என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 12 December 2022

விவாகரத்து குறித்து

விவாகரத்து குறித்து விவாகரத்தை மேற்கொள்ளும் எழுத்தாளரது பத்தி கண்ணில் பட்டது.  நிறைய சொல்லியிருக்கிறார். பலவற்றில் உடன் படுகிறேன். சிலவற்றில் இல்லை. 

எப்போதும் நான் வலியுறுத்துவது தான். விவாகரத்துக்கு இத்தனை அழுத்தமான பத்தி கூடத் தேவையா என்று கூடத் தோன்றுகிறது. இக்காலகட்டத்தில் திருமணம் என்பது, ஒரு ஆடை அங்காடிக்குள் நுழைந்து ஒரு ஆடையை கழற்றி மாட்டுவதாக மறுவிவிட்டது. ஏன்? அந்த ஒன்றை வைத்து எத்தனை எத்தனை பாலிடிக்ஸ்?

அவன் போக்கில் விட்டால் 'கெட்டு'விடுவான் என்று தெரிந்த அம்மாக்கள்  'கைக்கு அடக்கமான', 'குடும்பப் பாங்கான' பெண்ணாகத் தேடி தன் மகனுக்கு திருமணம் செய்துவைப்பார். மேலோட்டமாகப் பார்த்தால் இது 'தெரிந்தது தானே? இதிலென்ன?' என்பதாகத்தான் தோன்றும். ஆனால் இந்த ப்ராசஸை நீங்கள் கவனிக்கவேண்டும். நீங்கள் ஒழுக்கமாக, பொறுப்புள்ள பிள்ளையாக வளர்ந்திருக்கிறீர்கள் என்று கொள்வோம். உங்களுக்கு பெண் பார்க்க, ஒரு பெண் வீட்டை அணுகுகிறீர்கள். நீங்கள் ஒரு முறை அழைத்துப் பேசும் இடத்தில். 'கெட்டுப் போய்விடக்கூடிய'ப் பிள்ளையை பெற்றவர்கள் பத்து முறை அழைப்பார்கள். நீங்கள் பத்து முறை அழைத்தால், அவர்கள் நூறு முறை.

இந்த நூறு அழைப்பை வெகு ஜன சமூகம் எப்படியோ, 'முயற்சி' என்று புரிந்து அங்கீகரித்துவிட்டது. அது அவ்விதம் அங்கீகரிக்கப்பட்டதன் காரணத்தினால், பத்து முறை மட்டுமே அழைத்த நீங்கள் 'எல்லாவற்றிலும்' சரியாக இருந்தும் 'கோட்டை விட்டவர்' என்றாகிவிடுகிறீர்கள்.

பெண் வீட்டுக்காரர்களின் பக்கமிருந்து யோசித்தால் என்ன தோன்றும்? அவர்களின் தேர்வு எந்தப்பக்கம் சாயும்? பத்து முறை அழைக்கும் பலர் இருக்கையில் ஒரே ஒரு முறை அழைக்கும் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அவர்கள் அதிகம் யோசிக்கவில்லை என்றால், நிச்சயம் அவர்களின் முடிவு இந்த இடத்தில் உங்களுக்குப் பாதகமாகவே சாயும். இப்படி நடக்கக் காரணம்: 'குடும்பப்பாங்கான பெண் விவாகரத்துக்கெல்லாம் போக மாட்டாள்' என்கிற எண்ணம் தான்.  இந்தச் சிந்தனையைத் தகர்ப்பதிலிருந்து துவங்குகிறது விவாகரத்துகளை நியூ நார்மலாக்கும் இன்றைய சமூக இயக்கம். 'கெட்டுப் போக இருப்பவனைக் காப்பாற்றுவதற்கா நாங்கள் பிறந்தோம்?' என்பது அவர்களின் வாதம்.

ஆனால், இதில் இன்னுமொரு கோணமும் இருக்கிறது. சில பெண்கள் பொருளாதாரத்திலும், சமூக அந்தஸ்திலும் தன்னிறைவு பெற்றிருக்கிறார்கள். வீடு, கார் என்று வசதிவாய்ப்புக்களை தன் சுயத்திலேயே அடைந்துவிடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் கணவர்கள் இவர்களின் விருப்பத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் அமையாதபோது, இவர்களுக்கு திருமண பந்தம் என்பது, இவர்களை எவ்வித சமரசத்திற்குள்ளும் தள்ளாத வரையில் தான் நீடிக்கிறது அல்லது நீட்டிக்க விரும்புகிறார்கள். எப்போது அந்த கணவருக்கெனத் தன்னுடையதில் எதையேனும் சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழல் வருகிறதோ, அப்போது அப்படி ஒரு உறவே தேவையில்லை என்ற ரீதியில் விவாகரத்துக்குச் சென்றுவிடுகிறார்கள். 

நாம் வெளிப்படையாகக் காணும் 'குடும்பம், கதம்பம்' என்பதெல்லாம் பெரும்பான்மை, ஊர் வாய்க்கு அஞ்சி நடத்தும் நாடகமே. இவர்களில் பலருக்கு திருமண உறவைக் கடந்து போக, தன் சொந்த விருப்பத்திற்கென ஒரு ரகசிய உறவு (அ) கள்ள உறவு தேவைப்படுகிறது; மிகப்பல சமயங்களில் அது அவர்களுக்குக் கிடைத்தும் விடுகிறது; அவர்களின் வேலை, அதனால் கிடைக்கும் பொருளாதாரம் இரண்டுமே இதற்கு அவர்களுக்குப் பயன்படுகிறது. (இப்படித்தான் எல்லா திருமண உறவுகளும் என்று நான் சொல்லவில்லை என்பதை இந்த இடத்தில் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விழைகிறேன். இப்படிச் சில உறவுகள் என்று தான் சொல்கிறேன் என்பதைக் குறித்துக்கொள்ளவும்). 'லவ் டுடே' போன்ற படங்கள் இப்படியாக மாட்டிக்கொள்ளும் கணவர்கள், எவ்விதம் தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்ளலாம் என்கிற ரீதியில் தான் பார்வையாளர்கள் ஆதரவைப் பெற்றுவிடுகின்றன; அந்தப்படி இருபாலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவைத் தந்து அது தப்பித்தும் விடுகிறது. இந்த ஆதரவை வைத்து, சமூகத்தில் எத்தனைப் பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் புழுங்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவகையில், இந்தச் சில பெண்களின் இந்த நடத்தையைக் குறை சொல்வதற்கில்லை என்பது என் வாதம். ஏனெனில், இவர்களை ஆதிக்கம் செய்யும் அளவிற்கு இவர்களுக்குக் கணவர்கள் வாய்க்கவில்லை என்பதே  நிதர்சனமான உண்மை. இது நிகழ்வதற்கான சாத்தியங்களில் ஒன்று தான், மேலே நான் சொன்ன 'கெட்டுப் போய்விடக்கூடிய மகனைப் பார்த்துக்கொள்ளப் பெண்  தேடும் அம்மாக்களின் முயல்வு'. ஒரு காலத்தில் இந்த லாஜிக் அருமையாக வேலை செய்திருக்க வேண்டும். அந்த மாமியார் என்ற பெண் மருமகள் என்ற இன்னொரு பெண்ணை ஏமாற்றியதன் பலனை, அவள் தன் மகனை மிக்ஸர் தின்பவனாக நடத்துவதை வேடிக்கை பார்த்து அனுபவித்துக் கொள்ளவேண்டியதுதான் இன்றைய நிலை. 

இந்தச் சில பெண்களின் இந்த நடத்தையைக் குறை சொல்வதற்கில்லை என்று சொல்வதற்கு இன்னுமொரு காரணம் : அந்த இளம் வயதில் (முப்பதுகளுக்குள்) இது போன்ற விஷயங்களில் ஆழ்ந்த புரிதலை எதிர்பார்க்க இயலாது.  'Opposite poles attracts', 'மனம் ஒரு குரங்கு', 'தப்பு யார் தான் பண்ணலை' என்று சிறு வயதிலிருந்து சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டதன் அர்த்தம் விளங்காது. ஆனால் திருமணமாகி ஒன்றிரண்டு ஆண்டுகளில் எல்லாமும் தாமதமாகப் புரிந்துகொள்ள நேர்கையில், நடந்த எல்லா தவறுகளுக்குமான ஒற்றைத் தீர்வாக அந்த ரகசிய (அ) கள்ள உறவு அமைந்துவிடுகிறது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய அம்சம். Pornography இலக்கியமாவது இந்த இடத்தில் தான்.  இங்கே நேர்மையாக, ஊர் கூடி வாழ்த்தி அமைந்த பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் தான் toxic ஆகிவிடுகிறது.  பெற்றவர்கள், தங்கள் இயலாமைகளுக்கு இளம் கன்றுகளை எந்த நேரமும் பலிகடாவாக்கிக்கொண்டிருக்க முடியாது.

இதை இருபாலருக்குமே பொருத்தலாம் என்பது என் வாதம். இந்தப் பிரச்சனைக்கெல்லாம் நியாயமான தீர்வு: தாமதமாகக் கிடைக்கும் புரிதலை, துரிதப்படுத்துவதுதான். மேலோட்டமாக இது எதையும் பார்க்காமல் செய்யும் திருமணங்கள் இறுதியில் தோல்வி அடைவதென்னவோ இந்த அடிப்படைகளை வைத்துத்தான் என்பது என் வாதம். 

 இந்தப் பின்னணியில் இன்னுமொன்றையும் சொல்லலாம். இன்றைக்கு, விவாகரத்து என்பது துணை தேர்வின் இன்னுமொரு பகுதி. பல இடங்களில் வரதட்சணைக்காக, பொருளாதார லாபங்களுக்காக, அயல் நாட்டு விசாக்களுக்காக பெண்ணையோ பையனையோ ஏமாற்றித்தான் திருமணங்கள் செய்கிறார்கள். திருமணம் வரை இவர்கள் வெளிப்படுத்துவது ஒரு குள்ள நரியின் தேர்ந்த தந்திர முகமே. திருமணம் முடிந்த பிறகே உண்மை சூழல் வெளிப்படும். ஆகையால், திருமணத்தில் தான் ஒருவர் எத்தனை தவறானவர் என்பதையே நாம் கண்டுகொள்ள முடியும். ஆக, விவாகரத்தையே 'துணை தேர்வின் இன்னுமொரு பகுதி'யாகப் பார்ப்பது தான் இக்காலத்திற்குப் பொறுத்தமாக இருக்கும் என்பது என் வாதம்.