என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 10 June 2011

கனடா ஏ9 வானொலியில் என் சிறுகதை

அன்பின் நண்பர்களுக்கு,

வணக்கம்.

கனடாவைச் சேர்ந்த ஏ9 செய்தி வானொலியில் நான் எழுதிய ' நெடுஞ்சாலைக் காதல்' என்ற தலைப்பிலான ஹாஸ்யக்காதல் கதை, ஒலிப்பதிவு செய்யப்பட்டு சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (03/06/2011) ஒலிபரப்பப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெளியான ஒலிநாடாவின் ஒரு பகுதியை மட்டும் இங்கே இணைத்திருக்கிறேன்.



http://www.youtube.com/watch?v=lIJmNrCLd80


வாய்ப்பளித்த ஏ9 வானொலிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்
 

அந்தக் கதை இங்கே:

நெடுஞ்சாலைக் காதல் - சிறுகதை



திண்டிவனம் ‍- பண்ருட்டி நெடுஞ்சாலையில் நிச்சலனமாய் வெறிச்சோடிக்கிடந்த அந்தப் புற நகர் பேருந்து நிலைய ஹோட்டல் அவரது கவனத்தை கல்மிஷமாய்க் கிளர ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது மாதவன் நம்பிக்கு. அது, சற்று நேரம் முன்பு, குடும்பப்பாங்கான சுடிதார்ப் பெண்ணொருத்தி முதலில் உள்ளே நுழைய,  திருட்டுத்தனமாய் அங்குமிங்கும் பார்த்துவிட்டு அவளையே வெறித்துப் பார்த்தபடி பின்னாலேயே ஒரு இளைஞனும் உள்ளே நுழைந்தது தான். பார்க்க நெடுஞ்சாலைத் திருடம் போலிருந்தான். ஹோட்டல் கதவு வெகு இயல்பாய் ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது அவரது சந்தேகத்தை மேலும் கிளர, அவர் அந்தக் கதவருகே மெல்ல பதுங்கினார். உள்ளே பார்க்க முடியவில்லையே தவிர அந்த ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது தெளிவாகக் கேட்டது.


'ஹலோ மிஸ்டர், தனியா நிக்கிற பொண்ண அப்படி மொறச்சி மொறச்சி பாக்கிறீங்களே. மேனர்ஸ் தெரியாதா?'.

'என்னங்க காமெடி பண்றீங்க. உங்களையே பார்த்தா மேனர்ஸ் எப்படிங்க கண்ணுக்கு தெரியும்? நான் என்ன மேனர்ஸயா பாத்தேன்?'

'என்ன கொழுப்பா?'.

'ஆமா, 67 கிலோ மொத்தம்'

'க்ர்ர்ர்ர்ர்....'.

'கூல். மேனர்ஸ் நல்லாவே தெரியும், ஆனா நான் உங்கள பாக்கலியே, என் கல்யாணத்துக்கு ஒரு அழகான பொண்ணா பாத்துக்கிட்டுருந்தேன்'.

'ஓ, தெரியுமே, கேள்வி கேட்டுட்டா உடனே நான் பாக்கல, நீ பாக்கலன்னு பதுங்கிடுவீங்களே. வேற யார பாத்தீங்களாம்?'.

'உங்கள விட அழகா ஒரு பொண்ணு உங்களுக்கு பின்னால போனா. அவளத்தான் பாத்தேன்'.

'அப்ப அவ பின்னாடியே போக வேண்டியதுதானே?'.

'யூஸ்லெஸ், அவ ரெண்டு மாசம் முன்னாடிதான் பொறந்திருப்பா போல. ரெண்டு மாசக் குழந்தை. அவ பின்னாடி போனா எனக்கு அறுபதாங்கல்யாணம்தான் நடக்கும்'.

'ஓ, அப்புறம் இங்க என்ன பண்றீங்களாம்?'.

'அவள விட‌ நீங்க அழகு இல்லன்னாலும், அவளுக்கு அடுத்தபடி நீங்கதான் அழகு. உங்ககூட கல்யாணம்னா நான் அறுபது வரைக்கு வெயிட் பண்ண வேண்டியது இல்ல'.

'அதானே பார்த்தேன், என்னடா இன்னும் ஆரம்பிக்கலியேன்னு. உங்களுக்கெல்லாம் இதே வேலையா, எவடா கிடைப்பா, நூல் விடலாம்னு அலைவீங்களோ?'

'ச்சே சே, நூல் விட்டு எனக்கு பழக்கமே இல்லங்க. அப்படி விட்டிருந்தா இத்தன்னேரம் எனக்கு கல்யாணமாகி ரெண்டு புள்ள பொறந்திருக்கும். ஒண்ணு உங்கள மாதிரி, இன்னொன்னு என்னை மாதிரி'.

'ம்ம்ம்ம்... சாருக்கு இன்னிக்கு நேரம் சரி இல்லன்னு நினைக்கிறேன்.. அர்த்த ராத்திரில என்னை தொல்லை பண்றான்னு ஈவ் டீசிங் கேஸுல உள்ள போகணுமா?'.

'தயவு செஞ்சி அத பண்ணிடுங்க. போலீஸ்ல சொன்னா போஸ்டர் அடிச்சி ஒட்டினா மாதிரி. அப்பறம் உங்கள யாரும் கட்டிக்கமாட்டாங்க. அப்புறம் நான் தான் உங்களுக்கு. பரவால்லயா'.

'ஓ காட்!!'.

'கரெக்ட், அவர்கிட்டதான் வேண்டிக்கிட்டேன். நீங்க எனக்கே கிடைக்கணும்னு'.

'ஆனா, அது நடக்கவே நடக்காது'.

'ஏங்க?'.

'ஏன்னா, எனக்கு ஏற்கனவே மேரேஜ் ஆயிடிச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல ஹஸ்பெண்ட் வந்துடுவார்'.

'அப்டியா, ஐ..சும்மா கத விடாதீங்க.. கழுத்துல தாலி இல்ல, கால்ல மெட்டி இல்ல'.

'ஆனா, கை விரல்ல ரிங் இருக்கே'.

'அப்டின்னா?'.

'மரமண்டை, நான் க்ரிஸ்டியன்'

'ஓ..அய்யோ, உங்கள என் ஆளுன்னு என் மனசுல ஃபிக்ஸ் பண்ணிட்டேனே'.

'அதனால?'.

'அதனால, நாம ரெண்டு பேரும் ஊர விட்டு ஓடிப்போயிடலாமே'.

'செருப்பு பிஞ்சிடும்'.

'பரவால்ல, உங்கள அழகா என் கைல தூக்கிட்டு நானே ஓடுறேங்க. நீங்க வந்தா மட்டும் போதும்'

'அய்யோ, கடவுளே'

'அவரு ஏங்க பூஜை வேலைல கரடி மாதிரி'

'அடப்பாவி'

அவன் அத்துமீறுகிறான். நிச்சயமாக தனியே இருக்கும் பெண்ணிடம் வம்பு வளர்க்கிறான் தான். பொறுத்தது போதும். ராகவன் நம்பி ஒரு முடிவு செய்தவராய், திடீரென்று உள்ளே பாய்ந்து அவனைப் பிடித்து ரத்தகளரியாக்கிவிடும் நோக்கில் நுழைய...

"சன் செய்திகள். வழங்குவோர் சூர்யா டி.எம்.டி ராட், ஷிரி குமரன் தங்க மாளிகை...."

உள்ளே கல்லாவுக்கு அருகில் பக்கவாட்டில் கலர் டிவியில் சன் டிவி நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்க‌
சற்றுத் தள்ளி, ஒரு டேபிளில் அவன் அமர்ந்து கையில் இருந்த மொபைலில் எதையோ நோண்டிக்கொண்டிருக்க, அந்தப் பெண் சற்றுத்தள்ளி இன்னொரு டேபிளில் அமர்ந்து ஒரு டீயை உறிஞ்சிச்சுவைத்தபடியே திடுமென உள்ளே நுழைந்த ராகவன் நம்பியைப் பார்க்க, அவளைத்தொடர்ந்து அவனும் அவரை திரும்பிப் பார்த்தான். அவர்களுக்கு அந்தப் பக்கம் ஹோட்டலில் அடுத்த மூலையில் ஒரு பெண், இது எதையும் கவனியாதவளாய் கையில் இரண்டு மாதக் குழந்தையுடன் எதையோ வாயிலடைத்துக்கொண்டிருந்தாள். அவள் எதிரில் அறுபது வயதில் ஒரு கிழவி, வாழை இலையில் பரவிக்கிடந்த சாம்பாரை வலக்கையால் துழாவிக்கொண்டிருந்தாள்.

ராகவன் நம்பி, சட்டென வேகங்குறைத்து, இயற்கையாய்ப் பொங்கிய ஆவேசத்தை செயர்க்கையாய் மட்டுப்படுத்தி இரண்டடி எட்டி வைத்து ஒரு டேபிளில் அமர்ந்து, உயர்த்திய முண்டாவை மெல்ல சீராக்கியவாறே அவர்கள் முகத்தை பார்க்காத வகைக்கு தலைகுனிந்து கொண்டார்.

இப்போது அரைக் கால்சட்டையும், நைந்து போன பனியனும் போட்டிருந்த, அரும்பு மீசை முளைத்திருந்த பையனொருவன் ராகவன் நம்பியை நெருங்கினான்.

'சார், இட்லி, வடை, பூரி, உப்புமா, ஊத்தப்பம், டீ, காபி. உங்களுக்கு என்ன வேணும்?'.

'கொஞ்சம் மூளை'

'!?!...'

முற்றும்.


 - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4046)