில் நடப்பவைகளைக் கடந்து போக முடிந்தது.
ஒரு நாள் நான் கண்காணிப்பு அறையில் வழமையான பரிசோதனைகளுக்கு மத்தியில் இருந்தபோது என் வலது கையிலிருந்து ஒரு விரல் தானாகத் துண்டாகி கீழே விழுந்தது. அதில் ஆச்சர்யத்தக்க விஷயம் என்னவெனில், எனக்கு வலியே இருக்கவில்லை. அது ஏதோ விரல் நகமொன்றுத் துண்டாகி விழுந்ததைப்போன்றே இருந்தது. ஒரு விரல் எப்படி தானாகவே துண்டாகிக் கீழே விழும் என்று நான் ஆச்சர்யப்பட்டேன்.
அதைத் தொடர்ந்து ஒட்டுமொத்தப் பரிசோதனைக்கூடமும் பரபரப்பானது. ஒரு எலும்பு நிபுணர் வந்து ஏதேதோ சோதனைகள் செய்துவிட்டு எலும்புகள் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் அதனால் எலும்புகளை இணைப்பது சாத்தியமல்ல என்றும் சொன்னார். ஒரு நரம்பியல் நிபுணர் வந்து இதற்கு மேல் மயக்க மருந்து கொடுக்கப்படின் என் மூளைச் செயல் இழந்துப் போகும் என்று என்னையும் சேர்த்துப் பயமுறுத்தினார்.
எனக்கு அந்தப் பரிசோதனைக்கூடத்தில் என்ன விதமான பரிசோதனைகள் செய்தார்கள் என்பது குறித்து எந்த தெளிவான புரிதலும் இருக்கவில்லை. ஆனால், நான் அவர்களது பரிசோதனையில் ஒரு தடங்கலாகிவிட்டேன் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதையெல்லாம் தாண்டி அவர்கள் எனக்குத் தொடர்ந்து உணவளித்தார்கள். ஆனால் இப்போது அந்த உணவில் எவ்விதக் கணக்குகளும் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் தாங்கள் உண்பதையே எனக்கும் தரத் துவங்கினார்கள். அப்படி அதற்கு முன் நிகழ்ந்ததே இல்லை.
அவர்களின் நடத்தையில் இருந்த மாறுதல்களை வைத்து நான் சில விஷயங்களை புரிந்து கொண்டேன். அவர்களின் அறிவியல் என் விரல்களை குணப்படுத்தும் அளவிற்கு முதிரவில்லை என்பது முதலாவதான புரிதலாக இருந்தது. தாங்கள் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியைக் கைவிடுவதா அல்லது என்னைக் கைவிடுவதா என்ற கேள்வி வந்தபோது அவர்கள் என்னைக் கைவிட முடிவெடுத்தார்கள். அதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
என்னை ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து காலித் என்பவனிடம் விற்றுவிட்டார்கள். அவர்கள் என் மீது வைத்திருந்த அன்புக்கு என்னை இறுதிவரை கைவிட மாட்டார்கள் என்று நம்பியிருந்தேன். அப்படியே கைவிட நேர்ந்தாலும் கடைசியாக ஒரு முறையேனும் எனக்கு ஒரு பிரிவுபசார விழா எடுப்பார்கள் என்று நான் நம்பி இருந்தேன். அப்படி ஏதும் நடவாதபோது நான் அதிர்ச்சியுற்றேன். ஒரு வேளை காலித்தின் ஆட்கள் அதற்கு வாய்ப்பையே வழங்கவில்லையோ என்று தோன்றியது. நான் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீவிரமாக நம்பத் துவங்கினேன். என் இழப்பு அவர்களுக்கு ஒரு பொருட்டே அன்று என்பதை நான் நம்பவே இல்லை. நான் ஏன் நம்பவேண்டும்? அவர்கள் என்னை பரிபூரணமாகத்தான் விரும்பினார்கள். அந்த அன்பில் கிஞ்சித்தும் களங்கமில்லை என்பது என் நம்பிக்கையாகவே தொடர்ந்தது.
காலித் பற்றிச் சொல்ல வேண்டுமானால், காலித் ஒரு கடை வைத்திருந்தான். பள்ளிக்கூடங்களில் பள்ளி செல்லும் பிள்ளைகள் செய்து எடுத்துவர நிறைய ப்ராஜெக்டுகள் தருவார்கள். அவற்றைக் காலித் தன் கடையில் ஏற்கெனவே செய்து வைத்திருப்பான். அவனிடம் காசு தந்துவிட்டால் போதும். காலித் எல்லாவற்றையும் வாங்குவதில்லை. அவனுடைய வியாபாரத்திற்கு உகந்தவைகளை மட்டுமே வாங்கும் வழக்கம் அவனுக்கு இருந்தது. கல்லூரி செல்லும் பிள்ளைகள் செய்ய வேண்டிய ப்ராஜெக்டுகளைக்கூட அவன் செய்து விற்பான். அவனுக்கென ஒரு கிடங்கும் இருந்தது. அங்கே அவனுக்கென சில தொழில் நுட்ப வல்லுனர்கள் பணியில் இருந்தார்கள். காலித் வாங்குபவைகளைச் சோதிப்பதும், அவைகளை அட்டவணைப்படுத்துவதும், ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவற்றை சரி செய்வதும் அவர்களது பணியாக இருந்தது.
காலித்தின் இணைய தளத்தில் அவனிடமிருந்த எல்லா ப்ராஜக்டுகளும் பட்டியலிடப்பட்டிருந்தன. எவருக்கு எது வேண்டுமோ அதை அவர்கள் வாங்கிக்கொள்ளலாம். அப்படி காலித்தின் இணைய தளத்தில் சற்றேறக்குறைய அறுநூறு ப்ராஜக்டுகள் பட்டிலிடப்பட்டிருந்தன.
காலித்தின் கிடங்கில் இரண்டு தொழில் நுட்ப வல்லுனர்கள் என்னைப் பிரித்து மேய்ந்தார்கள். என் துண்டான வலது கை விரலை அவர்கள் கவனிக்கத் தவறவில்லை. அத்துணை பாரிய பரிசோதனைக்கூடத்தில் இருந்த ஆராய்ச்சியாளர்களாலும், உயிரியல் வல்லுனர்களாலுமே சரி செய்ய முடியாத என் வலது கை விரலை இவர்கள் எவ்விதம் சரி செய்ய இருக்கிறார்கள், எனது குறையை எவ்விதம் களைய இருக்கிறார்கள் என்று எனக்கு யோசனையாக இருந்தது. அது ஒரு விதமான ஆவலையும் தூண்டியது. அவர்களில் ஒருவன் சட்டென என இடது கையிலிருந்த அதே விரலை ஒடித்து பிய்த்து எறிந்தான். இப்போது என் இரண்டு கைகளும் ஒரே விதமாக நான்கு நான்கு விரல்களுடன் சமமாக இருந்தன. அவர்கள் என் குறையைச் சரிசெய்த விதத்தில் நான் பேயறைந்தாற்போல் அதிர்ந்து ஒடுங்கினேன்.
அதற்குப்பிறகு அவர்களுள் ஒருவன் என்னிடம் ஒரு விதையை நீட்டினான். அதை விழுங்கவும் பணித்தான். நானும் கர்ம சிரத்தையாக அதை விழுங்கினேன். அதன் காரணமாக என் நினைவை இழந்தேன். நான் கண் விழித்தபோது என்னை ஒரு அட்டைப் பெட்டியில் இழுத்துக் கட்டி வரவேற்பறை கண்ணாடி அலமாரியில் வைத்திருந்தார்கள். முதலில் என்னை அவர்கள் ஒரு மரத்தோடு பிணைத்து கட்டியிருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். சற்று கூர்ந்து கவனித்தபோதுதான் நான் நினைத்தது தவறு என்று எனக்கு புரிந்தது. என் உடலில் ஒரு பகுதி மரமாகவும், கிளைகளாகவும், இலைகளாகவும் விரிந்திருந்தது. அப்போது நான் பாதி மனிதனாகவும், மீதி மரமாகவும் இருந்தேன். பாதி உடல் மரமாக உணர்ந்தேன். அவர்கள் எனக்கு என்ன பெயர் வைத்திருப்பார்கள் என்று யோசனையாக இருந்தது.
வயிறுக்கு பதிலாக சக்தியை உற்பத்தி செய்து உடலுக்கு அளிக்கும் இயந்திரம், மனித மூளைக்கான உபரியான ஒரு மெமரி சிப் போன்றவைகளுடன் நானும் அந்த கடையில் வீற்றிருக்கப் பெருமையாக இருந்தது. சில உபகரணங்கள் அந்தக் கடையில் மிக நீண்ட காலமாக விற்கப்படாமல் இருப்பதாகத் தெரிந்தது. நானும் அப்படி அந்தக் கடையிலேயே விலை போகாமல் இருந்துவிடுவேனோ என்று பயம் வந்தது.
அதிர்ஷ்டவசமாக அந்தக் கடையில் அதிக நேரம் நான் காத்திருக்க வேண்டி இருக்கவில்லை. ஒருவர் தன் மகனுடன் கடைக்கு வந்தான்.
“ஹாய், நான் சங்கரன். இது என் மகன், திலீப்.” என்றார் சங்கரன்.
“ஆங்.. தெரிகிறது.. நீங்கள் ஒரு கலை நுணுக்கம் வாய்ந்த போன்சாய் வேண்டுமெனக் கேட்டிருந்தீர்கள். இல்லையா?” என்றான் காலித்.
“ஆம்”
“அது உயிரோடு இருக்க வேண்டும். சரிதானே?”
“ஆம். சரிதான்.”
“என்னிடம் ஒரு பொருள் இருக்கிறது.”
காலித் என்னை அலமாறியிலிருந்து எடுத்து மேஜை மீது வைத்தான்.
“வாவ்! போன்சாய் மனிதன்! நான் எதிர்பார்த்த கலைப் படைப்பு” சங்கரன் ஆச்சர்யத்துடன் சொன்னார்.
அப்போது என் விரலை உடைத்த வல்லுனன் வந்தான். ஒரு இயந்திரத்தை கையில் வைத்திருந்தான். அதன் ஒரு முனை கூராக இருந்தது. அதன் மறு முனையில் ஒரு சிறிய திரை இருந்தது. அந்தத் திரையை அவன் சங்கரனை நோக்கி திருப்பினான். பின் அந்தக் கூர் முனையை என்னுள் செருகினான்.
“நீங்கள் பார்த்தீர்களானால், அந்த போன்சாய் மனிதனிடம் விலங்கின மற்றும் தாவர இயல்புகள் இரண்டையுமே காணலாம்” என்றான் காலித்.
சங்கரன் அங்கீகரிப்பாய்த் தலையசைத்தார். அதன் பின் அந்த வல்லுனன் என்னுள் செருகியிருந்த இயந்திரத்தை வெளியே இழுத்துக்கொண்டான்.
திலீப் என்னை ஆர்வமுடன் பார்த்தான். அந்தப் பார்வையில் லேசாகப் பயமும் இருந்தது. அவன் பார்வையிலிருந்து நான் அவனை வெகுவாக ஈர்த்தேன் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. என்னைப் பார்த்தால் யாருக்குத்தான் ஈர்ப்பு வராது? நான் ஒரு புத்தம் புதிய கருத்தாக்கம். போன்சாய் மரங்களை இந்தப் பூமி பார்த்திருக்கலாம். மனிதனையும் பார்த்திருக்கலாம். நான் ஒரு போன்சாய் மனிதன். இப்போது காலித் ஏன் என்னை பரிசோதனைக் கூடத்திலிருந்து வாங்கினான் என்று புரிந்தது.
“எவ்வளவு?” என்றார் சங்கரன்.
திலீப் இன்னமும் தன் பார்வையை என்னிடமிருந்து விலக்கியிருக்கவில்லை.
“ஆயிரம்” என்றான் காலித்.
“ரொம்பவும் அதிகம்”
“இங்கே இது போன்ற கலைப் படைப்பு கிடைப்பது அரிது”
காலித்தின் அந்த ஒற்றை வாக்கியம் சங்கரனை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்.
“கடன் அட்டை செல்லுமா?”
“செல்லும்”
அவ்வளவுதான். நான் விற்கப்பட்டுவிட்டேன்.
சங்கரன் காலித் நீட்டிய காகிதத்தில் கையொப்பமிட்டார். நான் கை மாறினேன்.
சங்கரனும், திலீப்பும் என்னை ஒரு மகிழுந்தில் ஏற்றினார்கள். மகிழுந்து சாலையில் விரையத் துவங்கியது. மகிழுந்தில் பயணிக்கையில் திலிப் என்னை விலாவாரியாக மேலிருந்து கீழாக அவதானித்தான். எனக்கு முதலில் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. பிற்பாடு அதுவும் பழகிவிட்டது. அதுவுமில்லாமல் அவன் வெறும் ஒரு பாலகன்.
யாருடையதாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு பாலகனது அன்பையாவது பெற முடியும் என்றே நான் நம்பினேன். நேரம் செல்லச்செல்ல என் உடலில் ஒவ்வொரு பகுதியாக செயல் இழப்பதைப் போன்ற ஒரு பிரஞ்ஞை எனக்கு. என் வலது கை முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்திருந்தது. தோலின் நிறம் கருமை படிந்திருந்தது. ஆனால் அதையும் சங்கரனும், திலீப்பும் இரண்டும் கெட்டானாக இருப்பதன் பக்க விளைவெனக் கொள்வார்கள் என்றே எண்ணினேன்.
திலீப்பின் கவனத்தை ஈர்க்க, என் இடது கையைப் பலமாக அசைத்தேன். எனது நோக்கம் என்னவென்றால் அவன் கவனத்தை ஈர்த்து என்னை விட்டுவிடும்படி கெஞ்சுவது. பெரிய ஆட்களைவிட சின்னஞ்சிறு பிள்ளைகளிடம் கருணை சற்று எளிதாக கிடைக்கும் என்ற எண்ணம்தான். ஆனால், அவன் ஏதோ நான் அவனைக் குதூகலிக்கச் செய்வதாய் நினைத்து பதிலுக்கு கையசைத்தான். அதற்கு மேலும் ஒரு கையை மட்டும் அசைத்தால் எங்கே அவன் அந்த வல்லுனன் போல் இடது கையை ஒடித்துவிடுவானோ என்று பயம் வந்தது. ஆதலால் திலீப்பை நோக்கி கையசைப்பதை நிறுத்தினேன். இதற்கு அர்த்தம் நான் திலீப் போன்ற பாலகனை சந்தேகப்படுவது அல்ல. ஆனால், என் கடந்த காலத்தில் எனக்கு நிகழ்ந்ததை வைத்து என்னால் இந்த அர்த்தமன்றி வேறெந்த அர்த்தத்திற்கும் வந்திருக்க இயலாது.
திலீப் என்னை ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மூடினான். நான் பாதி தாவரமாக ஆகிவிட்டதால் குளிர்சாதனப் பெட்டிதான் என்னை வைக்கச் சரியான இடம் என்று நினைத்திருப்பானோ என்று தோன்றியது. அந்த குறுகலான குளிர் சாதனப் பெட்டியில் எனக்கு மூச்சடைத்தது. மறுநாள் அவனுடைய பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடப்பதாக இருந்தது. அந்த கண்காட்சிக்காகத்தான் என்னை அவன் வாங்கியிருப்பதாகப்பட்டது.
நான் எனக்குள்ளாக குளிராக இருப்பதாக உணர்ந்தேன். அந்தக் குளிர் என் உணர்ச்சியற்ற தன்மையை வெகுவாக அதிகரித்தது. என்னால் எதையுமே உணர முடியவில்லை. சற்றுக்கெல்லாம் மூச்சு விடவே பிரயாசைப்பட்டேன். என் போன்ற ஒரு மோசமான பிறப்பை வேறு எவருக்கும் கொடுத்துவிடாதே ஆண்டவா என்று வேண்டிக்கொண்டேன். இப்படி கஷ்டப்படுவதில் நானே கடைசி ஜீவனாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன். அடுத்த நாள் வரை உயிருடன் இருப்பேன் என்று நினைக்கவே இல்லை. எனக்கு எப்போது நினைவு தப்பியது என்றே நினைவிருக்கவில்லை.
திலீப் மறுநாள் கதவைத்திறந்தபோது நான் இறந்திருக்கவில்லை. உயிருடன்தான் இருந்தேன். அதை என்னால் ஓர் அதிசயமெனவே கருத முடிந்தது. நான் எப்படி இறக்காமல் உயிருடன் இருந்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எனக்கு எவ்வித அசெளகர்யமும் இருக்கவில்லை. முந்தின இரவு எப்படியெல்லாம் புலம்பினோம் என்று நினைவுக்கு வந்தது. மனித மனங்கள் நெருக்கடியான தருணங்களில் எப்படியெல்லாம் வினோதமாக சிந்திக்கின்றன என்று யோசித்தால் எனக்கே நகைப்பாக இருந்தது.
திலீப் என்னைக் கையில் எடுத்துக்கொண்டான். சங்கரன் மகிழுந்தில் திலீப்பை ஏற்றிக்கொண்டார். மகிழுந்து சாலையில் விரைந்தது. மகிழுந்தின் கண்ணாடி ஜன்னலினூடே நாம் வெளி உலகை ஏறிட்டேன். கடந்து போன மரங்களும், தொடர்ந்து வந்த மேகங்களும் முன்னெப்போதையும்விட அழகாகத் தெரிந்தன.
அந்தக் காட்சிகள் விதி குறித்து ஆழமாக சிந்திக்க வைத்தன. ஒரு சில மணி நேரங்களில் விதி குறித்தான எனது பார்வைகள் இரண்டு முறைக்கு மேலாக மாறிவிட்டதை உணர்ந்தேன். ஒரு தத்துவவாதி இதை நான் எவ்விதம் அணுகி இருக்க வேண்டும் என்று விரும்பியிருப்பான்? அவன் விரும்பியதற்கு மாற்றாக எவ்விதம் நான் அணுகி இருந்தால் எனக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்? இக்கேள்விகளுக்கெல்லாம் விடை தேடி என் மனம் அலைபாய்ந்தது.
அன்று அறிவியல் கண்காட்சியில் நான்தான் எல்லோரையும் அதிகம் ஈர்த்தேன். திலீப் போல் எண்ணற்ற பிள்ளைகள் என்னென்னவோ செய்து கொண்டு வந்திருந்தார்கள். ஆனால், எதுவுமே என்னைப்போல் பலரின் கவனத்தையும் ஈர்க்கவில்லை. திலீப் என்னை ஒரு மேஜையில் வைத்து ‘போன்சாய் மனிதன்’ என்று பெயரிட்டான். போன்சாய் பலருக்கும் பரிச்சயமாகியிருந்தது. போன்சாய் மனிதன் என்பதே எல்லோருக்கும் புதிதாக இருந்தது. முதலில் ஒரு சிறு குழுதான் என்னைச் சுற்றி இருந்தது. அது பெரும்பாலும் திலீப்பின் நெருங்கின நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள். நேரம் செல்லச்செல்ல அன்றைய அறிவியல் கண்காட்சிக்கு வந்திருந்த அத்தனை பேரும் என்னைச் சுற்றிக் கொண்டார்கள்.
திலீப்பின் நண்பர்கள் என்னுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். என்னருகில் நிற்க அங்கே ஒரு போட்டி உருவானது. நீ , நான் என்று அடித்துக் கொண்டார்கள். சற்றைக்கெல்லாம் நான் ஒரு பிரபல்யமானவனாக என்னை உணர்ந்தேன். ஈர்ப்பை வேண்டுபவனாக நான் எப்போதுமே இருந்ததில்லை. ஆயினும் திலீப்பின் பள்ளியில் எனக்கு கிடைத்த வரவேற்பு மிக மிக அதிகப்படியாக இருந்தது. நான் மிகவும் வேண்டப்பட்டவனாக, விரும்பப்பட்டவனாக என்னை உணர்ந்தேன். பரிசோதனைக் கூடத்தில் எனக்கு கிடைத்த கூண்டுக் கிளி வாழ்வை விடவும், திலீப்பின் நண்பனாக எனக்குக் கிடைத்த வாழ்க்கையை சுவர்க்கமாக உணர்ந்தேன். திலீப்பின் கைகளில் வந்து சேர்ந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்களின் அன்பில் நான் திக்குமுக்காடிப் போனேன்.
அப்போது சட்டென அறிவியல் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள், பள்ளிக் குழந்தைகள் மத்தியில் சலசலப்பு கேட்டது. தொடர்ந்து சில ஆசிரியர்களும், இளம் தொழில் நுட்ப வல்லுனர்களும் கூட்டத்தை பிரித்துக்கொண்டு என்னை அண்டினார்கள். அது என்னைக் கொஞ்சமாய் கோபமூட்டியது. அந்த இடைஞ்சலை நான் விரும்பவே இல்லை. ஆயினும் என்னால் ஏதும் செய்ய முடிந்திருக்கவில்லை.
“இன்று ஆகப் பெரும் ஈர்ப்பைப் பெற்ற ப்ராஜக்டிலிருந்து சோதனையை துவக்கலாம்” என்றார் ஒரு வயதானவர். பார்க்க தலைமை ஆசிரியர் போலிருந்தார். எல்லோரும் என்னையே பார்த்தார்கள்.
அந்த தொழில் நுட்ப வல்லுனன் என்னை அண்டி என்னுள் ஒரு இயந்திரத்தின் கூர் முனையை செலுத்தினான். அந்த இயந்திரம், காலித்தின் கடையில் என்னுள் செலுத்தப்பட்ட எந்திரத்தை ஒத்திருந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு,
“இதில் விலங்கின இயக்கமேதும் தெரியவில்லை” என்றான் அந்த வல்லுனன் திரையைக் காட்டியபடி.
எனக்குத்தான் அந்த பதில் அதிர்ச்சியூட்டுவதாயும், ஆச்சரியமூட்டுவதாயும் இருந்தது. சங்கரனும், திலீப்பும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர்களாக என்னை உருவாக்கி இருந்தால்தானே ஏதேனும் பேசுவதற்கு.
“இது வெறும் போன்சாய் மட்டும்தான்” என்றும் அறிவித்தான் அந்த வல்லுனர்.
எல்லோரும் திலீப்பைப் பார்த்தார்கள். திலீப் இப்போது ஏதேனும் சொல்லியாக வேண்டும்.
“உனக்கு ப்ராஜக்ட் செய்வதில் ஏதேனும் இடையூறுகள் இருந்தால் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். நான் உனது ஆசிரியர். இதை நான் ஒரு விதி மீறலாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும், திலீப்” என்றார் அந்தத் தலைமை ஆசிரியர்.
“விதிகளை மீற வேண்டும் என்று என்னிடம் எந்த நோக்கமும் இல்லை. இது நேற்று உயிருடன்தான் இருந்தது.” என்றான் திலீப்.
“அது சரியாகவும் இருக்கலாம். ஓர் உடலில் இரண்டு விதமான உயிரணு மூலக்கூறுகள் இருப்பின் அந்த உடலில் எந்த உயிரணு ஆதிக்கம் செலுத்துவதென்று இரு உயிரணுக்களுக்கும் போராட்டம் இருக்கும். அப்படியான போராட்டத்தில் எந்த உயிரணு பலவீனமாக இருக்கிறதோ அந்த உயிரணு அழிந்து போகவும் செய்யலாம்.” என்றான் அந்த வல்லுனன் தனக்கு தெரிந்ததைப் பகிரும் தோரணையில்.
“எதுவாக இருப்பினும், திலீப், நீ வாக்களித்தது ஒரு மனித போன்சாய்க்குத்தான். அது ஒரு புதிய கருத்தாக்கம் என்பதால்தான் நீ கடைசி நிமிடத்தில் உன் ப்ராஜக்டின் பெயரை மாற்றிக் கொள்ளவும் சம்மதித்தேன். இதில் மனித உயிரணுக்கள் இல்லை. இது ஒரு தெளிவான விதிமீறல். நம் பள்ளிக்கென ஒரு மரியாதை, மதிப்பு இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த பள்ளிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் நம் பள்ளிக்கென ஒரு நல்ல இடம் இருக்கிறது. அது கீழிறங்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது. உன்னை அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளியின் செயல்பாடுகளிலிருந்து தள்ளி வைக்கிறேன்,” தலைமை ஆசிரியர் தீர்மானமான குரலில் சொன்னார்.
அதைக் கேட்டவுடன் என் உலகம் சுக்கு நூறாக உடைந்து தரை மட்டமானது. என்னைப் பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பதெல்லாம் என் கவனத்தில் பதியவே இல்லை. எனக்குள் என்ன நடக்கிறது என்று எனக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. நான் மனிதனாகப் பிறந்தவன். ஆனால் இப்போதோ முழுமையான தாவரமாகிவிட்டேன். அந்த ஆராய்ச்சிக்கூடத்தில் எனக்கு அளிக்கப்பட்ட உணவில் விஷம் இருந்திருக்க வேண்டும். அந்த விஷம் என் மனித உயிரணுக்களை மெல்ல மெல்ல அழித்துவிட்டது.
ஏமாற்றமடைந்த திலீப் கோபத்துடன் என்னை ஒரு கையால் அலட்சியமாக எடுத்துக்கொண்டு பள்ளிக்கூட வாயிலை நோக்கி நடக்க, கூடியிருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் அவனையும் அவன் கையிலிருந்த என்னையும் பார்த்து கள்ளப் புன்னகைகள் உதிர்த்தார்கள். வாயிற்கதவை அண்டியவுடன் திலீப் என்னை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தான். பின் சாலையில் இறங்கி நடந்தான். அவன் ஒரு முறையாவது என்னைத் திரும்பிப் பார்ப்பான் என்று நான் தீவிரமாக நம்பினேன். ஆனால், அவன் என்னை ஒரு முறைகூட திரும்பியும் பார்க்காதது ஏமாற்றமாக இருந்தது. நம்மால் பயனில்லை என்று தெரிந்துவிட்ட பிறகு மனித மனங்கள் எப்படியெல்லாம் நம்மை அலட்சியப்படுத்துகின்றன என்று அவதானிக்க விசித்திரமாகவும், கேவலமாகவும் இருந்தது.
நான் ஏன் பிறந்தேன்? இந்த பூவுலகில் பிறக்க நேர்ந்த எல்லா உயிர்களுக்கும் இந்தப் பூவுலகில் வாழ எல்லா உரிமையும் உள்ளதுதானே? நான் ஏன் அப்படி ஒரு வீர்யமானதொரு ஆராய்ச்சியில் சோதனை எலி ஆக்கப்பட்டேன்? என்னிடம் யார் அனுமதி கேட்டது? நான் தரவில்லையே? எனக்கு ஏன் அப்படி ஒரு அன்பு அத்தனை சிறிய கால அவகாசத்திற்குக் கிடைக்க வேண்டும்? அது ஏன் பிற்பாடு அத்தனை மூர்க்கமாக என்னிடமிருந்து பிடுங்கப்படவேண்டும்? இந்த ஒட்டுமொத்த நாடகத்தில் எந்தப் பக்கம் நியாயம்? எது அநியாயம்?
நான் பிறந்தபோது ஆக்ஸிஜனை சுவாசித்தேன். இப்போதோ நான் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசிக்கிறேன். நான் என் எஞ்சிய வாழ்வை வெறும் ஒரு தாவரமாகவே கழிக்கக்கூட நேரலாம். என் வாழ்வின் எத்தனை சதவிகித நோக்கத்தை நான் விலங்காக இருந்து நிறைவேற்றினேன்? எத்தனை சதவிகித நோக்கத்தை நான் இனி தாவரமாக இருந்தபடி நிறைவேற்றுவேன்? நான் விலங்கிலிருந்து தாவரமானது இந்த பிரபஞ்சமென்னும் பாரிய ஒழுங்கின் எந்தப் புள்ளியை முழுமையடையச் செய்ய இருக்கிறது?
கேள்விகள் என்னைத் துளைத்தெடுத்தன. எதற்குமே என்னிடம் பதில் இல்லை. இந்தக் கேள்விகள் நான் இனி உயிருடன் இருக்கும் காலம் வரை என்னை எப்படியெல்லாம் அச்சமூட்டப் போகின்றனவோ என்று இப்போதே எனக்கு பயம் ஒரு நோய் போலப் பீடித்தது. ஆயினும், தற்போது முழுமையாக விடுதலை ஆனதில் கொஞ்சம் மகிழ்வாக உணர்ந்தேன். நான் என்ன பெரிதாக விரும்பினேன்? எல்லோருக்கும் கிடைத்திருப்பது போலான ஒரு சாதாரண வாழ்வைத்தானே? எல்லோரையும் போல நானும் என்னை விரும்பும் சில பேரின் மத்தியில் வாழ்ந்துவிட்டுப் போகத்தானே விரும்பினேன்?
இப்போது நான் மனிதனாகவே இல்லை. இன்னும் உடலாலும், மனதாலும் முழுமையாகத் தாவரமாகவும் மாறிவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், விலங்குமல்லாத தாவரமுமல்லாத ஓர் இடைப்பட்ட நிலைப்பாட்டில் சிக்கிக்கொண்டு விட்டேன். விலங்கின் நிலைப்பாட்டிலிருந்து கடனாகப் பெறப்பட்ட ஒரு பிரஞ்ஞையுடன் தாவரமாகவே இருக்கிறேன். எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. சிறிதேனும் அன்பு கிடைத்தாலும் போதும். என் ஜென்மமே சாபல்யம் பெற்றுவிடும். நான் ஒரு முழுமையான, எல்லா சுகங்களும், ஆஸ்திகளும் கிடைக்கப்பெற்ற ஒரு வாழ்க்கைக்காக ஏங்கவில்லை. இந்த உலகின் முழுமையின்மைகளைக், குறைகளைக் கடந்து போக, அந்த குறைகளுடனே வாழ்ந்து மறித்துப் போக கொஞ்சமே, கொஞ்சம் அன்பு மட்டும்தானே கேட்கிறேன்?

Friday, 10 April 2020

பிரிவின் சாசனம் - கவிதைத் தொகுதி - செல்வராஜ் ஜெகதீசன்

பிரிவின் சாசனம் - கவிதைத் தொகுப்பு நூல்
ஆசிரியர்: செல்வராஜ் ஜெகதீசன்

வருடம் 2009 ஆ, 2010 ஆ தெரியவில்லை. உயிர்மை பதிப்பக நிறுவனர் கவிஞர் மனுஷ்யப்புத்திரன் அவர்கள் உயிரோசை என்றொரு இணைய இதழை துவங்கினார். அப்போதுதான் எழுதத்துவங்கியிருந்த எனக்கு அது ஒரு அற்புதமான தளமாக இருந்தது. அந்தத் தளம் ஒரு வாராந்திரியாக இயங்கியது.

அதில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் எழுதிக்கொண்டிருந்தமையால், உடன் எழுதுபவர்கள் அனேகம் பேரை எனக்குத் தெரியும்.  அப்படி அடிக்கடி பார்த்து பரிச்சயப்பட்ட பெயர் செல்வராஜ் ஜெகதீசன். இன்றுவரை நேரில் சந்தித்துக்கொண்டதில்லை எனினும் கவிதைகள் வழியே இதுகாறும் அமைந்திருக்கிறது அவருடனான பரிச்சயம் எனக்கு.

அவரின் 'பிரிவின் சாசனம்' கவிதைத் தொகுதி நூல் மீதான விமர்சன பார்வையை இங்கே பதிவு செய்வதில் மகிழ்ச்சி.

செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் பெரும்பாலும் இயல்பாக நடக்கும் நிகழ்வுகளின் மூலம் கடத்தப்படும் உணர்வுகளை வார்த்தைகளால் விரிப்பதாக இருக்கும். எளிமையான, மிகக் குறைவான சொற்கள். உரை நடை பாணியிலமைந்த கவிதைகளே பெரும்பாலானவைகள். உவமை, உருவகங்களால் சிக்கலான மிகுபுனைவை உருவாக்கி வாசகனை பயமுறுத்தும், அறிவு ஜீவி வேஷம் காட்டும் கவிதைகள் அல்ல இவரின் கவிதைகள்.

இவரின் பல கவிதைகளை ஒரு உணர்வுப்பூர்வமான சினிமாவின் காட்சிகளில் 'அட!!' சொல்ல வைக்கும் வசனங்களாகவும் பார்க்க முடியும். திட்டமிட்டே இப்படி எழுதுகிறாரா தெரியவில்லை?
 
இந்தத் தொகுப்பிலுள்ள பல கவிதைகளை ஏற்கனவே வாசித்த உணர்வு வாசிக்கையிலேயே கிடைத்தது.
பிரிவின் சாசனம், அந்தரங்கம் முதலான எண்ணற்ற  கவிதைகளை அப்படிச் சொல்லலாம்.

பறத்தல் மட்டுமே கூட பறவையின் நோக்கமாக இருக்கலாம். எஞ்சிய அனைத்தும் பக்க விளைவுகளே என்று பதிவு செய்கிறது இந்தக் கவிதை.

ஒரு பறவை ஏன் பறக்க வேண்டும் என்ற கேள்விக்கு எது பதிலாக இருக்க முடியும்? பொருண்மை லாபங்களை மனதிற்கொண்டு இயங்குவதைக் காட்டிலும், வாழ்வை வாழ்வதற்காகவே வாழ்ந்தால் தான் என்ன என்ற கேள்வியாகவும் பார்க்கலாம் என்பதைச் சொல்வதாக இருக்கிறது இந்தக் கவிதை.

பறத்தல் என்பதைத் தவிர
வேறெந்த முகாந்திரம்
இருக்கப் போகிறது
வெளிர் நீல வானில்
மிதந்தலையும் அந்த
வெண்ணிறப் பறவைக்கு....


ஏமாற்றத்தை தந்துவிட்ட ஓர் உறவை அதன் பின் எப்படி கடப்பது?  யாரோ ஒருவன் என்றால் நம்மையும் அறியாமல் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும் ஒரு சினேக உணர்வு, ஏமாற்றிய உறவுகள் மீது வருவதில்லை. உறவுகளை பொருண்மை லாபங்களை விட்டு unclutch செய்து பார்த்தால் தான் என்ன என்பதைச் சொல்வதாக இருக்கிறது இந்தக் கவிதை.

ஒரு ரயில் சிநேகத்தைப்
போலாவது
இருந்திருக்கலாம்
நமதந்த
இறுதிப் பிரிவு....


எந்திரத்தனமாகிவிட்ட மனித வாழ்வில், மனிதத்தின் மீது பற்றுகொள்ள அழைப்பதாக அமைகிறது இந்தக் கவிதை.

எழுத்தில் இருப்பதை
எடுத்துக்கொடுக்கும் பணி தான்
என்றாலும் இன்னும் கொஞ்சம்
சிரித்தபடி இருக்கலாம்
இந்த மருந்துக்கடை விற்பன்னர்கள்...


முன்னரே சொன்னது போல் சில கவிதைகளை அப்படியே வசனமாக திரை வடிவில் வைத்துவிடலாம் போலிருக்கிறது. அப்படியான கவிதை இது.

தெய்வம்
நின்று கொல்லும்.
ஏன்?


பின் வரும் கவிதையில் இறுதியில் வரும் 'இவனைப்போலவே' இல்லாமல் இருந்திருப்பின் கவிதையின் அர்த்தம் மிக மிக சாதாரணமாக இருந்திருக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதிய
கடிதமொன்றில் பெரிதும் மாறிப்போயிருந்தது
கையெழுத்து இவனைப்போலவே....

விதைகள் விருட்சமாவதன் பின்னால் தேர்வென்ற ஒன்று இருந்திருக்க வேண்டியதில்லை என்பதைச் சொல்வதாக அமைகிறது இந்தக் கவிதை. இதையே மானுடவியலிலும் பொருத்திப் பார்க்கவும் முடியும். அதை வெளிப்படையாக சுட்டாமல் பூடகமாக இப்படியும் சுட்டலாம் என்பதே இந்தக் கவிதையை பிரத்தியேகமானதாக்குகிறது.

விதை நெல்லொன்றை
வீசிவிட்டுப் போன பறவை
அறிந்திருக்கவில்லை
அது விழுந்த இடம்
ஒரு கான்க்ரீட் தளம் என்பதை...

புலன்கள் எத்தனை போலியானது என்பதை இந்தக் கவிதை சொல்லிவிடுகிறது.

எப்போதும் எப்படி
மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள் எங்கிறீர்கள்...
'எப்போதும்' என்று எப்படிச் சொல்கிறீர்கள்....


சுமார் 100 தலைப்புகளில் கவிதைகள் என்றாலும் சில தலைப்புகளில் ஒன்றுக்கும் மேல் இருக்கின்றன. ஒரு கவிதையை வாசித்துவிட்டு அப்படியே எடுத்துவைத்துவிட்டு தீவிரமாக யோசிக்க வைத்தும் கவிதைகளாக பெரும்பான்மையும் இல்லாமல், படித்த உடனே புரிந்துவிடுகிற கவிதையாகவே எல்லாமும் இருக்கின்றன. ஆகையால், பல தரப்பட்ட வாசகர்களை நிச்சயம் சென்றடையும்  என்றே நம்புகிறேன்.

தொகுப்பு அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வாயிலாக நூலாகியிருக்கிறது.
நூலைப் பெற்றுக்கொள்ள வாசகர்கள் பின்வரும் கீழ்க்கண்ட முகவரியில் அணுகலாம்.

41, கல்யாணசுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை - 600 011
அலைபேசி: 9444640986
bookudaya@gmail.com

Thursday, 9 April 2020

Exotic Vacation - Literary Yard

Exotic  Vacation - Literary Yard

Literary Yard has offered a home to one of my science fiction. I thank the editorial board of Literary Yard for choosing mine. Click the below link to read it in the Zine.

https://literaryyard.com/2020/04/09/exotic-vacation/

Exotic Vacation
By Ramprasath Rengasamy


I took deep breath.

I then approached the school ground where there was heavy crowd. The school was at the foot of Banjar hills. The passing clouds could only touch the waist of the hills and yet Banjar hills was not snow-capped. This was because it was well below the equator of the planet. No one at the foot of the hill could see even if a flying object landed at the top most tip of the hill. 

It was not that late at night. Moon light illuminated that area. Light works at the festival made it look like an oil painting. The stage shows were yet to begin. Karakattam – a traditional dance – was performed by a few country-side performers for the amusement of gatherers.

A cantilevered wheel, not huge in dimension, was seen amusing kids. There were mobile shops selling handmade sweets. The shops were flat wooden plank mounted on a support system that had wheels fitted to all four corners. There was a lantern on each one of them. These lanterns and their faint light made the sweets look healthy. I saw lot of flies around the food but the foods were properly covered by mesh food covers.

I walked through the shops and the people. I could neither smell the food nor the men. I have heard much about the men of Earth. Visiting earth was an exotic vacation for people of my kind. There were a few like me in South Asia. Some others of my kind have gone to Russia. We were told that men on Earth were very handsome. The planet was silicon based and the people were carbon based.

For some reasons, life forms in most other planets were not as good looking as those in Earth. That made the planet very special amongst planets that supported life.

Men, in this part of Earth looked dark and yet their skin glowed even in that faint moon light. I have seen them even before I started off to Earth. In our planet, only people of privileged social ranking could travel to other planets. They travelled to Earth, had fun and returned. Some even dared to rise hybrids in Earth but the babies born could not adapt and therefore didn’t survive for long. Those faulty infants were killed and buried in Earth itself.

In black market, we got memories stolen from them. From those memories, we learnt that there were men and women of varied complexion in Earth. I was particularly fond of men of dark complexion with strong shoulders and arms. I was instructed to come down to either South Africa or South Asia. I chose South Asia because, it was this geography where spices were in common use. I have heard about spices from Earth. There were not many healthy planets with silicon and carbon based spices. I wanted to see, what those spices did to those men.

What I liked the most about earthly humans was their ‘innocence’. For decades we were visiting them and yet, we are still ‘ghosts’ to them. We have never responded to their communications even though we watched them for decades. Most of earthly beings never cared about other planets or other lives. They spent their times having fun with women and drinks. I have always wondered how it worked for them. What happened to their curiosity? What happened to their logic? What happened to their pursuits?

It’s not like none in the planet knew about us. Some people have suspicions about us. Some of them have even seen us. I mean, not the real us but just shadows of us. But they are just suspicions. Suspicions are nothing. They are like wild imaginations or fantasies. We need not do much about it. They are good at confusing themselves with the handful of things they knew. So we never did anything about that.

Intentionally I was dressed in a saree with no blouse just to mingle with the crowd. I tried to pretend like a local woman. It is actually very easy. All I had to do was to wrap around myself with a 9 yard long cloth.

I even had jasmine flowers stuck in my hairs. I heard that jasmine flowers and their aroma pulled local men. In here, saree was considered a wonderful dress. I have heard that the local men were crazy about women’s abdominal curves. In no other part of this world, there was one such admiration in practice. The men stared at the women’s chest when women bent forward. It was amusing to me.

In the rest of this world, women wore less cloths and made their body abundantly visible. I learnt something from this. The more one hid, the more she was remembered in South Asia. The more one hid, the more she became a part in men’s fantasies. That was how it all worked in this part of Earth.

I ensured that I didn’t wear a bra as I didn’t have much time. I was supposed to depart the next day to where I came from. I had chosen a body that was stout, tall and yet dark. I wanted to be one of them. I have heard that local men go crazy on such body frame. Men stared at me. But the other women were seen with bras. The local women stood in groups. I lacked a group because I was not one of them. So I went to a corner from where I could watch the crowd. Behind me, it was thick bush that led to the forest.

Moments later, I realized a few dark men staring at me. Their line of sight were on my chest and my back. I wanted to understand how their brains interpreted my body, how it stimulated their hormones, how their other internal organs coordinated towards pushing them to the subsequent stages of copulation and so on.

I stood still pretending not noticed them staring at me. But now I could understand how they must have imagined about me in their minds. It was a strange feeling. Considering their ‘hide-more-to-impress-more’ stuff, I could imagine how exciting it should have been for earthly humans.

Of the three men, one approached me. He was tall, dark with wide shoulders. I could make out his fleshy thighs as his lungi – a sarong typically worn around the waist – waved in resonance with the flowing wind. I tried to imagine, how an earthly women must have perceived this revelation.

“Hi, I am Natraj. You can call me Natti”.

“I am Ganesh. You may call me Gans”

“I am Alok. You may call me Alok”

Gans and Alok shouted from where they stood.

“Hi” I said in common.

“Not of this town?” Natti asked.

“Yes. Just visiting”

“Where are you from?”

I was not supposed to share those details. I had clear instructions with me. If we were to continue to visit Earth, we were not supposed to reveal anything about our origin with anyone.

“I don’t remember”

That puzzled him. His brows furrowed. I didn’t care as long as he didn’t ask any more on that.

Natti held my right hand. His fist was gripping. He then walked into the bush. I didn’t resist. We walked into the forest. I turned back and saw Gans and Alok following us at a distance. Noise of the crowd slowly diminished.

Natti showed me a tiny pouch. In diminishing light, I could make out that it was a condom pouch. That elaborated his intentions. I felt relieved. I was not supposed to contract any earthly disease. If I contracted, I might not be able to leave the planet.

We reached to a point where I only heard birds chirping. He unveiled his sarong and spread it on the ground. I wondered if he was nude below his waist as it was dark. I wished there was at least a faint lantern. He tore open the pouch, took it out and wore it on his.

He then pulled me by my hand and my legs slipped hitting his feet. I thought he did it intentionally. I fell on the sarong on my back. He fell on me. It sounded as if he was in a hurry. I was in his tight grasp. Our lips touched. I had no instructions in this part.

“Are you virgin?” he shook his head a little up and asked.

I didn’t know what to say. I nodded my head in agreement.

He undid my saree and that revealed my upper body. He tried to hide his face in my neck, ankles and chest. He tried to touch every part of my body with his lips.  He kept pressing his mid-waist against me. All those sounded funny to me.

I ran my hands all over his body. I felt his skin. It felt the same as that of my exo-skeleton. I could make out his bones. He was brawny and heavy. His hands touched various parts of my exo-skeleton. They paid excessive attention on my breasts and butts. Moments later Gans and Alok also joined him. I felt disturbed with their coming into picture between me and Natti. Gans held my hands and Alok held my legs. I was not ready for this. I tried to resist hard. That was when one of them punched on my face. I lost my conscious.

I didn’t know how long I was unconscious. When I woke up, Alok was holding me in tight grasp. Natti had something in his hand which in faint light looked like a broken stick of wood. That stick was roughly 10 inches long. He shoved it inside my body. The perforation in my body suit was mere a provision intended to make it look like that of an earthly woman. It could not have allowed a ten inch long wooden stick unless they drilled one when I was unconscious. 

I heard faint sounds of a tear in my body. Moments later he took it out and fell on me.

He then vigorously shook my body and that part, I didn’t like. But since I was now involved, I had to carry on with it. In some time, he became motionless. I felt something strange on my skin beneath my exo-skeleton body.

It was not supposed to happen. My body was supposed to protect my skin. I pushed him away and rose up. The other two took back a step each. Natti stared at me and there was shock coupled with surprise in his eyes. I ran my hands on my body. After struggling a bit, I located the tear. 

Natti came near me and again tried to grasp me. I pushed him away with all my strength. It was a heavy push in my standards and it threw him away some ten fifteen feet. I saw the other two men standing and staring at me.

I saw Natti’s condom nearby. I held it in my hand. My quick examination revealed that the condom had a cut at the tip of its head.  I touched a gel-like thing in that tear in my exo-skeleton body. At the point where the gel-like thing touched my real skin, it felt like stone. The hardened part felt like a tiny piece of rock. That was how skins of people of my kind reacted to foreign bodies.

Shortly after, I began to feel sick. Whatever infiltrated in me, began to disrupt my internals. I abundantly felt, I became infected with something. With that infection, I was not supposed to return to my planet.

They three now approached me. I tried to run away into the woods. They came running behind me at a distance. I stripped off my exo-skeleton body and stood on top of that. I turned around looking for them.

“Where did she go?” Natti asked.

“No idea. But could not have gone far” Alok said.

They roamed here and there, looking for me. One of them took a cigarette box and they each took one. One match stick lit all of their cigarettes. In faint light, I saw all of them.

“Let us pick up a direction each and look for her. Whoever got her, should whistle” Natti announced.

“I am tired man. Need some rest” Alok said. His face looked exhausted.

“Rest on this rock for some time” Gans said pointing his finger at me.

“I have come to this spot many times but I have never seen this rock before” Alok said.

“My uncle used to say that rocks from the hill occasionally slip down” Natti explained.

Shortly after, I heard roar of a tiger. It must have startled them. They saw each other once and then ran back into the town.

A tiger jumped over me and sat comfortably spreading his limbs all over. At a distance, light from the festive ground was seen. It resembled much like my home in outer space.

@Thanks
Literary Yard Magazine

15.4.2020 ஆனந்த விகடனில் என் கவிதை

15.4.2020 ஆனந்த விகடனில் என் கவிதை

15.4.2020 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் எனது 'ஹல்க்கின் துரதிருஷ்டம்' கவிதை வெளியாகியிருக்கிறது. எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.








Tuesday, 7 April 2020

அட்சயபாத்திரா - வாசிப்பு அனுபவம் - அருணா சுப்ரமணியம்

அட்சயபாத்திரா - வாசிப்பு அனுபவம் 


ஒரு நாவல் வாசகனை ஆரம்பம் முதல் இறுதி வரை வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தன்னிடத்தே கையகப்படுத்தி ஒரே மூச்சில் படித்து முடிக்க வைக்குமானால் என்னை பொறுத்த வரை அது மிகச் சிறந்த நாவல்.. அட்சயப்பாத்திரா அந்த விதத்தில் நூறு சதவிகிதம் மிகச் சிறந்தவோர் நாவல். நாவலில் சொல்லப்பட்ட கதை இவ்வுலகில் நடக்கக் கூடிய சாத்தியம் உள்ளது. எனினும் , இது வரை எங்கும் சொல்லப்படாத ஒரு கோணம் என்றே கருதுகிறேன்..
கதையின் மையக்கரு வங்கி கொள்ளையாக இருப்பினும் என்னை மேலும் கவர்ந்த சில விஷயங்கள் உண்டு.



 நவீன கால காதல் கதையை போன்று தொடங்கும் இக்கதை மெல்ல வேறொரு பரிமாணம் எடுக்கிறது. இப்போதைய தலைமுறையின் மனப்போக்கை உறவுகளின் பால் அவர்களின் அணுகுமுறையை படம்பிடித்துக் காட்டுகின்றது.  உறவுகள் பொருள்சார் நன்மைகளை நோக்கி வழிநடத்தப்பட்ட ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இதில் பங்கு உண்டு. உண்மையான அன்பும் அர்த்தமுள்ள உறவுகளும் இன்று மலிந்து போயின. பணமே பிரதானமாய் இந்த மில்லினியத்தில் எந்தவொரு உறவின் போக்கையும் வழிநடத்துகிறது. இந்த உண்மையை நாவல் நன்றாக சித்தரிக்கின்றது.  

நவீனத்துவம் என்னும் போர்வையில் சிதறுண்டு போகும் இன்றைய காதலை படம் பிடித்து  காட்டுகிறது. பொருண்மை உலகில் தொலைந்து கொண்டிருக்கும் உன்னதங்களை மறைமுகமாக மேற்கோள் காட்டிவிடுகிறது.   வர்ஷா, விமல் மற்றும் அரவிந்த் இடையில் உருவாகும் ஒரு விநோத ஒப்பந்தத்திற்கு மூலமாய் "அட்சயபாத்திரம்"  கண்டெடுத்த அரவிந்தின் மூளை இருக்கிறது. அள்ள அள்ளக்  குறையாத செல்வத்தை தன்னகப்படுத்திக் கொள்ள இவர்களில் ஒருவர் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்று நாவலை தொடர்ந்து வாசிக்க நம்மை இருத்தி வைக்கின்றது. எதிர்பாராதொரு  முடிவோடு இக்கதை மனதில் குடிகொண்டுவிடுகிறது. 



ஒரு முழு நீள திரைப்படத்திற்கான அனைத்து சாராம்சங்களையும் பெற்றுள்ளது இந்நாவல். இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு படைப்பு!!


- அருணா சுப்ரமணியன் 

Sunday, 5 April 2020

வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் - கவிதைத்தொகுப்பு நூல்

வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் - கவிதைத்தொகுப்பு நூல்


என்.சி.பி.எச் என்று தமிழ் வாசகர்களால் அறியப்படும் நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ் பதிப்பக வெளியீடான 'வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்' கவிதைத்தொகுதி மீதான விமர்சனக்கட்டுரை இது.

கவிதைத்தொகுப்பு தலைப்பிலேயே ஈர்த்துவிடுகிறது. அதுவே இத்தொகுப்பின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டிவிடுகிறது. தொகுப்பில் சுமார் எழுபதுக்கும் அதிகமான கவிதைகள் இருக்கின்றன.
ஆசிரியரின் சமூகப்பார்வையை சில கவிதைகள் நச்சென்று சொல்லிவிடுகின்றன. உதாரணமாக, ' நாலு பேர்' என்ற இந்தக் கவிதை.

நாலு பேர்


நாலு விதமா
பேசுவார்கள் என்றனர்...
நால்வரிடமே கேட்டேன்
என்ன தவறு என்று?..
அப்படித்தான்
என்றார் ஒருவர்...
இதெல்லாம் எதற்கு
என்றார் இன்னொருவர்...
தவறில்லை ஆனாலும் வேண்டாம்
என்றார் மூன்றாமவர்...
என்ன கேள்வி கேட்கிறாய்
என்றார் நாலாமவர்...
ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை
என் கேள்விக்கான பதிலையும்...
என்னையும்....

நான்கு விதமாக பேசப்படுவது என்னவென்று எதையும் சொல்லவில்லை. ஆனால், அப்படிச் சொல்பவர்கள் எப்படி கண்மூடித்தனமாக இயங்குகிறார்கள் என்பதை 'என்னையும்' என்று கவிதையின் இறுதியில் சேர்ப்பதன் வாயிலாக சுட்டிவிடுகிறார். 'என் கேள்விக்கான பதிலை' என்பதோடு முடியாமல், 'என்னையும்' என்று தொடர்ந்து, முடியாமல் நீள்கிறது இந்தக் கவிதை.

தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் உரை நடை வடிவிலமைந்த கவிதைகளே. சில கவிதைகள் குடும்பம் என்னும் அமைப்பில் ஆணும் பெண்ணும் தங்கள் அசலான அடையாளங்களை இழந்து அல்லலுறுவதை படம்பிடிப்பதான கவிதைகள்.

உதாரணமாக, 'விலை' என்ற இந்தக் கவிதை.

விலை

எனக்கு வேண்டாதவைகள்
உனக்கு வேண்டியவைகளாயின...
எனக்கு வேண்டியவைகள்
உனக்கு வேண்டாதவைகளாயின...
உனக்கு வேண்டியதை நீயும்
எனக்கு வேண்டியதை நானும்
தேடிப்பெற்றபோது
நான் இருவரும் ஒருவருக்கொருவர்
வேண்டாதவர் ஆகிப் போனோம்...!!

சில கவிதைகள், பாலையில் முளைக்கும் ஒரு சிறிய செடியின் தன்முனைப்பை, இலக்கற்ற ஆற்றலை குறிப்பன.   

பொதுவாக பாதிக்கப்பட்டவன் மீதே பரிதாப உணர்வு விஞ்சும். அதுவே வெகு ஜன பார்வையாகவும் இருக்கும். 'அரவணைப்பு தேவையாயிருப்பது யாருக்கு' என்ற கேள்வியுடன், பரிதாப உணர்வு கொள்ள வேண்டியது குற்றம் இழைப்பவனுக்கும் பொருந்தும் என்கிறார் பிம்பம் என்ற கவிதைகள்.

பிம்பம்

என்ன காரணம் என்றே தெரியவில்லை
அந்த நாய்க்குட்டியை எனக்கு மிகவும் பிடித்தது
என் கரங்களில் புகுந்த பஞ்சுப்பொதியை
தினம் ரசித்துப் பாதுகாத்தேன்
சிரம பரிகாரங்கள் ராஜ போகமாய் வளர்ந்தது
பாசவலையுள் விழுந்த என்னை
இப்போதெல்லாம் அது ஏறெடுத்தும்  பார்ப்பதில்லை
அலட்சியம் செய்வதோடு அல்லாமல்
தன் கோர முகத்தை அவ்வப்போது காட்டி குரைக்கிறது
அரவணைப்பு தேவையாயிருப்பது யாருக்கு என்று
இறுதிவரை புலப்படவில்லை...

ஆர்ப்பரித்தும் சதா அலைவுறும் மனத்தை 'மனம் நதியானது' என்ற கவிதையிலும் , துரத்தப்பட்டே பருந்தான ஊர்க்குருவியை 'வெண்சிறகுகள்' என்ற கவிதையிலும் காணமுடிகிறது.
காலத்தின் போக்கில்  நாம் அறிந்த பலவும் பற்பல அர்த்தங்களின் வழி உருமாறிக்கொண்டே செல்வதை 'வினா-விடை' என்ற கவிதை  நயம்படச் சொல்கிறது.
இழப்பை, அதை இச்சமூகம், இக்காலகட்டத்தில் எதிர்கொள்ளும் விதத்தை ரத்தினச்சுருக்கமாகச் சொல்கிறது 'இழப்பு' என்ற கவிதை.

இந்தத் தொகுப்பினை அடியாகக் கொண்டு தொடர்ந்து மென்மேலும் நூல்கள் வெளியிட்டுச் சிறக்க நூலாசிரியரை வாழ்த்துகிறேன்.






 - ராம்பிரசாத்

Saturday, 4 April 2020

ஹல்கின் துரதிருஷ்டம் - உயிர்மை

'ஹல்கின் துரதிருஷ்டம்' என்ற தலைப்பிலான என் கவிதை உயிர்மையில் வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதைகளையும், கவிதைகளையும் தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவிக்கும் கவிஞர் மனுஷ்யப்புத்திரன் அவர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

கவிதையை வாசிக்க பின் வரும் சுட்டியை சொடுக்கவும்:









Wednesday, 1 April 2020

அம்மா வருவாயா - ராஜி ராமச்சந்திரன்

அம்மா வருவாயா - ராஜி ராமச்சந்திரன்

இந்த நூலை வாசித்து ஒரு மாதத்துக்கும் மேல் இருக்கும். முன்பே வாசித்துவிட்டாலும், எழுதி முடிக்க எடுத்துக்கொண்டிருந்த குறுநாவல்களும், மொழிபெயர்ப்பு முயற்சிகளும் நேரமெடுத்துக்கொண்டதில் இந்த நூல் குறித்து விமர்சனம் எழுத இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது.

கட்டுரைத்தொகுதியாக வெளியாகியிருக்கும் இந்த நூல், இதன் ஆசிரியரால் பல்வேறு காலகட்டங்களில் என்றேனும் நூலாகிவிடும் என்ற எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தற்செயலாக தன்னிச்சையாக எழுதப்பட்ட நிகழ்வுக்குறிப்புகளின் தொகுப்பாகும்.  வாசிக்க கிட்டத்தட்ட ஒரு டைரிக் குறிப்பு போலத்தான் இருக்கிறது. நூலை வாசிக்கையில் ஆங்காங்கே யாரோ ஒருவரின் டைரியை வாசிக்கும் அனுபவம் கிடைக்கிறது.

நூலைக் கையில் எடுத்தால் ஒரே மூச்சில் வாசித்துவிட்டு வைக்கக்கூடும் எளிமையான நடை. ஒரு கதையை சரளமாக, வாசிக்கும் வாசகனை தங்கு தடையின்றி, நின்று நிதானித்த விடாமல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச்செல்லும் எழுத்தை எழுதக்கூடியவராக தோன்றச்செய்கிறது இவரின் எழுத்து. முயற்சியெடுத்து எழுதினால் நல்ல சிறுகதைகளை எழுதக்கூடியவர் என்றே தோன்றச்செய்கிறது.

நூலில் மிக நீளமான பகுதி என்றால், அது ஒரு கப்பல் பயணம் குறித்தான பதிவு தான்.  நான் கப்பலில் சென்றதில்லை. ஆதலால் இந்தப் பகுதியை சற்று நேரமெடுத்துக்கொண்டே வாசித்தேன். எந்த ஒரு சிறு தகவலையும் சொல்லாமல் விட்டுவிடக்கூடாதென்கிற எண்ணத்துடன் நூல் எழுதப்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அமெரிக்காவில் கப்பல் பயணங்கள் எப்படியிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள நல்ல நூல்.

கட்டுரைத்தொகுதிதான் என்றாலும், சில இடங்களில், கதை சொல்லும் தொணி வந்துவிடுவதே, ஆசிரியரால், கதைகளும் சொல்ல முடியும் என்று தோன்றச்செய்கிறது.

நூலாசிரியரான ராஜி ராமச்சந்திரன் கவிதைகளும் எழுதுகிறார் என்றாலும் முதல் நூலை கட்டுரைத் தொகுதிகளாகவே, அனுபவக்கோர்வைகளாகவே தந்திருக்கிறார். இதுவே இவரது அடுத்த நூல் என்னவாக இருக்குமென்று யோசிக்க வைக்கிறது இந்த நூல்.

இந்த நூலை பாண்டிச்சேரியைச் சேர்ந்த 'ஒரு துளிக்கவிதை' இயக்கம் பதிப்பித்திருக்கிறது.

நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் raji100@gmail.com(ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா)