என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday, 11 June 2012

பொருந்துத‌ல், பொறுத்துத‌ல்

பொருந்துத‌ல், பொறுத்துத‌ல்


நாம் எல்லோரும்
நமக்கு விருப்பமான‌
ஒன்றுடன்
பொறுத்திக்கொள்ள‌
தொடர்ந்து முயற்சிக்கையில்,


நம் எல்லோரையும்
ஏதாவதொன்று
தனக்குப் பொறுத்தமாக்கிக்
கொள்கிறது...


அதை நாம்
விரும்பினாலும்,
விரும்பாவிட்டாலும்... 


ந‌ம்மை,
எதனோடோ
பொருந்திக் கொள்வதற்கும்,
எதுவோ
பொறுத்திக் கொள்வதற்கும்,
இடையேயான
மெல்லிய‌இடைவெளியில்
நாம் எல்லோரும் , எப்போதும்
உழ‌ல்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5681)

Monday, 4 June 2012

உயிர் பிழைத்தலின் நிய‌திக‌ள்

உயிர் பிழைத்தலின் நிய‌திக‌ள்

தானே துளிர்த்து,
தானே வேர் விட்டு,
தானே நீர் உறிஞ்சி,
தானே ம‌ண் இறுக்கி,
தானே கிளை ப‌ர‌ப்பி
தானே மொக்கு விட்டு,
தானே நிற‌மூட்டி,
தானே பூ ம‌ல‌ர்ந்து,
தானே க‌னி விட்டு,


இப்ப‌டி
எல்லாவ‌ற்றிற்கும் தானே
பொறுப்பேற்கிற‌து சுய‌ம்பு...


இருந்தும்
உயிர் பிழைத்தலின் நிய‌திக‌ள்
ஏனைய‌தாவ‌ர‌ங்க‌ளைப் போல‌த்தான்
சுய‌ம்புக‌ளுக்கும்...


#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5664)

Tuesday, 29 May 2012

பழக்கப்படாத பாதைகளின் சாத்தியங்கள்


பழக்கப்படாத பாதைகளின் சாத்தியங்கள்


நாம்
எல்லோரும்,
எப்போதும்,
எதையேனும்
நோக்கிப் போய்க்கொண்டே
இருக்கிறோம்...

ந‌ம் பாதைக‌ள்
ந‌ம் புல‌ன்க‌ளுக்கு
ஏதோ ஓர் வ‌கையில்
ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌வைக‌ளாக‌வே
இருக்கின்ற‌ன‌...

ப‌ழ‌க்க‌ப்ப‌டாத‌பாதைக‌ளில்
செல்ல‌நேர்வ‌து குறித்து
பெரும்பாலும்
நாம்
எண்ணிப்பார்ப்ப‌தே இல்லை...

ஆயினும்
ப‌ழ‌க்க‌ப்ப‌டாத‌பாதைக‌ளில்
ப‌ய‌ணிப்ப‌த‌ன் சாத்திய‌ங்க‌ள்
ந‌ம் பாதைக‌ள் எங்கும்
விர‌விக்கிட‌க்கின்ற‌ன‌...


நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5650)

Monday, 7 May 2012

ஓர் உருவம்


ஓர் உருவம்
புரிதலின் வடிவங்கள்
முப்பரிமான உருவங்கள்
கொண்டிருக்கின்றன...


எங்கிருந்து அவற்றை
பார்க்கவேண்டும்
என்கிற இலக்கணம்
தெரிந்திருக்க அவைகள்
நம்மை நிர்பந்திப்பதில்லை...


எங்கிருந்து நோக்கினும்
ஓர் உருவம்
நிச்சயம் தெரிகிறது...


எந்த இடம்
செளகர்யப்படுகிறதோ
அதற்கென ஓர் உருவம்
கொள்கிறது...



- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)


நன்றி உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5571)

Monday, 30 April 2012

பூட்டுகளைத் திறக்கும் சாவிகள்


பூட்டுகளைத் திறக்கும் சாவிகள்
பூட்டுகளை உடைத்தெறியும்
சாவிகளை
எவரும் தேடுவது போல்
தோன்றவில்லை...

பூட்டுகள்
செருகியிருக்கும் சுவர்களைப்
மூர்க்கமாக உடைத்துத்
திறக்கிறார்கள்...

உடைத்த சுவர்களை
பட்டுத் துணி கொண்டு
மறைக்கிறார்கள்...

பூட்டுகளைத் திறக்கும்
சாவிகளைச் செய்யும்
கொல்லனை எவரும்
கண்டுகொள்ளவில்லை...





நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5552)

மிஞ்சும் மெளனம்


மிஞ்சும் மெளனம்
துரோகி ஒருவன்
புறமுதுகில் பேசுகையிலும்,

வார்த்தைகளைத் தப்பர்த்தம்
கொண்டவன் விலகி நடக்கையிலும்,

நுனிக் கிளையில் அமர்ந்தவன்
அடிக்கிளையை வெட்டுகையிலும்,

வார்த்தைகளை நம்பாதவனின்
விஷமச் சிரிப்புகளிலும்,

இனி விளக்கி
பயனில்லையெனும் போதும்,

எந்த விளக்கமும்
பயனளிக்காதெனும் போதும்

மெளனமே மிஞ்சுகிறது...



நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5552)

Monday, 23 April 2012

தொலையும் வாழ்க்கை


தொலையும் வாழ்க்கை
நம் பயணங்களை
எப்போதும்,
எதை நோக்கியேனும்,
தொடர்ந்தபடியே இருக்கிறோம்...


கடக்க நேரும் எல்லாவற்றிலும்
எங்கேனும் இடையில் நுழைந்து,
எங்காவது இடையில் வெளியேறிவிடுகிறோம்...


இடைப்பட்ட பாதைகளில்
பரிதாபமாய் தொலைகிறது
வாழ்க்கை...


நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5523)

Tuesday, 10 April 2012

ராணி (15.4.2012) வார இதழில் என் க‌விதைக‌ள்

15.4.2012 தேதியிட்ட ராணி குடும்ப வாரந்திரியில் நான் எழுதிய 'இனிக்கும் இற‌ப்புக‌ள்' என்ற‌ க‌விதையும், 'தாக‌ நிலா' என்ற‌ க‌விதையும் ப‌க்க‌ம் 42 ல் வெளியாகியிருக்கிறது. க‌விதைக‌ள் வெளியான ராணி வார இதழின் 42 வ‌து ப‌க்க‌த்தின் பிர‌தி இங்கே.


இனிக்கும் இறப்புகள்


இந்தத் தேயிலை
என்றோ இறந்திருக்கவேண்டும்...

பசுவின் உதிரத்தில்
க‌டைசி உயிர்
பாலாகிவிட்டிருக்க‌வேண்டும்...

கரும்பு தன்னைப்பிழிந்து
சர்க்கரைக்கு தன்
உயிரை அளித்திருக்கவேண்டும்...

உயிரற்ற தேனீர்
எத்தனை இனிக்கிறது?...


தாகம்



அகண்ட மதிலின் மடியில்
சிறு குட்டையென‌
தேங்கிக்கிடந்த நீரில்
தாகம் தணித்துக்கொண்டிருந்தது
உச்சி வெய்யில்...


ஒரு சிட்டுக்குருவி,
ஒரு துறுதுறு அணில்,
ஒரு சிறிய மியாவ்
என ப‌கிர்ந்துகொண்ட‌ நீரை
பொழுது சாய்ந்தும் வெய்யில்
விடுவ‌தாயில்லை...


நடுநிசியில்
ஒர் இனம்புரியா கண்விழிப்பில்
வெய்யிலை விர‌ட்டிவிட்டு
தாக‌ம் த‌ணித்துக்கொண்டிருந்த‌து
பால் நிலா ...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)


நன்றி
ராணி (15.4.2012) குடும்ப வார இதழ்.

என் கவிதைகளை வெளியிட்ட ராணி வார இதழ் ஆசிரியர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, 26 March 2012

மெல்லிய தீப்பொறி

மெல்லிய தீப்பொறி



எனக்குள் ஒரு அக்கினிப்பொறி
மெல்லக் க‌ன‌ன்று கொண்டிருக்கிற‌து...


மிக‌க்க‌வ‌ன‌மாய் அந்த‌ப் பொறியை
பெருந்தீயென‌ பெருக்க
தொடர்ந்து முய‌ற்சிக்கிறேன்...


அது
சிணுங்குகிற‌து...
சாய்கிற‌து...
நீள்கிற‌து...
குறுகுகிறது...
கண் சிமிட்டுகிறது...
ஆனால் அணையவில்லை...


என்றாவது ஒரு நாள்
அது அணைந்துவிடும் என்றும்
தோன்றவில்லை...


அணைதல் இல்லாத‌ அந்தப் பொறி,
சாகாவ‌ர‌ம் பெற்ற‌ அந்த‌ப் பொறி
விசித்திரம் எனப் படுகிறது எனக்கு...


கொஞ்சமென அதன் முனை கிள்ளி
வழியெங்கும் தூவிச் செல்கிறேன்...


இதோ, இப்போது கூட‌
இந்தக் கவிதையென...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5419)

Monday, 19 March 2012

மிகமெல்லிய நூல்

மிகமெல்லிய நூல்



மிக மெல்லிய நூலொன்று
என்னை எனக்கான திசையில்
கவனமாய்ச் செலுத்திக்கொண்டிருக்கிறது...


அதன் நீள அகலங்களை
நான் அறுதியிட்டுக்கொண்டே
இருக்கிறேன்...

அந்த நூலை எப்படியேனும்
அறுத்துவிட எப்போதும் யாரேனும்
முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள்....

அந்த நூல் அறுபடுவது
என்னை நானே கொல்வதுபோல...

அதில் எனக்கு ஒப்புமையில்லை....

மிகவும்
பொறுமையுடனும்,
சகிப்புத்தன்மையுடனும்,
நிதானத்துடனும்,
உறுதியுடனும்,
திடத்துடனும்
அந்த நூலைப் பாதுகாக்கிறேன்....



- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)




# நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5402)