என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday 15 September 2020

நீட் தேர்வுகள்

நீட் தேர்வுகள்


அமெரிக்கா ஒசாமாவை வளர்த்துவிட்டது நிஜம். காரணங்கள் அமெரிக்காவின் உளவுப்பிரிவுக்கே வெளிச்சம். பின் விளைவாக, 2001ல் world trace center அழிந்ததும் நிஜம். அதன் பின் விளைவாக, 2011ல் ஓசாமா பாகிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்டதும் நிஜம்.

இடைப்பட்ட காலத்தில், யார் யாரோ சில நிறுவனங்களை வாங்கினார்கள். விற்றார்கள். யாரோ கொழுத்தார்கள். யாரோ நஷ்டமடைந்தார்கள். சரி. இதையெல்லாம் செய்தாவது அமெரிக்கா தன்னை உலகின் பெரியண்ணனாக நிலை நாட்டிக்கொண்டதா என்றால் 2020 ல் அதுவும் இல்லை என்றாகிவிட்டது. அமெரிக்காவின் மகிழ்ச்சி முழுதாக பத்து வருடங்கள் கூட நீடிக்கவில்லை.

2020ல் அமெரிக்கா தள்ளாடிக்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு சீனாவைக் கைகாட்டிக்கொண்டிருக்கிறது. ஹைட்ராக்சி க்ளோரோகுயின் கைகொடுக்கவில்லை. உலகின் பெரியண்ணன் என்று பறைசாற்றிக்கொண்டிருந்த அமெரிக்காவால் இத்தனை மாதங்களில் கொரோனாவுக்கு எதிராக ஒரு உருப்படியான எதிர்ப்பு மருந்தையும் உருவாக்க முடியவில்லை. இப்போது உலகின் அண்ணன், நிச்சயமாக கொரோனா தான். நாளை வேறொரு உயிரியல் ஆயுதம். அல்லது ஏதோவோர் இயற்கைப் பேரழிவு.

இப்போது அமெரிக்காவிற்கு யாரும் அச்சப்படவில்லை. ஆனால், கோரோனாவுக்கு உலகமே அஞ்சுகிறது.

உலக மயமாக்களின் பக்க விளைவாக, முன்னேறிய நாடுகளின் அலோபதி மருந்துகளுக்கு இந்தியாவில் ஒரு சந்தையை உருவாக்கும் பொருட்டு, மருத்துவத்துறையையே தலை கீழாக நீட் என்கிற பெயரில் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாக அமெரிக்காவில் வழக்கில் இருக்கும் மருத்துவத்துறைக்கு, இன்றளவில் கோரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து என்பதாயிரத்தைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.

இப்படி ஒரு 'ஃபெயிலியர் மாடலுக்கு' இந்திய மருத்துவத்துறையை மாற்றி என்ன சாதிக்க முயல்கிறார்கள் என்பது எதுவாக இருந்தாலும், பக்க விளைவுகள், எய்தவன் மேலேயே ஒரு நாள் திரும்பத்தான் போகின்றன. அமெரிக்காவிற்கு 2020ல் கொரோனாவின் ரூபத்தில் திரும்பியதைப்போல.  இடையில் யாரோ தோற்பதாகவும், வேறு யாரோ ஜெயிப்பதாகவும் நினைத்துக் கொள்ளப்போகிறார்கள். ஊடகங்களில் அங்கலாய்ப்பார்கள். எதுவும் நிரந்தரமாய் இருக்கப்போவதில்லை.

இயற்கையை, பிரபஞ்ச ஒழுங்கை மீறி இங்கே எதுவும் ஜெயிக்கப்போவதில்லை. நடக்கவும் போவதில்லை.

விந்தை என்னவென்றால், கல்வி கற்ற சமூகங்கள் என்று அடையாளப்படும் சமூகங்கள் தான் நீட்டை உயர்த்திப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், கல்வி இவர்களின் மூளைகளுக்குள் என்ன இழவைப் புகுத்திக்கொண்டிருக்கிறதென்று தெரியவில்லை.  'நீட் தேவை' என்ற எண்ணத்தை, 'மானுட மேன்மைக்கு நீட்டே வழி' என்று சொல்ல வைக்கும் இந்த கல்வியை நான் அடைவதில் காலத்தை வீணடிக்கவில்லை என்பதே இப்போதைக்கு எனக்கு நிம்மதி அளிப்பதாக இருக்கிறது. இப்படி மடத்தனமாக சிந்திக்கவைக்கும் கல்வி எனக்கு வேண்டாம் என்பதே என் தனிப்பட்ட நிலைப்பாடு.

எப்போது இவர்கள் ''நீட் தேவை' என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டார்களோ, அப்போதே அவர்கள் தங்களின் 'அறியாமையை' வெளிப்படுத்திவிட்டார்கள் என்று நான் எடுத்துக்கொள்கிறேன். எப்போது அவர்கள் அறியாமையை வெளிப்படுத்திவிட்டார்களோ அவர்களை என்னால் குழந்தைகளாகவே பாவிக்க முடிகிறது.

சில குழந்தைகள் சுய புத்தியாயிருக்கும். பல குழந்தைகள் சொல் புத்தி தான். சற்றே மலட்டு புத்தி. இந்த விதமான குழந்தைகளுக்கு அறிவுரைகள் தேவைப்படாது. கையைச் சுட்டுத்தான் தெரிந்துகொள்ளும். 2020ல் அமெரிக்கா தெரிந்துகொண்டிருப்பது போல.   இவர்களின் பொருட்டும், இவர்களை ஈன்றெடுத்த குடும்பங்கள் சற்றே நெகிழ்வுத்தன்மையுடன் தான் இயங்கும். அதனால், குடும்பம் அழிந்துவிடும் என்று அர்த்தமல்ல. குடும்பம் நீடிக்கவே செய்யும். ஆனால், பிரபஞ்சத்தின் பார்வையில் எது அந்தக் குடும்பத்துக்கு தேவையற்றதோ அது தானாகவே அழிந்துவிடும். இது சட்டென நிகழாது. காலப்போக்கில் மெதுவாக நிகழும்.

சரி. அப்படியானால், நீட் தேர்வு மரணங்களை எப்படித்தான் அணுகுவது? ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களிலிருந்து இனிமேல் யாரும் மருத்துவர்களாகக்கூடாதா என்றால் அப்படி இல்லை.

எளிமையாக இப்படி சொல்லலாம் என்று தோன்றுகிறது.

எங்கள் கிராமங்களில்  நான் சின்னப்பையனாய் இருந்தபோதிருந்தே தலைவலி, சுளுக்கு, வயிற்று வலி, பிரசவம் போன்ற எல்லாவற்றுக்கும் பாட்டி வைத்தியம்தான். பாட்டிக்கள் எந்த மருத்துவமும் படித்ததில்லை. அதாவது, ' மானுட மேன்மைக்கு நீட் தேவை' என்று சொல்ல வைக்கும் 'கல்வி' எதையும் கற்றதில்லை. அவர் தன் அனுபவ அறிவை எந்தப் புத்தகத்திலும் எழுதவில்லை தான். ஆனால், இந்த பாட்டிகள் மரணத்தை வென்றவர்களோ என்று அவ்வப்போது யோசிக்க வைத்துவிடும் அளவிற்கு இயங்கி நான் பார்த்திருக்கிறேன்.

மருத்துவம் படிக்க விரும்பாதே என்கிறாயா என்காதீர்கள். அலோபதி நம் மருத்துவமே இல்லை என்கிறேன். இதைப்படிக்க ஏன் இத்தனை பிரயத்தனம், உயிர்பலி என்பது என் கேள்வி. பிரிட்டீஷ் அரசின் புண்ணியத்தாலும், வெள்ளை சருமத்தின் மீதான நம் கிரக்கத்தாலும், நாம் மறந்துவிட்ட , தொடர்பருந்துவிட்ட சித்தா மருத்துவத்தையும், நம்மூர் பாட்டி வைத்திய முறைகளையும் மீட்டெடுக்க இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டால் என்ன? நீட் மத்திய அரசின் திணிப்பாக இருக்கலாம். அதை நம்மால் புறக்கணிக்க முடியாமல் போகலாம். இருந்துவிட்டுப் போகட்டும். மாநிலத்தின் தேவைக்கேற்ப  புதிய படிப்புகளை உருவாக்கிக்கொள்வதில் மாநில அரசுக்கு போதுமான அதிகாரம் இருக்கிறதே.

நம்மூர் மருத்துவ முறைகளை நாம் இன்றிருக்கும் அலோபதியில் பயன்படுத்தும் கருவிகளை வைத்து மேம்படுத்தினால் என்ன என்பது என் கேள்வி? என் கேள்வி மடத்தனமாக இருக்கிறது என்றால் விவரம் தெரிந்த நண்பர்கள் எனக்கு விளக்கலாம். நான் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு மார்க் போதாமல் பொறியியல் படித்து இஞ்சினியர் ஆனவன். ஆகையால் இப்படி மடத்தனமான கேள்விகள் கேட்க எனக்கு உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்.

சித்தா மருத்துவத்தில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன? ஓலைச்சுவடிகளின் உள்ள மருத்துவ முறைகள், வாய்வழியாக வழக்கிலிருக்கும் பாட்டி வைத்தியங்கள், இவற்றை செயல்படுத்துகையில், உடல் இந்த மருந்துகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதை கணகாணிக்க மருத்துவ இயந்திரங்கள் இல்லை என்பதுதானே. அலோபதி முறைகளில் உள்ள இயந்திரங்களை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் தானே.

'இதெல்லாம் பேச நன்றாக இருக்கும். இதையெல்லாம் எப்போது துவக்கி, எப்போது அமல்படுத்தி....." என்று சிலர் முனுமுனுக்கலாம். இப்படித்தானே சாட்டிலைட் ஆராய்ச்சியில் இறங்கினோம். உதிரி பாகங்களை சைக்கிள் கேரியரில் வைத்து எடுத்து வந்ததை ஒரு காலத்தில் கிண்டலடித்த அமெரிக்க இன்று நம்மிடமே தன் செயற்கைக்கோள்களைத் தந்து விண்ணில் செலுத்த கேட்கவில்லையா? அது சாத்தியமென்றால் இதுவும் சாத்தியம் தானே? கொஞ்சம் காலம் எடுக்கும் ஆனால் இறுதியில், நமக்கே நமக்கென ஒரு மூன்றாவது மருத்துவ முறை கிடைத்துவிடும் அல்லவா? அதற்கு நாம் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. அல்லவா? தமிழர் மெய்யியல் கோட்பாடுகள் உலகிற்கே முன்னுதாரணமாக இருக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. பலவற்றை நானே  செயல்படுத்திப் பார்த்துவிட்டு, சரியாகத்தான் வேலை செய்கிறது என்று நானே ஊர்ஜிதமும் செய்திருக்கிறேன் என்பதால் எனக்குள் இந்த எண்ணம் வலுப்பெறுகிறது என்றே கருதுகிறேன்.

என் சிற்றறிவுக்கு எட்டியதை, நான் எப்படி இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வேன் என்பதை பத்தியாக எழுதிவிட்டேன். மாற்றுக்கருத்துக்களை நண்பர்கள் பதியலாம். தவறிருந்தால் கற்றுக்கொள்கிறேன்.