என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 18 April 2025

வேற்று கிரகத்தில் உயிர்கள்

வேற்று கிரகத்தில் உயிர்கள்


K2-18b கிரகம் இருப்பது 124 ஒளி ஆண்டுகள் தொலைவில், அதுவும் leo நட்சத்திரக் கூட்டத்தில்.

இந்தக் கிரகம் இப்போது இணைய வெளியில் பேசுபொருளாகியிருக்கிறது. ஏன் தெரியுமா? ஒரு இந்திய ஆராய்ச்சியாளரால், K2-18b கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரமான DMS அதாவது dimethyl sulphide கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக உலவும் செய்திகள் இன்றைய முகநூல் வெளியை ஆக்ரமித்திருக்கின்றன. 

கண்டு சொன்னவர் ஒரு இந்தியர் என்பதுவும், இந்தச் செய்தி வைரல் ஆனதற்கு ஒரு காரணம்.

உடனே இணையமெங்கும் fermi paradoxக்கு பதில் கிடைத்துவிட்டது, K2-18b கிரகத்திற்கு probe அனுப்ப முடிவு செய்திருக்கிறது நாசா என்றெல்லாம் சூடாக செய்திகள் பரவத் துவங்கிவிட்டது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம், 124 ஆண்டுகளுக்கு முன்னான ஒளியை வைத்துக்கொண்டு, இப்போதே நல்ல நிலையில் இருக்கும் பூமியை சரிசெய்வதை விட்டுவிட்டு, புதிய கிரகம் எப்போது தாவலாம் என்று ஆளாய்ப் பறக்கிறார்கள் என்று கேலியும் கிண்டலும் கூட இணையத்தில் அதிகம் காண முடிகிறது.


முதலில் ஒன்றைத் தெளிவாகப்பார்த்துவிடலாம்.

DMS எனப்படும் dimethyl sulphide மட்டுமே உயிர்கள் இருப்பதற்கான ஆதாரமாகக் கொண்டு விட முடியாது. அது, உயிர்கள் இருப்பதால் மட்டுமே வெளியிடப்படும் வேதிப்பொருள் இல்லை. இந்த வேதிப்பொருள் இயற்கையான முறையிலும் வெளியாகலாம். இதே வேதிப்பொருள் 67P/Churyumov-Gerasimenko காமட்டில் கூட கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அங்கே உயிர்கள் என்று எதுவும் இல்லை. ஒரு நட்சத்திரத்தின் ஃபோடான்கள், கிரகத்தின் வான்வெளியில் உள்ள வேதிப்பொருட்களுடன் மோதுகையில் கூட DMS வெளிப்படுகிறது என்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். ஆக, DMS இருப்பதே உயிர்கள் இருப்பதற்கான சமிஞை என்று எடுத்துக்கொள்ள முடியாது என்பதே அறுதி உண்மை. 

நமக்குத் தொடர்ந்து தகவல்கள் தேவை. அது தற்போது நம்மிடம் இல்லை. அதற்கு இன்னும் மென்மேலும் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு இன்னும் அதிகம் செலவாகும். இன்றோ நாளையோ சாத்தியப்பட்டுவிடும் காரியம் அல்ல. ஒளி ஒரு நொடியில் சென்றடையும் தூரமான சனிக்கிரகத்திற்கு,  நம்மிடம் இருக்கும் அதி வேகமான விண்கலன் செல்ல சுமார் ஏழு வருடங்கள் ஆகும். உதாரணம்: Cassini. இதுதான் நம்மிடம் இருக்கும் உச்ச  தொழில் நுட்பத்தின் வேகம்.

அப்படியிருக்கையில், 124 ஒளி ஆண்டுகள் தூரத்தை நாம் சென்றடையத் தேவையான தொழில் நுட்பம் இன்னும் சில தலைமுறைகளுக்குக் கூட சாத்தியமில்லை. ஒருக்கால் இன்னும் இருபது ஆண்டுகளில் அதை மனித இனம் செய்துவிடமுடியும் என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டாலும், அதுவரை  நம் பூமி, குறைந்தபட்சம் இப்போது இருப்பதைப் போல, தொடர வேண்டும். அதுவே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதுதான் நிதர்சனம். ஆகையால், நாம் எல்லோரும் தரையில் நடப்போமாக.


Monday, 14 April 2025

மரபணுக்கள்- அறிவியல் கதைகள் - Boje Bojan

மரபணுக்கள்- அறிவியல் கதைகள் - Boje Bojan


மரபணுக்கள் - ராம் பிரசாத் - அறிவியல் சிறுகதை தொகுப்பு - பதிப்பகம் , படைப்பு - பக்கங்கள் 131- முதல் பதிப்பு 2024

மரபணுக்கள்- அறிவியல் கதைகள் 




ஆசிரியர் பற்றி :

எழுத்தாளர் ராம் பிரசாத் தற்கால இளம் அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர் பல அறிவியல் கதைகள் சிறுகதைகள் புனைவுகள் ஆகிவற்றை எழுதிஉள்ளார் . ஏற்கனவே இவர் எழுதி இருக்கும் வாவ் சிக்னல்  மற்றும் புரதான ஏலியன் நூல்கள் புகழ் பெற்றவை அதிலும் வாவ் சிக்னல் பாராட்டு மற்றும் விருது பெற்ற நூல். தமிழ் மட்டும் இல்லாமல் ஆங்கிலத்திலம் இவரது புத்தகங்கள் இருக்கின்றது.

புத்தகம் பற்றி :

மொத்தம் 10 தலைப்புகளில் 130 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் ஆசிரியர் எழுதிய மற்ற புத்தகங்களில் இருந்து வேறு பட்டு நிற்கிறது. அதற்கு காரணம் பொதுவாக அறிவியல் கதை எழுதும் எழுத்தாளர்கள் பலவேறு தலைப்புகளில் இருந்து பல சிறுகதைகளை தொகுத்து ஒரு நூலாக எடுத்து வருவார்கள் . ஆனால் இந்த புத்தகத்தை பொறுத்த வரை எல்லாமே மரபணு அதாவது gene என்ற ஒற்றை கருவை வைத்து கொண்டு 10 விதமான கதைகளை சொல்லி இருக்கிறார். இதற்க்கே ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டு சொல்ல வேண்டும். 

"Genes are not our fate, but they are our starting point. The choices we make shape our destiny."

என்ற ரிச்சர்ட் டார்க்கின் வரிகளுக்கு ஏற்ப மரபணுக்கள் பற்றி பேசி இருப்பதே இது நூலின் முக்கியமான பலமாகும். ஒவ்வொரு கதையிலும் மரபணு தொடர்பான விஞ்ஞான தத்துவங்கள் மட்டுமின்றி, அதனால் மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் உணர்வுப்பூர்வமான கோணத்தில் பேசப்படுகின்றன.

இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் சிலவற்றை பார்ப்போம் 

ஷேசம்:


பொதுவாக ஒரு ஆணும் பெண்ணும் சேரும் போது குழந்தைகளுக்கு அவர்கள் ரெண்டு பேரின் மரபணு தான் வரும் ஆனால் எதிர் வரும் காலங்களில் modified genetic என்ஜினீயர் மூலம் வேறு ஒருவர் மரபணுவோ அல்லது விலங்குகளின் மரபணுக்கள் மனித குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் விருப்பம் உடன் செலுத்த முடியும். அப்படி பட்ட கதை தான் இது கதை படி நாயகன் steward க்கு ஷேசத்தின் அதாவது பாம்பின் மரபணு செலுத்த பட்டு இருக்கும். அதனால் அவன் கண்கள் மனிதன் கண்கள் போல் இல்லாம பாம்பின் கண்கள் போல் இருக்கிறது இதனால் ஏற்படும் விளைவு என்ன. இதை தீர்க அவனது காதலி எடுக்கும் முயற்சி என்ன. கடைசியில் என்ன நடந்து என்பதை படிக்க படிக்க விறுவிறுபாக இருக்கிறது.


சரோஜாதேவி:


பொதுவாக சரோஜா தேவி என்ற பெயர் சற்று சர்ச்சையான பெயராக இருந்துஉள்ளது. அது ஏன் அதற்கு இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை புத்தகம் படித்த பிறகு புரிந்து கொள்ள முடியும். ஒரு விதத்தில் எழுத்தாளர் ராம் அவர்களை பாராட்டி ஆக வேண்டும். சற்று மாரி இருந்தாலும் கதை கருவே மாரி இருக்கும். அப்படி இல்லாமல் சரியாக கதை சொல்லி இருக்கிறார்.

கதையின் கரு ஒரு அனாதை விடுதியில் மன்சூர் என்ற பையனை சோதிக்க ஒரு மனநல மருத்துவர் ஒருவரை அழைத்து வருகிறார்கள். யார் அந்த பையன்? ஏன் அவனுக்கு சிகிச்சை அதன் பின் நடந்தது என்ன என்பதை அறிவியல் ரீதியாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

பச்சிலை & மாற்று தீர்வு

இந்த இரண்டு கதைகளும் தனித்துவம் கொண்டவை. அறிவியல் சார்ந்த ஆழமான கருத்துக்கள், விறுவிறுப்பான கதைக்களம் ஆகியவை வாசகர்களை ஈர்க்கும்.


கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.


Friday, 11 April 2025

மரபணுக்கள் - ஸ்ரீநிவாஸ் பிரபு - நூல் விமர்சனப் போட்டி 2025

மரபணுக்கள் - ஸ்ரீநிவாஸ் பிரபு


நூல் விமர்சனப் போட்டி 2025

மரபை முன் மொழியும் மரபணுக்கள்
வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் மனிதர்களுக்கு ஒரே கணத்தில் நிகழ்ந்து முடிந்து விடுகின்றன என்றாலும், நிகழ்வுகள் குறித்தான நினைவுகள் மட்டும் காலம் முழுமைக்கும் மனதில் பொங்கிப் பிரவாகமாக அலையடித்துக் கொண்டே இருக்கும். அப்படியான அலையாக ராம் பிரசாத்தின் மரபணுக்கள் (வாவ் சிக்னல் – II விஞ்ஞான சிறுகதைகள்) சிறுகதைத் தொகுப்பு நூலும் எதிர்ப்படுகிறது.
மரபணுக்கள் தொகுப்பில் பொதிந்த எழுத்தும் உரை நடையும் விஞ்ஞானத்தின் துணையோடு கதைகளாக எதிர்ப்படுவதோடு தொன்மம், வரலாறு, பண்பாடு, கலை, அரசியல் யாவும் இணைந்தே வருகிறது. அதுவே உரைநடையை சுவாரஸ்யமாகவும் முக்கியமானதாகவும் மாற்றுகின்றன.

மரபணுக்கள் தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள். அனைத்து கதைகளும் மரபணுக்கள் குறித்தும், அவை நிகழ்த்தும் கூறுகள் குறித்தும் அவற்றின் பரிமாணங்கள் குறித்தும் பேசுகின்றன. இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் மனிதன் மனிதனாக இருக்க மரபணுக்கள் தான் காரணம் என்பதையே மையப்படுத்தி நிற்கிறது.
அஃறிணைப் பொருட்களை மட்டும் பிரதி எடுத்து பயன்படுத்தப்படுவதை அறிந்திருக்கும் நமக்கு நகமும் சதையுமாக இன்னொரு பிரதியாக உயிருள்ள மனிதன் பிரதியாக எதிர்ப்பட்டால் என்ன நிகழும் எப்படி இருக்கும் என்ற சாத்தியக்கூறை ஆராய்ந்து (நடை முறை படுத்தி) அதன் பல்வேறு பரிமாணங்கள் ஆச்சர்யத்துடன் காட்டுகிறது பிரதியெடுக்காதே கதை. மரபணுக்களுக்கு வெளியே உள்ளவைகளை மாற்ற நமக்கு பிரதிகள் தேவையில்லை என்ற கருத்தை ஓங்கிச் சொல்லுமிடமும், பிரதிகள் மாற்றுப் பிரபஞ்ச அளவில் உறவை மென்மேலும் மலினப்படுத்தும் என்ற கருத்தும் யோசிக்க வைத்து ஒத்துக் கொள்ள வைப்பது அபாரமாக இருக்கிறது.


சிறுகதைகளுக்கு மொழி மிகவும் முக்கியமானது. அந்த வகையில் தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் மொழி இலகுவாக, எளிமையின் உன்னதத்தோடு வாசிப்பாளனுக்கு அருகில் நின்று பேசும் தன்மையுடன் இருக்கிறது.


விஞ்ஞான கருத்துக்களும் அதன் வீச்சு சார்ந்த விஸ்தாரமும் மெல்லிய கோட்டில் வழுவாமல் நடப்பதற்கு இணையாக இருக்கிறது. அந்த வகையில் எந்த இடத்திலும் தடம் பிசகாமல் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் முன்வைத்து நகர்கிறது.


காலத்தின் போக்கில் ஏற்றுக் கொள்ளப்படாதவைகள் கூட ஏற்றுக் கொள்ளப்படுவதுண்டு. நடுவு நிலை என்ற ஒன்று இருப்பினும் அதைத் தீர்மானிப்பது யார், எது துவக்கத்தில் நாடகீயமான பொழுது போக்கிற்கு பயன்படும் என்று கணிக்கப்பட்டதோ அது ஒரு கட்டத்தில் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை புரட்டிப் போட்டது போன்ற கருத்துக்களையும், கேள்விகளைகளும் தரவுகளோடு ஆராய்கிறது சேஷம் சிறுகதை. வேற்று விலங்கினங்களின் மரபணுக்களைத் தாங்கும் மனிதர்கள் கலப்பினம் என்ற கூற்றும், அவன் முன்பு சர்ப்பமாகி சிறையிலிருந்து தப்பி இருக்கக் கூடிய சாத்தியக் கூறும் உலகின் விசித்திரங்களையும் ஆச்சரியங்களையும், அதிர்ச்சியையும் பாசாங்கின்றி அசலான அமைப்பை தரிசிக்க உதவுகிறது. இறுதியாக கால் நீட்டி படுத்துக் கொள்கையில் அவன் தன் உடல் என்னும் மடியை படுக்கையாக்கி அதில் கிடத்தி தன் ஐந்து தலைகளால் உடலைத் தாங்கி நிற்பதும், பிரபஞ்சமே கைகூப்பித் தொழுவதுமாக நிறைவுறுவது பரவசப் பொருளாய் இருக்கிறது. ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட பெருமாள் கால் நீட்டி சயனித்திருக்கும் காட்சி கண்களில் நிறைந்து நிற்கிறது.


நாம் அனைவரும் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு மைல் கல்லிலும் எதையோ இழந்து எதையோ பெற்றவர்களாக இருக்கிறோம் என்ற கருத்தை முன்வைத்து ஊர்கிறது ஊரும் மனிதன் கதை. இயற்கை எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கிறது, அந்த அவதானிப்பு பார்வையால் அல்லாது இயக்கத்தால் நடைபெறுகிறது என்ற கருத்து உள்ளார்த்தமாகப் பாய்ச்சுகிறது. அதே நேரம் வேறுபாடுகள் யாவும் பிறழ்வுகள் என்பதும் இயற்கையின் இயக்கத்தின் பண்புகள் என்பதும் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. விட்டு விலகி வந்ததற்கு மீள்வது குறித்தே கவலை கொள்ளும் மனிதர்கள் அருகாமையில் இருப்பது குறித்து கவலை கொள்வதே இல்லை என்ற கேள்வியும் அதற்கு மௌனம் சாதிக்கும் பதிலும் உண்மையின் வெளிப்பாடுகளாக இருக்கிறது.


மரபணுக்களால் நிகழ்ந்த மாற்றங்களையும் பரிசோதனை முயற்சிகளையும் விளக்கும் மற்றொரு அற்புதக் கதை சரோஜாதேவி புத்தகம். எல்லோரும் கடந்து வந்திருக்கும், விடலைப் பருவத்திற்கே சொந்தமான ஒன்றான பதின் வயதில் காமுறும் தருணத்தை ஆராய்ந்து சொல்வதுதான் கதையின் மையம். சிக்மன் ஃபிராய்டின் புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டப்படுவதும். மரபணுக்களின் ஆய்வுகளால் முடிவு கண்டறிப்படுவதையும் சரோஜாதேவி புத்தகங்கள் செய்த சேவையுடன் தொடர்புபடுத்தி விளக்குமிடம் யதார்த்த நிஜத்தை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.


எனக்கும் உங்களுக்கும் ஒரே மரபணுதான் எனில் நான் தான் நீங்கள், நீங்கள்தான் நான் எனும் கேள்வி எதிர்ப்படும் இடம் சுவாரஸ்ய முடிச்சு. சொல்லப்போனால் தொகுப்பில் உள்ள கதைகளான பச்சிலை, தழுவு கருவி, கண்ணாடிச் சுவர், மாற்றுத் தீர்வு போன்றவை விலாவரியாக விமர்சிக்கவும் விவாதிக்கவும் சாத்தியக் கூறுகளை கொண்டு இருக்கவே செய்கிறது. அதே நேரம் கதைகளை முன் மொழியும் எழுத்து நடை கதைகளைப் படிக்கும் சுவாரஸ்யத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருப்பது தனி கவனத்தை ஈர்க்கிறது. கதைகள் அனைத்திலும் சுவாரஸ்யத் தகவல்களும் வரலாற்றுப் பதிவுகளும் நிறைந்திருக்கிறது.


மரபைத் புரிந்து கொள்ளாதவரை புதுமையை படைக்க முடியாது என்பார்கள். அது மரபணுக்களுக்கும் சாலப் பொருந்தும். மரபையும் மரபணுக்களையும் முழுமையாக உள்வாங்கி புதுமையைப் படைக்கத் தெரிந்த படைப்பாளியாகவும் தான் அறிந்ததை அடுத்தவருக்கும் புரிய வைக்கும் வல்லமை படைத்தவராகவும் எதிர்ப்படுகிறார் ராம்பிரசாத்.
அதற்கு மரபணுக்கள் தான் காரணம் என்றும் சொல்லாம்!!
X X X


ஸ்ரீநிவாஸ் பிரபு,
சென்னை



Thursday, 10 April 2025

Tartigrade என்னும் ஏலியன்

 Tartigrade என்னும் ஏலியன்



டார்டிகிரெட்ஸ் பற்றிப் புதிதாக நான் அறிமுகம் செய்யத்தேவையில்லை என்று நினைக்கிறேன். மிகவும் சக்தி வாய்ந்த, அழிவே இல்லாத உயிரிணங்கள் இவைகள். பூமியில் காலத்தை வென்ற உயிரிணங்கள் வெகு சில மட்டுமே. உதாரணமாக, முதலைகள். முதலைகளுக்கு வயது, வயோதிகம் என்பதே கிடையாது. அவைகள் நோய்வாய்ப்பட்டாலோ, அல்லது உண்ண உணவு கிடைக்காமல் போனாலோ தான் இறக்குமே ஒழிய இயற்கையாக மரணிப்பதே இல்லை.

அதே போல, விண்வெளியின் வெற்றிடத்திலும், மைனஸ் இருநூற்றைம்பது டிகிரி குளிரிலும், சூரியனின் கதிர்வீச்சிலும் கூட அழிந்து போகாமல் நீடிக்கும் தன்மை கொண்ட மற்றொரு உயிர், டார்டிகிரெட்ஸ். இவற்றின் வினோதத் தன்மைகளுக்காய், இவைகளையே வேற்று கிரக வாசிகள், ஏலியன்கள் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இவைகள் எப்படி இயற்கையின் மிக மிக மோசமான சூழலிலும் அழியாமல், உயிர் பிழைக்கின்றன என்பது இதுகாறும் பெரும் புதிராய் இருந்தது.  நமக்கெல்லாம் விண்வெளிக்குச் சென்றால், நம் உடலைக் காக்க, Spacesuit தேவை. பிராணவாயு தேவை. ஆனால், டார்டிகிரேட்களுக்கு அப்படி அல்ல. அவைகள் எந்த ஒரு மோசமான சூழலிலும் உயிர் பிழைத்திருக்கும். இது ஒரு பெரும் புதிராக இருந்தது. அந்தப் புதிருக்கு விஞ்ஞானிகள் விடை தேடிக் கண்டடைந்திருக்கிறார்கள்

இந்த டார்டிகிரேட்கள் சில புரதங்களை உற்பத்தி செய்கின்றனவாம். அந்தப் புரதங்கள் தான் இவைகளின் உயிர் பிழைத்தலுக்கு அச்சாணி என்கிறார்கள். உதாரணமாகக் கதிர்வீச்சை எதிர்கொள்ள வேண்டி வந்தால், இந்த புரதங்கள் இவற்றின் மரபணுவைச் சுற்றி அரண் போல தகவமைந்து கொள்ளுமாம். இதனால், மரபணுக்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது. 

 பூமியில், இப்போதைக்கு, மனித இனம் , ராப்பகலாகத் தேடும் சாகாவரத்தை, இந்தச் சின்னஞ்சிறிய உயிர்கள் இயல்பிலேயே பெற்றிருப்பது அதிசயம் தானே. 




Friday, 4 April 2025

பேரரசன்' சிறுகதை

 அன்பு நண்பர்களுக்கு,

வாசகசாலையில் 111வது இதழில் எனது 'பேரரசன்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. இதழில் சிறுகதையை வாசிக்கப் பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும்.

https://vasagasalai.com/111-story-perarasan/

எனது சிறுகதையை வெளியிடத் தேர்வு செய்த வாசகசாலை இதழில் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சிறுகதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.




Tuesday, 1 April 2025

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்திற்கு எனது நன்றிகள்...🙏🙏🙏

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்திற்கு எனது நன்றிகள்...🙏🙏🙏




Friday, 28 March 2025

இணைய நண்பர்களுக்கு,

 இணைய நண்பர்களுக்கு,

வணக்கம்.
கொஞ்ச காலமாக இணையத்தில் சிறுகதைகள் வெளியிடவில்லை. வெளியிடத் தோன்றவில்லை. எழுதி எழுதி அப்படி அப்படியே வைத்துவிட்டேன். சில கதைகள் மரபணுக்கள் தொகுப்பிலும், வேறு சில தீசஸின் கப்பல் தொகுப்பிலும் சேர்ந்தன. இணையத்தில் வெளியிட ஏன் தோன்றவில்லை என்பதற்கு பல காரணங்கள்.
சமகாலத்தில், copycat முயற்சிகள் நடப்பதை நிறைய அவதானித்ததினால் கிடைத்த பெரும் மனச்சோர்வு காரணமாக இருக்கலாம். மனிதர்களின் கள்ள மெளனங்கள், சூழ்ச்சி முகங்கள் காணக் கிடைத்ததினால் அடைந்த சோர்வாக இருக்கலாம். இன்னதென்று விளக்கிச் சொல்லத் தெரியவில்லை. ஏதோவொரு, எதிர்மறை எண்ணம் ஆட்கொண்டு, இணையத்தில் வெளியிடுவதிலிருந்து தடுத்து வைத்திருந்தது.
"ஏன் சிறுகதைகள் இல்லை?" என்று நெருங்கிய நட்புகளின் கேள்விகளில் திணறியிருக்கிறேன்.
இப்போது அந்தச் சோர்வு மெல்ல மெல்ல நீங்கியிருக்கிறதா என்று தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. அல்லது, சோர்வுற்றிருந்ததில் சோர்வு வந்துவிட்டதா தெரியவில்லை. 2020ல் எந்த எண்ணத்தில் அறிவியல் புனைவுகள் எழுதி இணையத்தில் பகிர முன்வந்தேனோ அந்த மனநிலைப்பாடு இப்போது மீண்டிருக்கிறது எனலாம்.
இணையத்தில் மீண்டும் கைவசம் உள்ள சிறுகதைகளை வெளியிடலாம் என்றிருக்கிறேன்... எதுவரை? மீண்டும் சோர்வு வரும் வரை....😞😞😞

Thursday, 27 March 2025

தீசஸின் கப்பல் - விமர்சனம் - ஜெயா நவி

தீசஸின் கப்பல் - விமர்சனம் - ஜெயா நவி 




நூல் விமர்சனப் போட்டி - 2025

_____________________________________

 

நூல் : தீசஸின் கப்பல் (சிறார் இலக்கிய நூல்)

ஆசிரியர் : ராம் பிரசாத்

வெளியீடு : படைப்பு பதிப்பகம்

பக்கங்கள் : 138

விலை : ரூ 190

 

.           ஆசிரியர் ராம் பிரசாத் மயிலாடுதுறையில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கிறார். இந்நூல் ஆசிரியரின் 15 வது நூல். இவர் தமிழ் ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளிலும்,  இந்தியா மற்றும் அமெரிக்காவில் உலகளாவிய அறிவியல் புனைவிலக்கிய வெளியில் சிறந்து இயங்குகிறார். கணினியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுநிலைப்பட்டமும் பெற்றவர். 2009 ல் இருந்து தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

.                  2020 ல் வெளியான இவரது 'வாவ் சிக்னல்' விஞ்ஞான புனைவுச் சிறுகதைத் தொகுதி நூலுக்குத் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த சிறுகதை நூல் என விருதளித்து கௌரவித்திருக்கிறது.

.              தீசஸின் கப்பல் நூல் சிறார் இலக்கியமாக மலர்ந்திருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியோடு கூடிய முன்னேற்றத்தை சிறுவர்கள் எவ்வாறு கையாள வேண்டுமென அழகான புனைவுக்கதைகளாக கொடுத்திருக்கிறார். ஒரு வீட்டின், ஒரு ஊரின், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வளரும் இளம் தலைமுறையினரின் பங்கு மிக மிக முக்கியமானது.

.          ஓரிரு தலைமுறைக்கு முன்பு தகப்பன் தொழிலைத்தான் பிள்ளைகளும் தொடர வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தது. இது அத்தலைமுறையையே அடிமைப்படுத்தி வைத்திருந்தது. அதன்பிறகு விழித்துக் கொண்ட பெற்றோர்கள் நம் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் நான் பட்ட கஷ்டங்களை அவர்கள் படவேண்டாம் என்று உணர்ந்து தன் சக்திக்கு மீறி படிக்க வைக்க தலைப்பட்டனர்.  அதில் வெற்றியும் கண்டனர். கல்வி ஒரு மனிதன் எட்ட முடியாத உயரத்திற்கு அவனை இட்டுச் செல்லும் அவன் தலைமுறையை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கும்.  அதேபோல தான் ஒரு நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி என்பது இளைய தலைமுறையின் முற்போக்கு சிந்தனைகளிலும், அதை துணிந்து செயல்படுத்தும் விதத்திலும் இருக்கிறது.   நூலில் இருக்கும் 10 சிறுகதைகளும் கற்பனைக்கு எட்டாதவைகளாக தற்போது தெரியும். ஆனால் வருங்காலத்தில் இவையும் சாத்தியமே. 

.               அறிவியல் சார்ந்த புனைவு கதைகள் வாசிக்கும் போது ஒரு புறம் பிரமிப்பு ஏற்படுகிறது. இங்கனம் நிகழ்ந்தால் உலகம் எப்படி இருக்கும் என்ற திகைப்பும், ஆச்சரியமும் நம்முள் ஏற்படுகிறது. ஆனால் சற்று பின்னோக்கி சென்றால் நாம் இருந்த வாழ்வியல் முறையும் தற்போது நம் வாழ்வியல் முறைகளையும் ஒப்பிட்டு நோக்கினால் நாம் வளர்ந்த பாதை புலப்படும். அதுபோல திசஸின் கப்பல் நூல் சொல்கிற விஞ்ஞான வளர்ச்சிகளும் எதிர்காலத்தில் சாத்தியமாகும். 

.             மூடநம்பிக்கைகளால் தெய்வங்களின் மீது பழியைப் போட்டு ஏற்படும் நிகழ்வுகளை நாம் கடந்து சென்றுவிட தன் பழக்கப்பட்டு இருக்கிறோம். அதையும் மீறி பேசினால் நாத்திகவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு விடுவோம் என்ற பயம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. பிள்ளையார் பால்குடித்தார் என்று செய்தி பரவிய போது குடம் குடமாக பாலை கொண்டு போய் பிள்ளையாரிடம் கொடுக்கத் தெரிந்த நமக்கு அதற்கான அறிவியல் காரணத்தை கண்டுபிடித்து தைரியமாக கூறமுடியவில்லை.

இல்லை இல்லை கண்டுபிடிக்க விடவில்லை சமயங்களின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்கள்.

.           நம் ஒவ்வொருவரின் பிறப்பிற்கும் அவரவரின் செயல்பாட்டிற்கும் பின்னும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கவே செய்யும் அதுதான் நம் படைப்பின் ரகசியம். தேவையான நேரத்தில் தேவைப்படும் இடத்தில் கொண்டு சென்று நம்மை நிறுத்தி விடும் காலம். அப்போது காலம் இட்ட வேலையை பூரணமாக செய்து முடிப்பதில் தான் நாம் பூமியில் வாழ்வதற்கான அர்த்தம்.

              அழகு என்பது உடல் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது நம் வாழும் வாழ்வியல் சார்ந்தது.  செய்யும் செயல்களும் எண்ணங்களும் அழகானால் நாமும் அழகாகத்தான் தெரிவோம்.  வளரும் பதிம வயதினர்கள் புறத்தோற்றத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அழகாக தெளிவுபடுத்தும் சிறுகதை தீசசின் கப்பல்.  உன்னை நீ யாராக பார்க்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்று தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நகரும் கதை. வாழ்வின் சவால்களை அனைத்தையும் எதிர்கொண்டு அதை வெல்பவர்களே வாழ்வில் நிலையான வெற்றியை பெற்று சாதிக்கிறார்கள்.  மரபணுக்களைக் கொண்டு புதிது புதிதாக பிரதிகளை எடுத்துக் கொண்டால் பிரபஞ்சம் என்னவாகும். இக்கதைகளில் உள்ளவைகள் மாதிரி நடந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்கவே முடியவில்லை ஆனால் அவை எல்லாம் நடைபெறும் காலம் மிக அருகாமையில் தான் இருக்கிறது போலும்.

.        இருட்டில் வாழ்ந்த மக்கள் மின்சார விளக்கைக் கண்டுபிடித்த போது பயந்தது போலவே இப்போதும் நமக்கு பயம் ஏற்படுகிறது.  விஞ்ஞான வளர்ச்சி காலப்போக்கில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அசுர வளர்ச்சியாக தான் இருக்கும்.  மெல்ல மெல்ல மக்களும் அதை ஏற்றுக்கொண்டு அவற்றோடு வாழ்ந்து அவர்களின் வாழ்வில் பிரிக்க முடியாதாதாக மாறிவிடும்.

.             மன்னர்கள் காலத்தில் இருந்த சுரங்கப்பாதைகள் பற்றி நாம் அறிந்திருப்போம்.  ஆபத்துக் காலத்தில் மன்னர்கள் தப்பியோட ஒளிய அது உதவுவதாக படித்திருக்கிறோம்.  அதுவே விஞ்ஞான வளர்ச்சியான பிறகு ரகசிய அறைகளாக மாறி ஒரு கதவை திறந்தால் எடின்பருக்கும்,  மற்றொன்றைத் திறந்தால் ஹாங்காங்கும், மற்றும் ஒன்றை திறந்தால் தஞ்சை பெரிய கோவிலும்,  இன்னும் ஒன்றைத் திறந்தால் திருத்தணி முருகன் கோவிலுமாக விஞ்ஞான வளர்ச்சியில் விரிவடைந்து இருக்கிறது.

              இயற்கையை நாம் படுத்தும் பாட்டை பார்த்தால் நாளடைவில் உண்மையிலேயே பூமி நம் வாழ்வதற்கு இயலாத ஒரு தட்பவெட்ப நிலையை அடைந்து விடும் போலும். பூனையற்ற புன்னகை சிறுகதையில் கூறியிருந்த விதம் இப்படியும் நடந்து விடுமோ  என்ற பயத்தை ஏற்படுத்தி விட்டது. 

 நம் முன்னோர்கள் வாழ்வதற்காக கடினமான உடல் உழைப்பை தந்தார்கள்.  அடுத்தடுத்து வந்த தலைமுறையினர் உடல் உழைப்பை விட புத்திசாலித்தனத்துடன் கூடிய உழைப்பு போதும் என்று நினைக்கத் துவங்கினர்.  நமக்கு அடுத்து வரும் தலைமுறையினர் உடல் உழைப்பும் வேண்டாம்,  புத்திசாலித்தனமும் வேண்டாம் ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து அதன் மூலம் நாம் முன்னேறி விட வேண்டும் என்று என்பதிலேயே முளைப்பாக இருக்கின்றார்கள் என்பதை அட்சய பாத்திரம் சிறுகதையில் அச்சரம் பிசகாமல் அழகாக கூறியிருக்கிறார் ஆசிரியர்.

         அனைத்து சிறுகதைகளுமே வளர் இளம் பருவத்தினர் படித்து அறிந்து நல்லவற்றை பகுப்பாய்ந்து வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியை நல்ல விதத்தில் பயன்படுத்தினால் நன்மையே விளையும்

.                     ஜெயா நவி

 

.

மரபணுக்கள் - விமர்சனம் - கோகிலவாணி

 மரபணுக்கள் - விமர்சனம் - கோகிலவாணி



          “மரபணுக்கள்” - ராம்பிரசாத் அவர்களின் பத்து விஞ்ஞான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. “ஏழாம் அறிவு” போன்ற திரைப்படங்களின் வாயிலாக மட்டுமே மரபணுக்களின் முக்கியத்துவம் பற்றி அறிந்த என் போன்ற அறிவியல் ஞானம் இல்லாதவர்களுக்கும் மரபணு மாற்றங்களின் சாத்தியக் கூறுகளைக் கொண்டு எதிர்வரக் கூடும் சமூக மாற்றங்களைப்பற்றியும் மேலும் மரபணுக்கள் பற்றியும், விண்வெளி, கிரகங்கள், ஆராய்ச்சிகள் பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வமூட்டும் வகையில் கதைகளின் களமும் கருத்துக்களும் அமைந்துள்ளன.  

“பிரதி எடுக்காதே”

          நாட்பட்ட உறவுகளில் ஏற்படும் ஏமாற்றத்தை மிலி மூலம் தெளிவாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார். விஞ்ஞானத்தின் உதவி கொண்டு மனிதனை பிரதியெடுக்கும் இயந்திரம் மூலம் தீர்வு கிடைக்குமென யோசனை சொல்கிறான் மிலியன் காதலன் கரீம்.

          இயந்திரத்தின் மூலம் சூழ்நிலையை எப்படி கையாள்கிறார்கள் என்று கதை விவாதிக்கிறது. எதிர்பாராத திருப்பங்களை உள்ளடக்கியுள்ளது.

          “நீ என்னுடையவனா, அல்லது என் கவலைகள் மட்டுமே என்னுடையதா” என்று கேட்கும் மிலியைக் கொண்டு அவர் பெரும்பாலான பெண்கள் வாழ்வில் சந்திக்கும் ஏமாற்றத்தை கண்முன்னே கொண்டு வருகிறார்.

“சேஷம்”

          கலப்பினங்கள் - பொருட்டு இதுகாறும் நமக்கிருக்கும் புரிதலையும், வகைமைகளையும் தாண்டி வேறொன்றை நிருவுகிறார் ஆசிரியர்.

          இக்கதையில் வேற்று விலங்கினங்களின் மரபணுக்களைத் தாங்கும் மனிதர்கள் கலப்பினம் என அழைக்கப்படுகிறார்கள்.

          வேறுபட்ட குணாதியங்கள் கொண்ட விலங்கினங்களின் மரபணுக்களை மனிதக்கருவில் செலுத்துவதன் வாயிலாக அத்தகு குணாதிசியங்களை கொண்டு பிறக்கும் மனிதர்கள் முறையான உடற்பயிற்சிகளைக் கொள்வதின்  மூலம், உறங்கிக் கொண்டிருக்கும் மரபணுக்களை உசிப்பி விடவும், மீண்டும் உறக்கத்திற்கு கொண்டு செல்லவும் கூடும் என மரபணு பொறியியலின் சாத்தியக்கூறுகளை விவரிக்கிறார் ஆசிரியர்.

          இதனை, “ஸ்டுவர்டை” நேசிக்கும் பெண் வாயிலாகவும், அவன் சிறைபட்டபின் அவளுக்குள் ஏற்படும்  உளப்போராட்டங்கள் வாயிலாகவும், அவளுக்கும் நீதிபதிக்கும் இடையேயான விவாதங்கள் மூலம் அறியலாம்.

          எழுத்தாளர் அம்பை அவர்களின் ஒரு கதைகளுக்குள்ளேயான கதையில் லக்ஷ்மிக்கு மட்டும் படுக்கையில்லாதது ஏன்? விஷ்ணுவில் காலடியிலேயே அமர்ந்திருக்கிறார் என கேட்டிருப்பார்.  இக்கதையில் முடிவு எனக்கு அதை நினைவூட்டியது. வெகு நுட்பமாய் எழுதியிருக்கிறார்.

 “ஊரும் மனிதன்”

          உடல்வளர்ச்சியாலும், குணாதிசியங்களாலும் வேறுபட்ட மகனை கொண்ட தந்தை அவனை எல்லோரையும் போல இயல்பு நிலைக்கு கொண்டு வர மருத்துவங்கள்  பல மேற்கொண்டு தோற்றுப் போகிறார். இந்நிலை அவனை குணப்படுத்த அமானுஷ்யம் நிறைந்த ஒரு நபரை சந்திக்க முயல்கிறார், அவரை சந்திக்க முடிந்ததா, எவ்வாறான தீர்வு வழங்கப் பெற்றார் என்று கதை விவரிக்கிறது.

          “சில பிரத்தியேக குணங்களுக்கு சில இழப்புகள் தேவைப்படுகின்றன”.

          “ஒரு பறவையாக சிட்டுக்கருவிகள் முழுமையடையவில்லை

என்று ஏற்றுக்கொள்ள முடியுமா”  என்பன போன்று பல வரிகளில் இதுகாறும் நாம் கொண்டுள்ள எண்ணங்களின் கோணங்களை விரிவாக்குகிறார் எழுத்தாளர்.

“சரோஜாதேவி புத்தகம்”

          எங்கோ ஒரு காப்பகத்தில் வளரும் பையனுக்கு முன்பின் அறியாத அவனது தாயை ஒத்த வயதில் உள்ள ஒரு பெண் மீது ஈர்ப்பு ஏற்படக் கூடுமா?  என்றெண்ணி காப்பாளர், மனநல மருத்துவரை அணுகிறார். ஃப்ராய்டின் தத்துவங்கள், மரபணுக்களின் ஒற்றுமை, வேற்றுமை வாயிலாக என்ன நடந்திருக்கக்கூடும் என கதை சொல்கிறது.

“பச்சிலை”

          காடுகளின் மீது ஆர்வம் கொண்ட “ஜோஸ்” அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளை பார்க்க எண்ணி, அதற்கு இணையாக உள்ள காடுகளில் ஒன்றை “வானதி”யின் தேர்வுப்படி காண இருவரும் காட்டிற்கு செல்கிறார்கள்.

          வழியில் “ஞானன்” தன் குடிலில் அவர்களுக்கு உற்சாக பானம் அளித்து உபசரிக்கிறார். பின்னர் அவர்கள் காடுகளில் பயணிக்க நதி ஒன்றினை கடக்க இயலாது வேறு வழியில் செல்ல வானதி ஜோஸை தேடி காண இயலாது ஞானனின் உதவியுடன் இருவருமாய் ஜோஸைத் தேடுகிறார்கள்.

          “ஜோஸ்” தன்னைத்தானே எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று கிடைக்கிறது. அதில் தெரியும் மரத்தினைக் கொண்டு மேலும் இருவரும் தேடுகிறார்.

          அவர்கள் “ஜோஸை கண்டடைகிறார்களா? எப்படி கண்டடைகிறார்கள் ” என்பதை கதை வழி படிக்கையில் அமானுஷ்ய உணர்வை தவிர்க்க முடியவில்லை.

எப்போதும் பெண்:

          “பெண் ஏன் அடிமை ஆனாள்? பெரியார் சொன்னது போலல்லாத வேறொரு கோணத்தில் துவங்கி, மரபணுப் பொறியியலில் உள்ளபடி இயல்பிலேயே பெண்களும் ஆண்களும் தனித்தனியே சந்திக்கும் பிரச்சினைகளை மரபணுச் சேர்க்கைகளில் மாற்றம் மூலம் தீர்வினை அறிய அஞ்சலியுடன் தாயான அபியும் (மனநல மருத்துவர்கள்) மரியமும் முயல்கிறார்கள்.

          சோதனைகளின் போக்கினை கதைகளில் காணலாம்.  

தழுவு கருவி

          ராமயண காலங்களில், விமானங்கள் இருந்தனவா அல்லது அத்தகு கற்பனைகள் தாம் விமானங்களை கட்டமைக்க உதவியதா என்ற ஐயம் எனக்கு அவ்வப்போது ஏற்படும். இன்றைய கற்பனைகள் நாளைய கண்டுபிடிப்புகள்.

          விண்வெளிக் கப்பல் மூலம் ஒருவன், கிரகங்களுக்கிடையே நடத்தும் பயணமும், அக்கிரகங்களுக்கு தகுந்தாற்போல அவன் எவ்வாறு தகவமைத்துக் கொள்ள கூடும் என பல ஆச்சர்ய கற்பனைகள் கொண்டுள்ளது கதை.

          தன் பாட்டிக்கும் தனக்குமிடையேயான ஒற்றுமையும், அவள் பால்தான் கொண்டுள்ள ஈர்ப்பும், எவ்வாறு சிறை செல்கிறான் எப்படி மீள்கிறான் என கதை இயம்புகிறது.

          “உன் ஆழ்மனம் எப்போது விழிக்கிறதோ அப்போது அது தன் இலக்கு நோக்கி செல்லத் துவங்குகறிது” “இசையில் தொலைவதும் இசைக்கு நிகரான சோடியாக்கில் தொலைவதும் உனது பாட்டிக்கு ஒன்று தான்” என அவன் தாய் கூறுகிறாள்.

          திரும்ப திரும்ப கேட்டு அவன் ரசிக்கும் பாட்டியின் வக்கிரதூண்ட மகாகாய பாடல், சிறை செல்வது, தப்பிப்பது, கிரகங்கள் பயணம் எல்லாமே தற்செயலா? கதையை வாசிப்பதன் மூலமே முழு அனுபவத்தை பெறலாம்.

கண்ணாடிச்சுவர்

          க்ளாராவும் நான்சியும் உலகளவில் முதலில் தோன்றிய உயிரணு பெண்ணாக இருக்கவேண்டும், பரிணாம வளர்ச்சி அதன்பிறகு எவ்விதம் தொடர்ந்தது என்ன ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்கள். அவர்கள் பரிசோதனையில் கண்ணாடிச் சுவர்களினூடே காண்பது என்ன?

          ஏற்படும் பிறழ்வுகளின் பக்கவிளைவுகள் என்ன என கதை இயம்புகிறது.

          உயிரணுக்களில் துவங்கி பால்சார இனப்பெருக்கம், இயல்புநிலை மீறும் பொழுது சமூகம் அவர்களை பார்க்கும் கோணம்  போன்றவற்றை பேசுகிறது கதை.

மாற்றுத்தீர்வு

          எழிலும், உத்ராவும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். மூலக்கூறு உயிரியல் படித்து பணியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள், சாகாவரத்திற்கான மருந்தை கண்டிப்பது நிறுவனத்தின் நோக்கம்.

          இதற்காய் அவர்கள் செல்லும் வழியில் திருமய்யம் கோயிலில் அவர்கள் உணரும் இனம்புரியா சலனம், தூணில் பொறிக்கப்பட்டுள்ள உருவம், அதைத் தொடர்ந்து அவர்கள் செய்யும் பயணம், காட்டில் அவர்கள் சந்திக்கும் பெண் அவள் கூறும் செய்திகள்  சாகாவரத்திற்கான தீர்வை நோக்கி இட்டு சென்றதா இல்லையா எனக் கதையில் காணலாம்.

சோஃபீ

          நிறுவனம் தந்த கட்டாய பணி ஓய்வுக்கு பிறகு பசுபிக் பெருங்கடலில் புதியதாய் உதயமாயிருக்கும் ஒரு தீவில் ஆராய்ச்சியை மேற்கொள்கிறார் க்ளாரா.

          போட்டிகள் நிறைந்த ஆராய்ச்சித்துறையில் ஒரு புத்தம்புதிய ஆராய்ச்சியை யாரும் அறியாமல் குறிப்பாக யாரும் அதன் தகவல்களைப் பயன்படுத்தி காப்புரிமையை அவர்கள் பெயரில் பதிந்து கொள்வார்களோ என தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு இத்தகு தீவினைத் தேர்ந்தெடுத்து தனது ஆராய்ச்சியை மேற்கொள்கிறார். அவர் எவ்வாறு எத்தகைய படிநிலைகளை கடந்து சோஃபியைக் கண்டடைகிறார். 

          சோஃபியின் சக்தி என்ன என்பதை கதை நம் முன்னே படம் பிடித்து காட்டுகிறது.

         

          இயல்பாகவே மனிதர்கள் (சேப்பியன்ஸ்) கொண்ட மரபணுக்கள் சூழலுக்குத் தகுந்தாற்போல் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்வதை பரிணாம வளர்ச்சி என்று அறிகிறோம்.

          மரபணு மாற்றங்களால் உருவாக்கப்பட்ட தாவரங்களின் நன்மை, தீமைகளைப் பற்றி அறிவோம். மனிதர்களின் மரபணுக்களில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களைக் கொண்டு சில சிக்கல்களுக்கு தீர்வுகாண இயலும் என்ற நேர்மறையான கருத்துக்களை இக்கதைகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

          இத்தகு அறிவியல் பேசும் கதைகளை தமிழில் படித்ததில்லை. வெகு குறைவே ஆயினும், படித்த கேட்ட, தமிழ் நூல்கள், உணர்வுகள், சமூக அலுவலங்கள், பொருளாதார மேம்பாடு, மருத்துவம்,வரலாறு, தனிமனித மேம்பாடு ஆகியவற்றைப் பற்றி பேசியது.

          விஞ்ஞான கதைகளில் மரபணுக்களை கருப்பொருளாகக் கொண்டு, என்னை அதீத உணர்வுக்களுக்குள்ளாக்காது (நான் படித்த கதைகளினால் உணர்ச்சி வசப்படக்கூடிய நபர்) நேர்மறை சிந்தனைகளைத் தூண்டி,மேலும் கற்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் கதைகளை அமைத்தது சிறப்பு.  

          விஞ்ஞான கதைகளினுடே உள்ள மெய்ஞான தத்துவ விசாரிப்புகள் இலக்கியம்.

          இவ்வாறாக வெவ்வேறான கதைகளில், மரபணுக்களை சாராம்சமாக கொண்டு, பிரதியெடுப்பது மரபணுக்களின் கட்டமைப்புகளால், ஏற்படக்கூடிய அல்லது ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களுக்கான சாத்தியக் கூறுகளையும் கிரகங்களைப்பற்றியும், மரங்கள், காடுகள் பற்றியும் சாகாவரம் பற்றியும், நுட்பங்கள் வாயிலாக சுவாரசியமான கதைகள் தந்து அனுபவங்களை பகிர வாய்ப்பளித்த ஆசிரியருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியுடன் நவில்கிறேன்.

 


Sunday, 23 March 2025

உலகார்ந்த பிரஜைகள்

 எங்கள் வீட்டு புல்வெளியில் குருவி ஒன்று முட்டையிட்டிருக்கிறது. நான்கு முட்டைகள். அடைகாக்கிறது. நாங்கள் பின் கதவு திறந்து Lawnல் அடியெடுத்து வைத்தாலே கத்தத்துவங்கிவிடுகிறது. 


தாய் குருவி ஒன்றும், மற்றொரு குருவியும் மாற்றி மாற்றி முட்டைகளை அடைகாக்கின்றன. உணவுக்கென ஒரு குருவி பறந்து சென்றால், மற்றொன்று காவல் காக்கும். உணவுக்கு அலைபாய்வதை கவனித்துவிட்டு walmartலிருந்து குருவிகளுக்காக உணவு வாங்கி, ஒரு கிண்ணத்தில் வைத்தோம். இன்னொரு கிண்ணத்தில் நீர். இப்போது குருவிகள் அந்த உணவை உட்கொள்கின்றன.  நீர் அருந்துகின்றன. முன் போல அடிக்கடி முட்டைகளை விட்டு நீங்கி வேறெங்கும் செல்வதில்லை. 

உலகையே, ஒட்டுமொத்த கிரகத்தையே தன் வீடாகக் கொண்டுவிட்ட ஒரு உலகார்ந்த பிரஜை என் வீட்டு Lawnல். அதை நினைத்தாலே பதற்றமாகிவிடுகிறது எனக்கு.

அவைகள் தன் வீடாக நினைத்துக்கொண்டிருக்கும் இந்த கிரகத்தை, பல நாடுகளாக நாம் பிரித்திருப்பதோ, ஒரு மூலையில் பிறந்த ஒருவர், இன்னொரு மூலைக்குச் செல்லவே பொருளாதாரத்தில் ஒரு இடத்தை அடைய வேண்டுமெங்கிற நிர்பந்தம் நமக்கு இருப்பதோ, எவரோ கண்டுபிடித்த இந்த நடைமுறையை எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே  going with the flow என்கிற ஸ்திதியில் ஏற்றுக்கொண்டு இயங்கும் மனிதக் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருப்பதோ அந்தக் குருவிக்குத் தெரிந்துவிட்டால் என்னை அது மதிக்குமா? பைத்தியக்காரன் என்று நினைத்துவிட்டால்? கோழை என்பதைக் கண்டுபிடித்துவிட்டால்? என்ற கேள்விகள் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. 

அதனால் தானோ என்னவோ நான் என் வீட்டு Lawnக்கே செல்வதில்லை. அந்தக் குருவி தன் முட்டைகளை அடைகாக்கும் வரை, இளங்குறுவிகள் முட்டையைத் துரந்து பறக்கக் கற்கும் வரை, அவைகள் குடும்பமாக எங்கள் Lawnஐ விட்டு நீங்கும் வரை, Lawnக்கே செல்வதில்லை என்று இருக்கிறோம். அவ்வப்போது அவைகள் முட்டையை அடைகாப்பதை, Lawn முழுவதும் உணவுக்காக அலைந்து கிடைக்கும் பூச்சிகளை, நாங்கள் வைத்த தானியங்களை உண்பதை வேடிக்கை பார்ப்பது ஒரு நல்ல பொழுது போக்காகிவிட்டது. 

இந்த நாடு, கடவுச்சீட்டுகள், விசா, வேலை, சம்பளம், வரவு அட்டைகள், இதையெல்லாம் யார் கேட்டார்? எப்போதிருந்து இப்படி நமக்கு நாமே சிறை வைத்துக்கொண்டோம்? எப்போது இதிலிருந்தெல்லாம் விடுதலை? எந்தக் கேள்விக்குமே பதில் இல்லை.

அக்குருவிகளைப் பொறுத்தவரை இந்தக் கிரகத்தில் எந்த பிரிவினையும் இல்லை. எந்த நாடும் இல்லை. எல்லாமும் ஒரே நிலம், ஒற்றை கிரகம். நாமெல்லாம், நம் உருவத்தையும் மீறி விதம் விதமாகக் கூடு கட்டி வாழும் சக ஜீவன்கள். வானத்தில் திரிய வேண்டியது. உணவு கிடைத்தால், பசியாறலாம். இல்லையானால், பட்டினி. உணவுச்சங்கிலிக்கு இரையாவது என்றோ ஒரு நாள் கூத்து. அவ்வளவுதான். யோசித்தால், அப்படியே நாமும் இருந்துவிட்டிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது.