என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 18 January 2020

வதுவை நாவல் - விமர்சனம் முத்து காளிமுத்து

எழுத்தாளர் ராம் பிரசாத்தின் “வதுவை” நாவலை வாசிக்கும் அனுபவம் அண்மையில் அமையப்பெற்றது. கண்டிப்பாக வித்தியாசமான கதைக்களம் கொண்ட நாவல்தான் இது.
திருமணத் தகவல் மையத்தில் வேலை பார்க்கும் கதையின் நாயகன் அர்ஜுனின் வேலை அனுபவமாக கதை நகர்கிறது. எழுத்தாளர் இதற்கு முன்பு ஏதாவது ஒரு திருமண மையத்தில் பல வருடங்கள் வேலை பார்த்தாரென்றா தெரியவில்லை. அவ்வளவு ஆழமான பார்வை இந்தத் துறையப் பற்றி. அர்ஜுன் மற்றும் அவன் உடன் வேலைபார்க்கும் அறை நண்பர்களான வினீத், கௌரவ், பாயல் மற்றும் ப்ரியா நடுவில் அர்ஜுனின் முதல் வரன் வேலை சம்பந்தமான உரையாடல்கள் எல்லாம் அழகான, சிந்திக்க வைக்கக்கூடியவை. கொஞ்சம் நகைச்சுவை கூடுதலாக கலந்து எழுதி இருக்கலாம், இன்னும் சுவையாக இருந்திருக்கும் வாசிக்க.
அழகான, ஒழுக்கமான, பன்முக திறமை வாய்ந்த ஆனால் மறுமண வரன் தேடும் கிருஷ்ணாவைத் தான் எத்தனை பெண்கள் நிராகரிப்பார்கள். ஒரு வரனுக்கே அத்தனை அலைச்சல், உழைப்பு அர்ஜுனுக்கு.
இன்னொரு கதாபாத்திரமான காதலனால் ஏமாற்றப்பட்ட ரம்யாவின் தற்கொலை முடிவு ஏமாற்றமாக இருந்தது. அதே மாதிரி கிருஷ்ணா-வனஜா சந்திப்பு, அவர்களுக்கிடையான உரையாடல்கள் என இன்னும் அதிகம் எழுதியிருக்கலாம்.
சராசரி மனிதர்களின் வரன்கள் பற்றிய எதிர்பார்புகள்தான் எத்தனை? எந்த மாதிரியான மணபொருத்தங்கள் அமைந்தால் குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் நல்லது என ஆசிரியரின் விளக்கங்கள் அருமை.
ஒரு சில குறைகள் இருந்தாலும், திருப்தியாகவே இருந்தது முழுக்கதை வாசிக்க. புதுப்புது கதைக்களதோடு எழுதிவரும் ராம் பிரசாத்தின் ஒன்பதாவது நாவல் இது. இன்னும் பல உயரங்கள் தொடுவார் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.
வதுவை - அருமை!