என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Saturday, 28 December 2024

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்

 அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்




இந்த விவகாரத்தில் 'மாணவி ஏன் அந்த நேரத்தில் மாணவனுடன்...அதனால் தான் எல்லா பிரச்சனையும்' என்கிற ரீதியில் இணையத்தில் பல விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது.

அது அவருடைய விருப்பமுங்க. அது காதலா இருக்கலாம். காமமாகவே இருந்தாலும், அது அவரது தேர்வு தான் என்றால் அதில் கருத்து சொல்ல நம் யாருக்குமே உரிமை இல்லை. இதற்கெல்லாம் "கர்மா சும்மா விடாது" என்றெல்லாம் பொங்க வேண்டியதில்லை. ஆண்களில் பலர் இளம் வயதில் பல வல்லுறவுகளில் இருந்துவிட்டு, இறுதியில், அதற்கு நேரெதிரான குணாதிசயங்களுடன் கூடிய பெண்ணுடன் செட்டில் ஆகிறவர்கள் இருப்பார்கள். இளம் வயதில் பல்லுறவுகளில் இருந்தவர்கள் ஒருகட்டத்தில் திகட்டிப்போய், எதுவுமே வேண்டாம் என்று சாமியார் போல் சிலர் இருப்பார்கள். போலவே, சிறுவயதிலும் சரி, மத்திம வயதிலும் சரி, பாலைவனமாக எவ்வித உறவுகளும் வாய்க்காமல் காய்ந்து கிடப்பவர்களும் இருப்பார்கள். சிலருக்கு எல்லா வயதுகளிலும் உறவுகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஆனால், வைத்து மெயின்டெயின் செய்யததேவையான ஒன்று அவர்களுக்கு எல்லாக் காலத்திலும் வாய்க்காதிருக்கும். இப்படிப் பல permutations and combinations சொல்லலாம்.

மேற்சொன்ன எல்லா சாத்தியங்களிலும் ஆணுக்கு பதிலாக பெண் என்றும் போட்டுக்கொள்ளலாம். அதுவும் தினம் தினம் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

நெருங்கிச் சென்று பேசிப்பார்த்தால் தான், அவைகளிலிருந்து அவர்களுக்கான take aways என்னென்னவாக இருக்கின்றன என்பது புரியும்.

காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு, அந்த ஏமாற்றம் தந்த கெட்ட அனுபவத்தில் துவண்டு, பின் திருமணத்திற்குப் பிறகு மண வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் பெண்கள் இருக்கிறார்கள். திருமணத்தில் ஏமாற்றப்பட்டு, அந்த ஏமாற்றத்திற்கு பதிலாகப் பல ஆண் துணைகளோடு தரிகெட்டு வாழ்ந்து பழி வாங்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

வாழ்க்கை ஒருவருக்கு என்ன வைத்திருக்கிறது என்பது தான் இருப்பதிலேயே ஆகச்சிறந்த சஸ்பென்ஸ்.

'இருட்டில் ஆணும் பெண்ணுமாக...' என்று பொறுமாதீர்கள். அடுத்த முறை அப்படி ஒருவரைப் பார்த்தால், வாழ்க்கை இவர்களுக்கு என்ன வைத்திருக்கும் என்ற கேள்வியோடு கடந்து போகப் பழகிவிடுங்கள். 'இருட்டில் ஆணும் பெண்ணுமாக...' என்று நீங்கள் பார்த்தது நிச்சயமாக அவர்களுக்கு நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், யாருக்குமே நிரந்தரமாக இருப்பதில்லை. பலருக்கு வாழ்க்கையில் நடக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம் அந்த பத்து நிமிஷமாகத்தான் இருக்கும். வாழ்க்கை, அவர்களின் மொத்த வாழ்வுக்குமான ஊக்கத்தை அந்தப் பத்து நிமிஷத்தில் தான் பொதித்து வைத்திருக்கும்.

வாழ்க்கை அவரவர்க்கான அனுபவத்தை, ஏமாற்றத்தை, பாடத்தை, நஷ்டத்தை, அந்தக் கணத்தில் தான் மறைத்தும் வைத்திருக்கிறது. உயிருக்கு உயிராகக் காதலித்து, அக்காதலியுடன் அப்படிப் பல பத்து நிமிஷங்களைச் செலவு செய்திருப்பார் ஒருவர். இறுதியில், கெட்ட நிகழ்வுகளால், அவைகளை மறக்க, முழுக்குடிகாரனாக மாறியிருப்பார். அந்த பத்து நிமிஷம் தான் அவரது வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்தப் பத்து நிமிஷம் வரமாகவும் இருக்கலாம், ஆலகால விஷமாகவும் அமையலாம்.

Its their moment- not in a fun way but in a fate-way என்பதைப் புரிந்துகொண்டீர்களானால், அடுத்த முறை அவர்களைப் பார்க்கையில், தொந்திரவு செய்துவிடக்கூடாது என்று மட்டும் தான் தோன்றும் உங்களுக்கு. அப்படித் தோன்றிவிட்டால், நீங்கள் மனித வாழ்வை, அதன் சாபக்கேடுகளை, நிலைத்தன்மையின்மையை, கருணையற்ற தன்மையையெல்லாம் சரியாகப் புரிந்துவைத்திருக்கிறீர்கள் என்று பொருள்.




விடுதலை-2

 விடுதலை-2

******************
விடுதலை-2 திரைப்படம் குறித்த விமர்சனங்கள் இணையம் முழுவதும் பெரும்பான்மைக்கு நேர்மறையாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு சில வாதங்கள், கம்யூனிசம் பற்றி எடுத்த வெற்றிமாறன், தன் சம்பளத்தைத் தன் உதவியாளர்களுடன் பகிர்ந்து கொள்வாறா என்கிற ரீதியில் இருப்பதையும் கவனிக்க முடிந்தது.
இது என்ன கேள்வி? கொலைகாரன் பற்றிப் படமெடுக்க வேண்டுமானால் இயக்குனர் முதலில் கொலை செய்திருக்க வேண்டுமா என்ன?
விடுதலை-1,2 இரண்டுமே 1980, 1990 களின் காலகட்டத்தில் எந்தெந்த சூழல்களில் தமிழ் நாட்டில் கம்யூனிசக் கோட்பாடுகள் புகுந்தன? அவை புகுவதற்கான அடிப்படைக் காரணிகளாக அமைந்த நிகழ்வுகள் யாது? சமூகத்தின் எந்தப் படி நிலையில் இருப்பவர்களால் அது முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது? ஏன் ஏற்கப்பட்டது? அதனால், அவர்களுக்கு நடந்த நன்மை தீமைகள் என்னென்ன? அது குறித்த அவர்களது விமர்சனம்/பார்வை என்னவாக பின்னாளில் உருப்பெற்றது? என்பது குறித்தெல்லாம் விரிவாக, ஒரு மாணவன் இது குறித்த சரித்திரம் பூகோளம் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பல்லாயிரம் பேர் எழுதிய நூல்களை மணிக்கணக்கில் அயர்ந்து அயர்ந்து வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளாமல், காட்சி வாயிலாக, உரையாடல் வாயிலாக, பாடம் புகட்டும் நோக்கில், மிக மிக விரிவாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இன்றிருக்கும் சமூகம் வெற்றிமாறனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
வெற்றிமாறன் என்றொரு திரைப் படைப்பாளி இல்லாவிட்டால் வேறு எவரும் இந்த ஏரியாவை கையாண்டு திரைப்படம் எடுத்து லாபம் பார்க்க மாட்டார்கள். மாறாக, நடிகைகளின் இடுப்பையும், பிருஷ்டத்தையும் மார்பையும் கிட்டத்தில் காட்டி காசு பார்க்கும் கூட்டமே இங்கு அதிகம். திரைத்துறை அத்தகையது.
தமிழகம் உடைமைத் தத்துவத்தின் அடிப்படையிலமைந்தது. அதன் அடிப்படையிலேயே அதன் பண்பாட்டுக்கூறுகள், கட்டமைப்புகள், பொருளாதாரம், கலாசாரம் ஆகியன கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன. கேரளாவில் கம்யூனிசம் இருக்கிறதே என்று யாரேனும் சொல்லக்கூடும். தன் குப்பையை அடுத்த மாநிலத்தில் கொட்டு என்று எந்தக் கம்யூனிசமும் சொல்லாது. அப்படிச் சொல்கிறதென்றால் அது போலி கம்யூனிசம், வெறுப்புக் கம்யூனிசம் என்பதை அறிக. விடுதலை-2 அப்படி ஒன்றைக் காட்சிப்படுத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
விடுதலை-2 திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளில் வாத்தியார் கதாபாத்திரத்தின் வசனங்கள் வாயிலாக, கம்யூனிசத்தைத் தமிழகத்தில் ஏற்றுக்கொண்டவர்கள் அதைச் செயல்படுத்திய விதம், அது போன போக்கு, உருவாக்கிய இழப்புகள், ஆகிய, கம்யூனிச சித்தாந்தத்தை, அதை ஏற்றுக்கொண்ட அப்போதைய வாத்தியார் முதலானவர்கள், எக்காரணத்துக்காக, எதைச் செயல்படுத்த ஏற்றுக்கொண்டார்களோ அது நடக்கவில்லை என்பதை "நம் பாதையை மாற்ற வேண்டும்" என்று சொல்வதம் மூலம் உணர்த்துவதாக அமைகிறது. அதை, திரைப்படத்தின் முக்கியமான பகுதியாகப் பார்க்கிறேன். இருபது ஆண்டுகளாக மேற்கொண்ட கம்யூனிச முயல்வுகள் சென்றடைந்த இடம் உவப்பானதாக இருக்கவில்லை என்ற விமர்சனம் வாத்தியார் வாயிலாக வெளிப்படுகிறது. அதைத்தான் மக்கள் மனதில் திரைப்படம் விதைப்பதாகவும், அந்தப் புள்ளியிலிருந்து மேற்கொண்டு மக்கள் எல்லோரின் நலனுக்கும் என்ன வேண்டுமோ அதை நோக்கி அடுத்தடுத்த கட்ட நகர்வை எல்லோருமாகச் சேர்ந்து மேற்கொள்ளவும் என்ற மறைமுக வேண்டுதலோடு திரைப்படம் முடிந்ததாக நான் பார்க்கிறேன். அந்த வகையில் திரைப்படம் எனக்கு, சம காலத்தின் மிக மிக முக்கியமான படமாகத் தோன்றுகிறது. இக்காரணத்திற்காகவே, இத்திரைப்படத்தை எல்லோரும் ஒருமுறையேனும் பார்க்குமாறு இணைய நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மற்றபடி, ஏற்கனவே சொன்னது போல, ஒரு கையாலாகாதவனைப் பார்த்தால், கோபமும், எரிச்சலும் வரும். ஆனால், அதிகாரம் என்னும் படிநிலை அடிப்படையிலான இயக்கத்தில், அந்தக் கையாலாகாதத்தன்மை எப்படியெல்லாம் மிக மிக கவனமாக வார்த்தெடுக்கப்படுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டும் விதத்தில் படத்தில் எல்லா காட்சிகளையும் தேவையான காட்சிகள் என்றே கொள்ள வைக்கிறது. பிறக்கையிலேயே விதி கோரமாகத் தீர்மானிக்கப்பட்டுவிடும் மக்களுக்கு நடக்கும் அட்டூழியங்களை ஆவணப்படுத்தும் வகையில் விடுதலை-2 ஒரு சர்வதேச தரத்திலான படம் என்று தைரியமாகச் சொல்லலாம். பார்க்கவே முடியவில்லை என்றால் அனுபவித்தவர்கள் வலி? அந்த வேதனை? அதற்கு அவர்களின் எதிர்வினை? அது எப்படி நியாயமற்றதாகும்?
பரவலாக தமிழ்ச் சமூகத்தை ஆதி இனம் என்பார்கள். ஒரு ஆதிச் சமூகத்தின் இயல்பு என்ன? மற்ற சமூகங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல வளர்ந்த சமூகத்தின் அடையாளமாக, வளர்ந்தவன் சமூகத்தின் கடை நிலையில் இருப்பவனின் வாழ்வை எளிமையானதாக ஆக்கவேண்டும். அது நம் சமூகத்தில் எங்கே நடந்திருக்கிறது? பெரும்பாலும், சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களைச் சுரண்டும் சமூகமாகத்தான் வளர்ந்த சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. விடுதலை-2 அதை விமர்சனம் செய்யும் விதமாக, அதை உணர்த்தும் விதமாக சரியான நேரத்தில் வெளியாகியிருக்கிறது என்று சொல்லலாம்.



Sunday, 8 December 2024

48வது சென்னைப் புத்தகக் கண்காட்சி

 48வது சென்னைப் புத்தகக் கண்காட்சி  நந்தனத்தில் உள்ள Y.M.C.A உடற்கல்வியியல் கல்லூரியில் டிசம்பர் 27 துவங்கி 12 ஜனவரி 2025 வரை நடைபெற உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது. 


படைப்பு பதிப்பக வெளியீடாக விற்பனையில் இருக்கும் எனது நூல்களின் பட்டியல் பின்வருமாறு:


1. "வாவ் சிக்னல்" விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2020)

2. "மரபணுக்கள்" விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2024)

3. "தீசஸின் கப்பல்" சிறார்/இளையோர் விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2024)


இவற்றில் "வாவ் சிக்னல்" நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூல் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. "மரபணுக்கள்", "தீசஸின் கப்பல்" ஆகிய இரண்டு நூல்களும் நடப்பாண்டில் வெளியாகும் எனது விஞ்ஞானச் சிறுகதை நூல்கள் ஆகும். 


நாளைய உலகம் அறிவியல் உலகமாகப் பரிணமிக்க என்னாலான சிறு முயற்சிகள் இந்த நூல்கள். அதே  நோக்கத்திற்காய் இந்த  நூல்களுக்குத் தங்கள் நல்லாதரவை நல்குமாறு  இணைய நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 


பிரதிகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:

ஜின்னா (பதிப்பாளர் - படைப்பு பதிப்பகம்)

Phone: 7338897788/7338847788

படைப்பு நூல் நிலையம்

எண் 3, தரைத்தளம், அஜந்தா டவர்ஸ்,

கார்ப்பரேஷன் காலனி தெரு, கோடம்பாக்கம்

சென்னை - 600024.


ஸ்டால் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.







Friday, 6 December 2024

I miss you guys

பொதுவாக, அறிவியல் புனைவுகள் என்றாலே அதற்குப் பெரிய வாசகர் பரப்பு இருக்காது. காரணம் தெரிந்ததுதானே. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசிப்பார்கள். அவர்களிலும், வாழ்க்கை தரும் சவால்கள், தினசரிகளில் உள்ள ஒழுங்கின்மைகளில் தொலைபவர்கள் என்று பல விடயங்கள் அத்தொடர் வாசிப்பைக் கலைத்துப் போட முயன்று கொண்டே இருக்கும். 2020களில் என் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து, பின்னூட்டமிட்டவர்களில் பலர் இப்போது முகநூலிலேயே இல்லை அல்லது முகநூலுக்கே வருவதில்லை. அவர்களைக் கவனித்து, தொடர்பு கொண்டு விசாரித்ததில் தெரிய வந்த காரணிகள் பின்வருமாறு:



1. திருமணமானதால் புகுந்த வீடு, மகப்பேறு என்று முகநூல் பக்கமே திரும்ப இயலாமல் பிஸியானவர்கள்,

2. துணைவர்களின் உள்ளீடு காரணமாக முகநூல் வருவதைத் தவிர்ப்பவர்கள்,

3. தெரியாத காரணங்களால் முகநூலையே டிலீட் செய்துவிட்டுப் போனவர்கள்,

4. வயதான தாயைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நேரமின்மையால் முகநூல் வர இயலாதவர்கள்,

5. பிள்ளைகளின் கல்வியின் நிமித்தம் வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்து புதிய தினசரிகளில் தொலைந்தவர்கள்,

6. விபத்தில் சிக்கிய குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு முகநூலுக்கு நேரம் ஒதுக்க முடியாதவர்கள்,

7. துணைவர்களின் எதிர்ப்பு காரணமாக முகநூல் கணக்கை நீக்கியவர்கள்,

8. கல்லூரிகளில் இறுதியாண்டு என்பதால் பாடங்களில் கவனம் குவிப்பவர்கள்,

9. வேலை இழப்பு (layoff), பணி இட மாற்றம், புதிய வேலை ஆகியவற்றால் முக நூலுக்கு நேரமொதுக்க முடியாதவர்கள்,

10. வங்கி வேலைகளில் தொலைந்தவர்கள்

11. அந்தந்த காலகட்டத்தின் ட்ரெண்ட்களில் பாதை மாறியவர்கள்,

12. மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம், பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகளில் முகநூல் நேரத்தைப் பறிகொடுத்தவர்கள்,

 

இப்படிப் பற்பல காரணிகளால், முகநூலில் அறிபுனை ஆக்கங்கள் வாசிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. இவர்கள் அனைவருக்கும், I miss you guys. I hope you overcome your hurdles and get back to sci-fi reading. 

Wednesday, 4 December 2024

தீசஸின் கப்பல் - சிறார்/இளையோர் விஞ்ஞானச் சிறுகதைத் தொகுதி நூல்

தீசஸின் கப்பல் - சிறார்/இளையோர் விஞ்ஞானச் சிறுகதைத் தொகுதி நூல்

படைப்பு பதிப்பக வெளியீடாக எனது "தீசஸின் கப்பல்" என்ற தலைப்பிலான விஞ்ஞானப் புனைவுச் சிறுகதைத் தொகுதி நூல் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் நண்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது எனது பதினைந்தாவது நூல். இத்தொகுப்பில் இடம்பெறும் சிறுகதைகள் அனைத்தும் அறிவியல் புனைவுகள் தான் என்றாலும், சிறார் மற்றும் இளையோர்களுக்கான சிறுகதைகளைத் தாங்கி வரும் நூல் என்பதே இந்த நூலின் சிறப்பம்சம் எனலாம்.



ஒரு நாட்டின் எதிர்காலம், அதன் இளைய தலைமுறை - குறிப்பாகப் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள். இனி வரும் காலம் அறிவியலின் காலம் என்று சொல்வதை விடவும், அறிவியலே ஒரு உலகார்ந்த மொழியாக, மதமாக மெல்ல மெல்ல உருமாறிக்கொண்டிருக்கும் காலகட்டத்திற்குள் நாம் ஏற்கனவே பிரவேசித்துவிட்டோம் என்று சொல்லலாம். அதற்கேற்ப, நம் தமிழ்ச் சமூகத்தின் சிறார் மற்றும் இளையோர்களைத் தொடர்ந்து தயார் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கிறது. கதையாடல்கள் வழி, அறிவியலைத் தங்கள் பொது வாழ்வின் சூழல்களுக்குப் பொருத்திப் பார்க்கவும், சிக்கல்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் தேடவும் மாணவ சமுதாயத்தைத் தயார் செய்ய, பழக்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இக்காலகட்டம் அமைந்திருக்கிறது. அதைச் சாத்தியப்படுத்த என்னாலான ஒரு சிறு பங்களிப்பே 'தீசஸின் கப்பல்' நூல் எனலாம்.
பிரதிகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
ஜின்னா (பதிப்பாளர் - படைப்பு பதிப்பகம்)
Phone: 7338897788/7338847788
படைப்பு நூல் நிலையம்
எண் 3, தரைத்தளம், அஜந்தா டவர்ஸ்,
கார்ப்பரேஷன் காலனி தெரு, கோடம்பாக்கம்
சென்னை - 600024.
படைப்பு பதிப்பகத்தில் கிடைக்கும் எனது பிற விஞ்ஞானச் சிறுகதை நூல்கள்:
1. "வாவ் சிக்னல்" விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2020)
2. "மரபணுக்கள்" விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2024)
3. "தீசஸின் கப்பல்" சிறார்/இளையோர் விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2024)

Wednesday, 27 November 2024

Anyone from Japan?

 Anyone from Japan?

Need some help. Please contact me at ramprasath.ram@gmail.com

Friday, 22 November 2024

நவீன சிறைச்சாலைத் தத்துவம் - Youtubeல்

எனது 'நவீன சிறைச்சாலைத் தத்துவம்' சிறுகதை சொல்வனத்தின் ஒலிவனத்தில், Saraswathi Thiagarajan அவர்களின் இனிமையான குரலில்...


சற்றே பெரிய சிறுகதை என்பதால், ஒலிவனம் சிறுகதையை கிரகிக்க உதவியாக இருக்கலாம்...

https://www.youtube.com/watch?v=xMoYxKSO6hU



Saturday, 16 November 2024

நவீன சிறைச்சாலைத் தத்துவம் - விமர்சன பார்வைகள்

 சிறுகதை - விமர்சன பார்வைகள்

நவீன சிறைச்சாலைத் தத்துவம்

https://solvanam.com/2024/11/10/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/


1.பல முக்கிய சம்பவங்கள் நேரடியாக காட்டப்படாமல் விளக்கப்படுகின்றன

சிறுகதை ஆசிரியர்: 7வது கேள்விக்கான விடைதான் இதற்கும். 

2.துணைக் கதைகள் முழுமை பெறவில்லை

சிறுகதை ஆசிரியர்: 7வது கேள்விக்கான விடைதான் இதற்கும். 

3.கருந்துளை அருகே தகவல் பரிமாற்றம் எப்படி சாத்தியம்?

சிறுகதை ஆசிரியர்: சாத்தியம். சிறுகதையில் சொல்லியிருக்கிறேன். சிறுகதையில் விலாவாரியாக வகுப்பெடுக்க விரும்பவில்லை. 

4.கிரகத்தின் இயற்பியல் சூழல் முழுமையாக விவரிக்கப்படவில்லை

சிறுகதை ஆசிரியர்: 7வது கேள்விக்கான விடைதான் இதற்கும். 

5.வாடகை விண்கலன்களை யார் இயக்குகின்றார்கள் என்பதன் விளக்கம் இன்மை

சிறுகதை ஆசிரியர்: 7வது கேள்விக்கான விடைதான் இதற்கும். 

6.அபாதி நேற்று வந்ததாகக் கூறுகிறார், ஆனால் கோதுமை விவசாயம் ஏற்கனவே நடந்திருக்கிறது.

சிறுகதை ஆசிரியர்: கோதுமை யார் பயிரிட்டிருப்பார் என்பது குறித்து சிறுகதையின் இறுதிக்கட்டத்தில் வருகிறதே.

7.பாத்திரங்களுக்கிடையே ஆழமான உறவு வளர்ச்சி காட்டப்படவில்லை

சிறுகதை ஆசிரியர்: கருந்துளைகளைச் சுற்றும் கிரகங்கள் குறித்த பொதுவான புரிதல் இக்கேள்விகள் எழாமல் தவிர்க்கும் என்று நினைக்கிறேன்.


உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள், நண்பரே!




படுக்கையறைக்கொலை - 3

இன்று படுக்கையறைக்கொலை ‍ 3 என்ற தலைப்பிலான என் சஸ்பென்ஸ் சிறுகதையை வெளியிட்ட கீற்று இணைய இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1934:-3&catid=3:short-stories&Itemid=89



படுக்கையறைக்கொலை - 3


பங்களூர் கோரமங்களாவில் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணக்கார முதலைகளுக்கான தடபுடல் விருந்து மெதுவாக முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த எல்லா தொழிலதிபர்களும் கலந்துகொண்டிருந்தனர். மூன்றே மூன்று பெண்களைத்தவிர மற்ற அனைவரும் ஆண்கள். முடியும் தருவாயில் அந்த மூன்று பெண் அங்கத்தினர் சென்ற பிறகு மேடையேறிய நவனாகரீக உடை அணிந்த ஒருவன் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கலாச்சார மையத்தை பற்றி எடுத்துச் சொல்லத்தொடங்கியிருந்தான். அவன் சொல்லச் சொல்ல கேட்டுக்கொண்டிருந்த எல்லாரையும் போல் விழிகள் விரிந்தது சேகருக்கும், சுப்புவுக்கும். சேகருக்கு சென்னையில் ரியல் எஸ்டேட் பிஸினஸ். சுப்புவுக்கு கடலூரில் கோழிப்பண்ணை, சாராய பிசினஸ் மற்றும் டெக்ஸ்டைல் பிஸினஸ்.

விருந்து முடிந்து அனைவரும் சென்னை திரும்பிக்கொண்டிருக்கையில், ஒரே ரூட் தான் என்பதால் தன் காரை பின்னே வரச் சொல்லிவிட்டு சுப்பு, சேகரின் காரில் ஏறிக்கொண்டார். காருக்குள்ளேயே தண்ணிப்பார்ட்டி தொடங்கி விட்டிருந்தது. பேச்சு முழுவதும் அந்த கலாச்சார மையத்தைப்பற்றியே இருந்தது. காலேஜ் அழகிகளுடன் வெளிநாட்டுச் சுற்றுலா, பணக்கார இளைஞிகளுடன் வீக்கென்ட் கெட்டுகெதர், அயல் நாட்டு சரக்கு, இறக்குமதி செய்யப்பட்ட மர்வானா, அபின், சமூகத்தின் பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் பணக்காரர்களின் நட்பு இப்படி நிறைய. இருவருக்கும் அப்போதிருந்த ஒரே கவலை, மையத்தில் சேர குறைந்தபட்சம் 50 லட்சம் கையிருப்பு காண்பிக்க வேண்டும், 5 லட்சம் பணம் கட்ட வேண்டும்.

அவர்களின் வசதிக்கு கொஞ்சம் அதிகம் தானென்றாலும், சொல்லப்பட்ட சொகுசு ஐட்டங்களும், காலேஜ் அழகிகளுடன் கொண்டாட்டமும் அதற்குள் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டுமென்ற முணைப்பை அதிகப்படுத்தியிருந்தது.

நேரம் செல்லச் செல்ல விஸ்கியை முந்திக்கொண்டு வக்கிரம் குடியேறிக்கொண்டிருந்தது. சென்னையில் சுப்பு தன் கார் மாறுகையில் இருவரும் பரஸ்பரம் எப்படியாவது அந்த மையத்தில் கட்டாயம் சேர்வதாக முடிவெடுத்துக்கொண்டு பிரிந்தனர். சேகர் முதல்வேலையாக புதிய‌ ரியல் எஸ்டேட் கான்ட்ராக்ட்டிற்கு என்ன வழியென்று யோசித்தான். ரெஸசனில் வீழ்ச்சி அடைந்த ரியல் எஸ்டேட் துறையில் இப்போது பழையபடி தில்லுமுல்லு செய்தால் தான் லாபம் பார்க்க முடியும். என்ன செய்யலாம் என்று யோசனையில் இருந்தவன் கண்களில் மெயின் ரோடை ஒட்டி இருந்த அந்த 10 ஏக்கர் நிலம் பட்டது. வெகு நாட்களாக யாரும் வந்து பார்க்காமல் கிடந்தது நிலம். சேகரின் கார் அந்த இடத்திலேயே ஓர் ஓரமாக நின்றது. ஒரு சிகரெட் பற்றவைத்தபடியே அந்த நிலத்தைப் பார்த்தபடி தன் அலுவலகத்திற்கு ஃபோன் செய்யலானான் சேகர்.

ரெண்டு நாளில் அந்த நிலத்தில் ரோடு போடும் இயந்திரங்கள் வந்து நின்றது. அரசாங்கத்து பட்டா கூட இல்லாத நிலத்தில் அவசரமாக தெரு விளக்குகள் பொருத்தப்பட்டன. அரசாங்கம் ரோடு போட்டதாய் செய்தி பரப்பப்பட்டது. சேகரின் ஆபீஸில் ஃப்ளாட் வாங்க கூட்டம் கூடியது. சேகரின் ரியல் எஸ்டேட் போர்ட் நடு நிலையாய் நிறுத்தப்பட்டு யாருடைய நிலமோ அநியாயமாய் கையகப்படுத்தப்பட்டது. சுப்புவிற்கு செய்தி போனது. தன்னுடன் இருந்தவன் தன்னை முந்திக்கொண்டு போய் விடுவானோ என்கிற பயம் வந்தது.

சுப்பு அவசரப்பட்டான். ஆனாலும் அவனால் அத்தனை பணம் சட்டென உருவாக்க முடியவில்லை. துணிமணி வியாபாரத்தில் பண்டிகை நாட்கள் போக, வெளி நாட்டு ஆர்டர் கிடைத்தாலே தவிர சட்டென அத்தனை பணம் பார்க்க முடியாது. கோழிப்பண்ணையிலும் அத்தனை லாபம் உடனே வராது. ஆனால் சேகரை முந்த வேண்டும். எப்படி? மனம் கணக்கு போட்டது. சுப்பு இடமும் வலமுமாய் தன் அலுவலக அறையில் நடந்துகொண்டிருந்த போது, கண்ணாடி சன்னல்களினூடே புதிதாய் வேலைக்குச் சேர்ந்த சங்கரியின் மேல் சுப்புவின் பார்வை நிலைகுத்தி நின்றது. அவளை விழுங்கி விடுவது போல் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு மையத்தில் சேராமலேயே சேகரை முந்தும் எண்ணம் வந்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சென்னையை அடுத்த திண்டிவனத்தில், திண்டிவனம் டூ பாண்டிச்சேரி ரூட்டில் ஒரு பொட்டல் காட்டில் இரண்டு வாலிபர்கள் சந்தித்துக்கொள்கின்றனர்.

ஒருவன், ரவி, இன்னொருவன் சுரேஷ். இருவருக்கும் இடையே கண்ணீர் பொதுவாக இருந்தது. ரவி உறுமிக்கொண்டிருந்தான்.

'அந்த சேகர போடனும் டா'.

'அந்த சுப்புவ போட்டாத்தான் செத்துப்போன என் அக்கா மனசு சாந்தியாவும் டா'.

'எப்படி போடறது? நாமலாம் மிடில் க்ளாஸ். நாம இப்ப படிக்கிற இன்ஜினியரிங்க முடிச்சு வேலைக்குப் போனா தான் நம்ம குடும்பம் தலைதூக்கும். அவனுங்கலாம் பணக்காரனுங்க. என்ன வேணாலும் பண்வானுங்க. என் அப்பாவோட நிலத்தை எப்படி அமுக்கினான்னு சொன்னென்ல. என் அப்பாவால ஹார்ட் அட்டாக்ல போய் சேரத்தான் முடிஞ்சது. உன் அக்காவ, கூட படுக்கச் சொல்லி நிர்பந்தப்படுத்தினானே அந்த சுப்பு. உன் அக்கா தூக்குல தொங்கி மான‌த்தை காப்பாத்திக்கிட்டா. என்ன பண்ண முடிஞ்சிது நம்மளால. அவனுங்களுக்கு போலீஸ், மந்திரினு ஆளுங்கட்சி செல்வாக்கு இருக்கு. நம்மாள என்ன பண்ணிட முடியும்.'

'முடியும். நம்மால முடியும்.'

'என்ன சொல்ற நீ. எப்படி முடியும்'.

'நாம இன்டர் காலேஜ் கல்ச்சுரல்சுல சந்திச்சோம். நீ சென்னைல படிக்கிற. நான் கடலூர்ல படிக்கிறேன். அதனால உன் அப்பா பத்தியும் என் அக்கா பத்தியும் தெரியவந்து நாம இங்க நிக்கிறோம். இல்லைனா உன்னையும் என்னையும் தொடர்புபடுத்தவேண்டிய கட்டாயம் இல்ல. உன் அப்பா செத்ததுக்கு நீயும் போலீஸ் வரை போகல. என் அக்கா செத்ததுக்கு நானும் போலீஸ்க்கு போகல. சமூகத்தை பொறுத்தவரை உன் அப்பா செத்ததும், என் அக்கா செத்ததும் தினம் பேப்பர்ல வர்ற ஒரு நியூஸ். சோ, சேகரோ, சுப்புவோ செத்தா அவுங்கள கொலை பண்ற மோட்டிவ் இருக்குற ஆளுங்க லிஸ்ட்ல நம்ம பேர் வராது. சரியா?'.

'ஆமா, அதனால?'

'இது ஒரு பெரிய பலம் நம்ம சைடுல'.

'என்னடா சொல்ற? எனக்கு ஒண்ணும் புரியல'.

'இப்போ புரியவேண்டியது இல்ல. நான் சென்னை போய் சில விஷயங்கள் கன்ஃபர்ம் பண்ணனும். பண்ணினதும் உனக்கு கால் பண்றேன். சாமான்யன்னா என்னனு காமிப்போம் அவனுங்களுக்கு'.

ரவியும் சேகரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அந்த பார்வையில் ஒரு தீர்க்கம் இருந்தது. இருவரும் மீண்டும் இணைவதாக சொல்லிப்பிரிந்தனர். அடுத்து வந்த மாதத்தில் ஒரு சனிக்கிழமை மாலையில் ஊரை அடித்து உலையில் போட்டுத் தின்று கொழுத்த ஓநாய்கள் சேகரும், சுப்புவும் அவரவர் வீட்டின் படுக்கையறையில் கழுத்தறுத்த நிலையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர். வீட்டிலிருந்த நகை, லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. சேகர் வீட்டில் சென்னை போலீஸும், சுப்பு வீட்டில் கடலூர் போலீசும் சல்லடையாய்த் தேடியது. தப்புத்தப்பான ரேகைகளே கிடைத்தன.

அந்த மாதத்தின் இறுதியில், சென்னை போலீஸ் தலைமை அலுவலகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட ஏரியாக்களிலிருந்து போலீஸார் கூடி அந்த மாதத்தில் கண்டுபிடிக்கப்பட மாட்டாத கொலைக்கேஸ்களைப் பற்றி விவாதித்தனர். அப்போது, நகை மற்றும் பணத்திற்காக வெளிமாநிலக் கொள்ளையர்கள் சென்னையிலும் சுற்றுவட்டாரத்திலும் மேலும் நான்கைந்து இடங்களில் கொலை, மற்றும் கொள்ளை செய்த்தாக பேசப்பட்டது. சேகர் மற்றும் சுப்பு கொலைகளும் அப்படி நடத்தப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு அந்த ரீதியில் அந்த இரண்டு கேஸ்களின் மேல் விசாரணை தொடரப்பட்டது. ஆனால் அடுத்து வந்த ஆட்சி மாற்றத்தில் கடைசியில் கேட்பார் யாருமின்றி கிடப்பில் போடப்பட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு செளகார்ப்பேட்டையில் ஒரு சேட்டு நகை வியாபாரியிடத்தில் வழக்கமாய் கள்ள பிஸினஸ் செய்யும் இளைஞர்கள் நால்வர் திருட்டுத் தங்க நகைகள் கொடுத்து பணம் வாங்கிச்சென்றனர் சத்தமில்லாமல். அந்தப் பணத்தில் அந்த இளைஞர்களின் கமிஷன் போக மூன்றில் இரண்டு பங்கு ரவி மற்றும் சுரேஷிடம் வந்துசேர்ந்தது.

அதற்கு அடுத்த வாரத்தில் சென்னையில் ஈ.சீ.ஆர் நெடுஞ்சாலையில் இருந்த ஒரு பொட்டல் காட்டில் தனிமையில் ஒரு நாள் ர‌வியும் சுரேஷும் ச‌ந்தித்துக்கொண்ட‌ன‌ர். ச‌ற்று நேர‌ மெள‌ன‌த்துக்குப்பிற‌கு ர‌வி ச‌ன்ன‌மாக‌ ஆர‌ம்பித்தான். 'சுரேஷ், உன் ஐடியா வொர்க் அவுட் ஆயிடிச்சு. நான் இப்போதான் விசாரிச்சுட்டு வ‌ரேன். சேக‌ர் சுப்பு கொலை கேஸ்ல‌ போலீஸ் பீகார்லேர்ந்து ந‌ம்ம‌ ஊருக்கு திருட‌ வ‌ர‌வ‌ங்க‌ள‌த் தான் தேடிக்கிட்டிருந்துது. இப்போ ஆட்சி மாறின‌தும் கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ம் விசாரிச்ச‌தையும் தூக்கி போட்டுட்டாங்க‌. போன‌ ஆட்சிலையே அவ‌னுங்க‌ள‌ தீத்துக்க‌ட்ட‌னும்னு தான் நினைச்சிருக்கானுங்க‌. ஆனா நாம‌ முந்திக்கிட்டோம்.' என்ற‌வ‌னைத் ஆசுவாசப்படுத்திவிட்டு ர‌வி தொட‌ர்ந்தான்.

'ஆமா, சேகரக் கொல்லனும். ஆனா, பழி உன் மேல வரக்கூடாது. சுப்புவையும் கொல்லனும். ஆனா, பழி என் மேல வரக்கூடாது. அதனால, சேகர நான் கொல்லனும். நான் கொல்றப்போ நீ பக்கத்துல இருந்த கடையில தகராறு பண்ணின. நீ சேகர் கொலைக்கு துரும்பளவு கூட‌ காரணம் இல்லனு அந்த மத்தவங்களே எவிடன்ஸ் ஆயிட்டாங்க‌. சுப்புவ நீ கொல்லனும். நீ கொல்றப்போ நான் ஒரு கடையில தகராறு பண்ணினேன். அதனால சுப்பு கொலைக்கு நானும் காரணம் இல்லனு அந்த கடைக்காரன் எவிடன்ஸ் ஆயிட்டான். சேகர் இருக்குறது சென்னைல. சுப்பு இருக்குறது கடலூர்ல. ரெண்டு இடத்துக்கும் 3 மணி நேரம் ஆகும் பஸ்ல வந்தா. நாம செஞ்சது, ஒரே நாள்ல ரெண்டு பேரும் அவுஙகவுங்க வீட்ல தனியா இருக்குற நேரம் பாத்து கொன்னோம். அவ்ளோதான். நல்லவேளை என் ஃப்ரண்ட் ஒருத்தன் கைரேகைகள வச்சி ப்ராஜக்ட் பண்ணினான். அவன்கிட்ட ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் தெரியாம இருக்க என்ன பண்ணலாம்னு கேட்டுக்கிட்டோம். அவன் ஹெல்ப் பண்ணினான். ஃபாரென்ஸிக்ல நாம மாட்டிக்கல‌. ஆனா அடுத்து ந‌ட‌ந்த‌து எல்லாம் க‌ட‌வுள் சித்த‌ம் தான். பாரேன். பெரிய‌ த‌லைங்க‌ சாவு. பெரிய‌ விஷ‌யாமாயிருக்கும். அந்த டைம்ல பீகார் கொள்ளைகாரனுங்க சென்னைல ஆட்டம் போட்ருக்கானுங்க. நாமளும் சேகர், சுப்பு வீட்ல கொள்ளையடிச்சது நாம எதிர்பாத்தாமாதிரி அவங்க பேர்ல விழுந்திடிச்சி. தொட‌ர்ச்சியா ஆட்சி மாறின‌து ந‌ம‌க்கு சாத‌க‌மா போச்சு. இதான் தெய்வ‌ம் நின்னு கொல்லும்னு சொல்ற‌து. ' என்ற சுரேஷ், சற்றே ஆழமாய் மூச்சுவிட்டுப்பின் தொடர்ந்தான்

'எனிவே, நம்ம அக்கா, அப்பா சாவுக்கு காரணமானவங்கள பழி தீத்தாச்சு. இந்த விஷயத்தை இதோட விட்டுடலாம். இனிமே நாம சந்திக்க வேணாம். நாம செஞ்சது சரியா தப்பாங்குற தர்க்கத்துக்கு நாம போக வேணாம். எனக்கு வட நாட்டுல வேலை கிடைச்சிருக்குடா. நான் நாளைக்கு குடும்பத்தோட கிளம்பறேன். நீயும் யு.எஸ் போறப்போ குடும்பத்தோட போயிடு. நாம மறுபடி சந்திக்கணும்னு இருந்தா காலம் நம்மள சந்திக்க வைக்கட்டும். நாம சந்திக்கிறதுக்கான காரணத்தை விதி தீர்மானிக்கட்டும்'. மனதில் உள்ளவற்றை முழுக்க கொட்டிவிட்டு நிறுத்தினான் சுரேஷ்.

ஆமோதிப்பாய் தலையசைத்து சுரேஷையே பார்த்து நின்றான் ரவி. இருவரும் பிரியும்முன் கடைசியாக ஒரு முறை கைகுலுக்கிகொண்டார்கள். அந்த கைக்குலுக்கலில் ஒரு கனிவான இறுக்கம் இருந்தது.

- ராம்ப்ரசாத்

Wednesday, 13 November 2024

வாசகசாலை - கதையாடல் 82ம் நிகழ்வு - நவீன சிறைச்சாலைத் தத்துவம்

 இந்த வாரம் சொல்வனத்தில் வெளியான எனது 'நவீன சிறைச்சாலைத் தத்துவம்' சிறுகதை, வாசகசாலை  வழங்கும் 'கதையாடல்' 82ம் நிகழ்வில் வரும் ஞாயிற்றுக்கிழமை (17/11/2024) மாலை அசோக் பில்லர் அருகே உள்ள 'அரங்கம் ஆர்ட் ஸ்பேஸ்' ரங்கில் நடைபெறவுள்ளது. வாய்ப்புள்ள நண்பர்கள் பங்குபெறலாம். இந்த நிகழ்வுக்கு எனது சிறுகதையைத் தெரிவு செய்த வாசகசாலை இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.




வாசகசாலை வழங்கும் 'கதையாடல்' 82-ஆம் நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (17/11//24) மாலை அசோக் பில்லரில் உள்ள 'அரங்கம் ஆர்ட் ஸ்பேஸ்' அரங்கில் நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பு இதோ உங்கள் முன்னால்...!
நவம்பர் இணைய இதழ்களில் வெளிவந்த சிறுகதைகள் குறித்த கலந்துரையாடல்
அகழ்
பூக்கள் - சுரேஷ்குமார இந்திரஜித்:
நடுகல்
அச்சு வெல்லம் - ச.ப்ரியா:
கலகம்:
கெத்சமனி - ப்ரிம்யா கிராஸ்வின்:
வாசகசாலை
உயிர்த்துடிப்பு – பரிவை சே.குமார்:
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேச விரும்புவோர், உடனடியாக கீழ்க்காணும் அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
வாட்ஸப்:
கார்த்திகேயன் - 9942633833
அருண் - 9790443979
நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு வாசகசாலை மிக்க அன்புடன் வரவேற்கிறது. நன்றி. மகிழ்ச்சி..! ❤️

Sunday, 10 November 2024

மரபணுக்கள் - விஞ்ஞானச் சிறுகதைகள் - நூல் விமர்சனம் - Boje Bojan

மரபணுக்கள் - விஞ்ஞானச் சிறுகதைகள் - நூல் விமர்சனம் - Boje Bojan


 


நவீன சிறைச்சாலைத் தத்துவம் - சிறுகதை

10 நவம்பர் 2024 தேதியிட்ட இந்த வாரம் சொல்வனம் இதழில் எனது 'நவீன சிறைச்சாலைத் தத்துவம்' அறிவியல் புனைவுச் சிறுகதை வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனது சிறுகதையைத் தெரிவு செய்த சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

இதோ உங்கள் பார்வைக்கு எனது சிறுகதை:-

https://solvanam.com/2024/11/10/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/




Monday, 4 November 2024

ஃபீனிக்ஸ் - சூர்யா சேதுபதி

 ஃபீனிக்ஸ் - சூர்யா சேதுபதி

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிக்கும் 'ஃபீனிக்ஸ்' திரைப்படத்தின் டீஸர் வெளி வந்தாலும் வந்தது; முகநூல் முழுதும் ட்ரோல் செய்கிறார்கள். 'முடிச்சி விட்றலாம்.. ஃபீனிக்ஸ் மாதிரி வராறா பார்க்கலாம்' என்கிற ரீதியில் அமைந்த கமெண்ட்கள் தான் அதிகம்.

இதை ஏன் சொல்கிறார்கள் என்று தான் புரியவில்லை. எல்லோருக்குமே இது ஒன்று தான் ரூட். யாரையுமே எந்த சமூகமுமே எடுத்த எடுப்பில் ஏற்றுக்கொள்வதில்லை. 45 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட அர்ஜுன் கபூர்  நடித்த திரைப்படமான 'Lady Killer' வெறும் அறுபதாயிரம் தான் வசூலித்திருக்கிறது. இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு, இயக்குனர் வாசுவின் மகன் சக்தி என்று இப்படி ஏராளமான உதாரணங்கள் சொல்லலாம்.



consistency என்பது ஒரு அசாதாரணமான வார்த்தை. திறமையும், கடினமான உழைப்பும் இருந்தால் மட்டும் தான் யாரொருவரும் வெற்றியில் consistency காட்ட முடியும். எந்தத் துறையிலும் நிலைக்க முடியும். விஜய் சேதுபதியின் மகன் என்பதனால் முதல் வாய்ப்பு வேண்டுமானால் எளிதாக அமைந்து விடலாம். அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமானால், அவர் தான் உழைக்க வேண்டும். தனித்துவம் காட்ட வேண்டும். இது  நம்மில் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான விதிதான். இப்படி இருப்பதுதான் சிறப்பும் கூட. இப்படியிருக்கையில் இந்தத் ட்ரோல் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

On the flip side, தகுதியற்றவர்களை, நாற்பது வருடங்களுக்கு முன்பு என்றோ ஒரே ஒரு முறை விழுந்து எழுந்தவர்களை, ஏதோ அவர் ஒவ்வொரு வருடமும் 'விழுந்து எழுபவர்' போல் 'கற்பனையாக' நினைத்துக்கொண்டு 'ஃபீனிக்ஸ்' என்று சொல்லும் அளவுக்கு மீண்டும் மீண்டும் சலிக்காமல் உயர்த்தி விடுகிறார்கள் நம் மக்கள். இத்தனைக்கும் அவர் சகல வசதிகளுடன் ஜம்மென்று தான் இருக்கிறார். இதை வேண்டுமானால், சமூகமாய் நாம் செய்யும் தவறு எனலாம். அதை எவ்வளவு ட்ரோல் செய்தாலும் தகும். ஆனால், அந்த விதமான ட்ரோல்கள் நம் சமூகத்தில் நடப்பதே இல்லை.


Friday, 1 November 2024

Allegory SF, F & H Magazine - Honorable Mention

 Allegory Science Fiction, Fantasy & Horror magazine has honored my work 'Sensed Presence' with an 'Honorable Mention' in its 46/73 Issue of 2024.

Just to add to the perspective, I have been informed by the publisher, Ty Drago, that this made into the top 76 / 918 cut.






Wednesday, 30 October 2024

வால்பேப்பர்

 Wallpaper

இணையத்தில் உலாவுகையில், கண்ணில் அகப்படும் வால்பேப்பர்களைச் சேகரிக்கும் பழக்கம் உண்டு. வால்பேப்பர்கள் என்றால் அரைகுறை ஆடையில் பெண்கள் அல்ல. பிரபஞ்சம், இயற்கையில் அமைந்த அரூப கணங்கள், மனிதர்கள் செயற்கையாய் அமைத்த கணங்களில் அர்த்தமுள்ளவைகள், இப்படி. சில, அமெரிக்கர்கள் தங்கள் தொலைநோக்கிகளில் படம் பிடித்தவை. சிலவற்றை எடுத்தது யாரென்று தெரியவில்லை. நான் இவற்றை எடுக்கவில்லை என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.
இப்போது சேர்ந்திருப்பவைகளை இங்கே தருகிறேன். பிடித்திருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நிலா (Moon), சுக்கிரன் (Venus) மற்றும் குரு (Jupiter) ஆகிய கிரகங்கள் ஒன்றாக ஒருங்கே தெரியும் காட்சி. சில சமயங்களில் தமிழ்ப் படங்களில் 'எட்டு கிரகங்களும் ஒன்றாக வரும் நேரம், பிறப்பான்..அவன் அழிவின் உருவாக இருப்பான்' என்றெல்லாம் காட்டுவார்கள். அந்த வசனத்தைக் கேட்டால், உணர்ச்சி மயமாக இருக்கும். உண்மையில் எட்டு கிரகங்களும் நேர் கோட்டில் வர வாய்ப்பே இல்லை. காரணம் ஒவ்வொரு கிரகமும் சூரியனைச் சுற்றும் தளம் (orbital plane) வேறு.
Galactic Arm பின்னணியில் எகிப்தின் பிரமிடு. பிரமிடுகளின் alignment ம் ஒளியின் வேகமும் ஒரே எண்கள் என்கிற தகவலுடன் இப்படம் பார்க்க எப்படி இருக்கிறது என்று நண்பர்கள் சொல்லலாம்.
Tsuchinshan வால் நட்சத்திரம் ஜப்பான் அருகே.
பூமி, அதன் மீது தெரியும் நிலா, பின்னால் Galactic Arm.
கடைசியாக, இது கொஞ்சம் அச்சமூட்டும் படம் தான். விண்களத்துடன் தன்னைப் பிணைக்க எதுவும் இன்றி விண்வெளி வீரர் ப்ரூஸ் செய்த விண்வெளி நடை(spacewalk) தான் இது. இப்படி spacewalk செய்வதில் உள்ள அபாயம் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமானால், Sandra Bullock நடித்த Gravity திரைப்படம் பாருங்கள். திரைப்படத்தில் மேட் கோவால்ஸ்கி இப்படித்தான் தொலைந்து போவார். பாவமாக இருக்கும். ஆனால், அந்த நோடியை அவர் ஏற்றுக்கொண்ட விதம் அருமையாக இருந்தது.