என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday, 27 August 2012

குங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை


குங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை

3.9.2012 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழில் நான் எழுதிய 'வாங்க காதலிக்கலாம்' என்ற தலைப்பிலான சிறுகதை பக்கம் 70ல் துவங்கி ‍- 75 ம் பக்கம் முடிய‌ வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பிரசுரமான சிறுகதையின் பிரதி இங்கே. படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.






பிரபல ஓவியர் மாருதி, மிக அழகாக, சிறப்பாக ஓவியம் வரைந்திருக்கிறார். கதையை எழுதுகையில் நான் கற்பனை செய்திருந்த காட்சிகளை தத்ரூபமான ஒவியமாக வரைந்திருக்கும் அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.












பி.கு: எனது இச்சிறுகதையை வெளியிட்ட குங்குமம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, 13 August 2012

இரைஞ்சுத‌ல்


இரைஞ்சுத‌ல்

நம் செய்கைகள்
அனைத்திற்கும்
இதுதான் அர்த்த‌மென‌
நாம் எல்லோரும்
எதை எதையோ
குறிப்பிடுகிறோம்...

அவ்வ‌ர்த்த‌ங்க‌ள் பொருத்த‌மில்லை
எனும்போது
த‌ன்னிலை விள‌க்க‌மொன்றிற்கான‌
வாய்ப்பை இரைஞ்சுகிறோம்...

அவ்வாறான‌வாய்ப்பொன்றிற்கு
இரைஞ்சாத‌வ‌ர்க‌ள்
ந‌ம்மிடையே
எவ‌ரும் இல்லை...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5875)

Monday, 30 July 2012

தெளிவற்ற நாடகங்கள்

தெளிவற்ற நாடகங்கள்


நாடகங்கள்
எங்கு,
எவ்விதம்
துவங்குகிறதென‌
நம்மிடம்
தெளிவான குறிப்புகள்
இல்லை...

பிற நாடகங்களின்
பக்க விளைவுகளெனவும் கூட‌
புதியதாய்
ஓர் நாடகம்
உயிர்த்தெழக் கூடும்...

நாம்
நடித்துக்கொண்டிருக்கும்
நாடகம் கூட‌
அப்படி ஒன்றாக‌
இருக்கக் கூடும்...

இப்ப‌டித்
தெளிவான‌குறிப்புக‌ள்
இல்லாத‌நாட‌க‌ங்க‌ளைத்தான்
நாம்
தின‌ம் தின‌ம்
விரும்பி ந‌ட‌த்துகிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5802)

Monday, 23 July 2012

பயணத்தின் சாரம்

பயணத்தின் சாரம்



ஓர் நாழிகை கூட‌
வீணாகிவிடாமல்
சீராக‌
பாதையினூடே
பயணித்தல்
இலக்கை எட்டுதலைத்
துரிதமாக்குகிறது தான்...


ஆனால்,
மைல்கற்கள் தோறும்
பயணத்தை நிறுத்தி
திரும்பிப் பார்த்தலே
பயணத்தின் சாரமாகிறது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5788)

தனியாத வேட்கை

தனியாத வேட்கை


எந்த ஒரு நாடகத்தையும்
நம் விருப்பப்படிதான்
நடத்துகிறோமென‌
நாம் எல்லோரும்
நினைத்துக்கொள்கிறோம்...


நாடகங்கள் அனைத்தும்
தங்கள் விருப்பப்படிதான்
நம்மை இயக்குகின்றன‌
என்பதை
நாடகம் முடியும் தறுவாயிலோ,
முடிந்த பின்னரோ தான்
உணர்ந்து கொள்கிறோம்...


ஆயினும்,
ஓர் நாடகத்தை
நம் விருப்பப்படியே
நடத்திட வேண்டுமென்கிற‌
தனியாத வேட்கை
நம் அனைவருள்ளும்
பெருந்தீயென எரிந்துகொண்டேதான்
இருக்கிறது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5788)

Monday, 9 July 2012

வேண்டாத‌வைக‌ளும் வேண்டிய‌வைக‌ளும்

வேண்டாத‌வைக‌ளும் வேண்டிய‌வைக‌ளும்


நமக்கு
என்ன வேண்டுமென்பதில்
எப்போதுமே
நமக்கு
குழப்பங்கள் இருக்கிறது...


நமக்கு
வேண்டாதவைகளிலிருந்து
வேண்டியவைகளை
துல்லியமாக இனம் காண‌
நம்மால்
எப்போதுமே முடிவதில்லை...


ஆனாலும்,
நாம் எல்லோரும்
எப்போதும்
எதையேனும்
வேண்டியபடியேதான் இருக்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5762)

ஓர் மெல்லிய இடைவெளி

ஓர் மெல்லிய இடைவெளி


கைக்கெட்டும் தொலைவிலேயே
இருந்தாலும்
நம்மில் பலர்
வெகு தொலைவில்
நின்று கொள்கிறார்கள்...


நம் பாதைகளுக்கு
அவர்கள் எட்டாது
நிற்கிறார்கள்...


அவர்களை அண்டுவதான முயற்சிகள்
நமது பயணங்களைத்
தாமதமாக்க கூடுவதாக,
ரத்து செய்யவும் கூடுவதாக‌
இருக்கிறது...


இங்கு வலுக்கிறது
தவிர்க்க இயலாமல்
ஓர் மெல்லிய இடைவெளி...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5762)

Monday, 2 July 2012

அதுவாகவே ஆகி விடுதல்

அதுவாகவே ஆகி விடுதல்


நாம்
அடைய விரும்பும் எல்லையின்
வெவ்வேறு பரிமாண‌ங்களை
அவதானித்துக் கொண்டே
இருக்கிறோம்...


அப்பரிமாணங்களுக்கு
நம்மை நாமே
தொடர்ந்து
பழக்கப்படுத்திக் கொள்கிறோம்...


நாம்
எதைத் தொடர்ந்து
பழக்கப்படுத்துகிறோமோ
பிற்பாடு
அதுவாகவே ஆகி விடுகிறோம்...

#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5725)

Monday, 25 June 2012

அந்த ஓர் பயணம்

அந்த ஓர் பயணம்

நாம் பாதைகளில்
எட்டி நடந்து,
எம்பிக் குதித்து,
இடறிவிட்டதாய் நடித்து,
தாவிக் குதித்து,
நெளிந்து,
வளைந்து,
எப்படி பயணித்தாலும்
இறுதியில்
யாரையேனும்
முந்திச் செல்லவே
விரும்புகிறோம்...


முந்திச் செல்வதன்
சாத்தியங்களையும்,
வாய்ப்புக்களையும்
தொடர்ந்து விஸ்தரிக்கிறோம்...


நாம்
அடைய விரும்பும்
எல்லைவரை விரிந்துகிடக்கும்
பாதைகள்
தன்னை அடைவதான‌
யாரோ ஒருவனின்
பயணத்தை எதிர்நோக்கி
சலிக்காமல்
காத்திருப்பைத் தொடர்கின்றன...


அந்த ஓர் பயணத்தை தான்
நாம் பயணிக்கிறோமென‌
நம்பியபடியே தான்
நாம்
நம் பயணங்களை
எப்போதும் மேற்கொள்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5718)

Monday, 18 June 2012

பிரதானப்படுத்துதல்

பிரதானப்படுத்துதல்


நாம் எல்லோரும்
நமது செய்கைகள்
அனைத்திற்கும்
ஏதேனும் ஓர் அர்த்தத்தைக்
கற்பித்துக் கொள்கிறோம்...

அந்த அர்த்தங்கள் அனைத்தும்
மகத்துவம் வாய்ந்தவை என்றும்,
முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும்,
நமக்கு இன்றியமையாதவை என்றும்,
நாம் தொடர்ந்து
வலியுறுத்துகிறோம்... 


சமயம் கிடைக்கும்போதெல்லாம்
அதை
நிரூபிக்கவும் முயல்கிறோம்...


இப்படித்தான்
நாம் எல்லோரும்
இயக்கங்களையும்,
அதன் ஆதார உண்மைகளையும்
புறந்தள்ளிவிட்டு
நம்மையே
பிரதானப்படுத்திக் கொள்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5696)