என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday 27 May 2020

சரியான முன்னுதாரணம்


உரு என்றொரு படம். அதில் கதாநாயகன், கதாநாயகி இருவருமே எழுத்தாளர்கள். நாயகன் காட்டுக்குள் சென்று தான் கதை எழுதுவாராம். படத்தில் கிட்டத்தட்ட பைத்தியம் போல் காட்டியிருக்கிறார்கள். ஒரு சீனில் கதாநாயகி '...start being responsible Jeeva' என்று கத்துகிறார். இறுதியில், கஞ்சா அடிக்கையில் அவருக்கு ஒரு கதையின் கரு கிட்டுகிறது. அதை எழுத காட்டுக்குள் ஒரு வீட்டுக்கு போகிறார். இப்படிப் போகிறது கதை.

Tolet படத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி தனித்திருக்கையிலேயே ஒரு வசனத்தை தனக்குத்தானே சொல்லி அழுகிறான் ஒருவன். கதாசிரியராம். அடுத்த காட்சியில் மூவாயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு பார்க்க அல்லாடுகிறார். அவருக்கும், அவர் மனைவிக்கும் வீடு விஷயமாக தினம் தினம் சண்டை.

பார்க்கப்போனால் இதில் தான் இப்படி என்றில்லை. திருடா திருடி, சோடாபுட்டி என்று ஒரு டஜன் திரைப்படங்களுக்கு மேல் உதாரணம் சொல்லலாம். எல்லாவற்றிலும் ஒரே டெம்ப்ளேட் இங்கும். தோளில் ஜோல்னாப்பை, வழுக்கைத்தலை, தொந்தி, டி.வி.எஸ் 50, ரோட்டுக்கடையில் கடன் சொல்லி டீ, சிகரெட், குடும்பத்தில் வறுமை.

என்ன சொல்ல வருகிறார்கள்? எழுத்தாளன் என்றால் practicality தெரியாதவன் என்றா? வாழ்வில் தோற்பவன் என்றா?

நிதர்சனம் பேசுவது என்பது வேறு.

ஆனால், நிதர்சனம் பேசுகிறேன் பேர்வழி என்று தவறான ஆட்களை முன்னுதாரணமாகக் காட்டுவது என்பது வேறு. பெரும்பான்மை திரைப்படங்கள் இரண்டாவது வகையில் தான் இருக்கின்றன என்பது என் வாதம்.

என்னைப் பொருத்தவரையில் எங்கே கல்வி அதிகம் சேர்கிறதோ அங்கே அறிவு விருத்தி ஆக வேண்டும். பண்படல் நிகழ வேண்டும். அது மானுட மேன்மைக்கு இட்டுச்செல்ல வேண்டும். அதுவே சரியான பாதை என்று  நினைக்கிறேன். (கவனியுங்கள்.  'மானுட மேன்மை' என்று தான் சொல்லியிருக்கிறேன். அதில் 'வாழ்க்கையில் வெற்றி பெறுவது' என்பது இருக்காது என்றர்த்தமல்ல).

இப்படி வாசிப்பால் வெற்றிப் பாதையில் பயணிப்பவர்கள் மீது போதிய புகழ் வெளிச்சம் படர்வதில்லை. சுருக்கமாகச் சொல்வதானால், 'சரியான முன்னுதாரணங்கள்' முன்னிறுத்தப்படுவதில்லை.

சரியான முன்னுதாரணங்களாய் இருப்பவர்கள் அதீத 'தன்னடக்கத்தால்', விசாலமாகக் கிடைக்கும் அறிவினால் பெற்றுவிடும் 'அமைதி'யால்,  அதிகம் டம்பமடித்துக்கொள்ளாமல் இருப்பதும் காரணம் என்றே தோன்றுகிறது. 

சுஜாதா அப்படிப்பட்ட வெற்றிப்பாதையில் பயணித்தவராகவும், அதே நேரம் புகழ் வெளிச்சம் படர்ந்தவராகவும் இருந்தார்.

எனக்குத்தெரிந்து ஐ.டி, மருத்துவம் போன்ற துறையிலிருந்துகொண்டே வெற்றிகரமாக எழுத்தில் கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். சமூக இயக்கத்தின் பொதுப்புத்தி-எதிர்ப்பு விசை அவர்கள் மீது அபரிமிதமாகப் படிவதே அவர்கள் புகழ் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கக் காரணம் என்பது என் வாதம். இந்த பொதுப்புத்தி-எதிர்ப்புவிசையை சிலர் தங்களில் சுய லாபங்களுக்காகத் திட்டமிட்டே திரைப்படங்கள் வாயிலாகப் பரப்புகிறார்கள். 

"தமிழ் இலக்கிய உலகில் ஒரு நூல் அதிகம் போனால் முன்னூறு பேர்களால் தான் வாசிக்கப்படுகிறது",
"வாசிக்கிறவங்கள்ல பல பேரு எழுத்தாளர்களா ஆயிட்டாங்க"

வெற்றிகரமான முன்னுதாரணங்கள் முன்னிருத்தப்பட வேண்டும். அதில் தான் அடங்கியிருக்கிறது சூட்சுமம் என்பது என் வாதம்.

ஆகவே பெரியோர்களே, தாய்மார்களே, இன்றிலிருந்து என்னை எல்லோறும்

"எழுத்தாளர் ராம்பிரசாத்"

என்று செல்லமாக அழைப்பீர்களாக.

உயிர்மை, கணையாழி, ஆனந்தவிகடன் உள்ளிட்ட பத்திரிக்கைகளிலும், Boston Literary Magazine, Readomania போன்ற பத்திரிக்கைகளிலும், தமிழிலும் ஆங்கிலத்திலும் கணித நாவல்கள் உள்பட பல்லாயிரம் கவிதைகளும், சில நூறு சிறுகதைகளும் எழுதியதில் எனக்கு இந்த அடைமொழிக்கு தகுதி இருப்பதாகவே நினைக்கிறேன்.