என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 7 December 2022

ஜீரோ டிகிரி இலக்கிய விருது - 2022 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

 ரோ டிகிரி பதிப்பகம் 2022ல் நடத்திய சிறுகதைகளுக்கான இலக்கியப் போட்டியில் என் 'சோஃபியா' உள்பட பத்து சிறுகதைகள், சிறுகதைகளுக்கான இலக்கிய விருதை வென்றிருந்தன. 


பரிசுவென்ற சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'ஜீரோ டிகிரி இலக்கிய விருது - 2022 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்' என்ற தலைப்பில் வரும் டிசம்பர் 10ம் திகதி வெளியாக இருக்கிறது. சிறுகதைத் தொகுப்பு நூலின் முகப்பு அட்டை இங்கே. இந்த நூல் ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் இணைய தளத்தில் விற்பனைக்கு இருக்கும். ஜனவரி 2023ல் நடக்க இருக்கும் புத்தகக் கண்காட்சியிலும் இடம் பெறும்.

எழுத்தாளர் இரா.முருகன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்,
"குளத்தங்கரை அரச மரத்தைக் கடந்து வெகுதூரம் வந்துவிட்ட" தமிழ்ச் சிறுகதைகளை வாசிக்க, இதோ இந்த நூல்....




Friday, 2 December 2022

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது - 2022 பரிசளிப்பு விழா

 2022ல் ஸீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய சிறுகதை/குறு நாவல்/நாவல் போட்டிகளில் எனது சிறுகதை 'சோஃபியா' சிறுகதைகளுக்காக இலக்கிய விருதை வென்றது இணைய நண்பர்கள் அறிந்ததே. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவை ஸீரோ டிகிரி பதிப்பகம் டிசம்பர் திங்கள் பத்தாம் திகதி விமரிசையாகக் கொண்டாடுகிறது. வென்ற பத்து சிறுகதைகளும் தொகுப்பாக வெளியாக உள்ளன. நிகழ்வில் எழுத்தாளர் கலாப்ரியாவுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' அளிக்கப்பட இருக்கிறது.  ஆக, எழுத்தாளர் கலாப்ரியா அவர்களையும், மற்ற சக படைப்பாளிகளையும் ஒரே நேரத்தில் சந்திக்கக்கூடிய  வாய்ப்பு இது. எனக்கு எப்போதும் போல், இப்போதும் அதிர்ஷ்டம் இல்லை. இயல்பிலேயே அதிர்ஷ்டம் கெட்ட கட்டை நான்.

இந்தியாவுக்கு வரும் வருடாந்திர வருகை கடந்த ஏப்ரலிலேயே வந்துவிட்டதால், இதற்கு செல்ல முடியாத சூழல். முன்னரே தெரிந்திருந்தால், இந்தியா வருகையை டிசம்பரில் திட்டமிட்டிருக்கலாம். 

போட்டிகள் நிறைந்த உலகில், எல்லோரும் ஓடுகிறார்கள் என்று ஓடி மனதுக்கு நெருக்கமாக அமைந்துவிடக்கூடியவைகளை இழக்க நேர்ந்துவிடுகிறது. அது போலத்தான் இதுவும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். 

நிகழ்வுக்கான அழைப்பிதழ் இங்கே. விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொள்ளவும். கலாப்ரியா அவர்களுக்கும், விருது வென்ற அனைத்து சக படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். 






Sunday, 13 November 2022

கேள்வி கேட்பதில் உள்ள மடத்தனம்

"வாழ்த்துக்கள் நண்பா... ஆனால், இதுவரை உங்கள் நூல்கள் ஒன்றைக்கூட நான் வாசித்ததில்லை"...

கிட்டத்தட்ட இதே (விஷமத்தனமான) அர்த்தத்தில் ஒன்றுக்கும் மேல் என்னிடம் கேட்கப்பட்டுவிட்டதால் இந்தப் பதிவு... (உண்மையில், இப்படிக் கேட்பவர்கள் ஏதோ விஷமத்தனமாகக் கேட்பதாக நினைத்துக்கொண்டிருப்பார்கள் போல.. இப்படி கேட்பதில் உள்ள மடத்தனம் புரியவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு)

எல்லோரும் எல்லா நூல்களையும் வாசித்துவிட முடியாது... அது சாத்தியமும் இல்லை.. நானும் பலரது நூல்களை வாசித்ததில்லை... எந்த நூலையும் வாசிக்காமலே தெளிவாக இருப்பவர்களை, வெற்றியாளர்களாக இருப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்... இன்னாரது நூலை வாசிக்கிறேன் என்பதில் எந்தச் சிறுமையும் இல்லாதது போல் எந்தப் பெருமையும் இல்லை... அவரவரது தளம் அவரவர்க்கான நூல்களை வாசிக்க வைக்கிறது... அவ்வளவுதான்...

'என்ன வாசிக்கலாம்' என்று யாரிடமாவது நீங்கள் ஆலோசனை கேட்டால், அவர்கள் ஒரு பட்டியல் தருவார்கள்... நீங்கள் வாசித்து பண்படைய அல்ல? தங்களை உங்கள் முன் 'அறிவாளியாக, பண்பட்டவராக'க் காட்டிக்கொள்ளத்தான் அந்தப் பட்டியல்... உண்மையில் அந்த பட்டியலில் உள்ள நூல்கள் சொல்லும் கருத்தாக்கங்களை உள்வாங்கியவர்களாகக் கூட பட்டியலை நீட்டுபவர்கள் பெரும்பான்மைக்கு இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை... வி.சே சொன்னதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன் 'நான் புத்திசாலின்னு நினைச்ச நிறைய பேர் முட்டாளாத்தான் இருந்திருக்காங்க..' ... அவர்கள் போடும் சீன் அப்படி...

சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.. தங்களை, தாங்கள் விரும்பி அணிந்த முகமூடியை உங்களிடம் விற்க முனைகிறார்கள்... நீங்கள் அதை வாங்கினால், அவர்களும் நீங்களும் ஒரே தளத்தில் நிற்கிறீர்கள் என்று பொருள்... அவ்வளவு தான்...

நீங்கள் என்ன வாசிக்க வேண்டும் என்பது குறித்து என் எளிய பரிந்துரை இதுதான்...

உங்கள் இத்தனை ஆண்டுகால வாழ்வில் உங்களுக்கு ஒரு அனுபவம் கிட்டியிருக்கும்.. அந்த அனுபவத்தில் சில கேள்விகள், ஐயங்கள் இருக்கும்... அந்தக் கேள்விகளுக்கு பதில் தேடும் வகையில் உங்கள் வாசிப்பைத் தகவமைத்துக்கொள்ளுங்கள்... ஆக உங்கள் அனுபவமே உங்கள் வாசிப்புக்கான நூல்களை அடையாளம் காணும் லென்சாக இருத்தல் நலம்.. இப்படியாக நீங்கள் கண்டடையும் நூல்களின் பட்டியலில் என் நூல்கள் இடம் பெற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.. இன்னும் சொல்லப்போனால், எந்தக் குறிப்பிட்ட எழுத்தாளரின் எல்லா நூல்களும் இடம் பெற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை...

அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று விட்டில் பூச்சிகள் போல் போய் விழாதீர்கள்.. கண்டதையும் பரிந்துரைப்பவர்கள் உண்மையில் குழம்பிய மன நிலையில் தான் இருப்பார்கள்... சுத்தமாகத் தெளிவே இல்லாத எழுத்தாளர்களைக் கூட நான் பார்த்திருக்கிறேன்... புரியாத வார்த்தைகளில் எதையாவது சொல்லி, தனக்குத்தானே 'அறிவார்ந்த' முத்திரையைத் தருபவர்களாகத்தான் பலரைக் கடந்திருக்கிறேன்.. வாங்கும் பத்தாயிரம் சம்பளத்தில் வீட்டு வாடகைக்கு மூன்றாயிரம் தந்துவிட்டு, வீட்டுக்காரியின் கையில் மூன்றாயிரத்தைத் திணித்துவிட்டு எஞ்சிய பணத்தில் தனக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத நூல்களை வாங்கி வாசித்து, முக நூலில் சிலாகிக்கும் பிரகஸ்பதிகளைத் தெரியும்.. பாவம் அந்தப் பெண்களும், அந்தக் குடும்பமும்... எந்த வாசிப்பால் குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தைக் கூட உங்களால் நல்ல விதத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லையோ அந்த வாசிப்பே தவறான பாதை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்...

ஒரு நல்ல வாசிப்பு என்பது ஆரோக்கியமான நேர்மையான வழிகளில் உங்கள் பொருளாதார, மற்றும் சமூக மேன்மையை நோக்கி உங்களைச் செலுத்துவதாக அமைய வேண்டும்... உடனே, அலமாறி முழுவதும் self help, how to invest போன்ற நூல்களை அடுக்க வேண்டியதில்லை... உங்களிடம் கொஞ்சம் நேரம் இருந்து, கூடுதல் ஊதியத்திற்கென எதையேனும் கற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால், உங்கள் ஊரில் தைத்த உடைகளுக்கான டிமான்ட் என்ன என்பதைச் சொல்லும் ஒரு எளிய கட்டுரை கூட மிகவும் நல்ல வாசிப்பாகும்.. 3 மாதங்கள் செலவிட்டு முறையாகத் தையல் கற்றுக்கொண்டால் போதுமானது...

இதுவே நல்ல வாசிப்பு... If your reading doesn't help you better yourself in any way, then, you must give up that reading and must unlearn whatever you learnt irrelevant to you and your life through that.

பி.கு: அமெரிக்காவில் சென்ற ஆண்டு நடந்த புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள் சுமார் 50 பிரதிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் 12 தவிர ஏனைய 38 பிரதிகளும் விற்றிருக்கின்றன. நியூ ஜெர்சியில் என் நூல் ஒன்றை வாங்கி வாசித்த யாரோ, நூல் பிறருக்கு பயன்படட்டும் என்கிற நோக்கில் Edison Public Libraryக்கு அளித்திருக்கிறார்கள் என்பதையும் இப்பதிவில் குறிப்பிட விரும்புகிறேன். ஆக சொல்ல வருவது என்னவென்றால், எந்த எழுத்தையும் வாசிக்க யாரோ நான்கு பேர் இருக்கத்தான் செய்வார்கள். அந்த எழுத்து எழுத்தாளனையும், வாசிப்பு வாசித்தவனையும் என்ன செய்தது? அதனால் சம்பந்தப்பட்டவர்கள் அடைந்த நன்மை/மேன்மை என்ன? என்பது தான் கேள்வி. இதுவெல்லாம் புரிந்தால், இந்தக் கேள்வியே எழாது..



Tuesday, 1 November 2022

குப்பை - அறிபுனைச் சிறுகதை - Youtubeல்

குப்பை - அறிபுனைச் சிறுகதை - Youtubeல்


சொல்வனம் தளத்தில் வெளியான எனது 'குப்பை' சிறுகதையை ஒலிவனத்துக்கு மாற்றியிருக்கிறார்கள் சொல்வனம் குழுவினர். தமிழ்ச் சிறுகதைகள் மக்களிடையே எளிதாகச் சென்றடைய சொல்வனம் குழுவினர் மேற்கொள்ளும் இந்த முயல்விற்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றிகளும்.

youtube தளங்களில் இச்சிறுகதையின் ஒலிவடிவம் கேட்கக்கிடைக்கிறது. Youtube தளத்தில் இச்சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.

குப்பை - அறிபுனைச் சிறுகதை

https://youtu.be/eKhQUAKetR0

Monday, 31 October 2022

ஏழு கடல் ஏழு மலை தாண்டி - அறிபுனைச் சிறுகதை - Spotify மற்றும் Youtubeல்

 ஏழு கடல் ஏழு மலை தாண்டி - அறிபுனைச் சிறுகதை - Spotify மற்றும் Youtubeல்


சொல்வனம் தளத்தில் வெளியான எனது 'ஏழு கடல் ஏழு மலை தாண்டி' சிறுகதையை ஒலிவனத்துக்கு மாற்றியிருக்கிறார்கள் சொல்வனம் குழுவினர். தமிழ்ச் சிறுகதைகள் மக்களிடையே எளிதாகச் சென்றடைய சொல்வனம் குழுவினர் மேற்கொள்ளும் இந்த முயல்விற்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றிகளும்.

Spotify மற்றும் youtube தளங்களில் இச்சிறுகதையின் ஒலிவடிவம் கேட்கக்கிடைக்கிறது. 

Spotify தளத்தில் இச்சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.

ஏழு கடல் ஏழு மலை தாண்டி - அறிபுனைச் சிறுகதை

https://open.spotify.com/episode/4bwgNtW2pk7jqUnZO7u2E4?si=SkzGAFtyQSCt2f7mNhfFaQ

Youtube தளத்தில் இச்சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.


ஏழு கடல் ஏழு மலை தாண்டி - அறிபுனைச் சிறுகதை

https://youtu.be/ikDHo7ctgWs





Sunday, 30 October 2022

ஆவரேஜ் - அறிபுனைச் சிறுகதை - Spotify மற்றும் Youtubeல்

தமிழ்ச் சிறுகதைகளை ஒலி வடிவத்துக்கு மாற்றும் முயல்வின் ஒரு பகுதியாக சொல்வனம் தளத்தில் வெளியான எனது 'ஆவரேஜ்' சிறுகதையை ஒலிவனத்துக்கு மாற்றியிருக்கிறார்கள் சொல்வனம் குழுவினர். தமிழ்ச் சிறுகதைகள் மக்களிடையே எளிதாகச் சென்றடைய சொல்வனம் குழுவினர் மேற்கொள்ளும் இந்த முயல்விற்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றிகளும்.

Spotify மற்றும் youtube தளங்களில் இச்சிறுகதையின் ஒலிவடிவம் கேட்கக்கிடைக்கிறது. 

Spotify தளத்தில் இச்சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.


ஆவரேஜ் - அறிபுனைச் சிறுகதை

https://open.spotify.com/episode/6KwkRf8UoeraQJSojE1kUt?si=ita3FmdsRcqL68afyq9Mgg

Youtube தளத்தில் இச்சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.

ஆவரேஜ் - அறிபுனைச் சிறுகதை

https://www.youtube.com/watch?v=Ifq88S5S4Rw





Sunday, 16 October 2022

புராதான ஏலியன்கள் - விமர்சனம் - Boje Bojan

 புராதான ஏலியன்கள்  - ராம்பிரசாத் -அறிவியல் சிறுகதை தொகுப்பு -பதிப்பகம் ,நியூ லாஜிக் பப்ளிஷர்ஸ்  - பக்கங்கள் 142-  முதல் பதிப்பு ,2022

புத்தகம் பற்றி :

மொத்தம் 142 பக்கங்களும் 10 தலைப்புகளும் கொண்டு இருக்கும் இந்த சிறுகதை தொகுப்பில் எதிர் கால தொழிநுட்பங்களை  மையமாக கொண்ட கதைகளே எழுதபட்டு இருக்கிறது  அதற்காக எழுத்தாளர் எடுத்து கொண்ட உழைப்பு என்பது இந்த புத்தகம் படிக்கும் பொது நாம் தெரிந்து கொள்ள முடிகிறது . புத்தகத்தில் உள்ள எல்லா தலைப்பு கதைகளும் சிறப்பாக இருக்கிறது அதில் சில கதைகளை பற்றி பார்ப்போம்.

1) முதல் சிறுகதை தொகுப்பான சேஷம் என்னும் கதை ஒரு பெண்ணுக்கும்  பாம்பின்  மரபணு கொண்ட ஸ்டுவர்ட்  என்ற ஆணுக்கும்  நிகழும் உறவு பற்றியும் அதன் பிறகு நடக்கும் சமபவங்களே இந்த கதையின் கரு பொதுவாக மனித மரபணு  இல்லமால் விலங்கின் மரபணு கொண்டு எதிர் கால மனிதர்களை உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சி இப்போதும் ஒரு தியரி நிலையில் தான் இன்றும் இருக்கிறது ஒரு வேலை அப்படி பட்ட ஒரு சம்பவம் வெற்றிகரமாக நிகழ்ந்து அதன் மூலம் ஒரு மனிதன் பிறந்தால் இந்த சமூகம் அதை ஏற்றுக்கொளுமா கொள்ளாத என்ற கேள்விக் ஒன்றை மையமாக கொண்டு எழுத பட்டுஇருக்கிறது இந்த கதை.

2) குளம் : மூன்றாவது சிறுகதையாக இருக்கும் குளம் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிறுகதை என்று இதற்கான காரணம் என்ன என்று பார்ப்பதற்கு முன் இதன் கதையை பார்த்து விடலாம் தஞ்சை மாவட்டம் தள்ளாகுளம் என்று கிராமத்தில் ஒரு குளத்தில் கரும்பள்ளம் தோன்றி இருக்கிறது என்ற செய்தி வருகிறது. இந்த செய்தி வந்தவுடன் அந்த ஊருக்கு ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள் அதில் இருவர் தான் தியாகு மற்றும் ராஜிவ் இவர்கள் இருவரும் இந்த மர்மத்துக்கான விடை கண்டுபிடித்தார்களா இல்லயா என்பதை வித்யாசமான முறையில் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் பொதுவாக simulation theory என்னும் ஒரு தியரி சில ஆய்வாளர்களால் முன்னிறுத்த படுகிறது அப்படி பட்ட அந்த தியரியை மையமாக வைத்தே இந்த கதையை சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

இது தவிர எப்போதும் பெண் என்ற கதையில் gene editing பற்றியும் , காதல் என்ற கதையில் கால பயணம் பற்றியும் , பிரதி என்ற கதையில் clone பத்தியும் சொல்லி இருக்கிறார் இது தவிர மற்ற கதைகளும் கவனிக்கபட வேண்டிய ஒன்று தான். கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு சிறுகதை தொகுப்பு இது.





Wednesday, 5 October 2022

அமெரிக்க தமிழ் இலக்கியத்தில் அறிவியல் புனைவுகளுக்கான இருப்பு

அமெரிக்க தமிழ் இலக்கியத்தில் அறிவியல் புனைவுகளுக்கான இருப்பு



அமெரிக்க தமிழ் இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், அதில் அறிவியல் மற்றும் அதிபுனைவுகள் மற்றும் கணிதப் புனைவுகளுக்கென 2017க்கு முன் வரை ஒரு பிரத்தியேக முகம் இருந்ததாக நான் அவதானிக்கவில்லை. அறிவியலைத் தெரிவு செய்தவர்களே அமெரிக்கா வருகிறார்கள். அவர்களில் பலர் எழுத்துலகிலும் இருக்கிறார்கள். ஆயினும், அமெரிக்காவில் அறிவியல் புனைவெழுத்துக்கள் 2019 வரை இல்லை. (யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும். உதிரியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியான ஆக்கங்களோ, அறிவியலை ஒரு தகவல் செறுகலாக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் ஆக்கங்களோ, treasure hunt பாணி கதைகளில் அறிவியல் தகவல்களை க்ளூக்களாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆக்கங்களோ கணக்கில் சேராது). 

தொழில் நுட்பங்களுக்கு பெயர் பெற்ற அமெரிக்காவில் குடியேறிய தமிழ்ச் சமூகத்தினிடையே 2019 வரை அறிவியல் மற்றும் அதிபுனைவுகள், கணிதப்புனைவுகள் (2017 வரை) இல்லாமல் இருந்திருப்பது ஒரு பெரும் குறை. 

அதிகபட்சம், சுஜாதாவின் நூல்களே கைகாட்டப்படுகின்றன. எனக்கு சுஜாதாவின் மீது பெரிய மரியாதை உண்டு. ஆனால் அவரது அறிபுனை நூல்கள் 2000த்தின் துவக்கத்திற்க்கானவையே என்பதையும் நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது. நவீன அறிவியல் புலத்தில், Avengers, Time Trap, Endless, Martian, Annihilation போன்ற அமெரிக்க ஆக்கங்களுக்கு மத்தியில் அவற்றுக்கு நிகரான நவீன ஆக்கங்களின் தேவை அமெரிக்க தமிழ் இலக்கிய சூழலில்  2019 வரை இல்லை என்பதை யாரும் மறுக்க இயலாது.   

அறிவியல் புனைவுகள் எழுத மென்மேலும் எழுத்தாளர்கள் அமெரிக்காவில் உருவாக வேண்டும் என்பது என் விழைவு.    அறிபுனைவெழுத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர வேண்டும். அப்போதுதான் இது ஒரு தொடர் இயக்கமாக உருவாகும்.  

அமெரிக்காவில் புத்தக வாசிப்புக் குழு என்ற ஒன்று துவங்கினால் அதில் முதலில் வாசிக்கப்படும் நூல்கள் பெரும்பாலும் பங்குபெறுபவர்களது வீடுகளில் அவரவர்களது பெற்றோர்கள் வாசித்த நூல்களாகத்தான் இருக்கும். பிள்ளைகளுக்கு வாசிப்பு என்பது பெரும்பாலும் பெற்றவர்கள் வாசிப்பதைப் பார்த்தே உருவாகிறது. பல சமயங்களில் வாசிப்புப்  பழக்கத்தை பிள்ளைகள் மத்தியில் வளர்க்கவேண்டுமெனில், வெறுமனே நூல்களை வாங்கி வீட்டில் வைப்பதே போதுமானதாகத்தான் இருக்கிறது என்று தான் இதை வைத்துப் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. இல்லையா?

இந்தப் பின்னணியில் அமெரிக்கத் தமிழர்களின் வீடுகளில் உள்ள புத்தக அலமாரிகளில் இருக்க வேண்டிய நூல்களாக நவீன அறிவியல் பேசும் அறிபுனை, அதிபுனை மற்றும் கணிதப் புனைவுகள் இருப்பது  தொலை நோக்குப் பார்வையில் நன்மை பயக்கும் என்றே எண்ணுகிறேன்.  இதுவே என் பரிந்துரையும் கூட. 


'வாவ் சிக்னல்', 

'புராதன ஏலியன்கள்', 

'220284' 

ஆகியன அமெரிக்கத் தமிழ் சூழலில் நவீன அறிவியல் இலக்கியத்தின் தடங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என்றால் அது மிகையாகாது.

அக் 9, 2022ல் பின் வரும் முகவரியில் மேற்சொன்ன நூல்களுடன் வாசகர்களிடையே நல்லாதரவைப் பெற்ற நூலான 'வதுவை' நூலும் Atlanta Tamil Library நடத்தும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு இடம் பெறும் என்பதை அமெரிக்கத் தமிழ் உறவுகளுக்கு இப்பதிவின் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.  

புத்தகக் கண்காட்சி வரும் அக்டோபர் 9, 2022 அன்று பிற்பகல் 2 மணி முதல், கீழ்கண்ட முகவரியில் நிகழும். அனுமதி இலவசம்.


Fowler Park, Pavilion 1,

4110, Carolene Way,

Cumming, GA - 30040.