என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday, 4 October 2010

இற‌க்கைகளுக்கான செய்முறை விளக்கங்கள்


இற‌க்கைகளுக்கான செய்முறை விளக்கங்கள்


வண்டுகளையொத்த இறக்கைகள் இன்றி
பறக்க முயற்சிக்கின்றன பூக்கள்...

வலுவில்லாத பூவிதழ்களால்
பெருமுயற்சிசெய்து இரண்டொரு முறை
பறக்கவும் செய்கின்றன அவைகள்...

தின்மை அடைத்த காற்றின்வெளி
பூக்களுக்காய் செய்த உதவிகள்
கரைந்து விடுகின்றன கவனிப்புகளின்றி...

புதுப்பித்த‌லின் ப‌டையெடுப்புக்க‌ளில்
ம‌ர‌ணித்துவிடும் வாச‌ங்க‌ளைப் ப‌ற்றிய
அக்க‌றைக‌ள் உயிருட‌ன் புதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌...

பூவிதழ்களுக்காய் வாச‌ங்க‌ளை மீட்டெடுக்கும்
இற‌க்கைகளுக்கான செய்முறை விளக்கங்களின்
ஒரு பகுதி வண்டுகளுடன் கிடைக்கலாம்...

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிரோசை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3462)

Monday, 13 September 2010

வேரை நோக்கிய‌ ப‌ய‌ண‌ம்


வேரை நோக்கிய‌ ப‌ய‌ண‌ம்


பூவொன்றின் காம்பை
ஊடுறுவி வேரை நோக்கி
பயணிக்கும் வாய்ப்பு
கிட்டியது...

பாலின சமத்துவத்தின் ஈரத்தில்
அது மண்ணை முட்டிக்
கொண்டிருந்தது...

மண்ணோ முட்டும்
வேரைச் சுற்றி
இறுகிக்கொண்டிருந்தது...

நான் இளகிய சேற்று நீரில்
என் தின்மையை
சோதித்துக்கொண்டிருந்தேன்...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
#நன்றி
உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3386)

Monday, 2 August 2010

பி.எம்.டபிள்யு என்ஜின் - சிறுகதை


பி.எம்.டபிள்யு என்ஜின் - சிறுகதை




'சரக்கு வந்தாச்சு. இந்த தடவ பி.எம்.டபிள்யு என்ஜின். பங்களூரின் ஹொசூர் வழியாக‌ சென்னைக்கு போகனும். ரொம்ப கெடுபுடி இருக்கும். ஆனா போயே ஆகணும். கை நீட்டி காசு வாங்கி குடி, குட்டின்னு ஏப்பம் விட்டாச்சு. இத பண்ணலனா நாளைக்குத் தொழில் பண்ணமுடியாது. அதனால இத பண்ணியே ஆகனும் பழனி'.

பெரியவர் சொல்லிவிட்டு பேச்சை நிறுத்தினார். அவர் பார்வை தரையை வெறித்திருந்தது. எதிரில் உட்கார்ந்திருந்த பாஸ்கர், பழனி இருவரையும் அவர் பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் வெறித்தபடி அமர்ந்திருந்தனர். பெரியவரை அன்றி மற்ற இருவர் கையிலும் எரிந்துகொண்டிருந்தன சிகரெட் துண்டுகள்.

வெகு நேர மெளனத்தை சட்டென கலைத்தான் பழனி.

'இந்த தடவ சரக்க நான் கைமாத்துரேன்'.

வெறித்துக்கொண்டிருந்த இடத்தையே பார்த்தபடியிருந்த அவன் முகத்தில் இப்போது லேசான புன்னகை இருந்தது.

பெரியவரும், பாஸ்கரும் ஒரே நேரத்தில் பழனியை திரும்பிப் பார்த்தனர். பெரியவர் தொடர்ந்தார்.

'எப்டி? ரொம்ப ரிஸ்கான வேலை. போலீஸ்க்கு நியூஸ் போயாச்சு. சல்லடை போட்டு தேடுவானுங்க. மாட்னோம் சங்குதான்'.

'மாட்ட மாட்டோம்னா. நான் பண்றேன்' திடமாய் பதிலளித்தான் பழனி.

'பண்றேன் பண்றேன்ங்கிறியே எப்டி பண்வ. உன்னால முடியுமா?'.

'முடியும்னா. ஆனா தனியா பண்ணமுடியாதுனா. ரெண்டு ஆளுங்க வேணும்'. மீண்டும் சொல்லிவிட்டு நிறுத்தினான் பழனி.

'சரி. ப்ளான் என்ன?'.

'ப்ளான் இருக்கட்டும்னா. யாரு அந்த ரெண்டு ஆளுங்க?' பழனி கொக்கிபோட்டான்.

'வேற யாரு, நானும், பாஸ்கரும்தான். இதுக்காக இன்னொருத்தனையா பங்குக்கு கூப்ட முடியும். ஏற்கனவே துட்டு சாப்ட்டாச்சு. நாங்க பாத்துக்குறோம். மேல சொல்லு. அப்பால?'.

'உன் இன்டிகா கார் சாவி குடுனா. அப்டியே அந்த பி.எம்னு ஏதோ சொன்னியே அந்த‌ என்ஜினையும் எடுத்தா. ரெண்டுத்தையும் நான் இப்போ கெளப்பிக்கினு போறேன். நீ நாளைக்கு வாணியம்பாடி போலீஸ் ஸ்டேஷன்ல வண்டியக் காணோம்னு ஒரு கம்ப்ளைண்ட் குடுத்துடுனா. மத்தத நான் பாத்துக்குறேன். நாளைக்கு ஒரு நாளைக்கு நீ எங்களுக்கு மாமா மாதிரி நடிச்சா போதும்.' பழனி ஒரே மூச்சில் சொல்லிவிட்டு எழுந்தான்.

'என்ன!! கம்ப்ளைன்ட் குடுக்குறதா!!. போலீஸ்கிட்டயா!! நாளைக்கா!!.. நாளைக்குதான் செக்கிங் பீக்ல இருக்கும். ஒனக்கு கிறுக்கு புடிச்...' பெரியவர் கார் சாவியை எடுத்து நீட்டியபடியே இழுக்க‌, அவசரமாய் இடைமறித்தான் பழனி.'

'என்ஜினை சென்னைக்கு கொண்டுவரது என் மேட்டருனா. நா மட்டுந்தான் வேலை பண்றேன்னு சொல்லிடுனா. எதனா ஆச்சுனா என் பொறுப்புனா. என்ஜின் எடுத்தானா'.

'ஹ்ம்ம்ச்ச்' ஒரு சலித்த உதட்டுச் சுளிப்புடன் ஒரு நொடி யோசித்த பெரியவர் தொடர்ந்தார்.

'டேய் பாஸ்கர், அத்த எடுத்தாந்து இன்டிகா பின் சீட்ல வச்சிட்றா. பாரு பழனி, உன் பொறுப்பு. நீ மட்டும்தான் பண்றனு ராவுத்தர்ட்ட சொல்லப்போறேன். சரக்கு போலனா நீ திருடிட்டதாதான் ராவுத்தர் நினைப்பான். நீ எந்த ஜில்லால இருந்தாலும் கத்தி உன்ன தேடிவரும். சொல்லிட்டேன் சொல்லிட்டேன்'.

கேட்டுக்கொண்டிருந்த பழனியின் முகம் சாந்தமாய் எல்லாம் தெரியும் என்பது போல் இருந்தது.

*******************************************
ஆம்பூரில் நேதாஜி ரோட் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் சன்னல் கதவு மறைவில் இறங்கி நின்றுகொண்டு பாக்கேட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி பற்ற வைத்து இரண்டு இழுப்பு இழுத்துவிட்டார் ஏட்டு மாணிக்கம். அவரின் பார்வை சற்று தள்ளி நிறுத்தியிருந்த ஒரு டாடா இன்டிகா காரில் நிலைத்தது.

'யோவ் வேலு, என்னய்யா புது வண்டியா இருக்கு. என்ன கேஸ் இது' எரிச்சல் கலந்த வெறுப்பு கலந்திருந்தது அவரின் குரலில்.

'ஆங், அதுவா, நேத்து சாயந்திரம் அந்த வாணியம்பாடி ஏரியா பெரியவரு கம்ப்ளய்ன்ட் குடுத்தார்ல, அவரோட கார காணோம்னு. அதான் இது. ரெண்டு பசங்க தள்ளிகிட்டு வந்திருக்கானுங்க. கார்ல ஏதோ கோளாறு. பாதில நின்னுடுச்சு. திருட்டு வண்டினு தெரிஞ்சதுக்கப்புறம் நம்ம ஏரியாவா இருந்தா என்ன, அடுத்த ஏரியாவா இருந்தா என்ன‌?. அதான் டோப் பண்ணி புடிச்சிட்டு வந்துட்டேன் சார்'.

வேலு இப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாசலில் அவசரமாய் ஒரு சுமோ வந்து நின்றது. வாடகை வண்டி போலிருந்தது அது. அதிலிருந்து இறங்கிய அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் விறுவிறுவென ஸ்டேஷனுக்குள் வந்துகொண்டிருந்தார்.

சற்று தொலைவில், என்.ஹெச்.46 ல், ஏனைய போலீஸ்காரர்கள் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி செக் செய்து கொண்டிருக்க, முன் தினம் இன்டிகாவை டோப் செய்து வந்த வண்டி இப்போது ஒரு அரைவட்டம் அடித்துத் திரும்பி, ஒற்றையடிப்பாதையையும் விட அகலத்தில் சற்றே பெரியதான, ஆனால், தார் ரோடு அல்லாத ஒரு பாதை வழியே இறங்கி வேறொரு காரை டோப் செய்யச் சென்றது. போலீஸ் செக்கிங் இல்லாத‌, இன்டிகாவை இழுத்து வந்த பாதை வழியே விரைவதைப் மாணிக்கம் பார்த்துக்கொண்டிருக்க‌, பெரியவரைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார் வேலு.

'சார் சார் வாங்க வாங்க இப்போதான் உங்களப்பத்தி பேசிக்கிட்டிருந்தேன். உங்க கார் இதானா பாருங்க'.

வந்தவர் இன்டிகா காரை அருகில் சென்று ஏற இறங்க சுற்றிலும் பார்த்துவிட்டு கத்தினார் 'அடப்பாவிங்களா, பொண்ணு மாதிரி வச்சிருந்தேன் சார். கோடு போட்ருக்கானுங்க சார். என்னோடதுதான் சார். எங்க சார் கிடச்சிது. எவன் சார் அந்த நாதாரி?'. பெரியவர் அவார்டு ஃபிளிமை மிஞ்சிக்கொண்டு நடித்தார்.

'பொறுங்க பொறுங்க கோவப்படாதீங்க. உங்களோடதுதானே. அப்றம் என்ன. வாங்க. இங்க ஒரு கையெழுத்து போடணும் நீங்க. இப்படி வாங்க' என்றபடியே அவரை உள்ளே அழைத்துப்போனார் வேலு.

'எங்க‌ வேணா போட‌றேன் சார். யார் சார் அவ‌னுங்க‌. இவ‌னுங்க‌ள எல்லாம் தூக்குல‌ போட‌ணும் சார். தூக்குற‌துக்கு என் கார் தான் கிடைச்சிதா. இந்த‌ கார‌ வாங்க‌ எவ்ளோ க‌ஷ்ட‌ப்ப‌ட்ருப்பேன். ரெண்டு நாளைக்கு என் கார‌ என‌க்கே இல்ல‌னு ஆக்கிட்டானுங்க‌ளே சார். யார் சார் அவ‌னுங்க‌' அவ‌ர் ஸ்டேஷ‌னுக்குள் நுழைந்த‌ப‌டியே ஆக்ரோஷமாய் உறுமிக்கொண்டிருந்தார். கொஞ்ச‌ம் விட்டாலும் யாரென்று பார்த்துக் க‌டித்து குத‌றிவிடுவார் போலிருந்த‌து வேலுவிற்கு.

'தோ இவிங்க‌ தான் சார் அவிங்க‌'

வேலு காட்டிய‌ திசையில் பார்த்த‌வ‌ருக்கு அதிர்ச்சி.

'டேய் பாஸ்க‌ர், ப‌ழ‌னி, என்ன‌டா ப‌ண்றீங்க‌ இங்க' பெரியவர் கத்தியே விட்டார்.

'ஆங் மாமா...அது வந்து... ம்ம்ம்ம்ம்' அவர்கள் இருவரும் மென்று முழுங்கினார்கள்.

இப்போது வேலு அதிர்ச்சியாய் பார்த்துக்கொண்டிருக்க வந்தவருடன் பாஸ்கரும், பழனியும் கட்டிக்கொண்டு புலம்பிக்கொண்டிருந்தனர். என்ன நடக்கிறதென்று பார்த்தபடி வேலு அமைதியாய் நின்றிருந்தார். அவருக்கு ஓரளவு புரிந்து விட்டது. மாமனின் வண்டியை, சொல்லாமல் கொள்ளாமல் எடுத்து வந்தவர்களை மடக்கி ஸ்டேஷனில் வைத்திருந்திருக்கிறோமென்று.

தவறு நம்முடையது அல்ல. வந்தவர் நேற்று வாணியம்பாடி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெயின்ட் கொடுத்திருந்தார். வாக்கிடாக்கியில் மெஸேஜ் வந்தது. அதே வண்டி. அதே நம்பர். பார்த்ததும் மடக்கியாகிவிட்டது. இதென்ன ஜோஸியமா, யாருக்கு யார் உறவு என்று பார்த்ததும் கண்டுபிடிக்க. இதற்காக எத்தனை மெனக்கெட வேண்டியிருந்தது. வண்டியை பார்த்தது என். எச் 7 ஹொசூர் கர்னாடகா எல்லைக்குள். பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் போயிருந்தாலோ அல்லது தேசிய நெடுஞ்சாலை வழியே டோப் செய்திருந்தாலோ செக்கிங்கில் மாட்டி, அவர்களின் கேஸாக்கியிருப்பார்கள். அவர்கள் கேஸாகிவிட்டால் தன் பெயர் வராது. வராவிட்டால் எப்படி இந்த வருடம் ப்ரமோஷன் வாங்குவது. தன் கேஸாக இருக்கவேண்டும் என்றுதான், தேசிய நெடுஞ்சாலை வழியே வராமல் ஒதுங்கி வந்தது. போகிற போக்கைப் பார்த்தால் இந்த கேஸு புஸ்ஸாகிவிடும் போல என்று எண்ணியபடியே பார்த்துக்கொண்டிருந்தார் வேலு. சற்றைக்கெல்லாம் அவர்களுக்குள் ஏதேதோ கிசுகிசுத்துக்கொண்டுவிட்டு பெரியவர் அவர்களை சாந்தப்படுத்திவிட்டு வேலுவிடம் திரும்பினார்.


'சார், நம்ம பயக தான். சொல்லாம கொண்டுவந்துட்டானுங்க சார். இவனுங்க எப்பவுமே இப்படிதான் சார். பெரிய தலைவலி சார். ரெண்டு சாத்து சாத்தினாதான் சரிவரும். பாவம் உங்களுக்கு தான் சிரமம் கொடுத்திட்டோம். அவுங்க சார்புல நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் சார். வெரி சாரி சார். நான் குடுத்த கம்ப்ளெயின்ட வாபஸ் வாங்கிக்கிறேன் சார்' என்றார் பெரியவர்.


வேலுவிற்கு சப்பென்றது. இந்தக் காருக்கு ஊரெல்லாம் தேடி அலைந்து, ஹைவேஸில் நிறுத்தியிருந்த காரைப் பார்த்ததும் மடக்கி, முன் சீட், பின் சீட், டிக்கி என்று முழுக்க செக் செய்து ஓடாத காரை டோப் செய்து கொண்டுவந்து ஸ்டேஷனில் நிறுத்தினால், சர்வ சாதாரணமாக கம்ப்ளெயிண்ட் வாபஸ் வாங்குகிறேன் என்கிறான்கள். ம்ம்ம்ம் எல்லாம் தலையெழுத்து என்று சலித்துக்கொண்டபடியே கம்ப்ளெயின்ட் வாபஸ் பெறுவதாக எழுதி கையழுத்து வாங்கிக்கொண்டு நகர்ந்தார் வேலு.


அந்த பெரியவர் இருவரையும் ஸ்டேஷனிலேயே தலையிலும் புரடியிலும் அடித்து திட்டியபடி வாசலுக்கு விரட்டிக்கொண்டிருந்ததை எனக்கென்ன என்றபடியே ஒரு கணம் அலட்சியமாய் பார்த்துவிட்டுத் தன் வேலையில் மூழ்கிப்போனார். அவர்கள் தயாராய் கொண்டுவந்திருந்த சுமோவில் இன்டிகாவை சங்கிலியால் பிணைத்து , பாஸ்கரும் பெரியவரும் சுமோவில் ஏறிக்கொள்ள, பழனி இன்டிகாவில் உட்கார்ந்துகொண்டு ஓட்டிக்கொண்டு போக, இப்போது இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஸ்டேஷனுக்குள் நுழைந்திருந்தார்.


'இதோ பாருங்கய்யா, பி.எம்.டபிள்யூங்குறது ரொம்ப காஸ்ட்லி கார். விலை ஐம்பது லட்சம் இருக்கும். அதோட இஞ்சின் மட்டுமே சுமாரா முப்பது லட்சம் இருக்கும். அத எந்தக் களவானிப் பயலோ பங்களூர்லேர்ந்து லவட்டி வேலூர் வழியா சென்னைக்கு கொண்டு போகப் பாக்கறான்னு நியூஸ் கிடைச்சிருக்கு. நம்ம கிரிமினல்ஸ் லிஸ்ட தரோவா செக் பண்ணியாச்சு. நம்ம மாரிய கூடக் கேட்டுட்டேன். அவன் லோக்கல் ஆளா இருக்கவே முடியாதுன்னு சத்தியம் பண்றான். வேற எவனோ தான் பண்றான்.அலர்ட்டா இருக்கணும். ஒரு வண்டி விடக்கூடாது. புரியிதா. தரோவா செக் பண்ணுங்க போங்க. போய் வேலையப் பாருங்க. வேலு, அந்த ஃபைல பாத்துட்டீங்கல. எதாச்சும் க்ளூ கிடைச்சிதா?'

இன்ஸ்பெக்டர் சுந்தரம் நட்ட நடு ஸ்டேஷனில் நின்று உருமத்துவங்கியிருந்தார்.

*******************************************

சுமோ வேகமெடுக்க, இன்டிகா பின் தொடர‌ வண்டிகள் இரண்டும் ஆம்பூர் வாணியம்பாடி தாண்டி, வேலூரை நோக்கி வேகமெடுத்தது. வேலூருக்கு 3 கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறம் திரும்பி 1 கிலோமீட்டர் சென்று ஒதுக்குபுறமாய் ஒதுங்கியிருந்த ஒரு வீட்டின் முன் நின்றது சுமோ. நின்ற வண்டியிலிருந்து ஆர்வமாய் இறங்கிய பாஸ்கரும், பெரியவரும் சுமோவுடன் பிணைத்திருந்த இன்டிகாவை தனியே பிரித்துவிட்டனர்.

பெரியவர் அவசரமாக இறங்கி, இன்டிகா காரின் பின் சீட், டிக்கி கதவுகளை திறந்து பார்க்க, காலியாக இருந்தது.

'டேய் பழனி, என்ஜின் எங்க?'. பெரியவர் பரபரத்தார்.

பழனி, இன்டிகாவின் பானட்டை திறக்க, உள்ளே சற்றும் பொறுத்தமில்லாமல், இன்டிகா காரின் இதர உதிரிபாகங்களுடன் இன்டிகா என்ஜின் இருக்கவேண்டிய இடத்தில் பி.எம்.டபிள்யு என்ஜின் கண்சிமிட்டியது.


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)


#நன்றி
உயிர்மை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3231)
திண்ணை இலக்கிய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=11008013&format=html)

Thursday, 15 July 2010

பிழைப்ப‌டிம‌ங்க‌ள்


பிழைப்ப‌டிம‌ங்க‌ள்

இரவுகள் நீண்டிருப்பதாய்
ஒரு குறிப்பெழுதிவிடுகிறது மனம்...
இரவுடன் பிரயாணப்பட‌
த‌லைப்ப‌டுகையில்...

இர‌வுக‌ள் இதை எண்ணியெண்ணி
மெளனமாய் சிரிக்கின்ற‌ன
ஆழ்பிர‌ப‌ஞ்ச‌ம் போல‌...

தெளிந்த‌ நீரோடைக்க‌டியில்
தெரியும் கூழாங்க‌ற்க‌ளை ஒத்த‌
காட்சிப்ப‌டிம‌ங்க‌ள் காட்சிப்பிழையாக‌வும்
இருக்க‌லாமென்ப‌தே உண்மை...

- ராம்ப்ரசாத்

#நன்றி
உயிர்மை இலக்கிய இதழ் (http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3142)

Wednesday, 23 June 2010

நிசப்தங்களைக் கிழித்துவிடும் சொற்கள்

நிசப்தங்களைக் கிழித்துவிடும் சொற்கள்

மிச்சமின்றி தன்னை
நிறைத்துக்கொண்டது நிசப்தம்
நானிருந்த அறைக்குள்...

ஒற்றைப்புள்ளியில் மையல்
கொண்டுவிட்ட விழிகளின்முன்
கடந்துபோன நிகழ்வுகளின்
அணிவகுப்பு...

நிசப்தங்களைக் கிழித்துவிடும்
சொற்களை எதிர்னோக்கி
பயணிக்கிறது என் தனிமைகள்...

அந்தச் சொற்கள்
மலரப்போகும் இதழ்கள்
எப்போது வேண்டுமானாலும்
வந்துவிடலாமென்று காத்திருக்கிறேன் நான்...

- ராம்ப்ரசாத், சென்னை ( ramprasath.ram@googlemail.com)

நன்றி
கீற்று இலக்கிய இதழ்
வல்லினம் சமூக கலை இலக்கிய இதழ்

Wednesday, 31 March 2010

கொட்ட‌ப்ப‌டும் வார்த்தைக‌ள்...

என் இக்கவிதையை வெளியிட்ட வார்ப்பு இணைய இதழுக்கு என் நன்றிகள்...
http://www.vaarppu.com/view/2130/



கொட்ட‌ப்ப‌டும் வார்த்தைக‌ள்...


கானல் நீர் காரணிகளால்
உருவாகும் மேடு பள்ளங்களை
சமன்படுத்தவே கொட்டப்படுகின்றன
வார்த்தைகள்...

உடைத்தெறியப்படும் மனச்சுவர்கள்
மட்டுமே அறியும் வார்த்தைகளின்
கூர்மை...

மேடுப‌ள்ள‌ங்க‌ள் ச‌ம‌ன்ப‌ட்டாலும்
உடைந்த‌ சுவ‌ர்க‌ளை
பூச என்றுமே முடிவ‌தில்லை...

உடைந்த‌வைக‌ள்
உடைந்த‌வைக‌ளே...

உடைந்த‌ சுவ‌ர்க‌ள்
சித்திர‌ங்க‌ள் தாங்குவ‌து
சிக்க‌லான‌ ஒன்று...

கோடுக‌ளையும் வண்ண‌ங்க‌ளையும்
துணைக்க‌ழைத்தே
விரிச‌ல்க‌ளை ம‌றைக்க‌
முடிகிற‌து...

சுவ‌ர்க‌ள் ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டால்
விரிச‌ல்களும் தாங்கும்
சித்திர‌ங்க‌ளும் தாங்கும்...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Wednesday, 24 February 2010

தோழியாகவே இருந்துவிடேன்

என் இக்கவிதையை வெளியிட்ட நிலாச்சாரல், பதிவுகள் இணைய இதழுக்கு என் நன்றிகள்...
http://www.nilacharal.com/ocms/log/03081019.asp
http://www.geotamil.com/pathivukal/poems_march2010.htm


தோழியாகவே இருந்துவிடேன்

நீ என்ன
என்பதில் இன்னமும்
நிலவுகிறது எனக்குள்
ஒரு குழப்பம்...

மூடியே இருக்கிறாய்...
பலவந்தமாய் உன் இதழ்
பிரிக்க எனக்கு விருப்பமில்லை...

தானாய் விரிந்து விட‌
உனக்கும் வரவில்லை...

இப்படிச் செதுக்கலாம் உன்னையென‌
நான் யத்தனிக்கையில்
எப்படியாயினும் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் சிதைந்தே
போகலாம்...

நல்லவேளை
என்னிடமிருந்த முத்து மணிகள்
இன்னமும் என்னிடத்திலேயே...

தோழியாகவே இருந்துவிடேன்
நாம் செல்லும் சாலை
எங்காவது பிரிகிறதா பார்ப்போம்...

- ராம்ப்ரசாத், சென்னை (ramprasath.ram@googlemail.com)

Saturday, 17 October 2009

ப‌டுக்கைய‌றைக் கொலை - 3

ப‌டுக்கைய‌றைக் கொலை - 3


ஊருக்கு தெரிய வேண்டாத துன்பத்தை சுமந்தபடி சன்னமாய் அழுதது அந்த வீடு. நடு வீட்டுல் கயிற்றுக்கட்டிலில் எலும்பும் தோலுமாய் வற்றிப்போய் சுயநினைவின்றி கிடந்தார் அப்பா. மாரடைப்பு. இன்னும் நினைவு திரும்பவில்லை. கட்டிலருகே அழுதபடி துவண்டு கிடந்தாள் அம்மா. சற்று தள்ளி, தன் இருகால்களினிடையே முகம் புதைத்து விம்மிக்கொண்டிருந்தாள் புவனா.

இதற்கெல்லாம் காரணம் வைரவன். ஊரில் முக்கிய புள்ளி. தோட்டம் வயல்வெளி என்று பரம்பரை சொத்து ஏராளம். 38 வயதுக்குமேலும் திருமணம் செய்யாமல் ஊரெல்லாம் வப்பாட்டி வைத்து, புடுபுடுவென புல்லட் சத்தம் காதைக்கிழிக்க பவனி வரும் ஒரு உதவாக்கரை. ஏழ்மை காரணமாக புவனா அதே ஊரில் ஒரு கருவாடு, இரால் பண்ணையில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாள். என்ன‌தான் இரால் ப‌ண்ணையில் வேலை என்றாலும் புவ‌னாவிற்கு ம‌ன‌சு ரொம்ப‌ பெருசு. த‌ன்னால் முடிந்த‌வரை, யாரென்றும் பாராமல் தைரியமாய் எல்லோர்க்கும் உத‌வுவாள். அதே ஊரில் பைத்திய‌மாய்த் திரிந்து கொண்டிருந்த மஞ்சு என்ற ஒரு பெண்ணை ஒரு ம‌ழை நாளில் சில‌ பொறுக்கிக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்பார்க்க‌, அதைத் த‌ந்திர‌மாய்த் த‌டுத்து அவ‌ளை அன்று முத‌ல் பாதுகாப்பாய் த‌ன் வீட்டிலேயே த‌ங்க‌ வைத்த‌வ‌ள். என்ன‌தான் ம‌ஞ்சுவிற்கு பைத்திய‌ம் தெளிந்தாலும், ஊர் ந‌ம்ப‌ ம‌றுக்க‌ த‌ன் ச‌கோத‌ரியாய் அவ‌ளைத் த‌ன் ஒத்தாசைக்கு என்று கார‌ண‌ம் சொல்லித் த‌ன்னுட‌னேயே வேலைக்கு வைத்துக்கொண்டாள். வீடுவீடாய் ட்ரை சைக்கிளில் சென்று இரால், க‌ருவாடு விற்ப‌துதான் வேலை. ம‌ஞ்சுவும் புவ‌னாவும் மாறி மாறி செய்வார்க‌ள்.


உதவி கேட்க ஆயிரம் பேர் இருந்தும் ஓரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் வேறு வழியின்றி இவனிடம் பண உதவி கேட்டு, திருப்பிதர முடியாமல் போகவே, அந்த பணத்திற்கு ஈடாக நன்றாய் வளர்ந்து ஆளாகியிருந்த, அழகு மயில் புவனாவை 'வைத்துக்கொள்வதாக' வைரவன் கட்டாயப்படுத்த, அதனால் வந்த மாரடைப்பில் விழுந்தவர்தான், இதோ வீடே துக்கவீடாய் மாறியிருந்தது.
அந்த மோசமான சூழ் நிலையிலும், கொஞ்ச‌ம் கூட‌ ம‌ன‌சாட்சியின்றி புவ‌னாவை த‌ன் வீட்டுக்கு வ‌ர‌ச்சொல்லி ஆள் அனுப்பியிருந்தான். கேட்டதெல்லாம் தருவதாகச் சொல்லி அருணா என்கிற பெண்ணை தூது அனுப்பி, அதிலும் தன் அனுபவத்தை காட்டியிருந்தான். புவனாவிற்கு சகலமும் புரிந்துபோனது. அவன் நிறுத்தப்போவதில்லை. அவன் ஒரு மிருகம். மிருகத்திடம் மனசாட்சி எதிர்பார்க்க முடியாது.

தூதாய் வந்த பெண்ணிற்கு இதில் நல்ல அனுபவம் போல. பக்குவமாய் புரிய வைத்தாள். புவனா ஒரு முடிவிற்கு வந்தாள். அங்கீகரிப்பாய் புன்னகை செய்தாள். அதில் பல அர்த்தங்கள் உள்ளடக்கினாள். கடைக்குச்சென்று மீடியம் சைஸ் சட்டை ஒன்றை வாங்கி தூது வந்தவளிடம் தந்தனுப்பினாள். யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளும்படி வைரவனிடம் சொல்லச்சொல்லி அனுப்பினாள்.


அருணா புன்சிரிப்பாய் அந்த ச‌ட்டையை வைர‌வ‌னிட‌ம் த‌ர‌, அவ‌னுக்கு புரிந்துவிட்ட‌து. த‌ன் ஆஜானுபாகு உட‌ல் இளைக்க‌வேண்டும், இள‌ந்தோற்ற‌ம் வேண்டுமென்று அவ‌ள் குறிப்பால் உண‌ர்த்திய‌து புரிந்துகொண்டு உட‌ல் இளைத்தான். ப‌டித்த‌ பெண் அல்ல‌வா? விருப்ப‌த்திலும், அதை வெளிக்காட்டுவ‌திலும் தெரிந்த‌ முதிர்ச்சி க‌ண்டு அதிச‌யித்தாள் அருணா. அவ‌ளும் ஒரு கால‌த்தில் விப‌சாரியாய் இருந்த‌வ‌ள் தான். இருந்தாலும் இத்துணை நெளிவு சுளிவு தெரிந்த‌வ‌ளாய் அவ‌ள் இருக்க‌வில்லை. இந்த கால‌த்துப்பெண்க‌ள் மிக‌வும் தெளிவுதான்.

என்ன‌ இருந்தாலும் ஒரு பாத‌க‌னுக்கு ப‌டுக்கைய‌றைப்பாவையாக‌ இருக்க‌ப்போவ‌தை நினைத்து அவள் வெதும்பியிருக்க‌வேண்டும். புவ‌னா இளைத்துக்கொண்டே போனாள். உட‌ல் மெலுந்து கொண்டே போன‌து. ஆனால், புவ‌னா அதைப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌ட்ட‌தாக‌த் தெரிய‌வில்லை.

வைர‌வ‌னைத் த‌ன் வீட்டுக்கு வ‌ர‌ வேண்டாமென்றாள். தானே ஒரு நாள் அவ‌ன் வீட்டுக்கு வ‌ருவ‌தாக‌ச் சொன்னாள். ஒரே வீட்டில் இருந்த‌தினால், ம‌ஞ்சுவுக்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌து புரியாம‌ல் இல்லை. புவ‌னா, அவ‌ளுக்கு தெய்வ‌ம். புவ‌னாதான் என்ன‌ செய்வாள் ஒற்றை ஆளாய், அதுவும் பெண்ணாய். அவ‌ளைச்சொல்லிக் குற்ற‌மில்லை. எல்லாம் வைர‌வ‌னால்தான். இதுபோல் எத்த‌னை பெண்க‌ளை சீர‌ழித்திருப்பான். த‌ன்னைக் காப்பாற்றிய‌ புவ‌னாவை காப்பாற்ற‌ வேண்டும். அவ‌ளை ம‌ட்டும‌ல்ல‌, எல்லா பெண்க‌ளையும். அத‌ற்கு வைர‌வ‌ன் கொல்ல‌ப்ப‌ட‌ வேண்டும். யாருக்கும் தெரியாமல் தான் கொன்றுவிட்டால், போலீஸ் க‌ண் த‌ன் மீது விழாது. ஏனெனில் தான் ஒரு பைத்திய‌ம் என்ப‌தாக‌த்தான் ஊரில் எல்லோருக்கும் நினைப்பு. அப்ப‌டியே தெரிந்தாலும் பைத்திய‌த்திற்க்குதான் ம‌ருத்துவ‌ சிகிச்சை த‌ருவார்க‌ள். இந்த ப‌ண‌ப்பைத்திய‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் பைத்திய‌க்கார‌ ஆஸ்ப‌த்திரி எவ்வ‌ள‌வோ மேல். ம‌ஞ்சு வ‌ஞ்ச‌ம் கொண்டாள். அவ‌னைக் கொல்ல‌ ச‌ம‌ய‌ம் பார்த்தாள். நாள் குறித்தாள்.

இர‌ண்டு நாள், க‌ழித்து ஒரு மாலை வேளையில், ம‌ஞ்சு த‌ன் இடுப்பில் கூர்மையான‌ க‌த்தியை ம‌றைத்து வைத்து வைர‌வ‌ன் வீட்டுக்கு ட்ரை சைக்கிளில் இரால், க‌ருவாடு இற‌க்க‌ சென்றாள். செல்லும் வ‌ழியெங்கும் ச‌ன‌ம் த‌ள்ளிப்போன‌து நாற்ற‌த்துக்கு ப‌ய‌ந்து. வாலிப‌ர்க‌ள் பைத்திய‌த்திற்கு ப‌ய‌ந்து ஒதுங்கினார்க‌ள். ச‌த்த‌மாய் பாட்டுப்பாடி, த‌லையை இப்ப‌டியும் அப்ப‌டியுமாய் அசைத்து, சிரித்த‌வாறே ம‌ஞ்சு வைர‌வ‌ன் வீட்டை நெருங்கினாள். கொல்லைப்புற‌த்தில் வ‌ண்டியை நிறுத்திவிட்டு, இடுப்பில் ம‌றைத்த‌ க‌த்தியுட‌ன் வைர‌வ‌னை தேடினாள். ஹால், வ‌ராண்டா, ரூம், சாமிய‌றை, ச‌மைய‌ற்க‌ட்டு, தோட்ட‌ம் என் எங்கு தேடியும் வைர‌வ‌ன் கிடைக்க‌வில்லை.

எங்கு போயிருப்பான்? ச்சே, இவ‌னுக்கெல்லாம் நேர‌ம் ச‌ரியாய் அமைகிற‌தே? த‌ப்பிவிட்டானே.. மாட்டாம‌லா போவான். நாளையோ நாளை ம‌று நாளோ நிச்சயம் மாட்டுவான். புவ‌னாவை க‌ள‌ங்க‌ப்ப‌ட‌ விட‌க்கூடாது. அத‌ற்குள் அவ‌னை கொன்றுவிட‌லாம். நாளையே கொன்றுவிட‌லாம் என்று முடிவு செய்து வ‌ண்டியை திருப்பினாள், க‌டைக்கு. க‌டைதாண்டி ஒரு குப்பைமேட்டை ஒட்டிய‌ வாய்க்காலில் விற்ற‌து போக‌ மீதியைக் கொட்டிவிடுவ‌து வ‌ழ‌க்க‌ம்.

வாய்க்காலை ஒட்டி வ‌ண்டி நின்ற‌தும் இராலும், கருவாடு மூட்டையும் மெல்ல அசைந்தது கண்டு மஞ்சு துணுக்குற்றாள். நொடிகள் செல்ல செல்ல பலமாக அசைந்தது. சற்று நேரத்தில் இராலை, க‌ருவாடைக் க‌லைத்துக்கொண்டு புவ‌னா இற‌ங்குவ‌தைக்க‌ண்டு ம‌ஞ்சு அதிர்ச்சிய‌டைந்தாள். வ‌ண்டியில் வைர‌வ‌னின் உயிர‌ற்ற‌ உட‌ல் க‌ருவாடுக‌ளுக்கு ம‌த்தியில் தெரிந்த‌து. ‌புவ‌னா, வைர‌வ‌னின் பிரேத‌த்தோடு ஒரு பெரிய‌ க‌ல்லைக் க‌ட்டி சாக்க‌டையில் த‌ள்ளினாள். கையோடு வைத்திருந்த கொடிய விஷம் நிறைந்த குப்பியை சாக்கடையில் வீசினாள்.‌ பின், கடைக்கு வந்து தண்ணீர் தெளித்து தன் காது மடல்களை மிகக்கவனமாக சோப்பு போட்டு கழுவினாள்.

ம‌ஞ்சுவுக்கு புரிந்துவிட்ட‌து. தான் வைர‌வ‌னைக் கொல்ல‌, அவன் வீடு நோக்கி ட்ரைசைக்கிளில் சென்ற‌போதே புவ‌னா ட்ரைசைக்கிளில் தான் இருந்திருக்கிறாள். அவ‌ள் உட‌ல் மெலிந்து போயிருந்த‌தால் வித்தியாச‌ம் தெரிய‌வில்லை. மஞ்சு வீட்டினுள் வைரவனைத் தேடிக்கொண்டிருந்தபோது, புவ‌னா வைர‌வ‌னை அவன் படுக்கையறையில் ச‌ந்தித்திருக்க‌ வேண்டும். புவனாவை நெருங்கிய வைரவன் அவள் கன்னத்தில் முத்தம் பதித்துக்கொண்டே அவள் காது மடல்களை பொங்கி வந்த காமத்தில் கடித்திருக்கவேண்டும். விஷம் தடவப்பட்ட காதுமடல்களிலிருந்த‌ கொடிய விஷம் அவனைக் கொன்றிருக்க வேண்டும். வைரவனின் உயிரற்ற உடலை புவனா ட்ரைசைக்கிளில் கருவாட்டு மூட்டைகளுக்கு மத்தியில் மறைத்து தானும் ஒளிந்திருக்கவேண்டும். வைரவன் ஏற்கனவே மெலிந்திருந்ததால், வித்தியாசமாய் தெரிந்திருக்கவில்லை.


இப்போது புரிந்தது மஞ்சுவிற்கு, புவனா வைரவனை ஏன் இளைக்கச் சொன்னாள் என்று.

- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ramprasathtcs@gmail.com)

Sunday, 4 October 2009

படுக்கையறைக் கொலை - ௨ - கீற்று

படுக்கையறைக் கொலை - 2
http://www.keetru.com/index.php/2009-08-09-04-42-53/2009-08-16-08-14-01/575--2.html

பெட்ரூமில் தொங்கிக்கொண்டிருந்த சீலிங் ஃபேனை தாங்கிப்பிடிக்கும் ஸ்க்ரூக்களை மிகவும் கவனமாக ஸ்க்ரூ ட்ரைவரால் திருகி லூசாக்கிக்கொண்டிருந்தான் வைத்தி என்கிற வைத்தியனாதன். வைத்தி அந்த வீட்டின் ஓனர் சாந்தினியின் மாமா. சாந்தினியின் கணவன் ராகவுடன் பிஸினஸ் செய்கிறான். சாந்தினியின் அப்பாவின் உயில்ப‌டி சாந்தினி தான் 50 கோடி ரூபாய் சொத்துக்கு அதிப‌தி. இந்த‌ வீடும் அந்த‌ சொத்தில் அட‌க்க‌ம்.
வீட்டில் யாரும் இல்லை. யாரும் வ‌ருவ‌த‌ற்க்குள் காரிய‌த்தை முடிக்க‌வேண்டும். இதோ, இந்த‌ ஸ்க்ரூவைத் தள‌ர்த்தி,ஆன் செய்த‌ 10 நிமிட‌ங்களுக்குள் விழுந்துவிடுமாறு செட் செய்துவிட‌வேண்டும். ம‌ணி இப்போது 1. மதியம் 2 ம‌ணிக்குள் ஷாப்பிங் சென்ற சாந்தினி வ‌ந்துவிடுவாள். மதியமானால் சாப்பிட்ட‌தும் ஒரு குட்டித்தூக்க‌ம் போடுவ‌து அவ‌ள் வ‌ழ‌க்க‌ம். வ‌ந்த‌தும் சாப்பிட்டுவிட்டு ஃபேன் ஆன் செய்து ப‌டுத்துவிடுவாள்.

ஸ்க்ரூ லூசாகிவிட்ட‌ ஃபேன், அடுத்த‌ 10 நொடிக‌ளுக்குள் சாந்தினியின் மேல் விழும். அதிக‌ ப‌லுவான கண்ணாடி விளக்குகள் பதித்த டுயல் ஃபேன் விழுந்த‌தும் கூர்மையான கண்ணாடிகளால் அவள் உடல் கிழிக்கப்பட்டு இற‌ந்துவிடுவாள். போன வாரம் தான் சரி செய்யப்பட்ட ஃபேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.சாந்தினி பெட்ரூமில் அவள் இற‌ந்தால், ப‌ல‌ன‌டைய‌ப்போவ‌து அவ‌ள் க‌ண‌வ‌ன் ராக‌வ். ஏனெனில் அவ‌ளின் 50 கோடி சொத்து. மேலும் அது சாந்தினியின் படுக்கையறை. அதில் சகல உரிமை உள்ளவன் ராகவ் தானே. அத‌னால் போலீஸின் முத‌ல் ச‌ந்தேக‌ம் ராக‌வ் மீது தான் விழும். ராக‌வ் தான் கொலையாளி என்ப‌த‌ற்கு இவைக‌ளே கார‌ண‌ங்க‌ளாகிவிடும். அவ‌ன் ஜெயிலுக்கு சென்ற‌தும் கார்டிய‌ன் என்கிற‌ பெய‌ரில் சொத்தை அனுப‌விக்க‌லாம்.

எல்லாம் செய்தாகிவிட்ட‌து. இனி அவ‌ள் வ‌ர‌ வேண்டிய‌து தான். ஃபேன் போட‌வேண்டிய‌து தான். சாக‌வேண்டிய‌துதான். ஆட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் வேட்டை ஒநாயைப்போல் காத்திருந்தான் வைத்தி. சாந்தினியின் கார் ச‌த்த‌ம் கேட்க‌வே, அவ‌ள் வ‌ரும் நேர‌ம், பேச்சுக்கொடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லாத‌வாறு தூங்குவ‌து போல் பாசாங்கு செய்ய‌லானான்.

அவ‌ள் உள்ளே வ‌ரும் அர‌வ‌ம் கேட்ட‌து. தொட‌ர்ந்து பாத்ரூமில் த‌ண்ணீர் ச‌ல‌ச‌ல‌ப்பும், கிச்ச‌னில் பாத்திர‌ங்கள் உருளும் ச‌த்த‌மும் கேட்டன. அவள் முகம் கை கால் கழுவிவிட்டு சாப்பிடுகிறாள். அவ‌ன் எதிர்பார்த்தப‌டியே எல்லாம் ந‌ட‌ப்ப‌தாய் அவ‌னுக்கு உண‌ர்த்தின‌.

சிறிது நேர‌ம் க‌ழித்து, அவ‌ள் பெட்ரூம் க‌த‌வுக‌ள் சாத்த‌ப்ப‌டும் ஓசை கேட்ட‌து. வைத்தியை இன‌ம் புரியாத‌ ஒரு உண‌ர்வு தொற்றிக்கொண்ட‌து. என்ன நடக்குமோ என்கிற ஆர்வ‌மா, ஒரு உயிரை சாக‌டிக்க‌ப்போகிற‌ ப‌த‌ட்ட‌மா தெரிய‌வில்லை. காத்திருந்தான். திடீரென்று டெலிபோன் ம‌ணி அடிக்கும் ச‌த்த‌ம் கேட்ட‌து.

அய்யோ, இந்த‌ நேர‌ம் பார்த்தா டெலிபோன் அடிக்க‌ணும். ச்சே..

டெலிபோன் அழைப்பின் ம‌றுமுனையில், ராக‌வ் இட‌து கையில் இருந்த‌ மொபைல் ஃபோனால் வீட்டு லாண்ட்லைனை அழைத்த‌ப‌டி, வ‌ல‌து கையில் இன்னொரு ஃபோனால் ச்ந்த்ருவுக்கு க‌ட்ட‌ளையிட்டுக்கொண்டிருந்தான். ச‌ந்த்ரு, த‌ன் காதுக‌ளில் மாட்டியிருந்த‌ வ‌ய‌ர்ல‌ஸ் சாத‌ன‌த்தில் கேட்டுக்கொண்டே குழல் துப்பாக்கியால் மறைவாக நின்றபடி சாந்தினி வீட்டு டெலிஃபோன் ஸ்டாண்டை குறிவைத்து காத்திருந்தான்.
'ச‌ந்த்ரு, க‌ன்ஃப‌ர்ம்ட். அவ‌ சிவ‌ப்பு க‌ல‌ர்ல‌ சுடிதார் போட்ருப்பா. வீட்ல இருக்குற ஒரே பொம்பளை அவ தான். கால் வந்தா அவ தான் எடுப்பா. டெலிஃபோன‌ எடுத்த‌தும் போட்ரு'.

ரிசீவ‌ரை ம‌றுமுனையில் அவ‌ள் எடுக்க‌ காத்துக்கொண்டே ச‌ந்த்ருவையும் காத்திருப்பில் வைத்திருந்தான். வீட்டில் இருப்ப‌து சாந்தினியும் அவ‌ள் மாமாவும். இன்னொருத்த‌ர் வீட்டில் விருந்தாளியாய் த‌ங்கியிருப்ப‌தால், சாந்தினி இருக்க‌, அவ‌ர் ஃபோன் எடுக்க‌ மாட்டார். சாந்தினி தான் எடுப்பாள். சாந்தினியின் மாமா துப்பாக்கி சுடுத‌லில் கைதேர்ந்த‌வ‌ர் என்ப‌து எல்லோருக்கும் தெரியும். அவ‌ர் கைவ‌ச‌ம் வைத்திருந்த தோட்டாக்க‌ளைத்தான் ச‌ந்த்ரு துப்பாக்கியில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்போகிறான். ஃபாரென்ஸிக்கில் தோட்டாவிற்க்கான துப்பாக்கி வைத்தியினுடையது என்பது கண்டுபிடிக்கப்படும். சாந்தினி கொலையானால் நிச்ச‌ய‌ம் மாட்ட‌ப்போவ‌து அவ‌ள் மாமா தான். அத‌ற்க்கு பிற‌கு சொத்து முழுவ‌தும் த‌ன‌க்குத்தான் என்றெண்ணிய‌ப‌டியே ப‌த‌ட்ட‌மாய் காத்திருந்தான் ராக‌வ்.

எட்டு முறை அலறிவிட்டு அமைதியானது ஃபோன். 'இவள் எப்போதுமே இப்படித்தான். ஃபோன் அடித்தால் உடனே எடுக்கமாட்டாள்' என்று கருவியபடியே மீண்டும் தன் வீட்டு லாண்ட்லைனை அழைத்தான் ராகவ்.

ரிஸீவ‌ர் எடுக்க‌ப்ப‌ட்ட‌து. உட‌னே ச‌ன்ன‌மாய் ச‌ந்த்ருவுக்கு சிக்ன‌ல் கொடுத்தான். ஃபேன்சிக்காய் பொறுத்தப்பட்ட வண்ணக்கண்ணாடி ஜன்னல் வழியே சிவப்பு கலர் துணியை கிழித்து ஸைல‌ன்ச‌ர் பொறுத்த‌ப்ப‌ட்ட‌ துப்பாக்கி அமைதியாய் த‌ன் வேலையைச் செய்த‌து. பேச‌ப்ப‌ட்ட‌ மீதிப்ப‌ண‌த்தை வாங்கிக்கொண்டு த‌லைம‌றைவானான் ச‌ந்த்ரு.

தான் அனுபவிக்கப்போகும் ராஜ வாழ்க்கைக்கு கடைசி முதலீடாய், மனைவி சாவுக்கு புரண்டு புரண்டு அழுது நடிக்க ஆயத்தமானவாறே அவ‌னை அனுப்பிவிட்டு த‌ன் வீடு நோக்கி ந‌ட‌ந்தான் ராக‌வ். வீட்டை நெருங்க‌ நெருங்க‌ ப‌த‌ட்ட‌ம் அதிக‌மான‌து. வீட்டு புல்வெளியைத்தாண்டி ம‌தில் சுவ‌ரோர‌ம் நின்று ப‌க்க‌த்து வீட்டு மாமியிட‌ம் கதைக்கும் பெண்ணைப்பார்த்ததும் தூக்கிவாரிப்போட்ட‌து ராக‌விற்கு. கார‌ணம், அந்த‌ பெண் சாந்தினி போல‌வே இருந்ததுதான். கிட்ட‌ப்போக‌ போக‌ ராக‌விற்கு வ‌யிற்றில் புளியைக்க‌ரைத்த‌து போலிருந்த‌து. அந்த‌ பெண் சாந்தினியேதான்.

இவ‌ள் எப்ப‌டி உயிருட‌ன். ஃபோனில் சுட்டுவிட்ட‌தாக‌ சொன்னானே ச‌ந்த்ரு. பொய் சொல்லிவிட்டானா. அட‌ப்பாவி, அவ‌ள் செத்த‌தை உருதிப்ப‌டுத்தாம‌ல் அவ்வ‌ள‌வு பெரிய‌ தொகை கொடுத்துவிட்டோமே. அத‌ற்க்கு சாந்தினி க‌ண‌க்கு கேட்டால் என்ன‌ சொல்வ‌து என்று ப‌ல‌வாறு யோசித்த‌ப‌டியே வீட்டினுள் நுழைந்தான். வீடே அமைதியாயிருந்த‌து. வெய்யிலில் சென்று வ‌ந்த‌து புழுக்க‌மாயிருந்த‌து. சந்த்ரு ஏமாற்றியது கோபம் வந்தது. வெறுப்பாய் ஃபேன் ஸ்விட்ச் த‌ட்டிவிட்டு சோபாவில் அம‌ர்ந்தான்.

ச்சே, ஏமாற்றிவிட்டானே. அவ‌னை என்ன‌ செய்ய‌லாம்? அய்யோ, அவ‌னை இப்போது எங்கிருந்து பிடிப்ப‌து. இவ‌னை மாதிரி நாடோடிக‌ளை எப்ப‌டிப்பிடிப்ப‌து.

விய‌ர்வை வ‌ழிவ‌து நிற்க‌வில்லை. நெற்றிப்புருவம் சுறுங்க‌ அப்போதுதான் க‌வ‌னித்தான்.ஃபேன் ஓட‌வில்லை. க‌ர‌ண்ட் இல்லை. ஏதோ தோன்றி எழுந்து சென்று டெலிஃபோன் ஸ்டாண்டைப்பார்த்த‌வ‌ன் உறைந்தான். அங்கு வைத்தி ர‌த்த‌ம் ப‌டிந்த‌ சிவ‌ப்பு ஜிப்பாவில் ம‌ல்லாந்து இற‌ந்துகிட‌ந்தான். தான் முத‌ல் த‌ட‌வை அழைத்தபோது, கரண்ட் போயிருக்க வேண்டும். காற்றோட்டத்திற்காக சாந்தினி வெளியில் வந்திருக்கவேண்டும். சாந்தினிக்கு ப‌திலாக‌ வைத்தி டெலிஃபோனை எடுத்திருக்க‌ வேண்டும். ஃபேன்சி வ‌ண்ண‌க்க‌ண்ணாடி வ‌ழியே, ஜிப்பாவில் வைத்தியை சாந்தினி என்று நினைத்து ச‌ந்த்ரு சுட்டிருக்க‌ வேண்டும். ராக‌விற்கு புரிந்துபோன‌து. நடந்ததை அவன் மனம் ஜீரணிக்க சிறிது நேரம் பிடித்தது. அதிர்ச்சி அவ‌னை ஆசுவாச‌ம் கொள்ள‌ பின்னோக்கி த‌ள்ளிய‌து.

மெல்ல‌ மெல்ல‌ அவ‌ன் விய‌ர்வை அட‌ங்குவ‌து போலிருந்த நொடிகளில் க்ள‌க் என்ற‌ ச‌த்த‌த்துட‌ன் ஃபேன் பார‌ம் தாளாம‌ல் ஸ்க்ரு நெகிழ்ந்த‌து. பின்னோக்கி உந்த, தன்னையும் அறியாமல் பெட்ரூமினுள் வந்த அவன் மீது விழுந்த‌து ஃபேன். ‌ராக‌வ் ர‌த்த‌ வெள்ள‌த்தில் சிறிது நேர‌ம் துடித்துப்பின் மெல்ல‌ அட‌ங்கிப்போனான்.

கரண்ட் வந்து 10 நொடிகள் தாண்டியிருந்தது.
வாச‌லில் இது ஏதும் அறியாம‌ல் சாந்தினி, ப‌க்க‌த்து வீட்டு மாமியிட‌ம் க‌தைத்துக்கொண்டிருந்தாள்.

- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ramprasathtcs@yahoo.co.in)

Thursday, 17 September 2009

படுக்கையறைக் கொலை - கீற்று

படுக்கையறைக் கொலை - சிறுகதை
http://www.keetru.com/2009-08-09-04-42-53/2009-08-16-08-14-01/421-2009-09-11-00-54-00.html


'என்ன திமிரு இவளுக்கு? இன்னொரு நாட்டுல இருக்கோம்னு கூட இல்லாம இப்படியா அலைவா ஒரு பொம்பள? இருக்கட்டும். இவள என்ன பண்றென்னு பாரு' மனதிற்க்குள் கருவியபடி வராண்டாவை தாண்டிக் கொண்டிருந்தான் சுனில்.

சுனில் திருமணமானவன். மனைவி பெயர் மது என்கிற மதுமிதா. மதுவை ஒரு ஒவியக்கண்காட்சியில் பார்த்து அவளின் கண்கவர் ஓவியங்கள் பிடித்துப்போய் பெற்றோருடன் பேசி முடித்த திருமணம். சுனிலுக்கு கென்யா நாட்டில் ப்ராஜெக்ட். இருவரும் ஒரே ஐ.டி. நிறுவனத்தில் வேலை என்பதால் இருவருக்கும் ஒரே நாட்டில் ஆன்சைட் பிடிப்பது சுலபமானது. விளைவு, இருவரும் கென்யா நாட்டில். கலவியலுக்கு பெயர் பெற்றவர்கள் கென்யா நாட்டு கருப்பர்கள். கென்யா ஆன்சைட் இவர்கள் எதிர்பாராதது, ஆனால் அதுதான் இருவரும் ஒன்றாய் பறப்பது போல் கிடைத்தது. ஆனால் சுனிலுக்கு ஏனோ இங்கு வருவது மதுவின் ஆசையோ என்றொரு எண்ணம் முதலிலேயே வந்தது. காரணம் இதற்கு உதவிய மதுவின் தோழி, கொஞ்சம் அப்படி இப்படி என்று கேள்விபட்டிருக்கிறான். மதுவிடம் கேட்டபோது யார் எப்படி இருந்தால் என்ன என்பதே பதிலாய் வந்தது. அதை அப்போதைக்கு சுனிலும் விட்டுவிட்டான்.

சுனிலின் தற்போதைய கோபத்திற்கு காரணம், முந்தினம் அவன் பெட்ரூமில் கண்ட காட்சிதான். உண்மையில் அவன் அப்போது வீட்டில் எதிர்பார்க்கப்படாத தருணம். அந்நேரம் அவன் ஆபிஸில் தான் இருப்பான். ஆவளும் தான். அன்று தான் எடுக்க மறந்த ஃபைலை எடுக்க வீட்டுக்கு வந்தவன், காரிடாரில் ஜன்னல் வழியே கண்ட காட்சியில் வந்த துவேஷம் தான் இது. அவன் பார்த்தது, இரவு போல் அடர்த்தியாய் திரைச்சீலையால் மூடிக்கிடந்த பெட்ரூமில் மது ஒரு கறுப்பனோடு கட்டித்தழுவிக்கிடந்த காட்சிதான். திரைச்சீலை ஓரமாய் ஒதுங்கியிருந்த இடைவெளியில் சில‌ நொடிக‌ளே அவ‌ன் பார்த்தாலும் அவ‌னை உலுக்கியெடுத்துவிட்ட‌து.

உட‌னே அவளைக் கொன்று போட‌த்தோன்றிய‌து. அந்த கறுப்பனை ஒரு விதத்தில் குறை சொல்ல முடியாது. அவனவன் ஃப்ரியாய் கிடைத்தால் பினாயிலைக்கூட குடிக்கிற காலத்தில் தளதள தக்காளியாய் மது மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா எவன் சும்மா இருப்பான். இவளுக்கு எங்கே போச்சு புத்தி. அவளைக்கொன்று போடத்தான் வேண்டும். ஆனால் தான் கொலை கேஸில் மாட்டிவிட்டால், பாதியில் வ‌ந்த‌வ‌ளுக்காக‌ த‌ன் எதிர்கால‌ம் சிறையிலா?, அத‌ற்காக‌ அவ‌ளை அப்ப‌டியே விட்டுவிடுவ‌தா? வேண்டாம், சாவு தான் அவ‌ளுக்கு ச‌ரி ஆனால் தான் இதில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டு விட‌க்கூடாது, சுவ‌டே தெரியாம‌ல் காரிய‌ம் செய்ய‌வேண்டும். நிமிட‌ நேர‌த்திற்குள் அவ‌ன் மூளை கிரிமின‌லாக‌ வேளை செய்த‌து. உட‌னே ஆபிஸ் திரும்பினான். திரும்பும் வ‌ழி முழுதும் அவளை எப்படிக்கொல்லலாம் என்றே சிந்தனை போனது.

வ‌ரும் வ‌ழியில் அடுக்கு மாடிக்க‌ட்டிட‌ம் க‌ட்டிக்கொண்டிருந்தார்க‌ள். சுனில் ம‌ன‌தில் ஒரு மின்னல் வெட்டிய‌து. மெல்ல‌ அந்த‌ க‌ட்டிட‌ம் ‌முழுக்க‌ சுற்றிப்பார்த்தான். கைதேர்ந்த கொலைகார‌னாய் ம‌ன‌ம் வேலை செய்த‌து.‌ ஆபிஸில் வேலையில் ம‌ன‌ம் செல்ல‌வில்லை. பேச்சில‌ராக சுற்றித்திறிந்த கால‌த்தில் விளையாட்டாய் ப‌ழ‌கிய துப்பாக்கி நினைவுக்கு வ‌ந்த‌து. கல்லூரி நாட்களில் செய்த சில எலெக்ட்ரானிக் சமாசாரங்களுடனும் சில புல்ல‌ட்களுடன் ப்ளான் ரெடி. சாய‌ந்திர‌ம் 5 ம‌ணிக்கே வீட்டிற்கு கிள‌ம்பிவிட்டான். முத‌லில் அந்த அடுக்கு மாடிக்க‌ட்டிட‌ம் இரண்டாவ‌து மாடி ஏறினான். அங்கிருந்து பார்த்தால், அவ‌ன் வீட்டு பெட்ரூம் தெரிந்த‌து. லாவ‌க‌மாய் ஒரு டைம‌ருடன், மறக்காமல் சைலன்சருடன், காலை 6 மணிக்கு ஆட்டோமாடிக்காக வேலை செய்வதுபோல் செட் செய்தான்.‌ க‌ட்டிட‌ம் க‌ட்டுகிறார்க‌ள். சுவ‌ர் வேலை ந‌ட‌க்கிற‌து. நாளைப்பொழுது விடிந்த‌தும் சுவ‌ர் வைத்து விடுவார்க‌ள்.

ராத்திரி அவள் சன்னலோரம் படுத்திருப்பாள். சரியாய் காலை 6 மணிக்கு துப்பாக்கி வெடிக்கும். அவள் மெளனமாக செத்துப்போவாள். சைலன்சர் பொருத்தியிருப்பதால் சத்தமே கேட்காது. உடனே துப்பாக்கியை அகற்றிவிட வேண்டும். 8 மணிக்கெல்லாம் சுவர் எழுப்பத் தொடங்கிவிடுவார்கள். எப்படியும் இவள் செத்த விவரம் தெரிய குறைந்தது 12 மணி நேரம் ஆகும். அதற்க்குள் எழுப்பப்படும் சுவர் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை மறைத்து விடும். போலீஸ் வ‌ந்து பார்த்தால் சின்ன‌ க்ளூ கூட‌ கிடைக்காது. தானும் இந்த‌ 12 ம‌ணி நேர‌ம் வெளியில் இருப்ப‌தாய் எவிட‌ன்ஸ் க்ரியேட் செய்து விட்டால் போதும். ப்ளான் சூப்ப‌ர். ம‌ட‌ ம‌ட‌ வென‌ காரிய‌ம் முடித்தான். ந‌ண்ப‌னுட‌ன் த‌ண்ணி பார்ட்டி என்று அவ‌ள் தோழிக்கு வேண்டுமென்றே போன் செய்து மறுநாள்தான் திரும்பப்போவதாக அவ‌ளுக்கு க‌ன்வே செய்துவிடும்ப‌டி சொல்லி கூடுதல் எவிடன்ஸ் க்ரியேட் செய்துவிட்டு நண்ப‌ன் வீட்டுக்கு சென்றுவிட்டான்.

இர‌வு அவ‌னுக்கு நீள‌மான‌தாகக் க‌ழிந்த‌து. ந‌ன்றாக‌ குடித்திருந்த ந‌ண்ப‌ன் எழுந்திருக்க‌‌ நேர‌மாகும். காலை 5 ம‌ணிக்கே புற‌ப்ப‌ட்டான். அவ‌ள் சாவ‌தை பார்த்து ர‌சிக்க‌வேண்டும். ச‌த்த‌மில்லாம‌ல் ரூம் திரும்ப‌வேண்டும். போலீஸ் கேட்டால் அவ‌ன் ந‌ண்ப‌னும், அவ‌ள் தோழியும் தான் எவிடென்ஸ்.

ம‌ணி 5:56.

ச‌த்த‌மில்லாம‌ல் அவ‌ன் ப்ளாட் நெருங்கினான். 5:59:59 ம‌ணி வ‌ரை குண்டு பாயாது. சாகும் முன் கடைசியாக அவ‌ளை ஒரு முறையாவ‌து பார்த்துவிட‌ வேண்டும் என்று தோன்றிய‌து. 5:59:59 க்கு முன் குண்டுக்கு வழிவிட்டு ந‌க‌ர்ந்து விட‌ வேண்டும். அவ‌ள் செத்த‌தும் ம‌ற‌க்காம‌ல் அந்த‌ துப்பாக்கியையும் காலி செய்துவிட‌ வேண்டும். அக்கம் பக்கம் பார்த்தான்.

ம‌ணி 5:58:45

மெல்ல‌ ‌காரிடார் தாண்டி ச‌ன்ன‌லை நெருங்கினான். திரைச்சீலை அகன்று முழுக்க திறந்திருந்தது. அந்த விடிகாலையிலும் முன்தின‌ம் பார்த்த‌து போல் அவ‌ள் அந்த‌ க‌ருப்ப‌னுட‌ன்‌ க‌ட்டிப்பிடித்து ப‌டுத்திருந்தாள்.

ம‌ணி 5:59:15

அடிப்பாவி, ச‌ண்டாளி..இன்னிக்குமா?

அவ‌னுக்கு ஏதோ வித்தியாச‌மாய் ப‌ட்ட‌து. இவ‌ர்க‌ள் ஏன் நேற்று பார்த்த‌ அதே போஸில் ப‌டுத்திருக்கிறார்க‌ள். அதுவும் இம்மிகூட‌ ஆடாம‌ல் அசையாம‌ல். ஒரு நிமிட‌ம் ம‌ன‌ம் குழ‌ம்பிய‌து. அதே நேர‌ம் ஹாலில் யாரோ இருப்ப‌து போல் தோன்ற‌ அங்கே பார்த்தான். ம‌து எதையோ க்ளீன் செய்து கொண்டிருந்தாள். அப்போ இது யார். மீண்டும் ப‌டுக்கையை பார்த்தான். மெல்ல‌ விடிந்து கொண்டிருந்த‌ நேர‌த்தில், மெல்ல ப‌ர‌விக்கொண்டிருந்த‌ வெளிச்ச‌த்தில் அது தெரிந்த‌து. அது வண்ணங்களால் வரைந்தெடுக்கப்பட்ட ஒரு மெத்தை விரிப்பு. ம‌து 3டி ஓவிய‌ங்க‌ள் வ‌ரைவ‌தில் கில்லாடி என்ப‌து நினைவுக்கு வ‌ந்த‌து. வெளிச்ச‌ம் ப‌ர‌வ‌ ப‌ர‌வ‌, அந்த ஓவிய‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் புரிந்துகொண்டிருந்த‌து.‌ இருவ‌ர், அரை நிர்வாண‌மாய், ஒன்று ம‌து, ம‌ற்றொன்று, க‌ருப்ப‌ன‌ல்ல‌. வெளிச்ச‌த்தில் அது த‌ன்னைப்போல‌வே இருந்த‌து. இருளில் க‌ருப்பாய் தெரிந்திருக்கிற‌து. 3டி ஓவியம் பார்ப்பதற்கு அச்சு அசலாக இருந்தது. விரிப்பின் வ‌ல‌து ஓர‌ம் ப‌ளிச்சிட்ட‌து அந்த‌ வாச‌க‌ம் 'ஹாப்பி ப‌ர்த்டே சுனில்'. சுனிலின் மூளை நினைவ‌டுக்குக‌ளில் அவ‌ன் பிற‌ந்த‌ நாளை தேடிக்கொண்டிருந்த‌ நேர‌த்தில்....

ம‌ணி 6:00..... ப்ள‌ப்...

சுனில் சாய்ந்து விழுந்துகொண்டிருந்தான், ம‌ண்டையில் குண்டு துளைத்த ஓட்டை வ‌ழியே ர‌த்த‌ம் குபுகுபுவென‌ வ‌ந்துகொண்டிருந்த‌து...‌