என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Ram's works in global languages

மெட் செயலி - குறுநாவல்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Monday, 18 May 2026

அமெரிக்காவில் தமிழ் இலக்கியம் ஏன் வளர்க்க முடிவதில்லை?

அமெரிக்காவில் தமிழ் இலக்கியம் ஏன் வளர்க்க முடிவதில்லை?

******************************************************************


பொதுவாக, எந்த ஒரு திறமைக்கான தளமும் பின்வருமாறு இயங்கும்.


'நாம் நன்றாகத்தான் எழுதுகிறோம்' என்று நினைப்பவர்கள் எழுத முன்வருவார்கள். சும்மா பேச்சுக்கு ஒரு 100 எண்ணிக்கையிலான இது போன்றவர்களை எடுத்துக்கொள்ளலாம். இவர்களில் நூறு பேரும், எண்ணத்திற்கேற்ப நன்றாக எழுதுபவர்களாக இருக்கமாட்டார்கள். ஒரு ஐந்து பேரிடம் தான் நிஜமான படைப்பூக்கம், ஆற்றல், விடாத முயற்சி, கடுமையான உழைப்பு ஆகியன இருக்கும். 


எஞ்சியவர்களிடம் அதெல்லாம் இருக்காது. எஞ்சிய 95 பேரில், இதுவெல்லாம் இல்லாதவர்களில் கொஞ்சம் பேர் (கொஞ்சம் பேர் தான்) காலப்போக்கில் அதைப் புரிந்துகொண்டு தாமாக ஒதுங்கிவிடுவார்கள். இவர்களெல்லாம் பிரச்சனையில்லை. பிரச்சனை யாரென்றால், இவர்களில் கணிசமானவர்களிடம் வெறும் நெட்வொர்க் மட்டும் தான் இருக்கும். ஆனால், இவர்களைச் சுற்றியுள்ள உலகம் இவர்களுக்கு பாதகமான சில விஷயங்களைச் சொல்லிக்கொடுத்திருக்கும்.


அதாவது, "நெட்வொர்க் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம்" என்பதுதான் அது. இவர்களின் தவறாக  நான் பார்ப்பது, இயற்கை கற்றுத் தந்ததை இவர்கள் தவறான இடத்தில் பயன்படுத்துவதுதான்.


"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்பன போன்ற பழமொழிகளை மிகவும் தவறாகப் பயன்படுத்தக் கற்றிருப்பார்கள். 


இலக்கியம் வளர்க்க, ஒரு இதழ் துவங்கினால், இவர்களில் கணிசமானவர்கள் அந்த இதழைச் சூழ்ந்தால், முடிவே செய்துவிடலாம், இதழ் அதோகதிதான் என்பதை. அந்த நிலையிலும் இதழ், இதழில் வெளியாகும் இலக்கிய ஆக்கங்களின் தரம் ஆகியன காப்பாற்றப்படவேண்டுமென்றால், நுகர்வோரான இலக்கியம் அறிந்த பொதுமக்கள், அங்கே கூட வேண்டும். 


ஏன்? தரமாக எழுதுபவர்கள் போதாதா? போதாதுதான். தரமாக எழுதுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.


எண்ணிக்கையில் பெருமளவில் இருக்கும் இந்த போலிகளிடம் திறமை இருக்காது. ஆனால், எதைக் கிறுக்கினாலும், அதை 'சூப்பர்' என்று சொல்லிவிடக்கூடிய ஒரு பத்து பேரை உடன் வைத்திருப்பார்கள். இதற்கெனவே எங்கு போனாலும் உடன் அவர்கள் ஆட்களில் ஒரு பத்து பேர் கூடவே வருவார்கள்.  பார்க்கப்போனால் இவர்களை அடையாளம் காண்பது எளிது. இவர்களால் தனித்து எங்கும் இயங்கிவிட முடியாது. கூட்டம் இருந்தால் தான், ரத்தமே ஓடும்.


நல்ல இலக்கிய இதழ்களை எடுத்துப் பாருங்கள். இலக்கியம் அறிந்து பொதுமக்கள் அங்கே இருப்பார்கள். இது போன்றவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகையில், இவர்களின் ஆதரவாளர்கள்  ஒரு பத்து பேர் செயற்கையாக 'வாவ்.. சிறப்பு' என்று செயற்கையாக பாராட்டுவார்கள். இந்த எண்ணிக்கையைத்தாண்டி குறை சொல்பவர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். அது 'செயற்கை பாராட்டுதான்' என்பதை வெட்டவெளிச்சமாக்கும் மக்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும். அப்படி இருந்தால், போலிகளுக்கு குரல் எழுப்ப தைரியம் வராது. போலிகள் கூட்டம் தாமாகக் களைந்துவிடும். 


ஆனால், நிதர்சனம் அது அல்ல? இலக்கியம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை தான் சொற்பமாயிற்றே. ஆகையால், இலக்கியம் அறிந்த மக்கள் எண்ணிக்கை இல்லாத இதழ்கள் இவர்கள் போன்ற போலிகளிடம் விழுந்துவிடுகிறது. 


அமெரிக்காவில் இலக்கியம் வளர்ப்பதில் உள்ள பிரச்சனை இதுதான். பொதுமக்களுக்கு இலக்கியம் தெரியாது. வாசிப்பு என்பது அறவே இல்லை. இலக்கியம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை சொற்பமே. இதனால், எந்த புது இலக்கிய இதழ் துவங்கினாலும், அது எளிதாக போலிகளின் ஆதிக்கத்தில் சென்றுவிடுகிறது. இலக்கியம் தெரிந்தவர்கள் மெளனமான வெளியேறிவிடவேண்டும் இல்லையானால்,  தினம் தினம் இவர்களுடன் மல்லுகட்ட வேண்டும். இலக்கியத்தின் சிறப்பே, அது தன்னைப் பழகுபவர்களுக்கு அறிவில் முதிர்ச்சி அளிக்கும், அதில் பக்குவப்பட வைக்கும், அதில் நிதானம், அமைதி பழகிவிடும். அவர்களுக்கு மல்லுகட்டுவதிலெல்லாம் ஆர்வம் இருக்காது. அது இவர்கள் போன்ற போலிகளுக்கு ரொம்ப வசதியாகப் போய்விடுகிறது. 


அமெரிக்காவில் தமிழ் இலக்கியத்திற்கென எத்தனை இதழ்கள் ஆரம்பித்தாலும் இதுதான் கதி. நான் அவ்வப்போது யோசிப்பதுண்டு. இப்படி மல்லுகட்டுவதால் இவர்கள் எதைத்தான் கண்டடைகிறார்கள் என்று. உண்மையில் இவர்கள் 'எதையோ சாதிப்பதாக' எண்ணிக்கொண்டு இவர்கள் செய்யும் எதிலும் இவர்கள் எதையுமே சாதிப்பதில்லை. தங்கள் சுயநல  நோக்கங்களுக்கு ஒத்துப் போகும் நபர்களுடன் நெட்வொர்க் செய்வதாக இவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். 


"நீங்கள் செய்வதெல்லாம் நியாயமா?" என்று தங்கள் மீது எழுப்பப்படும் கேள்விகளுக்கு, "எங்களுக்கு  திறமை இருப்பதாக நம்புகிறோம்.  தளத்தைப் பயன்படுத்த எங்களுக்கும் உரிமை இருக்கிறது. நாங்கள் ஏன் போக வேண்டும்? எங்களை திறமையை நாங்கள் காட்டுகிறோம். உங்களுக்கென்ன?" என்பதாக இவர்களின் பதில் அமையும். 


"அது சரிதானே?" என்று யாரேனும் நினைக்கலாம்.

திறமை என்ற ஒன்று இருப்பது உண்மையானால், அது படிப்படியாக அடுத்தடுத்த கட்டங்கள் முன்னேற வேண்டுமல்லவா? ஆக்கம் வெளியாகும் இதழ்களின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து பத்தாக வேண்டும் அல்லவா? அப்படி எதுவும் நடக்காது. ஒரு ஐந்து வருடத்தில், இவர்களே காணாமல் போய்விடுவார்கள். ஒழிந்தது என்று  நினைத்தால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இதையெல்லாம் மீண்டும் செய்ய புதிதாக ஒரு குரூப் உருவாகியிருக்கும். மீண்டும் இதையே புதிதாகச் செய்யக் கிளம்புவார்கள்.


இவர்கள் என்னதான் ஆள் வைத்து தங்களைத்தாங்களே பாராட்டிக்கொண்டாலும் ஒரு கட்டத்துக்கு மேல் எல்லோருக்குமே உண்மை தெரிந்துவிடுகிறது. தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் இலக்கியக் கூட்டங்களுக்கு மக்கள் பங்கேற்காததின் பின்னணி, மக்களுக்கு இலக்கியம் தெரிகிறதோ இல்லையோ, இந்த நிகழ்ச்சிகளில் இருப்பவர்கள் போலிகள் என்பது தெரிந்திருக்கிறது என்று நான் நினைத்துக்கொள்வதுண்டு. அந்த அளவில் மக்கள் புத்திசாலிகளே என்பதை ஒப்புக்கொள்கிறேன். 


அமெரிக்காவில் இலக்கிய இதழ்கள் துவக்கி தமிழ் இலக்கியம் வளர்ப்பதெல்லாம் நிஜமாகவே நடவாத காரியம் தான்.