என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Ram's works in global languages

மெட் செயலி - குறுநாவல்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Saturday, 17 August 2024

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் மரணம் விவகாரம்

 கொல்கத்தா பயிற்சி மருத்துவர் மரணம் விவகாரம்

சில நாட்களுக்கு முன் அமெரிக்க முகநூல் சூழலில் பிரபலமான புகைப்படம் இது. ஒரு பள்ளி முன்பு ஒருவர் தொடர்ந்து பல மணி நேரங்கள் தொடர்ச்சியாக நிற்கவும் யாரோ சந்தேகப்பட்டு பள்ளி நிர்வாகத்தைத் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க, சம்பந்தப்பட்டவர் பள்ளிக் குழந்தைகளை யாரும் தவறாக வழி நடத்திவிடக்கூடாது என்பதை மேற்பார்வை பார்க்க தன்னார்வலராக நிற்பதாக பள்ளியில் அனுமதி பெற்று நிற்பவர் என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்தப் புகைப்படத்தைத் தொடர்ந்து பலர் 'இப்படி ஒருவர் முன்வருகிறார் எனில், அவருக்கு நான் ஒரு டாலராவது தருவேன்' என்று ஒருவர் சொல்ல, பின், அதைப் பலரும் சொல்லத்துவங்கினார்கள். அப்படி சொல்லிச்சொல்லித்தான் இந்தப் புகைப்படம் பிரபல்யமானது.
வேலைவாய்ப்பு குறைந்த நம் நாட்டில் இது போன்ற தீர்வுகளை மக்களுக்காக மக்களே செய்துகொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன். பணி ஓய்வு பெற்ற மிலிட்டரிக்காரர்களை, அலுவலகங்களிலும், பணக்கார வீடுகளிலும் காவல் வேலைக்கு வைத்துப் பார்த்திருக்கிறேன்.
கொல்கத்தா பெண் மருத்துவர் மரணச்செய்தி துயரமானது. தரம் குறைந்த மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தட்டிக்கேட்டு குடைச்சல் தந்ததால், அவரைத் திட்டமிட்டு இப்படி துர்மரணம் விளைவித்திருக்கிறார்கள் என்று இப்போது தெரிய வந்திருக்கிறது.
குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவன் நான்கு முறை திருமணம் செய்து நான்கு மனைவிகளும் அவனுடைய வக்கிரங்களில் வெறுத்து ஓடியவர்கள் என்பது புதிய செய்தி.
இவனைப் போன்றவர்களிடம் என்ன 'தகுதியை' காவல்துறை 'கவனித்து' அவனுக்கு ஊதியம் அளித்து 'பணியில்' அமர்த்தியது என்பது தெரியவில்லை.
தரம் வேண்டுமானால், Benchmark தேவை என்பதெல்லாம் புரிந்துகொள்ள நாம் இன்னும் எத்தனை அப்பாவிகளை பலிகொடுக்கப் போகிறோம் என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லா அமைப்புகளுமே 'தரம்' விடயத்திலும் 'Benchmark' விடயத்திலும் சோரம் போய் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்கிற பேருண்மையைக் காரணம் காட்டி காவல்துறையும், சம்பந்தப்பட்ட மருத்துவமனையும் தனக்கான சலுகையை இந்த அப்பாவிப்பெண்ணின் மரண விடயத்தில் பெற்று விடும். அதில் சந்தேகமே இல்லை.
வாழ்க, ஜனநாயகம். வாழ்க, Benchmarkகளைப் புறக்கணிக்கும் அமைப்புகள்.
எத்தனையோ நடந்துவிட்டது; எதுவும் நிற்பது போல் தெரியவில்லை; எதுவும் தீர்வை நோக்கிச் செல்வது போல் தோன்றவில்லை. மக்களே மக்களுக்காகக் களத்தில் இறங்குவது என்ற இடத்திற்கு அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளே வந்துவிட்டபோது முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு என்ன சொல்ல?
அமெரிக்காவில் ஐடி அலுவலகங்களில் அவரவர் நாடுகளில் கலாச்சாரங்கள் குறித்து அவரவரை வைத்து ஒவ்வொரு வாரமும் பத்து நிமிடங்கள் பேசச்சொல்வது நடக்கும். அது ஒரு ஆரோக்கியமான நடைமுறை தான். நம் முறை வரும்போது, நாம் இந்தியா குறித்துப் பேசுகையில் மற்ற நாட்டினர் முகத்தை உற்றுப் பார்க்க வேண்டிய உந்துதல் தானாக வந்துவிடுகிறது. யாரேனும் சிரிக்கிறார்களா? யாரேனும் நக்கலாகப் பார்க்கிறார்களா? என்று பார்க்க வேண்டி இருக்கிறது. மிகவும் கூச்சமாகவும், அவமானமாகவும் உணரும் தருணங்களாக இவைகள் அமைந்துதான் விடுகின்றன. எத்தனை நல்ல விடயங்கள் இருந்தாலும், இது போன்ற சில நிகழ்வுகளால் அந்த எந்த நல்லதுகளையுமே பெருமையாக சொல்லிக்கொள்ள முடிவதில்லை. அலுவலகத்திலுள்ள யாரையுமே என் நாட்டிற்கு ஒருமுறை வந்து என் கலாச்சாரத்தைப் பார் என்று தைரியமாகச் சொல்லிக்கொள்ள முடியவில்லை.
உடனே "ஹஹஹ பாஸ் ... அமெரிக்காவில் நடக்காததா" என்று யாரேனும் கேட்கலாம். இங்கே சமூகத்திற்கும் தீவிரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் இடையில் தான் பிரச்சனை. மக்களுக்கும் மக்களுக்கும் இடையே அல்ல என்பதை கவனிக்க வேண்டும்.
பிரச்சனை என்னவென்றால், கெட்டது செய்ய மக்களுக்குள் மக்களே கூடும் அளவிற்கு நல்லது செய்ய மக்களுக்குள் மக்கள் கூடுவதில்லை என்பதுதான். மலிவான தரம் குறைந்த மருந்துகளை விற்பனை செய்வதைக் கேள்வி கேட்ட இந்தப் பெண் மருத்துவர் பாதுகாப்பிற்கு நாலு பேர் கூடியிருந்தால் இந்த மரணத்தை, இந்த துர் சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்.
யாரோ கஷ்டப்பட்டு போராடிக்கொள்ளட்டும். அது பலன் தருகையில் அப்போது மட்டும் போய் அதில் குளிர் காய்ந்து கொள்ளலாம் என்கிற மிக மலினமான எண்ணம் மிகுத்த ஒரு நாட்டில் தான் எத்தனை ஹீரோயிச திரைப்படங்கள். அடடா? நாட்டைப் பற்றி பெருமையாக நினைத்துக்கொள்ளத்தான் எத்தனை நிரூபனங்கள்?
அரசாங்கம் மக்களுக்குத் தேவையானதைச் செய்யத்தான் இருக்கிறது என்கிற வாதமெல்லாம் சரிதான். மக்கள் தொகையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஒரு நாட்டில் எல்லா பிரச்சனைகளுக்கும் அரசை நாடுவதில் உள்ள நடைமுறைச்சிக்கல், கால விரயத்தைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு மக்களே நல்லது செய்ய முன்வரலாம், நமக்கான வாய்ப்புக்களை நாமே உருவாக்கிக்கொள்ளலாம். இத்தனைக்கும் மரணித்தவர் ஒரு மருத்துவர். நமக்கெல்லாம் சேவை செய்யவெனவே படித்தவர்.
கெட்டது செய்ய மக்களுக்குள் மக்களே கூடும் அளவிற்கு பலமடங்கு அதிகமாக நல்லது செய்ய மக்களுக்குள் மக்கள் கூடினால் மட்டுமே ஒரு நாடாக நாம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கு முடியும். அது நடக்காதபோது, ஒலிம்பிக் மெடல் பட்டியல், பாக்ஸ் ஆபீஸ் தரவுகள், கிரிக்கெட் தரவுகள், சந்திராயன் தரவுகளை மட்டுமே திரும்பத்திரும்பக் காட்டி இந்தியா நிமிர்ந்து நிற்பதாக கற்பனைக் கதைகளைக் கட்டிவிடாதீர்கள். இந்தியன் என்று சொல்லிக்கொள்ளவே கேவலமாக இருக்கிறது.
May be an image of 1 person
Like
Comment
Send
Share