என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 21 September 2024

மரபணுக்கள் - விஞ்ஞானச் சிறுகதைகள் - புதிய நூல் வெளியீடு

 படைப்பு பதிப்பக வெளியீடாகவும் எனது பதினான்காவது நூலாகவும் "மரபணுக்கள்" என்ற தலைப்பிலான விஞ்ஞானப் புனைவுச் சிறுகதைத் தொகுதி நூல் வெளியாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் நண்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு வகையில், இது, தமிழ் நாடு அரசின் விருது பெற்ற விஞ்ஞானப் புனைவுச் சிறுகதை நூலான எனது 'வாவ் சிக்னல்' நூலின் தொடர்ச்சி எனலாம். அத்தொகுதியில் இடம்பெற்ற சிறுகதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள் தாம் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஒரே வித்தியாசம், இவைகளும் அறிவியல் புனைவுகள் தான் என்றாலும், மரபணுக்களை மையமாகக் கொண்ட பத்து சிறுகதைகளைக் கொண்ட நூல் என்பதுதான்.
எதிர்வரும் 28-09-2024 தேதியில் நடைபெற இருக்கும் படைப்பு சங்கமம் - 2024 நிகழ்வில், இந்த நூல் வெளியாக இருக்கிறது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் நிகழ்வில் பங்குபெறலாம்.
விழா நாள் : 28-09-2024
இடம்: Sir Pitty Thiyagaraya Hall
68, Gopathi Narayanaswami Chetty Road, Parthasarathi Puram, T. Nagar, Chennai- 600017
(Opposite Kannadasan Statue)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 வரை
மதிய உணவு: அரங்கத்திலேயே வழங்கப்படும்
தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ்: காலை மற்றும் மாலை
எனது நூலை வெளியிடும் படைப்பு பதிப்பகத்தாருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். எனது இந்தப் புதிய நூலுக்குத் தங்கள் நல்லாதரவை நல்கும்படி வாசக, மற்றும் எழுத்தாள நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.




Sunday, 15 September 2024

LayOff - இணைய நண்பர்கள் மன்னிக்கவும்.

 LayOff - இணைய நண்பர்கள் மன்னிக்கவும்.

***********************************************



சுற்றி எங்கிலும் லேஆஃப் நடந்துகொண்டிருக்கிறது. எனது சமீபத்திய LayOff அனுபவம் விசித்திரமானதும், என் வகையானதும் கூட.


பிப்ருவரி 12ம் தேதி தமிழக அரசு விருது அறிவிப்பு குறித்து தகவல் வந்தது. பிப்ருவரி 14ம் தேதி என் தந்தை என் சார்பாக விருதைப் பெற்றுக்கொண்டதெல்லாம் இணைய நண்பர்கள் அறிந்ததே. இணைய நண்பர்கள் அறியாதது, பிப்ருவரி 16ம் தேதி layoff செய்யப்பட்டதாக தகவல் வந்தது. அலுவலக மடிக்கணிணி வேலை செய்யவில்லை. அது ஒரு வெள்ளிக்கிழமை மாலை. 


எனக்கு இப்படித்தான் நடக்கும். என் அனுபவத்தில், என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்ததில் சில ஒற்றுமைகளை கவனித்திருக்கிறேன்.


1. அசந்தர்ப்பமான சூழல்களில் தான் நடக்க வேண்டிய விடயங்கள் நடக்கும்.

2. நல்ல விடயங்கள்/தகுதிப்பட்ட விடயங்கள் நடக்கும். ஆனால், தாமதமாக, அல்லது மிகத்தாமதமாக நடக்கும். ஆனால், நடக்கும்.


இதை என்ன சொல்வது என்று தெரியவில்லை. 2014ல் துவங்கிய உறவு அது. சுமார் ஒன்பதரை வருடங்கள் நீடித்து, சரியாக பிப்ருவரி 16ம் தேதி முடிவுக்கு வந்தது. நான் கான்ட்ராக்டர் என்பதால் முன்னறிவிப்பு, இரண்டு வார கெடு எதுவும் இல்லை. திடீரென்று layoff செய்துவிட்டார்கள். 90 பேர் வேலை பார்த்த ப்ராஜக்டில், இப்போது வெறும் 12 பேர்.


அதன் பிறகு மீண்டும் 12வது பொதுத்தேர்வுக்கு தயார் செய்ததையெல்லாம் நினைவுக்கு வரும் படி செய்துவிட்டது அதற்குப் பின்னான நேர்முகத்தேர்வுகளுக்கான தயாரிப்புகள். பிப்ருவரி இறுதிக்குள்ளாகவே ஒரு நிறுவனத்தில் ஆஃபர் வரை சென்றாகிவிட்டது. என்ன நடந்ததோ தெரியவில்லை. backed out. மீண்டும் தயாரிப்புகள்.


வேலைக்கு உலை வந்துவிட்டபிறகு என்ன எழுத? சிறுகதைகளிலோ, இலக்கியத்தின் எந்த வகைமையிலுமே வேலை செய்ய ஏற்ற மன அமைப்பு வாய்க்கவே இல்லை. அடுத்த வேலையைப் பெறும் வரை அந்த மனஅமைப்பு வாய்க்காது என்று தான் தோன்றியது. இணையம் பக்கமே வரமுடியவில்லை.  ஏன் நெடு நாட்களாக எதுவும் பகிரவில்லை என்று இணைய நண்பர்களிடமிருந்தெல்லாம் அவ்வப்போது அழைப்புகள், குறுஞ்செய்திகள் வரும். என்ன பதில் சொல்ல முடியும்? என் கவலைகளை மற்றவர்கள் மீது திணிக்க விருப்பமிருக்கவில்லை. 


தயாரிப்புகள். 16-17 மணி நேரம் தயாரிப்புகள். கண்கள் அயர்ந்து போகுமளவினதான தயாரிப்பு. இரண்டு கண்களும் எரியும். விளக்கெண்ணெய் தடவி படுத்த இரவுகள் பல. சில நேர்காணல்களிலிருந்து பதிலே இல்லை.  அதாவது ஏற்பு/மறுப்பு இரண்டுமே வராது. பல நேர்காணல்கள் கண்துடைப்பு நாடகம் என்று வெளிப்படையாகவே தெரிந்தன. இதில், அமெரிக்க வேலை வாய்ப்புச் சந்தையில் சில கள்ளப் பக்கங்களைக் கவனிக்க முடிந்தது. அது பற்றிப் பிறகு விலாவாரியாக எழுதுகிறேன். 


சற்றேறக்குறைய மேமாதம் தான் இறைவனின் அருளால் ஒரு Offer கிட்டியது.  'அப்பாடா!!' என்றிருந்தது.


பிப்ருவரி 16ல் தொலைந்த உறக்கம், சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகே நிம்மதியான உறக்கம் உறங்க முடிந்தது. அதன் பிறகே மீண்டும் இணையம் வர முடிந்தது. 'ஏன் நெடு நாட்களாக எதுவும் பகிரவில்லை?' என்று கேட்ட அனைத்து நண்பர்களின் அன்புக்கும் அனேகம் கோடி நன்றிகள். அப்போது எனக்கிருந்த சூழலை எல்லோரிடமும் பகிர்ந்து எல்லோரையும் அதனுள் இழுக்க விரும்பவில்லை. அதனால், எனக்குள்ளேயே வைத்துக்கொண்டேன், யாரிடமும் அதிகம் பகிரவில்லை. பல மாத மெளனத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன். 


இப்போதும் கிடைத்த, கிடைத்த வேலையில் செட்டில் ஆக மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்ட பின்னரே இதை எழுதும் மன அமைப்பு வாய்த்தது. இறைவனுக்கு நன்றிகள். இயற்கைக்கு நன்றிகள். 'விரும்பும்/எண்ணும் விடயங்கள் அனைத்தும் தாமதமாக நடக்கிறது' என்பதை மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 


இதற்கெல்லாம் என்ன பொருள் ? என்ன அர்த்தம்? இந்த இயற்கை அப்படி என்னதான் சொல்ல வருகிறது என்பதை இன்னமும் முழுமையாக விளங்கிக்கொண்ட பாடில்லை.


Monday, 9 September 2024

மகாவிஷ்ணு விவகாரம்

மகாவிஷ்ணு விவகாரம்



எதற்கெடுத்தாலும் ஆன்மீகம் சார்ந்து பதிலளித்துக் கேட்பவர்களைக் கவர்ந்து விடலாம் என்பதெல்லாம் அறிவியல் வளராத காலத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம். இக்காலத்திற்குப் பொருந்தாது.  பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் அந்தப் பள்ளியின் இரண்டு ஆசிரியர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. 


மகாவிஷ்ணு தனக்கிருந்த புரிதலையே சொல்லியிருந்தார் என்றால் அவரது புரிதல் தவறு தான். இப்படிச் சிந்திப்பவரை எப்படிப் பேச விட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.


உதாரணம் சொல்லலாம். பள்ளி கல்லூரிகளில் 'மேலிடத்திலிருந்து' ஒரு ஆலோசனை வழங்கப்படும். விதி என்றே சொல்லலாம். பள்ளி விழாக்களில் பேசுவதற்கு சில அமைப்புகளை வலிந்து சேர்த்துக்கொள்ளும் படி நிர்பந்திப்பார்கள்.


எக்ஸ் என்றொரு அமைப்பு என்று வைத்துக்கொள்ளலாம். இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. சம்பந்தா  சம்பந்தம் இல்லாமல் ஆஜர் ஆக விரும்புவார்கள். அதற்கேற்ப, பள்ளி கல்லூரிகளின் நடத்துனர்களுக்கு மறைமுகமாக நிர்பந்தம் அளிப்பார்கள். வெளி நாடுகளில் இருந்தால் நிர்பந்திப்பது சுலபம். 


சிலருக்கு 'ஆஜர் ஆவது என்பது' பாடல் பாடுவதாக இருக்கலாம். சிலருக்கு அது 'எழுத்தாளர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். சிலருக்கு அது 'கவிஞர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். சிலருக்கு 'மருத்துவர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். கோட் சூட் போட்டுக்கொண்டு கல்வியாளர்கள் சிந்தனாவாதிகள் பங்கேற்கும் அரங்கில் தாங்களும் பங்கேற்க வேண்டும் என்று கிளம்பிவிடுவார்கள்.


பாடகர் என்று அழைக்கப்பட நினைப்பவர் உண்மையில்  'All in all அழகுராஜா' திரைப்படத்தில் வரும் கதா நாயகி போலத்தான் கத்துவார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'அடடா என்னமாய்ப் பாடுகிறார்' என்று சொல்லும். கவிஞர் என்பார்கள். எதுகை மோனை தாண்டி பயணப்பட்டிருக்கவே மாட்டார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'அடடா! என்ன ஒரு கவிதை!' என்று சொல்லும் வகையினதாக இருக்கும். எழுத்தாளர் என்பார்கள். ஒரு வரி கூட இலக்கியப் பத்திரிக்கைகளில் எழுதியிருக்க மாட்டார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'என்னமா எழுதுறார்!' என்று இவர்களாகக் கிளப்பி விடுவார்கள். பார்க்கப்போனால், இப்படிச் சொல்லும் கூட்டத்தைத் தங்களைச் சுற்றி வைத்திருப்பது தான் இவரது ஒரே தகுதியாக இருக்கும்.  இவர்களைச் சேர்த்துக்கொள்ளும் படிதான் 'பரிந்துரை' மேலிடத்திலிருந்து வரும்.


ஆசிரியர்கள் யாராலும் மீறவும் முடியாது. அந்த வகையில் ஆசிரியர்கள் சூழ்நிலைக் கைதிகளே. கடனே என்று அவர்களும் செவிசாய்ப்பார்கள். வேறுவழியில்லை. இருக்கும் வேலையைத் தக்க வைக்க வேண்டுமே?


இந்த 'ஆஜர்' பார்ட்டிகளும், நிகழ்ச்சிக்கு முன், சில காணொளிகளைப் பார்த்தும், சிந்தனாவாதிகள் பேச்சைக் கேட்டும், 'தயாரித்துக்கொண்டு' வந்து பேசுவார்கள். எல்லாமே எங்கிருந்தோ சுட்டதாகத்தான் இருக்கும். சொந்தக் கருத்தெல்லாம் இல்லை. இது ஒரு பெரிய அக்கப்போர். இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாது.


பள்ளி நாட்களில், இது போல் வந்து பேசுபவர்கள் பேசுவதை மிகவும் கர்ம சிரத்தையாகக் கேட்டிருக்கிறேன். இப்போது, இந்த சிஸ்டம் எப்படி எல்லாம் இயங்குகிறது என்பதைப் பார்த்துவிட்ட பிறகு, ச்சீய் என்றிருக்கிறது.  விஜய் சேதுபதி சொல்வது போல் 'இவர்களையெல்லாம் அறிவாளிகள் என்று நினைத்ததுதான் நம் தவறு'.


எதில் வேண்டுமானாலும் , போலிகளை நிரப்பிக்கொள்ளுங்கள். அறிவுசார் துறைகளை விட்டுவிடுங்கள் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. என்னைக் கேட்டால் சில வழிமுறைகளைக் கையாளலாம். 


1. மகாவிஷ்ணுவிடம் கண்பார்வையற்ற ஆசிரியர் கேட்டது போல்,  இப்படி ஆஜர் ஆகும் கோட் சூட் போட்டவனிடமெல்லாம் திடீரென்று ஒன்றுக்கு பத்து கேள்விகள் கேட்டுத் திணற அடிக்க வேண்டும். போலிகள் மாட்டிக்கொள்ளும்.

2. இப்படி, துறைக்கு சிறிதும் தொடர்பில்லாத பக்குவப்படாத ஆட்கள் நுழைகிறார்கள் என்றால் உடன் பங்குபெறும் மற்றவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கலாம். ஆனால், இது எப்போதும் சாத்தியப்படுவதில்லை. 


கேள்வி கேளுங்கள். நாலு கேள்வி கேட்டால் தான் போலிகளுக்கும் பயம் வரும். அமைதியாக இருந்து அப்படி எதைத்தான் சாதிக்கிறீர்கள்? 


Wednesday, 28 August 2024

எதுக்காக சொல்றேன்னா....

"எது, இரண்டாவதாக வந்ததோ அது முதலில் வழக்கொழிவதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?" என்றேன் நான் திடமாக.

 - சோஃபி சிறுகதை, ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்ற சிறுகதை


மேற்கண்ட வரியை எனது சோஃபி சிறுகதையில் வாசகர்கள் வாசித்திருக்கலாம். 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜீரோ டிகிரி இலக்கியப் போட்டியில் தேர்வாகியிருந்தது. 


பெண்களுக்கு ஆதரவான கதை என்று ஒன்றிரண்டு பேர் குறிப்பிட்டார்கள். 'இனி ஆண்கள் தேவையில்லையா?' என்றெல்லாம் யூட்யூப் காணொளிகள் ஆங்காங்கே முளைத்தன. 


2024 ம் ஆண்டான நடப்பாண்டில் இப்போது Y க்ரோமோசோம் மெல்ல மெல்ல அழிவதாகவும், 4.5 மில்லியன் ஆண்டுகளில் முழுக்கவும் அழிந்துவிடும் என்றும் ஒரு செய்தி சமீபத்தில் இணையம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது.


எதுக்காக இதைச் சொல்றேன்னா, .........  அதுக்காகச் சொல்றேன்.. ஹிஹிஹி  

நோய் - சிறுகதைக்கு வந்த பின்னூட்டங்கள்

 நோய் - சிறுகதைக்கு வந்த பின்னூட்டங்கள்

நோய் - சிறுகதை






Sunday, 25 August 2024

'மனக்கணக்கு' -சிறுகதை - சொல்வனம்

 இந்த வாரம் சொல்வனம் 325வது இதழில் எனது சிறுகதையான 'மனக்கணக்கு',  வெளியாகியிருக்கிறது.

சொல்வனம் இதழில் சிறுகதையை வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.


https://solvanam.com/2024/08/25/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/





Saturday, 17 August 2024

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் மரணம் விவகாரம்

 கொல்கத்தா பயிற்சி மருத்துவர் மரணம் விவகாரம்

சில நாட்களுக்கு முன் அமெரிக்க முகநூல் சூழலில் பிரபலமான புகைப்படம் இது. ஒரு பள்ளி முன்பு ஒருவர் தொடர்ந்து பல மணி நேரங்கள் தொடர்ச்சியாக நிற்கவும் யாரோ சந்தேகப்பட்டு பள்ளி நிர்வாகத்தைத் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க, சம்பந்தப்பட்டவர் பள்ளிக் குழந்தைகளை யாரும் தவறாக வழி நடத்திவிடக்கூடாது என்பதை மேற்பார்வை பார்க்க தன்னார்வலராக நிற்பதாக பள்ளியில் அனுமதி பெற்று நிற்பவர் என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்தப் புகைப்படத்தைத் தொடர்ந்து பலர் 'இப்படி ஒருவர் முன்வருகிறார் எனில், அவருக்கு நான் ஒரு டாலராவது தருவேன்' என்று ஒருவர் சொல்ல, பின், அதைப் பலரும் சொல்லத்துவங்கினார்கள். அப்படி சொல்லிச்சொல்லித்தான் இந்தப் புகைப்படம் பிரபல்யமானது.
வேலைவாய்ப்பு குறைந்த நம் நாட்டில் இது போன்ற தீர்வுகளை மக்களுக்காக மக்களே செய்துகொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன். பணி ஓய்வு பெற்ற மிலிட்டரிக்காரர்களை, அலுவலகங்களிலும், பணக்கார வீடுகளிலும் காவல் வேலைக்கு வைத்துப் பார்த்திருக்கிறேன்.
கொல்கத்தா பெண் மருத்துவர் மரணச்செய்தி துயரமானது. தரம் குறைந்த மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தட்டிக்கேட்டு குடைச்சல் தந்ததால், அவரைத் திட்டமிட்டு இப்படி துர்மரணம் விளைவித்திருக்கிறார்கள் என்று இப்போது தெரிய வந்திருக்கிறது.
குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவன் நான்கு முறை திருமணம் செய்து நான்கு மனைவிகளும் அவனுடைய வக்கிரங்களில் வெறுத்து ஓடியவர்கள் என்பது புதிய செய்தி.
இவனைப் போன்றவர்களிடம் என்ன 'தகுதியை' காவல்துறை 'கவனித்து' அவனுக்கு ஊதியம் அளித்து 'பணியில்' அமர்த்தியது என்பது தெரியவில்லை.
தரம் வேண்டுமானால், Benchmark தேவை என்பதெல்லாம் புரிந்துகொள்ள நாம் இன்னும் எத்தனை அப்பாவிகளை பலிகொடுக்கப் போகிறோம் என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லா அமைப்புகளுமே 'தரம்' விடயத்திலும் 'Benchmark' விடயத்திலும் சோரம் போய் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்கிற பேருண்மையைக் காரணம் காட்டி காவல்துறையும், சம்பந்தப்பட்ட மருத்துவமனையும் தனக்கான சலுகையை இந்த அப்பாவிப்பெண்ணின் மரண விடயத்தில் பெற்று விடும். அதில் சந்தேகமே இல்லை.
வாழ்க, ஜனநாயகம். வாழ்க, Benchmarkகளைப் புறக்கணிக்கும் அமைப்புகள்.
எத்தனையோ நடந்துவிட்டது; எதுவும் நிற்பது போல் தெரியவில்லை; எதுவும் தீர்வை நோக்கிச் செல்வது போல் தோன்றவில்லை. மக்களே மக்களுக்காகக் களத்தில் இறங்குவது என்ற இடத்திற்கு அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளே வந்துவிட்டபோது முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு என்ன சொல்ல?
அமெரிக்காவில் ஐடி அலுவலகங்களில் அவரவர் நாடுகளில் கலாச்சாரங்கள் குறித்து அவரவரை வைத்து ஒவ்வொரு வாரமும் பத்து நிமிடங்கள் பேசச்சொல்வது நடக்கும். அது ஒரு ஆரோக்கியமான நடைமுறை தான். நம் முறை வரும்போது, நாம் இந்தியா குறித்துப் பேசுகையில் மற்ற நாட்டினர் முகத்தை உற்றுப் பார்க்க வேண்டிய உந்துதல் தானாக வந்துவிடுகிறது. யாரேனும் சிரிக்கிறார்களா? யாரேனும் நக்கலாகப் பார்க்கிறார்களா? என்று பார்க்க வேண்டி இருக்கிறது. மிகவும் கூச்சமாகவும், அவமானமாகவும் உணரும் தருணங்களாக இவைகள் அமைந்துதான் விடுகின்றன. எத்தனை நல்ல விடயங்கள் இருந்தாலும், இது போன்ற சில நிகழ்வுகளால் அந்த எந்த நல்லதுகளையுமே பெருமையாக சொல்லிக்கொள்ள முடிவதில்லை. அலுவலகத்திலுள்ள யாரையுமே என் நாட்டிற்கு ஒருமுறை வந்து என் கலாச்சாரத்தைப் பார் என்று தைரியமாகச் சொல்லிக்கொள்ள முடியவில்லை.
உடனே "ஹஹஹ பாஸ் ... அமெரிக்காவில் நடக்காததா" என்று யாரேனும் கேட்கலாம். இங்கே சமூகத்திற்கும் தீவிரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் இடையில் தான் பிரச்சனை. மக்களுக்கும் மக்களுக்கும் இடையே அல்ல என்பதை கவனிக்க வேண்டும்.
பிரச்சனை என்னவென்றால், கெட்டது செய்ய மக்களுக்குள் மக்களே கூடும் அளவிற்கு நல்லது செய்ய மக்களுக்குள் மக்கள் கூடுவதில்லை என்பதுதான். மலிவான தரம் குறைந்த மருந்துகளை விற்பனை செய்வதைக் கேள்வி கேட்ட இந்தப் பெண் மருத்துவர் பாதுகாப்பிற்கு நாலு பேர் கூடியிருந்தால் இந்த மரணத்தை, இந்த துர் சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்.
யாரோ கஷ்டப்பட்டு போராடிக்கொள்ளட்டும். அது பலன் தருகையில் அப்போது மட்டும் போய் அதில் குளிர் காய்ந்து கொள்ளலாம் என்கிற மிக மலினமான எண்ணம் மிகுத்த ஒரு நாட்டில் தான் எத்தனை ஹீரோயிச திரைப்படங்கள். அடடா? நாட்டைப் பற்றி பெருமையாக நினைத்துக்கொள்ளத்தான் எத்தனை நிரூபனங்கள்?
அரசாங்கம் மக்களுக்குத் தேவையானதைச் செய்யத்தான் இருக்கிறது என்கிற வாதமெல்லாம் சரிதான். மக்கள் தொகையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஒரு நாட்டில் எல்லா பிரச்சனைகளுக்கும் அரசை நாடுவதில் உள்ள நடைமுறைச்சிக்கல், கால விரயத்தைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு மக்களே நல்லது செய்ய முன்வரலாம், நமக்கான வாய்ப்புக்களை நாமே உருவாக்கிக்கொள்ளலாம். இத்தனைக்கும் மரணித்தவர் ஒரு மருத்துவர். நமக்கெல்லாம் சேவை செய்யவெனவே படித்தவர்.
கெட்டது செய்ய மக்களுக்குள் மக்களே கூடும் அளவிற்கு பலமடங்கு அதிகமாக நல்லது செய்ய மக்களுக்குள் மக்கள் கூடினால் மட்டுமே ஒரு நாடாக நாம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கு முடியும். அது நடக்காதபோது, ஒலிம்பிக் மெடல் பட்டியல், பாக்ஸ் ஆபீஸ் தரவுகள், கிரிக்கெட் தரவுகள், சந்திராயன் தரவுகளை மட்டுமே திரும்பத்திரும்பக் காட்டி இந்தியா நிமிர்ந்து நிற்பதாக கற்பனைக் கதைகளைக் கட்டிவிடாதீர்கள். இந்தியன் என்று சொல்லிக்கொள்ளவே கேவலமாக இருக்கிறது.
May be an image of 1 person
Like
Comment
Send
Share

Saturday, 27 July 2024

Honorable Mention Certificate - L. Ron Hubbard

 Honorable Mention

******************

Today, I received the 'Honorable Mention' certificate from L. Ron Hubbard Writers of the Future Contest 2024.

The envelope suggests that L. Ron Hubbard must have made good money writing science fiction in his time. Take a look yourself.

I am super glad to receive this certificate. Henceforth, I can toss it in corporate retreat events to answer questions like 
"Have you won or at least gone very close to winning a Prestigious American Award?"

As promised, here you go. 




Monday, 22 July 2024

நோய் - சிறுகதை - வாசகசாலை

 வாசகசாலை இதழில் எனது 'நோய்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்து வெளியிட்ட வாசகசாலை இதழின் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.


"“இங்கே மனிதர்களாகிய நாம் வாழ்கிறோம் என்று நினைக்கிறீர்களா?.. இல்லை.. உண்மையிலேயே இங்கே வாழ்பவர்கள் தாவரங்களும் மரங்களும்தான். இங்கே மட்டுமல்ல, இந்த பூமி முழுவதுமே அவைகளின் வாழ்விடம்தான்” என்றான் துலான்"...

சிறுகதையை வாசிக்கப் பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும்.




Friday, 12 July 2024

எழுத்தாள நண்பர்களின் கவனத்திற்கு: பாகம்2

எழுத்தாள நண்பர்களின் கவனத்திற்கு: பாகம் 2


ஆங்கில இதழ்களிலும் எழுதுவதால் சில நண்பர்கள் நான் ஏதோ ஆங்கிலத்துக்கு முன்னுரிமை தருவதைப் போலத் சித்தரிப்பதாகத் தெரிகிறது. வரிகளின் உள்நோக்கம் அதுவாக இருக்காது என்று நம்புகிறேன். ஆயினும், கேள்வி என்று வந்துவிட்டபிறகு தெளிவு படுத்துவதுதான் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.


1. புழங்கும் இடத்தில் நம் மரியாதை, நம்மை மற்றவர்கள் எப்படிப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதில் இருக்கிறது.. ஆங்கிலேயர்கள், தமிழ் தெரியாத ஆங்கிலம் தெரிந்தவர்கள் புழங்கும் இடத்தில் அவர்கள் மொழியில் நம் ஆக்கங்கள் இருந்தால், நம் திறன் என்ன என்பது அவர்களுக்கும் புரியும் என்பது ஒரு காரணம்.


2. நாம் எழுதும் எழுத்து சர்வதேச தரத்திலானது என்பதை எப்படி நிரூபிப்பது? அது உண்மையென்றால், அது சமகால ஆங்கில அறிபுனை இதழ்களில் வெளியாக வேண்டும். அல்லவா?


3. தமிழ் எழுத்துலகமும், தமிழ் வாசகர்களும் தமிழ் எழுத்தாளர்களை சிருமைப் படுத்தவே செய்கின்றன. அவனது ஆக்கத்தை, சிந்தனையைத் திருடுகின்றன. உரிய மதிப்பளிப்பதில்லை. தமிழ் எழுத்தை செல்லாக்காசாகத்தான் வைத்திருக்கின்றன. எந்த ஒரு முயல்வையும் அதற்கேற்ற மதிப்பும் வெகுமதியும் நியாயப்படுத்த வேண்டும், ஒரு தரமான வீடு கட்ட இருபது லட்சம் செலவாகும் எனும்போது இரண்டே லட்சத்தில் அதே வீடு கட்ட முடியும் என்று ஒருவர் செய்தால், அந்தக் கட்டுமானத்தின் தரம் குறித்து நாம் சந்தேகப்படவேண்டும் என்ற அடிப்படையிலிருந்து வரும் எனக்கு, தமிழ் எழுத்துச்சூழல் ஏமாற்றத்தையும், குழப்பத்தையும், சந்தேகத்தையுமே தருகிறது.


இக்குழப்பத்திலிருந்து தெளிவு பெற எனக்கு ஆங்கில ஊடகங்களே உதவுகின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. இப்போது நான் ஒரு paid writer.  நான் எழுதும் ஆங்கில ஆக்கங்களுக்கு டாலரில் ஊதியம் வழங்கப்படுகிறது. 


வடிவேலு ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு அடியாள் வந்து ஓரிடத்துக்குக் கூப்பிடுவார். அதற்கு வடிவேலு,

'இவ்ளோ தூரம் வந்தது போதாதா? இனி அங்குட்டு வேற வரணுமா?' என்பார். அதையே தான் நானும் சொல்ல விழைகிறேன். தமிழ் எழுத்துலகில் இதுகாறும் எழுதிய எல்லோரது ஆக்கங்களையும் வாசித்துவிட்ட பிறகு தான் ஒருவர் எழுத வரவேண்டும் என்றால், அதற்கு ஆயுள் போதாது. அதே போல, இதுகாறுமுள்ள எழுத்துத் தளங்கள், சிறப்பிதழ்கள், சிறப்புரைகள் எல்லாவற்றிலும் பங்குபெற்றுவிட்ட பிறகு தான் நம் எழுத்தை எழுத வேண்டும் என்றால் அதற்கும் ஆயுள் போதாது. 


ஏற்கனவே சொன்னது போல, எல்லா ஆரோக்கியமான தளங்களும் படி நிலைகள் இருக்கும். 

உள்ளூர் பதிப்பகங்கள் மற்றும் இதழ்கள், 

இவைகளை விட ஒரு படி மேலே வணிக இதழ்களில் இலக்கிய பக்கங்கள், 

அதனையும் விட ஒரு படி மேலே இலக்கிய இதழ்கள், 

அதனையும் விட ஒரு படி மேலே சிற்றிதழ்கள், 

அதனையும் விட ஒரு படி மேலே முன்னணி இலக்கிய இதழ்கள் இப்படி. 


நான் எழுதுவது அறிவியல் புனைவுகள். அதற்கு நாம் முன்னுதாரணங்களாக நிறுத்துவது Asimov,Analog,clarkesworld போன்ற ஆங்கில இதழ்களைத்தான். ஆக, மேற்சொன்ன வரிசையில் உச்சத்தில் ஆங்கில இதழ்களை வைக்க வேண்டி இருக்கிறது.  


சீர்கெட்ட துறைகளில் காணப்படும் லாபிக்கள், அரசியல்கள், 'வேண்டியவனா-வேண்டாதவனா' என்று பார்த்து அதனடிப்படையில் திறமை இருப்பது தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பது, உரிய வாய்ப்பை அளிக்காமல் மறுப்பது, கட்டம் கட்டுவது, ஒதுக்குவது ஆகியன தமிழ் எழுத்துலகுக்குள்ளும் இருப்பது மறுக்க முடியாத உண்மை.


சாதி மற்றும் அரசியல் நம்பிக்கைகள் வழி, திறமைசாலிகள் பின்னுக்கு தள்ளப்படுவது-திறமையற்றவர்கள் மேடையை அலங்கரிப்பதும் (நாங்களாக அழைக்க மாட்டோம். நீயாக மேடைக்குள் வம்படியாக நுழைந்து உனக்கான முக்கியத்துவத்தை நிலை நாட்டு என்பதும் ஒரு வகையில் இது தான்), திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர் போன்ற எழுத்துக்கடவுள்களை மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக்கொள்ளும் நம் தமிழ் சமூகத்திலும் நடந்துகொண்டு தானே இருக்கிறது. 


IT வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம் என்று ஓன்று இருக்கிறது. 

'சிறிய நிறுவனங்கள்',

அதற்கு மேல் 'பெரிய ஆனால், அறியப்படாத நிறுவனங்கள்',

அதற்கும் மேல் 'நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள்',

அதற்கும் மேல் 'FAANG  நிறுவனங்கள்' என்கிற படி நிலைகளில்

இருக்கும் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்க விடாமல், டீம் மேட்கள் சதி செய்தால், இதை விடப் பெரிய நிறுவனத்தில், தகுதியான ஊதிய மற்றும் பதவி உயர்வுடன் தாவி தன் திறமையை நிரூபித்தல் என்றொரு வழி இருக்கிறதே? அதைத்தான் இங்கேயும் கடைபிடிக்கிறேன்.


நான் மேற்சொன்ன படி நிலைகளில், நமக்கான மதிப்போ அங்கீகாரமோ கிடைக்காத பட்சத்தில் அதற்கடுத்த படிக்கு கடந்து போதல். அப்படி வந்து நின்ற இடமும் ஆங்கிலமாகத்தான் இருக்கிறது. 


என்ன செய்ய? 


தமிழில் தொடர்ந்து இயங்க, தமிழ்ச்சமூகம் உரியது செய்ய வேண்டும். இல்லையெனில், திறமை உள்ளவர்கள் 'கடந்து போய்க்கொண்டேதான்' இருக்க வேண்டி வரும். இதற்கு அர்த்தம், 'ஆங்கில முன்னுரிமை' இல்லை. சொந்த மொழியில், சொந்த இனத்தில், சொந்த இடத்தில், சொந்த மக்களால்  நேரும் திட்டமிட்ட கள்ளமெளனம், புறக்கணிப்பு, அப்புறக்கணிப்புக்கு எதிரான அஹிம்சா வழிப் போராட்டம், அப்புறக்கணிப்பைக் கடந்து போதல்....




பாகம் - 3, 4 கிற்கு தேவை எழுந்தால், நீட்டித்து எழுதுகிறேன்.