என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 5 September 2020

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர் தினம் இன்று.

சின்ன வயதில் கிடைக்காமல் ஏங்கிய ஒரு விஷயம் இருக்கிறதென்றால் அதில் 'ஸ்பெஷல் கிளாஸ்' ம் ஒன்று.

அவ்வளவுக்கு பாடம் பிடிக்குமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. நான் படித்தது அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம். அங்கே வகுப்புகள் நடப்பதே அரிதினும் அரிது. ஆசிரியர் பீரியட் துவக்கத்தில் வகுப்புக்குள் நுழைந்தால் எண்ணி பத்து பாராக்களை  சிலை போல் நின்றபடி படிப்பார். அவ்வளவு தான். க்ளாஸ் முடிந்தது. விசாரித்தபோது அது ஒரு தந்திரம் என்றார்கள். வகுப்பிலேயே தெளிவாக விளக்கமாக எடுத்துவிட்டால், பிறகு எவன் ட்யூஷன் வருவான்? ட்யூஷன் வரவைக்கத்தான் இந்த ட்ரிக்.

அக்கப்பக்கத்து வீடுகளில் வசிக்கும் என் வயதுப்பையன்கள் மெட்ரிகுலேஷன், மற்றும் சி.பி.எஸ்.ஸி பள்ளிகளில் படித்தார்கள். எப்போதும் ஏதேனும் ஸ்பெஷல் கிளாஸ் போய்விட்டு வருவார்கள். கிரிக்கெட் விளையாடுகையிலும், ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையிலும் பாடங்கள் பற்றி பேச்சு வரும்போது ஸ்பெஷல் கிளாஸில் படித்ததையெல்லாம் பகிர்வார்கள். அவர்கள் வாயையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டி இருக்கும் போதெல்லாம் எனக்கு அடிவயிற்றில் பக்கென்று இருக்கும்.

அவன்கள் ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் போகிறார்கள்.  நாம் அப்படி ஏதும் போவதில்லை. அப்படியானால், நம்மை விட அவர்கள் எதையோ மேலதிகமாக கற்கிறார்களோ? 'நாம் எதையோ இழக்கிறோமோ' என்று எப்போதும் தோன்றும். அவர்கள் படிக்கும் பாடப்புத்தகங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்துப் பார்த்துக்கொள்வேன். கால் மணி நேரத்தில் பார்க்க மட்டும் தானே முடியும்? புத்தகக்கடையில் விசாரித்தால் அதிக விலை சொல்வான். அவ்வளவு கொடுத்த வாங்கிப்படிக்க ஏது பணம்?

எப்படியோ தத்தித்தத்தி பொறியியல் வந்தால், கோ-எஜுகேஷனில் படித்து உடன் படிக்கும் பெண்களுடன் ஆளுமையாக இருப்பார்கள் அவர்கள்.  எனக்கெல்லாம் பெண்களிடம் பேசவே கூச்சமாக இருக்கும்.  என் வகுப்பு பெண் மாணவிகள் பலருடன் பொறியியல் முடிக்கும் வரை கூட நான் பேசியதே இல்லை. கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளில் ஒரு குரூப் வெளுத்துக் கட்டும். நாங்கள் எல்லாம் எட்ட நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம். 'வாழ்க்கை இப்படியே போயிடுமா சார்' என்று தோன்றிய காலகட்டங்கள் அவைகள்.

நிறைய கேலிக்கும், நகைப்புக்கும் உள்ளாகியிருக்கிறேன். அந்த நாட்களேல்லாம் இப்போதும் துரதிருஷ்டவசமாக நினைவிருக்கிறது. +1,, +2 விற்கு ட்யூஷன் போனால், அங்கே கதையே வேறு. மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து சுமார் அறுபது பேர் படித்த அந்த ட்யூஷனில் நான் மட்டும் அரசுப்பள்ளி. ட்யூஷன் பையன்கள் யாரும் என்னிடம் பேசவே மாட்டார்கள். ஏதோ அவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் உயர்ந்தவர்கள் போலவும் நான் ஏதோ தென்னாப்பிரிக்காவிலிருந்து ஓடி வந்தவன் போலவும் இருக்கும்.

அதில் ஒருவன் வீடு சைதாப்பேட்டையில் தான் இருந்தது. அவன் வீட்டுக்குப் போனால், வீட்டுக்குள்ளேயே கூட விட மாட்டான். வாசலிலேயே நிற்க வைத்து பேசி அனுப்பிவிடுவான்.  அப்போதெல்லாம் அவர்கள் என்னை மட்டும் வித்தியாசமாக நடத்துவதைக் கூட புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு innocence வேறு. இப்போது யோசித்துப் பார்த்தால், எந்த அளவுக்குக் கீழ்த்தரமாக நடத்தியிருக்கிறார்கள், அதையும் கூட புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றும். 16 வயதுதான். இது அவமானத்தில் சேருமா, அசிங்கத்தில் சேருமா என்று கூட தெரியாத வயது.

ஒரு கட்டத்தில் அதீத innocence நமக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டபோது பொறியியல் டிகிரி வாங்கிவிட்டு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருந்தேன்.

இந்த அசிங்கங்கள் அவமானங்கள் எல்லாவற்றையும் மறக்க, எதையேனும் வாசிக்க ஆரம்பித்தேன். அப்படி முதலில் கையிலெடுத்தது Java Complete Reference. சொல்லித்தர ஆளில்லை என்பது பற்றி கவலை இல்லை. ஆறு மாதங்கள் அதில் கழித்து, எண்ணற்ற ப்ரோக்ராம்கள் எழுதிப்பார்த்ததில் ஜாவா கை வந்தது. வேலை வாங்க அதுதான் உதவியது.

வேலைக்கு சேர்ந்து முதல் மூன்று ஆண்டுகளில் தொழில் நுணுக்கங்கள் தெரிந்துவிட்ட பிறகு, மீண்டும் அதே பழைய பயம் தலைதூக்க, மீண்டும் வாசிக்கத்துவங்கினேன். இந்த முறை சிக்கியது இலக்கியம்.

இன்னும் அதீத innocence முழுவதுமாகப் போகவில்லை தான். சில விஷயங்கள் மரபணுவிலேயே இருந்தால் , என்ன செய்தாலும் மாற்ற முடியாது போல. இந்த ஏமாற்றங்கள், அசிங்கங்கள் மனிதர்களை நம்புவதை விட, புத்தகங்களை நம்பிவிடலாம் என்று தான் யோசிக்க வைக்கின்றன. அதிகம் எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் பின்னால், அச்சாணியாய் இருப்பது இந்த பாதுகாப்பின்மையே..

வாழ்க்கையும், இயற்கையுமே ஆகச்சிறந்த ஆசிரியர்கள் என்று தீவிரமாக நம்புகிறேன். ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்.


பி.கு:
இந்தப் பத்தி  நல்ல ஆசிரியர்கள் யாருமே இல்லை என்று அர்த்தப்படுத்த அல்ல. என் போன்று மனிதர்களால் கைவிடப்பட்டவர்களுக்கு, இயற்கையே ஆகச்சிறந்த ஆசானாக இருந்திருக்கிறது என்பதைச் சொல்லத்தான்.