என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 14 December 2011

காலி தேனீர் கோப்பை

காலி தேனீர் கோப்பை



மேஜையிலிருக்கும் காலி
தேனீர்க் கோப்பை
புதிதாக ஒரு பானத்தை
நிரப்ப மட்டும் நினைவூட்டவில்லை...

காலத்தே பருகப்படாத,
எஞ்சிய தேனீரை
சுத்தம் செய்யவும்
நினைவூட்டுகிறது...

சில மனிதர்களைப் போல‌...

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#ந‌ன்றி
உயிர்மை க‌லை இல‌க்கிய‌ இத‌ழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5099)

Monday, 12 December 2011

எங்கென்றே தெரியாமல்

எங்கென்றே தெரியாமல்



முக்கோண உலோகச்சுவர்களுக்குள்
சிறையிருக்கின்றன மணித்துளிகள்...

அவைகளின் இதயத்துடிப்பு
காற்றில் கரையும் எல்லைக்கப்பால்,
என் செவிகள் ,
ஒலிகளுக்காய் காத்திருக்கின்றன...

கைக்கெட்டும் எனக்கான கனவோ,
தேட விரும்பும் எனக்கான காதலோ,
விரும்பித்துவங்கும் எனக்கான நட்போ,
கடந்துபோகும் எனக்கான பிரயாணமோ,

இப்படி எத்தனையோ கூட
கைக்கடிகாரத்தை நீட்டியெடுத்து
காதோடு பொறுத்திக்கொள்ளும்
ஒற்றை இயக்கத்திற்காய் காத்திருக்கும்
கடிகார இதயத்துடிப்பொலிகளின்
இருப்பைப்போல
இன்னமும் எங்கென்றே தெரியாமல்...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#ந‌ன்றி
உயிர்மை க‌லை இல‌க்கிய‌ இத‌ழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5099)

Friday, 9 December 2011

பிழைகளின் முகம் - கவிதை

'பிழைகளின் முகம்' என்ற தலைப்பிலான என் கவிதை, கணையாழி கலை இலக்கியத் திங்களிதழ் டிசம்பர் 2011 இதழில் 66ம் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.



பிழைகளின் முகம் - கவிதை

தூரத்துக் காட்டுக்குயிலின்
மெல்லிசையில்
மயங்கிக்கிடந்தது அந்த‌
அடர்ந்த கானகமும்,
கவிந்த இருளும்...


இயற்கையின் மெல்லிசையில்
பிழை சேர்க்கும்
முயற்சிகளின்றிப்போதலில்
எத்தனை யதார்த்தம்...


கரிய பிசாசென ஆங்கொருவன்
உள் நுழைந்து தன் போக்கில்
மூங்கில் துளையிட்டூதி
முறையாகச்சேர்ந்த பிழைகளை
இசையென கூவிச்சென்றான்...


கானகம் முழுமைக்கும்
அதிர்ந்து ஒடுங்கியது
இயற்கை...


இந்த இயற்கை எத்தனை
மென்மையானது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
கணையாழி கலை இலக்கியத் திங்களிதழ் (டிசம்பர் 2011)

Monday, 28 November 2011

பிழைச்சமூக‌ம்


பிழைச்சமூக‌ம்


மண்ணைப் பிழிந்து
நீரை உரிஞ்சுகின்றன
ஆலமரத்தின் வேர்கள்...


தனக்கான நீரின்றி
துவள்கிறது அருகிலேயே
செவ்வாழையொன்று...


குடியோன் பசிக்கு
நிழலை அள்ளியள்ளித்
தந்துவிட்டு கைபிசைந்து
நிற்கிறது ஆலமரம்...

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
திண்ணை இணைய இதழ் (http://puthu.thinnai.com/?p=6403)

Monday, 24 October 2011

பிம்பங்களை மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

பிம்பங்களை மொழிபெயர்க்கும் வார்த்தைகள்


பிம்பங்களை மொழிபெயர்க்கும்
அசாத்திய வார்த்தைகளைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்...

பாதைகளில் இடரும் கற்களையொத்து
வார்த்தைக‌ளுக்க‌மையும்
க‌டிவாள‌ங்க‌ள் பிம்ப‌ங்க‌ளுக்கின்றிப்
போத‌லில் மீந்துவிடும் அந்த‌
ஏதோவொன்றை என்ன‌வென்று சொல்ல‌...

வார்த்தைக‌ளைப் பிசைந்து,
ஓர‌மாய் ந‌றுக்கி,
ந‌டுவே குழைத்து,
முதுகில் த‌ட்டி,
க‌ன்ன‌த்தில் கிள்ளி,

ஒருவ‌ழியாய் மொழிபெய‌ர்த்துவிட்டேன்
ஒரு பிம்ப‌த்தை...

சிந்திச்சித‌றி சேதாரமான
வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்
ஏதேதோ பிம்ப‌ங்க‌ள்
எட்டிப்பார்க்கின்ற‌ன‌....


#நன்றி
உயிர்மை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4917)

Monday, 19 September 2011

பிழைகளின் முகம்


பிழைகளின் முகம்

தூரத்துக் காட்டுக்குயிலின்
மெல்லிசையில்
மயங்கிக்கிடந்தது அந்த‌
அடர்ந்த கானகமும்,
கவிந்த இருளும்...

இயற்கையின் மெல்லிசையில்
பிழை சேர்க்கும்
முயற்சிகளின்றிப்போதலில்
எத்தனை யதார்த்தம்...

கரிய பிசாசென ஆங்கொருவன்
உள் நுழைந்து தன் போக்கில்
மூங்கில் துளையிட்டூதி
முறையாகச்சேர்ந்த பிழைகளை
இசையென கூவிச்சென்றான்...

கானகம் முழுமைக்கும்
அதிர்ந்து ஒடுங்கியது
இயற்கை...

இந்த இயற்கை எத்தனை
மென்மையானது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4799)

Wednesday, 14 September 2011

செத்துமடியும் ஒளி

செத்துமடியும் ஒளி


அன்னியப்பட்டிருக்கும் வராந்தையின்
அத்துவானப்பக்கமிருந்து குரூரக்கோபத்துடன்
எட்டிப்பார்க்கிறது விளக்கொளி...

இருளுக்கும் விளக்கொளிக்குமான
மெளனப்போரின் உச்சத்தில்
செத்துமடியும் விளக்கொளிப்பிண்டங்களை
கொத்தித்தின்ன வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன
கழுகாய் சில விட்டில்பூச்சிகள்...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Tuesday, 13 September 2011

உதிரும் மின்மினிகள்


உதிரும் மின்மினிகள்


ஆலமரத்தினடியில்
மழைக்குச் சில
ரயில் நிலையங்களும்
ஒதுங்கிவிடுகின்றன...

இரவு வானத்தைத் துளைத்துப்
புகும் பால்வெளிகளை
மின்மினியென‌ நினைத்து
கவர்ந்துவிடுகின்றன
ஆலம் இலைகள்...

இலைகளினின்றும் சொட்டுசொட்டாய்
உதிரும் மின்மினிகளை
கவனமாய்ச்சேகரிக்கிறது
தெளிந்த குட்டையொன்று...





- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

யாருமற்ற தண்டவாளம்


யாருமற்ற தண்டவாளம்


கவனிப்பார் யாருமின்றி
தனித்திருந்தது தண்டவாளம்...


இர‌வு வான‌த்தை துளையிட்டு
பால் வெள்ளை வ‌ண்ண‌த்தில்
திருட்டுத்த‌ன‌மாய் நுழைந்த‌ ஒளி
த‌ண்ட‌வாள‌த்தின் குறுக்கே விழுந்துகிட‌ந்தது
தற்கொலை செய்ய‌ இருக்கலாம்...

அதன் காரணங்களைப் பற்றி
யாதொரு அசூயையுமின்றி
மெளனித்திருந்தது இரவு...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

கவனிப்பாரின்றி



கவனிப்பாரின்றி


சுற்றிலும் இருளாய்
மத்தியில் வட்டவொளியென‌
இரவைப் போலவே
அரிதாரம் பூசியிருந்தது
அந்த ரயில் நிலையம்...


அனாதையாய் ரயில் நிலையத்திற்கு
காவலாய் நிற்கின்றன சில‌
மின் கம்பங்கள் அருகருகே...


மின் கம்பங்களின் தலையில்
வட்ட ஒளியைச்சுற்றிச்சுற்றி
விட்டில் பூச்சிகள் ரீங்கரிக்க‌
கீழே குட்டைத்தண்ணீரில்
குவிந்துகிடக்கிறது பாலொளி
கவனிப்பாரின்றி...


- ‍ ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)