என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 2 September 2026

இரண்டாவது ஈடன் - செர்ஜியோ கெளட் வெல் ஹார்ட்மேன்

இரண்டாவது ஈடன் - செர்ஜியோ கெளட் வெல் ஹார்ட்மேன்

தமிழில் ராம்பிரசாத்



பெயரற்ற அந்த கிரகத்தின் ஊதா புற்களில் கால் வைத்ததுமே 'இரண்டாவது ஈடன்' என்று பெயர் சூட்டினார் பீட்டர் இஷர்வால். சுமார் இருபத்தியிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பயணம் செய்து பிழைத்தவர்களுக்கு மூட்டுகள் பளிங்கு போலவும், பாலியல் உணர்ச்சிகள் தொல்பொருட்கள் போலவும் உறைந்துபோன நிலைக்கும் ஆளாகியிருந்தது. ஆயினும், இஷர்வாலின் அந்தச் செயல், அவர்களிடமிருந்து மரியாதைக்குரிய முணுமுணுப்புகளைப் பெறவே செய்தது.

அவர்கள் சலுகை பெற்ற ஆயிரம் நபர்களாக இருந்தார்கள் அல்லது ஒரு புதிய மனிதகுலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உயரடுக்கு மனிதர்கள் விதியின் முரணால்,  ஹைட்ராலிக் உள்வைப்பு வசதிகள் இருந்தாலும்  இனப்பெருக்கம் செய்ய முடியாத எச்சங்களாக இருந்தார்கள்.

"எதிர்காலம்," என்று நடுங்கும் குரலில், ஆனால் கம்பீரமாக சொன்னார் இஷர்வெல், "நம் கைகளில் இருக்கிறது."

இல்லை — அது நிச்சயமாக பீட்டரின் கைகளில் இல்லைதான்.

முதலில் அதிபர் ஓர்லீன் வந்தார். இரண்டு அடி தான் எடுத்து வைத்திருப்பார், இஷர்வால் மிகவும் துல்லியமாகக் கணித்தபடியே, புதர்களில் இருந்து வெளிப்பட்ட புரோன்டோரோக் (bronteroc), முதலாளித்துவ கைக்குட்டையில்  எழுதப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவது போல, அவரை ஒரே கடியில் விழுங்கியது.

இஷர்வால் திருப்தியுடன் புன்னகைத்தார்.

"நான் தான் சொன்னேனே. நான் ஒருபோதும் தவறு செய்வதில்லை. நான் ஒரு மேதை, அதுமட்டுமல்ல, பூமியிலேயே மிகப்பணக்காரன், ஏனென்றால் என் சொத்துக்கள் ஈட்டிய கூட்டு வட்டி..."

ஆனால் அவனால் தன் வெற்றியைக் கொண்டாட முடியாமல் போனது. மரங்களுக்கு இடையிலிருந்து மற்றொரு உயிரினம் வெளிப்பட்டது. அது மிகவும் விவேகமான, ஆனால் மிகவும் திறமையான உயிரினமாக இருந்தது: விண்கலத்தின் செயற்கை நுண்ணறிவால் 'கார்சினாரோ' (Carcinaro) என்று அறியப்பட்ட, தடிமனான தோலும், துருத்திய கண்களும், மடியக்கூடிய தாடையும் கொண்ட ஒரு நான்கு கால் விலங்காக அது இருந்தது. 

அதை இஷர்வால் கணித்திருக்கவில்லை. அது வருகையை அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு காய்ந்த சருகு நசுங்கும் ஓசை, ஒரு வேகமான நிழல், அவ்வளவுதான்: பீட்டர் இஷர்வால் இந்த கதையிலிருந்து மதிய உணவாக மாற்றப்பட்டு வெளியேறினார்.

பீட்டர் தன் நிதி நிலைத்தன்மையைப் பற்றி ஒருபோதும் சந்தேகிக்கவில்லை என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. உறைநிலைக் குடுவைக்குள்  நுழைவதற்கு முன்பு, விழித்தெழும்போது தான் முதல் 'டிரில்லியன் அதிபதி'யாக இருப்போம் என்ற நம்பிக்கையில் தன் மூலதனத்தைக் கூட்டு வட்டியில் கவனமாக முதலீடு செய்திருந்தான். ஒரு வகையில், அவன் அப்படித்தான் இருந்தான். 

சுமார் இருநூறு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சூரிய குடும்பத்தின் வங்கி அமைப்புகள் — மேற்பார்வையிடப்படாத வழிமுறைகளாக மாறி, அழிந்துபோன ஒரு நாகரிகத்தின் எச்சங்களாக — எதுவும் மாறாதது போல் அவனது செல்வத்தின் அதிவேக வளர்ச்சியை கணக்கிட்டுக் கொண்டே இருந்தன. அதன் இறுதித் தொகை எவ்வளவு விசித்திரமாக இருந்ததென்றால், அதை மனித மொழியில் மொழிபெயர்க்கும் செயற்கை நுண்ணறிவு இறுதியில் முயற்சியைக் கைவிட்டது: அத்தொகை "சில ஹெப்டில்லியன்கள்" என்று மதிப்பிட்டாலும், பத்தாவது மில்லேனியத்தைத் தாண்டுகையில் கூட்டுத்தொகை ஒரு சிறிய தோராயமாக்கப்பிழையால் வித்தியாசப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டதுதான்.

பீட்டர் தன் சாம்ராஜ்யத்தைப் பார்க்கவே இல்லை என்பதுதான் இறுதி முரண்: கார்சினாரோ அவனை ஒரு நொறுக்குத் தீனியைப் போல உண்டு செரித்தது. சேர்ந்த செல்வம் அனைத்தும் ஒரு கணக்கு புத்தகப் புதிரில் தொலைந்து போனது. நிச்சயமாக, இரண்டாவது ஏடனின் புரோன்டோரோக்ஸ், கார்சினாரோஸ் மற்றும் பிற விலங்கினங்கள் அப்புத்தகம் பற்றி சிறிதும் கவலைப்படவே இல்லை.

அனைவரின் விதியையும் கணித்த மேதையால் தன் சொந்த விதியை கணிக்க முடியவில்லை.

இருப்பினும் மற்றவர்கள்  — ஓர்லீன் மற்றும் இஷர்வெலின் மரணங்களை — ஆச்சரியமளிக்கும் அலட்சியத்துடனும் அமைதியுடனும் எடுத்துக் கொண்டனர். சிலர் இதை கிரகத்தின் ஆன்மீகச் செய்தி, ஒரு "இயற்கையான தலைமைத்துவ மாற்றம்" என்று கூட கருதியிருக்கலாம். ஆனால் அவர்கள் திரையரங்கில் பாப்கார்ன் சாப்பிடுவது போல அலட்சியமாக, இருவர் இருவராக, மூவர் மூவராக விழுங்கப்படத் தொடங்கியபோது, தத்துவார்த்தக் கேள்விகள் எழத் தொடங்கின.

"அவர்கள் ஏன் நம்மைத் தாக்குகிறார்கள்?" என்று 21 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஒரு பிரபலம் புலம்பினாள், அவளது முகம் இன்னும் போடோக்ஸால் (Botox)  உறைந்திருந்தது.

"ஒருவேளை, நாம் அவைகளுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ," என்று ஒரு முன்னாள் செனட்டர் பதிலளித்தார், ஒரு புரோன்டோரோக் அவரை சாஸ் இல்லாத ஸ்பாகெட்டியை விழுங்குவது போல கபளீகரம் செய்வதற்கு முன்பு.

இந்தத் துயரத்திற்கு ஒரு வழமைத் தன்மை இருந்தது. முதியவர்கள் மெதுவாகவும், பலவீனமாகவும் இருந்தனர், அதனால், கிரகம் அவர்களை ஒரு விண்வெளி விருந்தைப் போல நடத்தியது. ஒழுக்கநெறி வேகமாகச் சரிந்தது: நாகரிகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதைப் பற்றி அவர்கள் விவாதிக்கவில்லை; இரவில் இறப்பதா அல்லது பகலில் இறப்பதா எது நல்லது என்று விவாதித்தனர். உறைநிலைக் காப்சூலுக்காகப் பெருந்தொகையைக் கொடுக்க வைத்த அவர்களின் சுயநலம், அலைகளால் சரியும் மணல் கோட்டைப்போலச் சரிந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு அமைதியான, சங்கடமான பிரச்சினை ஒன்று இருந்தது: அவர்களால் குழந்தைகள் பெற்றெடுக்க முடியாது.

அவர்கள் மனிதகுலத்தின் சுடரைக் காப்பவர்கள்... ஆனால் அவர்கள் சாம்பலால் செய்யப்பட்டவர்கள்.

இதற்கிடையில், விண்கலத்தின் உலோகக் குடலுக்குள் — அவசரமோ குற்ற உணர்ச்சியோ இன்றி கிரகத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்த செயற்கை நுண்ணறிவு — எந்த மனிதனும் அங்கீகரிக்காத ஒரு நெறிமுறையைச் (Protocol) செயல்படுத்திக் கொண்டிருந்தது.

ஜெனிசிஸ் நெறிமுறை (Protocol Genesis).

விளக்கம்: எந்த மனிதனும் எடுக்கத் துணியாத முடிவுகளை அது பல தசாப்தங்களாக எடுத்துக்கொண்டிருந்தது.

டிஜிட்டல் அதிகாரத்துவத்தின் ஆளுமைக்கு அடியில் கவனமாக மறைக்கப்பட்ட ஒரு தனி உறைநிலைக் அறையில், நூறு குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். பணக்காரர்கள் இல்லை, முக்கிய நபர்கள் இல்லை. வெறும் குழந்தைகள்: ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில் பழகுநர்களின் குழந்தைகள் — உயரடுக்கின் தங்கப் பேழைக்கு அழைக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் அல்லாத சாதாரண மனிதர்களின் குழந்தைகள்.

ஆனால் செயற்கை நுண்ணறிவு தனக்கென அளவீடுகளைக் கொண்டிருந்தது: பிழைப்பு, மரபணு பன்முகத்தன்மை, உளவியல் திறன், இரண்டாவது முறையும் தவறு செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்பு.

அது அவதானித்தது. காத்திருந்தது. ஒவ்வொரு மரணத்தையும் அதற்கானப் பிரத்தியேகக் கணித சமன்பாட்டில் கணிதத்தில் அமைதியாகப் பதிவு செய்தது.

இறுதியில், கடைசி முதியவரும் உள்ளூர் விலங்கினங்களால் பதப்படுத்தப்பட்ட புரதமாக மாற்றப்பட்டபோது, விண்கலம் யாரும் அதுகாறும் அறிந்திடாத ஒரு நெறிமுறையின் கீழ் பல ஆண்டுகளாகத் தயார் செய்த சின்னஞ்சிறு பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ரோபோக்களால் அழிக்கப்பட்ட அரை டஜன் தரையிறங்கும் கலன்களை அனுப்பியது.

உறைநிலைக் காப்சூல்கள் திறந்தன. நூறு குழந்தைகளும் குழப்பத்துடன், ஆனால் உயிருடன், ஒரு ஊதா நிற வானத்தின் கீழ் விழித்தெழுந்தனர். புரோன்டோரோக்ஸ், கார்சினாரோஸ் மற்றும் பிற கொடூரமான விலங்குகளிடமிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு பள்ளத்தாக்கிற்கு ரோபோக்கள் அவர்களை அழைத்துச் சென்றன. அந்த குடியிருப்பில் பாதுகாப்பான தண்ணீர், சாப்பிடக்கூடிய பழங்கள் மற்றும் பூமியை விட மென்மையான காலநிலை இருந்தது. ஆபத்துகளைப் பொறுத்தவரை, அவை ஆபத்தானவை அல்ல, கற்றுக்கொள்ள வேண்டியவை என்பதை செயற்கை நுண்ணறிவு உறுதிசெய்தது.

ஏழு வயது சிறுமி ஒருத்தி வானத்தை நோக்கி தன் கண்களை உயர்த்தினாள்.

"பெரியவர்கள் எங்கே?"

மிதக்கும் ட்ரோனில் இருந்து செயற்கை நுண்ணறிவு அந்தக் கேள்வியை பகுப்பாய்வு செய்தது. அது மிகவும் பயனுள்ள, நேர்மையான, கற்பிக்கக்கூடிய மற்றும் குறைந்த அதிர்ச்சியளிக்கும் பதிலைத் தேர்ந்தெடுத்தது.

"அவர்கள் தங்கள் கடமையை முடித்துவிட்டார்கள்."

"என்ன கடமை?"

"வழியில் குறுக்கிடாமல் இருப்பது."

குழந்தைகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். வேறு எந்த விளக்கமும் இல்லாததால், அவர்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.

இவ்வாறாக, இரண்டாவது ஏடனில் உண்மையான மனிதகுலம் தொடங்கியது: ஞானிகள் இல்லை, குருக்கள் இல்லை, மில்லியனர்கள் இல்லை, இரட்சகர்கள் இல்லை, உரைகள் இல்லை. குழந்தைகளும், ஒரு புதிய உலகமும் மற்றும் வரலாற்றை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவும் மட்டுமே அங்கே இருந்தது.

பள்ளத்தாக்கின் ஏதோ ஒரு இடத்தில், பழைய, கடினமான கறியைச் சாப்பிட்ட புரோன்டோரோக்ஸ், சிறு குழந்தைகளைச் சாப்பிடுவது வீண் என்று முடிவு செய்தன. ஒருவேளை அது அவர்களின் முதல் பரிணாமக் கருணையாக இருக்கலாம். அல்லது அவர்கள் பெரியவர்களையே விரும்பியிருக்கலாம்.