படைப்பு பதிப்பக வெளியீடாகவும் எனது பதினான்காவது நூலாகவும் "மரபணுக்கள்" என்ற தலைப்பிலான விஞ்ஞானப் புனைவுச் சிறுகதைத் தொகுதி நூல் வெளியாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் நண்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Saturday, 21 September 2024
மரபணுக்கள் - விஞ்ஞானச் சிறுகதைகள் - புதிய நூல் வெளியீடு
Sunday, 15 September 2024
LayOff - இணைய நண்பர்கள் மன்னிக்கவும்.
LayOff - இணைய நண்பர்கள் மன்னிக்கவும்.
***********************************************
சுற்றி எங்கிலும் லேஆஃப் நடந்துகொண்டிருக்கிறது. எனது சமீபத்திய LayOff அனுபவம் விசித்திரமானதும், என் வகையானதும் கூட.
பிப்ருவரி 12ம் தேதி தமிழக அரசு விருது அறிவிப்பு குறித்து தகவல் வந்தது. பிப்ருவரி 14ம் தேதி என் தந்தை என் சார்பாக விருதைப் பெற்றுக்கொண்டதெல்லாம் இணைய நண்பர்கள் அறிந்ததே. இணைய நண்பர்கள் அறியாதது, பிப்ருவரி 16ம் தேதி layoff செய்யப்பட்டதாக தகவல் வந்தது. அலுவலக மடிக்கணிணி வேலை செய்யவில்லை. அது ஒரு வெள்ளிக்கிழமை மாலை.
எனக்கு இப்படித்தான் நடக்கும். என் அனுபவத்தில், என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்ததில் சில ஒற்றுமைகளை கவனித்திருக்கிறேன்.
1. அசந்தர்ப்பமான சூழல்களில் தான் நடக்க வேண்டிய விடயங்கள் நடக்கும்.
2. நல்ல விடயங்கள்/தகுதிப்பட்ட விடயங்கள் நடக்கும். ஆனால், தாமதமாக, அல்லது மிகத்தாமதமாக நடக்கும். ஆனால், நடக்கும்.
இதை என்ன சொல்வது என்று தெரியவில்லை. 2014ல் துவங்கிய உறவு அது. சுமார் ஒன்பதரை வருடங்கள் நீடித்து, சரியாக பிப்ருவரி 16ம் தேதி முடிவுக்கு வந்தது. நான் கான்ட்ராக்டர் என்பதால் முன்னறிவிப்பு, இரண்டு வார கெடு எதுவும் இல்லை. திடீரென்று layoff செய்துவிட்டார்கள். 90 பேர் வேலை பார்த்த ப்ராஜக்டில், இப்போது வெறும் 12 பேர்.
அதன் பிறகு மீண்டும் 12வது பொதுத்தேர்வுக்கு தயார் செய்ததையெல்லாம் நினைவுக்கு வரும் படி செய்துவிட்டது அதற்குப் பின்னான நேர்முகத்தேர்வுகளுக்கான தயாரிப்புகள். பிப்ருவரி இறுதிக்குள்ளாகவே ஒரு நிறுவனத்தில் ஆஃபர் வரை சென்றாகிவிட்டது. என்ன நடந்ததோ தெரியவில்லை. backed out. மீண்டும் தயாரிப்புகள்.
வேலைக்கு உலை வந்துவிட்டபிறகு என்ன எழுத? சிறுகதைகளிலோ, இலக்கியத்தின் எந்த வகைமையிலுமே வேலை செய்ய ஏற்ற மன அமைப்பு வாய்க்கவே இல்லை. அடுத்த வேலையைப் பெறும் வரை அந்த மனஅமைப்பு வாய்க்காது என்று தான் தோன்றியது. இணையம் பக்கமே வரமுடியவில்லை. ஏன் நெடு நாட்களாக எதுவும் பகிரவில்லை என்று இணைய நண்பர்களிடமிருந்தெல்லாம் அவ்வப்போது அழைப்புகள், குறுஞ்செய்திகள் வரும். என்ன பதில் சொல்ல முடியும்? என் கவலைகளை மற்றவர்கள் மீது திணிக்க விருப்பமிருக்கவில்லை.
தயாரிப்புகள். 16-17 மணி நேரம் தயாரிப்புகள். கண்கள் அயர்ந்து போகுமளவினதான தயாரிப்பு. இரண்டு கண்களும் எரியும். விளக்கெண்ணெய் தடவி படுத்த இரவுகள் பல. சில நேர்காணல்களிலிருந்து பதிலே இல்லை. அதாவது ஏற்பு/மறுப்பு இரண்டுமே வராது. பல நேர்காணல்கள் கண்துடைப்பு நாடகம் என்று வெளிப்படையாகவே தெரிந்தன. இதில், அமெரிக்க வேலை வாய்ப்புச் சந்தையில் சில கள்ளப் பக்கங்களைக் கவனிக்க முடிந்தது. அது பற்றிப் பிறகு விலாவாரியாக எழுதுகிறேன்.
சற்றேறக்குறைய மேமாதம் தான் இறைவனின் அருளால் ஒரு Offer கிட்டியது. 'அப்பாடா!!' என்றிருந்தது.
பிப்ருவரி 16ல் தொலைந்த உறக்கம், சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகே நிம்மதியான உறக்கம் உறங்க முடிந்தது. அதன் பிறகே மீண்டும் இணையம் வர முடிந்தது. 'ஏன் நெடு நாட்களாக எதுவும் பகிரவில்லை?' என்று கேட்ட அனைத்து நண்பர்களின் அன்புக்கும் அனேகம் கோடி நன்றிகள். அப்போது எனக்கிருந்த சூழலை எல்லோரிடமும் பகிர்ந்து எல்லோரையும் அதனுள் இழுக்க விரும்பவில்லை. அதனால், எனக்குள்ளேயே வைத்துக்கொண்டேன், யாரிடமும் அதிகம் பகிரவில்லை. பல மாத மெளனத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
இப்போதும் கிடைத்த, கிடைத்த வேலையில் செட்டில் ஆக மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்ட பின்னரே இதை எழுதும் மன அமைப்பு வாய்த்தது. இறைவனுக்கு நன்றிகள். இயற்கைக்கு நன்றிகள். 'விரும்பும்/எண்ணும் விடயங்கள் அனைத்தும் தாமதமாக நடக்கிறது' என்பதை மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கெல்லாம் என்ன பொருள் ? என்ன அர்த்தம்? இந்த இயற்கை அப்படி என்னதான் சொல்ல வருகிறது என்பதை இன்னமும் முழுமையாக விளங்கிக்கொண்ட பாடில்லை.
Monday, 9 September 2024
மகாவிஷ்ணு விவகாரம்
மகாவிஷ்ணு விவகாரம்
எதற்கெடுத்தாலும் ஆன்மீகம் சார்ந்து பதிலளித்துக் கேட்பவர்களைக் கவர்ந்து விடலாம் என்பதெல்லாம் அறிவியல் வளராத காலத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம். இக்காலத்திற்குப் பொருந்தாது. பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் அந்தப் பள்ளியின் இரண்டு ஆசிரியர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
மகாவிஷ்ணு தனக்கிருந்த புரிதலையே சொல்லியிருந்தார் என்றால் அவரது புரிதல் தவறு தான். இப்படிச் சிந்திப்பவரை எப்படிப் பேச விட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
உதாரணம் சொல்லலாம். பள்ளி கல்லூரிகளில் 'மேலிடத்திலிருந்து' ஒரு ஆலோசனை வழங்கப்படும். விதி என்றே சொல்லலாம். பள்ளி விழாக்களில் பேசுவதற்கு சில அமைப்புகளை வலிந்து சேர்த்துக்கொள்ளும் படி நிர்பந்திப்பார்கள்.
எக்ஸ் என்றொரு அமைப்பு என்று வைத்துக்கொள்ளலாம். இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஆஜர் ஆக விரும்புவார்கள். அதற்கேற்ப, பள்ளி கல்லூரிகளின் நடத்துனர்களுக்கு மறைமுகமாக நிர்பந்தம் அளிப்பார்கள். வெளி நாடுகளில் இருந்தால் நிர்பந்திப்பது சுலபம்.
சிலருக்கு 'ஆஜர் ஆவது என்பது' பாடல் பாடுவதாக இருக்கலாம். சிலருக்கு அது 'எழுத்தாளர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். சிலருக்கு அது 'கவிஞர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். சிலருக்கு 'மருத்துவர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். கோட் சூட் போட்டுக்கொண்டு கல்வியாளர்கள் சிந்தனாவாதிகள் பங்கேற்கும் அரங்கில் தாங்களும் பங்கேற்க வேண்டும் என்று கிளம்பிவிடுவார்கள்.
பாடகர் என்று அழைக்கப்பட நினைப்பவர் உண்மையில் 'All in all அழகுராஜா' திரைப்படத்தில் வரும் கதா நாயகி போலத்தான் கத்துவார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'அடடா என்னமாய்ப் பாடுகிறார்' என்று சொல்லும். கவிஞர் என்பார்கள். எதுகை மோனை தாண்டி பயணப்பட்டிருக்கவே மாட்டார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'அடடா! என்ன ஒரு கவிதை!' என்று சொல்லும் வகையினதாக இருக்கும். எழுத்தாளர் என்பார்கள். ஒரு வரி கூட இலக்கியப் பத்திரிக்கைகளில் எழுதியிருக்க மாட்டார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'என்னமா எழுதுறார்!' என்று இவர்களாகக் கிளப்பி விடுவார்கள். பார்க்கப்போனால், இப்படிச் சொல்லும் கூட்டத்தைத் தங்களைச் சுற்றி வைத்திருப்பது தான் இவரது ஒரே தகுதியாக இருக்கும். இவர்களைச் சேர்த்துக்கொள்ளும் படிதான் 'பரிந்துரை' மேலிடத்திலிருந்து வரும்.
ஆசிரியர்கள் யாராலும் மீறவும் முடியாது. அந்த வகையில் ஆசிரியர்கள் சூழ்நிலைக் கைதிகளே. கடனே என்று அவர்களும் செவிசாய்ப்பார்கள். வேறுவழியில்லை. இருக்கும் வேலையைத் தக்க வைக்க வேண்டுமே?
இந்த 'ஆஜர்' பார்ட்டிகளும், நிகழ்ச்சிக்கு முன், சில காணொளிகளைப் பார்த்தும், சிந்தனாவாதிகள் பேச்சைக் கேட்டும், 'தயாரித்துக்கொண்டு' வந்து பேசுவார்கள். எல்லாமே எங்கிருந்தோ சுட்டதாகத்தான் இருக்கும். சொந்தக் கருத்தெல்லாம் இல்லை. இது ஒரு பெரிய அக்கப்போர். இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாது.
பள்ளி நாட்களில், இது போல் வந்து பேசுபவர்கள் பேசுவதை மிகவும் கர்ம சிரத்தையாகக் கேட்டிருக்கிறேன். இப்போது, இந்த சிஸ்டம் எப்படி எல்லாம் இயங்குகிறது என்பதைப் பார்த்துவிட்ட பிறகு, ச்சீய் என்றிருக்கிறது. விஜய் சேதுபதி சொல்வது போல் 'இவர்களையெல்லாம் அறிவாளிகள் என்று நினைத்ததுதான் நம் தவறு'.
எதில் வேண்டுமானாலும் , போலிகளை நிரப்பிக்கொள்ளுங்கள். அறிவுசார் துறைகளை விட்டுவிடுங்கள் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. என்னைக் கேட்டால் சில வழிமுறைகளைக் கையாளலாம்.
1. மகாவிஷ்ணுவிடம் கண்பார்வையற்ற ஆசிரியர் கேட்டது போல், இப்படி ஆஜர் ஆகும் கோட் சூட் போட்டவனிடமெல்லாம் திடீரென்று ஒன்றுக்கு பத்து கேள்விகள் கேட்டுத் திணற அடிக்க வேண்டும். போலிகள் மாட்டிக்கொள்ளும்.
2. இப்படி, துறைக்கு சிறிதும் தொடர்பில்லாத பக்குவப்படாத ஆட்கள் நுழைகிறார்கள் என்றால் உடன் பங்குபெறும் மற்றவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கலாம். ஆனால், இது எப்போதும் சாத்தியப்படுவதில்லை.
கேள்வி கேளுங்கள். நாலு கேள்வி கேட்டால் தான் போலிகளுக்கும் பயம் வரும். அமைதியாக இருந்து அப்படி எதைத்தான் சாதிக்கிறீர்கள்?
Wednesday, 28 August 2024
எதுக்காக சொல்றேன்னா....
"எது, இரண்டாவதாக வந்ததோ அது முதலில் வழக்கொழிவதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?" என்றேன் நான் திடமாக.
- சோஃபி சிறுகதை, ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்ற சிறுகதை
மேற்கண்ட வரியை எனது சோஃபி சிறுகதையில் வாசகர்கள் வாசித்திருக்கலாம். 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜீரோ டிகிரி இலக்கியப் போட்டியில் தேர்வாகியிருந்தது.
பெண்களுக்கு ஆதரவான கதை என்று ஒன்றிரண்டு பேர் குறிப்பிட்டார்கள். 'இனி ஆண்கள் தேவையில்லையா?' என்றெல்லாம் யூட்யூப் காணொளிகள் ஆங்காங்கே முளைத்தன.
2024 ம் ஆண்டான நடப்பாண்டில் இப்போது Y க்ரோமோசோம் மெல்ல மெல்ல அழிவதாகவும், 4.5 மில்லியன் ஆண்டுகளில் முழுக்கவும் அழிந்துவிடும் என்றும் ஒரு செய்தி சமீபத்தில் இணையம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது.
எதுக்காக இதைச் சொல்றேன்னா, ......... அதுக்காகச் சொல்றேன்.. ஹிஹிஹி
Sunday, 25 August 2024
'மனக்கணக்கு' -சிறுகதை - சொல்வனம்
இந்த வாரம் சொல்வனம் 325வது இதழில் எனது சிறுகதையான 'மனக்கணக்கு', வெளியாகியிருக்கிறது.
சொல்வனம் இதழில் சிறுகதையை வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.
Saturday, 17 August 2024
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் மரணம் விவகாரம்
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் மரணம் விவகாரம்
Saturday, 27 July 2024
Honorable Mention Certificate - L. Ron Hubbard
Honorable Mention
Monday, 22 July 2024
நோய் - சிறுகதை - வாசகசாலை
வாசகசாலை இதழில் எனது 'நோய்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்து வெளியிட்ட வாசகசாலை இதழின் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
"“இங்கே மனிதர்களாகிய நாம் வாழ்கிறோம் என்று நினைக்கிறீர்களா?.. இல்லை.. உண்மையிலேயே இங்கே வாழ்பவர்கள் தாவரங்களும் மரங்களும்தான். இங்கே மட்டுமல்ல, இந்த பூமி முழுவதுமே அவைகளின் வாழ்விடம்தான்” என்றான் துலான்"...
சிறுகதையை வாசிக்கப் பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும்.
Friday, 12 July 2024
எழுத்தாள நண்பர்களின் கவனத்திற்கு: பாகம்2
எழுத்தாள நண்பர்களின் கவனத்திற்கு: பாகம் 2
ஆங்கில இதழ்களிலும் எழுதுவதால் சில நண்பர்கள் நான் ஏதோ ஆங்கிலத்துக்கு முன்னுரிமை தருவதைப் போலத் சித்தரிப்பதாகத் தெரிகிறது. வரிகளின் உள்நோக்கம் அதுவாக இருக்காது என்று நம்புகிறேன். ஆயினும், கேள்வி என்று வந்துவிட்டபிறகு தெளிவு படுத்துவதுதான் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.
1. புழங்கும் இடத்தில் நம் மரியாதை, நம்மை மற்றவர்கள் எப்படிப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதில் இருக்கிறது.. ஆங்கிலேயர்கள், தமிழ் தெரியாத ஆங்கிலம் தெரிந்தவர்கள் புழங்கும் இடத்தில் அவர்கள் மொழியில் நம் ஆக்கங்கள் இருந்தால், நம் திறன் என்ன என்பது அவர்களுக்கும் புரியும் என்பது ஒரு காரணம்.
2. நாம் எழுதும் எழுத்து சர்வதேச தரத்திலானது என்பதை எப்படி நிரூபிப்பது? அது உண்மையென்றால், அது சமகால ஆங்கில அறிபுனை இதழ்களில் வெளியாக வேண்டும். அல்லவா?
3. தமிழ் எழுத்துலகமும், தமிழ் வாசகர்களும் தமிழ் எழுத்தாளர்களை சிருமைப் படுத்தவே செய்கின்றன. அவனது ஆக்கத்தை, சிந்தனையைத் திருடுகின்றன. உரிய மதிப்பளிப்பதில்லை. தமிழ் எழுத்தை செல்லாக்காசாகத்தான் வைத்திருக்கின்றன. எந்த ஒரு முயல்வையும் அதற்கேற்ற மதிப்பும் வெகுமதியும் நியாயப்படுத்த வேண்டும், ஒரு தரமான வீடு கட்ட இருபது லட்சம் செலவாகும் எனும்போது இரண்டே லட்சத்தில் அதே வீடு கட்ட முடியும் என்று ஒருவர் செய்தால், அந்தக் கட்டுமானத்தின் தரம் குறித்து நாம் சந்தேகப்படவேண்டும் என்ற அடிப்படையிலிருந்து வரும் எனக்கு, தமிழ் எழுத்துச்சூழல் ஏமாற்றத்தையும், குழப்பத்தையும், சந்தேகத்தையுமே தருகிறது.
இக்குழப்பத்திலிருந்து தெளிவு பெற எனக்கு ஆங்கில ஊடகங்களே உதவுகின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. இப்போது நான் ஒரு paid writer. நான் எழுதும் ஆங்கில ஆக்கங்களுக்கு டாலரில் ஊதியம் வழங்கப்படுகிறது.
வடிவேலு ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு அடியாள் வந்து ஓரிடத்துக்குக் கூப்பிடுவார். அதற்கு வடிவேலு,
'இவ்ளோ தூரம் வந்தது போதாதா? இனி அங்குட்டு வேற வரணுமா?' என்பார். அதையே தான் நானும் சொல்ல விழைகிறேன். தமிழ் எழுத்துலகில் இதுகாறும் எழுதிய எல்லோரது ஆக்கங்களையும் வாசித்துவிட்ட பிறகு தான் ஒருவர் எழுத வரவேண்டும் என்றால், அதற்கு ஆயுள் போதாது. அதே போல, இதுகாறுமுள்ள எழுத்துத் தளங்கள், சிறப்பிதழ்கள், சிறப்புரைகள் எல்லாவற்றிலும் பங்குபெற்றுவிட்ட பிறகு தான் நம் எழுத்தை எழுத வேண்டும் என்றால் அதற்கும் ஆயுள் போதாது.
ஏற்கனவே சொன்னது போல, எல்லா ஆரோக்கியமான தளங்களும் படி நிலைகள் இருக்கும்.
உள்ளூர் பதிப்பகங்கள் மற்றும் இதழ்கள்,
இவைகளை விட ஒரு படி மேலே வணிக இதழ்களில் இலக்கிய பக்கங்கள்,
அதனையும் விட ஒரு படி மேலே இலக்கிய இதழ்கள்,
அதனையும் விட ஒரு படி மேலே சிற்றிதழ்கள்,
அதனையும் விட ஒரு படி மேலே முன்னணி இலக்கிய இதழ்கள் இப்படி.
நான் எழுதுவது அறிவியல் புனைவுகள். அதற்கு நாம் முன்னுதாரணங்களாக நிறுத்துவது Asimov,Analog,clarkesworld போன்ற ஆங்கில இதழ்களைத்தான். ஆக, மேற்சொன்ன வரிசையில் உச்சத்தில் ஆங்கில இதழ்களை வைக்க வேண்டி இருக்கிறது.
சீர்கெட்ட துறைகளில் காணப்படும் லாபிக்கள், அரசியல்கள், 'வேண்டியவனா-வேண்டாதவனா' என்று பார்த்து அதனடிப்படையில் திறமை இருப்பது தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பது, உரிய வாய்ப்பை அளிக்காமல் மறுப்பது, கட்டம் கட்டுவது, ஒதுக்குவது ஆகியன தமிழ் எழுத்துலகுக்குள்ளும் இருப்பது மறுக்க முடியாத உண்மை.
சாதி மற்றும் அரசியல் நம்பிக்கைகள் வழி, திறமைசாலிகள் பின்னுக்கு தள்ளப்படுவது-திறமையற்றவர்கள் மேடையை அலங்கரிப்பதும் (நாங்களாக அழைக்க மாட்டோம். நீயாக மேடைக்குள் வம்படியாக நுழைந்து உனக்கான முக்கியத்துவத்தை நிலை நாட்டு என்பதும் ஒரு வகையில் இது தான்), திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர் போன்ற எழுத்துக்கடவுள்களை மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக்கொள்ளும் நம் தமிழ் சமூகத்திலும் நடந்துகொண்டு தானே இருக்கிறது.
IT வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம் என்று ஓன்று இருக்கிறது.
'சிறிய நிறுவனங்கள்',
அதற்கு மேல் 'பெரிய ஆனால், அறியப்படாத நிறுவனங்கள்',
அதற்கும் மேல் 'நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள்',
அதற்கும் மேல் 'FAANG நிறுவனங்கள்' என்கிற படி நிலைகளில்
இருக்கும் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்க விடாமல், டீம் மேட்கள் சதி செய்தால், இதை விடப் பெரிய நிறுவனத்தில், தகுதியான ஊதிய மற்றும் பதவி உயர்வுடன் தாவி தன் திறமையை நிரூபித்தல் என்றொரு வழி இருக்கிறதே? அதைத்தான் இங்கேயும் கடைபிடிக்கிறேன்.
நான் மேற்சொன்ன படி நிலைகளில், நமக்கான மதிப்போ அங்கீகாரமோ கிடைக்காத பட்சத்தில் அதற்கடுத்த படிக்கு கடந்து போதல். அப்படி வந்து நின்ற இடமும் ஆங்கிலமாகத்தான் இருக்கிறது.
என்ன செய்ய?
தமிழில் தொடர்ந்து இயங்க, தமிழ்ச்சமூகம் உரியது செய்ய வேண்டும். இல்லையெனில், திறமை உள்ளவர்கள் 'கடந்து போய்க்கொண்டேதான்' இருக்க வேண்டி வரும். இதற்கு அர்த்தம், 'ஆங்கில முன்னுரிமை' இல்லை. சொந்த மொழியில், சொந்த இனத்தில், சொந்த இடத்தில், சொந்த மக்களால் நேரும் திட்டமிட்ட கள்ளமெளனம், புறக்கணிப்பு, அப்புறக்கணிப்புக்கு எதிரான அஹிம்சா வழிப் போராட்டம், அப்புறக்கணிப்பைக் கடந்து போதல்....
பாகம் - 3, 4 கிற்கு தேவை எழுந்தால், நீட்டித்து எழுதுகிறேன்.








